Quantcast
Channel: Warrior
Viewing all 254 articles
Browse latest View live

தெய்வீக ராகம்..தெவிட்டாத பாடல் - 6

$
0
0


இதுவரை....






இனி...

பூர்ணா தலை முடியைச் சரி செய்த படியே என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்....

அவள் பார்வை எனக்குள் ஊடுருவி ஏதேதோ இம்சைகள் செய்தது...

சொல்லு பூர்ணா............மீண்டும் அவள் மெளனம் கலைத்தேன்...

இனக்கவர்ச்சின்னு சொல்லிக்கிற வயச ரெண்டு பேரும் தாண்டிட்டோம். கடைசி நிமிசம் வரைக்கும் காமம் வேணும்னு ரெண்டு பேருமே நினைக்கல...

அவள் இடை மறித்தாள்...அதான் சொல்லிட்டேனே முகில்... இது நடந்தது அல்ல... நிகழ்ந்தது. 

ஒரு கவிதை எப்போது
ஜனிக்குமென்று கணித்து
எழுதினால்...
அது எப்படி கவிதையாயிருக்கும்
எழுதியவன் எப்படி 
கவிஞனாய் இருப்பான்...?

டேய்.. நிறைய யோசிக்காதடா....பசிக்குது...ஏதாச்சும் இருக்கா...? இல்லை செய்யணுமா.... கொஞ்சம் சாப்டுட்டு நிறைய நடக்கலாம் நிறைய பேசலாம்...!

அவளைப் பார்த்து புன்னகைத்தேன். பூர்ணா.. எனக்கு கொஞ்சம் கெல்ப் பண்ணு...வா என்று அவளை அழைத்தேன்.

மதியம் இரண்டரை என்று கடிகாரம் சொன்ன போது மனதைப் போலவே வயிறும் நிறைந்திருந்தது எங்களுக்கு...

நாளைக்கு காலையில நாங்க திரும்பிப் போறோம்டா சென்னைக்கு... நீ எப்போ வர்ற...? கேட்டபடியே என் கை கோர்த்துக் கொண்டாள்..

நான் நிதானமாய் நடந்து கொண்டிருந்தேன்...!

எத்தன மணிக்கு போற பூர்ணா...?

நாளைக்கு மத்யானம் 3 மணிக்கு...சாப்டுட்டு கிளம்புறோம்....நாளை மறுநாள் டூட்டி ஜாய்ண் பண்ணனும்....நாங்க வந்து நாலு நாளாச்சுடா...

சுற்றிலும் நிலவிய நிசப்தத்தையும், விரிந்து பரந்து கிடந்த இயற்கையையும் அனுபவித்தபடியே யோசித்தேன். மறுபடி பூர்ணாவை பார்த்தேன்...ஏன் பூர்ணா இனிமே நம்ம உறவு எப்டி கண்டினியூ ஆகணும்னு நீ நினைக்கிற....?

எதுக்குமே அதிகம் அழுத்தம் கொடுக்காத முகில். எனக்கு எந்த விதமான குற்ற உணர்ச்சியும் கிடையாது. இப்போ ரெண்டு பேருக்கு ஏற்பட்ட அனுபவத்துக்கு உடனடியா ஒரு தீர்வு அல்லது கமிட்மெண்ட் வச்சுக்கணும்னுதான் தோணும்...

அவளை இடைமறித்தேன்........அப்டீ இல்ல பூர்ணா...சமூகம் ஏற்படுத்தி வச்சு இருக்க ஒரு ஒழுக்க கோட்பாடுகள் முன்னால நாம தப்புதானே செஞ்சுட்டோம்....? இந்த பந்தம் திருமணம் வரை போனால்தானே முழுமையா இருக்கும் இல்லேன்னா, ரெண்டு பேர்ல ஒருத்தர், யாரையோ ஏமத்திட்டோம் அப்டீன்ற எண்ணம்தானே வரும்...?

வாழ்க்கைன்ற விசயம் ஒரு கமிட்மெண்ட்லதான பயணிச்சுட்டு இருக்கு...! இந்த நிமிசம், இந்த அமைதி..இந்த சூழல் இது இப்படியே இருக்கக் கூடாதான்னு கூட எனக்குத் தோணுது. ஆனா இந்த வாழ்க்கையில மிகப்பெரிய ஆட்டம் ஒண்ணு நடந்துகிட்டு இருக்கு. இங்க உயிர் வாழத்தான் எல்லோருமே ஓடிக்கிட்டு இருக்காங்க. எந்த கஷ்டமும் இல்லாம நான் வாழணும்னு ஆசைப்படுறதோட அடுத்த ஸ்டெப்பா என்னை சார்ந்தவர்களும் வாழணும்னு நான் நினைக்கிறேன். ஒரு தாளம் தப்பாத வாழ்க்கை கிடைச்சதுக்கு அப்புறம்  அடுத்தவனை விட நான் பெஸ்ட்டா இருக்கணும்ன்ற யோசனை வருது..., அதுக்கு அடிச்சு பிடிச்சு ஏதேதோ செஞ்சு ஓட வேண்டி இருக்கு...இந்த வட்டத்துக்குள்ள சிக்கிக்க கூடாதுன்னுதான்...

நான் 35 வயசு ஆகியும் கல்யாணம் பண்ணிக்கலை. திருமணம் அப்டீன்ற வசீகர முகத்துக்குப் பின்னால நிறைய பார்க்க சகிக்காத கோரங்கள் இருக்கு. வசீகரத்தை வாங்கும் போது கோரத்தையும் சேர்த்தேதான் வாங்கிக்கிறோம். கோரம் வேண்டாம்னு முடிவு பண்ற ஒவ்வொருத்தனும் வசீகரத்தையும் சேர்த்தேதான் இழந்து ஆகணும். சந்தோசம், துக்கம், அழகு, அசிங்கம், இப்படி ஏதோ ரெண்டைப் பத்திதான் எல்லோரும் பேசிட்டு இருக்காங்க...ஒண்ணு இந்த கடைசி இல்ல அந்தக் கடைசி...

ஒண்ணு காவி உடுத்திக்கிட்டு சாமியாரா போய் இந்த வாழ்க்கைக்கு தூரமா போறாங்க...இல்லை... இந்த வாழ்க்கையை தலைமேல வச்சு கொண்டாடிக்கிட்டு நான், நான்னு ஈகோவோட வாழ்ந்து தான் வாழ்றதுக்காக சுத்தி இருக்குற எல்லா அழகுகளையும் சிதைக்கிறாங்க...நான் தனிமையா இருக்கும் போது மட்டுமே உயிரோட இருக்குற ஒரு ஜீவனா ஃபீல் பண்றேன் பூர்ணா...

பூர்ணா எதுவும் பேசவில்லை அவளுடைய ஸ்வெட்டருக்கு மேல் கைகளை  குறுக்காக கட்டிக் கொண்டு நடந்து கொண்டிருந்தாள். நீல வண்ண ஸ்வெட்டருக்குள் இருந்த  வெள்ளைச் சுடிதார் கொஞ்ச நேரம் முன்பு -ஹாலின் ஒரு மூலையில் கிடந்தது ஏனோ என் நினைவுக்கு வந்தது.  காற்றில் பறந்த கேசத்தை ஒதுக்கியபடியே எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள் பூர்ணா. எனக்கு ஒரு மணி நேரத்துக்கு முந்திய நிகழ்வுகள் புத்திக்குள் ஏறி தாண்டவமாடிக் கொண்டிருந்தன. உடை இல்லாத பூர்ணா மூளையில் நெளிந்து கொண்டிருந்தாள்...


பேரிஜம் லேக் செல்லும் வழி என்ற போர்டு காட்டிய திசையில் வெறுமனே நடந்து கொண்டிருந்தோம். பச்சை பசேலென்று உயரமாய் மரங்கள் வளர்ந்திருந்த அடர்த்தியான காடு அது. எனக்கு ஏனோ பசுமையான மரங்களைப் பார்த்த போது உள்ளுக்குள் காமம் எட்டிப் பார்த்தது. சாலையை விட்டு தள்ளி அடர் மரங்களுக்குள் நடந்து அதன் நடு மையத்தில் போய் தரையில் இருவரும் அமர்ந்து கொண்டோம்...! சில்லென்ற சருகள் கிடந்த தரையில் அமர்ந்து மரங்களினூடே எட்டிப்பார்த்த வானத்தைப் பார்த்தேன். கண்கள் என்னைச் சுற்றிய சூழலைப் புணரத் தொடங்கி இருந்தது. ஒட்டு மொத்த பூமியும் எனக்கு பெண்ணாய் தோன்றியது. பூமி தாண்டி பரவிக் கிடக்கும் அந்த பெண்ணின் எல்லா வளைவுகளுக்குள்ளும் உணர்வாய் பயணித்துக் கொண்டிருந்தேன்....

கூடல் தொடங்கி  இருந்தது. பக்கத்தில் பூர்ணா இருக்கிறாள் என்ற பிரக்ஞை இன்றி வெறித்தபடி இருந்தேன். உடல்  என்ற தடுப்பு உடைந்து போய்  காமம் வேறு வடிவத்தில் என்னை ஆட்கொண்ட பொழுதில்...அதற்கு மேல் அமர முடியாமல் கீழே சாய்ந்தேன்...

முகில்...கெட்..அப்...போலாம்டா...பூர்ணா என்னை உலுக்கினாள். மெல்ல அரை விழியால் பூர்ணாவைப் பார்த்தேன். அவள் மடியில் என்னை படுக்க வைத்திருந்தாள். அவள் விரல்கள் என் தலையைக் கோதிக் கொண்டிருந்தன. வாழ்க்கையில் அற்புதமான தருணங்களில் ஒன்று ப்ரியத்தோடு யாராவது நம்மை மடியில் கிடத்தி தலை வருடிக் கொடுப்பது. அதை விட அதி அற்புதமானது அப்படியான ப்ரியமானவரை நாமும் ப்ரியத்துடன் நேசிப்பது.

எழுந்து அமர்ந்தேன்.

போகலாம் முகில். உன்னை பார்த்தது, பேசினது, அப்புறமா நடந்தது இது எல்லாமே ஆச்சர்யம்தான். ஒரு அழகிய கனவு மாதிரி இருக்கு. இந்த கனவுக்கு அர்த்தம் நீயும் கொடுத்துடாத நானும் கொடுக்கல...

இதை பத்தி கேள்வி நீ கேட்டு நான் பதில் சொல்லி திட்டமிட்டு நாம இந்த அழகை சிதைச்சுக்க வேண்டாம். இன்னிக்கு நடந்தது தற்செயலா நடந்தது அப்டீன்றத நாம நம்பினா தற்செயலாவே அடுத்து எல்லாமே நடக்கும் வரை காத்திருக்கலாம்...தண்ணிக்கு அடியிலும் நாம போய்டல தரைக்கும் நாம போய்டல... கொஞ்ச நாள் மிதக்கலாம்....மிதந்துட்டே இருக்கலாம்....இன்னொரு நாள் தற்செயலா இதே போல ஏதோ ஒண்ணு நம்ம உள்ளுணர்வோட உந்துதல்ல நடக்கலாம்....இப்போதைக்கு இந்த நினைவுகல ரசிச்சு அனுபவிச்சு லயிச்சுக் கிடக்கறதுதான் சரின்னு என் புத்திக்கு தோணுது...

பூர்ணா என்னைப் பார்த்தாள்...

ஹா.. ஹா ஆமாம் பூர்ணா தற்செயலா தோன்றியதுதானே இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சமும்...

அதே.. அதே... என்றபடி கழுத்தில் கை போட்டுக் கொண்டாள்.

பறவைகள் கூடு திரும்பிக் கொண்டிருந்தன. ஒரு நாள் ஆரம்பிப்பதும் முடிவதும் எதுவும் அவற்றுக்குத் தெரியாது. இன்னும் சொல்லப் போனால் ஒரு நாள் என்றால்  என்னவென்று கூடஅவற்றுக்குத் தெரியாது. விடியலில் அவை திசைகளை தீர்மானித்து பறப்பது இல்லை. மீண்டும் கூடு திரும்புகையில் கூடென்ற ஒன்று இருக்கும் என்பதற்கும் யாதொரு உறுதியும் இல்லை...

அவை எப்போதும் சிறகடிக்கின்றன...உயிர் என்ற ஒன்றின் ஒற்றை உணர்வை ஏந்தியபடி...!  வாழ்க்கையோ, இயற்கையோ, கடவுளோ, இல்லை சட்ட திட்டங்களோ, கட்டுப்பாடுகளோ, கவலைகளோ அவற்றுக்கு கிடையாது...
.....
.....
.....
பூர்ணா பேருந்திலிருந்து ஜன்னல் வழியே கை அசைத்தாள். 

கொஞ்சம் கண்ணீரும்
நிறைய வலிகளும்
இல்லாமல் இருக்கும்
காதல் எப்படி காதலாய்
இருக்க முடியும்...?

அவள் விழிகளில் வழிந்த நீரை என் கண்களில் இருந்து துடைத்துக் கொண்டேன். மீண்டும் அவளை சந்திக்கலாம் சந்திக்கையில் இப்போது இருக்கும் மனோநிலை எங்கள் இருவருக்குமே இருக்கலாம். இல்லாமலும் போகலாம் அல்லது ஒருவருக்கு இருந்து இன்னொருவருக்கு அப்படி இல்லாமலும் இருக்கலாம்....

எது எப்படி இருந்தாலும் அது சுகமான நினைவுகளை யாராலும் அழித்து விடமுடியாது. நான் என் காட்டேஜை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்......


என் காலடி பட்டு சருகுகள் நொறுங்கிக் கொண்டிருந்தன....!!!!

                                             
                                                       .... முற்றும் ....


தேவா சுப்பையா...




ராஜா ராணி....!

$
0
0

இரண்டு கனத்த ப்ளாஷ் பேக்குகள் ஒரு மையக்கதை. ராஜாவாகவும் ராணியாகவும் என்னை கற்பனை செய்து பார்த்துக் கொண்டே படம் பார்த்தேன், முழுத் திரைப்படத்தையும்  அலுப்பு வராத வகையில் ஜஸ்ட் லைக் தட் காட்சிப்படுத்திக் காட்டி இருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். ஒரு மழையில் நனைவது போன்ற காட்சிகளின் தொகுப்பு. என்னதான் காமெடி காட்சிகளில் நாம் சிரித்தாலும் மீண்டும் நம்மை ஒரு மென் சோகத்துக்குள் கொண்டு வந்து விடும் திரைக்கதை என்று... லயித்துப் போய் பார்த்து முடித்தேன் ராஜா ராணியை...ஆங்காங்கே தென்பட்ட சில சொதப்பல்களை சகித்தபடியே

மென் சோகம் என்பதை எப்படி வார்த்தைப்படுத்த என்று எனக்கு தெரியவில்லை.  சுகத்தை கொடுக்கும் வலிகளை மென்சோகம் என்று சொல்லலாம். இரண்டு தோற்றுப் போன காதல்களை பதியம் போட்டுக் கொண்ட ஒரு ரோஜா செடியில் மெல்லிய மொட்டொன்று அரும்பி அது இதழ்களை விரிக்கும் அழகினை விழிவிரிய பார்க்கும் சுகம் அலாதியானது. நயன்தாரா படபடக்கும் பட்டாம்பூச்சியாய் பரபரக்கும் போதும் சரி, ஜெய்க்காக  ரிஜிஸ்தர் ஆபிசில் காலையிலிருந்து மாலை வரை காத்திருக்கும் மென்மையிலும் சரி, தன் அப்பாவான சத்யராஜ் சொல்வதைக் கேட்டு நடு ராத்திரியில் ஜெய்யின் வீட்டுக் கதவை தட்டி அவனை வெளியே அனுப்புங்க என்று கோபம் காட்டும் இடத்திலும், காரில் சத்யராஜுடன் வெடித்து அழுவதிலும்....நடிப்பின் உச்சாணிக் கொம்பை  தொட்டிருக்கிறார். கவர்ச்சி வேடங்களைக் கொடுத்து அவரை வீணடித்த இயக்குனர்கள் நயனை நயமாக பயன்படுத்தினால் இன்னும் அவரது அற்புத நடிப்பினை பார்த்து ரசிக்கும் கொடுப்பினை தமிழ் ரசிகர்களுக்கு கிடைக்கும்.

ஒரு அட்டகாசமான அப்பா மகள் உறவை, புரிதல் கொண்ட நவீன அப்பா சத்யராஜும், நயனும் தூள் கிளப்பி இருக்கிறார்கள். மகள்கள் அப்பாக்களுக்கு பியர் வாங்கிக் கொடுத்து சந்தோசமாய் தோளோடு தோள் சேர்த்து நடந்து இனி வரும் காலங்களில் செய்திகளை பகிரலாம். அப்பாக்களும் காதலை எதிர்க்கும் முரட்டு பெற்றோர்களை "அதிகமா டிவி நாடகம் பார்த்து கெட்டுப் போயிருப்பாம் போலம்மா.."என்று இயல்பாய் கூறி புரிந்தும் கொள்ளலாம். இயல்பான இது போன்ற மென்மையான வாழ்க்கை உறுத்தல் இல்லாமல் அமைந்தால் வாழ்க்கை சுவாரஸ்யமாய்த்தான் இருக்கும். 

ஜெய் நயனின் காதலைத் துறந்து அமெரிக்கா செல்வதற்கு அவரது போலீஸ் அப்பாவின் பிடிவாதம்தான் காரணம் என்று கூறுவது அவ்வளவு வலுவானதாய் இல்லை. திரைப்படம் தான் என்றாலும் சட்டென்று தன்னை நேசிக்கும் உயிருக்குயிரான பெண்ணை அதுவும் முழு ஆதரவு கொடுக்கும் அவளின் பணக்கார அப்பா இருக்கும் போது எந்த ஆணும் விட்டுச் செல்ல மாட்டான் என்பதே உண்மை. ஜெய் ஜஸ்ட் லைக் தட் நயன்தாராவை பிரிந்து செல்வதற்கு சொல்லப்படும் காரணம் படு மொக்கை. பிரிதல்தான் கதையை தூக்கி நிமிர்த்தி கொண்டு செல்லும் என்று முடிவு செய்த பின்பு அந்த இடத்தை இயக்குனர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

அப்பாவியாய் ஏற்கெனவே ஜெய்யை எங்கேயும் எப்போதும் படத்தில் நாம் பார்த்தாயிற்று. அது போன்று நடிப்பது அவருக்கு நன்றாகத்தான் வருகிறது என்றாலும் மெலிதாய் ஒரு அலுப்பு தட்டுவதையும் தாண்டி அவர் வரும் ஆரம்பக் கட்டக் காட்சிகள் நம்மை சிரிக்க வைத்து விடுகின்றன. இயல்பாய் நடிப்பதில் ஆர்யா கில்லாடி. அவரது டயலாக் டெலிவரிகள் எல்லாமே அழுத்தம் திருத்தமாய்  இது நடிப்புடா என்று தொடை தட்டாது. ஏங்க வீட்டு சாவிய என் வொய்ஃப் வந்தா கொடுத்துடுறீங்களா நான் கொஞ்சம் வெளில போறேன்.... என்று கேட்கும் பக்கத்து வீட்டுக்காரரின் குரல் தொனிதான் ஆர்யாவின் டயலாக் டெலிவரி ஸ்டைல். நயன் தாராவின் தோற்றுப் போன காதலைக் கேட்டு அவருக்குள் மெலிதாய் துளிர்க்கும் காதலை அவர் வெளிப்படுத்தும்  இடம் அட்டகாசம். ஆர்யா + நயன் தாரா கெமிஸ்ட்ரி மட்டும் இல்லை பிஸிக்ஸ், பையாலஜி, மேத்தமெட்டிக்ஸ், தமிழ், ஆங்கிலம் எல்லாமே அட்டகாசம். 

ஆர்யாவிற்கு இயக்குனர் வைத்திருக்கும் ப்ளாஷ் பேக்கில் நஸ்ரியா பிரதர் பிரதர் என்று ஆர்யாவை  வெறுப்பது போல நடிக்கிறார். ஆர்யா அவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார். அப்பா அம்மா யாரும் இல்லாமல் ஹோமில் வளரும் நஸ்ரியா அம்மா மடியில் இதுவரையில் நான் படுத்தது இல்லை என்று கூறி விட்டு ஆர்யாவின் மடியில் படுக்கிறார். ஆர்யா கிறிஸ்துவர், நஸ்ரியாவின் பிறந்த நாளுக்கு அவரை கோயிலுக்கு அழைத்துச் சென்று தாலி கட்டி மனைவியாக்கிக் கொள்கிறார். சிறிது நாள் கழித்து பெற்றோர்களிடம் சொல்லி முறைப்படி திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் கூறுகிறார்.

ஏன் பெற்றோர்களிடம் சொல்லி முறைப்படி திருமணம் செய்தால்தான் என்ன..? அவர் கிறிஸ்துவர் இவள் இந்து என்பது பிரச்சினையாய் இருக்குமோ என்று நாமே யூகம் செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த ப்ளாஸ்பேக்கில் எப்படி ஜெய் நயனை விட்டுப் பிரிவதற்கு ஒரு வலுவான காரணமில்லையோ அதே மாதிரி இந்த இடத்தில் இயக்குனர்....மீண்டும் டொட்டடாய்ங் ஆகிறார்.

தாலி கட்டிய நஸ்ரியாவின் பிறந்த நாள் அன்று அவரோடு ஊர் சுற்றுகிறார் ஆர்யா.  சாலையின் இந்தப் பக்கத்திலிருந்து அந்த பக்கம் சென்று ஏதோ வாங்கிவர செல்லும் நஸ்ரியா திரும்புகையில் எதிர்பாராத விதமாக கார் ஆக்ஸிடண்டில் மரணமடைகிறார். விரக்தியில் இருக்கும் ஆர்யா பெற்றோர்கள் வற்புறுத்தலுக்காய் நயனை கைப் பிடிக்கிறார்.

நயனுக்கும், ஆர்யாவிற்குமான வாழ்க்கைக்கு மெளனராகம் படத்தின் கதையை மையக்கருவாய் எடுத்திருக்கிறார் இயக்குனர். காதலில் தோற்று பிறகு திருமணம் செய்துகொண்டு வாழும் இடத்தில் புரிதல் வருவதாய் காட்டித் தொலைப்பது தமிழ் சினிமாவின் மரபு. அதையே வழுவாமல் இந்த இயக்குனரும் செய்திருக்கிறார். வேறு வழி திரைப்படத்தை பார்க்கும் அத்தனை பேரும் சமூகம் கொடுக்கும் நிர்ப்பந்தம் அது. நயனை பிரியும் ஜெய் இறந்து போய்விட்டதாய் கேள்விப் பட்டுதான் நயன் தன் காதலை விட்டு விட்டு வேறு ஒருவரை மணம் முடிக்கிறார்...அதே ஜெய் க்ளைமாக்ஸில் சென்னை ஏர்போட்டிலேயே வேலை பார்க்கிறார்...என்று வேறு இயக்குனர் காட்டுகிறார்...

அமெரிக்கா போயாவது உன் காதலனை அழைத்து வருவேன்னு சொல்ற ஒரு பவர்புல் தொழிலதிபர் அப்பாவை வச்சுக்கிட்டு இந்தப் பொண்ணு ஜெய் செத்தது உண்மையா இல்லையான்னு விசாரிக்காம, அந்த ஊர்லயே வேல பாக்குற ஜெய் பத்தி ஒண்ணுமே தெரியாம இருந்துச்சுன்றது எல்லாம்... ஹ்ம்ம்.. ஓ.கே.. ஒ.கே...ன்னு சொல்லி நாமஓவர் ரூல் செய்யத்தான் வேண்டும்.

படத்தோட மொத்த மையக்கருவா இயக்குனர் சொல்ல வர்றது.. எவன் செத்தாலும் உன் வாழ்க்கை ஓடிட்டுதான் இருக்கும் அதுக்காக போனவங்களுக்காக வருத்தப்படாதீங்கன்ற ஒரு மொக்கை அபத்தமான ஒரு மேட்டர்தான். காதல்ல தோத்தா வேறு காதல் கிடைக்கும்னே ரெண்டு காதலை தோக்க வச்சு அதுக்கு  பிறகு ஒரு கல்யாணத்த வச்சு....முடியலை பாஸ்.....

ஒருத்தர் போனா இன்னொருத்தர் வருவாங்க  இயக்குனர் சார்...ஆனா ஒருத்தர் போனதோட வலி இருக்கே அது சாகுற வரைக்கும் மனசுல இருந்து போகாது. காதல் ஒருத்தர் வாழ்க்கையில பல தடவை வந்துட்டுப் போகும் ஆனா ஒவ்வொரு தடவையும் அது உயிரைக் கொடுத்து உயிரை எடுக்கும். ஜெய் நயனை ஏமாத்திட்டுப் போய் அமெரிக்க வேலை, அது இதுன்னு காட்டி அவர் செத்துப் போனதா நயனை நம்பவைச்சு அப்புறம் வேற பொண்ண கல்யாணம் பண்ணிட்டு....அப்டியே வாழ்ந்துட்டு இருக்காரு.. நயனை பார்த்த பின்னாடி கூட கண்டுக்காம கல் நெஞ்சா இருக்காருன்னு சொல்ற இடம் எல்லாம் சுத்தமா ஏத்துக்கவே முடியாது.

என்னமோ பசங்க எல்லாம் பொண்ணுங்களை கழட்டி விட்டுட்டு வசதி வாய்ப்பு வந்தா ஓடிப்போய்டுவாங்கன்னு எப்டி சார் இளவரசன்களின் மரணத்தை பார்த்த பிறகும் உங்களால படம் எடுக்க முடியுது...? ஒரு காதலை இழக்க எப்படி ஒரு பெண் தயாரில்லையோ அதுக்கு கொஞ்சம் கூட பசங்களும் குறைஞ்சவங்க கிடையாது. எத்தனை வலிகள் இருந்தாலும் பெண்ணை அடையணும்னு ஒரு ஆண் தான் நினைப்பான்... நம்ம சமூக கட்டுப்பாட்டுல பெண் தான் தன்னுடைய மனதை மாத்திக்க ஓராயிரம் வாய்ப்புகளை அவளோட குடும்பம் திணிக்குது.

தோற்றுப் போன காதலை இதைவிட நாகரீகமா சொல்ல முடியாத அளவுக்கா தமிழ் சினிமா படைப்பாளிகள் வறட்சியா இருக்காங்க..? காதலில் தோற்றுப் போய் வேறு வழி இல்லாமல் வேறு ஒருவனின் கையைப் பிடிக்கும் ஒரு ஆணும் சரி ஒரு பெண்ணும் சரி....கடைசி வரை தனது காதலை மறக்க முடியாது. இங்க படத்துல அவுங்க மறக்க வசதியா ஒருத்திய கொன்னுட்டு இன்னொருத்தனை ஏமாத்துனவனா காட்டி இருக்க உங்களோட  நியாயம் சர்வ நிச்சயமா துரோகம்னு நான் அடிச்சு சொல்லுவேன்.

படத்தில் பாத்திரங்களின் நடிப்பு, காட்சியமைப்பு, ஓரளவிற்கு இசைன்னு உங்களை கை தூக்கி விட்டு இருந்தாலும்....ஒட்டு மொத்த கதையும் செம சொதப்பல். ஏன்னா நீங்க படத்துல சொல்லி இருக்க மாதிரி யாருக்கும் காதலும் வராது...அப்படியே வந்தாலும் இப்படி சினிமாத்தனமா காட்சிகளின் வசதிக்காக தோற்க வச்ச மாதிரி தோத்தும் போகாது... அப்படியே தோத்துப் போனாலும் உடனே சூடு ஆறுவதற்கு முன்னால வேற கல்யாணமும் பண்ணிக்க மாட்டாங்க....அப்டியே கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் தன்னுடைய காதலனையோ காதலியையோ அவ்ளோ சீக்கிரம் மறந்தும் தொலைக்க மாட்டாங்க....

படம் முழுதும் என்னை ராஜாவாக கற்பனை செய்து கொண்டேன்...ராணியாக கற்பனை செய்து கொண்டேன்...ஆனால் உங்கள் கதையில் வந்த ராஜ ராணிகள் இல்லை எனது உணர்வுகள்...

அவர்கள் கடந்த கால காதலை கண்ணியப்படுத்திக் கொண்டு நிகழ்காலத்தில் புரிதலோடு நகரும் ராஜா ராணிகள்...!

என்னடா இவன் எழுத ஆரம்பிக்கும் போது படம் நல்லா இருக்குன்னு சொல்றமாதிரி இருந்துச்சு முடிக்கும் போது சொதப்பல்ன்ற மாதிரி முடிக்கிறானேன்னு யோசிக்கிறீங்களா..?

நான் என்ன பாஸ் பண்றது எது எது நல்ல இருக்கோ அதை நல்லா இருக்குனுதான் சொல்லிட்டோம்ல..


அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்டா....!!!!!! 


தேவா சுப்பையா...




அந்திமக் கனவுகள்...!

$
0
0

உன்னை சந்தித்த நாளும் கிழமையும் எனக்கு ஞாபமில்லை என் சித்திரமே..ஆனால் முதல் சந்திப்பிலேயே என்னை ஐ லவ் யூ என்று தட்டச்சு செய்ய வைத்த உன் காதலை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எத்தனையோ அபத்தங்களை தருவித்திருக்கும் இணையத் தாய் நம்மைப் போன்ற காதல் குழந்தைகளையும் பெற்று தான் போட்டிருக்கிறாள். முகமறியாமல் அகம் அறிந்து காதல் கணைகளை வீசிக்கொள்ளும் ஒரு அற்புத அனுவத்தை ஒரு காலத்தில் கடிதங்களும், பின்பு தொலைபேசிகளும், தற்போது இணையமும் செய்து கொண்டிருக்கின்றன.

ஏதோ ஒன்றைத் தேடி நான் வலைவீசிக் கொண்டிருக்கையில் என் வலைக்குள் விழுந்த மீன்கள் உன்னுடைய எழுத்துக்கள். முதன் முதலாய் உன் கவிதை வரிகளை எதேச்சையாய் பார்த்த நான் திணறித்தான் போய்விட்டேன்.  யோசித்த படியே நான் அவற்றை வாசிக்க வாசிக்க அவற்றை நான் சுவாசிக்கத் தொடங்கி இருந்தேன். உன் கவிதைப் புத்தகத்தில் கவிதையை நான் பார்க்கவில்லை வார்த்தைகளாய் துடித்துக் கொண்டிருந்த என் இதயத்தை நான் பார்த்தேன். எதார்த்தமாக என் இணைப்பில் வந்த நீ எனக்கு எல்லாமாகிப் போன கதையை காதலின் வெற்றி என்பதா இல்லை நாம் காதலை வென்றோம் என்பதா?

