Quantcast
Channel: Warrior
Viewing all 254 articles
Browse latest View live

பந்தயக் குதிரை...!

$
0
0

அது நடந்து கொண்டிருக்கிறது இப்போது. தொகுத்தெழுதிய உணர்வுகளை ஒரு புத்தக வடிவில் காணும் ஒரு பெருங்காதலில் வாரியர் என்னும் வலைப்பூவில் எழுதிய கட்டுரைகளை வகை பிரித்துக் கொண்டிருக்கிறோம். எப்போதுமே தனிமையில் என்னை வாழ்க்கை விட்டதில்லை. இப்போதும் அப்படித்தான் நண்பர்களின் உதவியோடு கட்டுரைகள் தொகுப்பு அங்குலம் அங்குலமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. 2014ஆம் வருடத்தின் மத்தியில் இந்த உழைப்பு புத்தகமாய் மாறலாம்.

வலைப்பூவில் எழுத ஆரம்பித்த 2010 ஆரம்ப நாட்களில் பின்னாளில் புத்தகமெல்லாம் போடுவோம் என்ற எண்ணமோ எதிர்பார்ப்போ எனக்கு இருந்ததில்லை. நகர்தலும் நகர்தலின் பொருட்டு நிகழும் சூழலுமே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.  தொடர்ச்சியாக என்னை வலைப்பூவிலும், பேஸ்புக்கிலும் வாசித்து வரும் நண்பர்கள் எப்போதும் கொடுக்கும் உத்வேகமும், அன்பும் எதிர்பார்ப்புமே என்னை மீண்டும்மீண்டும் எழுதத் தூண்டுகிறது.

இலக்கிய வட்டத்திலிருக்கும் யாருடனும் எனக்கு அதிக தொடர்புகள் இல்லை. என்னை முன்னிலைப்படுத்தி ஒரு வியாபராப் பொருளாக்கிக் காட்டிக் கொள்ளும் ஒரு வெறித்தனமான மார்க்கெட்டிங் உத்திகள் என்னிடம் அறவே இல்லை. என்னை மேலேற்றிக் கொள்ள பிரபலமான யாரோ ஒருவரின் அடிவருடிக் கொடுத்து புகழ்பாடும் முகஸ்துதி மனிதனும் நான் இல்லை.

எது கிடைக்க வேண்டுமோ அது மட்டுமே எனக்கு சரியாய் கிடைத்திருக்கிறது. நான் பெற்றதிலும் இழந்ததிலும் ஒரு நியாயம் எப்போதுமே இருந்திருக்கிறது. அதிர்ஷ்டம் என்ற வார்த்தை எனக்கு வெகுதூரமானது. சரியாய் எது கிடைக்க வேண்டுமோ அதையன்றி ஒரு குண்டுமணியையும் எனக்கு இலவசமாய் வாழ்க்கை கொடுத்தது இல்லை.  சிறு வெற்றியை ஈட்ட வேண்டுமென்றாலும் கடுமையாய் நான் உழைக்க வேண்டும். எனது சறுக்கல்களும் அதிபாதாளத்தில் விழுந்து வாங்கிய அடிகளும் காயங்களுமே எனக்கு உரம். நிராகரிப்புகளும் அநீதிகளும் என்னை சமநிலையாக்கி இருக்கின்றன. 

10 மணி நேரம் உழைத்தால் 10 மணி நேரத்துக்கான ஊதியமும் 15 மணி நேரத்துக்கான செலவும், 20 மணி நேரத்துக்கான தேவையும் என்னைச் சுற்றி சுற்றி எப்போதும் வந்து கொண்டிருக்கும். நண்பர்கள் எப்போதும் எனக்கு பக்க பலமாய் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள்.  சோர்வான நேரத்தில் தோள் சாய்த்துக் கொள்ளும் ஆத்மார்த்த நண்பர்களை எனக்கு இறைவன் கொடுத்திருக்கிறான்.  பொருளாகவும் அருளாகவும் அவர்கள் எனக்கு எப்போதும் இருக்கிறார்கள். எனது வலிகளைப் பார்த்துக் கொண்டு வெகுண்டெழும் நண்பர்களும், எனக்கு அவ்வப்போது நிகழும் சில அநீதிகளைக் கண்டு தனக்கே நிகழ்ந்ததாகக் கருதி சீற்றம் கொள்ளும் அழுத்தமான நண்பர் கூட்டமும் எனக்கு உண்டு.

ஆமாம்...என் வாழ்க்கை நட்பால் விளைந்தது. 

சுயசொறிதலை நிறுத்தி வெகு நாளாகி விட்டது. இப்போது மீண்டும் நான் சுயத்தை கூர்தீட்டிக் கொள்கிறோனோ என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது. இது ஒரு மாதிரியான சுகம். சொறிய சொறிய சுகமாயிருக்கும். தன்னை உயர்த்திக் கொள்ளத்தான் எல்லா ஜீவன்களும் இந்த பூமியில் முனைந்து கொண்டிருக்கின்றன. நான் மேலே உள்ள மாதிரி எல்லாம் சொல்லி என்னை உங்கள் முன் மிகச் சிறந்தவனாக காட்டிக் கொள்ள முனைகிறேன். பொதுவெளி பார்க்க முடிந்த விசயங்களை கொஞ்சம் வசதியாக அலங்கரித்து.... சொல்லும் போது மனம் எப்போதும் சந்தோசப்பட்டுக் கொண்டு குதுகலிக்கிறது. யாரும் செய்யாததை தான் செய்ததைப் போல தனக்குத் தானே சொல்லிக் கொண்டு மார் தட்டிக் கொள்கிறது.

பெறுவது அல்லது இழப்பது இந்த இரண்டுதான் வாழ்க்கை. இந்த இரண்டின் பொருட்டு....சந்தோசமோ துக்கமோ நிகழ்ந்து விடுகிறது. இதற்கு போய் ஏன் அலட்டுவானேன். கோடணு கோடி பேர் வந்தனர். இந்தக் குளத்தில் கல்லெறிந்தனர். நானும் என்னால் முடிந்த சிறு கல்லை எடுத்து எறிந்து விட்டு அடங்கப் போகிறேன். பாலகுமாரன் ஐயா சொல்வது போல வாழ்க்கையில் அடுத்த அடுத்த கட்டத்திற்கு நாம் நகர்ந்து லெளகீக உயரத்தை எட்ட வேண்டுமெனில் நம்மைச் சுற்றி நாம் நன்றாக இருக்கவேண்டும் என்று எண்ணும் நான்கு பேர் இருந்தால் போதும். என்னைச் சுற்றி நான்கு பேர்கள் இருக்கிறார்கள் என்பது நிறைவு. அந்த நிறைவு ஒரு சுயநலமாய் ஆகிவிடாமல் வேறு யாரோ ஒருவருக்குத் தேவையான நான்கு பேரில் ஒருவனாயும் இருக்கவும் முயல்கிறேன்.

எல்லாவற்றுக்கும் கருத்து சொல்லவேண்டும்…எல்லா விசயத்திலும் மூக்கை நுழைத்து என் மேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்ளவும் எனக்கு ஆசைகள் கிடையாது. சிறப்பானவை என்பது இந்த பூமி முழுதும் விரிந்து பரந்து கிடக்கிறது. எனக்குத் தெரிந்ததை உங்களுக்குத் தெரியாதென்று எண்ணி நான் பேசிக் கொண்டிருக்கிறேன் அவ்வளவே…..

வாழ்க்கை சிலமுறை முத்தங்கள் கொடுத்து அன்பைப் பொழிந்து இறுக்கமாய் என்னை அணைத்துக் கொள்கிறது. நான் உணர்ச்சிப் பிராவகமெடுத்து அந்த உணர்வினை எழுத்தாக்குகிறேன்….

பலமுறை அதே வாழ்க்கை முகத்திலறைந்து இரணப்படுத்தி கடுமையான வலியையும் வேதனையையும் கொடுத்திருக்கிறது….அந்த வலியை, வலி கொடுத்த உணர்வினையும் எழுத்தாக்குகிறேன்…
.
ஏதோ ஒன்று நிகழ….நிகழ…சாட்டையடி வாங்கி ஒடும்குதிரையாய்….எழுதிக் கொண்டிருக்கிறேன். 

எதுவுமே நிகழாத போது எழுத என்னிடமும் ஒன்றுமில்லை என்று ஒரமாய் ஒடுங்கி நின்று கொள்கிறேன்.

பல மனிதர்கள், திரைப்படங்கள், புத்தகங்கள், கவிதைகள், பாடல்கள், இடங்கள், என்னுடைய அனுபவங்கள்….இவை யாவும்…சாட்டைகள்….

நான் சாட்டையடி வாங்கும் குதிரை….! 

பந்தயத்தில் வெல்வதைப் பற்றி எல்லாம் எந்த எண்ணமும் இல்லை...ஓடும் வரை வெறி கொண்டு ஓடவேண்டும்...அதற்கு...ஏக இறை என்னை ஆசிர்வதிக்க வேண்டும்.... அவ்வளவுதான்.


....புத்தகம்.....


ஆமாம்…இது பலரால் நிகழப் போகிறது…! 



தேவா சுப்பையா...





தொலைந்து போ.....2013!

$
0
0

இது ஒன்றுமில்லை.
இது சந்தோசம். 
இது துக்கம்.
இது வலி.
இது சுகம்.
பேச நிறைய இருக்கிறது;
ஒன்றுமே இல்லை.
கருணையானது;
கொடூரமானது.
நினைவில் நிற்கிறது.
மறந்தும்  போகிறது.
இது பொய்.
இது நிஜம்.
இது நம்பிக்கை.
இது துரோகம்.

பேச என்ன இருக்கிறது இது பற்றி? மெளனமாயிருப்பதிலும் அர்த்தமில்லை. புத்தி பேதலித்த நிலையிது. புத்தன் சுவைத்துப் பார்த்த கனி இது. நிரம்பி வெறுமையான பாத்திரம் இது.  இது நிறைய கொடுக்கும். இது நிறைய எடுக்கும். இது எல்லாமே. ஆனால் ஒன்றுமே இல்லை.

ஓ....கொடூரமான காலமே....
ஓ.... கருணை மிகு காலமே....
ஓ...அழகே....
ஓ.....கோரமே....
மிருகமே...
தெய்வமே....
ஓ..... காலமே.....................போ......போ...................போ....!

காலமே..... வா..... வா......!

நீ வேண்டாம்...நீ வேண்டும். சிரிக்கிறேன். அழுகிறேன்....பின் பகிர ஏதுமின்றி வெறிக்கிறேன்....!

திரும்பிப் பார்க்க விரும்பவிலை.....கெட் லாஸ்ட்.... அ|ண்ட் கெட் அவுட்.... 2013....!!!!!!!!!!! 


தட்ஸ் இட்....!!!!!


#... அப்பா...ஐ லவ் யூ... ஐ லவ் யூ...... ஐ லவ் யூ...#




தேவா சுப்பையா....




மதயானைக் கூட்டம்...!

$
0
0

இயக்கம் விக்ரம் சுகுமாரன் என்ற அறிவித்தலோடு படம் முடிந்து போய்விடுகிறது. நள்ளிரவில் படம் பார்த்து முடித்திருந்தேன். கடைசிக் காட்சியில் கழுத்தில் வளரி வாகாய் உட்கார்ந்து கொண்டிருக்கையில் மூச்சுக்குழல் அறுபட்டு பார்த்தியாய் நடித்த கதிர் திணறிக் கொண்டிருந்த காட்சி என் மனதை அறுத்துக் கொண்டிருந்தது. கம்ப்யூட்டரை ஷட் டவுன் செய்து விட்டு பால்கனிக்கு வந்தேன். நள்ளிரவு ஷார்ஜா நேசனல் பெயின்ட்ஸ் பகுதி நானெல்லாம் உறங்கமாட்டேன்... உள்ள போடா என்று என்னைப் பார்த்து அதட்டியது. என் வீட்டிலிருந்து பார்த்தால் பழைய எமிரேட்ஸ் ரோடு தற்போதைய ஷேக் முகமது பின் சையித் ரோடு தெரியாது...ஆனால் அதில் அசுரத்தனமாய் விடிய விடிய அலைந்து கொண்டிருக்கும் வாகனங்களின் சப்தம் துல்லியமாய் கேட்கும்.

என் வீட்டிலிருந்து வலது புறம் பார்த்தேன் ஷார்ஜா யுனிவர்சிட்டி தூரமாய் தெரிந்தது. ஆறாவது மாடியிலிருந்து தற்கொலை செய்து கொண்டால் உயிர் போகுமா..? போகாதா என்ற ஒரு எண்ணம் விபரீதமாய் உள்ளுக்குள் எட்டிப் பார்த்த போது நான் கீழே சிதறிக் கிடந்த வாகனங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். பகல் நேரத்தில் அத்தனை வாகனங்களும் பிழைப்பு நோக்கி ஓடிவிடும். வாகன உரிமையாளர்கள் எல்லாம் காக்கை குருவிகளாய் அப்பார்மெண்ட் உலகத்திற்குள் ஏதேதோ கற்பனையில் உறங்கிக் கொண்டிருப்பார்கள். என்னைப் போல யாரேனும் ஓரிருவர் இந்த இயந்திர வாழ்க்கையிலிருந்து வலுக்கட்டாயமாய் தங்களைத் துண்டித்துக் கொள்ள இரவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் கிடையாது. இருந்தாலும் கல்லூரிக் காலத்தில் புகை பிடித்த அனுபவம் இப்போதும் புத்திக்குள் அலைந்து கொண்டுதானிருக்கிறது. ஐஸ்கட்டியைப் போல இருந்த அந்த குளுமையான சூழலுக்கு புகைத்தால் தேவலாம்  என்று எனக்குத் தோன்றியது. வானம் பார்த்தேன். பூமியிலிருந்து முடிந்தவரை மெர்க்குரி பல்புகளின் வெளிச்சம் வானத்தில் வியாபித்துக் கிடந்தது. அதையும் கடந்து ஆழமான கருமையோடு வானமும், நட்சத்திரங்களும்....மெளனமாய்....என்னைப் பார்த்துக் கொண்டிருந்தன...!

பதினைந்து வருடமாக எனக்கும் வானத்துக்கும் இருக்கும் நட்பு அலாதியானது. அந்த வசீகர இரவின் பேரமைதியைக் கிழித்துக் கொண்டு மதயானைக் கூட்டம்  படம் மீண்டும் புத்திக்குள் வந்து ஜதி சொல்ல ஆரம்பித்தது. எனக்குத் தெரியும் அந்த ஜதி ஒரு ரசிக்கும் நடனமாய் முடியாது. அது ரெளத்ரமாய் மாறி ஒரு ருத்ர தாண்டவத்தை எனக்குள் நிகழ்த்துமென்று....ஆதலால் மென்மையாய் அந்த திரைப்படம் கொடுத்த தாக்கத்தை சாதி பற்றிய எனது கொள்கைப் பார்வைகளை தூரமாய் வைத்து விட்டு அசை போட ஆரம்பித்தேன்.

எனக்கு மிக நெருக்கமான பல நண்பர்கள் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கள்ளர்கள் சாதியைச் சேர்ந்தவர்கள். இராமநாதபுரம், சிவகங்கை மதுரை மாவட்டங்களில் முக்குலத்தோர்கள்அதிகம். கள்ளர், தேவர், மறவர்....இந்த மூன்று பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கும் வலுவான வரலாற்றுப் பின்புலங்கள் இருக்கின்றன. நான் கல்லூரியில் படித்த போது ஒரு நண்பனின் வீட்டுக்கு திருவிழாவிற்காக சென்றிருந்தேன். நிறைய நண்பர்கள் அவன் தோட்டத்து வீட்டில் இருந்த போது நான் நண்பனோடு அவன் வீட்டுக்குச் சென்றேன். வாசலில் இருந்த அவனின் அப்பத்தாவைப் பார்த்து..கும்பிடுறேன்..அப்பத்தா என்று சொன்னேன்.

"ஏப்பா....நீங்க என்ன ஆளுக...?"பளீச் என்று அந்த அப்பத்தா தூக்கிப் போட்ட கேள்வி எனக்குள் விழுந்து என்னை ஏதோ செய்தது. சங்கடமாய் நண்பனைப் பார்த்து நெளிந்தேன். அட....உள்ள வாடா மாப்ள என்று அவன் சைகை செய்ய....நான் வீட்டுக்குள் நுழைய முயன்றேன்..."ஏப்பு ...கேட்டுக்கிட்டே இருக்கேன் போறியளே.."அந்த அப்பத்தாவின் கணீர் குரலில் இருந்த ஆளுமையை என்னால் மீற முடியவில்லை. அந்த அப்பத்தாவிடம் எல்லாம் சாதியை ஏன் கேக்குறீங்க என்று சண்டையிட்டு எனக்குள் இருக்கும் பாகுபாடுகளற்ற சமூகப் பார்வையை சொல்லி விவாதிக்க முடியாது என்று தோன்றியது...

அதே நேரத்தில் அங்கே இருக்கும் சூழலை உடைக்கவும் விரும்பாமல்....இல்லப்பத்தா இந்தா வாரேன்....என்று சொல்லிவிட்டு நண்பனின் வீட்டுக்குள் சென்றேன். வீட்டில் உள்ளவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு மீண்டும் நண்பனின் தோட்ட வீட்டிற்கு செல்ல வாசலுக்கு வந்த போது...

"கள்ளன் மறவன் கனத்ததோர் அகமுடையான்......."என்று ஆரம்பித்து அந்த அப்பத்தா ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது. "ஏன் மாப்ள இன்னுமா இப்டி எல்லாம் இருக்காக.."என்று நான் நண்பனிடம் கேட்ட 1996 ஆம் வருடம்...இப்போது எனக்கு அந்தக் காலமாய் போய்விட்டது...ஆனாலும் இந்த சாதியை  வைத்து பேசும் இயல்புகளும் அதனால் கொள்ளும் பெருமைகளும் இன்னும் தீர்ந்து போகவில்லை. அடிப்படையில் வாழும் வாழ்க்கை முறை நமது குணத்தை தீர்மானிக்கிறது. ஜீன்களின் தாக்கமும் புறச்சூழலும் ஒரே நேர்கோட்டில் அமைந்து போக....அங்கே ஒரு மனிதனின் இயல்பு தீர்மானிக்கப்படுகிறது.

போரில் ஈடுபட்டு, போருக்காகவே தங்களை தயார் செய்து கொண்ட, ஊர்க்காவல் செய்த, மிருகங்களை வேட்டையாடிக் கொண்டு வர, பயப்படாத ஒரு கூட்டத்தின் ஜீன்கள் பாரம்பரியமாய் கட்டியமைக்ப்பட்டு....பரம்பரைகளுக்குள் செலுத்தப்பட அந்த குணத்தை பிரித்து எடுத்துக் கொண்டு சாதி என்னும் கட்டமைப்பை உருவாக்கி விடுகிறார்கள். இங்கே ஒரு சாதியை மையப்படுத்தி தேனி மாவட்டத்தில் நிகழும் தன்முனைப்பு போராட்ட வடிவமாக மதயானைக்கூட்டம் படத்தை இயக்குனர் வடிவமைத்திருக்கிறார். என்னிடம் கேட்டால் மதுரை, இராமநாதபுரம், சிவகங்கைப் பகுதியிலிருக்கும் பல்வேறு பிரிவுகளுக்குள் இருக்கும் மிகையான மனிதர்களின் குணமாய்த்தான் நான் இதைப் பார்க்கிறேன். சோ கால்ட் ஏதோ ஒரு சாதி என்னும் அடைப்புக்குள் இந்தப் படத்தில் உலாவும் கதைமாந்தர்களின் குண இயல்புகளை அடைத்து விடமுடியாது.

வறட்சியான பூமி அது. வானம் பார்த்த வாழ்க்கை அது. மதுரை மாவட்டத்தின் ஒரு சில கேரளாவை ஒட்டிய பகுதிகள் கொஞ்சம் செழுமையாய் இருக்கும். அதுவும் முல்லைப் பெரியாறு அணையின் உதவியால், வைகையின் கருணையால், மற்றபடி வானம் பார்த்த பூமியின் வாழ்க்கையே மிகப்பெரிய போராட்டம் நிறைந்ததுதான். போராட்டங்களில் எல்லாம் மிகப்பெரிய போராட்டம் உயிர்ப்போராட்டம். உணவுக்காய் மேற்கொள்ளும் முயற்சிகள். அடிப்படை வாழ்க்கைக்காக, வாழ்வுரிமைக்காக இயற்கையோடு மல்லுக்கட்டும் மனிதர்களுக்குள் ரெளத்ரம் எப்போதும் ததும்பிக் கொண்டே இருக்கிறது.

எதோடு நாம் அதிகம் இருக்கிறோமோ அதன் அருமை நமக்குத் தெரியவே தெரியாது. திருவண்ணாமலையில் வசித்து வருபவனுக்கு அந்த கோயிலும் மலையும் அவ்வளவு பெரிய உணர்வைக் கொடுத்து விடாது. தஞ்சாவூரில் வசிக்கும் எத்தனை பேர் தஞ்சை பெரிய கோயிலை தினசரி கடந்து போய் வந்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? தஞ்சையிலிருந்து திருவண்ணாமலைக்குச் சென்று ஆகா....என்று கை கூப்பி வணங்குவார்கள். கிரிவலம் செல்வார்கள். பொதுவாக நிதம் பழக்கத்திலிருக்கும் ஒன்று எவ்வளவு அரியதாய் இருந்தாலும்....எளிதாய் பார்க்க முடியும், கேட்க முடியும், கிடைக்கும் என்பதால் அதன் சுவாரஸ்யமும் அருமையும் கொஞ்சம் குறைந்துதான் போகும்.

உயிர் பிழைப்பதே வாழ்க்கை. அதற்காக வானம் பார்த்தலும், மழை பொய்த்தால் ரெளத்ரம் கொண்டு போர்கள் செய்வதும், தன் வீட்டுப் பிள்ளை உண்ண ஒண்ணும் இல்லாத போது செல்வச் செழிப்போடு இருப்பவனின் பொருள் கவர்ந்து கொண்டு வருதலும் சர்வ சாதாரணமான விசயங்கள். என் வாழ்க்கை இப்படியாயிருக்கிறதே....என் உறவுகளும், என் மக்களும் ஒன்றுமில்லாமல் இருக்கிறார்களே..என்ற கோபம் கொலைகள் செய்யவும் வைக்கிறது. பாண்டிய தேசத்தின் போர்கள் எல்லாம் நாடு பிடிக்கவும் தன்னுடைய அதிகாரத்தைக் காட்டவும் பெரும்பாலும் நிகழவில்லை. அங்கே நடந்த போர்கள் எல்லாம் தன்னை தற்காத்துக் கொள்ள அல்லது பழி தீர்த்துக் கொள்ள....என்றுதான் வரலாறு சொல்கிறது.

அப்படிப்பட்ட ஒரு கலாச்சார பரவல்கள் கொண்ட மண்ணில் இருக்கும் மனிதர்கள் அத்தனை பேருக்கும் ஒருவித கோபம் கெளரவம் என்ற பெயரில் எப்போதும் மூக்கு நுனியிலேயே இருக்கும். அதை மதயானைக் கூட்டம் கொஞ்சமும் பிசிறில்லாமல் தெளிவான திரைக்கதையின் மூலம் அழுத்தமாய் பதிவு செய்திருக்கிறது.

கழுத்தில் பாய்ந்து கிடக்கும் வளரியை எடுக்க வரும் தனது அப்பாவின் மூத்த தாரத்தை வெறுமையாய் பார்த்துக் கொண்டே.....அந்தக் கையைத் தட்டிவிடும் பார்த்தி கேரக்டர்....அந்த கையைக் கோபமாய் தட்டிவிடும் இடத்தில்......உயிர் எல்லாம் எங்களுக்கு....மயிறு மாறிடா....என்று அழுத்தமாய் சொல்லிவிடுகிறது. படத்தின் மொத்த கருவே அந்த ஒரு காட்சியில் விளக்கப்பட்டு விடுகிறது. கதிர் அச்சு அசலாக தெக்குச் சீமைப் பையனாகவே அவர் மாறி முதல் படத்திலேயே ஹிட்டடித்திருப்பது பாராட்டுக்குரியது.

கல்லூரியில் ஒரு சண்டையின் போது பாண்டியராஜா என்ற என் நண்பனுக்கு தலையில் அடிப்பட்டு விட்டது...! சரி அவனை வீட்டில் விட்டு வருவோம் என்று நானும் இன்னொரு நண்பனும் சாயல்குடிக்கு பயணப்பட்டோம். அவன் பெயர் பாண்டியராஜா... அவன் அப்பா பெயர் சண்முகராஜா...

ஒரு தெருவின் தலைவாசல் அவன் வீட்டு முகப்பு என்றால் கொல்லைப் புறம் அடுத்த தெரு. வீட்டுக்குள் செல்ல முகப்பில் செருப்பினை கழட்டிக் கொண்டிருந்தோம். தலையில் கட்டோடு பாண்டியராஜா திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான்...."மாப்ள கீழ விழுந்துட்டேன்னு சொல்லுங்கடா...ப்ளீஸ்டா சண்டையில அடிப்பட்டேன்னு அப்பாக்கிட்ட சொல்லாதீங்கடா..."திருப்பத்தூரிலிருந்து சாயல்குடி வரை கிளிப்பிள்ளையைப் போல சொல்லிக் கொண்டிருந்தான்...

மீசையை முறுக்கியபடியே....அப்பா வந்தார். என்னாச்சுப்பா என்று அவர் என்னிடம் கேட்ட உடனேயே உண்மையைச் சொன்னேன்....காலேஜ்ல சண்டைப்பா...அதுல ஒருத்தன் ராஜாவ அடிச்சுட்டான்....வேற ஒன்ணும் இல்ல மூணு தையல் போட்டு இருக்குப்பா அதான் விட்டுட்டுப் போலாம்னு வந்தோம்....

"ப்ப்ப்ப்ப்ப்ளார்ர்................"என்று ஒரு அறை விழுந்தது பாண்டியராஜாவுக்கு....ஏண்டா மானங்கெட்ட நாயே....அடி வாங்கிட்டு வந்து இருக்க......போய் உன்னை அடிச்சவன் மண்டைய உடைச்சு கையக்கால உடைச்சுப் போட்டுட்டு வா....வக்காளி வெக்கங்கப்பட்ட பயல பெத்துருக்கேனடா....த்த்தூ........."காறித்துப்பினார்...ராஜா மீது....

இல்லப்பா...என்று அவரை சமாதானப்படுத்தி வீட்டுக்குள் கூட்டிச் செல்வதற்குள் பெரிய பாடாகிவிட்டது. 

இரவு உணவு அருந்தும்  போது பாண்டியராஜாவின் இரண்டு சகோதரிகளும் அம்மாவும் என்னிடம் சொன்னார்கள்...."தம்பியளா திரும்ப போகும் போது நாலு பயலுகள கூட அனுப்புறேன்...ராசாவ அடிச்சவன காமிச்சு மட்டும் கொடுங்க...மிச்சத்த அவிங்க பாத்துக்கிடுவாய்ங்க...

வேண்டாம்மா....காலேஜ்ல சஸ்பெண்ட் பண்ணி வச்சு இருக்காங்க...அந்தப் பையனை...."மென்று விழுங்கிக் கொண்டே சொன்னேன்.

"சஸ்பெண்ட் பண்ணிப்புட்டா வலி தெரியாதுல்லப்பு....பொளக்க மறுக்கா போட்டாத்த்தேன்.. அடங்குவாய்ங்க...."

இது நடந்து கிட்டத்தட்ட இப்போது 17 வருடம் ஆகிப் போய்விட்டது.  மதயானைக் கூட்டம் மீண்டும் என் பழைய நினைவுகளை கிளறிவிட்டது. இன்னமும் இந்தியா குறிப்பாக தமிழகம் சாதியைச் சுமந்து கொண்டு அலைகிறது. அரசு அலுவலகங்களுக்குச் சென்றால் என்ன சாதி நீ என்று கேட்கிறார்கள்...? கையெழுத்து வாங்க செல்பவன்....அந்த ஆபீசர் என்ன சாதி என்று கேட்கிறான்...? அடிச்சவன் என்ன சாதி என்று காவல்துறை புகார் அளிக்கப் போனால் கேட்கிறது...

சாதி பார்த்து தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துகிறார்கள்...., சாதிக்காரன் வோட்டு என்று இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள், சாதி, சாதி என்று மனிதர்கள் வாழ்வியல் சூழல்களையும், வளர்ந்த முறையையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு இன்னமும் மீசை முறுக்குகிறார்கள்....

திராவிட இயக்கங்கள் இல்லாமல் மட்டும் போயிருந்தால் என்னவாயிருக்கும் என்று யோசித்துப் பார்க்கவே எனக்கு தலை சுற்றியது....

மணியைப் பார்த்தேன்....! 

இரண்டே கால் என்று காட்டியது. விடிந்ததும் ஓட வேண்டும் வேலைக்கு....துபாய் அசுரகதியில் இயங்க ஆரம்பித்திருக்கிறது மீண்டும்....

ஆமாம்....

எக்ஸ்போ 2020ஐ வென்றிருக்கும் இந்த தேசம்...உலகமெங்கும் வசிக்கும் எத்தனையோ மனிதர்களுக்கு சாதி மத வேறுபாடுகளின்றி வாழ்க்கையைப் படியளக்கப் போகிறது...!




தேவா சுப்பையா









தல Vs தளபதி தலைப்பொங்கல் யாருக்கு...?

$
0
0

விஜயின் தலைவாவையும், அஜித்தின் ஆரம்பத்தையும் பார்த்த மிரட்சியில் இருந்து இன்னும் மீளவே இல்லை நான். இரண்டு படமுமே அவ்வளவு கொடுமையானது. இரண்டும் நன்றாகத்தானே இருந்தது என்று தல, தளபதியின் ரசிகர்கள் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம், ஆனால் என்னை போன்ற சராசரி சினிமா ரசிகர்களுக்கு அவை இரண்டும் கெட்ட கனவுகள்.

தலைவா படம் பார்க்க நள்ளிரவுக் காட்சிக்கு ரிசர்வ் செய்து பார்க்கச் சென்றேன். அதிகாலை 2 மணிக்கு படம் ஆரம்பித்த பத்து நிமிடத்தில் பல்லைக் காட்ட ஆரம்பித்தது. ரஜினி பார்முலா எல்லாம் ரஜினிக்கே இனிமேல் ஒத்து வராது என்னும் உண்மையை இப்போது  நடிக்கும் நடிகர்கள் குறிப்பாய் விஜய் உணரவேண்டும். எம்.ஜி.ஆர் பார்முலாவை தூசு தட்டி ரஜினி ஆட்டம் காட்டிய காலம் மலையேறிப் போய்விட்டது. இது  ‘ஆம் ஆத்மி’ களின் காலம். மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தி மக்களின் வழிகாட்டுதலோடு நடுத்தர வர்க்கம் அதிகாரத்தை கையிலெடுக்க ஆரம்பித்தாகி விட்டது. திரையில் தன் அரசியல் தலைவனைத் தேட வேண்டிய எந்த ஒரு நிர்ப்பந்தமும் இப்பொது தமிழ் மக்களுக்கு கிடையாது.

விஜய் தலைவாவில் அரசியல் பேச முயன்று மாண்புமிகு முதல்வர் அம்மாவின் பெருங்கருணையால் பந்தாடப்பட்டு படத்தை வெளியிடவே குட்டிக்கரணம் அடிக்க வேண்டி இருந்தது. இவர் எப்படி திமுக, அதிமுக என்னும் ராட்சச கட்சிகளை எதிர்த்து நிற்க முடியும்? விஜய் அண்ட் டீம் பரீசிலனை செய்து தங்களின் அரசியல் கனவுகளில் இருந்து விடுவித்துக் கொண்டு ஒழுங்காக நடிக்க ஆரம்பித்தால் தமிழ் சினிமாவுக்கு அட்டகாசமாய் ரஜினிக்குப் பிறகு எல்லோரும் விரும்பும் ஒரு சூப்பர் ஸ்டார் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

நாயகன், தளபதி, அமரன், இப்படி தமிழ் சினிமா காறித் துப்பின விசயத்தை விஜய்காக புத்தம் புதிதாய் எடுத்துக் கொடுப்பது போல டைரக்டர் கதை சொன்ன போது இளைய தளபதி தயிர் வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தாரா என்ன..? தலைவா என்னும் உலக மகா மொக்கையை கொடுத்த விஜயின் ஜில்லா ஏதோரு வகையில் கல்லா கட்டும் என்று எனக்குள் ஏதோ ஒரு பட்சி சொல்கிறது. இந்தப் பாழாய்ப் போன பட்சி தலைவாவுக்கும் இப்படித்தான் சொன்னது. இந்த முறைய் பட்சி சொல்வது பலிக்க வில்லை என்றால் எங்கள் ஊர் கருப்பசாமிக்கு பட்சியைப் பலி கொடுக்கலாம் என்று தீர்மானித்திருக்கிறேன்.

போன படத்தில்  தளபதி ஒரு வாயிற் காப்போன் அளவு கூட கம்பீரமாயில்லாமல் நம் எல்லோருக்கும் தலைவலியைக் கொடுத்ததுதான் மிச்சம். இது ஒரு புறமிருக்க தலயின் ஆரம்பமாவது நன்றாக இருக்குமா என்ற பேராவலில் டோரண்ட்டிலிருந்து தரவிறக்கம் செய்து ஆரம்பத்தை பார்க்க ஆரம்பித்தேன். ஆரம்ப காட்சிகளில் அசத்தலாய்  இருந்த படம் போகப் போக அம்புலிமாமா கதை போல பல்டி அடிக்க ஆரம்பித்தது. பில்லா 2 பார்த்தது இன்பம் என்றால் ஆரம்பம் பேரின்பம் என்றுதான் சொல்ல முடியும். நீங்க ஏன் சார் லாஜிக் எல்லாம் பாக்குறீங்க...சினிமாவை சினிமாவா மட்டும் பாருங்க என்று ரசிகப் பெருமக்கள் எங்களைப் போன்ற போரடிச்சா சினிமா பாக்குற அசமந்தமான ரசிகர்களைப் பார்த்துக் கேட்கக் கூடும்...

எவ்ளவுதான் சகித்துக் கொண்டு படத்தைப் பார்ப்பது..? துபாய்க்கு வந்து வங்கியின் மேலாளரை மயக்கமடைய வைத்து விட்டு துபாய் ரோடுகளில் அஜித் பைக் ஓட்டுவார் என்பதற்காகவே காரை எல்லாம் எடுத்து ஓரமாய் வைத்து விட்டு அவரை பைக் ஓட்ட வைத்து அவர் பின்னால் எங்களை ஓட வைத்து....சர்வ சாதாரணமாய் பணத்தை அஜித்தின் கணக்கிற்கு மாற்றிக் கொள்வதையும், இந்தியா பாகிஸ்தான் எல்லை வரை காட்சிகள் நீண்டு ஜித்து விளையாடி இருப்பதையும் எப்படி ஒத்துக் கொள்ளச் சொல்கிறீர்கள்..? அஜித் தான்,  தலதான்...தன் உழைப்பால் முன்னேறியவர்தான் அதற்காக...மொக்கை கதைகளை எல்லாம் நன்றாக இருக்கிறது என்று சொல்லி கை தட்டி ஆராவரமா செய்ய முடியும்..?

லட்சக்கணக்கில் தங்களுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்திற்கு இப்படித்தான் தலயும், தளபதியும் படம் நடித்துக் கொடுப்பார்கள் என்றால் வெகு விரையில் அந்த ரசிகர்கள் கூட்டம் அவர்களை விட்டு விலகிப் போய்விடும் என்ற உண்மையை இந்த சூப்பர்  ஹீரோக்கள் உணரவேண்டும். எம்ஜிஆர் படத்தைக் கையில் பச்சைக் குத்திக் கொண்டு எம்ஜிஆரைக் கடவுளாகக் கருதி வாழ்ந்த உணர்வுப்பூர்வமான ரசிகர்கள் கூட்டம் ஒன்றும் இப்போது கிடையாது. இது உலகமயமாக்களின் மயக்கத்தில் சிக்குண்டு கிடக்கும் இளையர்களைக் கொண்ட சமூகமாய் மாறிக் கொண்டிருக்கிறது. திரைப்பட நடிகனுக்காய் கொடி பிடிக்கும் வேகம் முன்பைப் போல இல்லை. திணறடிக்கும் மூர்க்கம் எல்லாம் இப்போது ஒடுங்கிப் போய்விட்டது. பெரும்பாலான இளையர்கள் இப்போது ஐயா நம்மாழ்வாரைப் போற்றுகிறார்கள். அவரைப் பற்றி பேசுகிறார்கள். யார் அரசியல் தலைவர்கள்...? யார் தகிடுதித்தங்கள் என்று மனக்கணக்குப் போட ஆரம்பித்து விட்டார்கள். இந்திய தேசத்தின் தலைநகரில் என்ன மாதிரியான மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்று பார்த்து அதை ஏன் நம் தமிழகத்தில் நிகழ்த்த முடியாது என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

திரைப்படத்தில் வடிமைக்கப்படும் கதாநாயகப் பிம்பத்திற்கும் சாதாரண வாழ்க்கைக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.  ரஜினி, கமலுக்குப் பிறகு அடுத்த மாற்றாய் பிரகாசிக்க ஆரம்பித்திருக்கும் விஜயும், அஜித்தும் கவனித்து தரமான பொழுது போக்கு படங்களை கொடுத்தாக வேண்டியிருக்கிறது. விஜய் டிவியில் ஒரு சாதரண ஆங்கராய் இருந்த சிவகார்திகேயனின் படங்கள் இப்போது நூறு நாள் தாண்டி ஓடுகிறது. விஜய் சேதுபதி போன்ற மூன்றாம் கட்டத்தில் இருந்த நடிகர்கள் முதல் கட்ட நடிகர்களாகி தொடர்ச்சியாய் வெற்றிப்படங்களை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

2013 ஆம் ஆண்டில் ரசித்துப் பார்க்கக் கூடிய படங்களாய் சிவகார்த்திகேயனின் படங்களும், விஜய் சேதுபதியின் படங்களும் இருந்தன. தலயும், தளபதியும் தமிழ் மக்களின் முன்பு தலை சிறந்த நடிகர்கள் என்ற இடத்தை இன்னும் பிடிக்கவே இல்லை. சில, பல விருதுகளை வாங்கி அவர்கள் தங்களை இன்னும் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. அஜித்தைப் பொறுத்த வரையில் அவருக்கு அரசியல் ரீதியாய் தன்னை வார்த்துக் கொள்ள விருப்பமில்லை என்றாலும் அவருக்கும் தன்னை ரசிகர்களும், மற்ற சினிமாக்காரர்களும் தல, தல என்று புகழ்வது பிடித்திருக்கிறது. அந்த போதையில் வந்த கடந்த இரண்டு படங்களும் படுகேவலமாகவும் இருந்தது. இப்படி எல்லாம் நான் சொல்கிறேன் என்று ஆரம்பம் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா என்று என்னிடம் ஆரம்பிக்க வேண்டாம்....

8 கோடி பேர் இருக்கும் ஒரு மாநிலத்தில் 1 கோடி பேர் படம் பார்த்தாலே அது பாக்ஸ் ஆபிஸ் ஹிட்தான் என்ற அரதப் பழசான உதாரணங்களை பிறகு நான் சொல்ல வேண்டி வரும்.

விஜய்க்கு என்று தனியாய் நாம் எதுவும் சொல்ல வேண்டியது இல்லை. தினமும் அம்மா ஜெயலலிதாவின் புகைப்படத்தை எடுத்து ஒரே ஒரு தரம் அவர் பார்த்தால் மட்டும் போதும் அவரது தலைவா பட அனுபவமே அவருக்குப் புத்தி புகட்டும்.

நிற்க..!

இந்தப் பொங்கலுக்கு வெளியாகப் போகும் அஜித்தின் வீரமும், விஜயின் ஜில்லாவும் ஒரே ரேஞ்சில் கல்லா கட்டும் என்றே நான் நினைக்கிறேன். வீரம் பாடல்கள் எல்லாம் சரவெடி என்றால் ஜில்லா பாடல்கள் எல்லாம் அதிரடி. வீரம் படத்தின் டீசர் அஜித் ரசிகர்களை முறுக்கேற்றி விட்டிருக்கிறது. கிராமத்துப் பின்னணியைக் கொண்ட கதையில் அஜித் நடித்திருக்கிறார். இந்தப் படத்தாக அவர் கோட்டை எல்லாம்  கழற்றி வைத்து விட்டு வேட்டி சட்டையில் நடித்திருப்பது ஒரு ப்ளஸ். அஜித் தன்னை இந்த மண்ணின் மைந்தராக காட்டிக் கொள்ளக் கூடிய படம் ஏதேனும் ஒன்றாவது வராதா என்று ஏங்கிக் கொண்டிருந்த என்னைப் போன்றோருக்கு அட்டகாசத்துக்குப் பிறகு....வீரம் ஒரு அந்த ஏக்கத்தை தீர்த்து நிச்சயமாய் ஹிட்டடிக்கும் என்றே நினைக்கிறேன்.

முன்பெல்லாம் சாதரணமாகவே விஜய் படத்தில் பாடல்கள் பின்னி பெடல் எடுக்கும். இடையில் அவரது  படத்தின் பாடல்களில் ஏற்பட்ட அந்தத் தொய்வினை தூக்கி நிறுத்தி இருக்கும் டி. இமானுக்கு விஜய் கடமைப் பட்டிருக்கிறார். விஜய் சொந்தக் குரலில் பாடி இருக்கும் பாடல் அட்டகாசம். மொத்தத்தில் எல்லா பாடல்களும்....தமிழ் நாட்டின் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கப் போவது என்னவோ நிஜம்....!

பார்க்கலாம்.....

வரப் போவது தலப் பொங்கலா? இல்லை  தளபதிப் பொங்கலா.... அல்லது தலதளபதி பொங்கலா...? இல்லை வெண்பொங்கலா என்று...



தேவா சுப்பையா...





கனவுப் பூ - 1

$
0
0

சுவற்றில் சாய்ந்திருந்தாள் மாதவி. இடுப்பு லேசாக வலிப்பது போல இருந்தது. எப்போ வலி வந்தாலும் உடனே ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்துடுங்க ஏன்னா இதுதான் அவுங்களுக்கு டைம்.....ஏம்மா மாதவி...வலி அதிகமாச்சுன்னா....வந்துடு சரியா...? பனிக்குடம் உடைஞ்சா வெளில வர்ற லிக்விட் கொஞ்சம் பிசு பிசுப்பா கெட்டியா இருக்கும்...உடனே கெளம்பி வந்துடுங்க...... காலையில் டாக்டர் சுபா சொன்னதை நினைத்துக் கொண்டாள்.

சுவற்றில் வாகாக சாய்ந்து உட்கார்ந்திருந்த மாதவி வயிற்றை தடவிப் பார்த்தாள். உள்ளுக்குள் ஒரு ஜீவன் வெளியே வர துடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள். கீழே தரையில் தலைக்கு கை கொடுத்தபடி படுத்திருந்த அம்மாவையும், அப்பாவையும் பார்த்தாள். எழுப்புவோமா....என்று யோசித்தாள். இப்பதானே லேசா சுரீர்னு வலிக்கிற மாதிரி இருக்கு.. இன்னும் வலி கொஞ்சம் கூட போனிச்சின்னா எழுப்பலாம்...யோசித்தவள்....

சுதா.. சுதா என்று மெல்லிய குரலில் அவள் தங்கையை அழைத்தாள். வாரிச் சுருட்டி எழுந்த சாம்பசிவம்...ஏத்தா.. என்ன வேணும்......?

இல்லப்பா கொஞ்ச வெந்நீர் வேணும்....குடிக்க...

சரசு ஏய்...சரசு...பிள்ளை வெந்நீர் கேக்குற பாரு........சொல்லிக் கொண்டே மணி பார்த்தார். இரவு பதினொன்று ஆக...15 நிமிடம் என்று காட்டியது.

நீ படும்மா........தேவைப்பட்டா எழுப்புறேன் உன்னைய.....வெந்நீரை குடித்தபடியே மாதவி சொன்னாள். கவலையாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த சரசுவுக்கு தூக்கம் கண்ணைச் சுழற்றியது. ஒரு வாரம் தூக்கமே இல்லத்தா....அம்மா கொஞ்சம் அசந்துட்டா கூட அதட்டி எழுப்புத்தா....

சரசு மறுபடி சாய்ந்தாள்...உறங்கிப் போனாள். சாம்பசிவம்...மகளைப் பார்த்தபடியே...உறங்கிப் போனார்.

மாதவி சுவற்றில் சாய்ந்தபடியே வயிற்றைத் தடவிக் கொண்டிருந்தாள்.

                                                                          ***

ஏண்டி... எத்தனை பேரு கால்ல விழறது...? செம்ம டயர்டா இருக்கு எனக்கு... நான் தூங்கிடுவேன் பரவாயில்லையா...? பிரதீப் கேட்ட கேள்வியின் அர்த்தத்தை உள் வாங்கிக் கொண்டாள் மாதவி. ச்ச்சே...ச்ச்சே... எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லப்பா...நானும் தூங்கதான் வெயிட்டிங்...தலை குனிந்தபடியே சொன்னாள்.

ஏன் மாமா...சின்ன வயசுல இருந்தேதான் தெரியும்ல...உங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு அப்புறம் என்ன எனக்கு த்ரில்லு இருக்கப் போகுது...?

அடிப்பாவி...மகளே த்ரில் இல்லாமத்தான்..வந்து இருக்கியா...? இன்னிக்கு ஃபர்ஸ்ட் நைட் நமக்கு...

அதான் யாரோ தூங்கப் போறேன்னு சொன்னாங்களே....? மாதவி நகைகளை கழட்டியபடியே ப்ரதீப்பை வம்புக்கிழுத்தாள்.

அப்டீ எல்லாம் சொல்லி எஸ்கேப் ஆக முடியாது...மகளே.. ..ப்ரதீப் மாதவி தோளில் கை போட்டான். 

மாமா....என்ன அதுக்குள்ள...இப்டி....சரி...என்னை ஏன் மாமா புடிக்கும் உங்களுக்கு...?

இந்த உலக மகா கேள்விய எத்தனை  காலத்துக்கு நம்ம சமூகம் சுமக்கப் போகுதோ ஹா...ஹா.. மாதவி பிடிக்கிறதுக்கு என்ன காரணம் வேணும்..? பிடிக்கும்னா பிடிக்கும்...அவ்ளோதான்..!

இன்னொன்னு சொன்னா கோச்சுக்க மாட்டியே....தங்கம் நீ...? 

என்ன மாமா...சொல்லுங்க...? பிரதீப்பின் அணைத்தலுக்கு உடன்பட்டு அவன் கைக்களுக்குள்ளிருந்து  முகம் பார்த்து நெருக்கமாய் கேட்டாள் மாதவி....

கல்யாணம் எதுக்கு பண்ணிக்கிறோம் தெரியுமா?

வாழ்றதுக்கு...அப்பாவியாய் உதடு சுளித்தபடி சொன்னாள் மாதவி.

ஹம்ம்ம்க்கூம்ம் கல்யாணம் பண்ணாட்டி எல்லாரும் செத்துப் போய்டுவாங்களா என்ன...? அப்பவும் வாழத்தானே செய்வாங்க லூசு...

அச்ச்சோ மாமா அப்டி எல்லாம் இல்லை...சரி நீங்க சொல்லுங்க....

எம்.பி.ஏ இன்டர்நேசனல் மார்க்கெட்டிங் சப்போர்ட் பண்ணலியா மாதவி செல்லம்...இந்த கேள்விக்கு பதில் சொல்ல....

படிக்கிறது....படிக்க...நீங்க கேட்டதுக்கும் இன்டர்நேசனல் மார்க்கெட்டிங்கும் என்ன சம்பந்தம் மாமா இருக்கு...? அவன் மார்பில் செல்லமாய் குத்தினாள்.

கல்யாணம் பண்ணிக்கிறது...செக்ஸ் வச்சுக்க.......பிரதீப் மாதவியைப் பார்த்தான்.

ச்ச்சீ..போ மாமா...ஏன் அப்டி சொல்றீங்க...? ஏன் கல்யாணம் பண்ணிக்கலேன்னா செக்ஸ் வச்சுக்க முடியாதா...? ப்ரதீப்பை மடக்கினாள்...மாதவி...

வச்சுக்கலாம். பட்...இதுல ஒரு கம்ஃபோர்ட் இருக்கு. அப்டியே செக்ஸ் வச்சுக்கிட்டு குழந்தை பெத்துக்கிட்டு அது என் வாரிசுன்னு சொல்லி பெருமைப்பட்டுக்கலாம். அப்புறம் அந்த வாரிசுக்காக வாழ்றேன்னு சொல்லி ஏதோ ஒரு அர்த்தத்தை உருவாக்கிக்கலாம்...அதே நேரத்துல....எல்லோரும் இப்டி வாழ்றது ரொம்ப சிறப்புன்னு சொல்லி வச்சுட்டுப் போய்ட்டாங்க....

ஒருத்தனைப் பார்த்து ஒருத்தன்...அவனைப் பார்த்து இன்னொருத்தன்னு எல்லோரும் இந்த சமுதாயத்துல நாங்களும் ஒரு அங்கம்னு ஆணித்தரமா சொல்லிக்க...இப்டி மேரேஜ்.....அப்டி இப்டீன்னு....

இதே இன்னிக்கு உன் கழுத்துல தாலி கட்டி உன்னை தொடப்போறேன்..இதை போன வாரம் செஞ்சிருந்தா தப்புன்னு நீயே சொல்லுவ...? சரியா?

ஆமா....முறைப்படி எல்லாம் நடக்கணும்ல....மாதவி சீரியசாய் பதிலினாள்.

அந்த மொறை ஊர்ல இருக்க எல்லோர்கிட்டயும் நாங்க கல்யாணம் கட்டிக்கிட்டோம்..அதுக்கப்பறம் செக்ஸ் வச்சுக்கப் போறோம்னு மறைமுகமா பர்மிசன் கேக்குறதுதானே...?

ஹூ த ஹெல் ஆர் தே...அவுங்க கிட்ட பெர்மிசன் வாங்கி.... நாங்க முறைப்படி சேர்றோம்னு ஏன் சொல்லணும்.....? புடிச்சு இருக்கு சோ வேணும்னா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு....போய்ட்டே இருக்கலாம்ல....

ஹ்ம்ம்ம்ம் மாமா நீங்க எல்லாம் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை.....எது எப்டியோ...எனக்கு இங்க நிறைய நல்லது கெட்டதுகள இந்த சமூகம் சொல்லிக் கொடுத்து இருக்கு...நல்லது கெட்டதுன்னா..இந்த சமூகந்தான் நம்ம பின்னாடி வந்து நிக்கப் போகுது..சோ...அவுங்கள அனுசரிச்சு ஒரு கட்டுப்பாட்டுக்குள்ள வாழ்றது எனக்குப் பிடிச்சு இருக்கு....தட்ஸ் ஆல்....

எம்.பி.ஏ. இன்டர்நேசனல் மார்க்கெட்டிங் நிஜமாவே இப்போ கம்பீரமா எந்திருச்சு நின்னு கர்ஜிக்குதுடி.....பிரதீப் மாதவியை அணைத்தான்.

மாமா....எது எப்டி இருந்தாலும் உன்னை எனக்குப் பிடிக்கும் மாமா...அந்த நெருக்கம்...அவளை ஒருமையில் பேச வைத்தது.

பேரச் சொல்லியே கூப்டுடி செல்லம்...ஐ டோண்ட் மைண்ட்.....கலாச்சாரம் மண்ணாங்கட்டின்னு காலையில எழுந்து என் காலைத் தொட்டு கும்பிட்டு தாலிய எடுத்து கண்ணுல ஒத்திக்க கூடாது....சரியா....

மாமா...டோண்ட் வொர்ரி...அப்டி எல்லாம் நீங்க கேட்டாலும் செய்ய மாட்டேன்...ஓகேயா....மாதவி சிரித்தாள்.

அன்பாய் பிரதீப் அவளை அணைத்துக் கொண்டான்.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மிக முக்கியமான ஒரு இரவாக முதலிரவு அமைந்து போய்விடுகிறது. ஒரு பெண்ணை ஆணும், ஆணைப் பெண்ணும் எதிர்கொள்ளும் வசீகர ராத்திரி அது. பிரபஞ்ச சுழற்சியின் அடிப்படை இனவிருத்தி. தன்னை பல்கிப் பெருக்கிக் கொள்ளல். விரிந்து கொண்டே செல்லும் இந்த பிரபஞ்சத்தின் மைய அச்சு காமம். தன்னை விஸ்தாரித்துக் கொள்ளல். இப்படியான அர்த்தம் நிறைந்த காமத்தை சரியான விதத்தில் தெளிவோடு, புரிதலோடு, நிதானத்தோடு, அணுகும் போது வாழ்க்கை பற்றிய புரிதலை மனிதர்களால் பெற முடிகிறது. அத்தனை ஜீவராசிகளிலும் தான் யார் என்ற சுய உணர்வை மனிதனே பெற்றிருக்கிறான். அப்படி தன்னையும் தன்னைச் சுற்றி இருப்பவற்றையும் பகுத்தறிந்து புரிந்து கொள்ளும்  தன்மையை தான் செய்யும் செயலின் முழு சந்தோசத்தை, வலியை, துக்கத்தை ஆச்சர்யத்தை அவனால் வாங்கிக் கொள்ள முடிகிறது.

விலங்குகளின் காமம் வேறு வகை. அங்கே உணர்விலிருந்து உணர்ச்சி பிறக்க உணர்ச்சியோடு அது முடிந்து போகிறது. நான் இங்கே இவ்விதம் இவளை அல்லது இவனைப் புணர்கிறேன். இதில் எனக்கு இவ்வளவு சந்தோஷமாகிருக்கிறது. இங்கே என் உடன் இருக்கும் இவனோ அல்லது இவளோ என்னவள், என்ற ஒரு உரிமையோடு காமம் மனிதர்களுக்கு ஒரு இறுமாப்போடு கூடிய சந்தோசத்தைக் கொடுக்கிறது ஆனால் விலங்குகளிடம் உணர்ச்சியே மேலோங்கி நிற்கிறது. கூடி முடிந்த பின்பு அந்த உணர்ச்சி வடிந்து போக திசைக்கொன்றாக பிரிந்து செல்லும் விலங்குகளைப் போன்றல்ல மனிதர்கள்...

காமம் அனுபவமாய் புத்தியில் ஊறிப் போய் அந்த புரிதல் கொடுக்கும் தெளிவில் வாழ்க்கை பற்றிய நிதானம் பிறக்கிறது. காமத்தை சரியாய் அணுகாத மனிதர்கள் மிகப்பெரிய குழப்பத்திற்கு ஆளாகிப் போகிறார்கள். விலங்குகளைப் போல புணர்ந்து விட்டு மனிதர்களைப் போல வாழ அவர்கள் விரும்பி இரண்டுக்கும் நடுவில் ஒரு அகோர வாழ்க்கையை இயற்கை அவர்களுக்குப் படியளந்து விடுகிறது. திருமணம் சடங்குகள், என்பதெல்லாம் ஒரு மனிதனைப் பயிற்றுவித்து ஒரு சீரான இயக்கத்தில் இருக்க வைக்க விபரம் தெரிந்தவர்கள் செய்து வைத்த ஒரு ஏற்பாடு.

இயற்கை சுதந்திரமனது ஆனால் சீரான ஒரு கட்டுப்பாடு கொண்டது. ஏனோ தானோ என்று பிரபஞ்சத்தில் எதுவுமே கிடையாது என்றுதான் விஞ்ஞானம் சொல்கிறது. அணுக்களின் உள்ளே மையக்கருவைச் சுற்றி வரும் புரோட்டானும் எலக்ட்ரானும் கூட சீரான அதிர்வுகளோடு ஒரு ஒழுங்கில்தான் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. முறையற்ற யாவும் விபரீதத்தையும் பேராபத்தையும் எதிர்விளைவுகளையும் உருவாக்கும்.

நன்மை, தீமை என்பது வேறு. அது மனிதர்களுக்கு மட்டுமே உரித்தான லெளகீக வார்த்தை. நேர், எதிர் விளைவுகள் என்பது வேறு. இதில் யாரும் பலன் பெறுவதோ அல்லது இழப்பதோ என்ற எந்த எதிர்ப்பார்ப்புகள் இருப்பதில்லை. செடி வளர்ந்தால் பூ பூத்தால், காயானால் அது ஒரு இயக்கம். அது நேர்மறையானது. அது பட்டுப் போனால் அழுகிப் போனால் மண்ணோடு மண்ணாக மட்கிப் போனால் அது எதிர்மறை இயக்கம். இரண்டுமே இயக்கம். ஒன்றில் இருக்கும் சுமூக விளைவு இன்னொன்றில் இருப்பது இல்லை. இயக்கத்தில் அதன் விளைவில் மனிதர்களுக்கு நற்பலன் இருந்தால் அது நன்மை  என்றாகிறது.

பிரதீப்பின் முழு ஆளுமைக்குள் வந்திருந்தாள் மாதவி. காமத்தை காதலோடு செய்யும் போது அங்கே கச்சேரி களை கட்டி விடுகிறது. மூர்க்கமாய் காதலை தெரிவிக்க ஒரு வழிமுறையாய் காமம் இருக்க...அங்கே தாள வாத்தியங்கள் ஒரே சீராக ஒலிக்க ஆரம்பிக்கிறது. அவள் விட்டுக் கொடுத்தாள்...இவன் முன்னேறினான்....அவன் மூர்க்கமானான்...இவள் முடங்கிக் கிடந்தாள்.....

ஆணும் பெண்ணும் தங்களின் படைப்பின் அர்த்தம் தீர்க்க அங்கே போராடிக் கொண்டிருந்தன. பிரிந்த இரண்டு சேர துடித்துக் கொண்டிருந்தது.

வெளியே மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. அடை மழை. திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் எல்லோரையும் பந்தலில் இருந்து விரட்டியது மழை. இடி இடித்தது. மின்னல் வெளிச்சத்தில் மறுபடி விடிந்து விட்டதோ என்று ஆடு மாடுகள் பயந்து போய் கத்தின. முரட்டுத்தனமாய் பெய்த மழைக்கு ஏற்றார் போல காற்றும் பலமாக வீசியது.....புயல் எதுவும் வந்துவிட்டதோ என்று பயந்து போய் இடி இடித்த போதெல்லாம்...அர்ச்சுனன் மேல் பத்து...என்று யாரோ சப்தமாய் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அடித்துப் பெய்த மழை விடியல் காலையில் பளீச் என்று விட்டிருந்தது. தாவரங்கள் எல்லாம் தளர்ந்தும், மலர்ந்து மழையை வாங்கிக் கொண்ட சந்தோசத்தில் அந்த அதிகாலையில் சிலிர்த்து நின்றன. பூமியில் ஒரு குளுமை பரவி இருந்தது. 

பிரதீப் மாதவியின் மீதிருந்து இறங்கி புரண்டு படுத்தான்...மாதவிக்கு ஏதோ ஒரு உணர்வு ஒன்று அடிவயிற்றில் மின்னலாய் வெட்டியது. மனம் யோசிக்க ஏதுமற்று வெறுமையில் இருந்தது. அவளின் உடலுக்குள் ஏதோ ஒரு மாற்றம்...அடிவயிற்றில் ஒரு நிறைவு....ஏற்பட்டது. நிதானமாய் படுத்திருந்தாள். ஒருக்களித்து தன் புருசனின் நெஞ்சில் படுத்தாள்...

எவ்ளோ ப்ரியமான புருசன் எனக்கு கிடைத்திருக்கிறான். முரடன்....டேய்  முரடா......என்னடா செஞ்ச என்ன....? மெதுவாய் அவன் காதில் கிசு கிசுத்தாள்....காது கடித்தாள்...

பிரதீப் பிரஞ்ஞையற்றுக் கிடந்தான். உடலும் மனமும் அடங்கிக் கிடந்தன....அரை விழியால் கிறக்கமாய் அவளைப் பார்த்தான். இழுத்து....அணைத்துக் கொண்டு உச்சியில் முத்தமிட்டான்...!


(தொடரும்...)



தேவா சுப்பையா...







கனவுப் பூ - 2

$
0
0


மாதவிக்கு சுரீர் என்று வலி எடுத்தது....அம்ம்ம்ம்ம்ம்மா......சப்தமாய் கத்தினாள்...! சாம்பசிவம் பதறி எழுந்தார்.

என்னாச்சும்மா....ஏய்....எந்திரிடி....மனைவியை பிடித்து உலுக்கினார்...சரசு வேகமாய் எழுந்தாள்...

என்னத்தா...? வலி எடுக்குதா....மாதவியின் தோள் பிடித்து கேட்டாள்.

ஆமாம்மா பாத்ரூம் போகணும்....

கைத்தாங்கலாய் பிடித்து வாஷ்ரூமில் உட்கார வைத்தாள்.

மாதவிக்கு வலி அதிகமானது. இடுப்பு எலும்பு மெல்ல விலகுவதைப் போல தோன்றியது. அந்த வலியை அவளால் தாங்க முடியவில்லை. 

....ஏங்க... போய் முருகேசன எழுப்பி ஆட்டோவ எடுத்திட்டு வாங்க....சரசு ஓலமிட்டாள்.

மூணாவது தெரு முருகேசனின் ஆட்டோ வீட்டு வாசலில் வந்து நின்ற போது அதிகாலை இரண்டரை மணி.

சுதா...அக்காவோட சீல துணிமணி நைட்டி எல்லாம் எடுத்து பைல வச்சு எடுத்துட்டு வாம்மா...

எதித்த வீட்டு ஜோசப் அம்மாவ எழுப்பி கூட்டிட்டு வாடி சுதா....சரசு கத்தினாள்.

முன் சீட்டில் சாம்பசிவம் டென்சனாய் அமர்ந்திருந்தார். 

மாதவி பிறந்து கையில் கொண்டு வந்து நர்ஸ் கொடுத்த நினைவு புத்திக்குள் அவருக்கு எட்டிப்பார்த்தது. பெண் பிள்ளைகள் அப்பாவின் செல்லமாய் வளர்கிறார்கள். மாதவியும் அப்படித்தான். தகப்பன்களின் வலி மிகுந்த தருணம் தன் மகளின் பிரசவ வேதனையை பார்த்து சகித்துக் கிடப்பது. இது தன் மனைவி பட்ட வேதனையைப் பார்த்து பட்டதை விட பத்து மடங்கு அதிகமானது.

தோளில் தூக்கிப் போட்டு வளர்த்து, சாப்பாடு ஊட்டி விட்டு, கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து பத்து வயது வரைக் கட்டிப்பிடித்து உறங்கும் மகள்களை 13 வயசுக்குப் பிறகு தலை தடவி...என்னடா கண்ணு என்று ஆசையோடு அணைத்துக் கொள்ள மட்டுமே தகப்பன்களால்  முடிகிறது. தன் மகளின் மீது உயிரையே ஒரு தகப்பன் வைத்திருந்தாலும்.....

அவள் வளர வளர அவளைத் தூர நின்று ரசிக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலை தகப்பனுக்கு வந்து விடுகிறது. மகள்கள் அப்பாக்களின் இறக்கி வைக்க முடியாத பேரன்புச் சுமைகள். திருமணம் செய்து கொடுத்து விட்டு யாரோ போல ஒரு தகப்பன் நடந்து கொள்ள வேண்டும். ஒரு தாய் அதாவது பெண் இந்தச் சூழலை எளிதாக கடந்து வந்து விடுகிறாள். அது நமது சமூகத்தில் அவளுக்கு ஏற்கெனவே பழக்கப்பட்ட அறிமுகமான ஒரு விசயம். தன் வீட்டை விட்டு கணவன் வீட்டுக்கு வரும் போதே அவளுக்குத் தெரிந்து போய் விடுகிறது.....

23 வருடங்கள் பாசம் பாரட்டி என் வீடு என் வீடு என்று வாழ்ந்தது பொய்யாய்ப்  போய் விட்டது. இங்கே எல்லாம் மாறும் எதுவும் நிரந்தரம் இல்லை என்ற நிலையாமையை ஒரு பெண்ணின் ஆழ் மனது தன்னிச்சையாய் கிரகித்து வைத்துக் கொள்கிறது....ஆனால் ஒரு ஆண் அப்படி அல்ல....

அவனுக்கு எல்லாமே எப்போதும் வேண்டும். யாரையும் விட்டுக் கொடுக்க அவன் அவ்வளவு எளிதாய் இறங்கி வந்துவிடுவதில்லை. இப்படி இருப்பதனாலேயெ அவனால் தன் மகளை மணமுடித்துக் கொடுத்துவிட்டு யாரோ போல திரும்பி வரவேண்டும் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள அவ்வளவு எளிதாக முடிவதில்லை. அதிகாரமாய் தன்னை ஆளுமை நிறைந்தவனாய் காட்டிக் கொள்ளும் ஆண் உண்மையில் ஒரு பெண்ணை விட பலவீனமானவன். ஒரு பெண்ணின் தைரியம் ஒரு போதும் ஒரு ஆணுக்கு வந்து விடவே விடாது. 

ஆண் எப்போதும் வீரமாய் இருப்பது போல நடிக்கிறான்....! பெண் கோழையாய் இருப்பது போல நடிக்கிறாள். பெண் அவன் நடிப்பதை விரும்புகிறாள். ஆண் தான் நடிப்பதை உண்மை என்று நம்பிக் கொண்டு பெண்களை பலவீனமானவர்களாக கருதிக் கொள்கிறான்.

சாம்பசிவம் கலங்கிப் போயிருந்தார்.

ஆட்டோவின் பின் சீட்டில் நடுவில் மாதவியும் ஒரு பக்கம் சரசுவும் இன்னொரு பக்கம் எதிர்வீட்டு ஜோசப் அம்மாவும் பக்கவாட்டு கம்பியில் சுதாவும் உட்கார்ந்திருந்தனர்.

                                                                        ***

ஆயிர பாம்புகள் கொத்துவது போன்றது அது. உயிர் போய்விட்டால் கூட தேவலாம் என்று கூடத் தோன்றும் நேரமது. மூச்சு விட முடியாமள் திணறினாள் மாதவி. ஆழமா மூச்சு இழுத்து விடம்மா....கொஞ்சம் பொறுத்துக்க தாயி....

ஜோசப் அம்மா......ஐந்து பிள்ளைகள் பெற்றவள் நிதானமாய் மாதவியின் தலை தடவினாள்.

அடி வயிறு கனமாயிருந்தது......வலி அதிகரித்துக் கொண்டே இருந்தது. மாதவி....பிரதீப்பை நினைத்தாள்....கண்ணீர் வழிந்தது.

வயித்துல காது வச்சுக் கேளுங்களேன்..... ஒரு மாதிரி குறு குறுன்னு ஓடுதுங்க....நான்கு மாதம் முன்பு பிரதீப்பிடம் சொன்னது நினைவு வந்தது.

டேய்...பையா....என்னை மாதிரியே இருக்கணும் அம்மா மாதிரி நாட்டியா இருக்க கூடாது....

ஓய்,,,,,என்ன மாதிரி என்ன நாட்டி....???? பிரதீப்பின் காது பிடித்து திருகினாள்...மாதவி.

அது என்ன பையன்னு முடிவே பண்ணிட்டீங்களா...பொண்ணா இருந்தா....என்ன பண்ணுவீங்க....?

பையனா இருந்தா...குமணன்...பெண்ணா இருந்தா குழலி....? எப்டி இருக்கு என் பேர் செலக்சன்...?

பேசுறது பாதி இங்கிலீஸ்..பாதி தமிழ்....பேர் மட்டும்...தமிழ்ப் பேரா சொல்றீங்க...எப்டிங்க.. புலவரே...? பிரதீப்பை சீண்டினாள்...

ஹ்ம்ம்ம்ம் பாக்குற உத்தியோகம் பிஸினஸ் டெவலப்மெண்ட்....ஏர்லைன்ஸ்ல இன்ட்டர் நேசனல் மார்க்கெட்டிங் செய்யணும்....தமிழ் பேசுறதாம்....தமிழ்நாடு பார்டர் தாண்டினா ஒருத்தனும் தமிழ்ழ பேச மாட்டேன்றானடி ...என்ன என்ன பண்ண சொல்ற...

நான் எல்லாம் ஆங்கிலமோகம் இருந்த ஒரு காலச்சூழல்ல இருந்து இங்கிலீபீசு பேசுறதே பெருமைன்னு சொல்லி சொல்லி வளர்ந்தவனாக்கும்....

                                                                      ***

அம்மா ரொம்ப வலிக்குதும்ம்மா.....வீறீட்டாள் மாதவி.

குன்னக்குடி முருகா....எம்புள்ளைய காப்பத்துப்பா.....அழுதபடியே இரண்டு ரூபாயை படக்கென்று காணிக்கையாக முந்தானையில் முடிந்து கொண்டாள் சரசு. மாதவியின் திமிறலை ஆட்டோ தாங்க முடியாமல் குலுங்கியபடியே....அந்த மருத்துவமனையின் முன்னால் போய் நின்றது.

அதிகாலையிலும் சுறு சுறுப்பாய் இருந்தது அந்த மருத்துவமனை.

சுபா மேடம் அன்எக்ஸ்பெக்டடா....ஒர் அவசர வேலையா சொந்த ஊர் போய்ட்டாங்க...சார்....மிஸ் கிருத்திக்கா சுப்ரமணியன் அவுங்களுக்கு பதிலா...ஒங்க டாட்டர் கேஸ அட்டெண்ட் பண்ணுவாங்க....

நுனி நாக்கில் பயிற்றுவிக்கப்பட்டிருந்த நளினத்தோடு சொல்லி முடித்திருந்த ரிசப்சனிஷ்டைப் பார்த்து கை எடுத்து கும்பிட்டார் சாம்பசிவம்.....

சீக்கிரம்மா....என் பொண்ணு துடிச்சுட்டு இருக்காம்மா வலியில.....

சார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்.....இப்டி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாதீங்க இட் வில் எஃப்கட் அதர் பேஷண்ட்ஸ்....கண்டிப்பு குரலில் அதட்டியபடியே ஒரு நர்ஸ் சாம்பசிவத்தைக் கடந்து மாதவி இருந்த அறைக்கு ஓடினாள்...!

மருத்துவமனைகள் எந்த சென்டிமெண்டும் எப்போதும் இருப்பது கிடையாது. அது வலியையும், வேதனையையும், பிறப்பையும் இறப்பையும் என்று சந்தோசத்தையும் துக்கத்தையும் பார்த்து பார்த்து சலித்துப் போன மனிதர்கள் நிரம்பியது. மனித உடலோடு பழகிப் பழகி மனிதர்கள் எல்லாம் அவர்களுக்கு ஒரு கேஸ் என்னும் அளவைத் தாண்டி அதிகமாய் நினைக்க முடிவதில்லை. அப்படி நினைத்து அவர்கள் வருந்தியும் மகிழ்ந்தும் கொண்டிருந்தால் அவர்களால் வேலை செய்யவும் முடியாது.

டாக்டர் கிருத்திகா சுப்ரமணியன் குன்னக்குடி முருகனாய் தெரிந்தார் மாதவியின் குடும்பத்திற்கு.....

சரசு டாக்டரை கை எடுத்து கும்பிட்டாள்....அம்மா.. என் மகளுக்கு தலைப்பிரசவம்மா....

கொஞ்சம் வெயிட் பண்ணுங்கம்மா..ப்ளீஸ்....அதிகம் பேசாமல்...அறைக்குள் சென்றார் மருத்துவர்.

லேபர்  ரூமிற்குள்...மாதவியின் உடை எல்லாம்  கழற்றப்பட்டு.....நிர்வாணாமான அந்தக் கணத்தில் பிரதீப்பின் நினைவு வந்தது மாதவிக்கு. முதல் முதலாக உடை இல்லாமல் அவன் முன் நின்ற பொழுது....புத்திக்குள் எட்டிப்பார்த்தது....! தாயிடம் தந்தையிடம், இன்னும் எல்ல உறவுகளையும் விட கணவன் என்னும் உறவு உயர்ந்தது. தாயிடமும் சொல்லக் கூச்சப்படும் விசயங்களை கணவனிடம் மட்டுமே பெண்களால் பகிர்ந்து கொள்ள முடிகிறது.

மாதவிக்கு அழுகை வந்தது. பச்சை நிற அங்கியை போட்டு விட்டிருந்தார்கள்....தலை முடியை கட்டி பின்னலாக்கி இறுக்க கட்டிவிட்டார் ஒரு நர்ஸ்...! உடம்பு முழுதும் மாதவிக்கு மழிக்கப்பட்டது......

இங்க பாரும்மா....ஏற்கெனவே....டெலிவரி டேட் தாண்டி போயிடுச்சு ஒரு பத்து நிமிசம் பார்ப்போம்....இல்லேன்னா ஆப்பரேசன் பண்ணிடுவோம்....டாக்டர் மாதவியின் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்....

உள்ளே....

வேகமாய் மூச்சிழுக்கச் சொல்லி ஆழமாய் மூச்சை வெளியேற்றபடியே மூச்சால் அடி வயிற்றை உந்தித் தள்ளச் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தாள்...நர்ஸ்.....

மாதவி திணறினாள்....பிரதீப்.....பிரதீப்.....பிதற்றினாள்...

சரி...சரி... நீங்க கையெழுத்துப் போடுங்க.....நர்ஸ் சொன்ன இடத்தில் கையெழுத்திட்டார்...சாம்பசிவம்....

மாதவியின் முதுகுத்தண்டும் இடுப்பும் சேரும் இடத்தில் சொருகப்பட்டது அந்த ஊசி.....

அம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாமாஆஆஆஆஆஆஅ.............வீறிட்டாள்.