முதல் இணைய உரையாடலில் நீ என்னிடம் உரையடிக் கொண்டிருந்தாய், உன் மந்திர வார்த்தைகளோடு நான் உறவாடிக் கொண்டிருந்தேன். காதலிக்க வேண்டும் என்ற உணர்வை எப்படி வெறுமனே வார்த்தைகள் கொடுத்துவிட முடியும் என்று நான் என் புத்தியோடு மல்லுக் கட்டிக்கொண்டிருக்கையில் எதார்த்ததை கனவு வென்றேதான் விட்டது. நான் ஒரு ஓவியன்... என்று எத்தனையோ பேரிடம் நான் என்னை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறேன் ஆனால் முதல் முறையாக...ஒர் ஓவியத்திடம் நான் ஓவியன் என்று அறிமுகம் செய்து கொண்டது எனக்கு ஒரு வித்திசமான அனுபவம்தான்.

என் காதலை உன்னிடம் சொன்னேன். ஒரு கைக்குழந்தையை வாங்கிக் கொள்ளும் கவனத்தோடும் பரிவோடும் நீ காதலை வாங்கிக் கொண்டாய்....

அது ஒரு நீண்ட இரவு...நாம் இருவரின் இம்சைகளையும் இரு வீட்டு தட்டச்சுக்களும் சகித்துக் கொண்டிருந்த ஒரு வசீகரமான ராத்திரி.  ஐ லவ் யூ என்று அடித்து அடித்தே நாம் களைத்துப் போயிருந்த பொழுதில் போனால் போகிறது என்று வெகு நேரமாய் போரடிக் கொண்டிருந்த உறக்கத்திடம் வேறு வழியின்றி நாம் இருவரும் தோற்றுப் போனோம்....

காதலை உரையாடலாய் தொடங்கி நகர்த்திக் கொண்டிருப்பது வலியோடு கூடிய ஒரு சுகம். அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து போ என்று உடம்பிலிருக்கும் அத்தனை ஹார்மோன்களும் கட்டளையை பிறப்பிக்க அவற்றை நிதானமாய் பார்த்துக் கொண்,டு பார்க்காமல் காதலிக்கும் ஒரு பக்குவ நிலைக்கு நகர்ந்து செல்தல் என்ன அவ்வளவு எளிதா..? நவீனத்தின் வளர்ச்சியில்

ம் என்றால்...வாய்ஸ் சாட்....
ஏன் என்றால் வீடியோ சாட்....
உடனடியாய்
தொலைபேசி எண்கள் பரிமாற்றம்...
எதிர்ப்பார்ப்புகளோடான சந்திப்புகள்
ஏமாற்றமான திருப்பங்கள்...

என்று மூன்று நாளில் ஒடிந்து விழும் காதல்கள் கோடியைத் தாண்டும். என் கவனமெல்லாம் நீ எப்படி இருப்பாய் என்பதாய் இல்லை. நான் எப்படி உன்னிடம் நடந்து கொள்ளவேண்டும் என்பதாய்தான் இருந்தது. பார்த்துக் கொள்ளாமல் பேசுகையில் உருவத்தைப் பற்றிய அக்கறைகள் இல்லாமல் உணர்வுகளால் தழுவிக் கொள்ளும் நிஜ சுகத்தை நாம்  அனுபவித்துக் கொண்டிருந்தோம். அதிகமாய் மனம் ஈடுபடாத போது கற்பனைகள் இல்லாத உணர்வின் தன்மைகளை நம்மால் உணரமுடியும். நீயும் நானும் காதலை காதலாய் செய்து கொண்டிருக்கையில்....காதலால் நமக்கு  போதும் போதுமென்னும் அளவிற்கு கவிதைகள் கிடைத்தன. பல நேரம் நம் வார்த்தைகள் இனிக்கவும் சில நேரம் கரிக்கவும் செய்யும். கண்ணீரோடு நாம் போட்டுக் கொண்ட சண்டைகள் எல்லாம் காதலோடு மீண்டும் வலுவாய் நம்மை கட்டியணைக்கச்  செய்தன.

மூன்று வருடங்கள் கழித்து உன்னை முதன் முதலாய் நேராய் பார்த்த அந்த காலைப் பொழுதில் உன் விழிகளில் அத்தனை நாள் தேக்கி வைத்திருந்த காதல் கண்ணீராய் ததும்பிக் கொண்டிருந்தது. விழிகளால் சொல்ல முடியாத ஒரு காதல் காதலே இல்லை. உன் விழிகள் என் விழிகளை வாஞ்சையாய் வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தது எவ்வளவு நேரம் என்று எனக்கு தெரியாது ஆனால் உன்னை பார்த்துக் கொண்டிருந்த போது நான் உயிரோடிருப்பதற்கான காரணம் என்னவென்று மட்டும் தெளிவாக உணர்ந்து கொண்டேன். காதலிப்பது பெரிய விசயமில்லை அந்தக்காதலை திருமணமாக மாற்றும் போது காதலை நிறைய பேர்கள் தொலைத்து விடுகிறார்கள் என்று நான் உன்னிடம் சொன்ன போது...நீ சப்தமாய் சிரித்தாய்...

யாரென்று அறியாது பேசிக் கொண்டிருந்த போதும் காதலே விஞ்சி நின்றது, உருவமாய் அறிமுகம் ஆன பின்பும் காதலே விஞ்சி  நிற்கிறது திருமணத்துக்குப் பிறகு வேறென்ன எஞ்சி நிற்கும்..? என்று கேட்டாய்....

உன் கரம் பிடித்த அந்த நொடியில் நிச்சயிக்கப்பட்டது நம் திருமணம். திருமணம் என்னும் நிர்ப்பந்திக்கப்பட்ட சமூக சடங்கை சம்பிரதாயத்திற்காய் செய்து கொண்டது நமது காதல். இதோ எனக்குள் ஜீவனாய் நிறைந்து போயிருப்பவளே உன்னுடைய உயிரை பற்றிக் கொண்டு படரும் கொடியாய் வளர்ந்து செழித்து பூத்து நிற்கிறது என் காதல்....

என் இரவுகளுக்கும் பகல்களுக்கும் உன் பெயரைதான் எழுதி வைத்திருக்கிறேன் அம்மு.......என் சுவாசம் நீ....

நீர் வேண்டாம் என்று...
பூமி சொன்னால்...
வேறெங்குதான் பெய்யும்
மழை....?!
........
........
........
வாசித்து விட்டு டைரியை பெருமூச்சோடு மூடி வைத்து விட்டு கண்ணாடியைக் கழற்றி வைத்து விட்டு கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன்.

ஏன் தாத்தா...... எப்ப பாத்தாலும் அந்தப் பழைய டைரிய எடுத்துப் படிச்சுட்டே இருக்கியே...என்னதான் இருக்கு அதுல...யார்ட்டயும் கொடுக்கவும் மாட்டேன்ற....

பத்தாவது படிக்கும் பேரன் அருகில் வந்து அமர்ந்து கொண்டான்...

சொல்லு தாத்தா....மறுபடி கேட்டான்....

"காதல் "என்று சொல்ல நினைத்தேன்....

பிறகு.. ஒண்ணும் இல்லப்பா சும்மா...நீ போய் படி.....அவனை விரட்டினேன்.

தனிமை எனக்கு தேவைப்பட்டது. எல்லாமாய் இருந்து விட்டு ஒரு நாள் அவள் போய்விட்டாள்...

நான் காத்துக் கொண்டிருக்கிறேன்....!

நினைவுகளைத் துணையாக்கி விட்டு
நீங்கா துயில் கொண்டவள்
என் நெஞ்சுக்குள் மட்டும்
விழித்துக் கொண்டிருக்கிறாளே...
அது எப்படி...?



தேவா சுப்பையா..




சாமி....!

$
0
0

ஒரு மிகப்பெரிய இழப்பிற்கு பின் நான் சிவன் கோயிலுக்கு வந்திருந்தேன். படைத்தவன் இல்லாத போது படைப்புகளே படைத்தவன் இருந்தான் என்பதற்கு  சாட்சியாக எஞ்சி நிற்கின்றன. என்னை படைத்தவன் அன்று கோயிலுக்கு நான் சென்ற போது இல்லை. நான் என்னைப் படைத்தவனையும் படைத்தவனை பார்த்துக் கொண்டிருந்தேன். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவே இல்லை. சிவலிங்கம் எப்போதும் போல மெளனமாயிருந்தது. அந்த கோயில் மிகப்பழமையானது அல்ல. மிக புதியதும் அல்ல. மத்திம காலத்தில் அது கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று மனது சொன்னது.

பழைய மதுக்கூர் சுற்றிலும் வயல்கள் நிறைந்த அழகிய கிராமம். வேளாண்மை செய்து வாழும் மக்கள் நிறைந்த ஊர். இயற்கையோடு தொடர்பில் இருந்து இருந்து மிகப்பெரிய பக்குவ நிலைக்கு வந்திருக்கும் மக்கள் நிறைந்த இடம். இயற்கையோடு இயைந்த வாழ்க்கை  வாழ்க்கையின் நிலையாமையை எளிதாக போதித்து விடுகிறது. மழை பெய்ய வேண்டும், ஆற்றில் தண்ணீர் வரவேண்டும், இன்ன பிற காலச் சூழல்கள் பொருந்தி வரவேண்டும், பல மனிதர்களின் கூட்டு உழைப்பு வேண்டும். ஆமாம் விவசாயம் மனித வாழ்வின் சூட்சுமத்தை மனித தொடர்புகளின் அவசியத்தை, விட்டுக் கொடுத்தலின் தாத்பரியத்தை மனிதர்களுக்கு  எளிதாக புகட்டி விடுகிறது. ஆடு, மாடுகள், கோழிகள், போன்ற சிற்றுயிர்களோடு ஒர் தினசரி வாழ்க்கை வாழும் போது வாய் பேசா அந்த ஜீவன்களை தங்கள் வீட்டில் ஒருவராய் எண்ணி, அவற்றோடு பேசவும், அவற்றின் அசைவுகளை வைத்து தேவைகளை புரிந்து கொள்ளவும் முடிகிறது.

மாடுகளோடும் ஆடுகளோடும் மனிதர்களைப் போல புரிந்துணர்வோடு தங்களின் சோகங்களையும் சந்தோசங்களையும் பகிர்ந்து வாழும் ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்கை ஒரு விவசாயிக்கு கிடைத்து விடுகிறது. ஒரு விவாசாயி நிலத்தோடு தொடர்பில் இருப்பவன். நிலம் மாதிரியேதான்...அவனது பொறுமையும் கோபமும். அடங்கிக் கிடந்தால் அடங்கிக் கிடப்பான் வெகுண்டு எழுந்தால் சுற்றி இருக்கும் யாரும் அவனை எதிர்கொள்ள முடியாது.

கோயிலுக்குள் இருந்த அமிர்த கடேஸ்வரர் என்று எழுதி இருந்த பிளக்ஸ் போர்டை வாசித்தேன்.எனக்குள் இருந்த அமிர்த கடேஸ்வரரும் கருவறைக்குள் இருந்த அமிர்த கடேஸ்வரரும் மெளனமாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.சிவலிங்கத்தைப் பற்றி பல்வேறு கதைகளைச் சொல்வார்கள். ஆண்குறியும் பெண்குறியும் போன்ற ஒரு அமைப்பு என்றெல்லாம்...

என்னைப் பொறுத்தவரை பல உருவங்களை வழிபாடு செய்து, செய்து  கடைசியில்சிவனை வணங்க வரும் இடம் அதி ரகசியமானது. என்னதான் இறைவனுக்கு உருவம் இல்லை என்று பயிற்றுவித்தாலும் மனம் அதை கேட்காது. உருவம் இல்லை என்பதை அறிய உருவத்தைப் பார்த்தே பழகியவர்கள் எப்படி அறிவார்கள்...? உருவம் இல்லை என்பதை அறிய உருவத்தைதான் பழக வேண்டி இருக்கிறது. எது வேண்டாமோ அதை அழிக்க அதன் அருகில் செல்வீர்களா இல்லை அதை விட்டு திரும்பி வேறெங்கோ முகம் திருப்பிக் கொள்வீர்களா?

நம்மைச் சுற்றி இயங்கும் வாழ்க்கைதான் கடவுள். நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்கள்தான் கடவுளின் தோற்றங்கள். பெரு மழையும், சிறு நதியும், யானையும், தேரையும் கடவுளரின் தோற்றங்கள்தான் என்று அறிய ஏதோ ஒன்றை  கடவுள் என்று விழுந்து விழுந்து கும்பிட வேண்டி இருக்கிறது. நான் ஏன் இப்படி விழுந்து விழுந்து கும்பிட வேண்டும், இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தையும் தோற்றுவித்தது எப்படி இதுவாய் இருக்க முடியும்..? அல்லது அதுவாய் இருக்க முடியும் என்று ஒரு புள்ளியில் யோசிக்க வைக்க இவ்வளவு வேடிக்கை செய்ய  வேண்டி  இருக்கிறது.

மிகவும் களைப்பானால் என்ன செய்வோம். எல்லாவற்றையும் விட்டு விட்டு முதலில் உறங்க வேண்டும் என்று உறங்கச் செல்வோம். எனக்கு ஓய்வு தேவை என்று எல்லா செயல்களையும் நிறுத்தி விட்டு கண்களை மூடி படுத்துக் கொள்வோம். சிவலிங்கம் ஓய்வைப் போன்றது. அங்கே இங்கே ஓடி ஓடி பல தெய்வங்களை வணங்கி களைத்துப் போய் சிவன் என்று ஏதோ ஒரு உருவத்தைக் காட்டி பின் இதுவும் சிவன்தான் என்று ஒரு சிவலிங்கத்தை காட்டும் இடத்தில்...

இது எப்படி சிவன் ஆக இருக்க முடியும்...? இது ஏதோ ஒரு உருவம் போன்று தோன்றுகிறது ஆனால் என்ன உருவம் என்று தெரியவில்லையே என்று யோசித்து யோசித்து சிவலிங்கத்தோடு முட்டி மோதி அந்த உருவத்தை பார்த்து பார்த்து அது மூளையில் அதுவே பதிந்தும் போய் விடுகிறது. சிவம் தான் கடவுள் அதுவும் சிவலிங்கமே சிவம் என்று  உணரும் போது ஏற்கெனவே மூளையில் ஏறி உட்கார்ந்து இருக்கும் எல்லா கடவுள் உருவங்களும் மெல்ல மெல்ல அழிந்து போய்....உருவ அருவமான சிவலிங்கத்தை சிவமாய் பாவிக்கும் ஒரு பக்குவ நிலை நமக்கு வந்து விடுகிறது. சிவலிங்கத்தையும் மனதில் இருந்து அழிக்கத்தான் அதற்கு அடுத்த நிலையான பஞ்ச பூதங்களும் சிவம் என்று போதனை நமக்குப் புகட்டப்பட்டது. அப்போது சிவம் என்பது உருவமும் அல்ல, உருவம் அருவம் இரண்டும் சேர்ந்த சிவலிங்கமும் அல்ல என்று சொல்லி நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு இந்த பஞ்சபூதங்கள்தான் சிவம்...இந்த பஞ்ச பூதங்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ அவை எல்லாம் சிவம் என்று...ஒரு மெல்லிய திறப்பின் வழியே நாம் ஒரு மிகப்பெரிய பேருண்மைக்குள் மெல்ல நகர்த்தி வைக்கப்படுவோம்.

அமிர்த கடேஸ்வரர் ஞான மூர்த்தியாய் மெளனித்திருந்தார். பிரதோஷ தினத்தில் அல்லோல கல்லோலப் படும் அமிர்த கடேஸ்வரர் முன்னாள் வெகு நேரம் அமர்ந்திருந்தேன். என் தந்தையின் மரணத்தால் ஏற்பட்டிருந்த லெளகீக வலிகள் கண்ணீராய் பல்கிப் பெருக... ஏன்.. இப்படி எல்லாம் நிகழ்கிறது என்ற ஒரு பெரும் கேள்வியை அந்த பிரபஞ்ச  பேரிறுப்பிடம் வைத்து விட்டு எந்த வித அபிப்ராயமும் கொள்ளாமல் அமர்ந்திருந்தேன். எல்லாவற்றையும் உன்னிடம் சொல்லியாயிற்று, வாழ்வின் சூத்திரம் புரிந்தாலும், நம்மைச் சுற்றி நிகழும் யாவற்றையும் மறுக்க இயலாது ஏற்றுதான் ஆகவேண்டும் என்று அறிந்தாலும், வலிக்கின்ற போது அது வலிதானே?  என் மன பாரத்திற்கு ஒரு பதிலும் சொல்லாமல் அமிர்தகடேஷ்வரர் மெளனமாய் இருந்தார்.

நாளை என் பிள்ளை இப்படி ஏதேனும் ஒரு கோயிலில் போய் அமர்ந்து கேள்வி கேட்டு தன் மனபாரம் குறைக்க முயலலாம் என்ற ஒரு எண்ணம் எனக்குள் எட்டிப் பார்த்தது. ஒரு வேளை அப்பாவும் இப்படியாய் ஏதேனும் கோயிலில் வந்தமர்ந்து அவர் தந்தையின் இறப்பினை நினைத்து அந்த வலியை இறக்கி வைக்க முயன்றிருக்கலாம். இன்று அவர் எங்கிருக்கிறாரோ அங்கு நானும் நாளை இருப்பேன். இது சுழற்சி, பொருட்களை கை மாற்றி விட்டு விட்டு கரைந்து போகும் ஒரு வித்தை. இங்கே ஜனித்தது சிறப்பும் அல்ல, மரித்தல் வலியும் அல்ல. ஒரு காட்சியாய் தோன்றி மறு காட்சியாய் ஒடுங்கும் ஒரு நிகழ்வு.

மனதில் இருந்த வலி நிறையவே குறைந்திருந்தது. ஒரு பேரமைதி மனதில் சூழ்ந்திருந்தது. கோயில்கள் மட்டும் இல்லாமல் போயிருந்தால் பாதிக்கு மேற்பட்ட மனிதர்கள் ஒன்று பைத்தியம் பிடித்துப் போயிருப்பார்கள் அல்லது மன அழுத்தம் வந்து கடும் நோய்களுக்கு ஆளாகி இருப்பார்கள் என்று எனக்குத் தோன்றியது. இந்தியா முழுதும் பரவலாய் எழுப்பப்பட்டிருக்கும் ஆலயங்கள் எதற்காக எழும்பி இருக்கின்றன என்று உணர முடிந்தது.  கடவுளை தன்னையும் உள்ளடக்கிய ஒரு ஒட்டு மொத்த சக்தியை, ஒரு தாயாய், தந்தையாய், பிள்ளையாய், தன்னைப் போலவே ஒரு உருவத்தில் படைத்து வைத்துக் கொண்டு அவர்களிடம் பேசி பேசி மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ளும் ஒரு ராஜ வைத்தியத்தை சூட்சுமமாய் செய்து வைத்த அந்த ஆதியோகியை எனக்குள் மனம் குவித்து வணங்கினேன்.

கோயிலைச் சுற்றி விட்டு பிரகாரம் தாண்டிய போது எப்போதும் பார்க்கும் கோயிலை சுத்தம் செய்யும் வயதான தாத்தாவை பார்த்தேன். வணக்கம் சொன்னவரின் அருகில் சென்று அமர்ந்து என்ன தாத்தா  நீங்க எந்த ஊர் என்று கேட்டேன்.....மன்னார்குடி பக்கம் இருக்கும் ஏதோ ஒரு கிராமத்தின் பெயர் சொன்னார். பதினாறு வயதில் அவருக்கு திருமணம் ஆனதையும், முதல் மனைவி வயதுக்கு வந்த மறுநாள் இறந்ததையும் வெற்றிலை பாக்கு சீவலோடும் கண்ணீரோடும் சொல்லிக் கொண்டிருந்தார்...இரண்டாம் மனைவியை சொந்தங்கள் எல்லாம் கூடி அவருக்கு மணம் முடித்து வைத்த கதையையும் முதல் மனைவி போல் அவள் இல்லை என்றாலும் ஆதரவாய்தான் இருந்தார் என்று சொன்னார். இரண்டாவது மனைவி மாடு மேய்க்கச் சென்ற போது நாகம் தீண்டி இறந்து போனதைச் சொல்லி விட்டு அப்போ எனக்கு 22 வயசி என்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

அதன் பிறகு அவருக்கு அந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல் ஏதேதோ செய்ய அவர் மனநிலை தப்பிப் போனதாம். 6 வருடமோ இல்லை ஏழு வருடமோ வேலூரில் மனநிலை காப்பகத்தில் கை கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, வாயால் மட்டுமே உணவருந்தி நீர் குடித்து அவஸ்தைப் பட்டாராம். அதன் பிறகு வெளி உலகுக்கு மீண்டும் வந்த போது இருந்த ஒரு ஓட்டு வீடும் கொஞ்சம் நிலமும் உறவுகளால் சூறையாடப்பட்டு விட...தனிமையை தனது துணையாக தேர்ந்தெடுத்துக் கொண்டு ஆங்காங்கே வேலை செய்து பழையமதுக்கூர் அமிர்த கடேஸ்வரரை வந்து சேர்ந்தாராம்...

"என்னா சாமி வாழ்க்கை  எல்லாமே இம்புட்டுட்டூண்டு வவுத்துக்கு....."என்று ஒட்டிப் போயிருந்த வயிற்றில் அடித்துக் காட்டினார். 

"ஒரு நாளைக்கு அய்யர் பத்து ரூவா கொடுப்பாரு....நான் காலையில எந்திரிச்சு கோயில திறந்து சுத்தம் பண்ணி தண்ணி எல்லாம் எடுத்து வச்சி....அந்தா அங்க கிடக்கு பாருங்க தேங்காய்... அது எல்லாம் சிதறு காய் அடிச்சது...எடுத்து கழுவி வச்சேன்... இங்க பாருங்க புல்லு அது எல்லாம் நான் சீத்தி வச்சதுதான்... எட்டு மணிக்கு பெரமையா கோயில்கிட்ட போயி ரெண்டு இட்லி சாப்டுவேன்....மத்தியானம்....5 ரூபாய்க்கு சோறு கொடுப்பாவோ சாப்டுவேன்...சாங்காலத்துக்கு ஒரு டீ...அவ்ளோதான்...ஏதோ என் பொழப்பு ஒடிக்கிட்டு இருக்கு.. கோயிலுக்கு போறவோ வர்றவோ உங்களாட்டம் ஏதாச்சும் காசு கொடுத்துட்டு போவாவோ...

அதை வச்சிக்கிட்டு பொழப்பு ஓடுது சாமி....ஒடம்பு கிடம்பு சரிப்படலேன்னா அறிவழகன் டாக்டர்கிட்ட போவேன்...ஊசி கீசிய போட்டு மாத்திரையும் வாங்கிக் குடுத்து அனுப்புவாவோ...காசு வாங்க மாட்டாவோ..."கொடுத்த பத்துரூபாயை படக்கென்று வாங்கி கைக்குள் சுருட்டிக் கொண்டு நல்லா இருங்க சாமி என்றார். நான் இல்ல சாமி...அங்க உள்ள இருக்கு பாருங்க அதான் சாமி...நான் சிவலிங்கத்தைக் கை காட்டினேன்....

எனக்கு எல்லாமே சாமிதான்.. அதுஞ்சாமிதான், நீங்களும் சாமிதான், அய்யரும் சாமிதான், அறிவழகன் டாக்டரும் சாமிதான், கோயிலுக்கு வர்றவோ, போறவோ எல்லாரும் சாமிதான்...இங்க இருக்குற எல்லாராலயும் தானே சாமீ நான் பொழச்சு கிடக்குறேன்...

கோயில் விட்டு வெளியில் வந்தேன். 

கோயிலைச் சுற்றி இருந்த மரமும், கோயிலுக்கு எதிரே இருந்த குளமும் மனசை குளிரவைத்திருந்தன. ஏதோ ஒன்று விளங்கியும் விளங்காமலும்... வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தேன்...

கோயிலில் பூஜைக்காக மணி அடித்துக்  கொண்டிருந்தது.



தேவா சுப்பையா...


Pic Courtesy: Isha 




பேய் புடிச்சுருச்சு....!

$
0
0

பூசாரி கோடங்கியை அடிக்க ஆரம்பித்திருந்தார். 

தலைவிரி கோலமா உக்காந்திருந்த சேவத்தா மருமகளப் பாத்து எனக்கு தூக்கி வாரிப் போட்டிருச்சு. பேய் இருக்கு, பேய் மனுசங்கள பிடிக்கும்னு சொல்லிக் கேட்டு இருக்கேன். பேய் புடிச்ச ஆளுகள இதுவரைக்கும் நான் நேரா பாத்தது இல்லை. தலைவிரி கோலமா உக்காந்து இருந்த சேவத்தா மருமகள பாத்து ’பக்’க்னு ஆகிடுச்சு எனக்கு. நெத்தி புல்லா கோடாங்கி பூசுன விபூதி, குங்குமத்தோட பாக்கவே அகோரமா இருந்த அந்த புள்ளை 8 மாசத்துக்கு முன்னாடி சிதம்பரம் கட்டிக் கூட்டியாரும்  போது எம்புட்டு அழகா இருந்தா...

கார விட்டு இறங்கி பொண்ணும் மாப்புளையும் சோடியா நின்னத பாத்து இந்த ஊரே மூக்கு மேல கை வச்சு வேடிக்கைப் பாத்துச்சு. அழகுனா அழகு அம்புட்டு அழகு பேருக்கு ஏத்த மாதிரி குமாரின்னா குமாரிதான்னு எங்க பெரிய ஆயா சொல்லி திருஷ்டி கழிச்சுப் போட்டது எனக்கு நேத்து நடந்த மாறி இருக்கு. என்னைய மாதிரி கல்யாணம் ஆகத பயலுக எல்லாம் கட்டுனா சிதம்பரம் கட்டிக் கூட்டியாந்த மாறி கட்டணும்டானு பேசி சிரிச்சுக்கிட்டு இருந்தோம். சேவத்தா ஓடியாந்து ஆராத்தி எடுத்து மருமகளை உள்ள கூட்டிக்கிட்டு போகயில கண்ணு வச்சி தொலைக்காதியடி பாவி பரப்பாயிகளான்னு தெரு முனையில நின்னுகிட்டு இருந்த எங்கூரு பொம்பளைக காது படவே சொல்லியும் புடுச்சு...

சேவத்தா அப்பத்த கூட எப்புடி ஒருத்தன் குடும்ப நடத்தி இருக்க முடியும்னு ஒரு பட்டிமண்டபமே வைக்கலாம். அம்புட்டு ஆங்காரம் புடிச்ச பொம்பள. தண்டட்டி அதிர அவ தடங்க் தடங்குனு கண்டாங்கி சேல முந்தானையை அள்ளிச் சொருகிகிட்டு ஒத்த கடைக்கு சாயா வாங்க லோட்டாவ தூக்கிகிட்டு நடந்தான்னா ஆத்தாடி தெருவே கிடு கிடுத்துப் போயிடும். இப்பத்தான் ஒரு மூணு வருசத்துக்கு முன்னாடி செத்து போனாரு சேவாத்தா புருசன். எப்பவாச்சும் குடிக்கிற பழக்கம் இருக்க அந்த மனுசன் குடிச்சா உடம்புல உசுரு இருக்காதுன்னு தெரிஞ்சேதான் அதையும் செய்வாரு. ஒரு நாள் ராத்திரி ஏழு மணிக்கு மாடுகளப் புடிச்சு தவிடு தண்ணி காட்டிப்புட்டு கொண்டாந்து பட்டில அடச்சு வைக்கோல அள்ளிப் போட்டுக்கிட்டு இருந்தப்ப விழுகுதய்யா அடி திம்மு திம்முனு சேவத்தா வீட்டுக்குள்ள... நான் வெல வெலத்துப் போய் ஆத்தி அந்த மிலிட்டிரிக்காரன் சேவத்தாவ வெளுக்காறனப்பே.. நான் போய் பாத்துட்டு வாரேன்னு....

ஊத்தி வச்ச கஞ்சித் தண்ணிய குடிக்காம சேவத்தா அப்பத்தா வீட்டு வாசல்ல நின்னு உள்ள முளையலாம்னு யோசிச்சு நின்னப்பா...."அடியே..... காளீளீளீஈஈஈஈ உனக்கு கண்னு இல்லையான்னு..."அந்த மிலிட்டரி ஐயா கத்திக்கிட்டு இருந்தாரு.....திம்மு திம்முனு சத்தம்.....அந்த அப்பத்தா தான் அந்த ஐயாவ அடிச்சுக்கிட்டு இருக்குன்னு வெளங்கிக்கிட்டு..... ஏப்புத்தா என்ன கரைச்சலுன்னு  மெல்ல கதவோரம் போய் கேட்டதுக்கு...."போட போக்கத்தப்  பயலே பொழப்பு தலப்பு ஒண்ணும் கிடையாதா ஒனக்கு...அடுத்த வூட்டுல என்ன நடக்குதுன்னு மோப்பம் புடிச்சுக்கிட்டு திரியுற நாய் மாதிரி'ன்னு சொல்லவும் வெல வெலத்துப் போய் வீட்டுக்கு ஓடியாந்துட்டேன்...அது நடந்து ஆச்சு ஒரு ஆரேழு வருசம்....

டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ன்னு ஒரு  பெரிசா சத்தம் போட்டு நாக்க மடிச்சுக்கிட்டு.....தலைய சுத்தி சுத்தி சேவத்தா மருமக ஆடிக்கிட்டு இருந்துச்சு. நான் மெரண்டு போய் செவத்தோட ஒண்டிக்கிட்டேன். அந்த அறைவூட்டுக்குள்ள அப்பவோ இப்பவோண்டு மங்கலா எரிஞ்சுக்கிட்டு இருந்த  மஞ்ச குண்டு பல்பு சாம்பிராணி, ஊதுவத்தி புகையில இன்னுமே மங்கிப் போயிருந்துச்சு. எனக்கு பேயி புடிச்சவள காட்டியும் இந்த மொட்டயாப் போற கோடாங்கிய காங்கயிலதான் இன்னும் பயமா இருந்துச்சு. அவன் ஆளும், மொகறையும், குடுமியும்.....துண்ணூறும்னு யோசிச்ச்சுட்டு இருந்தப்பவே....

ஏப்பே...மார்நாட்டார் பேரனே...ன்னு என்னைய கைய காட்டி கூப்புட்டாரு கோடாங்கி...! அட என்னிய என்னாத்துக்கு கூப்புடுறன்னு யோசிச்சுக்கிட்டே கிட்ட போனேன். சைகை காட்டி....இன்னும் கிட்ட வான்னு சொன்னாரு.. குனிஞ்சு அந்தாளு வாய்கிட்ட காத கொண்டு போனேன்...ஏப்பே...சரட்டுனு ஓடிப்போயி 10 ரூவாய்க்கு வெத்தலை பாக்கு வாங்கிட்டு....உசேன் பாய் கடையில கோழி ஒண்ண உசுரோட வாங்கிட்டு ஒடியான்னு சொல்லி முடிக்க முன்னாடி வெடுக்குனு நான் வெலகிக்கிட்டேன்....

அட பொசகெட்டப் பயலே...பேய ஓட்ட கட்டுக்கட்டா துண்ணூறையும் குங்குமத்தையும் பூசிக்கிட்டு வந்து ஒக்காந்தா மட்டும் போதுமா..வக்காலி காலையிலயே லோக்கல் சரக்க போட்டுக்கிட்டு இல்லய்யா வந்துருக்காம் இந்த கோடாங்கி...நாத்தம் குடலை புடுங்குச்சு எனக்கு.  ஏய்யா... பேதில போறவனே பேய ஓட்றது எல்லாம் சரி குளிச்சுப்புட்டு வரப்புடாதா குடிச்சுப்புட்டு வந்துருக்கியேன்னு நான் சொல்லவும்... சேவத்தா மயன் சிதம்பரம்.. கொஞ்சம் வெரசா வாங்கிட்டு ஓடியாப்பு நான் அங்கிட்டு இங்கிட்டு நகரமுடியாதுன்னு என்ன கெஞ்ச ஆரம்ப்ச்சுட்டான்...

கோழி கழுத்த கடிச்சு துப்பி ரத்தத்தை சேவத்தா மருமக மேல பீச்சி அடிச்ச கோடாங்கி.. யாருடி நீய்யினு அதட்டி கேட்டாரு....அதுக்கு பேயி...எம்பேரு....பேச்சம்மை. ஏன் ஊரு கண்டரமாணிக்கம்...நான் செத்து நாலு வருசம் ஆச்சு...உனக்கு என்னடா வேணும்னு அதட்டி நாக்க கடிச்சி கண்ணு முழிய உருட்ட....அங்கன வேடிக்கபாத்துக்கிட்டு இருந்த சனம் பூரா வெல வெலத்துப் போச்சு....

சூரான சூரி, வீரான வீரி சேவத்தா மெரண்டு போயி ரெண்டு கையவும் எடுத்து கும்பிட்டுக்கிட்டு துன்னூற பூசிக்கிட்டு சம்மண கால் போட்டு உக்காந்து இருந்தத பாத்து எனக்கு குபுக்ன்னு சிரிப்பு வந்துடுச்சு. ஏப்பத்தா நீயல்லாமா பேயப் பாத்து பயப்புடுற.....தக்காளி உன்னிய பாத்துல பேயி பயப்பட்டுச் சாகணும்னு நினைச்சு சிரிச்சு வைச்சாலும் சேவத்தா மருமக உள்ள இருந்த பேயி நெசமாவே எல்லோரு ஈரக்கொலையவும் அக்க ஆரம்பிச்சிருந்துச்சு.

கோடாங்கி உடுக்கைய எடுத்து ” த்த்தூம்.. தும்...த்தும்ம்.. தும் த்தும்ம் தூம்...?னு அடிக்க பேயி ஆடிச்சி பாருங்க ஆட்டம்....ஏன்டா.. கண்டார ******** மகனே.. என்னடா ஒனக்கு வேணும்.....னு எட்டி கோடாங்கி முடிய புடிச்சு இழுத்து ரெண்டு அப்பு கோடாங்கிக்கு விட்டுச்சு பாருங்க,  அதக்கண்டு பக்கத்துல இருந்த சேவத்தா அப்பத்தா ஆத்தி கோடாங்கியவே அடிக்கிறாளே....ன்னு பயந்து ஓட ஆரம்பிக்க....

சேவத்தா அப்பத்தாவ எவ்விப் பிடிச்ச பேயி...விட்டுச்சு ரெண்டு அறை சேவத்தாளுக்கு சப் சப்புன்னு... எங்கடி ஓடுற பொசகெட்ட சிறுக்கி..? கோடாங்கிய கூட்டியாந்து என்ன வெரட்டப் பாக்குறியான்னு நங்கு நங்குன்னு சேவத்தால மிதிச்ச மிதில எனக்கு ஏண்டா இங்க வந்து நின்னோம்னு ஆயிபோச்சு....கேப்பு கூட கிடையாதே ஓடன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தப்பாவே....சுதாரிச்சுக்கிட்ட கோடங்கி சேவத்தா மருமகள கையில இருந்த பிரம்பால அடிச்சு உக்கார வச்சாரு....

ஆத்தீ...இடுப்ப ஒடைச்சுப் புட்டாளே சக்காளத்தி எந்த காட்டுப் பேயோ... எங்குடிய  வந்து கெடுக்குதேன்னு செவத்தோரமா ஒக்காந்து கண்ண கசக்கிட்டு இருந்த சேவத்தாவ பாத்து சிரிக்கிறதா அழுகுறதான்னே தெரியல எனக்கு....

கோடாங்கியோட அடிக்கு பயந்து பேயி பேச ஆரம்பிச்சு இருந்துச்சு....

ஒன் பேரு என்ன....?

பேச்சம்மை...

எங்கன புடிச்ச இந்தப் புள்ளைய..?

கருவாட்டுப் பொட்டல்ல சுப்பி பொறுக்க வந்தப்ப பிடிச்சேன்....

ஒனக்கு என்ன வேணும்...?

எனக்கு கோழி வறுத்து மீங்கொளம்பு வச்சு, ஆட்டு ரத்தம் பொரிச்சு....ரெண்டு நாள் முச்சூடும் இந்த எடுபட்ட சிறுக்கி சமைச்சுக் கொடுக்கணும்...னு சொல்லி சேவாத்தால கைய காட்டிச்சு பேயி.....

அப்புடி செஞ்சா போவியா....?

முடியாது...

கோடங்கி கம்ப ஓங்கிக்கிட்டே பொறவு...என்ன வேணும் உனக்கு..?

ராத்திரி ராத்திரி எனக்கு கைய காலை புடிச்சு விடணும்....

அதை யாரு செய்யணும்...?

அந்த பொச கெட்ட செறுக்கிதான்....சேவத்தாவை மீண்டும் காட்டிச்சு பேயி(!!!!???)

செய்யச் சொல்றேன் இந்தப் புள்ளைய விட்டுட்டுப்  போயிடுவியா....?

முடியாது.

நான் சாட்டைய எடுத்தாதேன் நீ சரிப்படுவ...எல்லாந்தேன் செய்றேன்னு சொல்றோம்ல பொறவு....என்ன மசுருடி வேணும் ஒனக்கு ....கோடாங்கி ஆவேசப்பட்டார்.

நான் ரெண்டு மாசத்துக்கு இங்கிட்டுதான் சுத்திக்கிட்டு திரிவேன். இந்த புள்ள உடம்புதேன் எனக்கு வாட்டமா இருக்கு. இந்தப் புள்ள இந்த ஊர்ல ரெண்டு மாசத்துக்கு இருக்கவே கூடாது......

இருந்தா மறுபடி புடிப்பேன். அவ ரெண்டு மாசம் இங்கன இல்லேன்னா நான் எம்பாட்டுக்கு போயிருவேன்....

கோடாங்கி சேவத்தாள பாத்து.... ஏத்தா என்னா செய்ய.. பேயி கேட்டத்த செஞ்சுடுவோமா...? செஞ்சுதேன் ஆகணும்த்தா..ஆங்காரம் புடிச்சா பேயாவுல்ல இருக்கு....

சேவத்தா அப்பத்தா கைய எடுத்து கும்பிட்டு...செய்ஞ்சுருவோம் சாமி...பேய மட்டும் பத்தி விட்டுறுங்க...நீங்க நல்லா இருப்பியன்னு கெஞ்ச...

எல்லாம் செய்றோம்...நீ இப்ப இந்த புள்ளைய விட்டுப் போறியா....? கோடாங்கி அதட்டினார்....

நான் இப்ப இந்த புள்ளைய விட்டுபோக மாட்டேன்...ரெண்டு நாள் இருந்து எல்லாம் திண்டு முண்டு புட்டு....அவ ஊருக்கு போன பெறகுதான் போவேன். எல்லாத்துக்கும் கோடாங்கி ஒத்துக்கிட்டு தேங்காய் ஒடைச்சு ...கருப்பா......ன்னு கத்தி பூசைய ஆரம்பிச்சாரு.....

எம்புட்டு வெளம் புடிச்ச பேயா இருக்கே சாதிச்சு புடிச்சய்யா.... இப்புடித்தேன்....தங்கராசு அத்தைக்கி பேய் புடிச்சு அல்லோல கல்லோலப் படுத்திப் புடிச்சு...முருகாயி வீட்ல கூட இப்டித்தேன்....

ஏப்பு ரெண்டு நாளைக்கு முன்னாடி ரெண்டாவது ஆட்டம் சினிமா விட்டு வரையில கம்மாக்கரை ஓரமா நாளைஞ்சு பேய நான் பாத்தேன்ப்ப்பு......

அட கொள்ளி வா பிசாசுன்னு ஒண்ணு இருக்கப்பு...அதுவும் கருவாட்டுப் பொட்டல்லதேன் இருக்கு....நான் அன்னிக்கு வயல்ல தண்ணிய பாச்சிட்டு வரையில வரப்பு ஓரமா தலையில நெருப்பு எரிஞ்ச மேனிக்கு ஓடுச்சப்பா....

பர்மாக்காரு  மருமக தூக்குப் போட்டுச் செத்துப் போச்சுல்ல...அது வீடு வீடா வந்து ராத்திரி பன்னென்ன்டு மணிக்கு மேல.....பசிக்குதுன்னு கதவு தட்டி சோறு கேக்குதாம்ம்பா....

ஆளாளுக்கு பேசிக்கிட்டெ சேவத்தா வீட்ட விட்டு நகந்து போயிகிட்டு இருந்தாக....

மோகினி பிசாசா இருக்கட்டும்,  காட்டேரியா இருக்கட்டும் குட்டிச்சாத்தானா இருக்கட்டும்....அதான் நான் இருக்கேல்லா மக்கா என்ன பயம்னு சொல்லிக்கிட்டே

ஒத்துக்கிட்ட மாதிரி எல்லாத்தையும் செஞ்சு கொடுத்துட்டு இந்த புள்ளைய அவுக அப்பன் வீட்டுக்கு ஒரு ரெண்டு மாத்தைக்கு அனுப்பி வைய்யி அம்மாயி எல்லாம் சரியாப் போயிடும்....சரி சரி தட்சணையவு கொடு நான் போறேன்னு கோடங்கியும் கெளம்பிகிட்டு இருந்தாரு.

சேவத்தா மயன் எங்கிட்ட வந்து....

ஒரு வாரத்துக்கு முன்னாடியே.. இங்க வேல வேலன்னு என்ன கொண்டு எடுக்குது ஒங்காத்தா..கொஞ்ச நேரம் கூட ஓய்வு ஒழிச்ச இல்ல...ஏதாச்சும் கேட்டா...தட்டுவாணி முண்ட எதித்தா பேசுறன்னு முள்ளு கம்ப எடுத்துக்கிட்டு அடிக்க வருதுய்யா, என் கைய பாரு பாத்திரம் தேச்சு முள்ளு வெட்டி பொத்துப் போய் கெடக்கு.. என் காலப் பாரு.. கருவ முள்ளு குத்தாத எடமே இல்ல... என்னிய பேசாம எங்கப்பன் வீட்ல ஒரு ரெண்டு மாசம் கொண்டு போயி விடுய்யான்னு கெஞ்சுனா பாவி மக....

அப்புடியாச்சும் செஞ்சு இருந்தா இந்த பாவிப் பேயி புடிக்காமலேயே இருந்திருக்கும்டா மாப்புளன்னு சொல்லி கண்ண கசக்கினான்....

என் மூளைக்குள்ள பளீச்ச்னு பல்ப் ஒண்ணு எரிய அங்கிட்டு ஓரக்கண்ணால சேவத்தா மருமகளா பாத்தேன்....

முடிய புடிச்சு இழுத்து சுருட்டிக்கிட்டு காலை நீட்டிக்கிட்டு....எனக்கு இப்ப பசிக்குதுடின்னூ சேவத்தாவ ஒரு அதட்டுப் போட.....சேவத்தா இந்தா வந்துட்டேன்டி ஆத்தான்னு அடுப்படிக்குள்ள ஓடவும்....

நான் மெல்ல பேயி கிட்ட ச்ச்சே ச்சே சேவத்தா மருமக கிட்ட போயி "பேச்சம்மை...."ன்னு கூப்புட்டு மெல்ல சிரிச்சேன்....சேவத்தா மருமக தலை முடிய ஒதுக்கி விட்டுட்டு ....என்னிய நிமிந்து பாத்து......அண்ணேன்னு கூப்டுட்டு கேவி கேவி அழ ஆரம்பிச்சுது.....

” ஏய் மாப்புள பேய்கிட்ட போய் என்னப்பா சகவாசம் ரெண்டு நாளைக்கு அது கிட்ட போகாத கோடங்கிதான் சொல்லி இருக்காப்ள இல்ல....இங்கிட்டு வாய்யா....” 

சிதம்பரம் என்னை கூப்பிட்டான். 

நான் பேயின் தலை தடவிக் கொடுத்து விட்டு ...தைரியமா இருத்தா....ன்னு சொல்லிட்டு எந்திரிச்சு வீட்டுக்கு கிளம்பினேன்.....!


பேயி இருக்கதாம்யா செய்யுது....இந்த உலகத்துல....


கண்ணீரோடு நடந்து கொண்டிருந்தேன்!



தேவா சுப்பையா





தீராக் காதல்...!

$
0
0


கரடு முரடான
காய்ந்த நிலமாய்
நான் கிடந்த பொழுதொன்றில்
சிறு மழையாய் வந்து
என்னை மிருதுவாய்
நனைத்துச் சென்றவள் நீ...

உயிர் பறிக்கும்
வாழ்க்கையினூடே
நான் களமாடிக் கொண்டிருந்த
மிருக பொழுதுகளில்
எனக்காய் எங்கிருந்தோ
நீ வாசித்த கவிதை வரிகளை
சுவாசித்து சுவாசித்து
என் இரவுகளை
உன் கனவுகளால் மட்டுமே
நான் நிரப்பிக் கொண்டு
என் இரணங்களுக்கு
உன் காதலால்தான்
மருந்திட்டுக் கொண்டேன்..!

உன் நினைவுகள்
ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும்
இந்த மயான இரவில்
என் கர்ஜனைகளால்
உனக்காக எழுதிக் கொண்டிருக்கும்
வார்த்தைகளுக்குள்
மண்டியிட்டுக் கிடக்கும்
என் வீரத்தை....
தீராக்காதலென்று அறிக பெண்ணே...!



தேவா சுப்பையா...




பூ பூக்கும் ஓசை...!

$
0
0


என்ன வேணும் உனக்கு...? 

ஒண்ணும் வேண்டாம்.

ஏன் ஒரு மாதிரியா இருக்க...? 

ஒரு மாதிரியான்னா..?

ஏதோ திக்பிரமை பிடிச்ச மாதிரி. எங்கேயோ வெறிச்சு பாத்துக்கிட்டு...யார்கிட்டயும் பேசாம....

இப்டி இருக்க எனக்குப் பிடிச்சு இருக்கு. 

இப்டி இருக்க கூடாதுடா அம்பி. மனுசாள் கூட ஒட்டணும். சின்ன வயசுன்னா உனக்கு...வாழ்க்கையில நல்லது கெட்டது எல்லாம் பாக்கணுமோ இல்லியோ...

நல்லது கெட்டது நீங்க பாத்திட்டீங்களா சாமி...? அவன் குருக்களைப் பார்த்துக் கேட்டான்.

பாத்துண்டுதானே இருக்கேன். டெய்லி பகவானை சேவிக்கிறேன்...வர்றவா போறவா எல்லாருக்கும் வேண்டி பூஜை பண்றேன்...காலையில நடை தொறக்கிறேன்.. நைட்டானா அடைக்கிறேன்.....ஏதோ ஓடிண்டிருக்குடா அம்பி...

12 மணி ஆச்சு நான் கோயில் நடை சாத்தணும்.....அடிக்கடி உன்ன இங்க பாக்குறேனோ இல்லையோ அதான் படக்குன்னு கேட்டுட்டேன்...அம்பிக்கு என்ன வயசாறாது..?

27

பாத்தியா ரொம்ப சின்ன வயசு...பகவான வேண்டிண்டு போய்கிட்டே இரு...நல்லா அமர்க்களமா வருவே...என்ன வேலை பாக்கறடா அம்பி...

ஹோட்டல்ல...

ஹோட்டல்லனா...?

ஹோட்டல்.

குருக்கள் அவனை ஏற இறங்கப் பார்த்தபடி சொன்னார். நடை சாத்தப் போறேன்டா அம்பி.

நடை சாத்திக்கோங்க. நான் பிரகாரத்துக்குள்ளதானே இருக்கேன். கோயிலை பூட்றப்ப சொல்லுங்க.

சரிடா அம்பி நான் வர்றேன். குருக்கள் இடுப்பில் சாவியை சொருகிக் கொண்டு கையிலிருந்த பேக்கை தோளில் மாட்டிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்.

அவன் கண் மூடி அமர்ந்திருந்தான்.

ரகசியங்கள் நிறைந்த வாழ்க்கை இது. எத்தனை திட்டமிட்டு நகர்ந்தாலும் அடுத்த கணத்தில் என்ன நிகழும் என்று யாருக்குமே தெரியாது. எல்லோருக்கும் ஏதோ ஒன்று வேண்டுமென்று வெறி பிடித்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள். நிஜத்தில் ஒன்றுமே கிடையாது அல்லது கொண்டு செல்ல முடியாது என்பதை வெகு சிலரே உணர்ந்திருக்கிறார்கள். எதேச்சையாக இந்த பூமிப் பந்துக்குள் வந்து விழுந்தவர்கள் மனிதர்கள். வாழ்கை அவர்களுக்கு அருளப்பட்டது. அவர்கள் அதை நாசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

எல்லாமே நிகழ்ச்சிகள். ஒன்று ஒன்றோடு சேர, ஒன்று ஒன்றிலிருந்து பிரிய இங்கே புதிது புதிதாய் எல்லாம் நிகழ்கிறது. இதுதான் வேண்டும் என்ற பயணித்தில் எது வேண்டுமோ அது ஆச்சர்யமாய் கிடைத்தும் விடுகிறது. எத்தனையோ முறை முயன்று தோற்றுப் போய் ஏதோ ஒரு கணத்தில் நிகழ்வதுதான் கண்டுபிடிப்புகள் எல்லாமே. இது சாத்தியக்கூறுகள் நிறைந்த வாழ்க்கை. எதுவுமே இல்லை என்று சொல்ல முடியாது. எல்லாம் இருக்கிறது என்றும் சொல்ல முடியாது. கணத்துக்கு கணம் மாறும் ஒரு ஓட்டம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

எந்த கணத்தில் எனக்குள் தடம் புரண்டு ஒரு புதிய பார்வை கிடைத்தது. ஊர் சுற்றிக் கொண்டு உல்லாசியாய் திரிந்து கொண்டிருந்தவனை ஒரு கணத்தில் இழுத்துப் பிடித்து நிறுத்தி பார்வையை மாற்றிய விசயம் எது. விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு படிக்க ஆரம்பித்த அன்று ஏதோ ஒன்று எனக்குள் நிகழ ஆரம்பித்தது. எனக்குள் மாற்றம் ஒன்று  மெல்ல மெல்ல பூக்க ஆரம்பித்தது. அது வெகு நிச்சயமாய் ஒரு அற்புதமான அனுபவம்தான். அதை சொற்களுக்குள் கொண்டு வருவது வெகு கடினம் தான். நரேந்திரனின் வாழ்க்கை தொடங்கிய விதமும், அவன் எதிர் கொண்ட வலிகள், மற்றும் கடவுள் பற்றிய அவனின் நிலைப்பாடு என்று...எல்லாமே ஒரு வித வேகத்தில் ஒரு காட்டாறாய் என்னை இழுத்துச் சென்றது.

குறைகளை மிகைகள் ஆளும்.  இது நியதி. அன்று....என்னைச் சுற்றி இருந்த மிகை நேர்மறையாக இருந்ததை உணர்ந்தேன். நரேந்திரனின் வாழ்க்கைக்குள் விழுந்தேன். அவன் வாழ்க்கையின் பெரும்பயணத்தை வார்த்தைகளில் வாசித்து அந்த வார்த்தைகளை நினைவுகளால் கட்டித் தழுவிக் கொண்டு பேச்சற்று, உணவற்று எந்த தொடர்புமற்று கிடந்தேன். ஆமாம் நரேந்திரன் என்னை தடம் மாற்றிப் போட்டுவிட்டான். 39 வயதில் அவன் எப்போத் இறப்பான் என்று முன் கூட்டியே சீடர்களிடம் சொல்லி வைத்திருந்தான். பேசிப் பேசி தனது வேதாந்த விளக்கங்களை இந்தியா முழுதும் இறைத்து வைத்தவன் அவன். ஒப்பற்ற ஒரு மார்க்கத்தின் புகழினை உலகத்தின் முன்பு சலனமின்றி எடுத்து வைத்தவன் அவன்.

விவேகானந்தர் ஒரு மாலை வேளையில் இறந்து போகிறார். அவர் இறந்த பின்பு அவர் உடல் எரியூட்டப்பட்டு விட்டது. அவர் விதைத்துச் சென்ற விதையோ இன்று இந்திய தேசம் முழுதும் வேர் பிடித்து பரவி நிற்கிறது. அவன் வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்லை ஆனால் அவன் வாழ்ந்ததற்கு  காரணம் இருந்தது. எதிர்பாரமல் நாம் வந்து விழுந்த இந்த பூமிக் கிரகத்தின் சிக்கல் மிகுந்த இடம் எது தெரியுமா?

மனித மனம்தான்.

சிக்கலான மனித மனங்கள் மரணத்திற்கு பயம் கொள்கிறது.  மரணம் இல்லாவிட்டால் இங்கே மதங்கள் இல்லை. கடவுளர்கள் இல்லை....ஆனால் மரணம் இல்லாவிட்டால் வலியவன் எளியவனை தனது அடிமையாக்கி வைத்துக் கொண்டு அவனை கடவுள் என்று அறிவித்துக் கொள்ளும் அபத்தமும் நிகழ்ந்தேறும்.  மனம் என்பதே இங்கே பிரச்சினை. நான் மனதை கடந்து விட்டேனா என்று தெரியவில்லை ஆனால் மனம் என்னும் விசயம் எனக்கு ரொம்பவே மெலிதாகி இருக்கிறது. 

அதே உலகம். அதே மனிதர்கள் அதே வாழ்க்கை. அதே போராட்டம். இங்கே ஞானம் என்னும் பூ பூத்து என்ன நிகழ்ந்து விட்டது பெரிதாய்...? என்று கூட பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.

பூக்கள் பூப்பதற்கு என்ன காரணம் இருக்கிறது. பூக்களை வைத்துக் கொண்டு நீங்கள் என்னதான் செய்ய முடியும். பூக்கள் உங்களுக்கு ஒன்றையுமே கொடுப்பதில்லை. அவை பூப்பதும் ஏதோ ஒன்றை கொடுப்பதற்காக இல்லை. அது பூத்தது என்னும் அந்த பரவசத்தை எப்படி பூ இல்லாமல் பெற முடியும். பூவை விற்று காசாக்குபவனுக்கு வந்து விடுமா  அந்த பரவச நிலை. பூக்களை விழிகள் விரித்துப் பார்த்து அதை ஒரு சுகானுபவமாக்கிக் கொள்பவனுக்கும் அதை வியாபாரம் செய்கிறவனுக்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா...

ஒன்றுமே இல்லாத ஒரு பைசா பிரயோசனப்படாத வானவில்லை அந்த கணத்தில் பார்த்து ரசிக்கும் இனிமையை வானவில் பற்றி பேசிக் கொண்டிருப்பது கொடுத்து விடாது. அழகுகள் இனிமையானவை நாம் ரசிக்கும் வரையில்....அடைய நினைக்கையில் ஆரம்பிக்கிறது அபத்தங்கள்.

யோசித்துக் கொண்டே இருந்தான் அவன்.

மூச்சினை உற்றுப் பார்த்தான். வேகம் சீரானதாக இல்லை என்று உணர்ந்தான். மூச்சை வெகு நிதானமாக இழுத்து அடி வயிறு நிரப்பி பின் வயிறு காலியாகும் வரை மூச்சை வெளியே விட்டான். தொடர்ந்து செய்து கொண்டிருந்த போது ஒரு நிதானம் புத்தியில் சுடர் விட்டது. அம்மா அவனின் நினைவுக்கு வந்தாள். அப்பா வந்தார், உறவுகள், அலுவலகம், வேலை சென்னை, சென்னையின் போக்குவரத்து....உமா நினைவில் வந்தாள். 

உமா என்னை நேசிக்கிறாள். அவளை நானும் நேசிக்கிறேன். இதைக் கடந்து அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விடாமல் இதை பார்த்துக் கொள்ள வேண்டும். நகர்ந்தால் என்ன ஆகும் என்று கோணிச் சிரித்தது மனம். ஒன்றும் ஆகாது....வாழ்க்கை என்னை இழுத்துப் பிடித்து வைத்துக் கொண்டு பொய்யாய் ஒரு ஆட்டம் போடச் சொல்லும். திருமணம் என்ற ஒரு நிகழ்வை நிகழ்த்தி பின் புதிது புதிதாய் பொறுப்புகளைக் கொடுத்து, அதன் மூலம் சிக்கல்களைக் கொடுக்கும். சந்தோசங்கள் என்று தற்காலிகமாய் ஏதேதோ எழுதி வைக்கும். அதன் முடிவில் சிரித்துக் கொண்டே துன்பங்களும் வரும்.

அறிந்தே சகதியில் பல மைல் தூரம் இறங்கிப் போய் விட்டு பின் திரும்புவதற்கு கஷ்டப்படுவதை விட....விலகி இருத்தல் நலம் இல்லையா. 

வாழ்க்கையின் இயல்பை நீ மீறுகிறாயே...? மனம் கேட்டது.

மீறுவதுதான் எனது இயல்பு என்றால் என் வாழ்க்கையே அதுதான் என்று ஆகிப் போகிறதே...

கண் மூடி அவன் அமர்ந்திருந்தான். கோயிலின் பிரகாரத்துக்குள் குபு குபுவென்று காற்று அடித்துக் கொண்டிருந்தது. கோயிலின் ஒரு மூலையில் அவன் அமர்ந்திருந்தான்.

ஏன்டா அம்பி இன்னும் போகலையா நீ...?

கண் விழித்துப் பார்த்தான். குருக்கள் வந்திருந்தார்.

மணி பார்த்தான் மாலை நான்கு.

இல்ல இனிமேதான் போகணும் சாமி. இன்னிக்கு நைட் டூட்டி.

அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தார் குருக்கள்.

ஏன்டா அம்பி.. உன்கிட்ட ஒண்ணு கேக்கணும்...?

கேளுங்க சாமி....

ஒரு நாள்ல மத்தவாள விட நாந்தான் ஸ்வாமி கூட அதிக நேரம் நிக்குறேன். வர்றவா எல்லோருக்கும் மந்திரம் சொல்லி அர்சனை செய்றேன். பகவானுக்கு அபிஷேகம் செஞ்சு அலங்காரம் செஞ்சு... எல்லாம் செய்றேன்...

கூடுமான வரைக்கும் நேர்மையாவும் இருக்கேன். இருந்தாலும் ஏதாவது ஒண்ணு வாழ்க்கையில அபத்தமா நடந்துண்டே இருக்கு... நிம்மதி இல்லாம போயிடுது....

அவன் அவரை உற்று நோக்கினான்.....

கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க ஸ்வாமி....எல்லாம் தீரணும்னு....தீர்ந்துடும். பகவான் கை விடமாட்டார். எல்லாமே தீரணும்னா எதுவுமே வேணாம்னு இல்ல சாமி இருக்கணும். கடற்கரையில நின்னுகிட்டு அலை அடிக்குதுன்னு  ஏன்னு கேட்டா என்ன சாமி பதில் சொல்றது...

கரைய விட்டு தூரமா போங்கன்னுதான் சொல்ல முடியும். தூரமா போகணும்னு பகவான் கிட்ட வேண்டிக்கோங்க....கடலைப் பாக்கணும்னா தூரத்துல நின்னும் பாக்கலாம். நீங்க கிட்ட நின்னு பாக்குறீங்க. ஒரு நாள் இது என்ன இது நான் ஏன் இங்க நிக்குறேன்னு கடவுள் தோண வைப்பார். அன்னிக்கு நகர்ந்துடுங்க...

என்னவோடா அம்பி.. ஒண்ணும் நேக்கு புரியலை. வா... கற்பூரம் காட்றேன்....வந்து பகவானை சேவிச்சுக்கோ....

கற்பூரத்தைக் கண்ணில் ஒத்திக் கொண்டவிபூதியை அவன் வாங்கிக் அணிந்து கொண்டான். 

வர்றேன் சாமி....கூறி விட்டு கோயிலை விட்டு வெளியேறினான்.

மாலை வேளை கோயிலுக்குள் கூட்டம் சேரத் தொடங்கி இருந்தது. குருக்கள் பிசியாகத் தொடங்கி இருந்தார்.



தேவா சுப்பையா....





கரையைத் தொடாத அலைகள்...!

$
0
0
                                           

இதோ இன்று நான் தொலைந்து போனேன்  பெண்ணே. இன்று நீ புன்னகைத்துச் சென்ற பின்பு நான் ப்ரியங்கள் நிறைந்த வனமொன்றில் தனியே சுற்றிக் கொண்டிருக்கும் வரம் ஒன்றை பெற்றேன் என்பதை நீ அறியாய். வேகமாய் கூந்தல் ஒதுக்கியபடியே நீ பேசும் காவிய காட்சிகளை என் காகிதத்தில் நான் கிறுக்கி வைத்த கதை எல்லாம் என்னுள் மட்டுமே இதிகாசங்களாய் விசுவரூபமெடுத்து நின்று கொண்டு ஏதோ பேசும் இரக்கமற்ற ராத்திரிகளை உன் புன்னகை உடைத்தெறிந்துதான் விட்டது.