கண்கள் சொருகியது.....! ஒரே இருட்டாய் இருந்தது....தன்னைச் சுற்றிலும் இருந்த மனிதர்கள் மங்கத் தொடங்கினார்கள்......வலி வலி வலி...வலி....

வலி மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது....! மாதவி இருட்டுக்குள் விழுந்தாள்....மனம் மட்டும் இயங்கிக் கொண்டிருந்தது. புறம் இருட்டில் ஒளிந்து போக......

மாதவி உள்ளுக்குள் உணர்வுகளால் கேவிக் கொண்டிருந்தாள்....

"ஏண்டா என்ன விட்டுப் போன பிரதீப்......காலையில போய்ட்டு வர்றேன்னு சொல்லிப் போனவன....சாயந்திரம் பொட்டலாமா கட்டிக் கொண்டாந்து போடுவாங்கன்னு தெரியாமப் போச்ச்சேடா.....

நீ இல்லாம எப்டிடா வாழப் போறேன்....உன் உயிர என் வயித்துல கொடுத்துட்டு...என்னை விட்டு தூரமா போயிட்டியே....என்னால இப்போ சாகவும் முடியலையே.......

பிரதீப்.....பிரதீப்....பிரதீப்.....உள்ளுக்குள் அலறினாள்.....மாதவி..."


ஏம்மா....எந்திரி...எந்திரி...உனக்குப் பையன் பொறந்திருக்கான் பாரு....! நர்ஸ் அதட்டி கன்னத்தில் அடித்து எழுப்பினாள்.... 

மாதவி....மாதவி....

மாதவி எழுந்திரிக்கவில்லை...!

பூமி முழுதும் பூக்கள் பூத்துக் கொண்டே இருக்கின்றன....! எத்தனைப் பூக்களைப் பார்த்தாலும் பிடித்தாலும் ஒவ்வொருக்குள்ளும் பிடித்த ஒரு பூ இருக்கத்தான் செய்கிறது. அந்தப் பூ எப்போதும்  தனக்கு மட்டுமே பிடித்ததாய் தன்னிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற ஆசை இல்லாமல் யாரும் இருக்க முடியாது.

அதிசயமா அந்தக் கனவுப்பூ சிலருக்கு வாழ்க்கையில் தனக்குப் பிடித்த உறவாய் அமைந்து விடுகிறது. இல்லாத பூவை கனவினில் நினைத்து நினைத்து வாழப் பழகியவர்களுக்கு....கிடைத்து விட்ட கனவுப் பூவை இழப்பதில் விருப்பமில்லை.....

அப்படி இழந்து விட்டால்....அவர்களுக்கு இருப்பதிலும் விருப்பமில்லை...!

தன் கனவுப் பூவைத் தேடி மாதவி பயணிக்கத் தொடங்கி இருந்தாள்....!

சரசுவும்....சாம்பசிவமும்....நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தார்கள்...!



தேவா சுப்பையா....









காலமென்னும் நதியினிலே...!

$
0
0

எழுதும் போது பாலகுமாரன் சார் எவ்வளவு  கஷ்டப்பட்டு இருப்பாரோ தெரியவில்லை.....ஆனால் அதைப் படித்து முடிக்க நான் கிட்ட தட்ட 2 வருசம் ஆகிவிட்டது. உடையார் ஆறாவது பாகத்தைப் முடித்து விட்டு அதை விட்டு விலகி வர முடியவில்லை. விடுமுறைக்கு வீட்டுக்கு வந்து பின் மறுபடி கல்லூரிக்கோ இல்லை வேலைக்கோ வேறு ஊருக்கு கிளம்பும் போது ஒரு மாதிரி ஏக்கமாக இருக்குமே அது மாதிரி இருந்தது. புத்தகத்தை எடுத்து மடக்கி வைக்க மனதே வரவில்லை.அது கதையல்ல ஒரு வாழ்க்கை. அழகிய ஒரு கலாச்சாரம். ராஜராஜசோழன், பஞ்சவன் மாதேவி, இரேஜேந்திரச் சோழர், பிரம்மராயர் கிருஷ்ணர் ராமன் அவருடைய மகன் அருண்மொழிப் பட்டன், வல்லவராயர் வந்தியத் தேவர், பெருந்தச்சர் குஞ்சரமல்லன், வினோதகப் பெருந்தச்சன்...., 

எல்லாவற்றுக்கும் மேலாக கருவூர்த் தேவர்... கதையின் ஆதர சக்தியாய் இருக்கும் நிசும்ப சூதனி....இப்படியாய் விரிவடைந்து கொண்டே செல்லும் ஆதிக்கம் நிறைந்த பாத்திரப்படைப்புகள் முதல் தெருவில் சாதாரணமாய் வணிகம் செய்யும் மனிதர்கள், அவ்வப்போது சண்டையிடும் மறவர்கள் என்று மனம் முழுதும் மனிதர்கள் வியாபித்து நின்று கொண்டிருக்கிறார்கள்.

முழுதாய் இந்த நாவலை வாசித்து முடித்த பின்பு ஒரு நாவல் எப்படி எழுதப்படுகிறது? அதன் நகர்வுகள் என்ன மாதிரியாக இருக்கிறது? எப்படி ஒரு கதையை நெய்து கொண்டு செல்வது, பாத்திரப்படைப்புகளின் கூர்மை எப்படி இருக்கவேண்டும்..? எடுத்துக் கொள்ளும் களமும் சூழலும், செய்தியும் என்ன மாதிரியான தாக்கத்தை வாசகனுக்குக் கொடுக்க வேண்டும்? ஒரே நேர்கோட்டில் இல்லாத பல்வேறு தளங்களில் கதை பயணிக்கும் போது எப்படி அதை முடிச்சுட்டு கோர்வையாக சொல்ல வேண்டும்..? எதைப் பேச வேண்டும்...? எதை விட வேண்டும்...? எந்த இடத்தில் ஆதரக் கருத்துகளை தரவுகளின் அடிப்படையில் பேச வேண்டும்......? எந்த இடத்தில் கற்பனையைச் சேர்க்க வேண்டும்..? பல்வேறு பட்ட பாத்திரப்படைப்புகளின் அடிப்படையில் பார்வைகளைப் பதியும் போது அந்தப் பாத்திரப்படைப்போட தனித்தன்மையை எப்படி வெளிப்படுத்திக் காட்டுவது.....என்பதை எல்லாம் கற்றுக் கொள்ள முடிந்தது.

இது எல்லாவற்றுக்கும் மேலாக சிறுகதை, அனுபவக் கட்டுரைகள், சமூகம் சார்ந்த சிந்தனைகள் என்பதை சாதரணமாக உள்ளுக்குள் தோன்றும் தாக்கங்களின் அடிப்படையில் படைத்து விட முடியும். இதற்கு ஓரளவிற்கு அனுபவமும் அந்த அனுபவம் கொடுத்த புரிதலும், தெளிவும் அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றி நிகழும் விசயங்களை உற்று நோக்கும் கூர்மையும் மட்டும் இருந்தால் போதும். கூடவே நிறைய புத்தகங்களை வாசிக்கும் போதும், நல்ல திரைப்படங்களை பார்க்கும் போதும் நமக்கு நிறைய செய்திகள் உள்ளுக்குள் தோன்றும் அதன் அடிப்படையிலும் நாம் ஏதோ ஒன்றை எழுதி விட முடியும்.

இப்படித்தான் இவ்வளவு நாள் நான் என்னுடைய வலைத்தளத்தில் எழுதி வந்திருக்கிறேன்....ஆனால் இவற்றை எல்லாம் கடந்த ஒரு அர்ப்பணிப்பும், உழைப்பும், படைக்க வேண்டியதின் பொருட்டு ஒரு தேடலும் வேட்கையும் வேண்டும் என்பதை நிறைய மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளின் மூலம் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். உடையார் ஒரு வரலாற்று புதினம் மட்டுமல்ல.....பாலகுமாரன் என்ற மனிதரின் கடும் உழைப்பு என்பதை உணர முடிந்தது. ஒரு எழுத்தாளன் வியாபாரியாகவும் தன்னை வரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படியான வியாபரத்தில் தன் சுயத்தை இழந்து விடாத ஒரு தெளிவும் மிக மிக அவசியமாயிருக்கிறது. 

சமகாலத்தில் நிறைய பேர்களுக்கு எழுதும் ஆசை வந்திருக்கிறது. தற்போது சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சியில் நிறைய இளம் எழுத்தாளர்களின் புத்தகங்கள் வெளியாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. எழுத்தாளனுக்கு என்று கட்டியமைக்கப்பட்டிருந்த தொன் மரபுகளை எல்லாம் இளையர்கள் இன்று சர்வ சாதரணமாய் உடைத்துப் போட்டிருக்கிறார்கள். இலக்கியம் என்பது பாமரனுக்கு வெகு தூரமானது என்பது போன்ற மாயப் பிம்பங்கள் வரும் காலங்களில் இந்த எழுச்சியினால் வெகு நிச்சயமாய் கலைந்து போய்விடும். பிளாக் என்னும் வலைத்தளத்தில் நமக்குப் பிடித்தது பிடிக்காதது  என்று எல்லாவற்றையும் பதிவு செய்து கொண்டிருந்த எனக்கு....

என் எழுத்து ஒற்றை பரிமாணத்தில் ஒரே ஒருவனின் பார்வையாய் மட்டும் இது இருக்க கூடாது என்று தோன்றிய இடம்தான் எனது பரிணாம வளர்ச்சி என்று நினைக்கிறேன். நிறைய புத்தகங்கள் வாசிக்கப்படாமல் என்னிடம் இருக்கின்றன. நிறைய மனிதர்களைப் பற்றியும் படிக்க வேண்டி இருக்கிறது. பொருள் ஈட்ட வேண்டி ஓடும் ஓட்டம் ஒரு நாளின் மிகுதியை விழுங்கி விடுகிறது. நம்மைச் சார்ந்திருக்கும் குடும்ப உறவுகளோடு செலவிடும் நேரம் மீதியை விழுங்கி விடுகிறது இதற்கு அப்புறமாய் இந்தப் பரந்து விரிந்து கிடக்கும் வாழ்க்கை சமுத்திரத்திற்குள் நான் மூழ்கித் திளைக்க வேண்டும். யாரோ ஒருவன் தெரியாமல் ஒன்றும் சொல்லவில்லை...கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்று.....இங்கே நான்(ம்) கற்றது கையளவு கூட கிடையாது...என்பதுதான் உண்மை.

தானியம் பொறுக்கும் குருவியின் கூர்மையோடு, தேர்ந்த சிற்பி ஒரு கல்லை உயிராக்கும் சிரத்தையோடு செதுக்கும் சிற்பத்தைப் போன்று இனி எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனோ தானோ என்று எழுதிச் செல்வதிலும் பொருள் ஈட்டுவதற்காய் நிறைய பேரை ஈர்க்கும் வகையில் வசீகரச் சித்து விளையாட்டுக்கள் விளையாடவும் எனக்கு விருப்பமில்லை. பெண்ணின் அவயங்களைப் பற்றி வக்ரமாய் எழுதுவதோடு இல்லாமல், தொடர்ச்சியாய் இயல்பாய் பேசுகிறேன் பேர்வழி என்று அபத்தங்களை தனது பேஸ்புக் சுவற்றில் கிறுக்கிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு ஏராளமான ரசிகர்கள். 

அவரது புத்தகத்தை ஒரு முன்னணி பதிப்பகமும் வெளியிட்டு விட்டது. அதற்கு விளம்பரம், விழா என்று பணம் புகுந்து விளையாடியது அங்கே...!ஈக்கள் இனிப்பை மட்டும் தேடிச் செல்வதில்லை என்பதையே இந்த நிகழ்வு எனக்கு உணர்த்தியது. ஒரு எழுத்தாளன் தரமான படைப்புகளைக் கொடுக்க வேண்டும். என் புத்தகம் மட்டும் விற்க வேண்டும் என்பதைக் கடந்து எதை நான் இங்கே பதிவு செய்கிறேன் என்பதும் மிக முக்கியமாகிறது. எனது எழுத்து நான் வாழ்ந்த கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு. எத்தகைய ரசனை கொண்ட மக்கள் வாழ்ந்தார்கள் எதை ரசித்தார்கள் என்பதற்கான சான்று. அடுத்த தலைமுறையினர் சிலாகித்துப் பேச இங்கே அற்புதமான உணர்வுகளை நாம் விட்டுச் செல்லவேண்டும். ஒவ்வொரு படைப்பாளிக்கும் இந்த தார்மீக கடமை இருக்கிறது. நல்ல படைப்புகளே தனது சந்ததிகளை வழிநடத்திச் செல்கிறது.

என்னுடைய வலைத்தளத்தை வாசிக்கும் நண்பர்கள் உங்களின் அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளத் தயங்காதீர்கள். தாக்கம் கொடுத்த நிகழ்வுகளையும் பகிரலாம் என்று நீங்கள் நினைக்கும் அனைத்துச் சம்பவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்....ஏன் தெரியுமா?

எழுதுவது என்பது தனக்குத் தெரிந்ததை ஊருக்குச் சொல்லிச் செல்வது மட்டும் கிடையாது. அகண்டு பரந்து விரிந்த இந்த பிரபஞ்சத்தில் அமைதியாய் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த பூமியில் எல்லா உயிராகவும் இருந்த பார்க்க வேண்டிய ஒரு பெருவேட்கை எழுத்தாளனுக்கு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நான் பல நாட்கள் ஒரு பசுவாய் மாட்டுக் கொட்டகையில் நின்றிருக்கிறேன். இரவுகளில் உறங்கக் கண் மூடும் பொழுதில் ஈக்கள் உடலின் மீது ஏறி விளையாட, வாலால் அவற்றை விரட்டிக் கொண்டு, தோலை உலுக்கி அவற்றை உடல் விட்டு உதிர்த்துக் கொண்டும்.....ஈரமண்னில் கால் மடக்கி அமர்ந்து கொண்டு எண்ணங்கள் ஏதுமில்லாமல் இரைப்பையிலிருக்கும் உணவை மீண்டும் வாயில் எடுத்து அரைத்துக் கொண்டே.....

கண் மூடி லயித்திருந்திருக்கிறேன்.

ஒரு தெரு நாயாய் பலர் கல் எறிய ஓடி இருக்கிறேன்.  மனிதர் உணவு கொடுத்து தலை தடவும் போது தோன்றும் இனம் புரியாத பரவசத்துக்காய் வால் குலைத்து என் உணர்வினை வெளிப்படுத்தியுமிருக்கிறேன். சாலையோர கடையில் விற்பனை செய்பவனாக, ஒரு விலை மாதுவாக, மது அருந்தி விட்டு கொடுமை செய்யும் ஒரு குடும்பத் தலைவனாக, வியாபாரியாக, அரசியல்வாதியாக, கொலைகாரனாக, நடிகனாக, பைத்தியக்காரனாக, ஒரு ஆத்திகனாக, நாத்திகனாக தீவிரவாதியாக........

மெளனமய் படுத்துக் கிடக்கும் மலையாக, ஆர்ப்பரிக்கும் கடலாக,  ஒரு பெண்ணாக, கடவுளாக, மிருகமாக.....

இருந்து பார்க்க ஏற்படும் ஆசையே எழுத்து. இங்கே சுயத்தை மையமாய் வைத்துக் கொண்டு உடல் தாண்டி வெவ்வேறு இடங்களுக்குப் பயணித்து, அனுபவித்து அதை மீண்டும் ஒரு முறை மாடு அசை போடுவது போல அசை போட்டுப் எழுதிப் பார்ப்பதில் ஒரு சுகமிருக்கிறது. ஒரு மனிதன் அவனது உடல் சார்ந்த அனுபவங்கள் என்று குறுக்கிக் கொள்ளாமல்.....

எல்லாமாய் இருந்து பார்க்க விரும்பும் ஒரு தேடலின் விளைவே இங்கே நான் தட்டச்சு செய்து கொண்டிருப்பது. எந்த அவசரமும் இல்லை. யாருடனும் போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தமும் இல்லை....தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் இந்த கால நதியில் புதிது புதிதாய் ஏதோ ஒன்றை படைத்தளிக்கும் பெரு விருப்பம் மட்டுமே என்னிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. 

சமகாலச் சங்கடங்களை எல்லாம் சமாளித்து....நிறைய வாசிக்க நிறைய எழுத, நிறைய பயணிக்க , நிறைய மனிதர்களைச் சந்திக்க காலம் எனக்கு வரம் அருளட்டும்...!



தேவா சுப்பையா...




முகமற்றவனின் மொழி...!

$
0
0

என் புகைப்படத்தில் நீங்கள் பார்ப்பது நானில்லை. நான் எப்படி இருப்பேன் என்ற கேள்விக்கு யாதொரு பதிலும் இல்லை. நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பலமுறை நினைத்ததுண்டு. அப்படி இருக்க முயற்சி செய்த மாத்திரத்தில் நான் வேறு ஒரு மாதிரி ஆகிவிடுகிறேன். என் புகைப்படத்தில் இருக்கும் நபர் யாரய் இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். என்றேனும் ஒரு நாள் அந்த நபரை நான் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு கூடிக் கொண்டே இருந்தது. சிறுவயதில் முதன் முறையாக நான் என்று என்னை அடையாளம் கண்டு கொண்ட அந்த சிறு கண்ணாடியை இப்போதும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென்று அந்தக் கண்ணாடியை எடுத்து பார்த்தபோது அங்கே நான் என்று அறியப்பட்ட ஒன்று இல்லாமல் வேறு ஏதோ ஒன்று என்னைப் பார்த்து சிரித்தது. எனக்கு கோபம் வந்தது. ஒரு கண்ணடி கூட என்னை எனக்கு காட்டமுடியவில்லை. ஒரு புகைப்படத்தில் கூட நான் வந்ததே இல்லை. இருந்தாலும் எனது புகைப்படத்தை பார்த்து விட்டு என்னிடம் வந்து அந்தப் புகைப்படத்தில் நீ நன்றாக இருந்தாய் என்று யாராவது கூறுவதைப் பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வரும்.

நான் எப்படி இருப்பேன்....என்று ஒரு நாள் கூட பார்த்ததில்லையே என்று  ஒரு நாள் யோசித்தபடியே கடைத்தெருவில் நடந்து கொண்டிருந்தேன். உன்னைப் பாத்து எவ்ளோ நாளாச்சு என்று ஒருவர் வந்து கையைப் பிடித்தார். இவர் யாராய் இருக்கக் கூடும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். என்னைப் பார்த்தீர்களா? எங்கே எனக்கு காட்டுங்கள் என்று அவரிடம் கேட்டேன்....

என்னை உனக்குத் தெரியவில்லையா என்று கேட்டவர் இரண்டு வருடம் முன்பு ஒரு திருமணத்தில் என்னை சந்தித்ததை சொல்லி அப்போது எடுத்த புகைப்படம் ஒன்றை தன்னுடைய கைபேசியில் இருந்து எடுத்து என்னிடம் காட்டினார். பார்த்தேன். அதில் அவரும் இல்லை நானும் இல்லை. இதில் யாரோ இருவர் இருக்கிறார்களே.. யார் அவர்கள் என்று அவரிடம் கேட்டார்.

அதில் ஒரு உருவத்தைக் கட்டி அதை தான் என்று சொன்னார். நான் பார்த்துக் கொண்டிருந்தது அந்த புகைப்படத்தில் இருந்தவரை அல்ல வேறு ஒருவரை என்பதால் இது நீங்கள் என்று சொல்கிறீர்களே அப்போது இது யார் என்று அவர் முன்பே புதிதாய் புகைப்படத்தை அவருடைய கைபேசியிலேயே  எடுத்துக்காட்டினேன் அதுவும் அவர்தான் என்று சொன்னார். இரண்டும் வெவ்வேறாய் இருக்கிறதே.. என்று உதட்டைப் பிதுக்கினேன்....

உனக்கு ரொம்ப குறும்புதான் அது இரண்டு வருடம் முன்பு எடுத்தது இப்போது வயதாகி விட்டது அதான் மாற்றம் என்றார். நாளை வேறு உருவத்துக்கு சென்று விடுவீர்கள்தானே...அப்போது இப்போது எடுத்த புகைப்படத்தில் இருப்பவர் இருக்கமாட்டாரே.....? நிஜத்தில் நீங்கள் யார்..? உங்களை எப்போது நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் என்றேன்....

என்னை ஏற இறங்கப் பார்த்தார். குழந்தையாய் இருக்கையில் இருப்பதற்கும் வளர்ந்தவுடன் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது இல்லையா? என்றார். நீங்கள் என்று நீங்கள் சொல்லுவது எல்லாமே மாறிக் கொண்டுதானே இருக்கிறது அப்படி இருக்கையில் இதுதான் நான் அதுதான் நான் என்று அடித்து ஏன் சொல்கிறீர்கள்? உங்களைப் போலவேதான் இங்கே நானும் அனேகப் பேர்களும் இருக்கிறோம். ஏதோ ஒன்றை அவ்வபோது சுட்டிக்காட்டி இது நான், அது நான் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.

டேய்..நான் உன் மாமாடா என்று வயிற்றில் குத்தினார். சிரித்தார். வா டீ குடிப்போம் என்று கடைக்கு அழைத்துச் சென்றார். டீக்கடையில் சுருள் சுருளான முடியோடு ஒரு வாலிபர் பேண்ட் சட்டை எல்லாம் போட்டு கொண்டு ரொம்ப ஸ்டைலாக போஸ் கொடுக்கும் ஒரு புகைப்படம் இருந்தது. டீ ஆற்றிக் கொண்டிருந்தவர் தலையில் முடியே இல்லாமல் சொட்டைத் தலையாக இருந்தார்.  டீயைக் கொடுத்துவிட்டு வியாபரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

ஒரு வாய் டீயை உறிஞ்சினேன். டீக்கடைக்காரரிடம் யார் புகைப்படத்தையோ இங்கே மாட்டி இருக்கிறீர்களே  யார் அவர் உங்கள் சொந்தக்காரரா என்று கேட்டேன். கேலியாய் என்னைப் பார்த்தார். என்ன தம்பி...நான் ஏன் வேறு ஒருவரை இங்கே மாட்டி வைக்க வேண்டும். அந்தப் புகைப்படத்தில் இருப்பது நான் தான் என்றார் பெருமையாக...

துளி கூட உங்களோடு பொருந்தாத ஒரு நபரை நீங்கள் என்று சொல்லிக் கொள்ள உங்களுக்கு கொஞ்சம் கூட கூச்சமாக இல்லை என்று கேட்டேன்.

சண்டைக்கு வந்து விட்டார்.

மாமா இவனுக்கு என்னாச்சோ ஏதாச்சோ என்று யோசித்தபடியே எனக்கு விடை கொடுத்து விட்டு சென்று விட்டார்.

நான் தனியாக சாலையில் நடந்து கொண்டிருந்தேன். வெளியே இருக்கும் உடலை  மட்டுமே இவர்கள் தான் தான் என்று காட்டிக் கொள்ள முனைகிறார்கள். அதுவும் நிறைய புகைப்படங்கள் எடுத்தாலும் அதில் அழகான புகைப்படத்தை எடுத்து அதை சரிப்படுத்தி, அழகுபடுத்தி சரியான கோணத்தில் பெரிது பெரிதாய் ப்ரிண்ட் போட்டு பிரேம் போட்டு மாட்டிக் கொண்டு இது நான் நான் என்று சொல்லிக் கொள்கிறார்கள். உண்மையில் இங்கே இருக்கும் யாருக்குமே அவர்களைத் தெரியவில்லை. எனக்கு என்னைத் தெரியாதது போல.

முன் நெற்றியில் தலைமுடி புரள இருந்தவன் சொட்டைத் தலையாகி விடுகிறான். மெலிந்த இடை கொண்டவள் ரோடு ரோலர் போல மாறி விடுகிறாள். பாடி பில்டராய் இடுப்பு சிறுத்து இருக்கும் ஒருவன் பின்னொருநாளில் தொந்தியும் தொப்பையுமாய் மாறி விடுகிறான். ஓட்டப்பந்தயத்தில் ஓடி தங்கப்பதக்கம் வாங்கிய ஒருவன் ஒரு கட்டத்தில் எழுந்து நிற்கவே முடியாமல் போய்விடுகிறான். அப்போது ஓடியவனும் இப்போது முட்டி செத்துக் கிடப்பவனும் ஒன்று என்று சொல்வது அறிவுக்கோளாறுதானே?

உருவம் பற்றி இப்படி ஒரு அபிப்பராய கொண்டிருப்பவர்களுகு அருவம் என்றால் என்ன என்று தெரியாமல் போய்விட்டது. எனக்கு என்று ஒரு வடிவமே இல்லை என்று ஒரு நாள் நான் தெரிந்து கொண்டேன். நான் எந்த வடிவமும் இல்லாதவன். எந்தக் கருத்தும் இல்லாதவன் என்று தெரிந்து கொள்ள நான் 37 வருடங்கள் கடத்தி இருக்கிறேன். எந்த விசயமும் இந்த மனிதர்களுக்கு ஆரம்பிக்க வேண்டும் பிறகு முடியவேண்டும். ஆரம்பமும் முடிவும் இல்லாத ஒரு வஸ்துவை கற்பனைகள் கூட செய்து பார்க்க முடிவதில்லை மனிதர்களால்.

தொலைபேசி அடித்தது. எடுத்தேன்.

முருகேசன் சார் சீரியசா இருக்காராம். ஐ சி யூல வச்சு இருக்காங்களாம்...இன்னிக்கோ நாளைக்கோ போய்டுமாம். ஒத்த மூச்சு வாங்கி இழுத்துகிட்டு இருக்காம்.  ஹார்ட் ரொம்பவீக்கா இருக்காம்...முடிஞ்சா போய் பாருடா...சொல்லிவிட்டு போனை துண்டித்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் முருகேசன் சாரை வேறு ஒரு மரண வீட்டில் சந்தித்தேன்.  நிறைய பேசிக் கொண்டிருந்தார். வாழ்க்கைன்னு சொன்னா.... என்று ஆரம்பித்து உலகத்தில் இருக்கும் அத்தனை தத்துவங்கள் எல்லாம் பற்றி பேசினார். தனக்கு லாவோட்சூ தெரியும், குர்ட்ஜீப் தெரியும், சிக்மண்ட் பிராய்டு சென்ன சொல்றார்னா.....பாலாவோட நாவல்கள்ள...ராஜராஜசோழனோட பையன்...கர்மான்னா என்னனு கேட்டீங்கன்னா...ஆக்சுவலா அபு ஜாகையில் எவ்ளோ அகங்காரம் கொண்ட்வன் தெரியுமா? போரில் தோற்று தலையை வெட்டும் போது கூட கொஞ்சம் கழுத்தை உயரமாக விட்டு வெட்டுங்கள் என்று சொல்லுமளவுக்கு புகழின் மீது போதை கொண்ட மனிதன்..? இயேசுவின் சீடர்கள் சாமனியர்கள் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது, பீட்டர் ஃபவுலின் சொந்தக் கருத்துக்களும் பைபிளில் உண்டு...யூதர்கள்...புத்திசாலிகளாய் ஏன் இருக்கிறார்கள் தெரியுமா......தாஸ்தாவெஸ்கியோட க்தைகள்ல...

நிறைய பேசினார். நிறைய படிக்கணும். வெறுமனே வாழ்ந்து என்ன பயன். பட்டினத்தார் எல்லாம்....

பேசி முடிக்கும் வரை அமைதியாய் தூர இருந்து அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 

வா தம்பி தியானம் எல்லாம் செய்றியா...விடக்கூடாது. என் உடம்பு இன்னமும் உறுதியாய் இருக்குன்னா அதுக்கு காரணம் நான் செய்ற யோகாதான்....

ஐ சி யூ கண்ணாடி வழியே முருகேசன் சாரை பார்த்தேன். இரண்டு வாரத்துக்கு முன்னாடி பேசினவர் முருகேசன் சாரா...? இல்லை இங்க ஐ சி யூ உள்ள ஆக்ஸிஜன் மாஸ்கோட உயிருக்கு போராடிகிட்டு இருக்கவரு முருகேசன் சாரா..?

இது யாருங்க...? உள்ள ஐ சி யூல...பக்கத்திலிருந்த ஒருவரிடம் கேட்டேன். நான் முருகேசனோட பெரியப்பா தம்பி அது முருகேசன்தான்...சொல்லி விட்டு அழுதார்.

முருகேசன் இறந்து போய் விட்டதாக சொன்னார்கள். பாடியை வீட்டுக்கு கொண்டு வந்தாயிற்று. தலையில் நாடிக் கட்டு கட்டி நெற்றியில் காசு வைத்து உரலில் சாத்தி வைத்திருந்தார்கள். சுற்றி இருந்தவர்கள் எல்லோரு அழுது கொண்டிருந்தார்கள்...சோகமாய்  மாலை ஒன்றை எடுத்துச் சென்று அந்த உடலுக்கு சாத்தினேன்...

தம்பி முருகேசன் சார பாத்தீகளா எப்புடி இருக்காருன்னு......அவரது மனைவி என்று உணர்ந்து கொண்டேன். முருகேசன் சாரப் பார்த்தேன்....

மறுபடி ரெண்டு வராம் முன்பு பேசின முருகேசன் சார் புத்தியில் வந்தார். ஆர்க்கிமிடிஸ் கோட்பாடும், ஐன்ஸ்டீன் தியரியும் வள்ளலாரும், பட்டினத்தாரும்....

என்று ஏதேதோ சொன்னாரே....என்னா ஆகும் அதற்கெல்லாம்....

முருகேசன் சார் இப்போ இல்லை அது மட்டும் எனக்குப் புரிந்தது. இருக்கும் வரை யாரும் அவர்களை புரிந்து கொள்வதும் இல்லை பார்த்துக் கொள்வதும் இல்லை. புகைப்படத்தில் நிலைக்கண்ணாடியில், படித்த கருத்துக்களில், தழுவிக் கொண்ட மதங்களில், இருக்கும் நிலைப்பாட்டில் தங்களைப் பார்த்துக் கொண்டு அதுதான் தாங்கள் என்று நம்பித் தொலைக்கிறார்கள்....

ஒரு நாள் எல்லாம் போய் விடுகிறது.

ரோட்டில் இறங்கி நடந்து கொண்டிருந்தேன். 

தம்பி.. உங்களை எங்கயோ பாத்த மாதிரி இருக்கே... முருகேசன் செத்துப் போனாராமே...அங்கயா போய்ட்டு வர்றீங்க....வாழ்க்கைன்னு சொன்னா தம்பி....நான் எல்லாம்....எதுலயும் பற்று வைக்கிறது இல்லை...எனக்குன்னு சில கொள்கைகள் இருக்கு....

பிளேட்டோ என்ன சொல்றார்னா....

நான் காதில் வாங்கிக் கொள்ளாமல் நடந்து கொண்டிருந்தேன். நான் உருவமில்லாதவன். நான் கொள்கைகள் அற்றவன். நான் திட்டங்கள் இல்லாதவன்....ஆரம்பமும் முடிவும் இல்லாதவன்....

காற்று வேகமாய் அடித்தது....

காதுக்குள்....

காதற்ற ஊசியும் வாராது கடை வழிக்கே காண்.......

யாரோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை அது நானாக இருக்கக் கூடும்.



தேவா சுப்பையா





நாளும் எனக்கொரு சேதி சொல்லும்..!

$
0
0

பிடித்தமான பெண்ணை சந்திக்க வருகையில் வரும் கவனத்தோடு எழுத அமர வேண்டியிருக்கிறது. மனக் கிறக்கத்தோடு பேசிக் கொண்டிருக்கையில் இடையில் வேறு எந்தத் தொந்தரவும் வந்து விடக்கூடாது. காதலோ, ஊடலோ அந்தக் கணத்தை கட்டெறும்புகள் வந்து மொய்ப்பது போல எந்த ஒரு மனிதத் தொந்தரவும் நம்மை தொட்டு விடக்கூடாது என்றுதான் காதலர்கள் ஒதுங்கிக் கொள்கிறார்கள். தங்களை எல்லா சூழல்களிடமிருந்தும் ஒளித்துக் கொள்கிறார்கள். மெரீனா பீச்சை மேம்போக்காக நான் சுற்றுவதுண்டு. நேரம் காலம் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அது சுற்றுதல் கிடையாது. 

மேய்ச்சல்.

மேய்ச்சல் என்றால் என்ன தெரியுமா? அப்படியே அலைந்து  கொண்டிருப்பது. கிடைக்கும் தேவையானவற்றை வாய் வைத்து கடித்து இழுத்து புசித்து மென்று கொண்டே தினவெடுத்து திரிவது. மேய்ப்பனாயும் இருந்து கொண்டு மேய்பவனாயும் நான் இருந்திருக்கிறேன். காதலிப்பவர்களின் உலகமே தனிதான். அங்கே என்ன மிகுந்திருக்கும் எது நலிந்திருக்கும் என்று கணக்குப் போட்டே பார்க்க முடியாது. சொல்வதையே திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டு...கெஞ்சிக் கொஞ்சி கிடக்கும் அந்த நிமிடங்கள் போலத்தான் சொர்க்கம் (என்ற ஒன்று இருந்தால்) இருக்க வேண்டும்.  அது அதிரகசியமானது. வெகு சுவாரஸ்யமானது. இன்னும் சொல்லப் போனால் ஏதோ ஒரு மையம் இல்லாமல் அங்கே பரிமாறுதல் நடந்து கொண்டிருக்கும். அங்கே அவனும் அவளும் மட்டுமே....பேசுபொருள், படுபொருள், கருப்பொருள் எல்லாமே.....

எழுதுவது எனக்கு அப்படித்தான் இருக்கிறது. மனிதர்களை விட்டு தள்ளி வந்து வெகு சுவாரஸ்யமாய் தட்டச்சு செய்ய ஆரம்பிக்கும் நொடி என்றோ ஒரு நாள் யாரோ ஒரு பெண்ணுக்காக காத்திருந்ததை புத்தியிலிருந்து ஒப்பிட்டுக் கொள்கிறது. ஆமாம் இரண்டும் ஒன்றுதான். இந்த உலகத்தின் அத்தனை சந்தோசங்களையும் நாம் ஒப்பிட காதலையும், காமத்தையும்தான் பெரும்பாலும் அளவுகோலாக வைத்திருக்கிறோம். இப்படி எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு எழுத ஆரம்பித்தவுடன்...வார்த்தைகள் சில நேரம் கோபித்துக் கொண்டு முரண்டு பிடிக்கும். காலையிலிருந்து கருக்கொண்ட ஒரு விசயம் அதை அப்போதே எழுதினால் என்ன என்று கன்னம் இடித்து கேள்வி கேட்டு ஒழுங்கெடுக்கும்.., என்னை விட உனக்கு இந்த வெளி வாழ்க்கை முக்கியமா என்ன? என்று சீறும்....

சமகால புற வாழ்க்கையைப் பற்றி ஏகாந்தத்திற்கு ஒரு கவலையும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அதற்கு லெளகீகமே அனாவசியம். சிறகு அசைத்தால் பறக்க வேண்டும்.  பறந்து, பறந்து திசைகளற்று சுற்றித் திரிந்து விட்டு மீண்டும் நாம் கால் பதித்து பூமியில் இறங்கி நடந்து  வீடு திரும்புகையில் கத்தரிக்காய் என்ன விலை என்று பார்த்து வாங்க வேண்டி இருக்கும். பால் கேனை வாங்கும் போது தேதி பார்த்து வாங்க வேண்டும்...எக்ஸ்பயரி தேதி நாளையோ  அல்லது மற்றைய நாளோ இருக்கும் ஒரு பால் கேனை வாங்கிச்சென்றால் வீட்டில் இருக்கும்....எதார்த்தம் கன்னத்தில் குத்திக் கேள்விகள் கேட்கும்......”சொன்ன சாமான் அஞ்சு அதுல ரெண்ட மறந்துட்டு வர்றீங்க....?” என்று சொல்லி எதுக்குதான் நீங்க லாயக்கு என்பது போல ஜாலம் காட்டும்...., ஜாடை பேச்சு பேசும்...,

வண்டி சாவியை எங்கோ வைத்து விட்டு நாம் தேடிக் கொண்டிருக்கையில் கொஞ்சம் கூட கவனம்கிடையாது.... என்று நம் கவனத்தின் மீது கத்தி வைக்கும்..., இது போதாதென்று எத்தனை முறை அழைத்தாலும் நீ ஏன் என்னை திரும்ப அழைப்பதில்லை என்று நம் மறதியை தலையிலடித்து  நண்பர்கள் கூட்டம் நமக்குச் சொல்லும்....” கட்டுரை எழுதவோ கவிதை எழுதவோ உனக்கு நேரமிருக்கிறது....ஒரு போன் பண்ணி பேசினா என்ன கொறஞ்சா போய்டுவ...” உறவுகள் கோபமாய் கண்களை உருட்டும்....

இது எல்லாம் போக மாதம் மாதம் சம்பளம் கொடுக்கும் உத்தியோகம் எப்போதும் தோளில் அமர்ந்து கொண்டு செவியைக் கடித்துக் கொண்டிருக்கும். செய்யாமல் விட்டால் உன் ஏகாந்தத்தின் குடலை உருவி மாலை போட்டு விடுவேன் என்று லெளகீகம் மிரட்டலாய் கொக்கரிக்கும்.....

என்ன செய்ய....? எழுதுவது என்பது ப்ரியமான வேலையாய் இருந்தாலும்....கற்பனை உலகில் சஞ்சரித்து புற உலகின் தொடர்புகளை அறுத்துக் கொண்டு எழுத அமரும் ஒரு எழுத்தாளனுக்கு ஆயிரம் சங்கடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. எல்லா சூழலையும் சமப்படுத்தி வைத்து விட்டு எழுத அமர்ந்தால் இது காலையில் உனக்குள் விழுந்த விதை....இது நேற்றிரவு  நான் உனக்கு சொன்ன என்னுடைய வலி....இது முந்தாநாள் நீ  கண்ட கனவு....இது  அன்று படித்த புத்தகத்தின் தாக்கம் ....வரமாட்டேன் போ என்று எழுத்து முரண்டு பிடிக்கும்....என்னை பணப்பிசாசே எழுதுவதை விட உனக்கு என்ன வேலை....போ...போ.... லெளகீகத்தையே கட்டிக் கொண்டு அழு...என்று தன் கதவடைக்கும். 

லெளகீகத்திற்கு ஏகாந்த உலகம் எப்படி விளங்காதோ அதே மாதிரி ஏகாந்த உணர்வுகளுக்கு, எழுத வேண்டும் படைக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு  லெளகீகம் சுத்தமாய் விளங்காது. இரண்டுக்கும் நடுவே ஒரு படைப்பாளி....சரி சமமாய் பயணிக்க வேண்டும். பொருள் இல்லாவிட்டால் ஏகாந்த உணர்வுகள் என்பதைக் கொடுக்கும் சூழல் வரவே வராது. அதே மாதிரி ஏகாந்த உணர்வு என்னும் கிளர்ந்த மன எழுச்சி இல்லாமல் நான் இருந்தால் நான் என்ற ஒருவனே இருக்க முடியாது. அப்போது லெளகீகம் என்ற பதமே அற்றுப் போகும். இரண்டும் வேண்டும். இரண்டையும் தட்டிக் கொடுத்து செல்பவர்கள் அல்லது அப்படி சென்றவர்கள் ஜாம்பவான்கள். வெற்றியாளர்கள்.

சமீபத்தில் நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியும் அதற்கு இள, திட, முதிர் எழுத்தாளர்கள் போட்டி போட்டு செய்த விளம்பரங்களும், கூட்டம் கூட்டமாய் சேர்ந்து கொண்டு குழு மனப்பான்மையோடு பிடித்தவர்களை ஏற்றிக் கொண்டதும், பிடிக்காதவர்களை இறக்கியதும், பதிப்பகங்களின் ஆளுமையும், எழுத்தாளர்களின் ராயல் டி பிரச்சினைகளும்... என்னைப் போன்ற எழுதிப் பழகுபவர்களுக்கு மிகப்பெரிய மிரட்சியைக் கொடுத்தன. சாதாரண வாசகனுக்கு எதை வாங்கிப் படிப்பது என்று மிகப்பெரிய ஒரு குழப்ப சூழலை இந்த புத்தக கண்காட்சி கொடுத்திருக்கக் கூடும். வாங்கிய புத்தகங்களை எல்லாம் பட்டியலிட்டுக் கொண்டு ஒரு கூட்டம், இது இது வாசிப்பில் இருக்கிறது என்று ஒரு கூட்டம்...., இதை எல்லாம் தவற விடாதீர்கள் என்ற பட்டியல் ஒரு பக்கம்..., பிரபல எழுத்தாளர்களும் பதிப்பகத்தாரும் பரிந்துரை செய்யும் பட்டியல் இன்னொரு பக்கம்... என்று இணையம் அல்லோலகல்லோலப்பட்டது.

கிட்ட தட்ட புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் எல்லோரும் எதற்குமே லாயக்கு இல்லை என்று குற்ற உணர்ச்சி கொள்ளும் அளவிற்கு இந்த சோ கால்ட் படைப்பாளிகளின் விளம்பரங்கள் இருந்தன. என்னைப் பொறுத்த அளவில் எந்த எழுத்தை ஒரு வாசகன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை படைப்பாளிகளும், பதிப்பகத்தாரும் முடிவு செய்யக் கூடாது.

ஒரு நல்ல புத்தகம் சந்தையில் அறிமுகமானால் மட்டும் போதுமானது. மீதி அதன் விற்பனையை அந்த புத்தகமே செய்து கொள்ளும். வாங்கி வாசித்தவர்கள் அதற்கு தன்னிச்சையாய் விளம்பரம் செய்வார்கள். எழுதுவது கலை. அதை வியாபாரம் செய்ய எழுதுபவனே முன் நிற்கக் கூடாது. அது வேறு யாரோலோ செய்யப்படவேண்டும். ஆரம்ப கட்டத்தில் ஒரு எழுத்தாளன் தன்னை அறிமுகம் செய்து கொள்ள தன் கையிருப்பில் தன்னை வெளிப்படுத்தி கொள்ள நினைப்பதில் தவறில்லை என்றாலும் வியாபாரம் செய்வதும் விளம்பரம் செய்வதும் அவனாயிருக்கக் கூடாது. 

எது தோணுகிறதோ அதை எழுதும் பக்குவத்தை, தாக்கம் கொடுத்த நிகழ்வுகளை எழுத்தாக்கும் திறனை.......வியாபாரம் கெடுத்து விடுகிறது. வியாபாரம் வேறு, கலை வேறு, படைப்பது வேறு, சந்தைப்படுத்துவது வேறு. எத்தனை புத்தகம் விற்கும் என்ற எண்ணத்தில் எழுத அமரும் ஒருவன் தன் வருமானத்தை மையப்படுத்தி நகர்கிறான். அங்கே ஒரு திட்டமிடுதல் வந்து விடுகிறது. அது படைப்பை சீர்குலைக்கும். என் திருப்தியில் எழுதினேன்....நான்கு புத்தகம் விற்றது என்றாலும் நல்லது. இதுதான் நான் சார்ந்திருக்கும் சமூகம். இந்த சமூகம் எதை விரும்புகிறதோ அதை என்னால் எழுத முடியாது. எனக்கு என்ன தோன்றுகிறதோ எந்த திசையில் என் மனப்புரவி அலைகிறதோ அதை நான் படைப்பேன். இந்த இறுமாப்பு இல்லாத கலைஞன்...வயிற்றுப் பிழைப்புக்காய்...எழுத்து என்ற பெயரில் உங்களிடம் தன் தந்திரத்தையே முன் வைக்கிறான்.

பிழைப்பு வேறு எழுத்து வேறு.... என்று பயணிக்கும் போது... எழுத்து அங்கே எழுத்தாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

பிறகென்ன.....

உடையார் படித்து முடித்து ராஜராஜத்தேவரின் மரணத்தையும், பஞ்சவன்மாதேவியின் மரணத்தையும் தாங்க முடியாமல் திக்பிரமை பிடித்துப் போய் கிடக்கிறேன். உடையார் படிக்கும் போது நிறைய இடங்களில் அலுப்பு வந்தது எனக்கு, பாலகுமாரனின் டச் விரல் விட்டு எண்ணும் இடங்களில்தான் இருந்தது. அது பற்றி பின்வரும் நாட்களில் எழுதுவேன். வாசித்து முடித்தவுடன் நிறைய செய்திகளை சொல்லி என்னை வெவ்வேறு திசைகளுக்கு விரட்டியிருக்கிறார் என் குரு பாலகுமாரன் என்றுதான் எனக்கு தோன்றியது. உடையாரின் இறுதியில் கங்கை கொண்ட சோழன் வீறு கொண்டு எழுகிறார். ராஜராஜச் சோழனின் ஆட்டம் முடிந்த பொழுதில் இராசேந்திர சோழனின் ஆட்டம்  தொடங்குகிறது....! 

தஞ்சை கோயிலில் இருக்கும் யாளி வரிசைகளைப் பற்றி அறிந்து பின் அவற்றை தேடி இணையத்தில் பார்த்து, இன்னும் அதிகமாக யாளிகள் பற்றி வாசித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த கட்டுரையில் நம் புராணங்களில் வரும், கோயில்களில் இருக்கும் யாளி என்னும் மிருகத்தைப் பற்றி என் பார்வையை பதிகிறேன்...! 


ப்ரியங்களும் நன்றிகளும்...



தேவா சுப்பையா...








மடை திறந்து... தாவும் நதியலை நான்!

$
0
0

சொகுசு வாழ்க்கை  வாழ புரவிகள் ஒரு போதும் பிறப்பெடுப்பதில்லை. சொடுக்கி விட்டால் காற்றில் பாயும் வித்தை செய்ய பிறந்தவை சோம்பித்திரிந்தாதாய் சரித்திரமும் இல்லை. வாழ்க்கையே ஓட்டம் தான் என்று அறிந்து பிறந்தவை அவை. எந்தத் திசை என்று தெரியாமல் சொடுக்கி விட்டால் ஓடும் என் வார்த்தைகளையும் நான் புரவிகளைப் போலத்தான் கருதிக் கொள்வேன். குதிரையிலேறி பயணிக்கையில் ஏற்படும் கம்பீரமும் திமிரும், கர்வமும் எழுதும் போதெல்லாம் என் மீதேறிக் கொள்ளும். குதிரை ராஜவாகனம். கம்பீரத்தின் குறியீடு. விழுந்த நொடியில் மீண்டெழும் மிருகம் அது.

சாத்திரம் பேசுறாய்....கண்ணம்மா  என்றொரு புரவியொன்றிலேறி புரவியின் விருப்பத் திசையில் நான் பயணித்த கதையொன்று என்னிடம் இருக்கிறது. அதில் வரும் பத்மா இந்த சமூகத்தைச் சேர்ந்த சமகாலத்தை சேர்ந்த பெண் தான். அவள் காமத்தை பேசுகிறாள் அந்தக் கதையில் கற்பென்று மனிதர்கள் கட்டியெழுப்பியிருக்கும் பொய்யை தன் கால்களால் எட்டி உதைக்கிறாள்.  காமத்தைப் பற்றிய புரிதலற்றுக் கிடக்கும் பிண்டங்களின் புத்தியில் படிந்து கிடக்கும் ஆபாசக் கறைகளைப் பார்த்து காறி உமிழ்கிறாள். அவள் அவனுக்குப் பிடித்தவனுடன் கூடுகிறாள். கூடல் செய்யாத மனிதருண்டோ இப்பூமியில்..?  பின் ஏன் கூடலை கலை நயத்தோடு பேச மறுக்கிறீர் என்று ஒழுக்கக் கூரைகளில் ஏறி நின்று கூவும் சேவல்களின் குரல்வளைகளை நெறித்துக் கொன்றும் போடுகிறாள் அவள்.

திருமணத்திற்கு முன் காமம் தவறென்று சட்டம் இயற்றி இருக்கும் ஒழுக்க சீலர்களிடம் திருமணத்திற்குப் பிறகு வரைமுறையற்ற காமம் என்பது சரிதானா? என்று கேள்வியைத் தூக்கிப் போட்டு சதிராட விடுகிறாள். கண்ணகிகளுக்கு கற்பரசி என்று கோயில் கட்டி வணங்கியது பெண்களுக்குச் செய்த துரோகம் என்று சொல்லும் அந்த கதையின் நாயகி பெயர் பத்மா. வெறுமனே ஏதோ ஒரு பெயர் சூட்ட வேண்டம் என்று பத்மா என்று பெயர் சூட்டப்பட்டவள் அல்ல. மலர்ந்த செந்தாமரையை ஒத்த புத்தி கொண்டவள். அந்த புத்தியில் கிளர்ந்தெழுந்த ஞானம் கொண்டவள். இருப்பதை இயம்பும் செம்மை கொண்டவள். இருக்கும் சமூகம் சாக்கடையெனினும், சகதி நிறைந்த பார்க்க முடியாத இடமாயினும் தன் புரிதல் தண்டுகளால் உயர்த்திக் கொண்டு விரிந்து பரந்த்து சிரிக்கும் தாமரையாய் பரந்து விரிந்த வானின் முழுமையை வாங்கிக் கொள்ளும் திமிர் கொண்டவள்தான் பத்மா.

மாதவி கொண்டிருந்தது காதல். அந்தக் காதலினால் அவள் கொண்டது காமம். காதலால் நெகிழ்ந்தும் நெகிழ்ந்து அங்கே அனிச்சையாய் பூத்துச் சிரித்த காமத்தை போற்ற திரணியற்ற என் சமூகம் திருமணமென்னும் பந்தத்தில் தாலிக்கயிறு என்னும் அடையாளத்தைச் சுமந்து கொண்டு காமத்தில் தொடங்கும் முதலிரவும் அந்த காமத்தினால் பிறக்கும் காதலும் கொண்ட கண்ணகிகளை கற்புக்கரசி என்று போற்றச் செய்கின்றன. கண்ணகிகளை நீங்கள் போற்றிக் கொள்ளுங்கள் அதில் பிழையில்லை, ஆனால் தயவு செய்து மாதவிகளை ஏளனமாகப் பார்க்காதீர்கள்.

“ கண்ணகிகள் கற்பு பற்றி பேசிப் பேசி..
திருமண பந்தத்துக்குள் தேடும் காமத்தை
மாதவிகள் காதலாய் மெளனித்து..மெளனித்து...
காமத்துக்குள் எரித்துப் போடுகிறார்கள்
கண்ணகிகளை....”

என்று பேசும் பத்மாவை விளங்கிக் கொள்ள கொஞ்சம் நமக்குள் இருக்கும் திணிக்கப்பட்ட பொதுபுத்திகளை எல்லாம் தளர்த்திக் கொள்ளத்தான் வேண்டும். இருண்ட அறைக்குள் இருந்து இருந்து பயின்ற விழிகளுக்கு வெளிச்சம் கூசுகிறதென்று சூரியனை அணைத்து விடமுடியுமா…? அது போலத்தான் பழகிவிட்டதென்று இருளில் இருந்து கொள்கிறேன் என்பவர்களின் அறியாமையை தன் சுடர் மிகு அறிவால் விரட்டப் பார்க்கிறாள் பத்மா.

என் கதையில் பத்மா தன் காதலனோடு திருமணத்திற்கு முன் கூடுகிறாள். அந்தக் கூடலை எந்த ஒரு உறுத்துதலும் இல்லாமல் நளினமாய் சொல்லி முடித்த கதைதான் சாத்திரம் பேசுகிறாய் கண்ணமா என்னும் கதை. கண்ணமா சாத்திரம் பேசினால் யார் ஒப்புக் கொள்வார்கள்…? அதுவும் எப்போதும் தங்களை பூட்டி வைத்துக் கொண்டு பொய்விழிகளால் வாசித்து கருத்தெடுத்துக் கொள்ளும் மனிதர்களுக்கு எப்படி பிடிபடுவாள் என் கண்ணம்மா? 

எழுத்து.காமில் இந்தக் கதையை பகிர்ந்திருந்தோம். அந்தக் கதையை அந்தத் தளத்திலிருந்து நீக்கி விட்டு எனக்கு வந்த மின்னஞ்சலை உங்களிடம் பகிரத்தான் வேண்டும். ஏனென்றால் கலை என்பதை வக்ர உள்ளதோடு பார்க்கும் போது அங்கே படைப்பாளி சிதைக்கப்படுகிறான். மனிதர்கள் சிந்தித்து தெளிவுறா பக்கமாய் இருக்கும் காமத்தை நெருப்பில் நடக்கிறோம் என்று தெரிந்தே ஆபாசத்தை எட்டிப் பிடித்துவிடாமல் சொற்களை செதுக்கிய சிற்பியை சிரச்சேதம் செய்த எழுத்து. காமின் வன்முறையான மின்னஞ்சலை நீங்கள் பார்த்தே ஆக வேண்டும்.
இதோ….

“ 
எச்சரிக்கை

எழுத்து குழுமத்திலிருந்து பேசுகிறோம். 

http://eluthu.com/kavithai/174899.html

மேல்காணும் உங்களுடைய படைப்பை நங்கள் அழித்துவிட்டோம். இனிமேல் விதிமுறை மீறிய இது போன்ற படைப்புக்களை சமர்பிக்காதீர்கள். மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்

– யமுனா   ”

யாருக்கு எச்சரிக்கை செய்கிறீர்கள் சகோதரி…? வார்த்தைகளை மூளையிலிருந்து பிழிந்தெடுத்து வாசிப்பாளனை புதிய திசைக்கு அழைத்துச் செல்ல விரும்பும் படைப்பாளிக்கு நீங்கள் கொடுக்கும் பரிசுதான் இந்த எச்சரிக்கையா…..? கஜூராஹோவில் செதுக்கிக் கிடக்கும் சிற்பங்கள் எல்லாம் ஆபாசமா அல்லது கலையா? பாரத தேசத்தின் பரந்து விரிந்த பகுதிகளுக்குள் ஊடுருவிக் கிடக்கும் சனாதான தருமம் என்னும் வழிமுறையில் வடித்தெடுக்கப்பட்ட கோயிற் சிற்பங்களில் நிறைந்து கிடப்பது சமூகத் தீங்கா? அல்லது நளினத்தை எடுத்தியம்ப விரும்பிய கலையார்வம் கொண்டவனின் கலை படைப்பா…?

நீங்கள் என்னைப் போன்ற படைப்பாளிகள் மீது நடவடிக்கை எடுத்துதான் ஆகவேண்டும். ஆமாம்…சீர்கெட்டுப் போய்கிடக்கும் இந்த சமூகத்தில் அன்றாடம் நிகழ்ந்தேறும் பாலியல் வல்லுறவுகளைத் தட்டிக்கேட்டுப் போராட நாதியற்ற சமூகத்தில்….நீங்கள் என் போன்றோர் காமத்தை தெளிவாய் பயிற்றுவித்து புரிதலை இந்தச் சமூகத்தின் அடுத்த தலைமுறையினருக்காவது புகுத்தலாமே என்று எண்ணியதற்காக வேணும் நீங்கள் நடவடிக்கை எடுத்துதான் ஆகவேண்டும் சகோதரி. துலாக்கோல் போல் சீர்த்துக்கிப் பார்க்கும் திறம் வேண்டும் என்பதெல்லாம் வார்த்தைகளாகவே இருந்து விட்டுப் போகட்டும். தெளிவினை புகட்டும் கற்பு நெறி கொண்ட படைப்பாளிகளுக்கு நீங்கள் எச்சரிக்கை கடிதமெழுதி சீர்கெட்டுப் போகவிருக்கும் சமூக சீரழிவினை தடுத்து நிறுத்தியிருப்பதாய் நினைத்தும் கொள்ளுங்கள். அதில் தவறொன்றும் இல்லை ஆனால்…..

ஒரு கடிதத்தை எழுதி அனுப்பும் முன் அதை பெறும் நபர் யாராய் இருக்கக் கூடும் என்று சிறிதேனும் அனுமானம் கொள்ளுங்கள். உங்கள் எச்சரிக்கையும், நடவடிக்கையும் என்ன மாதிரியான எண்ண அதிர்வுகளை ஏற்படுத்தி எதிராளியை  காயப்படுத்தும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். ஒரு தளத்தின் நிர்வாகக் குழு என்பது சரி தவறுகளை தீர்மானிக்கும் வல்லமை கொண்டதுதான் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது என்னும் அதே நேரத்தில்….

ஒரு விசயத்தை எப்படி மறுப்பது, எப்படி உங்கள் தளத்தின் கொள்கையை நிறுவி சொல்ல விரும்பியதை நாகரீகமாய் சொல்வது என்பதை எல்லாம் யார் உங்களுக்குக் கற்றுக் கொடுப்பது….? தடித்த வார்த்தைகளையும் மிரட்டும் எழுத்து வடிவங்களையும் கண்டு சத்தியம் எப்போதும் பின்வாங்கிக் கொள்ளாது. சுற்றும் பூமியை எந்த சட்டம் போட்டும் யாரும் நிறுத்த முடியாது. பருவ காலங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வேறு சமயம் வா என்று யாரும் அறிவுறுத்தல் செய்யவும் முடியாது.

அதே போலத்தான் எம் மொழியும், எம் மொழியால் அகண்டு விரிந்த எம் அறிவும் பார்வைகளும், அதனால் விளைந்த தெளிவும் எம் உயிரோடு ஒட்டிக் கிடப்பவை. எரிமலைகள் ஒரு போதும் தீக்குச்சிகளைப் பார்த்து பயந்தது கிடையாது. பாட்டில் குற்றமுண்டு என்று கூறி இறைவனையே புறம் தள்ளி நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று உரக்க உரைத்த நக்கீரனின் நாவில் நின்ற எம் தமிழ்த் தாயே எம் எழுத்திலும் ஆட்சி செய்கிறாள் என்ற உண்மை உணர்க!

மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ 
உன்னையறிந் தோதமிழை ஓதினேன் - என்னை 
விரைந்துஏற்றுக் கொள்ளாத வேந்துண்டோ உண்டோ 
குரங்குஏற்றுக் கொள்ளாத கொம்பு (கம்பன்)




தேவா சுப்பையா…














யாளி ஒரு கற்பனை மிருகமா...?!

$
0
0
Yali @ my Office
தஞ்சாவூர் கோயிலில் கோபுரத்தில் யாளிகளுக்கு என்று தனி வரிசை இருக்கிறது. யாளிகள் இல்லாமல் எந்த ஒரு கோயிலையும் நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அந்த அளவு யாளிச் சிற்பங்கள் பெரும்பான்மயான கோயில்களில் இருக்கின்றன. கோயிலின் கலையம்சத்தை உணர்வுப்பூர்வமாக எடுத்துக்காட்ட இந்த யாளிகளை செதுக்கி கூட இருக்கலாம். யாளியில் என்ன கலையம்சம் என்று யோசிக்கிறீர்களா? அதுவிமில்லாமல் சாத்வீகமாய் சமாதானமாய் மன அமைதிக்காக வரும் கோயிலில் ஏன் சீற்றத்தோடு பயங்கரமான அப்படி ஒரு பிரம்மாண்ட மிருகம் என்ற கேள்வியும் நமக்குள் எழத்தான் செய்கிறது.

யாளி பிரம்மாண்டமானது என்று எப்படி சொல்கிறாய் என்றுதானே கேட்கிறீர்கள். பெரும்பாலும் யாளிகள் யானையின் துதிக்கையைப் பிடித்து கோபத்தோடு தூக்குவது போன்ற சிற்பங்களை கவனித்து யானையின் வடிவோடு ஒப்பிட்டு யாளியை பெரிதுபடுத்திப் பார்த்த போது இந்தப் பிரம்மாண்டம் எனக்குள் தோன்றியது. சிங்கமுக யாளி, மகர யாளி, யானை யாளி இந்த மூன்று வகையில்தான் யாளிகள்  பெரும்பாலும் செதுக்கப்பட்டிருக்கின்றன. மூன்று வகையாய் இருந்தாலும் இந்த யாளிகளை உருவாக்க அடைப்படையாய் அவர்களுக்குள் இருந்த கற்பனை சிங்கம்தான் என்று நினைக்கிறேன்.

ஒவ்வொரு யாளியும் எப்படி இருக்கும்  என்பதை எல்லாம் நீங்கள் இணையத்தை துருவினால் தெரிந்து கொள்ள முடியும். மிக பயங்கரமான ஒரு பிரம்மாண்ட மிருகமாய் இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் யாளிகளை செதுக்க வைத்திருந்த சூத்திரமாய் இருந்திருக்க வேண்டும். என் அலுவலகம் கலையோடு தொடர்புடையது. எங்கள் அலுவலக வாசலில் இரண்டு கல்லால் ஆன யாளிகள் இருக்கின்றன. எங்கிருந்து வாங்கியது என்ற விபரங்கள் இல்லாமல் கிடங்கில் கிடந்த அவை இரண்டையும் நான் தான் வெளியில் எடுத்தேன். அப்படி எடுத்துக் கொண்டு வந்து அவற்றை தண்ணீர் விட்டு கழுவி பார்க்கும் வரை அவை இரண்டும் சிங்கங்கள் என்றுதான் முதலில் நான் நினைத்தேன். 

உருண்டையான மிரட்டும் கண்களோடு முறுக்கிய மீசையோடு, தலையில் கிரீடத்தோடு அவை முன்னங்கால்களை மேலே தூக்கியபடி கம்பீரமாய் நின்று கொண்டிருந்தன. எனக்கு நம்ம ஊர் கருப்பசாமியின் சிலைதான் நினைவுக்கு வந்தது. இவை சிங்கங்கள் இல்லை யாளிகள் என்று அறிந்த பின்புதான் இப்படி  ஒரு விலங்கை ஏன் இந்தியா முழுதும் இருக்கும் கோயில்களில் பரவலாக செதுக்கி இருக்க வேண்டும்? ஏன் தமிழ்நாட்டிலிருக்கும் மிகைப்பட்ட கோபுரங்களை இந்த யாளிகள் அலங்கரிக்க வேண்டும்....? யாளிகளுக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன தொடர்பு? அல்லது யாளிகளுக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு...? இப்படி ஒரு விலங்கு பழங்காலத்தில் நிஜமாகவே இருந்ததா? கீழைநாடு என்றழைக்கப்படும் பரத கண்டத்தினர் மட்டும் எப்படி இவற்றை சிற்பத்தில் கொண்டு வந்தார்கள்...? இது வெறும் கற்பனையா? நிஜமா?



இணையத்தை இயன்றை வரை நான் உழுது பார்த்து விட்டேன். எங்குமே சரியான தகவல்கள் இல்லை. மிகப்பெரிய கற்பனையோடு யாளி என்ற மிருகம் இன்னும் தென் தமிழ்நாட்டில் மறைத்து வைக்கப்பட்டிக்கிறது என்ற ஒரு நாவலொன்றை யாரோ எழுதி இருக்கிறார்கள். அது போக யாளி என்ற மிருகம் குமரிக்கண்டத்தில் இருந்தது என்றும் குமரிக்கண்டம் தண்ணீரில் மூழ்கிய  போது அவை அழிந்து போய்விட்டன் என்றெல்லாம் அடித்து விட்டிருந்தனர். யாளி மனித ஆழ்மனத்திலிருந்து வெடித்து எழுந்த ஒரு அமானுஷ்ய மிருகம் என்றுதான் நான் எண்ணுகிறேன். என்னுடைய கணக்கு கூட்டல் மனோதத்துவ ரீதியானது. சில விசயங்கள் நமக்குள் தன்னிச்சையாய் தோன்றும். இதுவரையில் நாம் காணாத நிறங்கள், மனிதர்கள், நிலப்பரப்புகள், நிகழ்வுகள் என்று இதுவரையில் நாம் அறிந்திராத பல விசயங்கள் அவ்வபோது நம் நினைவுப் பகுதிக்குள் எட்டிப்பார்க்கும். கனவுகளில் வந்து ஏதேதோ கதைகள் சொல்லும்.

அறிவியலைப் பொறுத்தவரை மனித மூளை விசயங்களைக் கிரகித்துக் கொண்டு அதன் அடிப்படையில் தனக்கு வசதிப்பட்டவாறு அதை விரிவுபடுத்தி பார்த்துக் கொள்கிறது என்று சொல்கிறது. என் கேள்வி எல்லாம் இந்த படைக்கும் திறமை எங்கிருந்து மனிதனுக்கு வந்தது...? அல்லது இந்த கற்பனை ஏன் அவனுக்கு வரவேண்டும்..? இல்லாத ஒன்றை எண்ணிப் பார்க்கும் போதே அப்படி ஒன்று ஏன் இருக்க கூடாது என்ற கேள்வியும் உடன் வரத்தானே செய்கிறது.

ஒரு முறை என் அனுபவத்தில் இல்லாத ஒரு கிராமத்திற்குள் என் கனவில் ஒருநாள் நான் சென்றேன். அங்கே நிறைய பேர்கள் ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு ஓவியமும் விப்ஜியார்(VIBGYOR) என்று நாம் சொல்லகூடிய அந்த ஏழு நிறத்திலுமே இல்லை. அந்த வர்ணங்கள் வேறு. ஏழு நிறங்களை மட்டுமே ஏந்திப் பிடித்துக் கொண்டிருக்கும் என் மூளையால் எப்படி இந்த நிறங்களை சிந்திக்க முடியும்...? கற்பனை செய்து பார்க்கவும் ஒரு தளம் வேண்டும்தானே...? எந்தத் தளத்திலும் நிற்காமல் எனக்குள் தோன்றிய அந்த வர்ணக்கலவைகளால் ஆன ஓவியங்கள் எல்லாம் எனக்கு அச்சு பிசகாமல் இப்போதும் நினைவிருக்கின்றன ஆனால் அப்படியான ஓவியங்கள் ஒன்றும் இந்த உலகத்தில் இல்லவே இல்லை.

இப்போது அதை நான் உங்களுக்கு காட்ட வேண்டுமெனில் வரைந்து காட்டமுடியும் ஆனால் நம்மிடம் அதே போன்று  வர்ணங்கள் இல்லை. ஏழு நிறங்களையும் எந்த விகிதாச்சாரத்தில் கலக்கினாலும் நான் கண்ட வர்ணங்கள் வரவே வராது. ஏழு நிற வர்ண திரவியங்களையும் நான் ஒரு பைத்தியக்காரனைப் போல கலக்கி கலக்கி சேர்த்து குறைத்து பார்த்தேன் ஆனால் நான் கண்ட அந்த வர்ணம் கிடைக்கவே இல்லை. ஒரு மாதம் முழுதும் எனக்கு அந்த ஓவியங்களின் நினைப்பாகவே இருந்தது. 

உலகின் மிகப்புகழ்பெற்ற அப்ஸ்ட்ராக்ட் ஓவியங்களை எல்லாம் ஏக்கத்தோடு தேடித் தேடிப் பார்த்தேன். அவை எல்லாம் நான் கண்ட ஓவியத்தை போல இல்லவே இல்லை. ஒரு சில ஓவியர்களின் ஓவியங்கள் நான் கண்ட ஓவியங்களை ஒரளவிற்கு ஒத்து இருந்தது. அவர்களுக்கும் என் போன்ற கனவு வந்திருக்கக் கூடுமா என்று யோசித்துப் பார்க்கையில் எனக்கு ஏதோ ஒரு விசயம் இங்கே பொதுவாக இருப்பதாகப் பட்டது. இந்த உலகில் பல திசைகளில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் ஒரே ஒரு மையம்தான் மூலமாய் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

மனித கற்பனைகள் எல்லாம் ஆழ்மனத்தோடு தொடர்புடையது. மைக்கேல் ஆஞ்சலோ ஏன் அப்படி குண்டு குண்டாய் ஆண்களையும் பெண்களியும் நிர்வாணமாக வரைந்தார்? அவருக்குள் ஏதோ ஒர் செய்தி அல்லது உந்துதல் அல்லது விருப்பம் அல்லது எங்கோ எப்பபோதோ அப்படி இருந்த நினைவுகள்  முட்டி மோதி கையில் வழிந்த போது அது ஓவியமாகி விட்டது. அடிப்படையில் அந்த ஓவியங்களை ரசித்த அத்தனை பேருக்குள்ளும் அந்த ஓவியம் ஏற்கெனவே இருந்தது என்று நான் சொன்னால் நீங்கள் கொஞ்சம் குழம்புவீர்கள்தானே....?

ஆமாம் புறத்தில் காணும் நமக்குப் பிடித்த எல்லா விசயங்களும் நமக்குள் ஏற்கெனவே ஏக்கமாய் நிறைந்து கிடந்தது தான். ஒன்று அப்படி நாம் முன்பு இருந்திருப்போம் அல்லது அதன் உடன் நாம் இருந்திருப்போம். அதை புறத்தில் காணும் போது அது நமக்குப் பிடித்துப் போகிறது. மனித ஆழ்மனம் விசித்திரமானது....அது எந்த அறிவியல் அறிவுக்கும் பிடிபடாதது. தன்னிச்சையானது. சுதந்திரமானது. கலைஞர்கள் அந்த சுதந்திரத்தோடே எப்போதும் பயணிக்கிறார்கள்.

யாளி இந்த பூமியைச் சேர்ந்த மிருகமாய் இருக்க சாத்தியமில்லை. நிஜமாய் இந்த உலகில் அப்படி ஒன்று இருந்திருக்க முடியாது ஆனால் அப்படி ஒன்று இருக்கவே முடியாது என்று நான் கூறமாட்டேன். யாளி இந்த பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் உயிர் வாழும் விலங்காயிருக்கலாம். மனித வாழ்க்கை இந்த பூமியில் காண்பது மட்டும் கிடையாது அது இந்த பிரபஞ்சத்தோடு தொடர்புடையது என்று காட்ட கோயிலுக்கு வரும் மனிதர்களிடம் எடுத்துச் சொல்ல.....


கோபுரத்திற்கு கோபுரம், மண்டபத்திற்கு மண்டபம், தூணுக்குத் தூண் இந்த யாளிகள் செதுக்கப்பட்டிருக்கலாம். யாளியை ஏதோ ஒரு தூணில் உற்று நோக்கும் யாவர்க்கும் அவர்கள் அறியாமலேயே அவர்களின் உள்ளுணர்வு தட்டி எழுப்பபடுகிறது. அது ஏதோ ஒரு பேரமைதியை நமக்குள் பரவ விடுகிறது. இத்தனை மிரட்டலாய் செதுக்கப்பட்டு காட்சி தரும் ஒரு விலங்கு அதாவது ஒரு யானையையே அதன் துதிக்கையை பிடித்து தூக்கி விசிறி அடிக்க முயலும் ஒரு விலங்கு, நமக்குள் இருக்கும் மனம் என்னும் மதம் கொண்ட மிருகத்தை உள்ளுக்குள் உருத்தெரியாமல் அழித்து பேரமைதிக்குள் நம்மை தள்ளி விடும் விந்தையும் நிகழ்ந்து விடுகிறது.

இனி கோயில்களுக்குச் செல்லும் போது யாளிகளை உற்றுக் கவனியுங்கள். அவை வெறும் சிற்பங்கள் மட்டும் அல்ல...யாரோ ஒரு படைப்பாளியின் சுதந்திரம் என்று கொள்ளுங்கள். அது அவன் பரந்து விரிந்த இப்பிரபஞ்சத்தை தன் மனமற்ற நிலையில் எட்டிப்பிடித்து அங்கே அவன் விருப்ப திசையில் எல்லாம் பயணித்து தேடிக் கண்ட மிருகமென்று அதை நினையுங்கள். மிரட்டும் விழிகளோடும் நீண்ட துதிக்கையினோடும் கோரப்பற்களோடும் இருக்கும் யாளிகளை காதலோடு பார்த்து....

என் பாரத தேசமே....!!!!! என் சனாதான தருமமே எத்தனை எத்தனை ரகசியங்களை நீ உன்னுள் தேக்கி வைத்திருக்கிறாய் என்று கேட்டு உள்ளுக்குள் கேவி அழுங்கள். வாஞ்சையோடு யாளிகளை தடவிக் கொடுது யாளிகளை சினேகமாக்கிக் கொள்ளுங்கள்....மரணத்திற்குப் பிறகும் தொடரப்போகும் உயிரின் பயணத்தில் இந்த பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு திசையில் யாளிகளை நாம் காணக்கூடும்....

அப்போது யாளிகள் சினேகத்தோடு  நம்மை அடையாளம் கண்டு அன்பு செய்யும் அற்புதமும் நிகழும். இந்த கட்டுரையை வாசித்து முடித்த பின்பு  உங்களுக்குள் இரத்தமும் சதையுமாய் உயிர் பெற்று இனி அலையப்போகும் யாளியை உருவாக்கியது வேறு யாரோ அல்ல...இதை வாசித்த நீங்கள்தான் என்று நான் சொல்வதை நீங்கள் மெளனமாய் யோசித்துப் பாருங்கள் அப்போது ஏன் யாளிகள் செதுக்கப்பட்டன என்ற உண்மை  உங்களுக்கு இன்னும் தெளிவாய் புரியும்.



தேவா சுப்பையா...





காற்றில் எந்தன் கீதம்...!

$
0
0

காலையிலேயே மழை வந்து ஜன்னலைத் தட்டி என்னை எழுப்பியது. கண்ணாடி ஜன்னலின் வழியே ஊர்ந்து கொண்டிருந்த மழைத்துளிகளை ஜன்னலை திறக்காமலேயே போர்வைக்குள் இருந்து பாதித் தூக்கத்தில் ரசிக்கும் சுகத்தை விவரிக்க மொழிகளே கிடையாதுதான். மழை விருந்தாளியைப் போல வந்தாலும் கவிதையைப் போல வசீகரித்தாலும் எனக்கு மழை காதலியாய்த்தான் தெரியும் என்று நான் சொல்லி முடிக்கும் முன்னரே உனக்கு வேறு எப்படி தோன்றும்..? நீங்கள் மனதுக்குள் கேள்வி கேட்பது எனக்கும் நன்றாகவே கேட்கிறது. காதலி என்ற ஒரு உறவுக்கும் திருமணத்திற்கும் ஒரு பந்தமும் இல்லை என்று நான் சொல்லி முடிக்கும் முன்பே ஒரு கூட்டம்  நீ எந்த மாதிரியான கலாச்சாரத்தை புகுத்த விரும்புகிறாய் என்று கேள்வி கேட்டு போர்கொடிகள் உயர்த்தும் அபாயம் இருப்பதால் இந்த இடத்தில் ஒரு யு டர்ன் அடித்துக் கொள்ளுவோம்.