காதல் வயப்படுதல் ஆசிர்வாதம். காதலிப்பது சுகம். காதலிக்கப்படுவது வரம். என் எல்லா வார்த்தைகளையும் உன் நினைவுகள் இன்று உறிஞ்சிக் கொண்டன. உனக்காக ஒரு கவிதை ஒன்றை எழுதலாம் என்று வெகு நேரமாய் முயன்று கொண்டிருக்கிறேன். காகிதமும் பேனாவும் நானும் எவ்வளவோ நேரம் போராடியும் ஒரு சொல்லைக் கூட என் புத்தியிலிருந்து பெயர்த்தெடுத்து எழுத்தாக்க முடியவில்லை. மொழி என்ற ஒன்று இல்லாத காலத்தில் எப்படி எழுதி இருப்பார்கள் தங்கள் உணர்வுகளை என்ற ஒரு தர்க்கம் எனக்குள் எட்டிப்பார்த்து எழுத முடியாத என் மனோநிலைக்கு ஆதரவாய் தோள் கொடுத்தது.

எழுதுவது என்பது ஏதோ ஒரு தாக்கத்தின் மீட்சி. உன்னை விட்டு மீளவே முடியாமல் ஸ்தம்பித்துக் கிடக்கையில் எப்படி பறக்கும் என் எழுத்துப் புறாக்கள்? வெகு நாட்களாய் உன்னை சுற்றிச் சுற்றி  வந்த எனக்கு காதலைச் சொல்ல துணிவில்லாமல் போனது. காதல் எப்போதும் சொல்லிக் கொள்வதற்கு விரும்புவதே இல்லை அது  எப்போதுமே பூட்டி வைத்துக் கொண்டு புலன்களைக் கடந்த பெருவெளியில் சந்தோச கானம் பாடவே விரும்புகிறது. காதல் என்று நான் சொல்லும்  அதே வார்த்தையை இந்த சமூகம் பல விசயங்களுக்காக வணிகப்படுத்தி ஆகி விட்டது. அதனால் என் காதலை நான் காதல் என்று சொல்லுமிடத்தில் இவ்வுலகம் அதற்கு தாங்கள் அறிந்த்து வைத்திருக்கும் அர்த்தங்களாலேயே விளங்கிக் கொள்ளும். 

என் காதல் ஒரு பெரும் மெளனம். அது ஜனனம். அது மரணம்.

என் விழிகள் கொண்டு உன் விழிகள் மோதி உன் இதயம் நான் அடைந்த கதையை மென்மையாய் ஒரு புன்னகையால் நீ வெளிப்படுத்திய தருணத்தை விட்டு நான் இன்னும் நகரவே இல்லை. மூன்று தினங்களாய் நாம் எதுவும் பேசிக் கொள்ளவே இல்லை.  நாளை கல்லூரியின் கடைசி நாள். மூன்று வருடமும் உன் பின்னால் அலைந்து உன் நினைவுகளை எனக்குள் சுமந்து என்றேனும் ஒரு நாள் பூக்கும் என் காதல் பூ என்று நான் காத்திருந்து....

இரண்டு நாட்களாய் கடந்த மூன்று  நாட்களாய் உன் உதடுகளில் பூத்துச் சிரித்தது எனக்கான காதல். 

இதோ வற்றிக் கிடந்த என் நினைவுகளில் துளிர்த்துக் கொண்டன வார்த்தைகள். காதலை எப்படி வகைப்படுத்த அது நம்மை ஊமையாகவும் இருக்கிறது. சப்தமாகவும் இருக்கிறது. உற்சாகமாகவும் இருக்கிறது. வலியாகவும் இருக்கிறது. நெருப்பாய் சுடவும் செய்கிறது, தனுப்பாய் நடுங்க வைக்கவும் செய்கிறது. ஏதோ ஒன்றை செய்யவும் சொல்கிறது மெளனமாய் வேடிக்கப் பார்க்கவும் சொல்கிறது. இது அவஸ்தையாகவும் இருக்கிறது அவசியமாகவும் இருக்கிறது. இம்சையாகவும் இருக்கிறது இனிப்பாகவும் இருக்கிறது. சொல் என்று சொல்கிறது அடுத்த கணமே வாயடைத்து நின்று கொள் என்றும் சொல்கிறது.

எழுதிய வரையில் போதுமென்று நின்று கொண்டது என் எழுதுகோல். உன் நினைவுகளோடு கவிழ்ந்து கொண்டது என் இமை.

என் எதிரே அமர்ந்திருந்தாய். 

திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான் பிரதீப். 

கனவு சுத்தமாய் கலைந்திருந்தது. சுமதி நெஞ்சுக்குள் சுழன்று கொண்டிருந்தாள்.  மூன்று வருடமாய் சொல்லாமல் உள்ளுக்குள் சுமந்து கொண்டிருந்த காதல் நாளையோடு செத்துப் போகலாம் அல்லது நாளை முதல் உயிர்த்துக் கொள்ளவும் செய்யலாம். காதலைச் சொல்ல ஒரு ஆண் படும் அவஸ்தையைப் போல ஒரு பெண் எப்போதும் படுவதில்லை. ஒரு ஆணுக்கும் காதலைச் சொல்ல பல்வேறு சமூக நிர்ப்பந்தங்கள் இருக்கின்றன.

பொதுவாய் பெண்களுக்கு அழகோடு அறிவாய் இருக்கும் ஆண்களையே பிடிக்கிறது. ஏதோ ஒரு பாதுகாப்பு உணர்வு வந்தால் ஒழிய அவர்கள் எந்த ஆணையும் நெருங்குவதில்லை. சகோதரனாய் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனிலும் அவர்களுக்கு அந்த பாதுகாப்பு உணர்வு வேண்டும். ஒருக்காலும் ஒரு ஆணால் பெண்ணைப் போல சமோயசிதமாய் சிந்திக்கவும் முடிவதில்லை. அவன் ஒரு பெண்ணைப் பார்ப்பான். பிடிக்கும். அதை சொல்வதற்கு அவனால் முடிவதில்லை. சமூகத்தின் ஒழுக்க விதிகளும், தகுதி என்னும் ஒப்பீட்டு நியதிகளும் அவன் நாவை எழச் செய்வதே இல்லை.

எழுந்து அறையை விட்டு வெளியே வந்தான் பிரதீப். சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டான். சுமதியிடம் நாளை என் காதலைச் சொல்லியே ஆகவேண்டும். எத்தனை நாள்தான் அவள் காதலிப்பாள் என்ற கற்பனையிலேயே வாழ்வது.....

சுமதிக்காக காத்திருந்தான். 

பேருந்து நிறுத்ததில் வந்து நின்றாள் சுமதி. நண்பர்கள் எல்லோரையும் விட்டு விட்டு தனியே வந்து நின்ற பிரதீப்பின் இதயம் பதட்டத்தில் வெளியே வந்து விழுந்தே விடும் போல இருந்தது. ஒரே வகுப்பில் மூன்று வருடம் குப்பை கொட்டியும் ஒரு நாள் உனக்கு கிடைக்கவில்லையா காதலைச் சொல்ல என்று தன்னைத் தானே நொந்து கொண்டான்.

நண்பர்களை எல்லாம் விட்டுப் பிரிந்து செல்ல வேண்டும் என்ற வலி. எதார்த்த உலகில் கல்லூரிக்குப் பிறகு என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி...சுமதியிடம் காதலைச் சொன்ன பின்பு....அவள் என்ன சொல்வாளோ என்ற பயம்...

பயம் எப்போதும் மனித ஆழ்மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. அது எந்தக் கணத்திலாவது யாரவது நம்மை நிராகரித்து விடுவார்களோ என்ற எண்ணிக் கொண்டே இருக்கிறது. பயம் இல்லை என்று சொல்லும் அத்தனை பேருமே நிஜத்தில் வெகுவாய் பயம் கொண்டவர்கள். யாராலும் நிராகரிக்கப்படாமல் வாழ வேண்டும் என்று எல்லோரும் முயல்கிறார்கள் அதற்காய் எல்லா ஜெகஜ்ஜால வித்தையையும் வாழும் வரை செய்து கொண்டே இருக்கிறார்கள்.

சுமதியை நெருங்கினான்...

ஹாய்....

ஹலோ...புன்னகைத்தாள்.

லாஸ்ட் டே......

ஓ...யா.... பெயின் ஃபுல்....டே....பதிலினாள்.

இன்னைக்குதான் பேசுறேன் உங்ககிட்ட...

ஆமால்ல...சிரித்தாள்.

சுமதி.....நான் வந்து...

அண்ணா வந்துட்டான் பிரதீப்....தூரத்தில் பைக்கில் வந்து கொண்டிருந்தவனைச் சுட்டிக் காட்டினாள். நான் கிளம்புறேன்...எக்ஸாம் எல்லாம் நல்லா ப்ரிப்பேர் பண்ணுங்க.. .பெஸ்ட் ஆஃப் லக்.....

எக்ஸாம் டைம் ல பேசலாம்....பை....!!!!!

பைக் அருகில் வந்து நின்றது...ஏறினாள்...! 

பைக் அவனைக் கடந்து சென்றது...

பிரதீப்பை திரும்பிப் பார்த்து புன்னகைத்தாள்...!

ஸ்தம்பித்து நின்றான் ப்ரதீப். காதல் எல்லாம் உனக்கு வராதுடா....நீ எல்லாம் வேஸ்ட்...சொல்லவே முடியாம...ச்ச்சே......காலை தரையில் உதைந்தான்.

சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான்.

நான் அவளைக் காதலித்தேன். அவளை காதலிக்கிறேன். அவளைக் காதலிப்பேன்.

ஏன் அவளிடம் சொல்ல வேண்டும்.....இப்படியே இருந்து விட்டுப் போகிறேன். சொல்லிக் கொள்வது மட்டுமில்லை காதல் சொல்லாமல்  இருந்தாலும் காதல் காதல்தானே... விரக்தி அவனுக்குள் வேறு வேடம் போட்டுக் கொண்டு பேசியது.

அவன் அறை நோக்கி நடக்க ஆரம்பித்தான்....

அதே பஸ் ஸ்டாப்பை விட்டு சற்று தூரத்திலிருந்த மரத்தருகே நின்றிருந்த மஞ்சுவிற்கு கை, முகம் எல்லாம் வியர்த்திருந்தது. 

ச்ச்சே.....மூணு வருசம் ஒண்ணாப் படிச்சும் ப்ரதீப் கிட்ட காதலை சொல்ல முடியலையே....! சுமதி போன உடனே சொல்லலாம்னு நினைச்சா அவனும் போய்ட்டானே....


கையில் அவள் வைத்திருந்த காதல் கடிதம் வியர்வையில் நனைந்து கொண்டிருந்தது.






தேவா சுப்பையா












முகமற்றவனின் மொழி...!

$
0
0

என் புகைப்படத்தில் நீங்கள் பார்ப்பது நானில்லை. நான் எப்படி இருப்பேன் என்ற கேள்விக்கு யாதொரு பதிலும் இல்லை. நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பலமுறை நினைத்ததுண்டு. அப்படி இருக்க முயற்சி செய்த மாத்திரத்தில் நான் வேறு ஒரு மாதிரி ஆகிவிடுகிறேன். என் புகைப்படத்தில் இருக்கும் நபர் யாரய் இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். என்றேனும் ஒரு நாள் அந்த நபரை நான் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு கூடிக் கொண்டே இருந்தது. சிறுவயதில் முதன் முறையாக நான் என்று என்னை அடையாளம் கண்டு கொண்ட அந்த சிறு கண்ணாடியை இப்போதும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென்று அந்தக் கண்ணாடியை எடுத்து பார்த்தபோது அங்கே நான் என்று அறியப்பட்ட ஒன்று இல்லாமல் வேறு ஏதோ ஒன்று என்னைப் பார்த்து சிரித்தது. எனக்கு கோபம் வந்தது. ஒரு கண்ணடி கூட என்னை எனக்கு காட்டமுடியவில்லை. ஒரு புகைப்படத்தில் கூட நான் வந்ததே இல்லை. இருந்தாலும் எனது புகைப்படத்தை பார்த்து விட்டு என்னிடம் வந்து அந்தப் புகைப்படத்தில் நீ நன்றாக இருந்தாய் என்று யாராவது கூறுவதைப் பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வரும்.

நான் எப்படி இருப்பேன்....என்று ஒரு நாள் கூட பார்த்ததில்லையே என்று  ஒரு நாள் யோசித்தபடியே கடைத்தெருவில் நடந்து கொண்டிருந்தேன். உன்னைப் பாத்து எவ்ளோ நாளாச்சு என்று ஒருவர் வந்து கையைப் பிடித்தார். இவர் யாராய் இருக்கக் கூடும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். என்னைப் பார்த்தீர்களா? எங்கே எனக்கு காட்டுங்கள் என்று அவரிடம் கேட்டேன்....

என்னை உனக்குத் தெரியவில்லையா என்று கேட்டவர் இரண்டு வருடம் முன்பு ஒரு திருமணத்தில் என்னை சந்தித்ததை சொல்லி அப்போது எடுத்த புகைப்படம் ஒன்றை தன்னுடைய கைபேசியில் இருந்து எடுத்து என்னிடம் காட்டினார். பார்த்தேன். அதில் அவரும் இல்லை நானும் இல்லை. இதில் யாரோ இருவர் இருக்கிறார்களே.. யார் அவர்கள் என்று அவரிடம் கேட்டார்.

அதில் ஒரு உருவத்தைக் கட்டி அதை தான் என்று சொன்னார். நான் பார்த்துக் கொண்டிருந்தது அந்த புகைப்படத்தில் இருந்தவரை அல்ல வேறு ஒருவரை என்பதால் இது நீங்கள் என்று சொல்கிறீர்களே அப்போது இது யார் என்று அவர் முன்பே புதிதாய் புகைப்படத்தை அவருடைய கைபேசியிலேயே  எடுத்துக்காட்டினேன் அதுவும் அவர்தான் என்று சொன்னார். இரண்டும் வெவ்வேறாய் இருக்கிறதே.. என்று உதட்டைப் பிதுக்கினேன்....

உனக்கு ரொம்ப குறும்புதான் அது இரண்டு வருடம் முன்பு எடுத்தது இப்போது வயதாகி விட்டது அதான் மாற்றம் என்றார். நாளை வேறு உருவத்துக்கு சென்று விடுவீர்கள்தானே...அப்போது இப்போது எடுத்த புகைப்படத்தில் இருப்பவர் இருக்கமாட்டாரே.....? நிஜத்தில் நீங்கள் யார்..? உங்களை எப்போது நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் என்றேன்....

என்னை ஏற இறங்கப் பார்த்தார். குழந்தையாய் இருக்கையில் இருப்பதற்கும் வளர்ந்தவுடன் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது இல்லையா? என்றார். நீங்கள் என்று நீங்கள் சொல்லுவது எல்லாமே மாறிக் கொண்டுதானே இருக்கிறது அப்படி இருக்கையில் இதுதான் நான் அதுதான் நான் என்று அடித்து ஏன் சொல்கிறீர்கள்? உங்களைப் போலவேதான் இங்கே நானும் அனேகப் பேர்களும் இருக்கிறோம். ஏதோ ஒன்றை அவ்வபோது சுட்டிக்காட்டி இது நான், அது நான் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.

டேய்..நான் உன் மாமாடா என்று வயிற்றில் குத்தினார். சிரித்தார். வா டீ குடிப்போம் என்று கடைக்கு அழைத்துச் சென்றார். டீக்கடையில் சுருள் சுருளான முடியோடு ஒரு வாலிபர் பேண்ட் சட்டை எல்லாம் போட்டு கொண்டு ரொம்ப ஸ்டைலாக போஸ் கொடுக்கும் ஒரு புகைப்படம் இருந்தது. டீ ஆற்றிக் கொண்டிருந்தவர் தலையில் முடியே இல்லாமல் சொட்டைத் தலையாக இருந்தார்.  டீயைக் கொடுத்துவிட்டு வியாபரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

ஒரு வாய் டீயை உறிஞ்சினேன். டீக்கடைக்காரரிடம் யார் புகைப்படத்தையோ இங்கே மாட்டி இருக்கிறீர்களே  யார் அவர் உங்கள் சொந்தக்காரரா என்று கேட்டேன். கேலியாய் என்னைப் பார்த்தார். என்ன தம்பி...நான் ஏன் வேறு ஒருவரை இங்கே மாட்டி வைக்க வேண்டும். அந்தப் புகைப்படத்தில் இருப்பது நான் தான் என்றார் பெருமையாக...

துளி கூட உங்களோடு பொருந்தாத ஒரு நபரை நீங்கள் என்று சொல்லிக் கொள்ள உங்களுக்கு கொஞ்சம் கூட கூச்சமாக இல்லை என்று கேட்டேன்.

சண்டைக்கு வந்து விட்டார்.

மாமா இவனுக்கு என்னாச்சோ ஏதாச்சோ என்று யோசித்தபடியே எனக்கு விடை கொடுத்து விட்டு சென்று விட்டார்.

நான் தனியாக சாலையில் நடந்து கொண்டிருந்தேன். வெளியே இருக்கும் உடலை  மட்டுமே இவர்கள் தான் தான் என்று காட்டிக் கொள்ள முனைகிறார்கள். அதுவும் நிறைய புகைப்படங்கள் எடுத்தாலும் அதில் அழகான புகைப்படத்தை எடுத்து அதை சரிப்படுத்தி, அழகுபடுத்தி சரியான கோணத்தில் பெரிது பெரிதாய் ப்ரிண்ட் போட்டு பிரேம் போட்டு மாட்டிக் கொண்டு இது நான் நான் என்று சொல்லிக் கொள்கிறார்கள். உண்மையில் இங்கே இருக்கும் யாருக்குமே அவர்களைத் தெரியவில்லை. எனக்கு என்னைத் தெரியாதது போல.

முன் நெற்றியில் தலைமுடி புரள இருந்தவன் சொட்டைத் தலையாகி விடுகிறான். மெலிந்த இடை கொண்டவள் ரோடு ரோலர் போல மாறி விடுகிறாள். பாடி பில்டராய் இடுப்பு சிறுத்து இருக்கும் ஒருவன் பின்னொருநாளில் தொந்தியும் தொப்பையுமாய் மாறி விடுகிறான். ஓட்டப்பந்தயத்தில் ஓடி தங்கப்பதக்கம் வாங்கிய ஒருவன் ஒரு கட்டத்தில் எழுந்து நிற்கவே முடியாமல் போய்விடுகிறான். அப்போது ஓடியவனும் இப்போது முட்டி செத்துக் கிடப்பவனும் ஒன்று என்று சொல்வது அறிவுக்கோளாறுதானே?

உருவம் பற்றி இப்படி ஒரு அபிப்பராய கொண்டிருப்பவர்களுகு அருவம் என்றால் என்ன என்று தெரியாமல் போய்விட்டது. எனக்கு என்று ஒரு வடிவமே இல்லை என்று ஒரு நாள் நான் தெரிந்து கொண்டேன். நான் எந்த வடிவமும் இல்லாதவன். எந்தக் கருத்தும் இல்லாதவன் என்று தெரிந்து கொள்ள நான் 37 வருடங்கள் கடத்தி இருக்கிறேன். எந்த விசயமும் இந்த மனிதர்களுக்கு ஆரம்பிக்க வேண்டும் பிறகு முடியவேண்டும். ஆரம்பமும் முடிவும் இல்லாத ஒரு வஸ்துவை கற்பனைகள் கூட செய்து பார்க்க முடிவதில்லை மனிதர்களால்.

தொலைபேசி அடித்தது. எடுத்தேன்.

முருகேசன் சார் சீரியசா இருக்காராம். ஐ சி யூல வச்சு இருக்காங்களாம்...இன்னிக்கோ நாளைக்கோ போய்டுமாம். ஒத்த மூச்சு வாங்கி இழுத்துகிட்டு இருக்காம்.  ஹார்ட் ரொம்பவீக்கா இருக்காம்...முடிஞ்சா போய் பாருடா...சொல்லிவிட்டு போனை துண்டித்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் முருகேசன் சாரை வேறு ஒரு மரண வீட்டில் சந்தித்தேன்.  நிறைய பேசிக் கொண்டிருந்தார். வாழ்க்கைன்னு சொன்னா.... என்று ஆரம்பித்து உலகத்தில் இருக்கும் அத்தனை தத்துவங்கள் எல்லாம் பற்றி பேசினார். தனக்கு லாவோட்சூ தெரியும், குர்ட்ஜீப் தெரியும், சிக்மண்ட் பிராய்டு சென்ன சொல்றார்னா.....பாலாவோட நாவல்கள்ள...ராஜராஜசோழனோட பையன்...கர்மான்னா என்னனு கேட்டீங்கன்னா...ஆக்சுவலா அபு ஜாகையில் எவ்ளோ அகங்காரம் கொண்ட்வன் தெரியுமா? போரில் தோற்று தலையை வெட்டும் போது கூட கொஞ்சம் கழுத்தை உயரமாக விட்டு வெட்டுங்கள் என்று சொல்லுமளவுக்கு புகழின் மீது போதை கொண்ட மனிதன்..? இயேசுவின் சீடர்கள் சாமனியர்கள் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது, பீட்டர் ஃபவுலின் சொந்தக் கருத்துக்களும் பைபிளில் உண்டு...யூதர்கள்...புத்திசாலிகளாய் ஏன் இருக்கிறார்கள் தெரியுமா......தாஸ்தாவெஸ்கியோட க்தைகள்ல...

நிறைய பேசினார். நிறைய படிக்கணும். வெறுமனே வாழ்ந்து என்ன பயன். பட்டினத்தார் எல்லாம்....

பேசி முடிக்கும் வரை அமைதியாய் தூர இருந்து அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 

வா தம்பி தியானம் எல்லாம் செய்றியா...விடக்கூடாது. என் உடம்பு இன்னமும் உறுதியாய் இருக்குன்னா அதுக்கு காரணம் நான் செய்ற யோகாதான்....

ஐ சி யூ கண்ணாடி வழியே முருகேசன் சாரை பார்த்தேன். இரண்டு வாரத்துக்கு முன்னாடி பேசினவர் முருகேசன் சாரா...? இல்லை இங்க ஐ சி யூ உள்ள ஆக்ஸிஜன் மாஸ்கோட உயிருக்கு போராடிகிட்டு இருக்கவரு முருகேசன் சாரா..?

இது யாருங்க...? உள்ள ஐ சி யூல...பக்கத்திலிருந்த ஒருவரிடம் கேட்டேன். நான் முருகேசனோட பெரியப்பா தம்பி அது முருகேசன்தான்...சொல்லி விட்டு அழுதார்.

முருகேசன் இறந்து போய் விட்டதாக சொன்னார்கள். பாடியை வீட்டுக்கு கொண்டு வந்தாயிற்று. தலையில் நாடிக் கட்டு கட்டி நெற்றியில் காசு வைத்து உரலில் சாத்தி வைத்திருந்தார்கள். சுற்றி இருந்தவர்கள் எல்லோரு அழுது கொண்டிருந்தார்கள்...சோகமாய்  மாலை ஒன்றை எடுத்துச் சென்று அந்த உடலுக்கு சாத்தினேன்...

தம்பி முருகேசன் சார பாத்தீகளா எப்புடி இருக்காருன்னு......அவரது மனைவி என்று உணர்ந்து கொண்டேன். முருகேசன் சாரப் பார்த்தேன்....

மறுபடி ரெண்டு வராம் முன்பு பேசின முருகேசன் சார் புத்தியில் வந்தார். ஆர்க்கிமிடிஸ் கோட்பாடும், ஐன்ஸ்டீன் தியரியும் வள்ளலாரும், பட்டினத்தாரும்....

என்று ஏதேதோ சொன்னாரே....என்னா ஆகும் அதற்கெல்லாம்....

முருகேசன் சார் இப்போ இல்லை அது மட்டும் எனக்குப் புரிந்தது. இருக்கும் வரை யாரும் அவர்களை புரிந்து கொள்வதும் இல்லை பார்த்துக் கொள்வதும் இல்லை. புகைப்படத்தில் நிலைக்கண்ணாடியில், படித்த கருத்துக்களில், தழுவிக் கொண்ட மதங்களில், இருக்கும் நிலைப்பாட்டில் தங்களைப் பார்த்துக் கொண்டு அதுதான் தாங்கள் என்று நம்பித் தொலைக்கிறார்கள்....

ஒரு நாள் எல்லாம் போய் விடுகிறது.

ரோட்டில் இறங்கி நடந்து கொண்டிருந்தேன். 

தம்பி.. உங்களை எங்கயோ பாத்த மாதிரி இருக்கே... முருகேசன் செத்துப் போனாராமே...அங்கயா போய்ட்டு வர்றீங்க....வாழ்க்கைன்னு சொன்னா தம்பி....நான் எல்லாம்....எதுலயும் பற்று வைக்கிறது இல்லை...எனக்குன்னு சில கொள்கைகள் இருக்கு....

பிளேட்டோ என்ன சொல்றார்னா....

நான் காதில் வாங்கிக் கொள்ளாமல் நடந்து கொண்டிருந்தேன். நான் உருவமில்லாதவன். நான் கொள்கைகள் அற்றவன். நான் திட்டங்கள் இல்லாதவன்....ஆரம்பமும் முடிவும் இல்லாதவன்....

காற்று வேகமாய் அடித்தது....

காதுக்குள்....

காதற்ற ஊசியும் வாராது கடை வழிக்கே காண்.......

யாரோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை அது நானாக இருக்கக் கூடும்.



தேவா சுப்பையா




தேடினேன் தேவ தேவா...!

$
0
0

இரண்டு மூன்று நாட்களாகவே மனதை ஏதோ செய்து கொண்டிருக்கிறது எனக்கு. அது ஒரு மாதிரியான பரவசம், ஆர்வம், இயலாமை எல்லாம் சேர்ந்து ஒரு நிலைக்குள் என்னை தள்ளி விட்டிருந்தது. ஆமாம் பாலகுமாரன் சார் பேஸ்புக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறார் இப்போது. நண்பராக முயற்சி செய்தேன். அவரது கணக்கில் நண்பர்கள் நிறைந்திருப்பதால் உங்களால் அவரை பின்பற்ற மட்டுமே முடியும் என்று பேஸ்புக் சொல்லி என்னை அவரது ஃபாலோயர் ஆக்கியது. உண்மைதான் நான் என் குருவோடு எப்படி நண்பராக முடியும். பின்பற்றுபவனாய்த்தான் இருக்க முடியும். 

இன்றைக்கு நேற்றா நான் அவரைப் பின்பற்றுகிறேன். என்றைக்கு பதின்மத்தின் இறுதி முடிந்து வாலிபத்தில் அடி எடுத்து வைத்தேனோ அன்றிலிருந்து அவரைத்தானே பின்பற்றுகிறேன். இரண்டாவது சூரியன் என்னும் புத்தகத்தை என் 20 வயதில் தட்டுத் தடுமாறி வாசிக்கத் தொடங்கினேன். கதையின் ஓட்டத்தில் கரைந்து கிடக்கும் வாழ்க்கையின் போக்கும் எப்படி எங்கே நடந்து கொள்ள வேண்டும் என்ற பண்பாட்டு முறைகளும், இதை எல்லாம் கடந்த ஒரு உள்நோக்குப் பார்வையையும் அவரின் கதைகள் எல்லாம் கொண்டிருந்தன. அவை வெறும் கதைகளாக மட்டும் எனக்குள் பதியவில்லை. அவை அத்தனையுமே வாழ்வியல் பாடங்கள்.

இரண்டாவது சூரியனுக்கு அடுத்து கை வீசு அம்மா கை வீசு  படித்தேன். பிறகு அசுர வேகத்தில் பாலாவின் புத்தங்களை படிக்க ஆரம்பித்தேன். கல்லூரி முடித்து அடுத்து என்ன செய்வது என்று தடுமாறி நின்ற போது அவரே எனக்குத் துணையாயிருந்தார். அவரே எனக்கு ஒரு வழிப் பாதையைக் காட்டினார்....இரும்புக் குதிரைகளாய் உணர்வுகளுக்குள் ஓடினார். மெர்க்குரிப் பூக்களாய் ஜொலித்தார். ஆலமரத்தடியிலும் அரச மரத்தடியிலும் அமர்ந்தேனோ இல்லையோ அவரின் ஆலமரமும் அரசமரமும் எனக்கு பெருநிழலைத் தந்தன. அரசமரம் நாவலில் அவர் இறப்புக்கு பிறகு இருக்கும் இரு சூட்சும ஆத்மாக்களைப் பற்றி மெலிதாய் சொல்லி இருப்பார். அந்தக் கதையை படித்த போது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏனென்றால் ஆரம்பமும் முடிவும் தேடிக் கொண்டிருக்கும் மனித மனதில் அப்படியான ஒன்றே இல்லை என்ற ரீதியில் சொல்லப்படும் கருத்துக்கள் எப்படி பிடிபடும்?

என்னை கால்கள் இல்லாமல் நடக்கப் பழக்கினார் என் குருநாதர் பாலகுமாரன். மனம் இன்றி நினைக்கப் பழக்கினார். சிறகுகள் இன்றி பறக்கப் பழக்கினார். பாலகுமாரன் நாவல் அடுத்தது எப்போது வரும் என்று சென்னை தி.நகர் பஸ்டாண்ட் எதிரில் இருக்கும் பெட்டிக் கடையில் காத்துக் கிடப்பேன். வந்த உடனே பத்து ரூபாய் கொடுத்து வாங்கி வாசித்து என் வாழ்க்கையை என் இருப்பை உறுதி செய்து கொள்வேன். பாலகுமாரன் எனக்கு மட்டுமல்ல தமிழகத்தில் தடுமாறிக் கொண்டிருந்த பல இளைஞர்களின் வாழ்க்கையில் ஏற்றப்பட்ட அருள் தீபம் அவர். பாலாவை வாசித்து அவரின் எழுத்தில் தன்னைக் கரைத்துக் கொண்டவர்களுக்கு.....

நவீன இலக்கியவாதிகளின் கபடி ஆட்டங்கள் எல்லாம் பிடிக்காது. இலக்கியம் தெரிந்து நான் என்ன செய்யப் போகிறேன்? எனக்கு வாழ்க்கை தெரியவேண்டும். எப்படி வாழ்வது என்று புரியவேண்டும். என் குருநாதர் எழுத்துச் சித்தர் ஐயா பாலகுமாரன் எங்களுக்கு வாழ்க்கையைச் சொல்லிக் கொடுத்தார். எது கடவுள் என்ற தெளிவைக் கொடுத்தார். சக மனிதரை எப்படி நடத்த வேண்டும் என்று வழிகாட்டினார். உள்ளுக்குள் உற்று பார்....சுற்றி நிகழ்பவை  எல்லாவற்றையும் வேடிக்கைப் பார் என்று சொல்லிக் கொடுத்தார். தமிழ் படிக்கத் தெரிந்த தேடல் நிறைந்த அத்தனை பேருக்கும் அவர்தானய்யா குரு. அவர் சொல்லித்தான் நான் பட்டினத்தாரைப் படித்தேன். அவர் சொல்லித்தான் நான் பட்டினத்தார் சமாதிக்குச் சென்றேன்....

அவர் சொல்லித்தான் திருவொற்றியூர் ஒற்றீஸ்வரரையும், வடிவுடையம்மனையும் ஓடிப் போய் வணங்கி அன்பில் திக்கு முக்காடினேன். மயிலாப்பூர் வாலீஸ்வரர் கோயிலுக்கு போ என்றார், போனேன்.  கண் மூடி கோயிலின் மூலையில் அமர்ந்து அந்த அதிர்வுகளை உள்வாங்கிக் கொண்டேன். கபாலி கோயிலுக்கும், பார்த்தசாரதி கோயிலுக்கும், முண்டகன்னி அம்மன் கோயிலுக்கும் புரிதலோடு போய் வந்தேன். ஒரு களி மண்ணைப் பிசைவது போல உருட்டி உருட்டி உள்ளுக்குள் அவரின் எழுத்துக்கள் என்னை உருவாக்கின. முண்டகண்ணி அம்மன் கோயிலில் அமர்ந்து கண் மூடிய போது குதிரைகளின் சப்தமும், கோயில் கிணற்றின் உள்ளே அமர்ந்திர்ந்த பெண் தெய்வமும் புத்தியில் சுடராய் எரிந்தன. எனக்குள் ஒடுங்கினேன். நான் என்ற எண்ணம் ஒரு பெரும் நோய் என்று உணர்ந்தேன். என் பாலகுமாரன் தான் அதற்கெல்லாம் காரணம்.

தென் கோடியில் இருக்கும் சுசீந்தரம் தாணுமாலயன் கோயிலுக்கு சென்று அங்குலம் அங்குலமாய் நான் அனுபவித்து அங்கே இருந்த அத்தனை சிற்பங்களையும் செதுக்கிய சிற்பிகளையும் உள்ளுக்குள் பாலகுமாரனின் எழுத்துக்கள் அடையாளப்படுத்த கை குவித்து நீர் பருகும் தாகக்காரனாய் பருகிக் கொண்டேன். ஆமாம்...பாலாவை நான் படிக்காமலேயே போயிருந்தால் எப்படி எனக்கு இத்தனை அனுபவங்கள் புரிதோடு கிடைத்திருக்கும்? தன் முனைப்பு இல்லாமல் எப்படி வாழ்ந்திருக்க முடியும்? எல்லா இக்கட்டான சூழலிலும் நான் ஒரு சாட்சி என்று எப்படி எண்ணியிருக்க முடியும்?

எனக்கு என் பாலகுமாரன் நேரடி பரிச்சயம் இல்லாதவர். நான் ஒரு ஏகலைவன். தூரத்தில் நின்று அவரிடம் கற்றுக் கொண்டவன். மானசீகமாய் தினமும் அவரோடு நிறைய பேசுபவன்.  மீண்டும் மீண்டும் அவருடைய புத்தகங்களை படித்ததேயாயினும் மீண்டும் படித்துக் கொண்டிருப்பவன். அதிலிருந்து மீளமுடியாமல் லயித்துக் கிடப்பவன். இப்போது கூடப் பாருங்கள் உடையார் புத்தகம் ஆறு பாகமும் வாங்கி கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகி விட்டது. இரண்டு வருடமாய் உடையாரின் சாம்ராஜ்யத்துக்குள் என் குருநாதரின் கையப் பிடித்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறேன். இப்போது 5வது பாகத்தின் இறுதியில் இருக்கிறேன். உடையார் ராஜராஜத்தேவர் பஞ்சவன் மாதேவியோடு படையெடுப்புக்கு கிளம்பி விட்டார். ராசேந்திர சோழன் மதுரைக்கு அருண்மொழியோடு சென்று விட்டார். போர் துவங்கப் போகிறது. கோயில் வேலைகள் முழு வேகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. சோழ தேசமெங்கும் ஒரு பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

உடையார் ஐந்தாம் பாகத்தில் நான் பிரமிப்போடு சோழ தேசத்திற்குள் என் குருநாதரோடு அலைந்து கொண்டிருக்கிறேன். உடையாரை வாசிக்கும் போதே புரிந்து விட்டது என் குருநாதர் பாலகுமாரன் தான் சோழ தேசத்தின் பிரம்மராயராய் இருந்திருக்க வேண்டும். கிருஷ்ணன் ராமன் என்னும் அந்த அந்தணர்தான் இப்போது பாலகுமாரனாய் பிறந்து சோழர் வரலாற்றில் கட்டப்பட்ட ஒப்பற்ற பெருங்கோயில் பற்றிய வரலாற்று நிகழ்வுகளை என்னைப் போன்ற சாமனியர்களுக்கு எழுத்தின் மூலம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று தோன்றியது.

வெறுமனே இது எனது மனதின் கற்பனை அல்ல. நான் அப்படி விஸ்தரித்துப் பார்க்கவும் இல்லை. இது என் உள்ளுணர்வு. இது சரியா தவறா என்பது எனக்குத் தெரியாது...ஆனால் பாலகுமாரன் ஐயாவுக்கு அது தெரியும். உடையாரை எழுதி முடித்து விட்டு இப்போது அவர் ராசேந்திர சோழனையும் இந்த சமூகத்திடமும் இனி வரப்போகும் தலைமுறைகளிடம் இரத்தமும் சதையுமாய் உலாவ விடப்போகிறார். பாலா சாரின் பிறப்பின் அவசியத்தை இந்த இரண்டு புதினங்களும் நியாயப்படுத்தப் போகின்றன. தஞ்சை பெருங்கோயிலைப் போன்று உடையாரும், கங்கை கொண்ட சோழனும் காலங்கள் கடந்து தமிழர்களின் கைகளில் தவழப்போகின்றன. இது உறுதி. ஏனென்றால் இது யாரோ ஒரு தனிமனிதரின் விருப்பம் அல்ல. இது பிரபஞ்சத்தின் விருப்பம். சனாதான தருமம் என்னும் சத்தியம் தனக்குத் தானே செய்து கொண்டிருக்கும் ஒரு ஏற்பாடு.

பாலா சாரை பேஸ்புக்கில் பார்த்து ஒரு கருத்து கூட அவரது நிலைத்தகவல்களுக்கு என்னால் இட முடியவில்லை. நான் ஸ்தம்பித்து நின்றேன். குருவின் அருகாமையில் ஆனந்தித்து இருந்தேன். புலன்களால் அவர் எனக்கு பரிச்சயமில்லையே அன்றி....ஆன்மாவால் என்னை இருகத் தழுவிக் கொண்டவர் அவர். அவரைச் சுற்றி நிறைய என்னைப் போன்ற வாசகர்கள் சூழ்ந்திருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் பாலா சார் வெறுமனே ஒரு பிடித்த நாவலாசிரியர் மட்டும் அல்ல. அவர் வழிகாட்டி. குரு. அவரைச் சூழ்ந்திருப்பது வெறும் வாசகர் கூட்டம் அல்ல......அது அன்பு நிறைந்த தேடல் கொண்ட  கூட்டம். 

பாலா சாருக்கு நான் வெகுநாட்கள் முன்பு எழுதிய ஒரு கவிதை ஒன்றை பேஸ்புக்கில் மின்னஞ்சல் செய்தேன்.  எனக்கு ஒரு திருப்தி கிடைத்தது. குருவின் பார்வை பட்டாலே போதும்தானே.....ஒன்றும் கருத்து கூற வேண்டாம். எதுவுமே பகிரவேண்டாம். அருட்பார்வை போதும் அல்லவா...அவரின் பார்வை என் மீது பட்டது. நான் திருப்தியானேன்.

எல்லோரிடமும் பேசுகிறீர்கள்...ஐயா.. ! எனக்கு உங்களிடம் அறிமுகம் செய்து கொள்ளவே ஒரு மாதிரி இருக்கிறது அப்பா...என்னை ஆளாக்கியது நீங்கள். உங்களின் கருத்துக்கள் என்னை செப்பனிட்டன.  நான் எப்படி உங்கள் முன் வந்து உங்களால் நான் இப்படி ஆனேன் என்று சொல்வேன். அப்படி சொன்னால் அது மட்டுப்பட்டதாகி விடாதா....? நான் என்னைப் பற்றி எதையோ உங்களிடம் பகிர வந்ததாகி விடாதா....அதனால் நான் தூரமாய் நிற்கிறேன் ஐயனே...! என்னை எப்போதாவது ஒரு முறை நீங்கள் பார்க்க வேண்டும். உங்கள் விழிகளுக்குள் என் பிம்பம் ஒரு முறையாவது விழ வேண்டும் அது போதும் எனக்கு.... என்று எனக்குள் புலம்பினேன்.....

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
உன் திக்கை நோக்கி என்னிரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே

நான் மூர்ச்சையாகிப் போய்க் கொண்டிருக்கிறேன் ஐயா. எதுவுமே வார்த்தைகளாய் பரிமாறிக் கொள்ளாமல் உங்களை பற்றியே அல்லும் பகலு நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் சென்ற இடம் பார்த்த மனிதர்கள் என்று உங்களின் அனுபவங்களை நீங்கள் பகிரும் ஒவ்வொரு நொடியும் நான் சொக்கிப் போய் சாஸ்வதமான உங்கள் அன்பில் திக்குமுக்காடிக் கிடக்கிறேன்...!

கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதரமாதருடன் நீ களிக்கவோ
இது தகுகோ.. இது முறையோ.. 
இது தருமம் தானோ....

நீங்கள் என்னைப் பார்க்க மாட்டீர்களா? என்னோடு பேச மாட்டீர்களா...? வாஞ்சையோடு இந்தச் சிறுவனைக் கட்டியணைத்து கடைத்தேற்ற மாட்டீர்களா? நான் உங்கள் நினைவுகளோடு அலைந்து கொண்டிருக்கிறேன்....நீங்கள் வேறு ஏதேதோ பேசுகிறீர்களே.. யார் யாருடனோ பேசுகிறீர்களே....புன்னகைக்கிறீர்களே.....என்னை ஏறெடுத்தும் பார்ப்பதிலையே ஐயா..? இது தகுமோ....இது முறையோ ...இது தருமம் தானோ என்று உள்ளுக்குள் பெருங்குரலெடுத்து கதறி அழுதேன்.

நீங்கள் என்னை பார்ப்பீர்கள் உங்கள் கருணை என் மீது மழையாய் பொழியும். உங்கள் பாதங்களை தொட்டுப் பார்க்காவிட்டலும் தூரத்திலிருந்து நான் பார்ப்பேன்...

என்றெல்லாம் பேசிகொண்டு இன்று காலை அலுவலகம் வந்தேன்.  பேஸ்புக்கை திறந்து பார்த்த போது உங்களின் நிலைத்தகவல் கண்ணில் பட்டது...

"தேடினேன் தேவா தாமரைப் பாதமே. வாடினேன் வாசு தேவா வந்தது நேரமே.....ஞானவாசல் நாடினேன் வேணுகானம் பாடினேன் 
காலகாலமாய் உனை......."

வாசித்து வாசித்து ஆனந்தத்தில் திக்குமுக்காடிப் போனேன். கூத்தாடினேன். உங்களுக்குள் ஏதோ ஒன்று தோன்றி இருக்க வேண்டும். உங்கள் மனதில் இந்தப் பாடல் வரிகள் ஓடிய கணத்தில் தேவா என்று ஒரு முறையாவது சொல்லி இருப்பீர்கள் தானே....போதும் ஐயா.. அது போதும்....உங்கள் கருணை அளப்பரியது. சாதரணமாய் வாழ்க்கையை எடுத்து நகர்பவர்களுக்கு இது ஒரு தற்செயல் நிகழ்வு..ஆனால் எனக்குத் தெரியும். நீங்கள் சூட்சுமமாய் எல்லாம் உணரக் கூடியவர். உங்கள் கருணை என்னைப் போன்றவர்களுக்கு ஏதோ ஒரு வடிவத்தில் எப்போதும் வழிகாட்டிக் கொண்டே இருக்கிறது.

கால காலமாய் தேடிய இடம் எதுவென்று உணர முடிகிறது. சூட்சுமமாய் எல்லாம் விளங்க வைத்த ஒரு குருவின் அருகாமை என்னைச் சுற்றி வெளிச்சத்தைப் பரப்பி இருக்கிறது. அவரின் கருணையும், அன்பும், அருகாமையும் சர்வ நிச்சமயாம் என்னைக் கடத்தேற்றும். வெறுமனே வாசித்து நகர்ந்து விட முடியாத சுவாசம் பாலகுமாரன் ஐயாவின் எழுத்துக்கள் அவரின் பெருங்கருணையிலிருந்து இன்னும் நிறைய எழுத வேண்டும். தலைமுறைகள் கடந்தும் என்னைப் போன்ற சிறுவர்களை கைப்பிடித்து அந்த எழுத்து அழைத்துச் செல்ல வேண்டும்.

ஞானத் திருமேனி காண வர வேண்டுமே…
சீதப்பூ வண்ணப் பாதம் தொழ வேண்டுமே…
பக்தன் வரும்போது பாதை தடையானதே…
காட்டுப் பெருவெள்ளம் ஆற்றில் உருவானதே…
தாயாகி தயை செய்யும் தேவா…
தடை நீங்க அருள் செய்ய வா வா…
நான் செய்த பாவம் யார் தீர்க்கக் கூடும்…
நீ வாழும் இடம் வந்து நான் சேர வேண்டும்…


பாலகுமாரன் ஐயாவின் பாதங்களுக்கு என் அன்பு முத்தங்கள்...!!!!!!!



தேவா சுப்பையா...



யாரோ எழுதிய கதை....!

$
0
0

அந்தக் கதையில் யாருமே நடிக்கவில்லை. கதாபாத்திரங்கள் எல்லாமே தற்சயலாய் உருவாகி தன்னிச்சையாய் நகர்ந்து கொண்டிருந்தன. யாரோ ஒருவர் சைக்கிளில் செல்கிறார். அந்த தெருவில் இருக்கும் குடிநீர்க்குழாயில் கூட்டமாய் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிகளுக்கு பிள்ளைகளை திணித்துக் கொண்டு வாகனங்கள் பறக்கின்றன. ஹெல்மட் அணியாமல் நிறைய பேர்கள் சாலையில் பயணிக்கிறார்கள். அதில் யாரோ சிலரை மட்டும் போக்குவரத்து போலிசார் நிறுத்தி ஏதோ விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வானம் மேகமூட்டமாய் இருப்பது போல தோன்றினாலும் சூரியன் இப்போதோ அப்போதோ வெளியே அந்து வெயிலை கக்குவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தது. நடைபாதை ஓரத்தில் தனது கடையை போட்டு மொத்த விலைக்கு வாங்கி வந்திருந்த டூப்ளிக்கேட் ரேபான், போலிஸ் கூலர்களை கடை பரப்பிக் கொண்டிருந்தவனை வேடிக்கைப் பார்த்தபடி புகைத்துக் கொண்டிருந்தான் ஒருவன். மின் தொடர்வண்டி பரபரப்பான நகரத்தைப் பற்றிய கவலைகளின்றி திமிராய் ஆட்களை ஏற்றிக் கொண்டு தண்டவாளங்களில் பறந்து கொண்டிருந்தது. டி.டி.ஆர்கள் புகைவண்டிக்குள் கூட்டத்தோடு கூட்டமாய் நின்று கொண்டு சோதனையை செய்வதற்காக சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பதினோரு மணி வாக்கில் மிகப்பெரிய ஜவுளிக்கடைகளும் சூப்பர்மார்க்கெட்டுக்களும் சுறு சுறுப்பாய் இயங்க ஆரம்பித்திருந்தன. நடு ரோட்டில் சுற்றிக் கொண்டிருந்த மாடுகளை பிடித்து வைத்து பராமரிக்க ஒரு நாதி இல்லை இந்த ஊரில் என்று கூறிக் கொண்டே நடு ரோட்டில் காறி உமிழ்ந்தபடி பைக்கில் பறந்து கொண்டிருந்தான் ஒருவன். நெரிசலான ரோட்டை கடக்க முயன்ற ஒரு வயதானவரைப் பற்றி யாரும் அக்கறை கொண்டிருக்கவில்லை. யாரோ மூன்று பேர் முதல் நாள் இரவு பார்த்த கில்மா படத்தைப் பற்றி பேசி சிரித்தபடி நகரத்தின் வேறுபகுதியிலிருந்த ஒரு டீக்கடையில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

புதுசா வந்த ஹிண்டு பேப்பர் நல்லா பின்றான். எல்லா பேப்பர் காரனையும் பின்னுக்குத் தள்றானா இல்லையான்னு பாரும் வோய்... வெற்றிலையை துப்பிய படியே... அந்த அலுவலக வாசலில் இருந்த கடையில் நண்பரிடம் சொல்லிக் கொன்டிருந்தார் ஒருவர். இன்னும் கொஞ்சம் சிமிண்ட்  கலந்துக்கப்பா.. அதட்டிக் கொண்டிருந்த மேஸ்திரியை சட்டை செய்யாமல் வேலை செய்து கொண்டிருந்தார் ஒரு கட்டிடத் தொழிலாளி.  நீ ரிஜிஸ்டர் பண்ணிட்டியா.... பண்ணலேன்னா உடனே பண்ணு கீழ விழுந்து செத்தா சங்கம் மூலமா வூட்டுக்கு துட்டு கிடைக்கும்டா.... லூசுப்பயலே...பேசிக் கொண்டே  4வது மாடியின் சாரத்தில் இருவர் பேசியடியே சாந்து பூசிக் கொண்டிருந்தனர்.

பேருந்து நெரிசலை சாக்காக வைத்துக் கொண்டு ஒரு பெண்ணின் புட்டத்தை உரசியவனை பார்த்து முறைத்த படி நாயே.. நாயே உன் அக்கா தங்கச்சி மேல உரசுவியா ராஸ்கல் என்று பாய்ந்தாள் அந்தப் பெண். கூட இருந்தவர்களும் சேர்ந்து அடிக்க அடுத்த நிறுத்தத்தில் அவன் இறக்கிவிடப்பட்டான். டிக்கெட் எடுங்க சார்.. டிக்கெட்..... கண்டக்டர் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தார். சித்தப்பா வீட்டுக்கு போய் என்ன பேசுறதுன்னு எனக்குத் தெரியலை அங்க போய் பாத்துக்குறேன். பத்திரிக்கைய கொடுத்து வா சித்தப்பா கல்யாணத்துக்கு எங்களுக்கு யார் இருக்கான்னு சொல்றேன்... வருவாருமா நீ போன வை வண்டில கூட்டமா இருக்கு... போனை அணைத்தவனை காலில் நறுக்கென்று மிதித்து விட்டுப் போனவரைப் பார்த்து....

அறிவு இருக்கா சார் காலை மிதிக்கிறீங்க என்று கோபித்தான். காலை மிதித்தவர் அதை சட்டை கூட செய்யாமல்...அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்கிப் போய்க் கொண்டிருந்தார். பக்கத்து தெரு பள்ளிவாசலில் உச்சி வேளைத் தொழுகைக்காக பாங்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள். இன்னும் கொஞ்ச நேரத்துல நீ வரல நான் போய்டுவேன்டா ஒரு இளம்பெண் யாரிடமோ கோபப்பட்டுக் கொண்டிருந்தாள். அவளைக் கடந்து சென்ற ஒருவன்.. ஒருமணி நேரமா நான் பள்ளிவாசல் பக்கம்தான் நிக்குறேன்.. நீ எப்ப வருவ சொல்லு இன்னிக்கு மதியம் 3 மணிக்கு நான் ஊருக்கு கிளம்புறேன் பணம் அர்ஜன்ட் ப்ளீஸ் புரிஞ்சுக்கோடா என்று போனில் பேசி கெஞ்சிக் கொண்டிருந்தான் இன்னொருவன்.

வேகமாய் வந்த ஒரு ஆட்டோ வழியில் குறிக்கிட்ட நாயின் முதுகில் இடிக்க அது அந்த வீதியையே அலற வைத்தபடி ஓடிக்  கொண்டிருந்தது. நாயின் சப்தம் கேட்டு அந்த வீதி முனையில் இருந்த பச்சை கேட் போட்ட வீட்டுக்குள் இருந்த இன்னொரு நாய் குலைக்க.... வீட்டின் அறைக்குள் உறங்கிக் கொண்டிருந்தவன் விழித்து விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தான் முதல் நாள் இரவு அவனுக்கும் உமாவுக்கும் ஏற்பட்ட சண்டை அவள் கோபித்துக் கொண்டு போனது எல்லாம் நினைவுக்கு வர.....வலியோடு பிரிந்த காதலியை நினைவிலிருந்து துரத்தி விட்டு போர்வைக்குள் மீண்டும் சுருண்டு கொண்டான். அவன் வீட்டின் வாசலை தொட்டிருந்த ஒரு சேல்ஸ் எக்ஸியூட்டிவை காம்பவுண்டிற்குள் இருந்த நாய் உற்றுப் பார்த்து உறும....

இன்னிக்கு டார்கெட்ட முடிக்கலேன்னா வேலை போய்டுமே என்ற கவலையில் அடுத்த வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தான். வீட்டின் சுமை அவன் நடையில் தெரிந்தது.

அந்தக் கதையில் இப்படி எல்லாம் இருந்தது. யாரோ காதலித்தார்கள். யாரோ செத்துப் போனார்கள். யாரோ திருமணம் செய்து கொண்டார்கள். யாரோ இறுக்க அணைத்துக் கொண்டு காமத்தில் மூழ்கிக் கிடந்தார்கள். இந்த நாட்டை நான் மாற்றிக் காட்டுவேனெ என்று யாரோ ஒருவன் மேடையில் ஏறிப் பேசி கொண்டிருந்தான். கவிதை எழுதிக் கொண்டிருந்தான் ஒருவன் ....நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனையிலிருந்தான் ஒருவன்... ஒருத்தி பிரசவித்தாள் ஒருத்திக்கு கருக்கலைந்தது. இப்படி எல்லாமே எல்லோருக்கும் ஆங்காங்கே நடந்து கொண்டே இருந்தது. என்ன ஒன்று ஒன்று நிகழ்கையில் அது தனக்கு மட்டுமே நிகழ்ந்து விட்டதாக எல்லோரும் தனித்தனியாக நினைத்துக் கொள்வதுதான் அந்தக் கதையின் உச்சபட்ச காமெடி.

இணையத்தை விட்டு சிலர் நகர்வதே இல்லை. பலர் தொலைக்காட்சியை விட்டு நகர்வதே இல்லை. சிலர் கொலை செய்ய திட்டமிட்டனர். பலர் கொள்ளையடிக்க திட்டமிட்டனர். சினிமா நடிகர்களுக்கு பாலபிஷேகம் செய்ய பலர் இருந்தனர். பத்திரிக்கைகள் பரபரப்புக்காய் பிசாசாய் அலைந்தன. நல்ல புத்தகங்களை வாங்கி சில வாசித்து விமர்சித்துக் கொண்டிருந்தனர். எழுதுவது ஒரு கலை என்று யாரோ ஒரு மூத்த எழுத்தாளர் அங்கே பேசிக் கொண்டிருந்தார். சாமியார்கள் நல்வழியும் காட்டினார்கள், காமக் களியாட்டமும் போட்டார்கள். நிறைய பிச்சைக்காரர்கள் இருந்த்தார்கள், அனாதைகள் இருந்தார்கள். அப்பாவிகள் இருந்தார்கள். கொடுமைக்காரர்கள் இருந்தார்கள். நல்லவர்கள் இருந்தார்கள். நல்லவர்களை கொடுமைக்காரர்களும் குறுக்குப் புத்திக்காரர்களும் ஏமாளிகள் என்று விமர்சனம் செய்து கேலியும் செய்தனர்.

கடவுள் இல்லை என்று ஒரு மேதாவியும் கடவுள் உண்டு என்று இன்னொரு மேதாவியும் பேசிக் கொண்டிருந்தனர். ஒரே சப்தமாகவும் இரைச்சலாகவும் ஓட்டமாகவும் அந்த கதை ஒரு இடத்தில் கூட நிற்கவே இல்லை.....எல்லோரும் ஏதோ ஒன்று செய்து கொண்டிருந்தனர். ஒவ்வொருவருக்கும் அவர் செய்வது சரி என்று தோன்றிக் கொண்டிருந்தது. எல்லோருமே தன்னை அடுத்தவர் முன்பு நல்லவராய் காட்ட முயன்று கொண்டிருந்தனர். திருப்பு முனைகளும் துயரமும், சந்தோசமும், நகைச்சுவையும், வலியும், பிரம்மாண்டமும் நிறைந்த அந்த கதையில் ஒரு அர்த்தமும் இல்லை என்றாலும் கதையில் யாருமே நடிக்கவில்லை. எல்லோருமே அங்கே ஏதோ ஒரு செயலைச் செய்து கொண்டே இருந்தனர். அவர்களுக்கு கதையில் அவர்கள் எப்போது வந்தார்கள் என்றும் தெரியாது எப்போது போவார்கள் என்றும் தெரியாது.

அது பற்றிய பல அபிப்ராயங்களை அவர்கள் கொண்டிருந்தனர். அவை எல்லாம் மிகப்பெரிய பிரம்மாண்ட கற்பனைகள். அவற்றை எல்லாம் நான் எழுதி நீங்கள் வாசிக்க முடியவே முடியாது. கோடி கடவுளர்களை அவர்கள் கொண்டிருந்தனர். அவர்களின் சொர்க்கங்களில் பாலாறும் தேனாறும் ஓடுமாம். அங்கே யாருக்கும் பசிக்கவே பசிக்காதாம் ஆனலும் உண்பார்கள். உண்ண நிறையவும் இருக்கும். அழகிய பெண்கள் இருப்பார்கள் அப்ஸசரசோடு கட்டிப் பிடித்து ஆடலாம். ரம்பை ஊர்வசி மேனகைகளை படுக்கைக்கு அழைத்து சரசம் செய்யலாம். மது குடிக்கலாம். ஒரு தொல்லையும் இல்லாத ஒரு வாழ்க்கை அது ஆனால் அவர்களின் நரகம் மிகக் கொடுமையானது அங்கே எண்ணைச் சட்டிகளில் போட்டு அவர்களை பொறிப்பார்கள். ஆனால் எண்ணெய் எங்கிருந்து வாங்குவார்கள் என்று தெரியாது. கை கால்களை பிய்த்து எடுப்பார்கள் முகத்தை நெருப்பிலிட்டுப் பொசுக்குவார்கள். இப்படி நிறைய வேதனைகள் இருப்பதாக இவர்கள் சொல்லிக் கொள்வார்கள். ஏனென்றால் நரகம் தண்டிக்குமிடமாம். சொர்க்கம் சீராட்டும் இடமாம். 

இப்படி அந்தக் கதையில் இருக்கும் அத்தனை பேரும் மிகப்பெரிய கற்பனைவாதிகள். அவர்களின் கற்பனையில் இருக்க்கும் கோடாணு கோடி உலகத்தை தலையில் சுமந்த படி அவர்கள் எப்போதும் பேசிக் கொண்டேயிருந்தார்கள். யாரும் மற்றவர்களை அவர்களாய் பார்க்க மாட்டார்கள். கொண்டிருக்கும் அபிப்ராயத்தை வைத்தே கணிப்பார்கள், சிரிப்பார்கள, சண்டை போடுவார்கள். 

அந்தக் கதையில் என்னைப் போல ஒரு கிறுக்கன் உண்டு. அவன் அந்தக் கதையை வாசித்தபடியே அந்தக் கதை பற்றி ஏதாவது எழுதிக் கொண்டே இருப்பான்...ஒரு சிலர் வேறு வழியில்லாமல் அதை வாசிக்கவும் செய்து கொண்டிருந்தார்கள்.

அந்தக் கதை எப்போது ஆரம்பித்தது என்று எனக்குத் தெரியாது என்பது போல எப்போது முடியும் என்றும் தெ........ரி..........யா..............து......

அதனால் கதையை நான் தொடர்ந்து கொண்டிருருக்கிறேன்.... நீங்களும்...தொ...ட... ரு .......ங்......




தேவா சுப்பையா...


Photo courtesy: My Chennai FB page





கடல்...!

$
0
0

கடற்கரை காற்று தலை முடியைக் கலைத்துக் கொண்டிருந்தது. கடற்கரை மனதின் சுமைகளை இறக்கி வைக்கும் ஒரு இடமாகத்தான் எனக்கு எப்போதும் இருக்கிறது. கடலை நெருங்கும் போதே ” ஹோ ” என்று பரந்து விரிந்து கிடக்கும் மண்ணை பார்க்கும் போதே ஒரு வித சந்தோசம் உள்ளுக்குள் விசிலடிக்கத் தொடங்கி விடும்.

பெரும்பாலும் கடற்கரைக்கு யாரோடும் நான் வருவதில்லை. கடலே துணை, கரையே எனக்கு இணை பிறகெதற்கு ஒரு துணை. கால் நீட்டி கடற்கரை மணலில் அமந்து கொண்டு இரைச்சலாய் கரையை நோக்கி வந்து பிறகு திரும்பும் அலைகளையும், பரந்து விரிந்த வானத்தையும் அதில் மிதக்கும் மேகங்களையும் பார்த்துக் கொண்டு வெறுமனே அமர்ந்திருத்தல் சுகம். எந்த எண்ணமுமற்று அந்த சூழலில் கரைந்து கிடப்பது தவம். நிறைய பேர் ஒவ்வொரு காரணத்திற்காக கடற்கரைக்கு வருகிறார்கள். கூட்டம் கூட்டமாய் வந்து அமர்ந்து உணவருந்துகிறார்கள். பேசிச் சிரிக்கிறார்கள். ஓடிப்பிடித்து விளையாடுகிறார்கள். பட்டம் விடுகிறார்கள். குதிரை சவாரி செய்கிறார்கள். அனுமதிக்கப்பட்ட பகுதிவரை கடலில் சென்று குளிக்கிறார்கள். கடலில் கால் நனைத்து சிலாகித்துப் போகிறார்கள். 