சூடான தேநீரோடு பால்கனியை வீட்டுக்குள் கொண்டு வரும் கண்ணாடி ஜன்னலின் முன்பு நாற்காலியை இழுத்துப் போட்டு வசதியாய் அமர்ந்து கொண்டேன். ஒரு நாள் ஓய்வினை ஓய்வாகவே இருந்து அனுபவித்து விடவேண்டுமென்ற என் பிடிவாதத்தை ரசிக்கவே இந்த வார இறுதியில் வந்தாயா மழையே..? கண்ணடித்துக் கேட்டேன்... மழை சிலீர்.....சிலீர் என்று கண்ணாடியில் வந்து விழுந்து என்னைப் பார்த்து சிரித்தது. சூடான கோப்பைதான் 14 டிகிரி செல்சியஸ் தட்ப வெட்பத்தில் அந்த சூடு எனக்கு தேவையாய் இருந்தது. பெரும்பாலும் சுடச் சுட தேநீர் அருந்தும் நெருப்புக் கோழி அல்ல நான். மிதமான சூட்டில் அரைமணி நேரம் மிடறு மிடறாய் தேநீரை விழுங்கும் ஒரு சோம்பேறி ராட்சசன். அரக்க பரக்க வேலை செய்யும் ஒரு வாழ்க்கை முறையில் சளனமின்றி வாழ விரும்பும் என் கனவுகள் எல்லாம் வார இறுதியில் என்னை சூழ்ந்து கொண்டு கெஞ்ச நான் அவற்றை கொஞ்ச நிதானமாய் அந்த தினம் நகரும்.

விடுமுறை தினத்தில் யாரையும் சந்திப்பதை பெரும்பாலும் தவிர்த்து விட்டேன். தலையணை அளவுள்ள பெரிய, பெரிய எழுத்தாளர்களின் புத்தகங்களை எடுத்து வலுக்கட்டாயமாக படித்துக் என்னை அறிவு ஜீவியாக்கும் அவசரத்தை எல்லாம் எரித்துப் போட்டுவிட்டேன். உடையார் படித்து முடித்து விட்டு தேவரடியார்களைப் பற்றியும், யாளிகளை பற்றியும் நான் யோசிக்க ஆரம்பித்து விட்டேன். இப்படித்தான் எதையோ படிக்க எங்கோ போய் விழுந்து விடுகிறேன். எதையோ கேட்க வேறு எதுவோ எனக்குள் புகுந்து விடுகிறது. எதையோ பார்க்க அது இந்த பூமியை விட்டு மெல்ல என்னை வெளியே தள்ளிக் கொண்டு போய் நிறுத்தி ஏதேதோ கதைகள் சொல்கிறது. ஒரு போர் என்னவெல்லாம் செய்யும் என்று யோசித்து பார்த்திருக்கிறேன். பெரும்பாலான சோழப் போர்களின் வெற்றிகள் எத்தனை குடும்பங்களை அழித்து பொருட்களை கொள்ளையடித்து கொண்டு வரப்பட்டதாயிருக்கும் என்று யோசிக்கும் போதே திகிலாய் இருக்கிறது எனக்கு.

மழை இன்னும் உக்கிரமாய் பெய்ய ஆரம்பத்திருந்தது. எழுந்து பால்கனிக்கு வந்தேன் மனதால் ஒரு சிகரட்டை எடுத்து உதட்டில் பொருத்திக் கொண்டேன். விரல்களை சிகரெட் லைட்டராய் பாவித்து பற்ற வைத்துக் கொண்டேன். வெற்று விரல்களில் சிகரட் சூட்சுமமாய் தொற்றிக் கொண்டிருந்தது. ஆழமாய் புகையை இழுத்து விட்டு கண்களை மூடிக் கொண்டேன். உள்ளுக்குள் உஷ்ணத்தை கற்பனையாய் அனுமதித்தேன். ஆழமாய் அடி வயிறு வரை புகை சென்று உடல் முழுதும் பரவியது. சிகரெட் விரலில் தேய்ந்து கொண்டிருந்தது போல ஒரு பிரமை. மெதுவாய் புகையை வெளி விடுவது போல உதடு குவித்து ஊதினேன். எல்லாமே பிரமைதான். கற்பனையில் எதுவேண்டுமோ அதை நாம் எடுத்துக் கொள்ளலாம். அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்று யாரோ சொன்னது அசரீரியாய் எனக்குக் கேட்டது. 

நிக்கோடினை உடலுக்குள் ஊற்றிக் கொள்ளாத சிகரெட்டை யார் வேண்டுமானாலும் பற்ற வைத்துக் கொள்ள முடியும்.  சிகரெட் என்ன சிகரெட்....மது கூட இப்படி அருந்தலாம். பாடலாம், ஆடலாம், ஓடலாம், விருப்பமான பெண்ணை நாமே படைக்கலாம். சிருஷ்டியே ஒரு மாயைதனே. மாயைக்குள் உட்கார்ந்து நிஜத்தை தேடும் அபத்தத்திற்குள் சிக்காத ஒரு சுமூக வாழ்வு வாழ்ந்து போகலாம். மரணம் என்ற ஒன்றே அப்போது இல்லாமல் போகும். நிக்கோடின் என்ன செய்யுமோ அதை என் கற்பனை உள்ளுக்குள் செய்து கொண்டிருந்தது.  அச்சச்சோ....இதை படித்து விட்டு எல்லோரும் இப்படியே புகைக்க ஆரம்பித்தால் சிகரெட் உற்பத்தியாளர்களும் வியாபரிகளும் என் மீது வழக்கல்லவா போட்டு விடுவார்கள்...?

இதில் என்ன ஒரு வசதி இப்படியான சிகரெட் தீரவே தீராது. வேண்டுமென்றால் எப்போது வேண்டுமானலும் எடுத்து புகைத்துக் கொள்ளலாம். புகைக்கும் போது ஏற்படும் அனுபவம்தான் அலாதியானதே அன்றி ஒரு போதும் சிகரெட்டோ அல்லது அந்தப் புகையோ ரசிக்கத் தகுந்தது அல்ல. நிஜத்தில் சிகரெட் பிடிப்பவர்களைப் பார்த்தால் எனக்கு பாவமாய் தோன்றும். ஆமாம்.....எப்போதும் கையில் ஒரு பெட்டியை சுமந்து செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை. கூடவே ஒரு லைட்டர் கூட. இது எல்லாம் போக தொடர்ந்து புகை பிடிப்பவர் அருகில் கூட நாம் நிற்க முடியாது. சிகரெட் நாற்றம் நம்மை இரண்டடி தூரவே நிற்க வைத்து விடுவதோடு அவர்களின் நுரையீரலை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து ஒரு கட்டத்தில் சுவாசிக்கவே முடியாமல் செய்து ஏதேதோ நோய்களையும் கொடுத்து விடுகிறது.

என் கற்பனை சிகரெட் நிஜ சிகரெட்டுக்கு எதிரி. ஆசை வேறு திருப்தி வேறு. எனக்கு திருப்தியாய் இருந்த சிகரெட்டை அணைக்காமலேயே மழையில் தூக்கி எறிந்தேன். வானம் முழுதும் மேகங்கள் தண்ணீராய் அலைந்து கொண்டிருந்தன. மழை முகத்தில் வந்து அடித்து விளையாடியது முன்பொரு தினத்தில் ஒரு பெண்ணோடு பேசிக் கொண்டிருக்கையில் அவள் துப்பட்டா வந்து என் முகத்தில் மோதியதை நியாபகப் டுத்தியது. எங்கே இருக்கிறாளோ...? என்ன செய்கிறாளோ...? இன்னுமொரு சிகரெட் குடிக்கலாமோ என்று தோன்றியது. வேண்டாம் கற்பனை சிகரெட் என்றாலும் ஒன்று போதும் என்று புத்தி சொல்லியது.

ஷோபனாவிற்கு நன்றாக பாடவரும். கல்லூரியில் படித்தபோது ஒரு இன்டர்காலேஜ் போட்டிக்காக கல்லூரியிலிருந்து பல போட்டிகளில் கலந்து கொள்ள நாங்கள் சென்றிருந்தோம். அப்போது ஒரு இரவு பரமக்குடியில் நாங்கள் தங்கவேண்டியதாய் இருந்தது. நான் பாட்டுப் போட்டிக்கும் ஷோபனா பேச்சுப் போட்டிக்கும், பட்டிமன்றத்துக்கும் சென்றிருந்தோம் என்று சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள். ஆமாம் ஷோபனாதான் பாட்டுப் போட்டிக்கு வந்திருந்தாள். அபாரமான குரல் வளம் அதாவது இந்த சூப்பர் சிங்கர் சீசன் எல்லாம் என்னவென்றால் தெரியாத காலம் அது. போட்டியில் நாங்கள் நிறையவே வென்றோம். போட்டிகள் எல்லாம் முடிந்த பின்பு என்னை யாரும் பேசச் சொல்லி கேட்கவில்லை ஆனால் ஷோபனாவை பாடச் சொல்லி கேட்டோம்.

காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே
அலை போல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேர
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே....

சப்த நாடிகளும் ஒடுங்கிப் போய் பின் ட்ராப் சைலன்ஸில் எல்லோரும் ஷோபனாவையே பார்த்துக் கொண்டிருந்தோம். சங்கீதம் என்றால் என்னவென்று தெரியாத ஒரு ஞான சூன்யத்துக்கு அன்றுதான் சங்கீத பாடம் நடந்தேறியது. எத்தனை திறப்புகள்? எத்தனை அறிவுகள்? எவ்வளவு ஞானம்? இந்தப் புவியெங்கும் பரவிக்கிடக்கிறது. அழகு என்ற புறத்தோற்றம் கடந்த எவ்வளவு பெரிய வசீகரம் இந்தப் பெண்ணிடம் இருக்கிறது. இந்தக் குரல், இந்த சப்தம் எவ்வளவு ரம்யமாய் காற்றில் மிதந்து வந்து ஒவ்வொரு செவிக்குள்ளும் நிறைகிறது. இது இசையா? இது கடவுளா? இது காதலா? இது காமமா? யார் எழுதிய பாடல் இது...? வார்த்தைகளை இழைத்து, இழைத்து தன்னுள் புகுத்திக் கொண்ட அந்த மயக்கும் ராகத்தின் பெயர்தான் என்ன? இதற்கு மெட்டமைத்தவர் யார்? மெட்டமைத்தவனின் கற்பனை என்ன? எந்த சூழலில் இந்த இசை அவன் புத்திக்குள் உதயமானது? வளைந்து நெளிந்து செல்லும் ஒரு நதியைப் போல, மென்மையாய் தடவிச் செல்லும் ஒரு தென்றலைப் போல காற்றை செதுக்கிய சிற்பி யார்...? அவனின் அனுபவம் என்ன? அவன் என்ன யோசித்து இந்த பாடலுக்கு இசை அமைத்தான்? 

இந்த பாடலை எழுத பொருத்தமான சூழலைச் சொன்ன படைப்பாளி யார்? அவனுக்குள் கட்டியெழுப்பப்பட்ட கதாபாத்திரத்திற்கு தாக்கம் எங்கிருந்து கிடைத்தது? என்று யோசிக்க யோசிக்க எல்லாமே சூட்சுமத்திலிருந்து பிறந்தது, நினைவுகளில் இருந்து எழுந்தது, கற்பனைகளில் இருந்து மலர்ந்தது என்று புரிந்தது. ஸ்தூலமாம் உடலுக்கு சூட்சுமமே முதல் என்ற சைவச்சிந்தாந்த வழிமுறை பளார் என்று என் கன்னத்தில் அறைந்து பிரபஞ்சப் பெருவெளிக்குள் என்னை தர தரவென்று இழுத்துச் செல்ல....

அங்கே கலைகளின் நாயகனின்  இடைவிடாத பெரு நடனம் நிகந்து கொண்டே இருப்பது பிடிபட்டது. ஒவ்வொரு அசைவிலும் ஒரு நிகழ்வு, ஒவ்வொரு அசைவிலும் ஒரு உயிர், ஒவ்வொரு அசைவிலும் ஒரு மரணம்....

ஜதி தரும் அமுதம் தனி...தனி... தனிச
நவரச நடனம் ஜதி தரும் அமுதம்...
அவன் விழி அசைவில் எழுதுளி அசையும்....

ஆடல் நாயகனின் ஆட்டம் அது. இடைவிடாத ஆட்டம். ஒரு கால் தூக்கி மறு காலில் அகங்காரத்தை போட்டு அழுந்த மிதித்து ஆணவத்தை இடுப்பில் அணிந்து தீமையை கழுத்தில் நிறுத்திக் கொண்டு சடாமுடி விரிய ஆடும் தீப்பிழம்பின் நடனம் அது. சப்த நாடியும் ஒடுங்கிப் போக மீண்டும் ஷோபனாவின் பாடலுக்குள் கொண்டு வந்து இறக்கி விட்டன என் நினைவுகள். என்ன ஒரு பாடல்..? இதைத் திரையில் ஜானகி அம்மா பாடி இருப்பார். அந்த குரல், அந்த ஆசிர்வாதம் ஷோபனாவிற்கு நிறையவே இருந்ததை என்னால் உணர முடிந்தது. சங்கீதம் என்பது சப்தங்களை சரியாய் ஏற்றி, இறக்கி சலனமில்லாத பேருண்மையை சொல்லுமிடம் என்பது புரிந்தது.

நில்லென்று சொன்னால் மனம் நின்றா போகும்
நீங்காத நெஞ்சில் அலை ஒய்ந்தால் போதும்
மௌனத்தின் ராகம் கேளாதோ
மௌனத்தில் தாளம் போடாதோ
வாழும் காலம்
யாவும் இங்கே நெஞ்சம் தேடும்....

எனக்கு கேவி கேவி அழவேண்டும் போன்றிருந்தது. மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த போது எனக்கு எதுவுமே பேசத் தோன்றவில்லை. எனக்கு முன் சீட்டில் ஷோபனா உட்கார்ந்திருந்தது.. திரும்பி திரும்பி என்னிடம் பேசிக் கொண்டே வந்தது. பேச்சுப் போட்டியில் நன்றாகப் பேசியதாக வாழ்த்தியது. நான் பேசுவதை விட பாடுவது கடினம் என்றேன். அதற்கு எல்லாமே பயிற்சிதான் என்று பதில் சொன்னது. என் பயிற்சி போகிற போக்கில் நிகழ்ந்து விடும். கோர்வையாய் செய்திகளைப் பகிரவும், பகிர ஏறி நிற்கும் மேடை பற்றிய பயமும் இல்லாமல் இருந்தால் போதுமென்றேன் நான். நீ நிறைய பேசு என்றாள் அவள்....நிறைய பாடு என்றேன் நான்.....

அன்று அவள் துப்பட்டா காற்றில் வந்து என் முகம் தொட்ட போது தோன்றிய அதே உணர்வை இந்த மழைச்சாரலும்....கொடுத்திருக்கிறது. அது ஒன்றும் காதல் அல்ல... என்று நான் சொன்னலும் காதல் இல்லை என்றும் சொல்லமாட்டேன். அது வேறு. அந்த ஈர்ப்பு சாகும் வரை எனக்குள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் எனக்கு. இது தொட்டுக்கொள்ள துணை தேடும் ஈர்ப்பு அல்ல. தொடாமல் ஆதியின் சுயரூபத்தை ரசிக்க முனையும் ஆழ்மனத்தின் தேடல், ஆசை எப்படி வேண்டுமானலும் வைத்துக் கொள்ளலாம்.

மழை கொஞ்சம் விட்டிருந்தது. சிறு தூரலாகவாவது தயவு செய்து இன்று முழுதும் நின்று செல் என் உயிரே என்று மழையிடம் வேண்டினேன்...!

வள்ளலாரைப் பற்றி எழுத வேண்டும், சங்ககாலத்திலிருந்து தமிழ் மண்ணில் எப்போதும் பேசப்படும் மறவர்களைப் பற்றி படிக்க வேண்டும், எழுத வேண்டும்...., சிவகங்கைச் சீமை பற்றி நிறைய அறிந்து அந்த மண்ணின் மனிதர்களை, வாழ்க்கையை, சிதிலமடைந்து கிடக்கும் காளையார்கோயிலுக்கு எதிரே நிகழ்ந்தேறிய கொடுமைகளை, அந்த சிவப்பு மண்ணில் படிந்து கிடக்கும் மனிதர்களின் ரத்தக் கறைகள் சொல்லும் சோகங்களை, அவர்களின் வீரத்தை எழுத வேண்டும்....

பரத்தையர்கள் வாழ்வு பற்றி, தேவரடியார்களும் தாசிகளும் வெவ்வேறு வகை என்பது பற்றி, எப்போதும் உள்ளுக்குள் மோதும் காதலைப் பற்றி, மனிதர்கள் எப்போதும் பேசத் தயங்கும் காமத்தைப் பற்றி, மதத்திற்குள் முடங்கிக் கிடக்கும் கடவுளைப் பற்றி....நிறைய எழுத வேண்டும். அதற்கு நிறைய வாசிக்க வேண்டும்.....

என்று இந்த விடுமுறையிலும்  ஆசைப்பட்டேன். சட்டென்று ஓடிப்போகும் இந்த காலச் சக்கரத்தை யாரவது இழுத்து பிடித்து கொஞ்சம் நிறுத்துங்களேன்...இந்த வாழ்க்கை முழுதும் தீரத் தீர வாழ்ந்து முடித்து விட்டு நான் வருகிறேன்.  

மழை மறுபடி பிடித்துக் கொண்டது.


மறுபடி எதுவும் செய்யாமல் மழையை வேடிக்கப் பார்க்க ஆரம்பித்திருந்தேன்.




தேவா சுப்பையா....






ப்ரியமுள்ள பாலுமகேந்திரா....!

$
0
0


ப்ரியமுள்ள பாலுமகேந்திரா......

ஒருமையில் நான் உன்னை எழுதினாலும் ஒருமைக்குள் உன்னை அடைத்துவிடவோ அல்லது அழைத்து விடவோ முடியாதென்பதை நீ அறிவாய். வாழ்க்கை ஒருமையிலிருந்து வெடித்து சிதறிய வேடிக்கைகளின் நிகழ்வுதான் ஆனாலும் அது ஒருமை என்று அறியப்படுவதில்லை. அது எல்லாமே ஆனால் ஒன்று. நீயும் அப்படித்தான் என் ஆசானே....!!!!!!! நீ எல்லாமே ஆனாலும் ஒன்று.  நீ எந்தப் புள்ளியைத் தீட்டினாலும் அது ஓவியமாகிப் போன அதிசயம் நிகழ்ந்தேறியது. நீ செதுக்கிய செல்லுலாய்டு சித்திரங்களில் மழை பெய்தால் அதை திரையில் பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு குளிரெடுக்கும். பூக்களை நீ காட்சியாக்கினால் வண்ணத்துப் பூச்சிகள் தேனெடுக்க திரையை மொய்க்கும்....

நீ எழுதிய கவிதைகளைத்தான் நாங்கள் திரைப்படம் என்று கொண்டோம். உன் காட்சி அமைப்பும், பாத்திரப்படைப்புகளும் கதைக் களங்களும் ஏகாந்தத்தை அனுபவிக்க ஆவல் கொண்ட மனிதர்களுக்கு சிறகுகள் கொடுத்தன. கோணங்கள் நிறைந்த இவ்வாழ்க்கையின் எல்லா கோணங்களின் கோணல்களையும் அளவெடுத்தன உனது விழிகள். நீ பார்த்தாய். உன் விழிகளால் நாங்களும் பார்த்தோம். சிக்கெடுக்க முடியாத சிக்கல்களுக்குள் நுழைந்து அங்கே இருக்கும் எதார்த்தத்தை நீ எழுதிப்பார்த்த போதெல்லாம் அது உனக்குக் திரைக்கதையாகிப் போனது.  

உன்னை சந்திக்க விரும்பினேன் பாலுமகேந்திரா. வாழ்வில் நீ போட்டு வைத்திருக்கும் அத்தனை முடிச்சுக்களுக்குப் பின்னாலும் இருக்கும் ரகசியம் யாதென்று கேட்க விரும்பினேன் பாலுமகேந்திரா. உன் காதலுக்கும் காமத்துக்கும் இடையில் இருக்கும் சூட்சும முடிச்சின் வேர் என்னவென்று அறிய விரும்பினேன் பாலுமகேந்திரா. பதின்மத்தின் ஆசைகளை திரையில் இறக்கி வைத்து நீ சொன்னது கதையல்ல இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை மனிதர்களும் பதின்மத்தை தொட்ட போது செய்ததுதான் என்று பகிர நினைத்திருந்தேன். இதோ  உன் மரணச்செய்தி என்னை சம்மட்டியால் தாக்கி இருக்கிறது.  வீடு திரைப்படம் பார்த்து விட்டு ஒரு பகல் முழுதும் அழுது கொண்டிருந்தேன். சந்தியா ராகம் பார்த்து விட்டு மூன்றுநாள் தூங்கவில்லை நான். மூன்றாம் பிறை பார்த்து விட்டு பித்துப் பிடித்துப் போய் உட்கார்ந்திருந்தேன். இப்போது உன் மரணத்திற்கு என்ன செய்வதென்று தெரியாமல் இதோ இந்தக் காகிதத்தில் கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்.

வலைப்பக்கங்களில் நீ எழுத வந்த போது உற்சாகமாய் உன்னை பின் தொடர்ந்தேன். உன் எழுத்தில், உன் படைப்பில் உன் படங்களில் நீ எதைப் பகிர முயன்றது எல்லாமே மெளனம்தானே பாலுமகேந்திரா? உன் மரணத்தின் மூலமும் இப்போது நீ அதைத்தானே நீ பகிர்ந்து சென்றிருக்கிறாய்? எத்தனை சிற்பிகளை உருவாக்கிய பட்டறை உன்னுடையது? எத்தனை படைப்பாளிகள் உன் கை பிடித்து அச்சரம் எழுதிப் பழகி இருக்கிறார்கள்? உன்னைப் போல வரவேண்டுமென்ற கனவில் உன்னின் சிறுபகுதியைக் கூட எட்டிப்பிடிக்க முடியாமல் மீண்டும் மீண்டும் உன் படங்களை பைத்தியக்காரர்களாய் பார்க்கும் படைப்பாளிகள் எத்தனை பேர்? ஆமாம்....பாலுமகேந்திரா நீ தமிழ் சினிமாவின் ஆலமரம். உன்னை புத்தி செதுக்கிய யுத்திகளை பயன்படுத்தாத, உத்வேகம் கொள்ளாத கலைஞன் யாரும் கிடையாது இங்கே. நீ படமெடுக்க ஆரம்பித்த பின்புதான் இங்கே பலபேர் கேமராவை எப்படி பயன்படுத்துவது என்றே அறிந்து கொண்டனர்.

செயற்கை கோள் தொலைக்காட்சியில் நீ இயக்கிய கதை நேரம் பார்த்து அதில் தொலைந்து போனவர்கள் கோடி பேர்கள். உனது பலம் கதை அல்ல. சூழல்!!!!!!! கதை சொல்கிறேன் பேர்வழி என்று கரடி விடுபவர்களுக்கு மத்தியில் சூழல்களை உணர்வு ரீதியாய் திரையில் பதிவு செய்தவன் நீ. ஒரு காட்சி, ஒரு களம், கதை மாந்தர் எல்லாம் கடந்து அந்த சூழல்தான் உனக்கு முக்கியம். மனிதர்களின் சந்தோசத்தை, துக்கத்தை, இழப்பை, தேடலை, காதலை, கோபத்தை, விரக்தியை, காமத்தை உன்னைத் தவிர வேறு யாரால் அச்சர சுத்தமாக மொழி பெயர்க்க முடியும்?

இந்த அத்தியாயம் இன்றோடு முடிந்தது. இது போல ஒன்றை யாராலும் இனி எழுத முடியாது. இது இதுவாய் எப்போதும் இருக்கும். இது போல வேறு ஒன்றும் இங்கே இனி இருக்கவே இருக்காது. தலைமுறைகள்படம் எடுக்கும் போதே நீ தடுமாறி போயிருந்ததை கவனித்தேன் பாலுமகேந்திரா. இது உன் கடைசிப் படமாயிருந்து விடக்கூடாது என்றும் கொஞ்சம் கவலை கொண்டேன். உணர்வு ரீதியான உன் படத்தை தமிழகம் கடந்து வியாபாரம் செய்ய யாரும் முன்வராததால் இதுவரையில் உன் கடைசி படத்தை பார்க்கமுடியவே இல்லை எனக்கு. ட்ரைலர் பார்த்து விட்டு படத்தை எனக்குள் நான் ஓட்டிப்பார்க்க முயன்று முயன்று ஒரு குருடன் புறாக்காட்சி ஒன்றை தனக்குள் உருவாக்க முயலும் ஒரு இயலாமையோடு இன்று நின்று கொண்டிருக்கிறேன்.

உன்னைப் பற்றிய விமர்சனங்கள் எல்லாமே....மனிதர்களின் அனுமானங்கள். ஷோபாவோடு நீ கொண்டிருந்த காதலை நான் உன் திரைப்படங்களிலிருந்து புரிந்து கொண்டேன். உன் காட்சியாக்கங்களில் இருந்து அது எவ்வளவு கவித்துவமானது என்று புரிந்து கொண்டேன். வாழ்க்கையின் பக்கங்கள் செழிப்பாய் இருக்கும் போது அதை பாராட்டிப் பேச பெரும்பாலும் யாரும் வருவதில்லை. ஏதேனும் ஒரு சரிதலில் வாழ்கை சற்றே தடுமாறுகையில் அங்கே குற்றம் சொல்ல கோடி பேர்கள் வருவதுண்டு. உன்னைச் சுற்றியும் கோடி விரல்கள் குற்றம் சொல்ல நீண்டன. கலாச்சாரத்தை காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் உன் காதலுக்குள்ளும் களங்கம் சுமத்த எழும்பிய நாவுகள் இங்கே ஏராளம். அதெற்கெல்லாம் நீ மறுப்பு கூட தெரிவித்தது கிடையாது. உனக்கு தெரியும் உன் காதல் ஆழமானது. உன் காதலி உனக்கு கவிதையானவள் என்று.....

நீ ஒரு அழகிய காதலன். நீ காதலித்தவைதான் உன் திரைப்படங்களில் காட்சிகளாய் வெளிப்பட்டிருந்தன. உன் காதல்தான் ஷோபாவை உன்னோடு சேர்த்துக் கொண்டது. உன் காதலே ஷோபாவிற்குப் பிறகும் உன்னை மெளனமாய் அவளைப் பற்றிய நினைவுகளோடு வாழ வைத்தது. படைப்பாளிகளை எந்த சம்பிரதாயமும் ஒன்றும் செய்ய முடியாது. எந்த சாங்கியமும் அவர்களை ஒன்றும் செய்வதுமில்லை. ஒழுக்க நெறிகளை வைத்துக் கொண்டு உன்னை வரையறை செய்ய முடியாது. வரையறுக்க நினைப்பவர்களின் புத்திகளின் வரையறைதான் அறுந்து போகும். நீ நூலில்லாமல் பட்டம் விட்டவன். காட்சிகளை விழிகளால் மனிதர்கள் கண்டு, கண்டு கடந்து செல்லும் போது நீ அவற்றை கவிதைகளாய் பார்த்து, பார்த்து லயித்துக் கிடந்தவன்.

காலம் உனக்கு எறிந்த கடைசிப் பந்தில் நீ தலைமுறைகளை செதுக்கி வைத்து விட்டு ஓய்வெடுத்துக் கொண்டாயா பாலுமகேந்திரா...?! கனவுகளையும் கற்பனைகளையும் காட்சிகளாக்கிய கேமராக் கவிஞனே சென்று வா...! உன் ஆழ்ந்த நித்திரையில் உனக்குள்  கோடி கனவுகள் தோன்றும். உனக்குள் நீயே சாட்சியாய் நின்று பெரு நித்திரையினூடே நீ இடைவிடாது படைத்துக் கொண்டே இரு....

அது தாகம் நிறைந்த இளம் படைப்பாளிகளுக்குள் விதையாய் இறங்கும். விருட்சமாய் விரியும். விழுதாய் நிலம் தொடும். தலைமுறைகள் கடந்தும் அதனால் மானுடர் பயனடைவர்.

 நீ மரணிக்கவில்லை... உன் வாழ்க்கைப் பயணித்தின் திசை மாற்றிக் கொண்டாய் அவ்வளவே......!  ஆழ்ந்த அஞ்சலிகள் பாலுமகேந்திரா சார்...!

நதியெங்கு செல்லும் கடல்தனைத் தேடி 
பொன்வண்டோடும் மலர் தேடி
என் வாழ்வில் நீ வந்தது விதியானால்
நீ எந்தன் உயிரன்றோ..!



தேவா சுப்பையா...






வசீகரா....!

$
0
0

நான் என்னைக் கவிஞன் என்று சொல்லிக் கொள்வதில்லை ஏனென்றால் எனக்கு கவிதை என்றால் என்னவென்றே தெரியாது.  உணர்வுகளை எழுதிப் பார்க்கையில் அவற்றை உரைகல் வைத்து  உராய்த்து பார்க்கும் புத்தியில்லாதவனாதலால் எனக்கு கவிதைகள் தூரமாகியிருக்கலாம்....! கவிதைகள் என்று ஏதோ ஒன்றைப் பற்றி இங்கே பேசிக் கொண்டிருப்பவர்களுக்கும் எனக்கும் காத தூரம். காதலை கவிதையில் சொல்ல இங்கே பலர் முயன்று கொண்டிருக்கிறார்கள். விரக்தியை, காமத்தை நேசத்தை, வெற்றியை, தோல்வியை, உள்ளுக்குள் எரிந்து கொண்டிருக்கும் இன்னதென்று அறியாத உணர்வுகளை எழுதி எழுதி கவிதை என்று சொல்கிறார்கள்.

விபரமறியாச் சிறுவனைப் போல நானும் வேடிக்கை பார்த்துக் கொண்டே நகர்கிறேன். என் வலிகளை நான் எழுதுவதுண்டு. அவை கவிதைகளா என்ன என்று எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரையில் கவிதைகளுக்கும் சமகால எதார்த்தங்களுக்கும் யாதொரு தொடர்பும் இருக்கக் கூடாது என்று நினைப்பவன் நான். கவிதைகள் எப்போதும் நமக்குச் சிறகு கொடுத்து அவை பேசும் களத்துக்கு நம்மை அழைத்துச் செல்ல வேண்டும். கற்பனையற்ற கவிதைகள் நிஜங்களை முகங்களாகக் கொண்டிருக்கையில் அங்கே லயித்துக் கிடக்க என்ன இருக்கிறது? காதலைக் கவிதையாக்க முனைதலும் அபத்தமே...காதலே கவிதை என்றாகி விட்டால் அதைப் பற்றி கவிதை என்ன எழுத வேண்டிக் கிடக்கிறது...?

காதல் தோல்விகளைப் பற்றி நான் எழுதுவதுண்டு. அப்படி எழுதும் போது காதல் ஒரு போதும் தோற்பதில்லை என்று சிலர் என்னிடம் வாதிடுவார்கள். காதல் ஒரு போதும் தோற்பதில்லைதான் என்றாலும் காதலர்கள் எல்லாம் அதைத் தோற்கடிக்கத்தானே பிறந்திருக்கிறார்கள் என்று நான் கடுப்பாய் திருப்பி அவர்களை வார்த்தைகளால் அடிப்பதுமுண்டு. இங்கே பெரும்பாலும் யாருக்கும் காதலைத் தெரியாது. காமத்தை உடம்பு முழுதும் சுமந்து கொண்டு காதல், காதல் என்று கரையும் காக்கைகள் தங்களைக் குயில்கள் என்றெண்ணிக் கொண்டு கரைந்து கொண்டே இருக்கின்றன. அந்த இடைவிடாத கரைதலை கவிதை என்று சொல்லி கடைவிரித்தும் கொள்கின்றன.

ஒரு பெண்ணோடு ஒருவன் காதல் கொண்டு அவன் அந்தக் காதலில் தோற்றுப் போகும் போது அதாவது அறிவு ஜீவிகளே அந்த பெண்ணோ அல்லது ஆணோ அந்தக் காதலை லெளகீகத்துக்குள் போட்டு அடைக்க முயன்று தோற்கும் போது காதல் அங்கே சீறிப்பாய்கிறது. தோல்வி என்று கருதிக் கொண்டு எழுதுகோல்கள் கக்கும் நெருப்பினில்தான் காதலிருக்கிறது. வெற்றி பெற்ற பின்பு ஒரு செயல் முடிந்து போகிறது.. அங்கே பேச ஒன்றுமே இல்லை. காதலித்து கைப்பிடித்துக் கொண்டவர்கள் குழந்தைப் பெற்றுக் கொள்வதுதான் அவர்கள் காதலின் வெற்றி என்று கருதிக் கொள்கிறார்கள். கவிதை எழுதும் பெரும்பாலானோர் பெரும் காதலை மையமாய் வைத்து எழுதுவது சரிதான்.. ஆனால், காதலை எழுத ஒரு பெண்ணோ ஆணோ தேவையில்லை என்று உணரும் போது நிஜத்தில் ஒரு எதார்த்தமான எழுத்து தன்னை வேறு பரிமாணத்திற்குள் பிரசவித்துக் கொள்கிறது.

எனக்கு லெளகீகக் காதல் போரடித்துப் போய்விட்டது. அதனால் லெளகீகமாய் எழுதும் காதல் தோல் போர்த்திய காமக் கவிதைகளை வாசித்து வாசித்து எனக்கு எரிச்சல் வருகிறது. பெண்ணை மட்டும் நேசிக்கும் ஒரு வட்டம் எப்போது எனக்குள் அழிந்து போனது அல்லது அந்த முனைப்பு எப்போது பட்டுப்போனது என்று எனக்குத் தெரியாது. கிறுக்கிக் கொண்டே மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்த போது எந்தக் கணத்தில் வெளியே பெய்த மழை எனக்குள் பெய்யத் தொடங்கியது என்பதும் எனக்குத் தெரியாது. 



கிளியோபட்ராக்களின் 
அழகிலிருந்து பிறந்த
கவிதைகளை எல்லாம்
நான் ஒரு பாலித்தின் கவரில்
பிடித்து அடைத்து விட்டேன்...
ஆமாம்...
அவை ஒரு நாகத்தின் 
வசீகரத்தையும்...அபாயத்தையும்
ஒருங்கே கொண்டவை...!
பெண்ணை வர்ணித்து எழுதுகையில்
என் காகிதங்களில்
எப்போதும் நெளியும் விசமுள்ள 
பாம்புகளை எப்போதும் இப்படி நான்
பிடித்துக் கொண்டு போய்
என் நினைவெட்டா தூரத்தில் விட்டுவிடுவதுண்டு...;
இப்போதெல்லாம்...
பெண்களைப் பற்றி கவிதை எழுதுவதை
நான் விட்டு விட்டேன்....
கொடிய விசமுள்ள நாகங்களைப் பற்றியொரு நாள்
எழுதிக் கொண்டிருந்த போது 
என் காகிதங்களில் நிர்வாணமாய் பல
பெண்கள் நெளிந்து கொண்டிருந்தார்கள்...
ஒரு பெண்ணொருத்தி என் 
காதுகளில் வந்து காமரசம் ஊற்றினாள்...
இன்னொருத்தி என் உதட்டில்
அமர்ந்து கொண்டு முத்தமிட்டுக் கொண்டிருந்தாள்...
எழுத எழுத காகிதத்திலிருந்து 
ஜனித்துக் கொண்டே இருந்த பெண்கள்...
என் உடல் முழுதும் ஊரத் தொடங்கினர்....
நான் கண் மூடிக் கொண்டேன்....
என் கவிதை நின்று போனது....!
மீண்டுமொரு முறை வென்று விட்டதற்காய்
சாத்தானுக்கு முடிசூட்டினான் கடவுள்...
ஆதாம் மட்டும் அம்மணம் உணர்ந்தான்....
ஏவாள் சாத்தானோடு சென்று விட்டாள்...!

கவிதைகள் எல்லாம் மாயைகள்....! லெளகீகக் காதல்கள் எல்லாம் பெத்தடினாய் ஸிரிஞ்சினை ஆக்கிரமித்துக் கொண்டு உடலுக்குள் காமமாய் பற்றி பரவுகின்றன. உலகெங்கும் கேட்கிறது சிசுக்களின் அழுகுரல்கள். யோனி கடந்து அவை பூமி தொடும் போது எல்லாம் எனக்கு அது காதலின் அழுகுரலாய்த்தான் கேட்கிறது. அழுகுரலை கூர்மையாய் உற்று நோக்கி அதனைப் பிடித்து பின் தொடர்ந்து காற்றில் மிதந்து சென்றால் மீண்டுமொரு கூட்டத்தின் அழுகுரல்  இன்னும் சப்தமாய் கேட்கிறது. ஆமாம்...இந்த முறை அது சிசுவின் ஒற்றை அழுகையில்லை. தடித்த பலரின் அழுகை அது. முற்றிப் போன சிசு மரக்கட்டையில் வைக்கப்பட்டு அதன் மீது சாணம் அடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நெருப்பு சட்டென்று உடலைப் பற்றிக் கொள்ளும் அந்தப் பொழுதில் கூட்டம் கதறி அழுகிறது. 

எனக்கு சிரிப்பு வருகிறது.

ஜனித்தலுக்காய் நிகழும் காமம் காதலெனில்...அந்தக் காமத்தினால் நிகழும் ஜனனம் காதலெனில்.....மரணம் மட்டும் எப்படியடா மடையர்களா துக்கமாகும்? இன்னும் சொல்லப் போனால் மரணம் தான் பெருங்காதல். அது பெருங்கூடல். உடல்களைப் புணர்ந்து புணர்ந்து ஓய்ந்து போன பிண்டம் பிரபஞ்சத்தைப் புணரும் ஒரு பெருங்காமம். மரணம் நிகழும் நொடி காமத்தினால் வரையறுக்க முடியாத உச்சம். கூடலின் உச்சத்தில் துடி துடித்து அயர்ந்து மீண்டும் உடலுக்குள் அடைபட்டுக் கொள்ளும் நிகழ்வல்ல இது. புரிதலோடு நிகழும் மரணம் தீராக்காதல், தீராக்காமம் இன்னும் சொல்லப்போனால் அதுதான் நிஜக்கவிதை.

என் கவிதை என் மரணத்தின் போதுதான் அரங்கேற்றமாகும். நானே இயற்றி, நானே வாசித்து நானே கைதட்டி ஆர்ப்பரித்து, நானே என்னை வாழ்த்தி நகரும் பேரின்பம் அது. ஜதி சொல்லி நானே ஆடிக் களிக்கும் இனிய பரதமது. இங்கே காகிதத்தில் எல்லோரும் கிறுக்கிக் கொண்டிருப்பது மனிதக் கழிவுகளைத்தான். அவை ஒரு போதும் கவிதைகளாகாது. கவிதைகள் பொருள் கொள்ள முடியாதவை. பெரும் இருட்டு அவை. அடர் கானகம். சுடும் நெருப்பு. அங்கே ரசிக்கவும் விவரிக்கவும் ஒன்றுமில்லாத சுத்த சூன்யமது. அதன் சாயலில் இங்கே ஏதேனும் ஒன்றை ஓரிருவர்  எதேச்சையாகப் படைத்து விடுகிறார்கள். கவிதை என்பது தெளிவு அல்ல. தெளிவு என்பது உயர்வும் அல்ல. கவிதை குழப்பம். குழப்பம் ஆனந்தம். தெளிவாய் இருப்பவனுக்கு அடுத்த கணம் பிடிபடும். சுற்றி இருக்கும் சூழல் விளங்கும். புரிதல் என்னும் சிக்கலுக்குள் தன்னைப் புகுத்திக் கொண்டு அவன் சுயத்தை தொலைத்து விடுகிறான். 

சுயம் தெளிவற்றது. இன்னதுதான் செய்யப்போகிறோம் என்ற விபரம் அறியாதது. எதிர்பாராமல் நிகழும் யாவற்றையும் சுகித்து சுகித்து ஆர்ப்பரித்து நகரும் ஒரு காட்டாறு அது. அதற்கு காதலும் தேவையில்லை, காதலியும் தேவையில்லை, கடவுளும் தேவையில்லை. அது நிற்கும். நடக்கும். நடனமாடும். ஒன்றுமில்லை என்று சொல்லி மூலையில் முடங்கிக் கிடக்கும். அது படைக்கும். அது அழிக்கும். அது பார்க்கும். அது தோற்கும். அது வெல்லும். அது கசக்கும். அது இனிக்கும். அது புளிக்கும். அது துவர்க்கும். அது கரிக்கும். அது பாலையாகும். அதுவே வெள்ளக்காடாகும். மழை வேண்டும் என்று அழும். மழை வேண்டாம் என்றும் அழும். காதல் பொய்யென்று சொல்லும் .காதல் மெய்யென்றும் சொல்லும். மனிதர் பால் இச்சை தீர்த்துக் கொள்ள ஒப்பனைகள் செய்து கொண்டு பொது விதிகளை மீசையாக்கி முறுக்கிக் கொண்டே நல்லவன் கபடநாடகம் ஆடும். புணர்ச்சி முடிந்து தொய்ந்து கிடக்கும் மனிதராய் பிரஞ்ஞையற்று அது உறங்கும். பிரஞ்ஞையோடு பிரபஞ்சத்தை சுற்றி வரும். அது கொலை செய்யும். அதுவே பாதுகாக்கும்.

ஆமாம் சுயம் அப்படித்தான். நேரே சென்று மேலெழும்பி கீழே விழுந்து இடம் திரும்பி பின் வலம் மாறி ஏதோ ஒரு கணத்தில் வற்றிப்போய் செத்தும் போகும். அது வரையறுக்கப்படாதது. ஒரு படைப்பாளி சுயத்தோடு எப்போதுமிருக்கிறான். தன்னை எந்த ஒரு நிகழ்வோடும் அவன் முடிச்சிட்டுக் கொள்வதில்லை. யாருடனும் சேர்ந்து அவனால் இயங்கவே முடிவதில்லை. கண நேரம் இனிப்பு நல்லது என்பான் அடுத்த கணத்தில் கசப்பே சிறந்தது என்பான். எதுவுமே உறுதியில்லாத தன்மைதான் எதார்த்தம் அதுவே ஒரு படைப்பாளியின் அடையாளம்.

இப்போது சொல்லுங்கள் எதற்குள்ளோ என்னைப் போட்டு அடைத்துக் கொண்டு ஊறுகாயாய் நான் கிடக்க....? வருவோரும் போவோரும் கை விட்டு நக்கிப் பார்த்து என்னை கணித்து விட்டால்....எனக்கென்ன தனித்தன்மை இருக்கமுடியும்?

இரண்டு நாட்கள் முன்பு நானொரு குளக்கரையில் அமர்ந்திருந்தேன்....வற்றிப் போயிருந்த அந்த குளத்தில் பிளந்து கிடந்த நிலத்தின் இடைவெளிகளுக்குள் ஆங்காங்கே செத்துக் கிடந்த நிலவொளியை அந்த பிளவுகளுக்குள் இறங்கிப் போய் பார்க்க நினைத்திருந்தேன். நிலத்தில் விழுந்த நிலவொளியை எப்படிக் கொன்றாய் பிளந்து கிடக்கும் நிலமே என்று கேட்க நினைத்திருந்தேன். என் எழுத்துக்களும் இப்படித்தான் சில நேரம் என் முகடுகளில் ஏறி அவை  கர்ஜிக்கும் பல நேரம் என் விரிசல்களுக்குள் விழுந்து கனவுகளுக்குள் முழுத்தெம்பாய் நீச்சலடிக்க முடியாமல் எனக்குள்ளேயே செத்தும் போகும்...!

என் காகிதங்களில் என்றாவது ஒரு நாள் பூ பூத்துவிடாதா என்றெண்ணிதான் எப்போதும் எழுதத் தொடங்குகிறேன்...! பல நாட்கள் கெட்டியான இருளின் அழுத்தமான தனிமையிலிருந்து அவை ஒரு கூட்டுப் புழு தன் கூடுடைத்து வெளிவரும் அவஸ்தையோடு சிறகசைத்து சிறகசைத்து வருவதுமுண்டு... இப்போது எழுதி முடித்த இந்த கோட்பாடுகளற்ற இந்த கட்டுரையைப் போல....

அர்த்தம் தேடி கட்டுரைகளையும் கவிதைகளையும் கதைகளையும் வாசிப்பவர்கள் தோற்றுப்  போகிறார்கள்... ஆமாம்... அர்த்தமில்லாத வாழ்க்கைக்குள் அர்த்தத்தை தேடுவது அபத்தம் தானே...?!!!!! வசீகரங்கள் எல்லாம் அர்த்தம் இல்லாதது.  இன்னதென்று விளங்கிக் கொள்ள முடியாதது. விளங்கி கொள்ள முடியாத விசயங்கள்தான் எப்போதும் ஆச்சர்யமானவை.



தேவா சுப்பையா...




நலம் நலமறிய அவா...!

$
0
0

எவ்ளோ பரபரப்பா போய்ட்டு இருக்கு வாழ்க்கை. ரோபட்டிக் லைஃபா போச்சு எல்லாமே. எல்லோருக்கும் அவசரம். எல்லாத்துக்கும் அவசரம். வார
விடுமுறைய கூட ப்ளான் பண்ணி அவசர அவசரமா அனுபவிக்க வேண்டிய ஒருஅழுத்தம். எப்போ மாறினிச்சு இப்டி வாழ்க்கை? அறிவியல் வளர்ச்சி மொத்தமா நம்மள தின்னுடுச்சா? சுயநலம் பெருகிப் போனதுனால ஏற்பட்டிருக்க ஒரு இன்செக்கியூரிட்டினால நம்மள காப்பாத்திக்க நாம என்ன வேணா செய்யலாம்னு சொல்லி மனசாட்சிய அடகு வச்சிட்டோமா? ஆசைதான் துன்பத்துக்கு காரணம்னு  3 ஆம் கிளாஸ்ல படிச்ச புத்தனோட வாக்கு அப்போ 2 மார்க் கேள்வி பதிலா தெரிஞ்சுச்சு......இன்னிக்கு அதுல ஏதோ ஒரு அர்த்தம் இருக்க மாதிரி தோணுது....

ஒண்ண நோக்கி போகும் போது அந்த ஒண்ணு கிடைச்சுடுச்சேன்னு சந்தோசப்பட்டுக்கிட்டு இருக்கும் போது அது தொடர்பான பத்து நம்ம குரல்வளைய நெரிக்க ஆரம்பிச்சுடுது. இதுக்கு அந்த ஒண்ணு கிடைக்காமலேயே இருந்திருக்கலாமோன்னு யோசிக்கவும் தோணுது. அரசியல், சினிமா, ஆன்மீகம், மதம்னு எதை எதையோ நிறுவ ஓடிட்டு இருக்கற அவசரத்துல ரசனையில்லாம இந்த வாழ்க்கை மாறிட்டு இருக்கறத யாரும் கவனிக்கிறதே இல்லை.

டிவி பொட்டி நம்ம சமூகத்துக்குள்ள நுழையிறதுக்கு முன்னாடி மனுசங்களுக்கு மனுசங்க தேவை அதிகமா இருந்துச்சு. பொழுது போக இன்னொரு மனுசனோட தேவை கண்டிப்பா தேவைப்பட்ட காலம் அது. ஆல் இந்திய ரேடியோதான் அப்போ எல்லோருடைய பொழுதையும் மொத்தமா குத்தகைக்கு எடுத்து வைச்சிருந்தது. 1986கள் வாக்குல ஞாயித்துக்கிழமையாச்சுன்னா எனக்கு நாடகம் கேக்குற பழக்கம் இருந்துச்சு. அந்த பழக்கத்துக்கு காரணமா எங்க வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரங்க இருந்தாங்க. அப்போ நாங்க காலனின்னு சொல்ற லைன் வீட்ல இருந்தோம். எங்க வீட்டு எதித்தாப்ல இருந்தவங்க அய்யர் வீடு. அவுங்களுக்கு அஞ்சாறு பொண்ணுகளும் ஒரு பையனும் இருந்தாங்க. அந்த அக்காங்க கூடதான் நானும் எங்க அக்காவும் எப்பவும் விளையாடுவோம்.  புத்தகம் படிக்கிற பழக்கத்தை சுகுந்தாக்காதான் எங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தாங்க. குமுதம், ஆனந்தவிகடன், ராணி, கோகுலம், கல்கி, தேவி இப்டி எல்லா வாரப்பத்திரிக்கைகளும் அவுங்க வீட்டுக்கு வரும். இது போக கண்மணி, ராணி முத்து, ராஜேஷ்குமார், சுபா நாவல்கள் எல்லாம் கூட அப்போ, அப்போ வாங்குவாங்க. கிட்டத்தட்ட அவுங்க வீடுதான் எங்களுக்கு என்டர்டெயிண்ட்மெண்ட்னாலே....

சினிமா எல்லாம் எப்பவாச்சும் ஒரு தடவை அப்பா மனசு வச்சா மதுக்கூர்ல இருக்க எம்கேஎம் இல்லை ஐயப்பா தியேட்டர்ல 2 ரூபாய் ஒரு டிக்கெட்டுக்கு கொடுத்து பார்க்கப் போவோம். அதாவது சீட்டுக்கு 2 ரூபாய், சாய்வு பெஞ்ச் 1 ரூபாய், சாதா பெஞ்ச் 75 காசு, தரை டிக்கெட் 50 காசு அப்போ. அப்பா, அம்மா கூட சினிமாவுக்குப் போறதுன்னா அம்மா சாயந்தரமே மாவு அரைச்சு எடுத்து வச்சிட்டு, வீடு கூட்டுத் தள்ளி, கோழிக் குஞ்சுகள பிடிச்சு கூட்ல அடைச்சுட்டு பரபரப்பா கிளம்பிட்டு இருப்பாங்க. அப்பாவோட அலுவல் நிமித்தமா சிறு நகரத்துக்கு நாங்க நகர்ந்து இருந்தாலும் அடிப்படையில விவசாய குடும்பம் எங்களோடது. பக்கா கிராமம் அதனால அம்மாவுக்கு கோழி வளர்க்குறது. முட்டைய அடை வச்சு குஞ்சு பொரிக்க வைக்கிறது எல்லாம் ரொம்பவே பிடிச்ச விசயம்.

ஞாயித்துக்கிழமை மத்தியானம் சாப்டு படுத்து தூங்குற அப்பா குறட்டை சத்தம் நின்னுடுச்சுனா முழிச்சுட்டாங்கன்னு அர்த்தம். அதுக்குள்ள லபோ திபோன்னு நாங்க கிளம்பிட்டு இருப்போம். நானும் எங்க அக்காவும் ஆளுக்கொரு வாட்டர் பேக் எடுத்து பொறுப்பா தண்ணி ஊத்திக்கிட்டு இருப்போம். தண்ணி ஊத்தும் போது கவனம் இல்லாம நான் சிந்துறத ரொம்ப பொறுப்பா அக்கா அம்மாகிட்ட போட்டுக்கொடுத்து முதுகுல மொத்து வாங்குறதும் உண்டு. தியேட்டர்ல ட்ரம்ல வெளில வைச்சிருக்க தண்ணி சுத்தமா நல்லா இருக்காதுன்றதால இந்த வாட்டர் பேக் ஐடியா.

சைக்கிள அப்பா தள்ளிக்கிட்டு வருவாங்க. அக்கா, அம்மா எல்லாம் நடந்து வருவாங்க....நான் சைக்கிள் கேரியர்ல ராஜா மாதிரி உக்காந்துட்டு வந்த அந்த 13 வயசுல.....அது எனக்கு கனகம்பீரமா தெரியும். காலனில இருக்க 13 வீட்லயும் வாசல்ல நின்னு பாக்குறவங்க கிட்ட எல்லாம் ஏதோ வேற கிரகத்துக்குப் போற மாதிரி அக்கா...போய்ட்றேங்கக்கா....போய்ய்ட்றேண்டா போய்ட்ரேண்ணா ன்னு சொல்லி சினிமாவுக்கு  போறத ஒரு விழாவாவே கொண்டாடுவோம். போய் பாக்குற படம் செம மொக்கையா கூட இருக்கும். படம் எல்லாம் முக்கியமே இல்லை....படம் பார்க்க போறதுதான் சுவாரஸ்யம் எங்களுக்கு. காலனி  காம்பவுண்ட் சுவரு தாண்டி திரும்பறப்ப ஜோயல் அண்ணன் கிட்ட சொல்லலப்பானு சொல்லி சைக்கிள்ள இருந்து தொப்புன்னு குதிச்சு குதிகால் பிடறில அடிக்கிறமாதிரி ஓடிவந்து ஜோயலண்ணே ...சினிமாக்கு போய்ட்றண்ணேன்னு குரல் கொடுத்த உடனே... 

அவுங்களும் ஓடிவந்து.. எந்த தியேட்டர் அப்புன்னு கேள்வி கேட்டு அந்த சந்தோசத்தை அதிகப்படுத்துவாங்க...ஐயப்பா தியேட்டர்ணேன்னு நான் சொல்லவும்...அது கொஞ்ச தூரம்ல ஓடு... ஓடு ஒங்கப்பா திட்டப்போறார்னு சொல்லிக்கிட்டே போய்ட்டு வந்து கதை சொல்லு என்ன... அப்டீன்னு கேட்ட ஜோயல் அண்ணன் அப்போ பிளஸ் டூ படிச்சுட்டு இருந்தாங்க. இது எல்லாம் ஒரு மேட்டரான்னு யாரும் யாரையும் உதாசீனப்படுத்தாத காலங்கள் அவை. ஒவ்வொரு மணித்துளிக்கும் மரியாதை கொடுத்து ஒவ்வொரு சம்பவங்களையும் முக்கியமானதா பாத்து மனிதாபிமானத்தோட அப்போ எல்லாம் எல்லோரும் இருந்தாங்க....

ஏன்னா அப்போ மனுசனுக்கு மனுசனோட தேவை அதிகமா இருந்துச்சு.

ஞாயித்துக்கிழமை ரெண்டு நாடகம் போடுவான் விவிதபாரதியோட வர்த்தக ஒலிபரப்புல...அதாவது மதியம் 12க்கு ஒண்ணு போடுவான் அது குறுநாடகம். மத்தியம் 3 மணிக்கு ஒண்ணு போடுவான் அது கொஞ்சம் பெரிசா ஒருமணி நேரம் ஓடும். எங்கூட்ல இருந்த ரேடியா பொட்டியில நாடகம் கேக்க எனக்கும் எங்க அக்காவுக்கும் பிடிக்காது. எதித்தாப்ல இருக்க அய்யர் வீட்ல போய் அந்த கறுப்பு கவர் போட்ட ரேடியோ பெட்டிய சுத்தி, ஒரு பத்து பேர் உக்காந்து கேக்குற சுகத்தை இன்னிக்கு எத்தனையோ சேட்டிலைட் டிவிகளோட ஒளிஒலிபரப்பும், அதை சோபாவுல உக்காந்துகிட்டு ரிமோட்ட தட்டி எல்சிடி மூலமா பாக்குறதும் கொடுக்கலன்றதுதான் நிஜம்.

அறிவியல் வளர்ச்சி மனுசங்கள விட்டு மனுசங்கள தூரமாக்கிடுச்சு. ஒலிச்சித்திரம் கேக்குறதுன்னா என்னான்னு இப்போ இருக்க புள்ளைக் குட்டிங்க நம்மள பாத்துக் கேக்க ஆரம்பிச்சுடுச்சுங்க. படத்தை பாக்காமலேயே ஒலிச்சித்திரத்த கேட்டு கற்பனை பண்ணி ரசிக்கிற ஒரு சுகம் எப்டி இருக்கும்னு யாருக்கும் இப்போ பிடிபடறதே இல்லை. எல்லாத்தையும் நேரா பாக்கணும் உடனே அதோட டீட்டெய்ல் என்னானு தெரியணும். டெக்னிகாலிட்டி என்னானு தெரியணும் இப்டி ஆராய்ஞ்சு ஆராய்ஞ்சு எல்லோருடைய ரசனைகளும் தடிச்சுப் போயிருச்சு இப்போ. இதுவே மோசமான இறுகிப் போன ரசனையற்ற சமூகச் சூழலுக்கு காரணமாவும் போச்சு. போன வாரம் ரஜினி சார் நடிச்ச ஜானி படம் பார்த்துட்டு இருந்தேன் என்ன டிவின்னு மறந்து போச்சு. அதுல வித்யாசாகர்ன்ற கேரக்டர்ல நடிக்கிற ரஜினி சார் தன் வீட்ல வேலை செய்ற தீபாவுக்கு துணி எடுத்துக் கொடுக்க ஜவுளிக் கடைக்கு கூட்டிட்டுப் போவார்....

அந்தம்மா இந்தப் புடவை நல்லாருக்குன்னு சொல்லி ஒண்ண எடுத்து கையில வச்சுக்கிட்டே இன்னொன்னை பாத்து அது நல்லாருக்குண்ணு சொல்லி அதை எடுப்பாங்க அப்புறம் இன்னொரு புடவைய பாத்துட்டு அதுவும் வேணும் நல்லாருக்குன்னு சொல்லுவாங்க....அப்போ ரஜினி ...பாமா...வாழ்க்கையில ஒண்ண விட ஒண்ணு எப்பவும் பெட்டரா இருந்துக்கிட்டேதான் இருக்கும். நாம ஒரு நிலையில நிக்காம போய்ட்டோம்னா எதுவுமே கடைசியில பிடிக்காம போய்டும் அப்டீன்னு சொல்வாரு...

ஆக்சுவலா ஜானி படத்தைப் பத்தி நான் தனியா எழுத நிறைய இருக்கு. எழுதுவேன். அது மாதிரி இதை விட இது பெட்டர்னு  கம்போர்ட் லெவல நோக்கி வளர்ந்துட்டு இருக்க மனிதர்களா நாம மாறிட்டோம். நான் எல்லாம் எட்டாம் கிளாஸ் படிச்சப்ப சைக்கிள் கத்துக்குறேன்னு சொல்லி முட்டில படாத அடி கிடையாது. கால்ல வராத காயம் கிடையாது. ஓடிப்பிடிச்சு விளையாடுறேன்னு கம்பி கேட்ல இடிச்சுக்கிட்டு கீழ் தாடையில மூணு தையல் போட்டப்ப எனக்கு வயசு 7. இன்னிக்கு வயசு பிள்ளைங்கள கூட நாம பொத்தி பொத்தி வளர்க்குறோம். சின்ன விசயத்துக்கு பதறுறோம். இப்டி செய்யும் போது என்னாகுது அதுங்களுக்கு இந்த சமூகத்தோட சின்ன சின்ன சங்கடங்களைக் கூட எதிர்த்து நிக்கற அளவுக்கு வலு இல்லாம போய்டுது. 

அதுக்காக பிள்ளைங்களை தெருவுல விட்டு எங்கயாவது முட்டி மோதிக்கிட்டு வரச்சொல்லுங்கன்னு சொல்லலை... ஆனா வாழ்க்கையில நடக்குற சரிகளுக்காக சந்தோசப்படுற நாம தவறுகளுக்காகவும், எதிர்மறையா நடக்குற நிகழ்வுகளுக்காகவும் வருத்தப்பட்டு ரொம்ப சேஃப்டியா இருக்கேன் பேர்வழின்னு பிள்ளைங்கள வளர்க்கறதுக்குப் பதிலா சாஃப்ட் டாய்ஸ்கள வளர்த்துடாதீங்கன்னுதான் சொல்றேன். விடுமுறை விட்டா பக்கத்து வீட்டு எதிர்வீட்டு நண்பர்கள பிள்ளைங்க தேடிப் போன காலம் எல்லாம் பறிபோய் இப்போ ஆன்ட்ராய்டு போன்களையும், டேப்லட்களையும், நோட்புக்குகளையும், லேப்டாப்புகளையும் பிள்ளைங்க தேட ஆரம்பிச்சுடுச்சுங்க....

ஒரு சிக்னல்ல கார்ல நின்னு நம்மள சுத்திப் பாத்தா சுத்தி நிக்குற பஸ் கார்க்குள்ள எல்லாம் மனுசங்க அவுங்க அவுங்க மொபைல் போன்கள தடவி ஏதேதோ தேடிட்டு இருக்காங்க. வாட்ஸ் அப், பேஸ்புக், வீ சாட்,  வைபர்,  இப்டி எத்தனையோ சோசியல் நெட்வொர்க்கிங்க ஆப்ஸ் எல்லாம்... நாம் தொடர்பு கொண்டுகிட்டு இருக்க மனுசங்கள நேராப்பாக்குற போதும் கூட அவுங்க கூட சரியா பேசாம இந்த நெட்வொர்க் மீடியாவையே நோண்டுற ஒரு புரையோடிப் போன மனோநிலைக்கு நம்மள தள்ளிடுச்சு....

அவசரம் அவசரமா...ஓடிட்டு இருக்க... லேடிஸ் அன்ட் ஜென்ட்டில் மென்... வாரத்துல ஒரு நாளாவது... உங்க இயந்திரத்தனத்துக்கு ஓய்வு கொடுத்துட்டு......, சமூக அக்கறைகளுக்கு விடுமுறை கொடுத்துட்டு.... இந்த பூமி, மனிதர்கள், மரம், ஆறு, குளம், தோட்டம், வானம், நட்சத்திரம்னு, சாப்பாடு, குடும்பநிகழ்வுகளைக் கேட்டறிதல், நண்பர்களுக்கு தொந்தரவில்லாத சந்திப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுதல், அளாவளாவுதல்... காலாற நடத்தல்னு இருக்கலாம்தானுங்களே....?

நான் இந்தக் கேள்விய உங்களப் பாத்துக் கேக்குற மாதிரி கேட்டிருக்கேன் ஆனா... இந்த கேள்வி எனக்கு நானே கேட்டுக்கிட்ட சம்மட்டியால என்ன அடிக்கிற மாதிரி கேள்வி தானுங்க....!!!!!!


நலம் நலமறிய அவா!



தேவா சுப்பையா...






அழியாத கோலங்கள்...!

$
0
0

ஷோபாவின் பெயர்தான் டைட்டிலில் முதலில் காட்டப்படுகிறது. பிறகு அறிமுகம் பிரதாப் போத்தன், அதன் பிறகு மீதி எல்லோரும். இசை இளையராஜா என்று நினைத்தேன் ஆனால் அவர் இல்லை சலீல் செளத்ரியாம். மனிதர் பின்னி எடுத்திருக்கிறார். படம் பார்க்க ஆரம்பித்த போதே ஏன் டைட்டில் போடும் போதே ஒரு பாடல் வரவேண்டும் அதுவும் ஒரு ஆழமான வலியை கிளறும் நினைவுகள் கொண்ட பாடல் எதற்காக என்று யோசித்தபடியே தான் படம் பார்க்க ஆரம்பித்திருந்தேன். படம் முடியும் போதும் அதே பாடல் மீண்டும் ஒலிக்க படம் நிறைவடைந்து கதை திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம் என்று பாலுமகேந்திரா சாரின் பெயர் வழக்கம் போல.... பின் படம் முடிந்து விட்ட போதுதான் ஆரம்பத்திலும் முடிவிலும் ஒலித்த அந்தப் பாடலின் அர்த்தம் விளங்கியது.

அழியாத கோலங்கள் என்றில்லை பாலு சாரின் எல்லா படமுமே பார்த்து முடித்த பின்பு ஒரு கதையோ அல்லது கவிதையோ, திரைப்படமோ இப்படித்தான் இருக்கவேண்டும் என்று அழுத்தமாய் எனக்குத் தோன்றும். ஒரு படைப்பு பற்றி பார்த்து முடித்த பின்போ அல்லது வாசித்து முடித்த பின்போ ஒன்றுமே நமக்குத் தோன்றக் கூடாது. ஒரு மெல்லிய வலியோடு எங்கோ நாம் சிறகடித்துப் பறக்க வேண்டும். சந்தோசமோ, துக்கமோ, கண்ணீரோ, சிரிப்போ ஒரு படைப்பின் மூலம் நமக்குள் எட்டிப் பார்த்து விடவே கூடாது. ஏதோ ஒரு புது திசைக்கு நம்மை அது  கூட்டிச் சென்று விடவேண்டும். நமக்குள் இருக்கும் எல்லா எண்ணங்களையும் அந்த படைப்பு சுத்தமாய் துடைத்து அழித்து விட்டு நமக்குள் பேரமைதியை ஊற்ற வேண்டும். பாலு சார் ஒரு ஆழமான மனிதர். மனித அன்புகளுக்குள் கட்டுண்டு கிடந்த ஜீவன் அது. இழந்து இழந்து அந்த இழப்பு கொடுத்த வெறுமைக்குள் லயித்துப் புரண்டு, புரண்டு படைத்த ஒரு மகா கலைஞன் அவர்.

ஷோபாவை அவர் காதலித்ததும் ஷோபா பாலுசாரின் அன்பிற்கு பாத்திரமானதும் தவிர்க்க முடியாத ஒன்று.  அப்படி ஒரு பெண்ணை பாலு சார் பார்த்துக் கிறங்கித்தான் போயிருப்பார். அவருக்கு ஷோபா ஒரு பெண்ணே அல்ல. அதுதான் அவரே கூறுவாரே ஷோபா இந்த பூமிப்பந்திற்கு வந்து சென்ற தேவதை என்று. தன்னை வெளிப்படுத்தி தான் இருப்பதை அழுத்தமாய் தெரிவித்து விட்டு தன் இல்லாமையையும் ஆழமாய் பதிவு செய்து சென்ற ஒரு எரிநட்சத்திரம் என்றுதான் அவர் ஷோபாவை சொல்கிறார். ஷோபா அவருக்கு அவர் நித்தம் காணும் வானத்தின் வித்தியாச கோணத்தைப் போன்றவள், மரங்கள் அடர்ந்த பகுதியில் படிந்து கிடக்கும் பெரு நிழலைப் போன்றவள், ஓடும் ஆற்றில் ததும்பி நகரும் அலை அவள், பட்டாம்பூச்சியின் படபடப்பும், புற்களின் மீது படிந்திருக்கும் பனித்திவலைகளும் எப்படியோ அப்படித்தான் ஷோபா பாலு சார்க்கு. ஷோபா ஒரு அதிசயம். அத்தனை ஒரு இயல்பான பெண்ணை அதுவரையில் அவர் பார்த்திருக்கவே இல்லை. ஏன் அவர் மட்டுமா மொத்த தமிழ் ரசிகர்களும்தான்.

முள்ளும் மலரும் படத்தில் ஷோபாவை வைத்து பாலுமகேந்திரா சார் சூட் பண்ண வேண்டும். அந்த மகாகலைஞன் அவளை எப்படி எல்லாம் ரசித்தான் என்பதை ஸ்தூல உணர்வுகள் கடந்து அறிந்து கொள்ள நீங்கள்  “அடிப்பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை” பாடலை இன்னுமொரு தடவை பார்த்து விடுங்களேன். அப்படி பார்க்கும் போது உங்களின் புறத்தொடர்புகளையும் முள்ளும் மலரும் படத்தின் கதையையும் தூக்கி தூர வைத்துவிடுங்கள். அங்கே நீங்கள், இசை, பாடல் வரிகள், ஷோபா, மற்றும் காட்சிகள் அதை தவிர வேறு ஒன்றையுமே அந்த சூழலுக்குள் கொண்டு வராதீர்கள். இப்போது புரிந்து கொள்வீர்கள் பாலுமகேந்திரா ஷோபா மீது கொண்டிருந்தது என்ன என்று....

வாழ்க்கையில் ஏற்படும் முரண்களுக்கும் அதன் விளைவுகளுக்கும் யாரும் விதி விலக்கல்ல. பாலுசாரும் கூட. அதனால் அவர் வாழ்க்கையின் ரகசிய பக்கங்களுக்குள் சென்று ஆராய்ச்சி செய்து என்ன நிகழ்ந்தது என்றறியும் பொது ஜனத்தின் புரையோடிப்போன புத்தி என்னிடமில்லாததால் பாலுசாரின் காதல் எவ்விதமானது என்பதை என்னால் தெளிவாய் உணர முடிகிறது. ஷோபாவை பொறுத்தவரைக்கும் அவர் மீது படிந்து கிடந்த வசீகரத்துக்கு காரணம் அவருக்கு நடிக்கவே வராது என்பதுதான். நடிக்கத் தெரியாமல் அந்த சூழலுக்குள் விழுந்து தன்னை முழுதுமாய் அந்த கதைக்குள் நுழைத்துக் கொண்டு அவர் வாழ்ந்து விடுகிறார். அது இயல்பான வெளிப்பாடு. ஒப்பனைகள் இல்லாத உண்மை. அழியாத கோலங்களில் அவர் இந்து டீச்சராய் வருகிறார்.

கெளரி சங்கர் என்னும் விடலைப் பையன் அவர் மீது தன் பருவ மாற்றத்தால் ஆசை வைக்க அதை பற்றிய எந்த பிரஞ்ஞையுமின்றி அவனை ஒரு சிறுவனாகவே பாவித்து இந்து டீச்சரான ஷோபா நடித்திருப்பது சத்தியமாய் நடிப்பு கிடையாது. அது ஒரு விதமான வாழ்க்கை. வாஞ்சையாய் இப்படி தன்னை விட ஆறேழு  வயது குறைந்த பையனிடம் ” என்னம்மா கெளரி என்னாச்சு மழையில நனைஞ்சுட்டு நிக்குற வா வா... வா குடைக்குள்ள வா..”  என்று ஷோபா அழைப்பது அன்பின் உச்சத்தில். அவளுக்கு அவன் மீது எந்த ஒரு உறுத்தலும் ஏற்படவில்லை. ஏற்படவும் படாது. அவளுக்கென்று காதலன் பிரதாப் போத்தன் இருக்கிறார். தனக்கென தன் காதலுக்கென ஒருவன் இருக்கும் போது இன்னொருவரிடம் ஒடித்து நடித்து ஓடி ஒளிய என்ன இருக்கிறது....?

அன்பு மட்டுமே அங்கே சீறிப்பாயும். ஷோபா இந்து டீச்சராய் சீறிப் பாய்ந்திருக்கிறார். படம் பார்த்துக் கொண்டே இருந்த எனக்கு சட்டென ஆனந்தவள்ளி டீச்சரின் நியாபகம் வந்தது. அது காதலும் கிடையாது. காமமும் கிடையாது. ஏனென்றால் காமம் என்றால் என்னவென்று 13 வயதில் இருக்கும் கட்டுப்பாடுகள் நிறைந்த வாழ்க்கைக்குள் இருக்கும் ஒருவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சரியாய் ஹார்மோன்களின் மாற்றங்கள் தொடங்கி இருந்த அந்த வயதில் எனக்கு எட்டாம் வகுப்பில் பாடமெடுக்க வந்த ஆனந்தவள்ளி டீச்சரை நிறையவே பிடிக்கும். ஏதாவது உதவி என்றால் ஓடிப்போய் நான் செய்திருக்கிறேன். அதிகபட்சம் டீச்சருக்கும் நம்மை பிடிக்கும் என்று நினைக்கும் போதே ஒரு சந்தோசம் கிடைக்கும். அவ்வளவுதான் அதற்கு மேல் கூட்டியோ குறைத்தோ அந்த உணர்வைச் சொல்ல முடியாது. டீச்சர் ட்ரெயினிங் முடித்து விட்டு அப்போதுதான் சேர்ந்த ஆனந்தவள்ளி டீச்சரிடம் ஏற்பட்ட ஈர்ப்பு என்ன விதமானது என்று இன்று வரை என்னால் கணிக்க முடியவில்லை. டீச்சரைப் பொறுத்தவரை நான் ஒரு டவுசர் போட்ட சின்னப்பையன் அவ்வளவுதான்.

அப்படி சின்ன பையனாய் இருந்ததாலேயே வாஞ்சையோடு காது திருகி என்ன மிஸ்டேக் பண்ணி இருக்க பார் என்று உரிமையோடு சொல்லிக் கொடுக்கவும் செய்வார். ஒரு நாள் கையில் பிரம்பு வைத்து அடித்து விட்டார் என்று ஒருவாரம் அவரை நான் திரும்பிப் பார்க்கவே இல்லை. பிறகு கூப்பிட்டு என்னை சமாதானம் செய்த பின்பு சாரி டீச்சர் என்று நான் சொன்னதைப் போல இந்தப் படத்திலும் கெளரி சங்கர் டீச்சரிடம் சாரி கேட்கிறான். தமிழ் டீச்சர் அவர். புராணக்கதைகளோடு சேர்ந்து நிறைய வரலாற்றுக் கதைகளையும் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த ஆனந்தவள்ளி டீச்சர் இப்போது எங்கிருக்கிறார் என்று எனக்குத் தெரியாது ஆனால் அன்றைக்கு அவர் மீதிருந்த ப்ரியம் நிஜம். பதின்மத்தின் தடுமாற்றம். கட்டுப்பாடுகள் கொண்ட சமூக வாழ்க்கையினூடே கட்டுப்பாடுகளின்றி சுரக்கும் இரசாயனத்தினுள் சூட்சுமமாய் ஒளிந்திருந்த ஆதியின் குணம் அது. 