கடற்கரையில் வியாபாரம் செய்யும் சிறுதொழிலாளர்களுக்கு கடற்கரை எந்த வித உணர்வையும் கொடுத்து விடுவதில்லை. அவர்கள் பிழைப்புக்கான ஒரு இடம் என்ற அளவோடு கடல் அங்கே  சவலைப் பிள்ளையாய் சுருங்கிப் போய்விடுகிறது. காதலர்களுக்கு ஒரு விதமாகவும், காவலர்களுக்கு ஒரு விதமாகவும், திருடர்களுக்கு ஒருவிதமாகவும் கடல்.....வெவ்வேறு முகத்தைக் காட்டுகிறது. உண்மையில் சொல்லப் போனால் உலகத்தில் இருக்கும் எல்லா விசயங்களுமே அப்படித்தான். எப்படி எடுத்துக் கொள்கிறோமோ அப்படியான செய்தியை நமக்குச் சொல்கிறது. வெளியே ஒரு செய்தியும் இங்கே கிடையாது. ஒரு மனிதரோ, சூழலோ, இடமோ எப்போதும் நமக்குள் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. வேண்டுமென்றால் தாக்கத்தை உண்டு பண்ணலாம். அப்போது கூட வாங்கும் தன்மையைப் பொறுத்துதான் விளைவுகள் ஏற்படுகின்றன.

அடிப்படையில் பலவிதமான அபிப்ராயங்களை நமது அனுபவங்களின் மூலம் ஆழ்மனது கிரகித்து வைத்துக் கொண்டு அதற்கு ஏற்றார் போல நம்மை சிந்திக்கச் சொல்கிறது.  நாம் நம் சுயவிருப்பு விருப்போடுதான் விசயங்களை எப்போதும் அணுகிக் கொண்டிருக்கிறோம். எந்த ஒரு பொருளுக்கும் இருக்கும் தனித்தன்மையைப் பற்றி நாம் கவலைகள் கொள்வது கிடையாது. எனக்கு இது இப்படி வேண்டும் என்ற ஒரு விருப்பத்தோடுதான் இங்கே எல்லா பரிமாறுதல்களுமே நிகழ்கின்றன. நான் மாலை வேளையில் கடற்கரை வருவது என்பது எதையோ வாங்கிச் செல்ல அல்ல, எதையோ பார்த்து செல்ல அல்ல, எதைப்பற்றியோ யோசித்து செல்லவும் அல்ல...

கடல் ஒரு பிரம்மாண்டம். கடலைத் தொட்டு நிற்கும் வானம் ஒரு பிரம்மாண்டம். கடலை ஒட்டிப்பரந்து விரிந்து கிடக்கும் கடற்கரை ஒரு பிரம்மாண்டம். இதற்கு நடுவில் அபிப்ராயமற்று வெறுமனே அமர்ந்திருத்தலோ அல்லது நடத்தலோ அல்லது நின்று கொண்டிருத்தலோ ஒருவித சுகம். கடலை நான் பார்க்கும் போதெல்லாம் அது ஏதோ ஒரு ரகசியத்தை தன்னுள் தேக்கி வைத்திருப்பதாகவே நினைத்துக் கொள்வேன். ஒவ்வொரு முறையும் அலைகள் கரைக்கு வரும் போதும் அவை என்னிடம் ஏதோ சொல்ல முயல்வதாக உணர்வேன்...! இந்த அலை சொல்லவில்லை...அடுத்த அலை சொல்லுமா? இல்லை அடுத்தது சொல்லுமா என்று ஏக்கமாய் கடற்கரையில் நின்று காத்திருந்திருக்கிறேன். 

என்ன இது ஒரு அலையும் நமக்கு ஒன்றும் சொல்லவில்லையே என்று யோசித்து கவலைப்பட்ட நான், பின்னொரு நாளில் புரிந்து கொண்டேன் எல்லா அலைகளுமே என்னிடம் மெளனத்தை பகிர்ந்த்து சென்றன என்று...! ஆழ்கடல் சலனமில்லாமல் இருக்கும் என்றாலும் ஆழ்கடலில் தோன்றும் சலனமே பயணித்து அலைகளாக கரைகளை மோதுகின்றன. ஒரு ஏற்றம் ஒரு இறக்கம் என்று தொடர்ச்சியாய் பயணித்து கரையைத் தொட்டு பிறகு வெறுமனே திரும்பிச் செல்லும் அலைகளுக்கும் வாழ்க்கைக்கும் நிறையவே தொடர்பிருக்கிறது.

ஆர்ப்பட்டமாய் ஏதோ ஒரு இலட்சியத்துக்காகவே எல்லோரும் பயணிக்கிறோம். பயணத்தின் ஆரம்பம் வெகு சுவாரஸ்யமானது அல்ல. அது போல இறுதியும் வெகு சுவாரஸ்யமானது அல்ல. ரத்தமும், சதையும் இன்ன பிற வேண்டாத பல கழிவுகளுடன் தான் மனிதன் பிறக்கிறான். இன்னும் சொல்லப் போனால் அசுத்தம் வேறு ஒரு நிலைக்கு மாறிக் கொள்வதுதான் மானுடப் பிறப்பே.....

இந்த பூமியில் ஜனித்து மரித்த அல்லது வாழ்ந்து கொண்டிருக்கிற யாராவது யாரிடமாவது கேட்டுப் பெற்றோமா எனக்கு இந்தப் பிறப்பு வேண்டுமென்று..? அது திட்டமிடாமல் தன்னிச்சையாய் நிகழ்ந்தது. உயிர் உருவவாதே சாத்தியக்கூறுகளினால்தான். மொத்த வாழ்க்கையும் சாத்தியக் கூறுகளால் கட்டியமைக்கப்பட்டதே. எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானலும் இங்கே நிகழலாம். எதேச்சையாய் நான் இங்கே வந்தவன். இங்கே எனக்கு எதற்கு பிணக்குகளும், இணக்கங்களும், துக்கங்களும் சந்தோசங்களும் வேண்டும்....? 

வேண்டாம்....எதுவுமே வேண்டாம்.

இதே கடற்கரை எனக்கு பல சூழல்களை கடந்த காலத்தில் கொடுத்திருக்கிறது. ஒரு சுனாமி தினத்தன்று...இங்கே பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை சூறையாடப்பட்டது. சுனாமி வந்த அந்த அதிகாலையில் இந்தக் கடலின் அலைகள் எல்லாம் ஊமையாகிப் போய் மனித ஓலங்களால் நிரம்பிக் கிடந்தது. வாழ்க்கையை எது கொடுத்ததோ அதுவே எடுத்தும் கொண்டது. கடலை அன்று திட்டாத மனிதர்கள் கிடையாது. கடல் மாதா என்று சொல்லி கையெடுத்துக் கும்பிட்டவர்கள் எல்லாம் சனியனே என்று சாடினார்கள். சுனாமிக்குப் பிறகு மறுநாள்  கடல்  ஒன்றும் தெரியாதது போல சலனமில்லாமல் படுத்துக் கிடந்தது. அலைகள் எல்லாம் எந்த வித குற்ற உணர்ச்சியுமின்றி கரைகளில் விளையாடிக் கொண்டிருந்தன.

பின்னொரு நாள்...என் காதலியை நான் சந்தித்ததும் பிரிந்ததும் இதே கடற்கரையில்தான். எதிர்ப்பாராமல் சந்தித்தோம். பல நாட்கள் வெகுதூரம் நடந்தோம். ப்ரியமானவைகள் பற்றி பட்டியலிட்டுக் கொண்டோம். கடவுள் தேடலில் கைகோர்த்துக் கொண்டோம். அவளை சகி என்றேன்.....என்னை அவள் பதி என்றாள்....! கைகோர்த்த படி கடற்கரையின் முடிவு எங்கே இருக்குமென்று தேடிக் கொண்டு வெகு நேரம் நடந்து கொண்டே வாழ்க்கையை கால்களால் அளந்தோம். கவிதைகள் சொல்வேன்...அவள் கனவுகளைச் சொல்வாள்.....கற்பனைகளை எல்லாம் வானத்தில் எழுதி வைப்போம். 

அதிகாலையிலும், உச்சிப் பகலிலும், மாலையிலும் நடந்து, நடந்து எங்கள் காதலை கடலளவு, வானளவு என்று எண்ணிக் கொண்டிருந்தோம்.... 

அடிப்படையில் அவளின் விருப்ப திசை வேறு என்னுடைய திசை வேறு என்று ஒரு நாள் உணர்ந்ததை அவளிடம் சொன்னேன். சரிகளை மட்டுமா மனிதம் சுமந்து கொண்டிருக்க முடியும் அப்படியானால் அது எப்படி மனிதமாகும்? அது இயந்திரமல்லவா? என் முரண்களையும் நீ ஏற்றுக் கொள்ள  வேண்டும், நான் என்பது நளினங்களின் தொகுப்பு மட்டுமல்ல நல்லவைகளின் கூட்டுமட்டுமல்ல...முட்டாள்தனமும், புரிதலின்மையும் கூட நான் தான் என்று நான் சொன்னது  அவளின் முற்போக்கு மூளைக்கு பிடிபடவில்லை. நான் நிர்ப்பந்திப்பதாக அவள் நினைத்தது தவறு என்று நான் நிறுவவும் முயலவில்லை.....

எங்கே ஒரே திசையில் சிறகடித்தோமோ...அங்கேயே ஒரு கணம் எங்களை எதிர் எதிர் திசையில் சிறகடிக்க வைத்தது. 

தெளி விசும்பினில்
கலை மேகமென
நாங்கள் தொலைந்து போனோம்!

செய்கவிதையின் படுபொருளென
அவளைக் கண்ட பொழுதினில்
அவள் மறைந்து போனாள்.....!

இந்தக் கடற்கரையில்தான்....அது நிகழ்ந்தது.

உறவினர் ஒருவர் இறந்து போக அவரின் அஸ்தியைச் சுமந்து வந்து கரைத்தது இந்தக் கடலில்தான். கடல் எனக்கு எல்லாமாய் இருந்தது. இருக்கிறது. நான் கடல் நிஜம் நிலம் பொய் என்று நம்புவன். எது மிகையோ அதுவே பொருளின் தன்மை. இந்த பூமி கடலுக்குச் சொந்தமானது. பரந்து விரிந்த இந்த வாழ்க்கையை உணர்வுப் பூர்வமாய் அணுகும் போது கடல், வான், மண், மலை, செடி, கொடி, என்று எத்தனையோ விசயங்கள் நம்மை இந்த வாழ்க்கைச் சுழற்சியை விட்டு வெளியே இழுத்துச் சென்று பிரபஞ்சத்தின் அதி நுட்பமான சூட்சுமத்தோடு இணைத்து விடுகின்றன. தத்துவங்களையும் கோட்பாடுகளையும் சித்தாந்தங்களையும் சுமந்து கொண்டு ஒரு கூலியைப் போல வாழும் வாழ்க்கை அங்கே முற்றுப் பெற்று விடச் செய்கிறது.

கடவுள் தேடல் என்பது எதையும் தேடாதிருத்தல் என்ற தெளிவினை அடையும் போது மொத்த பூமி மட்டுமில்லாது பிரபஞ்சமே நமது வசப்பட்டுப் போகிறது. பசி, கோபம், காமம் என்ற தலையாய உணர்வுகளை சுற்றி அதன் அடிப்படையில் தத்தமது வசதிகளை விஸ்தாரித்துக் கொள்ளும் ஒரு இயந்திர வாழ்க்கையை விட்டு சட்டென்று வெளியேறி சலனமில்லாத பேருண்மைக்கு செல்ல கடல் போன்ற பூமியின் நம்மெதிர்ப்படு பிரம்மாண்டங்களுக்குள் நாம் கரைந்து போகவேண்டி இருக்கிறது.

சுனாமியாய் வெளிப்பட்டு இந்த பூமி வாழ் மனிதர்களை சுக்குநூறாக்கிய கடல்தான் யுகங்களாய் பெரும் மெளனத்தில் தன்னை ஆழ்த்திக் கொண்டு கரைகளில் மோதி மோதி சிரித்துக் கொண்டிருக்கிறது. சுனாமியாய் சூறையாடவும், பேரமைதியாய் சலனமற்று இருக்கவும் கடலுக்குத் தெரியும். கடலை மனிதர்கள் வெறுக்கலாம்....அதை ஆபத்தின் அறிகுறியாய் புயற்காலங்களில் அடையாளப்படுத்தியும் கொள்ளலாம்.....அல்லது கடலினால் கிடைக்கும் நன்மைகளைப் பட்டியலிட்டபடியே இந்த பூமிப் பந்து எங்கும்  ஆழ் கருநீலத்தில் படுத்துக் கிடக்கும் அதன் மெளனத்தை போற்றவும் செய்யலாம்....

ஆனால் கடலுக்கு அது பற்றியெல்லாம் ஒரு கவலையும் இல்லை. எப்படிப் பார்த்தாலும் கடல் கடலாகவே இருக்கிறது. நேர் எதிர் கலவையான வாழ்க்கையில் அறிவைக் கொண்டு பயணிக்கும் மனிதர்களுக்கு கடலைப் போன்ற ஆழம் கொண்ட கரிக்கும் உப்பு மனிதர்களைப் பற்றி தெரிவதில்லை. இரண்டும் இரண்டும் நான்கு என்ற கணக்குகளுக்கும் ஆன்ம தெளிவுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. மனிதர்கள் ஜனிக்கிறார்கள் ....மரிக்கிறார்கள். இடையில் ஏதேதோ பேசுகிறார்கள்....அவ்வளவுதான் வாழ்க்கை.

காதலும் காமமும், கடவுளும் இந்த பூமிப்பந்தின் தீர்க்க முடியாத ரகசியங்கள்.. அப்படித்தான் கடலும். இந்த ரகசியங்களை அறிய முயல்தல் என்பது அறியாமை. அறிந்தேன் என்பது மடமை. இந்த பூமியில் வாழும் அத்தனை ஜீவராசிகளுக்குள்ளும் சமுத்திரத்தின் கரிப்புத்தன்மை கரைந்து கிடக்கிறது. கரிப்புச் சுவை உணர்வோடு தொடர்புடையது....கரிக்கும் மனிதர்கள் கடலைப் போன்ற பெருங்குணம் கொண்டவர்கள்....

கடற்காற்றில் நான் அமர்ந்திருந்தேன். நிலவு கடலுக்கு மேலிருந்து ஏ...லே...லோ ஐலசா என்று பாடிக் கொண்டிருந்தது...அலைகள்....காற்றின் வேகத்திற்கு ஏற்றார் போல ஹோ....என்ற பேரிரைச்சலோடு கரையை மோதிக் கொண்டிருந்தன.

பலர் அந்தக் கடற்கரையில் பல்வேறு காரணங்களுக்காய் அலைந்து கொண்டிருந்தனர்.

நான் கடலை பார்த்துக் கொண்டிருந்தேன்.....கடல் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது...! 



தேவா சுப்பையா...




தேடல்....01.12.2013!

$
0
0

ஒன்றும் இல்லை என்று தோன்றிய கணத்தில்தான் எனக்கான சுதந்திரப் பெருங்கதவுகள் திறந்து கொண்டன. யாரும் யாருக்கும் எதுவும் செய்து விட முடியாது என்று உணர்ந்த போது சுற்றி இருக்கும் எந்த ஒரு மனிதரையும் சூழலையும் குறை சொல்ல எண்ணம் வரவில்லை. இது ஒரு பரிபூரணமான விடுதலை. செயல்களுக்குள் நின்று கொண்டு விளைவுகளைக் கணக்குப் போட்டுக் கொண்டிருந்த, உருவாக்கிக் கொண்ட சிக்கல்கள் நகர்ந்த நிலை. எந்த ஒரு கற்பனைக்குள்ளும் சிக்கிக் கொள்ளாத தத்துவங்களுக்குள்ளும் சித்தாந்தங்களுக்குள்ளும் அடைபட்டுக் கொள்ளாத பெரும் திறப்பு.

கருத்துக்களைக் கொண்டு அந்த கதவினைத் தட்டத்தான் வேண்டும் ஆனால் அந்த திறப்புக்கும் கருத்துகளுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. தத்துவங்களின் மீதேறி பயணித்துதான் அங்கே செல்லவேண்டும் ஆனால் அங்கே இருப்பது தத்துவங்களுக்கும் சித்தாந்தங்களுக்கும் சற்றும் தொடர்பில்லாதது. ஒரு நொடியில் எல்லாம் கழற்றி எறிந்தால் மட்டுமே அந்த பெருவெளிக்குள் ஊடுருவ முடியும். யாரும் யாருக்கும் சொல்லி மாற்ற முடியாது என்ற புரிதலை அந்த கதவிற்கு அப்பால் போனபின்பு உணர முடிந்தது.

தேடிக் கொண்டிருப்பவர்கள் தேடி வருவார்கள். கேள்விகள் கேட்ட பின்பு சொல்லும் பதிலுக்குதான் அர்த்தம் இருக்கிறது. பதில்களை சொல்லிக் கொண்டே இருந்தால் கேள்விகளே தெரியாதவர்களுக்கு அது அனாவசியமாய் தெரியும். இங்கே இந்த வாழ்க்கையில் துன்பப்பட ஒன்றுமே இல்லை. ஆனந்தத்தில் மூழ்கி அனுபவிக்க மட்டுமே எல்லாமே படைக்கப்பட்டிருக்கிறது. இன்பத்தை இயற்கை உருவாக்குகிறது. துன்பத்தை மனிதன் உருவாக்கிக் கொள்கிறான். துன்பங்கள் யாவுமே நாம் உருவாக்கிக் கொண்டவை. எல்லோரும் ஒரே மாதிரியாய் இருக்க முடியாது. ஒவ்வொரு  மனிதருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை அவரவர் சூழலுக்கு ஏற்றார் போல, அவர் உடல் தாங்கி இருக்கும் ஜீன்களில் பொதிந்து கிடக்கும் பாரம்பரியத்துக்கு ஏற்றார் போல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இன்னொருவர் போல நான் இருக்க ஆசைப்பட்டு என் முன் இருக்கும் வாழ்க்கையை மாற்ற முயலும் போது....பிறக்கிறது சிக்கல்.

ஒரு மிகப்பெரிய மலர்ச்சி என்னுள் இருக்கிறது என்று உணர்ந்த தருணத்தில் புறத்தில் நான் உருவாக்கி வைத்திருந்த கட்டுப்பாடுகளும், சமூகம் திணித்து வைத்திருந்த சட்ட திட்டங்களும் உடைந்து விழ ஆரம்பித்தன. இயல்பே சத்தியம் என்று இருக்கையில் இங்கே சத்தியத்தை போதிக்க ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் ஓராயிரம் வழிமுறைகள் எனக்கு அபத்தமாய் தெரிந்தது. கடவுள் என்னும் கோட்பாடு வெகு சிக்கலாக்கப்பட்டு காலம் காலமாய் மனித மனங்களின் ஆழத்தில் இருந்து அழிக்க முடியாத அளவிற்கு அது பதிந்து போயிருப்பதை உணரமுடிந்தது. தேவைகளுக்காக, மனதின் பயத்திலிருந்து விடுபட, குற்ற உணர்ச்சி இன்றி வாழத்தான் கடவுள் இங்கே பயன்படுகிறார் அதனைக் கடந்த ஒரு பேரானந்தத்திற்குள் இந்த கடவுள் என்னும் வரைமுறையற்ற பெருவெளி கூட்டிச் செல்லும் என்பதுதான் இதுவரை மிகையானவர்கள் அறியாத பேருண்மை.

எதையுமே யாருக்கும் சொல்ல வேண்டாம். பகிர்தல் கூட ஒருவிதமான அபத்தம். தற்பெறுமை பேசுதல் போல அது என்று எனக்கு ஒரு வினோதமான மனோநிலை கடந்த சில வாரங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. என்ன இது..? அது இப்படி இது இப்படி என்று சொல்லுக் கொள்வது. எனக்கு சரி என்றால் நான் போகவேண்டியதுதானே...? ஊருக்கு என்ன உபதேசம் என்று ஒரு குரல் என்னை உறுதியாய் தடுத்து நிறுத்திக் கொண்டே இருக்கிறது இப்போது எல்லாம். எழுத்து என்பது ஒருவித தந்திரம். செய்தி பகிர்ந்து கொண்டே எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு கர்வம்.  தன்னை உயர்த்திக் கொண்டு சக மனிதர்களை இரட்சிக்கவே இங்கே நிறைய பேர்கள் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

தொடர்பற்று இருக்கும் ஒரு மிகப்பெரிய வேட்கை ஒன்று என்னை பொதுவான நியதிகளுக்குள் இருந்து விலக்கியே வைத்திருக்கிறது. சுற்றி நிகழும் அனுபவங்களை கூர்மையாக கவனித்து உள்வாங்கிக் கொண்டு சிறு துரும்பென நகரும் அற்பனுக்கு எதற்கு பேச்சு என்று ஒரு கேள்வி இடைவிடாது கேட்டுக் கொண்டிருக்கிறது உள்ளுக்குள். எது சுகமோ அதைச் செய் என்று உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஓய்வு என்பதை முழுமையான மனதுக்கும் உடலுக்குமான ஓய்வாய் நான் மாற்றிக் கொண்டுவிட்டேன். காற்றில் இறகு மிதப்பது போல ஒரு தாளகதியில் அறிவற்று இருப்பது சுகம். அறிவு ஆராய்கிறது. ஆராய்தல் எப்போதும் அழகுணர்ச்சியை மழித்து விட்டு.....டெக்னிக்காலிட்டி பல்லை காட்டுகிறது.

எனக்கு இங்கே ஒன்றும் புரியவே வேண்டாம். எது எப்படி நிகழ்கிறது என்ற நான் அறிந்து கொள்ளவே வேண்டாம். மெல்லிய காற்று உடல் தடவி செல்லும் சுகத்தை நான் அனுபவித்துக் கொள்கிறேன். நல்ல இசை ஒன்று என் காதுகளைத் தடவிச் செல்லட்டும். பகலைப் போன்ற நிலவொளியில் ஏதேனும் நட்சத்திரங்கள் தெரிகிறதா என்று தேடி தேடி அதோ அங்கொன்று.. இதோ இங்கொன்று என்று கண்டுபிடித்து மகிழ்ந்து கொள்கிறேன். சுற்றி நிகழும் எல்லாம் நிகழட்டும். என் தொடர்பு என்பது சாட்சியாய் இருப்பது மட்டுமே...! உருவமோ அருவமோ எதோ ஒன்றாய் இருந்து விட்டுப் போகட்டும் கடவுள். இந்த பூமியில் நான் ஜனித்து இதுவரையில் வாழ்ந்து வளர்ந்து பின் இங்கேயே மடிந்து போகப் போகிறேன்.

இங்கே ஒரு ஜீவனாய் நான் வாழ நிறைய கருணைகள் எனக்கு உதவியிருக்கின்றன. நிறைய நேரடியாகவும் மறைமுகமாகவும், நான் வாழ்ந்த சமூகத்தினரிடமிருந்தும் என்னை சூழ்ந்திருக்கும் இயற்கையிடமிருந்தும் பெற்றிருக்கிறேன். எனக்குள் நன்றியுணர்ச்சி இருக்கிறது. ஏதோ ஒரு சுகம், வலி, துக்கம் சந்தோசம் என்று எப்போதும் எனக்கு நிறைய, நிறைய இந்த இயற்கை கொடுத்திருக்கிறது. நான் அதற்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்கிறேன். சிவா....சிவா.... சிவா என்று இந்த பிரபஞ்சத்தை இழுத்துப் பிடித்து எங்கும் ஊடுருவியிருக்கும் அந்த சக்தியை சிறு நெய்விளக்கேற்றி பூக்களைக் கொண்டு பூஜித்து அஉம் நமசிவாய என்ற ஐந்தெழுந்து மந்திரத்தை ஓதி ஓதி உள்ளுக்குள் இருக்கும் அதிர்வுகளை சமப்படுத்திக் கொள்கிறேன். அமைதியடைந்து கொள்கிறேன்.

ஒரு மயானத்தில் இழுத்துக் கொண்டு போய் விறகு கட்டைகளின் மீது அடுக்கி மேலே சாண விரட்டிகளை வைத்து மூடி, அதற்கும் மேல் சாணத்தை மெழுகி வைக்கோல் பிரிகளை வைத்து மூடி கூட்டமாய் வந்து எரித்து விட்டு பின் குளித்து விட்டு வீடு திரும்பி விடுகிறார்கள். அதோடு முடிந்து போகும் இந்தப் பயணத்தில் யார் கூட வருவார்கள்...? நீதானே.....நீதானே...நீதானே... என்று கண்ணீர் மல்க ஒரு பெரும் பேரமைதியை நோக்கி கதறிக் கதறி சப்தமின்றி ஒடுங்கி ஒரு மூலையில் அமர்ந்து கொள்கிறேன். பத்தி வாசனையும், சாம்பிராணி வாசனையும் புற உலகினை விட்டு எங்கோ உள்ளுக்குள் கூட்டிச் சென்று ஒரு பெருங்கருணைக் கடலுக்குள் தள்ளி விட்டு விடுகின்றன. தியானத்தின் உச்சம் அழுகையாகிறது. கேவிக் கேவி அழும் ஒரு அழுகை.

ஏன் அழுகிறேன்...? தெரியாது....

யார் அழச் சொல்கிறார்கள்....? தெரியாது.

ஏன் இதை இங்கே பேசிக் கொண்டிருக்கிறேன்...? தெரியாது.

தெரியாதுகளில் நகர்ந்து கொண்டிருக்கிறது.... என்னுடைய 37 வது வருட வாழ்க்கை. குறையோடிருக்கும் வரையில் நீ பேசிக்கொண்டிருப்பாய் என்று உள்ளுக்குள் ஆதி குரு சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறான்.

ஓய்விற்குள் விழுந்து கிடக்கையில் பாலகுமாரன் ஐயாவின் உடையார் ஐந்தாவது பாகம் நேற்று முடித்து ஆறாம் பாகமான இறுதி பாகம் கையிலெடுத்திருக்கிறேன். சுமார் இரண்டு வருடங்களாக படித்துக் கொண்டிருக்கிறேன். படித்து இந்த ஆறு பாகமும் முடிந்து விட்டால் இந்த அனுபவத்திலிருந்து வெளியே வந்துவிடுவோமோ என்ற பயம் எனக்கு. அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறேன். ஐந்தாம் பாகம் இறுதியில் உபதளபதி வைணவதாசன் ஒற்றறிய சென்று மேலைச் சாளுக்கியர்களால் கொல்லப்படுகிறார். இந்த முறை ஊருக்கு போய்விட்டு வரும் போதுதான் பாலகுமாரன் ஐயாவின் சொர்க்கம் நடுவிலே புத்தகம் வாங்கி வந்தேன். 

உடையார் ஐந்த்தாம் பாகம் படிக்கும் போதே சொர்க்கம் நடுவிலேயேவையும் ஆரம்பித்து விட்டேன். சொர்க்கம் நடுவிலே கதையில் வைணவதாசன் மரணித்த பின்பு பித்ருலோகம் என்னும் உலகத்தில் இருந்து கொண்டு மரணத்திற்கு பின்னான வாழ்க்கை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அதைப் படித்துக் கொண்டே வைணவதாசன் என்னும் அந்தண ஒற்றனின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்று உடையாரில் படித்த போது இன்னும் நெகிழ்ச்சியாய் இருந்தது. பாலகுமாரன் ஐயா என்பவர் புறத்தில் எப்படிப்பட்டவர் என்று எனக்குத் தெரியாது. தொடர்பில்லை. அகத்தில் எனக்கு நல்லதொடர்பிருக்கிறது. அகத்தொடர்பே போதும் என்றும் தோன்றுகிறது. அவர் என்னை சூட்சுமமாய் ஆசிர்வதித்திருக்கிறார். புறத்தில் வெளிப்படுத்திக் கொள்ளாத ஒரு பேரன்பு எனக்கு எழுத்துச் சித்தர் மீது இருக்கிறது.

மிகப்பெரிய கண்மாய் மாதிரி பாஸ் இந்த வாழ்க்கை .......தீரத் தீர முங்கி முங்கி குளிக்கணும்.கை கால் எல்லாம் ஊறிப் போய் கண்கள் சிவக்க கோடை காலத்துல குளிக்கும் போது எப்டி இருக்கும் அப்டி இருக்கு இப்போ எனக்கு. சில நேரம் ஆழத்துல போய் தண்ணிய குடிச்சுடுறேன்...அப்புறம் மூச்சு திணறி இருமி, இருமி தண்ணிய வெளில எடுக்குறேன். சில நேரம் ஆழம் தெரியாம உள்ளுக்குள்ள போய் மாட்டிக்கிட்டு திக்கித் திணறி யாராச்சும் காப்பத்துவாங்களா என்று பதறி வெளியே ஓடி வருகிறேன். 

சில நேரம் யார் யாரோ வந்து கை கொடுத்து காப்பத்துறாங்க. நெகிழ்ச்சியா கை பிடித்து கண்ல ஒத்திக்கிட்டு நன்றி சொல்றேன். சில நேரம் மல்லாக்க படுத்துக் கொண்டு பூமிக்கும் ஆகாயத்துக்கும் தொடர்பற்று மிதக்கிறேன். தெரிஞ்ச வரைக்கும் நீச்சலடிக்கிறேன் தெரியாம ஒரு பயம் வரும் போது கரையோரமா ஆழம் குறைஞ்ச பகுதியில வந்து தேமேன்னு உட்கார்ந்துக்கிறேன்.....

குளிச்சது போதும் வாடான்னு ஒரு நாள் அம்மா மாதிரி கம்பெடுத்துக்கிட்டு வந்து ஒரு சக்தி கூப்பிடும் பொது.....அச்சச்சோ அடிப்பாளேன்னு வந்து ரொம்ப நாழி ஆயிடிச்சேன்னு சொல்லி அவ கையப் புடிச்சுக்கிட்டு கிளம்பிறப் போறேன்....

அவ்ளோதான் பாஸ் வாழ்க்கை....! 

விளக்கவோ...பெருமைப்பட்டு சொல்லவோ இங்க ஒண்னுமே இல்லை...அன்பு செலுத்துறதும், நன்றியோட வாழ்றதும் மட்டுமே இங்க மிகப்பெரிய தேடலுக்கு எனக்கு கிடைச்ச விடை.....

சுழலானேன்... ஒரு சுழலானேன்...
பெருங்காற்றினூடே ஒரு சுழலானேன்...
திசையறியேன்...நான் திசையறியேன்....
சுற்றிச் சுழன்று செல்லும் திசையறியேன்...
வகையறியேன்...வாழ்வின் வகையறியேன்....
கணத்தில் மாறும் நிலையறியேன்...
கணத்தில் மாறும் நிலையறியேன்...
உடலானேன்...நான் உயிரானேன்...
யாரென்று என்னை நானறியேன்....
யாரென்று என்னை நானறியேன்....!

சம்போ....!!!!!!!



தேவா சுப்பையா...





கடவுளின் மொழி...!

$
0
0

விடியக்காலை மூணு நாப்பதுக்கு சென்னையில பிளைட். நான் மதியம் 3:00 மணிக்கு மதுக்கூர் பஸ்டாண்ட்ல நிக்குறேன். எப்டி பாத்தாலும் மன்னார்குடி ஒரு முக்கால் மணி நேரம். அங்க இருந்து கும்பகோணம் ஒரு இரண்டு மணி நேரம். ஒரு ஆறு மணில இருந்து ஒரு ஆறரைக்குள்ள கும்பகோணம் போனா அங்க இருந்து ஒரு ஏழு மணி நேரம் வச்சுக்கிட்டா கூட வொர்ஸ்ட் டூ வொர்ஸ்ட் விடியக்காலை ஒரு மணிக்கு நம்மல சென்னை ஏர்போர்ட்ல தள்ளிவிட்டுட்டு போய்ட மாட்டானான்னு.....நான் யோசிச்சுட்டு இருந்தப்பவே....மன்னார்குடிக்கு பஸ்ஸும் வந்துடுச்சு.....

இப்படி ஒரு டைட் செட்யூல் வச்சுக்கிட்டு ஏன் ஊருக்குப் கெளம்பணும்னு நீங்க கேக்குறது எல்லாம் சரிதான் பாஸ். ஆனா ஒரு வாரம் லீவுக்கு ஊருக்கு வந்துட்டு இந்த ஊர விட்டு கிளம்புற பாடு இருக்கே....அதை இந்த மாதிரி கிளம்பிப் போறவங்களுக்குத்தான் தெரியும். மண்ண விட்டு, மரத்த விட்டு, சொந்தங்கள விட்டு அம்புட்டு ஈசியா கெளம்ப முடியும்ன்றீங்க? ரொம்ப கஷ்டம். இந்தா பன்னென்டு தானே ஆகுது. அட ஒண்ணுதானே ஆகுதுன்னு நேரத்தக் கடத்தி கடத்தி... இன்னொரு கை சாப்டுப் போப்பான்னு அம்மா ஒரு கரண்டி சோறப் போட்டு ரெண்டு கரண்டி சாம்பார ஊத்தும் போது கரண்ட் இல்லாத தருமமிகு தமிழ்நாட்ல வேர்க்க விறுவிறுக்க சாப்டுற சுகம் இருக்கே......அதை எல்லாம் அனுபவிக்கணும்ங்க....

பஸ் வர்ற வரைக்கும் நாம ஊருக்குப் போய்த்தான் ஆகணுமா இது என்ன பொழப்புன்னு யோசிச்சுக்கிட்டே இருக்கவைங்க எம்புட்டு ஸ்பீடா கெளம்பி இருப்பாய்ங்கன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாத்துக்கோங்க....

யப்பா தம்பி டிக்கெட் எடுப்பான்னு கண்டக்டர் தோள தொடவும் சுதாரிச்சுக்கிட்டு மன்னார்குடி ஒண்ணு கொடுங்கண்ணேன்னு கேட்ட வேகத்துல மன்னார்குடி போக எம்புட்டு நேரம் ஆகும்னு லவக்குன்னு கேட்டுப்புட்டேன். போறப்ப போவும்யா...ன்னு சொல்லிட்டு நவுந்து போன கண்டக்டர்க்கு எப்புடி தெரியும் நம்ம ஏரோப்ளேன் புடிக்க போற அவசரம். அரசு விரைவுப் பேருந்துன்னு போட்டு இருந்தா விரைவாப் போய்த்தான் ஆகணுமான்ற நையாண்டியோட கேசுவலா வண்டி ஓட்டிக்கிட்டு இருந்த டிரைவர பாத்து எமகாதகா....என்  வாழ்க்கையில ஏன்யா வெளையாடுறன்னு கத்தணும் போல எனக்கு இருந்துச்சு.....

ஏற்கெனவே மெதுவா போற பஸ்ஸு நம்ம அவசரத்துக்கு இன்னும் மெதுவா போற மாதிரி தெரியவும் பேசாம பேக்க எடுத்துக்கிட்டு இறங்கி வேகமா ஓடிருவமான்னு கூட யோசிச்சுப் பாத்துட்டேன். மன்னார்குடி பஸ்ஸண்ட்ல அதிர்ஷ்டவசமா கும்பகோணத்தை நோக்கி பாஞ்சு சீறிக்கிட்டு(????!!!!!!*#!) இருந்த இன்னொரு விரைவுப் பேருந்த தொரத்திப் பிடிச்சு ஏறி ஜன்னலோர சீட்டா பாத்து புடிச்சுட்டு ஸ்ஸ்ஸ் அப்பாடன்னு நான் யோசிச்சதுதான் அப்போதைய என்னோட லைஃப் டைம் சாதனையா எனக்குத் தோணிச்சு....

அடுத்த நாள் காலையில டூட்டி ஜாய்ன் பண்ணனும், இந்த பிளைட்ட விட்டா மொத்த டிக்கட்டும் போய்டும்....அப்டீன்னு என்ட் ஆஃப் த டே எல்லா வெவகாரமும் பொருளாதரத்துலதான் வந்து முடியுது. செவ்வாக்கிழமை காலையில டூட்டி ஜாய்ன் பண்ணிடுவேன்னு பாஸ் தலையில அடிச்சு சத்தியம் பண்ணிட்டு வந்துருக்கேன்னு யோசிச்சுட்டு இருந்தப்பவே அப்போன்னா முன்னாடியேல்ல கெளம்பி இருக்கணும்னு நமக்குள்ளேயே ஒரு குரல் நம்மள தெனாவெட்டா கேள்வி கேக்கவும் ஆரம்பிச்சுருச்சு....

சரி பாத்துக்கலாம். இந்த பஸ்ஸாச்சும் ஸ்பீடா போகுமான்ற மில்லியன் டாலர்  கேள்விக்கு பதிலா ஆமா போகும்னு உறுதியா நான் சொல்லிக்கிட்டத பஸ் டிரைவர் கேட்டுட்டாரு போல....மன்னார்குடி எல்லைய தாண்டுன வண்டி....மாட்டப் புடிச்சு புது இடத்துக்கு இழுத்துக்கிட்டுப் போனா ரெண்டு காலையும் பப்பரப்பான்னு விரிச்சுக்கிட்டு மல்லுக்கட்டுமே அப்டி ஒரு மெர்சல் காட்டிகிட்டு வண்டி நவுருவேணாங்குது....என்ன பண்ண முடியும்ணா...? யோவ் வண்டிய கொண்டாய்யா நான் ஓட்டிக்கிறேன்னு கேக்காத பாடா டிரைவர் அண்ணன் பக்கத்துல போய் உக்காந்து கும்பகோணம் எத்தன மணிக்குப் போவும்ணேன்னு மிரட்சியா கேட்டேன்.....

போவும் தம்பி போவும்....போய் உள்ள ஒக்காருங்கன்னு அவர் சொன்ன உலகமகா பதிலை வங்கி கடிச்சுத் துப்பிக்கிட்டே திருவிளையாடல் தருமி கனக்கா எனக்கு வேணும், எனக்கு வேணும்.....நான் கேட்டிருக்க கூடாது, கேட்டிருக்க கூடாது....என் தப்புதான்....எந்தப்புதான்...சொக்கா...சொக்கான்னு நான் உள்ளுக்குள்ள கத்தினது வெளில கேட்டுருச்சுப் போல முன்னாடி சீட்டு அக்கா கனகாம்பரமும் கதம்பமும் சேத்து வச்சிகிட்டு இருந்தவங்க...திரும்பி பாத்து என்னை முறைக்க.....

அட என்னக் கொடுமை சரவணா இது ஈவ்டீஸிங்னு ஏதாச்சும் மாட்டிவிட்டா கூட அப்டி மாட்டிகிட்டோம்னு சொல்லிப் பெருமைப்படுற அளவுக்கு இவுங்க இல்லையேன்னு என்  கல்லூரி கால நக்கல் எந்திரிச்சு குத்தாட்டம் போட அடங்கொன்னியா அடங்குடான்னு சொல்லிட்டு விரக்தியா நான் சோழப் பெருநாட்டின் வயல்வெளிகளுக்குள் பார்வையை செலுத்தினேன்....

அதாவதுங்க எல்லாத்துக்கும் ஒரு வரைமுறை இருக்கு.  டாக்டர்கிட்ட போய் முடியலேன்னு படுத்துட்டீங்க. ஆப்பரேசன் தியேட்டர்ல கொண்டு போய் படுக்க வச்சப்புறம்....கையக் கால நீட்டிக்கிட்டு படுத்துக்கிட வேண்டியதுதான். அவரு என்ன வேணா செஞ்சுட்டுப் போறாரு....இனிமே இந்த ஃபுல் பாடியும் அவர் கண்ட்ரோல்லன்னு நினைச்சுப்போமே...அதே ஸ்டேஜ்க்கு நான் போய்ட்டேன்....

பஸ் ஸ்பீடா போனா என்ன ஸ்லோவா போனா என்ன....ஏர் அரேபியா பிளைட் ஒரு ஆள ஏத்திட்டுப் போறதும் ஏத்தாமப் போறதும் எவன் கையில இருக்கு.....? சம்போ மகாதேவா உன் கையிலதான்னு எல்லாத்தையும் அவன் கிட்ட விட்டுட்டேன். 

ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் எத்தனை தடவை இந்தப்பக்கம் வந்து இருப்பாங்க....! எத்தனை போர்களுக்கு படை வீரர்கள்...சோழம்....சோழம்...சோழம்னு கேடயத்துல வாளால அடிச்சுக்கிட்டு ஓடி இருப்பாங்க....., மிகப்பெரிய வயல்வெளிகளோட இன்னும் அடர்தியா மரங்களோட பச்சைப் பசேல்னு எப்டி இருந்திருக்கும் சோழ நாடுன்னு உடையார் கொடுத்த அனுபவத்தை நான் மென்னு தின்னிகிட்டு இருந்தப்பவே பஸ் நின்னுடிச்சு....

டக் டக்குனு பழைய சோழ தேச கனவை விட்டு வெளில வந்து என்னாச்சுன்னு எட்டிப் பாத்தா...பூவலூர் பாலத்துகிட்ட சாலை மறியல் பண்ணிட்டு இருக்காங்கன்னு சொன்னாங்க. டிரைவர் வண்டிய இழுத்தி நிறுத்திட்டு இறங்கிப் போய்ட்டாரு. கண்டக்டர்.....இப்போ எல்லாம் வண்டி எடுக்குற கதையா இல்ல தம்பின்னு என் நம்பிக்கையை மிதிச்சு துவம்சம் பண்ணினாரு....

மெல்ல கீழ இறங்கி வந்துப் பார்த்தேன். எங்க பஸ்ஸுக்கு முன்னால ஒரு பத்து பஸ்...எங்க பஸ் நிறுத்தினதுக்கு பின்னால ஒரு 4 வண்டின்னு வரிசை பெரிசாகி இருந்துச்சு....

பூவலூர் பாலத்தை ஒட்டின மெயின் ரோட்ல பிரச்சினை நடந்த இடத்துக்கு பக்கத்துல வந்து பார்த்தேன். நடு ரோட்ல கிராமத்து ஜனங்கள்னு சொல்லிட்டு நிறைய ஆளுங்க அதுவும் எல்லாம் சின்னப் பசங்க உக்காந்து ஒரு வண்டியவும் விட முடியாது கலெக்டர் வரணும்னு ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இருந்தாங்க. எதிர் திசையிலயும் ஒரு பத்து பதினைஞ்சு பஸ் கார்னு நின்னுட்டு இருந்துச்சு.

பூவலூர் டாஸ்மாக்ல ஏற்பட்ட பிரச்சினையில சோ கால்ட் மேல்சாதிக்காரங்கள சோ கால் கீழ் சாதிக்காரர் ஒருத்தர் ஏதோ சொல்லி திட்ட....அந்த சோ கால்ட் கொம்பு முளைச்ச மேல் சாதிக்காரர்க்கு ரோஷம் வந்து அவரோட பையனோட கெளம்பி வந்து சோ கால்ட் கீழ்சாதிக்காரர வயலுக்குக்குள்ள வுட்டு உருட்டுக் கட்டையில அடிச்சதுல....இவர் உயிர்க்கு ஆபத்தான நிலையில மன்னார்குடி அரசு மருத்துவமனையில சேர்க்கப்பட்டிருகார்னு சொல்லி  அடிபட்டவர் சார்பா அந்த மறியல் நடந்துட்டு இருந்துச்சு.....

சாதி சாதின்னு சொல்லி சாதிப் பெயரால அரசியல் செய்ற கருங்காலிகள் இருக்க வரைக்கும் நம்மூர்ல சாதி சனியன் செத்தே போகாதுன்னு எனக்குத் தோணிச்சு. அங்க மறியல் பண்ணிட்டு இருந்த ஒருத்தர் கூட நின்னு பேச முடியுற அளவுல இல்லாம டாஸ்மாக் அத்தனை பேரையும் கபளீகரம் பண்ணி இருந்துச்சு. யாரோ ரெண்டு க்ரூப் ஊருக்குள்ள அடிச்சுக்கிட்டு போலிஸ் ஸ்டேசன் போகாம ஒதுக்குப் புறமா இருக்க ஊரைவிட்டுத் தள்ளி மெயின் ரோட்டுக்கு வந்து உட்காந்து அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் போற பஸ்ஸுகள மறைச்சு நின்னு அவுங்க கோபத்தக் காட்றது சரின்னுதான் இந்த சமூகம் அந்த உலகமறியா அப்பாவி ஜனங்களுக்கு கத்துக் கொடுத்து இருக்கு. 

ஏதாச்சும் பிரச்சினை இல்லை யாரச்சும் தலைவர்கள் இறந்து போய்ட்டாங்கன்னா ஓடிக்கிட்டிருக்க இருக்க பஸ்ஸயும், ரயிலையும், கார்களையும் மறிக்கிறது உச்சபட்ச வன்முறை, அராஜகம், அயோக்கியத்தனம்னு ஏன் இன்னும் யாருக்கும் புரியலை. வண்டில போறவனுக்கு என்ன அவசரம்னு யோசிக்க முடியாத குரூரம், தன் வலியை தனக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை நேர்மையா தீத்துக்க நினைக்காத மனதின் வக்ரம் இன்னிக்கு போரட்டம்ன்ற பேர்ல நம்ம ஊர்ல சாலை மறியல்களா நடந்துகிட்டு இருக்கு. இப்படி சாலைமறியல் இருக்கறதை விட ஒட்டு மொத்த ஊர் ஜனங்களும் போலிஸ் கமிஷனர் ஆபிஸ்க்கோ இல்லை கலெக்டர் ஆபிசுக்கோ போய் உக்காந்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கிறவரைக்கும் முற்றுகை போரட்டம் நடத்தலாமேன்னு நான் யோசிச்சுக்கிட்டே...

பிரச்சினை நடக்குற மைய இடத்துக்கு என்னோட பேக்கோட வந்து நின்னு தேமேனு பாத்துட்டு இருந்தேன். யாரோ ஒருத்தர் அந்தக் கூட்டத்துல இருந்து எழுந்து வந்து அங்க நின்னுக்கிட்டு இருந்த என்னை மாதிரி வழிப்போக்கர்கள் கிட்ட நியாயம் கேட்டுட்டு இருந்தாரு.... இந்த அடர்த்தியான சமூகத்துல நானும் ஒருத்தன் தான் இதுக்குள்ள இருக்கும் போது இங்க இருக்குற நல்லது கெட்டதுகள்ள தெரிஞ்சோ தெரியாமலோ ஒவ்வொரு மனுசனும் பலிகெடா ஆகத்தான் வேணும்னு மனசுக்குப் பட்டுச்சு....

வாட்சைப் பார்த்தேன்... .மணி மாலை 5.  அடக்கடவுளே இன்னும் பூவலூர் தாண்டலயே...நீடாமங்கலம்,கும்பகோணம் அதுக்கப்புறம் சென்னை பைபாஸ் புடிக்கிற வரைக்கும் புல் லோடான கிரைண்டர் சுத்துற மதிரில்ல ஆடி அசஞ்சு வண்டி ஓட்டுவாய்ங்க ஏதாச்சும் நடக்குமா...? போலிஸ் வருமா? கூட்டம் கலையுமா...

ஒரு மாதிரி படபடப்போட நின்னு பாத்துட்டு இருந்தேன். அஞ்சே கால்க்கு ஒரு போலிஸ் சாரும் ஒரு போலிஸ் அக்காவும் வந்தாங்க....கிட்டத்தட்ட நூறு இருநூறு பேருக்கு மேல நின்னு அழிச்சாட்டியம் பண்ணி மறியல் செஞ்சுட்டு இருந்த மறியலை கலைக்க வந்த போலிஸ் படை எனக்கு இன்னும் டென்சனை கெளப்ப....
கடவுளே சென்னை போகணும்...ப்ளைட்ட வுட்டா....டிக்கெட்டும் போய்டும்...வேலைக்கும் ஒரு நாள் கழிச்சு போய் ஜாய்ன் பண்ணனும்..இது என்ன கொடுமைன்னு சொல்லிட்டு இருந்தப்ப..

என் பக்கத்துல இருந்த ஒருத்தர்...கிட்ட வந்து என்ன தம்பி பிரச்சினைன்னு கேட்டாரு.. ! விவரத்தைச் சொன்னேன். தம்பி இப்போ எல்லாம் இங்க ஒண்ணும் ஆகாது, அந்த சைட்ல போய் ஏதாச்சும் ஆட்டோ இல்லை பைக் ரிவர்ஸ்ல போவாங்க போய்டுங்கன்னு சொன்னவரு என்ன நினைச்சாரோ தெரியலை... வாங்கன்னு சொல்லி என்னை கையப் புடிச்சு அந்தாண்ட பக்கம் கூட்டிட்டுப் போனாரு. கூட்டம் கூடினதோட மட்டும் இல்லாம ரெண்டு பக்கமும் வண்டிங்க வரிசை அதிகமாவும் ஆயிடுச்சு.  என்னை கூட்டிட்டு அந்தப்பக்கம் போன  அந்த நண்பர் அந்தப்பக்கமா நீடாமங்கலம் போற பைக் கிட்ட எல்லாம் இந்த தம்பிய நீடாமங்கலத்துல விட்ருங்கன்னு சொல்லி ஒவ்வொருத்தர் கிட்டயா கேட்டாரு.... இரண்டு மூணு பேரு முடியாதுன்னு சொல்லிட்டாங்க..

நாலாவத ஒரு பைக் வந்துச்சு...அவர்கிட்ட என்னை கூட்டிட்டு வந்தவர் விபரம் சொல்ல...சரி நான் நீடாமங்கலத்துல அவரை விடுறேன்னு சொல்லி உடனே  வண்டியில என்னை ஏறச்சொன்னாரு..... அவசரத்துல பைக் ஓட்றவரு யாரு என்னனு முகத்தைக் கூட பாக்கலை நான்...என்னை ஏத்திவிட்டவருக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு...

வண்டி  பறந்து கொண்டிருந்தது.

நீடாமங்கலத்துக்கு அப்புறம் ஏதோ ஒரு கிராமத்தில் குலதெய்வம் கோயிலுக்குப் போய்க் கொண்டிருப்பதாய் சொன்னார். குழந்தைக்கு உடம்பு முடியாதப்ப வேண்டி இருந்தேன். இப்ப நல்லாயிட்டா அதான் போய் மாலை வாங்கிப் போடப்போறேன்னு சொன்னார். நீடாமங்கலத்தில இருந்து பஸ்ல போனா காரியம் ஆவாதே தம்பி.....ஆட்டோவுக்கு எப்படியும் ஐநூறு கேப்பான், அப்படியே போனாலும் நேரத்துக்கு போகவும் முடியாது....எப்டி போவீங்க? எப்டி சென்னை பஸ்ஸ புடிப்பீங்க.....கேட்டார். 

தெரியலிங்கண்ணா....ஆனா இன்னிக்குப் எப்டியும் போயகணும்ணா சொன்னேன்.

சரி நான் ஒண்ணு பண்றேன். நானே உங்களை கும்பகோணத்துல நேரா பைக்ல கொண்டு வந்து விடுறேன். பெட்ரோல் மட்டும் போட்டுட்டு போவோம் நீடாமங்கலத்துல....சொன்னார்! அண்ணா நீங்க பிள்ளைக்கு வேண்டிட்டு குலதெய்வம் கோயிலுக்குப் போறீங்க ..எப்டிண்னா..? தயங்கியபடியே கேட்டேன்.

அடப்போங்க தம்பி...சாமி ஒண்ணும் நினைச்சுக்காது. இன்னும் சொல்லப் போனா ஒங்க சூழ்நிலை தெரிஞ்சு உதவ முடிஞ்சும் அதோ கதியா நடுரோட்ல விட்டுட்டு சாமிகிட்ட போனாதான் சாமி என்ன  திட்டும்....சொல்லிவிட்டு சிரித்தார். அண்ணா சாரிங்கண்ணா..பட் ரொம்ப தேங்க்ஸ்கண்ணா....சொன்னேன். வண்டிக்கு பெட்ரோல் போட்டார். காசு கொடுத்தேன். வலுக்கட்டாயமாக மறுத்து விட்டார். என்னை வண்டியை விட்டு இறங்கவே விடவில்லை.

வண்டி பறந்தது.

6 மணிக்கு கும்பகோணம் பஸ்டாண்டுக்குள் நுழைந்தோம். வரும் வழியிலேயே சொல்லிக் கொண்டு வந்தார். கடவுள் ஆன்மீகம் பத்தி எல்லாம் நிறைய படிச்சதில்ல தம்பி. எனக்கு சாமின்னா புடிக்கும். சாமி படைச்ச எல்லா மனுசங்களையும் பிடிக்கும். ரொம்பவுல்லாம் ஒண்ணும் தெரியாதுப்பா எனக்கு...ஆறாவதுதான் படிச்சிருக்கேன். ரொம்ப நாள் கழிச்சு பொறந்த புள்ள அதுவும் எனக்குப் புடிச்ச பொட்டப்புள்ள...டப்புன்னு ஒரு நாளு உடம்பு முடியாம போக, ஆடிப்போய்ட்டேன்...வாந்தியும் வயித்தாலயுமா போவுது....

கருப்பா என் புள்ளைய காப்பாத்துடான்னு வேண்டிக்கிட்டேன். காப்பத்திக் கொடுத்துட்டான். அவனைப் பாக்கப் போகையில உங்கள சந்திக்க வச்சுட்டான்....சொல்லி கொண்டே நீடாமங்கலம் தாண்டி அவர் செல்ல வேண்டிய குலதெய்வம் கோயில் பாதையைக் காட்டினார். இன்னொரு நாள் போயிக்குவேன் தம்பி.....ஒண்ணும் பிரச்சினை இல்லை...! அவர் காட்டிய திசையைப் பார்த்த் கையெடுத்துக் கும்பிட்டேன். அங்க  யார் இருக்கா இல்லைன்னு எனக்கு தெரியல ஆனா ஒரு நல்ல மனுசன அந்தக் கோயில், அந்த சாமி அந்த சூழல் வார்த்தெடுத்து இருக்குன்னு நினைச்சுக்கிட்டேன்.

என் ஊர், எப்போ வந்தேன், மறுபடி எப்போ வருவே என்று கேட்டார். வேற ஒண்ணுமே பேசிக்கலை.

கும்பகோணம் பஸ்டாண்ட் உள்ள நுழையவும் ஒரு விரைவுப் பேருந்து சென்னைக்கு கிளம்பவும் சரியா இருக்க...வண்டிய விரட்டிக் கொண்டு போய் பஸ்ஸு முன்னால நிறுத்தி.... ஒரு நிமிசம் நில்லுப்பா ஆளு வருதுல்ல என்று டிரவரை அதட்டினார்....நான் ரொம்ப தேக்ஸ்னா என்று சொல்லிய படியே என் மொபைலில் அவசரமாய் அவரது நம்பரை வாங்கிக் கொண்டேன். நம்பர மொபைல்லா சேவ் பண்ணிக்கிட்டே பஸ் உள்ள ஏறினப்பதான் நினைச்சேன்...அட அவர் முகத்தைக் கூட நாம பாக்கலயேன்னு...

ஓடிப்போய் ஜன்னல வழியா எட்டிப் பார்த்தேன். என்னை பார்த்து சிரித்தார். கை காட்டினார். பத்திரமா போங்க என்று சொன்னார். எனக்கு கண்ணீர் வந்தது. எந்த உறவும் இல்லை இவர். யார்னே தெரியலை...எவ்ளோ சிரமப்பட்டு அதுவும் அவ்ளோ விரைவா வண்டிய ஓட்டிக்கிட்டு வந்து...

மொபைலில் இருந்து கால் பண்ணி நன்றிண்ணா என்றேன் தழு தழுத்த குரலில். அடப் போங்க தம்பி....போய் இறங்கிட்டு எனக்குப் போன் பண்ணுங்க....சாமி சாமின்னு ஊரைச் சுத்தி அலைஞ்சுகிட்டு இருக்கறதும், நான் ரொம்ப பக்திமான்னு காட்டிகிறதும் இல்ல தம்பி... வாழ்க்கை...எனக்கு நெஞ்சுக்கு நிம்மதியா இருந்துச்சு இன்னிக்கு  உங்கள டயத்துக்க் கொண்டு வந்து விட்டது... என் கருப்பன் சந்தோசப்படுவான்...பத்திரமா போங்கப்பா...வழியில ஏதாச்சும் பிரச்சினைன்னாலும் கால் பண்ணுங்க....

வண்டி சென்னை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அவரது எண்ணை மொபைலில் சேமிக்க அவரோட பேரு வேணுமே அட என்ன பேருன்னு கேக்க மறந்துட்டோமே....யோசிச்சேன்......

                                     ..........கடவுள்........

அப்டீன்னு சேமிச்சு வச்சுக்கிட்டேன். ஜன்னலோரம் காற்று முகத்துல வந்து மோதி முடியை கலைச்சுட்டு இருந்துச்சு. கண்களை துடைச்சுக்கிட்டேன்....அங்க மறியல் நடத்திட்டு இருந்த கடவுளெல்லாம் செஞ்ச உதவியில இந்தக் கடவுள் எனக்குக் கிடைச்ச சந்தோசத்தில்....தொடர்ந்து கொண்டிருந்தது அந்த சுவாரஸ்யமான பயணம்...!


இப்போ எல்லாம் அடிக்கடி கடவுளும் நானும் பேசிக்கிறோம்.....!



தேவா சுப்பையா...







என் காதல் தீயே....!

$
0
0

உன் பெயர் என்ன என்று கேட்ட பொழுதில் ஏதாவது பேசி நீ தொலைத்திருக்க கூடாதா என்ன? வார்த்தைகளை விழுங்கிக் கொண்டு விழிகளால் நீ சொல்லும் பதிலை வாங்கிக் கொள்ளும் நுட்பத்துடன் என்னைப் படைக்காத கடவுளை பார்த்து ஏ... கடவுளே உனக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை என்று கேட்டு சண்டை போடவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அது என்னவென்று சொல்ல முடியவில்லை பெண்ணே ஆனால் எனக்குள் காதலை மூட்டிவிடும் விழிகளை உனக்கு கடவுள் படைத்திருக்க கூடாதுதான்...

சரி உன் பெயர் சொல்ல வேண்டாம். சாதாரணமாக பார்த்துச் சென்றால் உன் குல தெய்வக் கோயிலுக்கு நேர்ந்து கொண்ட ஏதேனும் ஒரு நேர்த்திக்கடன் குறைந்து போய்விடுமா என்ன? ஒவ்வொரு முறை நீ என்னைக் கடந்து செல்லும் போதும் எனக்குள்ளிருக்கும் இதயம் எகிறிக் குதித்து வெளியே வந்தே விடுவேன் என்று என்னை மிரட்டும்  ரீதியில் தாளம் தப்பி அடிக்கும் வேகத்தை உனக்கு எப்படி நான் சொல்வேன்? எத்தனையோ பேரை சட்டென கடந்து வந்த எனக்கு உன்னை அவ்வளவு எளிதாய் கடந்து செல்ல முடியவில்லை...

சொல்லாமல் கொள்ளாமல் வந்து என் இதயக் கதவை உடைத்து உள்ளுக்குள் உட்கார்ந்து கொண்டு அடம்பிடிக்கும் நீ தான் அடாவடி செய்கிறாய் என்று உன்னிடம் சொன்ன போது என்னை ஏற இறங்கப் பார்த்தாய். காதலும் கவிதையும் எங்கிருந்து எப்போது பற்றிக் கொள்ளும் என்று சொல்ல முடியாது என்று யாரோ சொன்னதை மெய்ப்பித்து சென்றது உன்னுடைய இருப்பு. எதுவுமே பேசாமல் இவளால் எத்தனை நாள் இருக்க முடியும் என்று கணக்குப் போட்டு கணக்குப் போட்டு நான் வாய்மூடி உன் பார்வைக்காய் காத்திருக்கும் கணங்களைப் போல எல்லாம் நரகம் அத்தனை கொடுமையாய் இருக்காது போல என்று....