பதின்மத்தின் குறுகுறுப்பில் ஆற்றில்  குளிக்கும் பெண்களை யார் பார்க்காமல் இருந்திருப்பார்கள்? ஏடா கூடமான புத்தகங்களையும் படங்களையும் வகுப்பறைக்கு கொண்டு வரும் ஒரு முத்திப் போன நண்பன் இல்லாத பதின்மம் யாருக்கேனும் இங்கு உண்டா? மீசை அரும்புகையில் ஒரு தலையாய் காதலிக்காத பாவாடை தாவணிகள் இல்லாமல் போயிருந்தால் அது எப்படி பதின்மமாகும்? கனவில் தேவதைகள் வரிசையாய் நின்று கோரசாய் பாடல் பாடாத வாலிபம் எப்படி வீரியமானதாய் இருக்க முடியும்? யாரோ ஒரு கோகிலாவோ, ராஜியோ, உமாவோ, சித்ராவோ இல்லாமல் பதின்மத்தைக் கடந்தேன் என்று யாரேனும் ஒரு ஆண் சொன்னால் அது ஹார்மோன்களின் குறைபாடு என்றுதான் நான் சொல்வேன். பெண்களின் பதின்மத்தை பற்றி நான் எழுத விரும்பவில்லை. யாரேனும் ஒரு பெண் அதை எழுதினால் தான் சரியாய் இருக்கும்.

ஒரு டீச்சருக்கும், சாருக்கும் (இரண்டு பேருமே டீச்சர்தான் என்றாலும் எங்களுக்கு டீச்சர் என்பது பெரும்பாலும் பெண்பால்தான். ஆண்களை சார் என்றோ வாத்தியார் என்றோ சொல்லும் வழக்கம் இன்றும் நம்மிடம் உண்டுதானே...?!!!!) இருந்த வரைமுறையற்ற உறவினை பள்ளியிலேயே நேராய்க் கண்ட பின்பு உடம்பு சூட்டோடு தினமும் அதுபற்றி நண்பர்களிடையே பேசிப் பேசி மேலதிக விபரம் சொல்ல ஆளில்லாமல் திணறி நின்ற பதின்மம் எவ்வளவு வசீகரமானது. அழிக்க முடியாத அழியாத கோலங்களில் ரசனையாய் அதை சொல்லியிருக்கும் பாலு மகேந்திரா சாரை ஏன் நான் தீரத் தீரக் காதலிக்கிறேன் என்று உங்களுக்கு இப்போதாவது புரிகிறதா? அழியாத கோலங்களில் வெண்ணிற ஆடை ராமமூர்த்தி திருமணம் ஆகாத ஒரு முதிர்கண்ணன். வரும், செல்லும் பெண்களிடமெல்லாம் அதனாலேயே ஜொள்ளு விடும் ஒரு சபலக் கேஸ். படத்தில் அவர் ஒரு போஸ்ட் மாஸ்டர். அந்த ஊரிலேயே கொஞ்சம் அப்படி இப்படி இருக்கும் ஒரு பெண் மணியார்டர் அனுப்ப வருவார். அப்போது வெண்ணிற ஆடை மூர்த்தி சில்மிஷமாய் பேசிக் கொண்டிருப்பார். 

அந்தக் காட்சியில் பின்னணியில் ஏதோ ஒரே ரிதமில்... கொண்டீரே..... கொள்ளை கொண்டீரே....என்று ஒரு பாடல் ரேடியோவில் போய்க் கொண்டிருக்கும். நானும் படம் பார்த்த போதே மீண்டும் மீண்டும் ரீவைண்ட் செய்து அது என்ன பாடல் என்று முயன்று...தோற்று.....முயன்று...மறுபடியும் தோற்று...கடைசியில் பாடல் வரிகளை குத்து மதிப்பாய் எடுத்து கூகிளில் தேடிப் பார்த்தால் எம்.கே.டி. தியாகராஜ பாகவதரின் ஒரு பழைய பாடல். அட்டகாசமான அந்த பாடல் வெண்ணிற ஆடை மூர்த்தி அந்தப் பெண்ணிடம் சில்மிஷம் செய்து கொண்டிருக்கும் சூழலுக்கு ரம்யமாய் பொருந்திப் போகும். ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு சூழலுக்கும் எது வேண்டும் என்று பாலுசார் எவ்வளவு ரசனையாய் முடிவெடுக்கிறார் என்று எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.


நிறைய பணம் போட்டு எது எதையோ காட்டினால்தான் படம் ஓடும் என்ற ஒரு சூழலை உருவாக்கியிருக்கும் இந்தத் தலைமுறை இயக்குனர்கள் எல்லாம் ரசிகர்களை சுத்தமாக கெடுத்து வைத்திருக்கிறார்கள் என்றுதான் நான் சொல்வேன். சர்க்கஸ் காட்டுவது போலத்தான் இப்போது வரும் படங்கள் எல்லாம் பெரும்பாலும் இருக்கின்றன. விஸ்வரூபம் படம் எல்லாம் வெறும் டெக்னிகல் சர்க்கஸ்தான் என்று எனக்கு விளங்கியது. ஒரு ஆறு, ஒரு ஏரி, மரங்கள் சூழ்ந்த சாலை, வயல்வெளிகள், வாய்க்கால்கள், பூக்கள், வானம், உறுத்தல் இல்லாத வீதிகள், வீடுகள், இயல்பான சினிமாத்தனம் இல்லாத மனிதர்கள்  அவ்வளவுதான் அழியாத கோலங்கள் படம் முழுதும்....

கமல் நடித்திருக்கிறார் என்பதை படம் ஆரம்பிக்கும் போதும் முடியும் போதும் மட்டுமே உணர முடிகிறது. கமல் அலுவலகத்திற்கு வருகிறார். அலுவலக வேலைகளுக்கு நடுவே அவருக்கு வந்த கடிதங்களைப் பார்க்கிறார். அதில் ஒன்று  அவரது பால்ய சினேகிதன் பட்டாபி எழுதியது. இந்து டீச்சர் இறந்துப் போய்ட்டாங்கடா.... என்று பட்டாபி கடிதத்தில் சொல்கிறார். கடிதத்தை வாசித்து விட்டுபத்து நிமிடம் என்னை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள் என்று அலுவலகத்தில் சொல்லி விட்டு தனது நாற்காலியில் கமல் சாய்கிறார்....

மொத்த படமும் ப்ளாஷ் பேக்.....

விடலைப் பருவத்தில் மூன்று நண்பர்கள் வருகிறார்கள் , கெளரிசங்கர், பட்டாபி மற்றும் ரகு கூடவே இந்து டீச்சர். ப்ளாஷ் பேக்கில் ரகு என்னும் நண்பன் இறந்து போகிறார். ப்ளாஷ் பேக் முடிந்து மீண்டும் அமைதியாய் திரைக்குப் பின்னால் பாடல் ஒலிக்கிறது. கமல் சோகமாய் தன் நாற்காலியில் சாய்கிறார். காதலும் காமமும், பாசமுமாய் பார்த்த இந்து மதி டீச்சர் இறந்து விட்டதாய் கடிதம் சொல்கிறது. கடிதத்தை எழுதியது பட்டாபி..... மிச்சமிருக்கும் கெளரிசங்கர் தான் கமல் என்று புரிந்து கொண்டேன்.

அவ்வளவுதான் படம் முடிந்து விட்டது....!

இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ
பிறக்கும் ஜென்மங்கள்....
பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ

படம் முடிந்து இதோ இந்த வரிகளை எழுதும் இப்போது வரை உள்ளுக்குள் அழுது கொண்டிருக்கும் இந்த வரிகளோடு கடந்து வந்த என் வாழ்க்கையின் அழியாத கோலங்களை அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்.....



தேவா சுப்பையா...






சாக்தனானேன்...!

$
0
0

சைவம் என்பது பிறப்பால் பின்பற்ற நிர்ப்பந்திக்கப்பட்ட வழிமுறையாய் எனக்கு ஆகிப் போனதால் சைவம் பற்றி அறிந்து கொள்ள நிறைய நாட்கள் மெனக்கெட்டு இருக்கிறேன். அம்மாவின் தாத்தா எங்கள் பாட்டையா காலம் வரை கடுமையான சைவர்கள் நாங்கள். தலைவாசல் ஒரு தெருவிலும் கொல்லைப்புறம் அடுத்த தெருவிலும் இருக்கும் அம்மாவின் பூர்வீக வீட்டின் நடு ஹாலில் ஆளுயர தட்சிணாமூர்த்தி படம் தேக்கு மரத்தால் பிரேம் போடப்பட்டு பிரம்மாண்டமாய் இருக்கும். குரு நிலையை போதிக்கும் அந்தப்படத்தை நான் அதற்கு முன் யார் வீட்டிலும் பார்த்திருக்கவில்லை. ஞானம் என்றால் என்னவென்று வார்த்தைகளின்றி நேரடியாய் விளக்கும் நுட்பங்கள் நிறைந்த படம் அது. ஒரே ஒரு சித்திரத்தில் ஒட்டுமொத்த பிரபஞ்ச தன்மையையும் கொண்டு வந்தது யார்? யார் இதை யோசித்தது? தட்சிணாமூர்த்தியின் தத்துவத்தை வார்த்தைகளால் சொல்லவே முடியாது.

வார்த்தைகளால் விளக்க முற்பட்ட மாத்திரத்தில் அந்த உண்மை உடைந்து போய்விடும். இந்த உண்மையைத்தான் உலகம் முழுதும் வெவ்வேறு வடிவில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எல்லா சமூக அரசியலுக்கும் பின்னால் இந்த தத்துவமே வெகு ஆழத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறது. கவிதைகளுக்குள்ளும், கதைகளுக்குள்ளும், மனிதர்களின் எல்லா உணர்வுகளுக்கும் பின்னாலும், இன்ன பிற சமூக சிந்தனைகளுக்குள்ளும் அடிப்படையாய் தட்சிணாமூர்த்தி தத்துவமே விளங்குகிறது. இந்த தத்துவமே உலகம் முழுதும் பரந்து விரிந்து கிடக்கும் மானுட சமூகத்திற்கு அந்த அந்த நிலத்தின் வேதங்களாய் எழுந்து நின்றது. இருந்ததனை இருந்தது போல இருந்து காட்டிய வேதநாயகனாய் ஒரு உயர்சிறப்பில் மனிதர்களுக்கு விளங்கும் வகையில் ஒரு பால்வகையைச் சுட்டி அதை சித்திரப்படுத்த வேண்டும் என்று நினைத்தவர் சர்வ நிச்சயமாய் வெகு அற்புதமான மனிதராய் இருந்திருக்க வேண்டும்.

சனாதான தருமம் நேரடியாய் சத்தியத்தை ஒரே ஒரு படத்தில் பளீச் என்று சொல்லியிருப்பது எனக்கு வெகு வியப்பாய் இருந்தது. எத்தனையோ புத்தகங்களை வாசித்து, வழிபாடுகள் செய்து, மந்திர ஜபங்கள் செய்து, தவங்கள் செய்து கடுமையாய் முயற்சித்து, சொர்க்க நரகங்கள் சொல்லி மனிதர்களை மிரட்டி சாந்தப்படுத்தி இதை உணரத்தான் இங்கே எல்லாமே செய்யப்பட்டது. வாழ்க்கையின் எல்லா சுக துக்க அனுபவங்களும் இந்த உண்மையைதான் நமக்கு மெலிதாய் காலங்கள் தோறும் உணர்த்திக் கொண்டிருக்கின்றன. மாரியம்மன் கோயில் திருவிழாவும், முருகன் கோயில் காவடியும், பிரதோஷ விரதமும், புனிதவெள்ளியும், கிறிஸ்துவின் பிறப்பும், இஸ்லாமின் அடி ஆழமும் இந்தத் தத்துவத்தை வலியுறுத்தவே எல்லா சட்ட திட்டங்களையும் எழுதி வைத்தன. ஏதோ இருக்கிறது என்று சொல்லி சொல்லி எல்லா சமூகத்து வழிமுறைகளும் மனிதர்களை அன்பாய் இருக்க சொல்லி போதித்து பேரமைதிக்குள் அவர்களைப் பிடித்து தள்ளவே முயன்றன.

மதங்கள் என்றில்லை, சித்தர்களும், நாயன்மார்களும், பிறவி மூலம் அறிந்த பித்தர்களும் ஒவ்வொரு விதத்தில் இதையே செய்ய முயன்றனர். வள்ளலார் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடச் சொன்னார். வாடி வாடி அழுது அந்த வாடிய பயிருக்கு தண்ணீர் ஊற்றி அந்தப் பயிர் நனைந்து வேர்கள் நீரினை உறிஞ்ச மெல்ல சிலிர்த்து பசுமையாய் நிமிர்ந்து நின்று அன்பாய் நம்மை பார்த்து சிரிக்கையில் நம் மனம் படக் என்று ஒடுங்கிக் கொள்கிறது. நான் நீரூற்றினேன். நீர் பூமியிலிருந்து கிடைத்தது. பூமியிலிருந்தல்லவா நீயும் வளர்கிறாய். நீர் பூமி கொடுத்தது. பயிர் பூமியிலிருந்து வளர்வது. நான் இந்த பூமியிலிருந்து வந்தவன். இந்த பூமிப் பந்து ஆகாசத்தில் மிதப்பதற்கு முன்பு சூரியனாய் இருந்தது. இந்த சூரியன் சூரியனாய் ஆவதற்கு முன்பு தூசுக்களாலும் இன்ன பிற வாயுக்களாலும் நிரம்பி இருந்தது. இந்த தூசுக்களும் பலவிதமான வாயுக்களும் இந்த பிரபஞ்சத்திலிருந்து தோன்றின. இவை எல்லாம் தோன்றுவதற்கு முன்பு பிரபஞ்சம் சும்மாதானே இருந்திருக்கும். ஒன்றுமில்லாமல் மெளனமாய் இருந்திருக்கும். சப்தமில்லாமல், அசைவு இல்லாமல் சலனமில்லாமல் ஒரு பேரமைதி. அடர் கருமை. அது இருந்தது. சரி எப்படி இருந்தது? அது இருப்பது போல இருந்தது. 

இருப்பது போல என்றால்....என்ன? அது எப்படி இருந்ததோ அப்படி. இதைப் பற்றி கூடுதலாய் சொல்ல முடியாது. அது இருந்ததனை இருந்தது போல இருந்து காட்டியது. அந்த இருத்தலை நாம் பார்த்தோ, படித்தோ, விவாதித்தோ அறிந்து கொள்ள முடியாது. சரி அப்படி என்றால் எப்படித்தான் நாங்கள் அறிந்து கொள்வது என்று கேட்கிறீர்களா? அதை அறிந்து கொள்ள அந்த குணமற்ற, நிறமற்ற, சுவையற்ற, அதிர்வற்ற,  சலனமற்ற தன்மையாய் நாம் இருந்துதான் பார்க்க முடியும். இருந்து பார்க்க எல்லாம் விடவேண்டும். ஒன்றுமில்லாத தன்மையை உணர ஓராயிரம் கருத்துக்களை ஏற்றுக் கொள்தல் சரியான வழிமுறையா? 

ஒன்றுமில்லை என்று சொல்லாமல் சொல்ல, இருந்ததனை இருந்தது போல இருந்து காட்டியதை விளக்க ஒரு படம். பாட்டையா இந்தப் படத்தை ஏன் வைத்திருந்தார் என்று நான் கேள்வி கேட்டு அதற்கு பதில் சொல்லும் பக்குவத்தோடு வீட்டில் யாரும் இப்போது இல்லை. எல்லோருக்கும் அது ஒரு படம் என்ற அளவோடும், நல்லது கெட்டதுக்கு அந்தப் படத்தின் முன்பு நின்று வேண்டிக் கொள்வதோடும் முடிந்து போகிறது. சத்தியம் மட்டும் வாங்கும் பாத்திரத்திற்கு ஏற்றார் போலத்தான் எப்போதும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. ஏதேதோ கருத்துக்கள் கொண்டிருப்பவர்களிடமும், யாரோ சொன்னதை நம்பி கற்பனையில் காலத்தைக் கழித்துக் கொண்டு இருப்பவர்களிடமும் சத்தியம் அதிகம் பேசுவதில்லை. அதிகம் பேசுவதில்லை என்பதை விட எதிர்த்து விவாதம் செய்வது இல்லை என்று சொல்லலாம்.

விவாதத்தால் இங்கே வெல்ல ஒன்றுமே கிடையாது. எல்லாம் சரி என்று நிறுவி பேசும் ஒரு எதார்த்தத்தில்தான் இங்கே எல்லாமே இருக்கிறது. அதனால் சத்தியம் எப்போதும் புரிதல் இல்லாதவர்களைப் பார்த்து புன்முறுவல் பூத்தபடியே இருக்கிறது. திருத்தவேண்டும் சரியைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று எந்த ஒரு அவசரமும் அதற்கு இல்லை. ஏன் தெரியுமா? தவறுகள் வலிகளைக் கொடுக்கும் வலிகள் அனுபவத்தைக் கொடுக்கும். அனுபவம் புரிதலைக் கொடுக்கும். புரிதல் தெளிவினைக் கொடுக்கும். தெளிவு சத்தியத்தை நோக்கி இழுத்துச் செல்லும். சிலருக்கு ஒரு சறுக்கல்  புரிதலை கொடுத்து விடும். பலர் மேலும் மேலும் அடிபட்டு ஜென்மங்களாய் இந்தப் புரிதலுக்காக அதிர்வு கொண்ட ஆன்மாவாய் பயணிக்க கூடும்.

சிவம், சைவம் வாழ்க்கை முறையாகிப் போன பின்பு சாக்தம் எனப்படும் சக்தி வழிபாடு பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமில்லாமல் போயிருந்தது எனக்கு. ஆதிநிலையிலிருந்து கொண்டிருக்கையில் அதுவே உண்மை என்று புரிந்து கொண்டிருந்த எனக்கு சாக்தம் என்பது வேறு எதாகவோ பட்டது. இதனாலேயே விபூதியைத் தவிர வேறு எதுவும் பூசமாட்டேன். எரிந்து போன பிணத்தின் சாம்பல் வெண்ணிறம். விபூதியும் வெண்ணிறம். நானும் ஒரு நாள் வெண் சாம்பலாவேன். குங்குமம் எதற்கு..? சிவப்பு எதற்கு? ரத்தத்தின் நிறம் எதற்கு? அடர் வசீகரம் எதற்கு நெற்றியில், சூடு தணிந்துதானே...வெண்ணிறம். உஷ்ணமான செந்நிறம் எனக்கெதற்கு என்று ஒதுங்கி இருந்திருக்கிறேன்.

சாக்தம் சிவனின் பெரும் தாண்டவம் என்பதை எனக்கு காலம்தான் உணர்த்தியது. சிவனின் இயங்கு நிலையே சக்தி. சூடு. அனல். அதிர்வு. உயிராய் உடலுக்குள் இருக்கும் போது லெளகீகத்தின் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போது சட்டென்று ஓட்டத்தை நிறுத்தினால் தடுக்கித்தான் விழவேண்டும். நான் ஓட்டத்தை நிறுத்தி தடுக்கி விழுந்தேன். ஓட்டம் சுத்தமாய் நின்று போக வேகமாய் ஓடவேண்டும். வேகமான ஓட்டத்திற்குப் பிறகு அது நின்று போகும் போது அது பூரணமாகும். ஓட்டம் சக்தி. பூரணம் அல்லது அமைதி சிவம்.

சிவத்தின் தன்மையை ஆண்கள் தாங்கி இருக்கிறார்கள். ஆண்கள் அடிப்படையில் இயங்காப் பொருள்கள். சூழல்தான் ஒவ்வொரு ஆணையும் இயக்குகிறது. சூழல் பெரும்பாலும் வாழ்க்கை என அறியப்படுகிறது. வாழ்க்கை என்பது ஒரு ஆணுக்கு பெண்ணோடு நிகழ்வது. நேர், எதிர் சக்திகள். இது ஈர்க்க அது அது நோக்கிப் பாய்கிறது.  அதிர்வு நிலையிலிருக்கும் சிவமாய் பெண்கள் இருக்கிறார்கள். பெண்களிடம் அந்த ஓட்டம் அதிகமாயிருக்கிறது. இயக்கம் பெண். தீச்சுவாலயாய் பெண் இருக்கிறாள். ஆண்கள் இந்த உலகத்தில் அதிகம் இயங்குகிறார்கள். அப்படி இயங்குவதற்கு காரணம் பெண்கள். எப்படி இந்த வசீகரம் வந்தது? 


வெறுமனே காமத்திற்காக என்று சொல்லிவிட முடியாது. இயக்கத்தின் தன்மை அடிப்படையில் பெண்களிடம் மட்டுமே இருக்கிறது. வேகமாய் இயங்கும் ஆண்கள் ஆண்களாய் தோற்றத்தில் இருந்தாலும் அவர்கள் பெண்களே...! உலகில் சாதித்திருக்கும் அத்தனை ஆண்களிடம் நிரம்பிக் கிடப்பது பெண் தன்மையே! இளகு தன்மையே இயங்கும். பெண் தன்மை என்பது இளகிய தன்மை. அப்படியான ஆண்கள்தான் வெற்றியாளர்களாக பரிணமிக்கிறார்கள். பெண்தன்மை இல்லாமல் வெற்றி பெறும் ஆண்கள் சர்வாதிகாரிகளாக மாறிப் போகிறார்கள். அவர்களிடம் கருணையோ, நீதியோ, சத்தியமோ, இருப்பதில்லை.

சாக்தம் இயக்கத்தின் குறியீடு. இயக்கம் என்பது நெருப்பு. நெருப்பின் அம்சம் குங்குமம். யோசித்துக் கொண்டிருந்த போதே சைவனாயிருந்த நான் ஒற்றைப் பாய்ச்சலில் சாக்தனாகிப் போனேன். திருவேற்காடு போயிருந்த போது அது நிகழ்ந்தது. கருவறைக்குப் பக்கத்தில் அமர்ந்து சக்தி மந்திரங்களைக் கேட்க கேட்க அந்த அதிர்வுகளால் சூடேறிப் போயிருந்த உஷ்ணமான சூழலும், அக்னியாய் இருந்த அந்த கருவறையும் மின்னலைப் போல என்னை தாக்கிய பொழுதில் சாக்தம் என்பது வாழ்தல். சாக்தம் என்பது அன்பு செய்தல்.

சாக்தம் என்பது அந்த சாக்த தன்மை நிரம்பிக் கிடக்கும் பெண்களை புலன்களைக் கடந்து உணர்தல், சாக்தம்  என்பது அம்மா, தாய், போராட்ட குணம் என்று உணர முடிந்தது. வாழும் வரை சாக்தம் வேண்டும். இது சிவனின் இன்னொரு கோலம். தன்னில் பாதியென்று தன்னைத்தானே அவன் சொல்லியிருக்கிறான். நான் எப்படி இதை விட்டு தூர போனேன் என்று நினைத்த போது அது என் அறியாமை என்று புரிந்தது.

யோசித்தபடியே குங்குமத்தை எடுத்து நெற்றியில் அப்பிக் கொண்டேன். குங்குமம் இயக்கத்தின் குறியீடு. இருக்கும் வரை இயங்குவேன், அதி உஷ்ணமாய் இயங்குவேன், சீற்றமாய் நகர்வேன் என்று தன்னைத் தானே தயார்படுத்திக் கொள்ளும் ஒரு சூட்சுமம். இருந்ததனை இருந்தது போல இருந்து காட்டுவது என்பது பேரமைதியை விளக்க மட்டுமல்ல, இயங்கும் தன்மையை விளக்கவும்தான் என்று எனக்குத் தோன்றியது. கோயிலின் ஓரத்தில் இருந்த ஒரு தூணில் சாய்ந்து கண்களை மூடினேன். 

கோயிலும், சிலைகளும், சுட்டிக் காட்ட எதுவுமில்லா பெருவெளிக்குள் தூக்கி வீசப்பட்டேன்....! 

சாக்தம் வாழ்வு. சிவம் நிறை வாழ்வு. 

வீடு வந்தவுடன் ஒன்று மட்டும் புரிந்தது, ஓட்டம் நிறுத்த வேண்டுமெனில்.... இன்னும் வேகமாக ஓடவேண்டும். ஓட ஆரம்பித்திருக்கிறேன். ஆமாம்... நானும் சாக்தன்தான்...!



தேவா சுப்பையா...

சத்குரு...!

$
0
0

பரந்து விரிந்த இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு புள்ளியாய் ஜனித்து தனித் தனி உடம்புக்குள் வியாபித்து நின்று கொண்டு உலகத்தின் மையமாய் தன்னைக் கருதி நகரும் இவ்வாழ்க்கையின் மையம் என்று ஒன்றும் கிடையாது....

என்றாலும்....

குருநிலை என்பது ஒரு கற்பனை மையம். எதுவமற்ற தன்மைக்கு, அடையாளம் இல்லாத ஒன்றுக்கு ஒரு அடையாளம் வைத்துக் கொண்டு நகரும் சுவாரஸ்யம். இல்லை என்பதை சொல்லும் ஒரு விசயத்தை, இல்லாமலேயே போவோம் என்ற உண்மையோடு வாழும் சத்தியத்தைப் பற்றிக் கொள்ளுமொரு தந்திரம். மனிதர்களாய் இருக்கும் போது இன்னொரு மனிதனே இந்த தந்திர உபாயத்தை சரியாகச்  செய்ய உதவ முடியும். குருநிலை என்பது இன்னொரு மனிதராய்த்தான் இருக்க வேண்டும் என்று யாதொரு நிர்ப்பந்தமும் இல்லை. ஒரு மலையாய் இருக்கலாம். நெருப்பாய் இருக்கலாம். சிலையாய் இருக்கலாம். பரந்து விரிந்த வான் வெளியாய் இருக்கலாம்... ஏன் இன்னும் சொல்லப் போனால் ஒன்றுமில்லாத அந்த பேருண்மைக்குள் கூட்டிச் செல்லும் வேறு எதுவாய் வேண்டுமானாலும் இருக்கலாம்....

அது பின்பற்ற விரும்பும் மனிதரின் பக்குவத்தை பொறுத்த விசயம் என்றாலும் இன்னொரு மனிதர் நமக்கு குருவாய் அமைவது சுகம். புலன்களால் இயங்கிக் கொண்டிருக்கும் அந்த மனிதர் சத்தியத்தை, சாந்தத்தை, பேரமையில் லயித்துக் கிடந்து அந்த உண்மைக்குள் நாம் எப்படி வரவேண்டும் என்று தன் வார்த்தைகளாலும் செய்கையாலும், ஆட்டத்தாலும், பாட்டத்தாலும் கொண்டாட்டத்தாலும் விவரித்துக் கொண்டே இருக்கிறார். ஒரு பேராசிரியர் போல வாழ்க்கையின் எல்லா பக்கத்தையும் விவரித்துக் கொண்டே செல்லும் அந்த மனிதர் எந்த வகையிலும் தன்னை சக மனிதர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொள்ள விரும்புவதே இல்லை. சுற்றி இருக்கும் மனிதர்களின் போற்றலும் தூற்றலும் அவர்களை ஒன்றும் செய்வதுமில்லை. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் போதனை செய்ய விரும்புவது என்று ஒன்றுமே இல்லை. கேள்விகள் இல்லாத இடத்திற்கு அவர் நம்மை தள்ளி விடவே எப்போதும் முயல்கிறார்.

ஆன்மீக தத்துவங்களை இங்கும் அங்கும் தேடித் தேடி அலைந்து கொண்டிருந்த என் பெரும் தேடலில் குரு என்று யாரையும் மனதால் வரிந்து கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொருவர் ஒவ்வொரு திறப்புக்களை எனக்கு கொடுத்தார்கள். பல நேரங்களில் சூழல் எனக்கு குருவாயிருந்தது. சூழல்களையும், அனுபவத்தையும் குருவாய் மையப்படுத்திக் கொண்டுதான் பெரும்பாலும் நான் நகர்ந்திருக்கிறேன். இது எனக்குள் நானே மூழ்கி மூழ்கி, ஒவ்வொரு சுவராய் போய் மோதி அடிபட்டு பின் இது வழியல்ல என்று வேறு வழி நோக்கி நகர்வதைப் போன்றது. இந்தப் பயணம் சுவாரஸ்யமானது என்றாலும் இது முழுக்க முழுக்க நம் சூழலை மையப்படுத்தியே நகரவேண்டிய நிர்ப்பந்தத்தை எனக்கு கொடுத்தது. சூழல் என்பது ஒரே எண்ண ஓட்டத்தோடு எப்போதும் இருப்பது கிடையாது ஆதலால்....புறச் சூழலுக்கு ஏற்றார் போல தாளம் எனக்குள் தப்பிப் போனதும் உண்டு.

என்ன இருக்கிறது இங்கே? இறப்பதற்கு முதல் நிமிடம் வரை பொருள் தேடி ஓடும் மிருக வாழ்க்கை வாழ எனக்கு எதற்கு மனித தேகம்? சத்தியம் எதுவென்று சுட்டிக்காட்டுமொரு ஆன்மாவைக் கொண்டவன் நான் தவறு என்று தெரிந்தும் எப்படி லெளகீக ஆதாயத்துக்காக ஒரு மனிதரை நான் ஆதரிக்க முடியும்? கடவுள் வழிபாட்டினை பெருமையாய் பேசிக் கொள்ளும் ஆன்மீக முற்றல்கள் எனக்கு எப்படி குருவாக முடியும்? காழ்ப்புணர்ச்சிகள் கொண்ட மனிதர்களும், தன்னை மற்றவரிடம் இருந்து மேலானவராய்க் காட்டிக் கொள்ள விரும்பும் மனிதர்களையும் நான் பின்பற்றினால் வேறு ஒரு மனிதருக்கு நான் கதாநாயக வடிவம் கொடுத்து ரசிக மனோபாவத்தில் அல்லவா கைதட்டி போற்றலையும் தூற்றலையும் செய்ய வேண்டும்.

எனக்கு மட்டுமே சக்தி இருக்கிறது. நான் உங்களை விட சிறப்பானவன் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவரை எப்படி நான் குருவாய் ஏற்றுக் கொள்ள முடியும்? நான் எந்த கட்டுப்பாடுகளுக்குள்ளும் போக விரும்பாதவன் ஆதலால் நிறைய அமைப்புகளை, வழிமுறைகளை, காலை மாலை வழிபாடுகளை, நிர்ப்பந்திக்கப்பட்ட மதம் சார்ந்த கோட்பாடுகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் ஒரு சுதந்திரப் புருசன். விதிமுறைகளுக்குள் வாழ முடியாத ஜனனம் என்னுடையது. என்னை பேருண்மைக்குக் கூட்டிச் செல்லும் குருவே எங்கிருக்கிறீர் நீர்? உம்மைச் சுற்றி கோடி பேர்கள் இருந்து கொண்டு புகழ்பாடுவது போல என்னால் இருக்க முடியாது? ஆனால் மானசீகமாய் என்னை உங்களுக்குச் சமர்ப்பணம் ஆக்கிக் கொள்வேன். உங்கள் வார்த்தைகள் என்னை வழிநடத்தட்டும். உங்கள் ஞான வெளிச்சத்தில் எனக்குள் இருக்கும் அஞ்ஞான இருட்டு அகலட்டும். புறத்தில் கதாநாயகத் துதி செய்யும் மனோபாவம் அற்ற எந்த வசீகரமும், புனைவுமற்ற கரடுமுரடான பாறை நான். என்னை இப்படியே தூரத்தில் நிறுத்தி வைத்து உம்முடைய மெளனத்தால் எனக்கு தீட்சை கொடும் குருவே...

என்னை ஏன் இதைச் செய்யவில்லை, அதைச் செய்யவில்லை என்று கேள்விகள் எதுவும் கேட்காமல் ஒரு சிறுபிள்ளையாய் பெரு மைதானத்தில் ஓடச் செய்யும் ஐயனே. எனக்கு ஏற்படும் இடர்ப்பாடுகளை எனக்கு பாடமாக்கு...., என் காயங்களை ஆழப்டுத்து, வலிகள் இரணமாய் என் உயிர் வரை பாயட்டும். வலித்து வலித்து அதில் லயித்து லயித்து நான் மீண்டெழுந்து கொள்கிறேன். என்னை வழி நடத்துவது உமது மெளனமாய் மட்டும் இருக்க வேண்டும். நான் விழுந்தவுடன் தூக்கி என்னை எழுப்பி விட உமது கரங்கள் எனக்கு வேண்டாம் என் குருவே...., ஆனால் எழுந்து நிற்கும் என் திடத்தில் சூட்சுமமாய் நீ கரைந்து நில். இந்த பூமியின் ஏதோ ஒரு பாகத்தில் நீங்கள் வசித்துக் கொள்ளுங்கள் என் குருவே, உங்களை பார்க்காமலேயே கூட நான் இருந்து கொள்கிறேன். உங்கள் அர்த்தம் இல்லாத, அழுத்தம் இல்லாத, எதுவுமற்ற வார்த்தைகள் என்னை வழி நடத்தட்டும். இந்த பூமிப்பந்து முழுதும் நீங்கள் வீசி எறியும் அன்பு பூக்கள் என் மீது விழும் பாக்கியம் இருந்தால் மட்டும் போதும் எனக்கு...

அப்படியான குருவை நான் தூர இருந்து பார்த்தாலே போதும். நான் என்னும் என் தன்முனைப்பை, எனது அன்பை, எனது காதலை, அவர்பால் நான் கொண்ட நேசத்தை, அவரிடம் சமர்ப்பித்து விட்டு, அவரின் இருப்புத்தன்மை எனக்கு போதித்திருக்கும் சத்தியத்தை மட்டும் எடுத்துக் கொண்டு நன்றியுணர்சியோடு நான் நகர்ந்து விடுவேன். இப்படியெல்லாம் எனக்குள் எண்ணியிருந்தது போல ஒரு குரு எனக்கு கிடைப்பார் என்று நான் முன்பு நம்பவில்லை. காரணம், துதி செய்தலை, சீடர்கள் குருவிடம் அடிபணிந்து நிற்கும் வழமையை, எங்கு சென்றாலும் குரு நாமம் சொல்லி அதை எல்லோருக்குள்ளும் கொண்டு செல்ல முயலும் ஒரு பரப்புதலை அல்லது எப்போது பார்த்தாலும் குரு என்ற அடைப்புக்குள் நின்று கொண்டு பரந்து விரிந்த பேருண்மையை ஒரு மட்டுக்குள் வைத்து பேசும் போக்கினைத்தான் பெரும்பாலும் நம் சமூகம் கொண்டிருக்கிறது.

என்னால் அப்படி இருக்க முடியாது. வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு சத்சங்க கூட்டம் இருக்கிறது வராமல் இருந்து விடாதே அப்படி வராமல் போனால் நல்லதல்ல என்று போதனைகள் செய்யும், மிரட்டும், என்னை ஒரு அடைப்புக்குள் வைக்கும் எந்த இடத்திலும் என்னால் இருக்க முடியாது. ஒருவேளை அப்படி அடைப்புக்குள் கட்டுப்பாட்டுக்குள் விதிமுறைகளுக்குள் இருக்க வேண்டும் என்பது குருவாக்கு அது நல்லது என்று என் மூளை சலவை செய்யப்பட்டாலும் நான் மீண்டும் எழுந்து நிற்பேன். ஏனென்றால் என்னால் ஒரு மனிதரை பிரபஞ்சமாய் காண முடியாது. மிகைப்பட்ட பேருக்கு அது எளிய வழி. 

இது எளிய வழி என்றாலும் இதில் இருக்கும் ஒரு ஆபத்து என்னவென்றால் ஹீரோ வொர்ஷிப்பிற்குள் மாட்டிக் கொண்டு அதற்கு மேல் செல்ல முடியாமல் கடைசிவரை சீட மனோபாவத்தில் கற்றுக் கொடுக்க ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணத்தோடே துவைதியாகவே மரித்துப் போவது ஆனால் அடிப்படையில் நான் அத்வைதி. அத்வைதமே சத்யம் என்று உணர்வுப் பூர்வமாய் நம்புபவன். சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுக்க நமக்கு ஒருவர் வேண்டும். சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டவுடன் கற்றுக் கொடுத்தவர் மீதிருக்கும் அன்பு மாறாது. அவரைப்பற்றி நாம் எப்போதும் நினைப்போம். அவர் இல்லை என்றால் என்னால் சைக்கிள் ஓட்டியிருக்கவே முடியாது என்றில்லை என்றாலும் அவரைப் போல சொல்லிக் கொடுத்திருக்க வேறு யாராலும் முடியாதுதான். எவ்வளவு வாஞ்சையாய், எவ்வளவு அன்பாய், துல்லியமாய், தலை தடவி, நெஞ்சு தடவி எனக்கு சைக்கிள் சொல்லிக் கொடுத்தார் அவர்.

சைக்கிள் தன்னிச்சையாய் ஓடிக் கொண்டிருக்கும் நான் ஓட்டிக் கொண்டிருப்பேன். எனக்கு கற்றுக் கொடுத்த குரு என்னுள் அன்புப் பிரவாகமாய் இருக்க நான் பெரும் நன்றியுடன் இருப்பேன் அப்போது. இது இது இது.... எனக்கு வாய்த்திருக்கிறது இப்போது. இங்கும் அங்கும் தடுமாறி கற்று, விழுந்து, எழுந்து எந்த உறுத்துதலும் இல்லாமல் என்னுள் வானத்திலிருந்து இறங்கும் பனியைப் போல, உடல் தழுவிச் செல்லும் தென்றலைப் போல, இனிமையான இசை கொடுக்கும்  அலாதியான உணர்வு போல, கூடலின் உச்சத்திற்குப் பிறகு கிடக்கும் பிரஞ்ஞைநிறை அனுபவம் போல, இந்தத் தேதி, இந்த நாளில் , இந்த மணியில், இந்த நொடியில், இந்த கணத்தில் இந்த பூ பூத்தது என்று  எப்படி வரையறுத்துக் கூற முடியாதோ அப்படி....

என்னுள் பரிபூரணமாய் மலர்ந்திருக்கிறார்...சத்குரு ஜக்கி வாசுதேவ்.

சூட்சும தீட்சை பெற்ற பேறு பெற்றேன். அகம் ஆய்ந்து கொண்டிருக்கையில் வாஞ்சையாய் தலை தடவி கனிவாய் சிரித்த அவரின் முகம் கண்டேன். புலனுணர்வுக்கும் அதற்கும் யாதொரு தொடர்பும் கிடையாது. கட்டுப்பாடுகளற்ற பெருவெளியில் நீ எப்படி வேண்டுமானாலும் சுற்றித் திரி. பிரபஞ்ச நியதியை மட்டும் நினைவில் கொள் என்று அவரது விழிகள் எனக்கு சொன்னதே அன்றி வாய் திறந்து அவர் என்னிடம் எதுவும் பேசவேயில்லை. நிர்ப்பந்திக்காத அன்பு பேரின்பம். தொடர்பு இல்லாத தொடர்பு சுகமானது. வார்த்தைகளில்லாத உரையாடல் பெருங்களிப்பானது. பாலகுமாரன் என்னும் எழுத்துப் பிரவாகம் என்னை வழிநடத்திச் சென்றது. இதோ இன்று ஏதோ ஒரு பெருங்கடலில் விழுந்து கிடக்கும் நிலையில் விழிகள் பெருகி ஓட....

இப்போது பிறந்த பிள்ளையாய் வாஞ்சையோடு சத்குருவின் ஆட்காட்டி விரலை என் பிஞ்சுக் கைகளால் பற்றிக் கொள்கிறேன்.


சத்குருவே நமஹ...!!!!!!!!! குருவருள் என்னை இனி வழிநடத்தும்.....



தேவா சுப்பையா...




நிலா... நீ வானம் காற்று மழை....!

$
0
0

வார்த்தைகள் எல்லாம் தொலைந்து போய்விட்டன. உனக்காக எழுதிய என் கவிதைகளிலிருந்து சொற்களை எல்லாம் பிடுங்கி எடுத்து வானில் பறக்க விட்டு விட்டேன். உன்னை பற்றி நினைப்பதையும் குறைத்துக் கொண்டு விட்டேன். அழுத்தமான அழுகைக்குப் பிறகு ஓய்ந்து கிடக்கும் விழிகளோடும் சோர்ந்து போன இமைகளோடும் அடிக்கடி வானத்தில் அலைந்து கொண்டிருக்கும் மேகங்களை வேடிக்கை  பார்ப்பது என் வாடிக்கையாகி விட்டது. என் வீட்டுத் தோட்டத்தில் நேற்று மொட்டு விட்டிருந்த ரோஜா இன்று காலை விரிந்து பூத்திருந்ததைப் பார்த்தவுடன் சட்டென்று வந்த உன் ஞாபகத்தை சுமந்து கொண்டிருக்க முடியாது என்று இதோ வழக்கம் போல எழுத ஆரம்பித்து விட்டேன்.

இந்த உலகின் எந்த மூலையில் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்று எனக்கு தெரியாவிட்டாலும் ஏதோ ஒரு கணத்தில் குழந்தையாய் உன் நினைவுகள் ஓடி வந்து என்னைக் கட்டிக் கொள்கின்றன. அவற்றை அள்ளி எடுத்து என் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தபடியே விழிகள் கலங்க உன்னை பற்றி எண்ணத் தொடங்குகிறேன். மாலை வேளைகளில் நாம் நடந்து சென்ற நகரத்தின் தெருக்களில் நான் இப்போதும் நடந்து செல்வதுண்டு. நாம் அமர்ந்திருந்த பூங்காக்கள், உணவருந்திய இடங்கள், ஒரு கோப்பை காபியோடு  ஒரு நாளின் பெரும்பகுதியைக் கடத்திய காஃபி ஷாப்கள், ஷாப்பிங் மால்கள் என்று எல்லா இடத்திற்கும் தனியே செல்லும் போதெல்லாம் கடந்த காலம் என் வீட்டு வாசலில் வசந்த காலத்தில் பூத்துக் குலுங்கிய கொன்றை மரத்தின் மலர்கள் போல என் முன் கொத்து கொத்தாய் மலர்ந்து கிடக்கும்.

எப்படியோ இந்தத் திருமணங்கள் தோற்றுப் போனாலும் காதல் மட்டும் கடைசி வரை தோற்காமல் கடுமையான கூட்டத்திலும் உயிரைப் பற்றிய கவலையின்றி புட் போர்ட் அடிக்கும் ஒரு கல்லூரி மாணவனின் உற்சாகத்தோடு என்னையும்  தொற்றிக் கொண்டேதான் வருகிறது. ஏதோ ஒன்றை உன் நினைவுகளோடு எழுதிக் கொண்டே இருக்கும் இந்த சுகத்தை திருமண பந்தம் கொடுத்திருக்குமா என்று எனக்குத் தெரியாது. ஒருவேளை சுதந்திரம் என்ற பெயரில் அது என்னை விதிமுறைகள் நிறைந்த ஏதோ ஒரு உலகத்திற்குள் தள்ளிவிட்டு கணவன் என்ற பெயரில் உரிமைகளைச் சுமக்கும் பொதி மாடாய் கூட ஆக்கி இருக்கலாம்.

காதலாய் நீ ரசித்த என் கோபம் திருமணத்திற்குப் பிறகு உனக்கு எரிச்சலாகியிருக்கலாம். எப்போதும் ஒரே திசையில் பயணிக்காத என் சுபாவம், நிமிடத்துக்கு நிமிடம் இலக்கில்லாமல் பறக்கும் என் எண்ணப்பறவைகள், பொருளாதாயம் பற்றி யோசிக்காத என் கவிதைப் புத்தி, எப்போதும் கனவில் மிதக்கும் என் ஆசைகள், என்று எல்லாமே உன்னை நரகத்தில் தள்ளி இருக்கலாம். மின்சாரம் இல்லாத இரவினில் கேண்டில் டின்னர் சாப்பிட்டதாய் சந்தோசப்பட்டுக் கொள்ளும் என் மகிழ்ச்சி உனக்கு பைத்தியக்காரத்தனமாய் தெரிந்திருக்கலாம். மிதமிஞ்சிய விவரிப்புகளையும், அளவுக்கு அதிகமான பெருமிதங்களையும் நான் கண்டும் காணாத மாதிரி செல்வது உனக்கு எரிச்சலை வரவைத்திருக்கலாம்...

காமத்தை இருட்டில் பிணம் தழுவும் நிகழ்வு போல கடந்து செல்ல விரும்பாத என் நிதானம்  உன்னை எரிச்சல் படுத்தியும் இருக்கலாம். நான் வாழ்க்கையை வாழ்க்கையாக வாழ விரும்பி அதை காதலோடு நகர்த்திக் கொண்டு போவதற்கு என்னுடன் யாருமே இல்லாமல் இருப்பதுதான் நல்லது என்று இப்போது உணரும் அதே வேளையில், ஒரு வேளை நீயும் என்னைப் போலவே ஒரு பைத்தியக்காரத் தன்மையோடு இந்த வாழ்க்கையை அணுகி இருப்பாயோ என்றும் யோசித்துக் கொள்கிறேன். முழுக்க முழுக்க இந்த வாழ்க்கையை நேர்கோட்டில் அணுகக் கூடாது என்று நான் சொன்னபோது நீ அதை ஆமோதிக்கவும் செய்திருக்கிறாய். 

நான் உன்னை நேசிப்பதற்கு  உன்னுடைய மெளனம் காரணமாயிருந்தது. நாம் பிரிந்து போவதற்கு இந்த சமூகம் காரணமாயிருந்தது. பெற்றவர்களே பிள்ளைகளின் வாழ்க்கையை தீர்மானிக்க வேண்டும் என்ற நம் சமூகப் பார்வையில் எனக்கு தவறிருப்பதாக தெரியவில்லை. அதே நேரத்தில் பிள்ளைகளுக்குப் பிடித்த துணையை ஏன் தன் சாதிக்குள் மட்டும் தேடிக்கொள்கிறார்கள் என்ற வெறுப்புதான் என்னிடம் மிகுந்திருக்கிறது. உனது சாதி உன் பெற்றோரின் மானமாயும் உன்னிடம் பாசமாயும் வேசமிட்டுக் கொண்டது. வேசங்கள் என்ன செய்துவிடும் என் சுயத்தை...? இதோ சுதந்திர வானில் பறக்கும் என் திருப்தியைக் கொடுத்துவிடுமா வாழ்க்கை புழுதியில் கட்டுப்பாடு கோடுகள் போட்டு வாழும் பூச்சிகளுக்கு?

திருமணம் புதுப்பெண்ணை வேலை ஏவும் மாமியாரைப் போன்று காதலை அதிகாரம் செய்து ஓரமாய் உட்கார வைத்து விட்டு அடுத்தவருக்காக நம்மை வாழச் சொல்லி பயிற்றுவிக்கிறது. இன்னும் சொல்லப் போனால் திருமணம் புத்திசாலித்தனத்தால் உருவாக்கப்பட்டது.. ஆனால் வாழ்க்கையோ மிகவும் பைத்தியக்காரத்தனமானது. நேர்கோட்டில் சீராய் எல்லாம் எப்போதும் நிகழும் என்று நம்மால் கூறவே முடியாது. பிரபஞ்ச பெருவெடிப்பிலிருந்து இன்றைய காலம் வரை எது எப்போது நிகழும் என்று வரையறுத்து கூறவே முடியாது. இயற்கையின் உன்மத்தமான போதையை பதிவு செய்யும் வேலைக்காரனாய் இருக்கிறது இன்றைய அறிவியல். எது நிகழ்கிறதோ அதை நிகழ்ந்த பின் ஆய்வு செய்யும் அறிவியல் பிரபஞ்ச கிறக்கத்தை வேடிக்கை பார்க்கும் ஒரு சிறு துறும்பு. ஒரு நிகழ்வு இடமாய் செல்வது போல சென்று, வலமாய் திரும்பி மேலெழும்பி பறந்து சென்று பின் கீழ் விழுந்து மொத்தமாய் மறைந்து போய்விடுவதற்கு எல்லாம் சாத்தியக்கூறுகளும் இங்கே இருக்கின்றன.

கற்பனைகளில் ஆசைகளைத் தேக்கிக் கொண்டு இங்கே எனக்கு நீ.. உனக்கு நான் என்று வாழ்வது சுகம் என்றாலும் அதை ஒரு வட்டத்துக்குள் நிறுத்தி வைத்து செய்வது என்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது? பூமி சூரியனை தன் இஷ்டப்படிதான் சுற்றி வருகிறது. அது அப்படி சுற்றுவதற்கு முன்பே யாரோ இங்கே ..."ஏய் பூமியே நீ சரியாய் 365 1/4 நாட்களுக்குள் சுற்றி வரத்தான் வேண்டும் ” என்று ஆணையிட்டிருக்க முடியாது.  அப்படியே ஆணையிட்டு சுற்றி வா என்றாலும் சொல் பேச்சைக் கேட்டு சுற்றிவர பூமி என்ன மனிதர்களைப் போல லோகாதாய லாபங்களை கணக்குப் போட்டு கள்ளத்தனமாய் செயல்கள் செய்யும் வக்கிர மனமா கொண்டிருக்கிறது?


ஒருவேளை என்னோடு நீயிருந்திருந்தால் பூமி சூரியனைச் சுற்றிவருவது போல தன்னிச்சையாய் இருந்திருக்கும் நமது வாழ்க்கை.. சட்டென்று கோடாணுகோடி வருடங்கள் கழிந்து சூரியனின் ஈர்ப்புவிசையிலிருந்து விடுபட்டு ஆனந்தமாய் எங்கோ மோதி வெடித்துச் சிதறுவது போல நானும் நீயும் சுகமாய் இறந்து போயிருந்திருக்கலாம். காதல் காதலைத்தான் போதித்தது. இப்போதும் காதலைத்தான் போதித்துக் கொண்டிருக்கிறது.  அது ஒருபோதும் திருமணத்தைப் போதித்திருக்கவில்லையாதலால்...

காதலால் நான் நிரம்பிக் கிடக்க உன்னைப் பற்றிய நினைவுகளே எனக்கு போதுமாயிருக்கிறது பெண்ணே...!!!!

வாஞ்சையாய் எந்த நோக்கமுமின்றி பிரபஞ்ச வெளியில் மிதக்கும் பூமிப்பந்தை போல உன் நினைவுகளை ஏந்திக் கொண்டு நானும் மிதந்து கொண்டிருக்கிறேன் இந்த பூமிப் பந்தில்.... 

என் கோடைக்காலங்களில்
நான் குளிரினை அனுமதிப்பதேயில்லை
குளிர் காலங்களில் 
வெயிலினை இம்மியேனும் நான் அனுமதிக்காததைப் போல;
காற்றடிக்கும் காலங்களில்
மிதக்கும் ஒரு இறகு போல 
இங்குமிங்கும் நான் அலைகையில்
எனக்கு குளிரின் நியாபகமோ அல்லது
வெயிலைப் பற்றிய கனவோ வருவதில்லை...!
ஏன் இயங்கிக் கொண்டிருக்கிறது
இந்த முழுப் பிரபஞ்சமென்ற கேள்வியை
உடைத்து பார்த்தால்தான் தெரியும்
என் காதலுக்கும், இந்த வாழ்க்கைக்குமிருக்கும் தொடர்பு..!

எழுதுவதை நிறுத்திவிட்டேன். யாருமற்ற இந்த இரவின் தனிமை கொஞ்சம் சப்தமாகவே என்னை  அழத் தூண்டியது. இல்லாமையின் பேரமைதிக்குள் இருக்கும் ஒரே ஒரு வஸ்து காதல் அந்த காதலை நெஞ்சோடு அணைத்தபடியே தேம்பிக் கொண்டிருந்தேன்...


அவள் உறங்கிக் கொண்டிருக்கலாம்.



தேவா சுப்பையா....




கணக்குல புலி...!

$
0
0

கணக்குன்னாலே நமக்கு ஏழாம் பொருத்தம். தர்க்க ரீதியா ஏன் எதுக்குன்னு விளக்கம் கொடுக்க முடியாத எந்த விசயமா இருந்தாலும் என் மூளைக்குள்ள அவ்ளோ சீக்கிரம் ஏறாது. ட்ரிக்காணாமேட்ரியும், அல்ஜிப்ராவும், தேற்றமும், மறுதலையும் மண்ணாங்கட்டியையும் கண்டாலே எனக்கு எப்பவுமே அலர்ஜி. இந்த லெட்சணத்துல ப்ளஸ் ஒன் படிக்கும் போதே ப்ளஸ் டூவுக்கு ட்யூசன் வேற. க்ளாஸ்ல எக்ஸ்ப்ரஸ்  வேகத்துல பாடம் நடத்துறப்ப நம்பியார், பி.எஸ். வீரப்பா கணக்கா மிரட்டுற வாத்தியாருங்க எல்லாம் இன்டிவிஜுவலா ட்யூசன் போறப்ப அவுங்க ட்யூசன் க்ளாஸ்ல எம்.ஜி.ஆரா மாறி "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே..."ன்ற ரேஞ்ச்சுக்கு கொஞ்சிக் குலாவுவாங்க. மாசக்கடைசியில ட்யூஸன் பீஸ் லேட்டாயிடுச்சுன்னா புருசன் மேல கோபமா இருக்குற பொண்டாட்டி மாதிரி மூஞ்ச தூக்கியும் வச்சுக்கிடுவாங்க....!

விஜயகுமார் சார்கிட்டதான் நான் கணக்கு ட்யூசன் போனேன். பிசாசு எங்க இருந்தாலும் அது பிசாசுதானே...? அது க்ளாஸ் ரூம்ல மட்டும்தான் பிசாசா என்ன? எனக்கு ட்யூசன்லயும் கணக்கு பிசாசாதான் தெரிஞ்சுது. இந்தக் கொடுமையில வீட்ல வேற டாக்டர் ஆகலேன்னா கூட பரவாயில்லை எப்டியாச்சும் இன்ஜினியர் ஆகிடுவீல்ல..????!!!!!! அதுவும் கூட ஆகலேன்னா நீ எதுக்கும் லாயக்கு இல்லேன்னு ஒரு இக்கு வச்சே பேசிட்டு இருப்பாங்க. நானும் காலையில அஞ்சரை மணிக்கு  SPT பஸ்ஸ பிடிச்சு பட்டுக்கோட்டை போயி ஆறரை டூ ஏழரை பிஸிக்ஸ்க்கும், ஏழரை பிடிச்ச கணக்குக்கு ஏழரை டூ எட்டரைக்கும் ஓடி முடிச்சுட்டு அப்புறம் லபோ திபோன்னு ஸ்கூல்குள்ள போவேன். சாயந்திரம் நாலரை டூ அஞ்சரை கெமிஸ்ட்ரி, அஞ்சரை டூ ஆறரை பயலாஜி ட்யூசன். காலையில வெள்ளன எழுந்திரிச்சு ரேஸ்ல ஓடுற மாதிரி ஓடிட்டு க்ளாஸ்ல போய் உக்காந்து எங்க பாடம் கவனிக்கிறது. கிளாஸ் முழுக்க நல்லா படிக்கிற பசங்க ஒரு 10 பேரும் நல்லா படிக்கிற மாதிரி நடிக்கிற என்னை மாதிரி மிச்சப் பேரும் இருப்போம். எல்லோருக்குமே  ஒரே டாக்டர், இன்ஜினியர் கனவுதான்.

பப்ளிக் பரீட்சை அன்னிக்கு முதல் நாள் என்னோட எக்ஸாம் ஹாலுக்குள்ள நுழைஞ்சப்பவே என்னோட இன்ஜினியர் கனவு தடதடன்னு ஒடைஞ்சு விழுந்து மண்ணோடு மண்ணாகி சாம்பலாப் போச்சு. பின்ன என்னா சார்? எக்ஸாம் ஹாலுக்குள்ள என்ட்டர் ஆகும் மெயின் டோர் கடந்து உள்ள போனா டோர் ஓரமா முன்னாடி க்ளாஸ் போர்ட ஒட்டின டெஸ்க் என்னோடது. எனக்கு முன்னாடி சுவர்தான். எனக்குப் பின்னால பாதை அதுக்கப்புறம் வேற ஒரு கண்டத்துல உட்காந்து இருக்க மாதிரி அடுத்த பையன்.  எனக்குன்னே போட்டு வச்சமாதிரி இருந்த அந்த டெஸ்க் மேலதான் என் விதி டிஸ்கோ ஆடிட்டு இருந்துச்சு. சரி கருமம் தொலையிது சைட்ல எவனாச்சும் உருப்படியான ஆளு இருந்தா பாத்து எழுதியாச்சும் கட் ஆஃப் மார்க்காவது எடுத்து செல்ஃப் பினான்ஸ் காலேஜ்ல பி.இ சேந்துடலாம்னு லெஃப்ட்ல திரும்பினா அங்க என்ன பாத்து ஈ..ஈ..ஈ..ன்னு இளிச்சுக்கிட்டு இந்திரஜித். அடக் கருமந்திரம் புடிச்சவனே உன்னிய ஏன்டா என் கூட போட்டாய்ங்க உன் தலையில ஒரு ரூபா வச்சு பட்டுக்கோட்டை மணிக்கூண்டுல ஏலத்துக்கு விட்டா கால்ரூபாய்க்குதனடா உன்னைய கேப்பாய்ங்க...உன்னிய வச்சு நான் என்னடா பண்றதுன்னு யோசிச்சுட்டே சோகமா இந்திரஜித்த பாத்தேன்.

” ஆளு....கொஞ்சம் டவுட் கேட்டா எனக்கு காட்டு ஆளு...., நீ நல்லா படிப்பேன்னு எனக்குத் தெரியும் ப்ளீஸ்(???!!!!!)....” ன்னு என்னை பாத்து கெஞ்சுன இந்திரஜித்த பாத்தா எனக்குப் பாவமா தெரிஞ்சுது. என் கெட்அப்ப வச்சு என்னைய நம்பிட்டு இருக்கானே நாதாறின்னு உள்ளுக்குள்ள ஒரு சந்தோசம் வந்தாலும், பில்டப் எங்கயாச்சும் பரீட்சை எழுதுமா? கெட்அப் வந்து மார்க் வாங்குமா? தென்னாடுடைய சிவனே இது என்ன சோதனை, என்னை எப்டியாச்சும் ப்ளஸ் டூ பாஸ் பண்ண வைக்க வேண்டியது உன் பொறுப்புன்னு வேண்டிக்கிட்டே தமிழ் பரீட்சைய எழுதினேன். மொதல்ல உயிரோட இருக்கணும் அப்புறம்தான் மத்த விசயம் எல்லாம். அது மாதிரி பி.இ ஆவது புடலங்கையாவவாது எப்டியாச்சும் பாஸ் பண்ணினா சரிதான்னு நினைச்சு தமிழ் ஃபர்ஸ்ட் பேப்பரையும் செகண்ட் பேப்பரையும் எழுதி முடிச்சேன். தமிழ்ல்லதான் நாம விளையாடுவோமே....அதைப் பாத்து இந்திரஜித் என் அழெகுல மயங்கி ரொம்பவே சந்தோசப்பட்டுட்டான். ” சில்லி சில்லி தமிழ் கேள்விக்கே திணறி நிக்குறியே இந்திரஜித்து, கணக்குப் பரீட்சை அன்னிக்கு நாம என்னடா பண்ண போறோம் நான் பெத்த மக்கான்னு....”  உள்ளுக்குள்ள அழுதுகிட்டே மூக்க உறிஞ்சிக்கிட்ட்டேட் தங்கப்பதக்கம் சிவாஜி கணக்கா கொஞ்சம் ஸ்டடியாவே ரெண்டு பரீட்சையும் எழுதி முடிச்சேன்.

கணக்கு பரீட்சை பத்தி கவலைப்படாதீங்க நான் இருக்கேன்ன்னு விஜயகுமார் சார் ட்யூசன்ல சொன்னதை கேட்ட உடனே ஆபத்பாண்டவா அனாதை ரட்சகா.....பரப் பிரம்மமேன்னு கால்ல விழுந்து சரணாகதி ஆகாத கொறையா அவர் கொடுத்த நாலு மாடர்ன் கொஸ்ஸீன் பேப்பரையும் பொட்ட தட்டுத் தட்டி நடு ராத்திரியில பேப்பரைக் கொடுத்தா கூட கடகடன்னு எழுதிக் குடுத்துடுற அளவு செம்மையா டெவலப் ஆகி இருந்தேன். விஜயகுமார் சார்....இந்த நாலு மாடல் கொஸ்டீன் பேப்பரையும் படிச்சாவன்...200 க்க்கு 190 இல்ல....அப்டீன்னு சொல்லி கொஞ்சம் கேப் விட்டு...எங்களை எல்லாம் பாத்து ஒரு அசால்ட்டா ஒரு லுக் விட்டுட்டு.....

ஏன் சென்ட்டமே எடுக்கலாம்னு மீசைய முறுக்கிட்டு சொன்னப்ப...அடா..அடா...இவரல்லவோ வாத்தியார், இப்படி ஒரு ஆசான் கிடைக்க என்ன தவம் செய்தேன்...யான்னு ஆனந்தக் கண்ணீரே வந்துடுச்சு எனக்கு. விட்றா...விட்றா....நாம எல்லாம் இன்ஜினியர் ஆகாம வேற எவன் ஆவான்ன்னு சொல்லி பி.இ ல என்ன க்ரூப்ல ஜாயின் பண்ணலாம்னு எல்லாம் யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்.

மூன்றாம் பிறை படத்துல கமல் நரிக் கதை சொல்வாருல்ல ஸ்ரீதேவிக்கிட்ட 

” ஹஹஹ நான் ஆண்டவன் அனுப்பிய புருஷன்
ஹஹஹ ஹஹஹ உங்களை ஆள வந்திருக்கும் அரசன்”

அதே டோனோட திமிரா சட்டைக் காலர தூக்கிவிட்டு நடந்துகிட்டு இருந்தேன். ஏன்னா விஜயகுமார் சார் கொடுத்த நாலு கொஸ்ஸீன் பேப்பர் மாடலும் எனக்கு அத்துப்படி. அவரே சொல்லிட்டார் இதை விட்டு வேற கேள்வி கேக்க எவனாலயும் முடியவே முடியாதுன்னு. சோ.. செம்மயா ஒளிமயமான எதிர்காலம் என் கண் முன்னாடி அப்பவே தெரிய ஆரம்பிச்சுடுச்சு. நான் வேற எதையுமே படிக்காம காலையில, நைட்ன்னு நாலு கொஸ்ஸீன் பேப்பர் மாடலயே ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ளான் பண்ணி படிச்சுட்டு இருந்தேன்.

ஒரு நாள் மேகம் இடித்தது, மின்னல் வெடித்தது, காற்று அடித்தது, காடு துடித்தது,  நிலம் அசைந்தது, மழை பொழிந்தது...கணக்குப் பரீட்சையும் வந்தது. இஸ்ட தெய்வம் அத்தனையும் வேண்டிகிட்டு நெத்தி நிறைய திருநீறு குங்குமத்தோட பரீட்சை எழுதப் போற பேனா, பென்சில், ரப்பர், ஜாமிண்ட்ரி பாக்ஸ் இப்டி எல்லாத்துக்கும் விபூதி, குங்குமம், சந்தனம் வச்சு முட்டி, முட்டி மோதி, மோதி சாமி கும்பிட்டு யார்கிட்டயும் பேசாம ஜெகஜோதியா பரீட்சை ஹாலுக்குள்ள நுழைஞ்சேன். பக்கத்துல இந்திரஜித் தெம்பா உக்காந்து இருக்கறத பாத்து எனக்கு ஆச்சர்யம். என்ன ஆளு தில்லா இருக்க? கணக்குடா இன்னிக்குன்னு அவனைப் பாத்து சோகமா கேட்டேன். இந்திரஜித் என்ன பாத்து கண்ணடிச்சு ஆளு இன்னிக்கு உனக்கு டவுட் வந்தா நான் காட்டுறேன்டா நீ கவலைப்படாதன்னு கண்ணடிச்சான்.

என்னாடா சேதின்னு கேட்டதுக்கு, சட்டை காலரை காட்றான் அதுக்குள்ள பிட். பெல்ட்க்குள்ள பிட், சாக்ஸ் குள்ள பிட், பெல்ட் பக்கல்ஸ்க்குள்ள பிட் இப்டி உடம்பு ஃபுல்லா பிட் வச்சுக்கிட்டு ஒரு சூசையிட் பாம்ப் மாதிரியே வந்திருந்தான். எனக்கா சந்தோசம் தாங்கல விஜயகுமார் சார் கொடுத்த நாலு மாடல் கொஸீன் பேப்பர் + இந்திரஜித்தோட பிட்டுகள் மூலமா கிடைக்கப் போற ஸ்கோர்ன்னு....ஒரு அரசியல்வாதி மாதிரி கூட்டணிக் கணக்குப் போட ஆரம்பிச்சேன்....

ஜாக்கு சக்கு ஜஜாக்கு சக்க  ஜாகு சக்க சா....உள்ளுக்குள்ள ராக்கமா கையத்தட்டுப் பாட்டு அதாவே பாட ஆரம்பிச்சுடுச்சு.


கொஸ்ஸீன் பேப்பர வாங்கிப் பாக்குறேன்...கண் எல்லாம் இருட்டிக்கிட்டு தலை சுத்துது எனக்கு. வயிறு ஒரு மாதிரி இழுக்குது . இது 1992ஆம் வருசம் +2 பப்ளிக் எக்ஸாமுக்கு அடிச்ச கொஸ்ஸீன் பேப்பரான்னு எனக்கு ஒரு டவுட் ஏன்னா... அதுல விஜயகுமார் சார் கொடுத்த மாடல் கொஸ்ஸீன்ஸ்ல இருந்து ஒரு புண்ணாக்குமே வரலை...பாவி மனுசா நம்பி கழுத்தறுத்திட்டியேய்யா.....எனக்கு ஜுரம் வர மாதிரி ஆகிடுச்சு....

அடங்கொக்கமக்கா....பி.எ.  இல்லை பி.எஸ்ஸி கூட ஜாயின் பண்ண முடியாது போலயே... மறுபடி கணக்குக்கு மட்டும் அட்டம்ட் எழுதணுமோ? அப்பா வீட்டுக்குள்ளயே நுழைய விடமாட்டாரே...? நினைக்கவே வயித்துல புளிய கரைக்க... டக்குன்னு இந்திரஜித்த பாத்தேன். இந்திரஜித் இருக்கான் அவனை வச்சு ஏதாச்சும் ஒப்பேத்துவோம்  பிட் எல்லாம் நிறைய வச்சு இருக்கான்னு யோசிச்சுட்டு இருந்தப்பவே டக்குன்னு எங்க ஸ்கூல் ஹெச்.எம் தேவாசீர்வாதம் சார் எங்க ஹாலுக்குள்ள வந்துட்டாரு. பயலுவளா ஒழுங்க மரியாதையா பரீட்சை எழுதணும்னு ஃபார்மலா சொல்லிட்டு ஹால விட்டு வெளில போனவரு மறுபடி திரும்பி வந்து.....

ஏண்டா இந்திரஜித்து நீ இந்த ஹால்லயா எழுதுற...? நீ பிட் இல்லாம வரமாட்டியடா எங்க இங்குட்டு வா....அப்டீன்னு கூப்ட்டு...இந்திரஜித்த குனிய வைச்சு, நிமிர வச்சு,  தலைகீழா நிக்க வச்சு, பெல்லட்ட அவுக்க வச்சு செக் பண்ணினா......ச்ச்சும்மா மழை மாதிரி கொட்டுது பிட்டு.  ஒரு பிட்டு விடாம அம்புட்டையும் எடுத்துட்டு இந்திரஜித்த குனிய வச்சு மடேர்....மடேர்....மடேர்ன்னு முதுகுல நாலு சாத்து சாத்திட்டு...” பள்ளிக்கூடம் பேரக் கெடுக்க வந்தியா நாயி மரியாதையா பரீட்சை எழுதுன்னு” சொல்லிட்டுப் போய்ட்டாரு.

இரண்டு செகண்ட்ல எல்லாம் நடந்துருச்சு. என் பக்கத்துல பல்லு புடுங்கின பாம்பா இந்திரஜித். அடப்பாவி மகனே ராஜா மாதிரி வந்தியேடா காலையில இப்டி பஞ்சர் ஆன ட்யூப் மாதிரி கிடக்கியேடான்னு என் விதிய நொந்துகிட்டு இனி நானாச்சு இந்த கொஸின் பேப்பராச்சு பரீட்சையாச்சுன்னு முடிவு பண்ணி ஏதோ எழுத ஆரம்பிச்சப்ப.....

” இந்த நாலு கொஸ்ஸீன் பேப்பர் மாடலையும் சரியா ப்ராக்டீஸ் பண்றவன்...200க்கு 190 இல்லை...இல்லை.......ஏன் சென்டமே எடுக்கலாம்..”னு விஜயகுமார் சார் சொன்னது காதுல அசரீரியா கேட்டுச்சு.....! பயபுள்ள ட்ட்யூசன் பீஸ்ஸுக்காக ஓவர் பில்டப் கொடுத்து நம்மள கவுத்திப்புடுச்சேன்னு....சோகமா ஏதோ கொஞ்சம் நஞ்சம் தெரிஞ்ச கேள்விகளா பாத்து மெல்ல மெல்ல பாஸ்மார்க் நோக்கி நான் முன்னேறிக்கிட்டு இருந்தேன். அப்போதைக்கு ஒரே இலட்சியம் 70 மார்க் எப்டியாச்சும் எடுத்துடனும் அவ்ளோதான்.

ஆளு ...ஆளு எனக்கும் காட்டு ஆளுன்னு எனக்குத் தெரியாத கேள்விக்கு எல்லாம் இந்திரஜித் என்னை நோண்டிகிட்டே இருக்கத பாத்த ஹால் சூப்பர்வைசர் இந்திரஜித்த கூப்டு பின்னால ஒரமா ஒரு டெஸ்க்ல ஒக்கார வச்சுட்டார். இனிமே எல்லா பரீட்சையும் நீ இங்க இருந்துதான் எழுதணும்னு ஹெச். எம்கிட்ட சொல்றேன்ன்னு சொல்லி சொன்னதை செஞ்சும் புட்டாரு. இந்திரஜித்துக்கு அது வரமா சாபமான்னு எனக்கு அப்போ புரியல.அதுக்கப்புறம் ரிசல்ட் வந்தப்புறம் க்ளாஸ்ல எவன் என்ன ஆனான்னு எல்லாம் ஆராய்ச்சி பண்ண காலம் விடலை. 

110 மார்க் வாங்கி எப்டியோ ஒரு லக்குல நான் ப்ளஸ் டூ பாஸ் பண்ணி திருப்பத்தூர் அப்ஸால பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரியும் ஜாயின் பண்ணிட்டேன். பர்ஸ் இயர் பர்ஸ்ட் செமஸ்டர் லீவுக்கு திருப்பத்தூர்ல இருந்து பட்டுக்கோட்டைக்கு பஸ்ல வந்துட்டு இருந்தேன். அறந்தாங்கி பஸ் ஸ்டாண்ட்ல டீ குடிக்க வண்டி நிறுத்தி இருந்தாங்க. டீயை வாங்கி ஒரு வாய் உறிஞ்சுனப்ப யாரோ முதுகுல பளீச்ச்ச்னு அடிச்சு என்னை திருப்ப...

ஆளு எப்டி இருக்க..? வாயெல்லாம் பல்லா....இந்திரஜித் நின்னுகிட்டு இருந்தான் அங்க. என்ன மச்சி நீ எப்டி இருக்கன்னு திரும்ப கேட்டுட்டு? நான் திருப்பத்தூர்ல ஜாயின் பண்ணி இருக்கேன்டா? நீ எந்த பஸ்ல வந்த? ஊருக்கு வர்றியா இல்லை எங்க போற...?ன்னு அவன்கிட்ட மட மடன்னு கேட்டேன். நான் கீழக்கரை போறேன் ஆளு அங்கதான் படிக்கிறேன்னு அவன் சொன்ன உடனேயே எனக்கு கணக்குப் பரீட்சை நினைப்புக்கு வந்துடுச்சு. சமாளிச்சுக்கிட்டு நீ என்ன படிக்கிறடான்னு கேட்டதுக்கு....கீழக்கரைலதான் ஆளு பி.இ அப்டீன்னு அவன் சொல்லவும் எனக்கு தூக்கி வாரிப் போட்டுச்சு....

ஓய்...எப்டிடா....? நீ தேவாசீர்வாதம் சார்கிட்ட அடி வாங்கிட்டு உன்னை ஓரமா தூக்கி உக்கார வச்சாங்க..? நீ மொதல்ல பாஸ் பண்ணினியான்னே தெரியலையேடான்னு கேட்டேன். 

அட நீ வேற ஆளு பின்னாடி பக்கம் ஓரமா உக்கார வச்சாருல்ல..., அடிச்சுச்சு எனக்கு பம்பர் குலுக்கல். நான் நடராஜன்கிட்ட அவருக்குத் தெரியாம பேப்பர வாங்கி, வாங்கி எழுதினேன்டா....160 கணக்குல....அப்டி இப்டி அடிச்சு புடிச்சு கொஞ்சம் பணத்தைக் கொடுத்து சதக் இன்ஜினியரிங் காலேஜ்ல சேந்துட்டேன்...ஹி...ஹி....ஹின்னு சிரிச்சுட்டே சொன்னான்...நல்ல வேளை நான் உன் பக்கத்துல ஓக்காரல மச்சி....அவ்ளோதான் நானும் அப்புறம் பி.எ.வோ பிஎஸ்ஸியோ படிச்சு குப்பைக் கொட்டி இருக்கணும்....

இந்திரஜித் சத்தமாய் சிரிச்சுட்டுஇருந்தான்.

எனக்கு சிரிக்கிறதா அழுகுறதான்னே தெரியலை. அப்போ அவனுக்கு பாய் சொன்னதோட ரெண்டு பேரும் ஆளுக்கொரு திசையில பிரிஞ்சுட்டோம். 

இப்போ இந்திரஜித் யு.எஸ்ல ஏதோ ஒரு சாப்ட்வேர் கம்பெனில வேலை பாத்துட்டு இருக்கானாம்....சாரி...சாரி.. இருக்காராம்.



தேவா சுப்பையா....


Viewing all 254 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>