கஜினி முகமதுவாய் உன்னை உன் விழிகளை நோக்கி என் பார்வையால் படையெடுத்து படையெடுத்து தோல்வியடைந்து கொண்டிருந்த நான், ஒரு நாள் என் காதலை சுற்றி வளைத்து சொன்ன போது களுக் என்று நீ சிரித்திருக்காவிட்டால்தான் என்ன....? நீ சிரித்து முடித்த மூன்றே கால் நிமிடத்துக்கு அந்த பிம்பம் என் புத்தியிலிருந்து நகராமால் கூட்டமான பேருந்தில் சன்னலோரமாய் அமர்ந்து கொண்டு வண்டி நகர்கையில் எதிர்காற்றை ரசிக்குமொரு சுகத்தை கொடுக்க, நான் வாய் பிளந்து அந்த சிரிப்பிற்கு அருஞ்சொற்பொருள், இலக்கணம, இலக்கிய வார்த்தைகளை எல்லாம் தேடிப்பிக்க நினைவுகளால் பறந்து போகிறேன். பிறகெப்படி உன் அடுத்தடுத்த கேள்விகளுக்கு நான் பதில் சொல்வதாம்...?

மொத்தமாய் என்னை இழுத்துக் கொள்ளும் ஒரு சூறாவளி ஒன்றை என் முன் வைத்துக் கொண்டு எதை நான் பகிர்வது? எதை கேட்பது..? என்னை உனக்கு அவ்வளவு பிடிக்குமா என்று நீ கேட்ட அவ்வளவுக்கு என்ன அளவு இருக்கும் என்று எனக்குத் தெரியாது ஆனால் எனக்குள் இருக்கும் அவ்வளவுக்கு ஒரு கொள்ளளவே கிடையாது. பேசிப் பழகி புரிந்து கொண்டபின் வருவதுதான் காதலென்று யாரேனும் சொன்னால்....

அவர்களுக்கு காதலென்றால் என்னவென்றெ தெரியவில்லை என்று சொல்லுங்கள். திட்டமிட்டு வர்ணம் பூசி சாதக பாதகம் பார்த்து வந்தால் அது எப்படி காதலென்று அன்பாய் அவர்களைக் கடிந்து கொள்ளுங்கள். காதல் மனம் பார்க்கும்தான் ஆனால் அதற்கு முதலில் முகம்தான் தெரியும். பிடித்தலுக்கும் பிடிக்காமைக்கும் தனக்குப் பிடித்த ஒரு உருவத்தையே காதல் முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. காதலுக்கு இது அழகு, இது அசிங்கம் என்றெல்லாம் தெரியாது. எது தனக்குப் பிடிக்கிறதோ அதை அது அழகென்று உள்ளுக்குள் ரகசியமாய் சொல்லி விடுகிறது.

யாரோ ஒருவரைப் பார்த்தவுடன் உள்ளுக்குள் மூழும் தீயை திட்டம் போட்டு யாரும் அணைத்து விட முடியாது. ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ நிறைய பேரை பிடிக்கலாம்....ஆனால் யாரோ ஒருவரைப் பார்த்தவுடன் தான் தறிகெட்டு ஓடும் குதிரையாய் மனம் ஓடி அவரை ரசிக்க ஆரம்பிக்கிறது. பிடிப்பது வேறு ரசிப்பது வேறு. இதோ என் மனப்புரவி தறிகெட்டு ஓடி அவளையே சுற்றிக் கொண்டிருக்கிறதே அது போல..

நீ இப்படி எல்லாம் பண்ணக்கூடாது என்று அவளிடம் சொன்னவுடன் விழிகளால் என்னை முறைத்த அவளின் கூரான பார்வைக்குவியலுக்குள் மெலிதாய் எட்டிப்பார்த்து ஹலோ மிஸ்டர்... ஐ டூ லவ் யூ என்று கை குலுக்க காத்துக் கொண்டிருந்த காதலைத்தான் நான் முதல் பார்வையிலேயே வாங்கிக் கொண்டு என் நிதானமிழந்திருந்தேன். உனக்கு எவ்ளோ தைரியம் என்னை  இப்டி பாக்குற என்று கேட்டவளிடம் .. திரும்பச் சொன்னேன்...

காலம் எப்போதும் காதலை பார்வைகளில் இருந்துதான் பிறப்பித்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் காதலுக்கும் அறிவுக்கும் உள்ள உறவு மாமியாருக்கும் மருமகளுக்கும் இருக்கும் உறவு. எப்போதும் ஒத்துப் போகவே போகாது. அறிவு எப்போதும் அனுபவத்தில் இருந்து எழுந்து நின்று ஆலோசனை கத்திகளையே வீசுகிறது. காதல் அப்படி அல்ல அது துள்ளித் திரியும் ஒரு பள்ளி செல்லும் சிறுவனை ஒத்தது அது. காதலில் எல்லாமே புதியது.... காதலுக்கு எல்லாமே அதிசயம்....

நீ சாதாரணமாக என்னைப் பார்த்து புன்னகைத்துக் கூட இருக்கலாம் மோனலிசாவே...அதைப் பார்த்து எனக்கு நிஜ மோனலிசா எவ்வளவு மொக்கையாய் புன்னகை செய்திருக்கிறாள் லியானர்டோவின் ஓவியத்தில் என்று கூட தோன்றவும் செய்யலாம், ஆமாம்... காதல் அப்படித்தான்...கிளியோபாட்ராக்களை திரும்பிக் கூட பார்க்காது...உலக அழகிகளைப் பார்த்து உவ்வே... என்று சொல்லும். பிரபஞ்ச அழகிகள் என்று உலகம் சொல்லும் பிம்பங்களைப் பார்த்து....இது டூமச் என்று வெறுத்து ஒதுக்கும்...


ஏனெனில் என் காதல் உலகின் பட்டத்து மகாரணி நீதான். நீ அழகா அழகில்லையா என்ற கணக்கு வழக்கை எல்லாம் கால்குலேட்டர் தட்டிப் பார்க்க நான் என்ன ஷேர்மார்க்கெட்டிலா இன்வெஸ்ட் செய்துவிட்டு எவ்வளவு லாபம் வரும் என்று காத்திருக்கிறேன்..இது காதல் பெண்ணே... காதல்....!

கனவுகளுக்குள் 
உன்னை அழைத்துக் கொண்டு
நான் பறந்து கொண்டிருக்கிறேன்...
ஒரு வானவில்லிடம்
உன்னை காட்டி...
இவளைப் போன்று 
வசீகரம் ஏன் உன்னிடம் இல்லை
என்று கடிந்து கொண்டிருக்கிறேன்...
விண்மீன்களிடம்
வெளிச்சம் இல்லையென்றும்...
நிலவு ஒன்றும் அத்தனை 
அழகில்லை என்றும்...
அடக்கடவுளே....
இந்த மேகங்கள் ஏன்
இத்தனை கனமாயிருக்கின்றன...
என்றெல்லாம் வசைபாடியிருக்கிறேன்...
ஒப்பற்ற கவிதைகளை
புத்தகத்தில் வாசித்துக் கொள்ளுங்கள்
பித்தர்களே......
என் கவிதையொன்றே 
எனக்கு காதலியானாள்
 என்று சப்தமாய் கத்திக் கொண்டே
என்  கவிதைப் புத்தகங்களை
எல்லாம் தீயிட்டுக் கொளுத்தியிருக்கிறேன்...!

ஏன் என் மீது உனக்கு காதல் வந்தது என்று நீ கேட்டாள்... ஏன் நீ பிறந்தாய் என்று உன்னிடம் நான் எதிர்கேள்வி கேட்கக்கூடும்..? அதன் பிறகு உன்மீது நான் கொண்டிருக்கும் காதல் எனக்கும் உன்னைப்படைத்த கடவுளுக்குமான பிரச்சினையாய் மாறிப்போகும்.

தன்னிச்சையாய் மூடித் திறக்கும் இமைகள் போல, பிராணனை வாங்கிக் கொள்ளும் சுவாசத்தைப் போல ஆசைகள் என்றால் என்னவென்றே தெரியாமல் பள்ளம் நோக்கிப் பாயும் நீராய் உன்னை நோக்கி பாய்ந்திருக்கிறது என் காதல். எனக்கு நீ அழகு. எனக்கு நீ.. கவிதை. எனக்கு நீ வாழ்க்கை. எனக்கு நீ ஏதேதோ.....என்றெல்லாம் என்னைக் கேட்காமல் வந்து விட்ட நினைவுகள் ஒருபோதும் உன்னை நிந்தித்து என்னை ஏற்றுக் கொள்ளச் சொல்லாது... 

உனக்கு என்னை பிடிக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்று யோசித்த பொழுதில் அப்படி எல்லாம் இல்லை என்று எனக்குச் சொல்லி காதலை ஊர்ஜிதம் செய்தன உன் விழிகள். இதோ என் காதலைச் சொல்லிவிட்டேன்..... நீ என்னை காதலிக்கிறாயயா என்று திரும்பிக் கூட கேட்காமல் எப்படியும் கடவுள் காப்பாற்றுவார் என்றெண்ணி தொழுது கொண்டிருக்கும் ஒரு பக்தனைப் போல என் என் உணர்வினை உன்னிடம் பகிர்ந்து விட்டேன்....

எதிர்மறையான பதிலைச் சொல்லி நீ காதலை தோற்கடிக்க மாட்டாய் என்று எனக்குத் தெரியும். ஆமாம் காதல் எந்தக் காலத்தில் தோற்றிருக்கிறது. அது யாருக்கும் பிடித்தலிலோ இல்லை பிடிக்காததிலோவா இருந்திருக்கிறது.....? பிடித்தால் என் கவிதைகளை உன் விழிகளிடம் சமர்ப்பிப்பேன்...

உனக்குப் பிடிக்காவிட்டால் பிரபஞ்சத்திடம் சமர்ப்பிப்பேன். பிடித்தால் நீ என்னோடு இருப்பாய். பிடிக்காவிட்டால் உன் நினைவுகள் என்னோடு இருக்கும். பிடித்தால் காமமென்ற ஒரு சிறு குழப்பத்தைக் நாம் கடக்கவேண்டி இருக்கும். பிடிக்காவிட்டால் தெளிவாய் தெளிவிசும்பினில் மனப்புரவியினில் உன் மீதான காதலை ஏந்திக் கொண்டு பயணித்துக் கொண்டிருப்பேன். என் கவிதை வரிகளின் முடிவினில் இது அவளுக்காய் எழுதியது என்று இப்போது போலவே எப்போதும் எழுதி வைப்பேன். அவள் மறுத்தது என்னைத்தான் காதலையல்ல என்று என் வார்த்தைகளுக்குள் சூசகமாய் உணர்வுகளை அடைத்து வைப்பேன்...

இதை எல்லாம் கடந்து நீ என்னை ஏற்றுதான் கொள்வாய் என்றும் நானறிவேன்....

நிலம் வேண்டாம்...
என்று சொன்னால்...
எங்குதான் பெய்யும் மழை..? என்ற என் வார்த்தைகளே எனக்கு ஆறுதலாய் தைரியமூட்டின.

நான் பேசி முடித்த பின்பு நீ குடையை மடக்கிக் கொண்டதைப் போல செய்த செய்கையில் நான் மழை பெய்தது போல பேசி முடித்திருந்தேன் என்று சொன்னாய். அப்போதுதான் புரிந்தது நான் காதல் கொண்டிருப்பது ஒரு கவிதை  மீது என்று....ஒரு சித்திரத்தின் மீது என்று....ஒரு சிலையின் மீதென்று....

சப்தமாய் நீ சிரித்து முடித்த பின்பான அந்த பிரளயத்திற்குப் பின்னான பேரமைதியை மெலிதாய் கிழித்துக் கொண்டு பிறந்த அந்த மூன்று வார்த்தைகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால் பூமி என்றோ நின்று போயிருந்திருக்கும்....காலம் கண்ணீரோடு எழுதிக் கொள்ள ஒன்றுமில்லாமல் வறட்சியாய் வரலாற்றினை எழுதி வைத்திருந்திருக்கும்....

காலத்தின் வசீகரமே காதல்தான் பெண்ணே....!

காமமில்லாமல் அணைத்துக் கொண்டோம்... ! இதோ நீ சொன்ன ஐ லவ் யூவால் பூத்துக் குலுங்குகிறது என் உலகம். 

என்னை இம்சை செய்;
என்னிடம் சண்டையிடு;
விலகிப் போ;
அதை விட வேகமாய்
நெருங்கி வா;
அழு; சிரி; அணைத்துக் கொள்;

காதலால் நிறைந்து போவோம். காதலில் தீர்ந்து போவோம்.



தேவா சுப்பையா...






ஊமை என்றால் ஒரு வகை அமைதி...!

$
0
0

பசித்திருக்கையில் தாயின் முலை தேடி பக்கத்திலிருக்கும் துணியை எடுத்துச் சுவைக்கும் குழந்தையைப் போல சுவைத்து விட்டு நான் பசித்தே இருக்கிறேன் எப்போதும். ஏதோ ஒரு துணி கிடைத்து விடுகிறது இல்லையேல் என் விரல் சுவைத்து நானே பசி தீர்த்துக்கொண்டதாய் எண்ணிக் கொள்கிறேன். தீராத பசியை தீர்ந்தது போன்றெண்ணிக் கொண்டு தற்காலிகாய் வயிறு எக்கிப் போய் ஏக்கப் பெருமூச்சுடன் காத்திருக்கையில் ஏதோ ஒரு தருணத்தில் தாக்கம் நிறை அனுபவமாய் என் வாய் நிறைக்கிறது அவ்வப்போது பிரபஞ்சத்தின் பஞ்சு முலை. 

தாயிடம் பாலருந்தாத யாரும் இந்த பூமியில் இல்லை. அது வெறுமனே பசியாற்றிக் கொள்ளுமொரு இடமாய் மட்டுமா நமது அனுபவப் பதிவில் பதிந்து கிடக்கிறது...? அல்ல....அது பசிக்கு தொடர்பில்லாத பெரும் திருப்தியை கொடுத்திருக்கிறது. சலனமில்லாத பாதுகாப்பைக் கொடுத்திருக்கிறது. கதகதப்பான இளம் சூட்டை நமக்குள் பரப்பி உறுதியாய் இரு பிள்ளாய் என்று உறுதி கொடுத்திருக்கிறது. பாலருந்துகையில் தலை தடவும் தாயின் வாஞ்சையை வார்த்தைப் படுத்தவோ அல்லது அதற்கு சமமான ஒரு அன்பொழுகு நிலையை காட்சிப்படுத்தவோ அல்லது கற்பிதம் செய்து கொள்ளவோ இயலவே இயலாது. பரிபூரணம் என்ற வார்த்தையை பிராயத்தில் வாசித்தும், விவாதித்தும், தேடியும் கொண்டிருக்கும் அத்தனை பேரும் அதை அனுபவித்த இடம் அது.

வாழ்க்கை முழுதும் அந்த வாஞ்சை நிமிடங்களை நினைவுகளுக்குள் பதுக்கிக் கொண்டு மீண்டும் மீட்டெடுக்குமொரு ஆசையிலேயே நாம் கல்வி கற்று, பொருள் ஈட்டி, காதல் கொண்டு, காமம் செய்து, அதிகார சுகபோகங்களைத் தேடி ஓடினாலும், பின்னாளில் நம்மால் அப்படி ஒரு அதிர்வு நிறை உணர்வு நிலையை எட்ட முடிவதில்லை அல்லது எட்டினாலும் அதிலேயே நம்மால் லயித்துக் கிடக்கவும் முடிவதில்லை. வாஞ்சையோடு அணைத்துப் பாலருந்தும் நெகிழ் நிகழ்வுகளை பல நேரத்தில் எனக்கு காலம் கொடுத்திருக்கிறது. பொருளோ, பொருளற்றதோ, சலனமோ, சலனமற்ற சூன்யமோ, என்னை நெஞ்சணைத்து தலைவருடி லெளகீக உலகின் பொருளற்ற தன்மை கடந்த ப்ரியத்தை எனக்குள் ஊற்றி இருக்கிறது. உயிரை உயிர் வருடிக் கொடுக்கும் நிகழ்வது.

பல படைப்புகளை வாசித்து கடந்து சென்று கொண்டிருக்கையிலேயே கதை மறந்து, கதைக்களன் மறந்து, அதன் கரு மறந்து, கதை மாந்தர் விட்டு விலகி கையிலிருக்கும் புத்தகத்தையும் நழுவ விட்டு விட்டு நிலைகுத்திப் போன பார்வையுடன் எங்கோ வெறித்து நான் கிடந்த நாட்கள் அனேகம். இந்த வாழ்க்கையில் என்னோடு சினேகமாய் இருக்கும் யாதுமே என்னோடு தொடர்பில் இல்லாத ஒன்றாகவே இதுவரையில் இருந்திருக்கிறது. ஒரு இசையோ, ஒரு கதையோ ஒரு கட்டுரையோ, அல்லது ஒரு திரைப்படமாகவோ அது என்னை திக்குகளற்ற பெருவெளிக்கு என்னை கூட்டிச் சென்றிருக்கிறது.

பாலுமகேந்திரா சாரும் இப்படியாய் அவரின் படைப்புகள் மூலம் என்னை மூர்ச்சை நிலைக்குத் தள்ளி இருக்கிறார். ஒரு தலைசிறந்த படைப்பாளியோடு பேசிச்சிரித்து சினேகமாயிருப்பது அல்ல அவர் மீது கொண்ட ப்ரியம் என்பது. அவரின் படைப்புகளோடு கூடிக் குலாவி அது கொடுக்கும் ப்ரிய முத்தங்களை கிளர்ச்சியாய் வாங்கிக் கொண்டு சிலாகித்துக் கூடிக் கிடப்பது வரைமுறையற்ற பேரானந்த வார்த்தைப்படுத்த முடியாத சுகத்தைக் கொடுக்கவல்லது. நான் பாலுமகேந்திராவின் கதைநேரத்தை அடிக்கடி யூ ட்யூபில் பார்ப்பதுண்டு. அது எப்படியானது என்றால் வெறுமனே ஒரு பார்வையாளன் பொழுது போக்க அமர்ந்து கொண்டு ஏதோ ஒன்றை பார்த்துச் செல்வது போல அல்ல...

சினேகமாய் அந்த மனிதர் சொல்லும் கதைகளுக்குள் பரவிக் கிடக்கும் காமத்தின் உச்சம் நிகர் நிகழ்வுகளை புத்திக்குள் போதையாய் ஊற்றிக் கொண்டு மது குடித்த வண்டாய் கிறங்கிக் கிடப்பதை ஒத்தது. மனதுக்கு பிடித்த பெண்ணொருத்தியின் பின்னால் அவளுக்கு நம் காதலறியா வண்ணம் சுற்றித் திரியும் சுகமொத்த நிலை அது. பதின்மத்தில் காதல் செய்ய எத்தனித்த அத்தனை பேருக்கும் நான் சொல்லவரும் நிலையின் பொருள் விளங்குமென கருதுகிறேன். அது புதிது, அது இனிது அது இதற்கு முன்பு எப்போதும் அனுபவித்திராத ஒன்று.. சுகப் பெருவெளியில் இஞ்ச் இஞ்ச்சாய் முன்னேறிச் செல்வது.....

முதல் பெண்ணின் ஸ்பரிசம் கொள் நிகழ்வது. நெஞ்சோடு இறுக்கி எதிர்ப்பாலினத்தை அணைத்துக் கொண்டு அவளின் அல்லது அவனின் வாசத்தை நுகர்ந்து அனுபவித்து மகிழ்ந்து கிடப்பது. உடலின் அவயங்கள் உரசிக் கொள்ள அத்தனை செல்களும் உச்ச லயத்தில் விழித்துக் கிடக்க மெல்ல மெல்ல முன்னேறி உதட்டோடு உதடு வைத்து பற்றி இழுக்கையில் உயிர் போய் உயிர் வருமே அந்த வேதனையை ஒத்தது. காமம் தீர்ந்து புரண்டு படுத்து உறுப்புகள் தளர உறங்கிப் போவதல்ல அது....

அது எரியும் நெருப்பு. அதிரும் சப்தம். அடர்த்தியான மெளனம், தெளிவான மரணம், மொட்டிலிருந்து பிரிந்து விரியும் மலர். மெலிதான மழைக்குப் பின் வாசம் பரப்பும் மண். தெளிவற்ற துல்லிய தெளிநிலை. பித்த நிலை ஆனால் அதுதான் சுத்த நிலை. வார்த்தைகளற்றுப் போக வைக்கும் அப்படியான படைப்பாளிதான் பாலுமகேந்திரா....அப்படியான படைப்புகள்தான் அவர் படைத்தளித்து நம் சமூகத்திற்கு சமைத்துக் கொடுத்திருப்பது. வரிகளைப் படித்து விட்டு தத்துவ மமதை கொள் உலகில் வரிகளுக்கு இடையில் சுவாரஸ்யத்தை ஒளித்து வைக்கும் பிரம்மா அவர்....

சப்தங்களில்லாத சினிமாவை, மெளனத்தைச் போதனை செய்யும் இசையை, வெற்று விழிகள் காண முடியாத காட்சிகளை திரைக்குள் கொண்டு வந்து விட்டு சலனமில்லாமால் நடந்து போக பாலுமகேந்திரா போன்றவரகளால் மட்டுமே முடிகிறது. அவர்கள் ஏதோ ஒன்றை சொல்ல விரும்பி அதை தெளிவாய் சொல்லிவிட்ட நிறைவில் பின் மெளனித்து விடுகிறார்கள். ஒரு படைப்பைக் கொடுத்த நிறைவுதான் ஒரு படைப்பாளியாய் அடுத்த படைப்பு நோக்கி நகரவைக்கிறது. வர்த்தகத்திற்காய்  ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாத ஆதி உணர்வைக் கொண்டிருக்கும் ஒரு படைப்பாளிக்க்கு கொடுப்பது பற்றிதான் எப்போது கவலை...கொடுப்பது வரைதான் அவன் பித்தனாய் ஆடிக் களிக்கிறான்.பிசிறில்லாமல் தெளிவாய் படைக்க வேண்டும். அந்த படைப்பு புரிந்துணர்வோடு பார்ப்பவனை வாசிப்பவனை சொக்க வைக்க வேண்டும்...அவ்வளவுதான்...! அவன் ஆட்டம் என்பது...

இலக்குகளற்ற பிரபஞ்ச நடனம். சீற்றமாய் ஆடும் நடராஜ தத்துவத்தை ஒத்தது. அவன் ஆடி முடித்தவுடன் அமைதியாகிறான். அமைதி என்றால் வெறும் அமைதி அல்ல... அது பாழுக்கும் பாழ் பெரும்பால் அப்பாழுக்கும் பாழ் அப்பால் உள்ள பேரமைதி. நிறை நிலை. அவன் படைத்து முடித்தவுடன் படைப்பும் தனக்கும் இருக்கும் தொடர்பறுத்துக் கொள்கிறான். பின் படைப்புகள் நம் பார்வைக்கு வருகின்றன. இனி அது அந்த படைப்பை வாசிப்பவனின், பார்ப்பவனின் கேட்பவனின் பொறுப்பு அந்த படைப்பை எப்படி சீராட்டுவது என்பது....

நான் இன்னமும் தலைமுறைகள் படம் பார்க்கவில்லை. இரண்டு இடங்களில் விமர்சனம் படித்ததோடு சரி. பாலுமகேந்திரா தன்னுடைய முதுமையினை சாட்சியாக்கி ஒரு பார்வையாளனாய் சமகாலத்து சமூகத்தைப் பார்த்து தனது உணர்வுகளை பதிய வைத்திருக்கிறார் என்று மட்டும் புரிந்து கொண்டேன். தலைமுறைகள் டீசரையும் அதனுடையை புரோமசனல் வீடியோவையும் பார்த்து மெய்யறிந்த பித்தனாய் விவரிக்க வார்த்தைகளற்று நான் பிரமித்துப் போய் நிற்க காரணம் இளையராஜா என்னும் இன்னுமொரு ராட்சசன்.....

என்னை இசை அது.....!!!!!!!? படம் பார்க்காமலேயே டீசரின் பின்ணனி இசையை மட்டும் கேட்டு நம்மை விம்மி அழ வைக்கிறாரென்றால் அந்த மனிதரின் புத்தியில் சுரந்த அதிரசமான என்றென்றும் தீராத அமுதிசையை என்னவென்று சொல்ல...!!!? அது நரம்புகளை முறுக்கேற்றுகிறது... நினைவுகளை அழிக்கிறது...நான் என்ற நமது கர்வத்தை துவம்சம் செய்கிறது.... நம்மை அறியாமலேயே எதை நோக்கியோ கை கூப்பச் சொல்கிறது.....

கால் மடக்கி நிலம்பட விழுந்து கதறி அழச் சொல்கிறது. ஏன் அழவேண்டும்....? தெரியாது.....? யாரிடம் கை கூப்புகிறேன் தெரியாது....? இது நல்லதா? தெரியாது. கெட்டதா...? அதுவும் தெரியாது. என்னதான் நான் சொல்ல வருகிறேன் இங்கே...? அதுவும் தெரியவில்லை.

தலைமுறைகளின் கதையும், டீசரும் பின்ணனி இசையும் என்னை இங்கே விரட்டி இருக்கிறது. நான் எழுத்துக்களாய் ஓடி இருக்கிறேன். அவ்வளவுதான்.

வாழ்க்கையில் அழுத்தம் திருத்தமாய் வாழ்ந்து, முதுமையில் மெல்ல மெல்ல இந்த வாழ்க்கையின் மைய அச்சு விட்டு நகர்ந்து விலகி, சுழற்சி நின்று போவதற்கு முன்னால் எனக்கும் இந்த வாழ்க்கைக்கும் என்ன தொடர்பிருந்தது இதுவரையில்...? இனி என்னமாதிரி இருக்கும் அந்தத் தொடர்பு....? இந்த உலகத்தில் நான்..யார்? இந்த உலகம் எனக்கு யார்...? மையப் பொருளாய் என்னை நினைத்திருந்தேன்.....

இதோ அன்று பச்சை பசுமையாய் இருந்த நான் இன்று சருகாகி  உதிரப்போகிறேன்.......அர்த்தமாயிருந்தேன்....அர்த்தமில்லாமல் என்னை காலம் ஆக்கும்.....புரிதலோடு நடந்து கொண்டிருக்கிறேன்.....

ஏதேதோ தோன்றுகிறது எனக்கு.....! இங்கே (துபாயில்)தியேட்டரில் போய் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை.... எப்படியாவது தலைமுறை படத்தைப் பார்த்து விட்டு.....தாயின் மடியிலிருந்து நான் பாலருந்தி வாஞ்சையாய் அவள் என் தலை தடவிய சுகத்தை....

உங்களிடம் பகிர்வேன்...!



தேவா சுப்பையா... 






தளபதி...!

$
0
0

கர்ணன், குந்திதேவி, பஞ்ச பாண்டவர்கள், கெளரவர்கள் என்று கதைக்கான கரு என்னவோ மகாபாரதத்தில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதுதான். அங்கே சூரியனை வணங்கியதால் சூட்சுமமாய் கருத்துத் தரித்துக் கொண்ட புராண குந்திதேவியை இந்த நவீன காலத்தில் கொண்டு வந்து காட்ட முடியாது அல்லவா? அதனால் சிறுவயதில்  விபத்தைப் போல ஏற்பட்ட ஒரு கர்ப்பம், அந்த குழந்தை கூட்ஸ் வண்டியில் ஏற்றப்பட்டு ஆற்றில் மிதந்து வந்து சலவை செய்யும் ஒரு பாட்டியின் கையில் கிடைத்து விடுகிறது.

மிக பிரம்மாண்டமான கதைக்களம். சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார், மாஸ்ட்ரோ, மணிரத்னம், சந்தோஷ்சிவன், தோட்டா தரணி என்று அனல் பறக்கும் கூட்டணி வேறு. கிட்டத் தட்ட தமிழ் சினிமாவின் பொற்காலமாய் அது இருந்தது. 1990களின் வாக்கில் என்னைப் போன்ற ரஜினி ரசிகர்களும் கமல் ரசிகர்களும் தெருவுக்குத் தெரு நின்று கொண்டும், பள்ளிக் கூடங்களின் வகுப்பு இடைவேளைகளினூடேயும், ஆற்றில் குளிக்கும் போதும், கிரிக்கெட் விளையாடி விட்டுத் திரும்பி வரும் போதும் ஆக்ரோசமாய் மோதிக் கொள்வோம். கமல் ரசிகர்கள் பிரதானமாய் பேச போதும் போதுமெனும் அளவிற்கு கமலிடம் நடிப்பும், நிறைய விருதுகளும்ம் ரஜினி ரசிகர்கள் பேச ரஜினியிடம் நிறைய வெள்ளி விழாப் படங்களும், கூட்டமும், வசூலும், ஸ்டைலும்,அதிரடியும் இருந்தன. தொண்டைத் தண்ணி வற்றிப் போகுமளவிற்கு பேசிச் சூடேறிப் போய்க் கிடந்த காலங்கள் அவை.

1991 தீபாவளி என்று நினைக்கிறேன். அந்த தீபாவளியை மையமாய் வைத்து வளர்ந்து கொண்டிருந்தது தளபதி படம். ஜி.வி பிலிம்ஸ் அந்த நேரத்தில் தளபதியை வியாபாரப் பொருளாக்கி நன்றாக காசு பார்த்துக் கொண்டிருந்தது.  நானெல்லாம் பள்ளி நோட்டுப் புத்தகத்தில் தளபதி.... தளபதி என்று விளம்பரங்களில் இருக்கும் அதே ஸ்கிரிப்ட்டை எழுதி எழுதி கிறுக்கிக் கொண்டிருப்பேன். ஸ்கூல் பேக்கில் ஆரம்பித்து, டி சர்ட் தொடங்கி, காலண்டர் வரை தளபதி என்ற பெயரோடு ரஜினி திரும்பிப் பார்த்துக் கொண்டிருப்பது போல ஒரு புகைப்படமும் இருக்கும். தளபதி பேக் வைத்துக் கொள்வதும், ரஜினியின் புகைப்படத்தோடு கூடிய தளபதி டி சர்ட் போட்டுக் கொள்வதும் இளைஞர்கள், பள்ளிச் சிறுவர்களிடம் வெகு பிரபலம். பாடல் வெளியீடு என்றால் இப்போது போல எல்லாம் இல்லை அப்போது.... இணையம் என்றால் என்னவென்றே தெரியாது, கணிணியோ கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரிடமும் இருக்காது.

பாடலை கேசட்டாகத்தான் வெளியிடுவார்கள். லஹரி என்று நினைக்கிறேன் தளபதி பாடலை வாங்கி வெளியிட்ட கேசட் நிறுவனம். கேசட்டை வாங்கி அதில் இருக்கும் ஸ்டில்லையே வைத்த கண் வாங்காது பார்த்து லயித்து அதை ஒரு பொக்கிஷமாய் பாவித்து வீட்டுக்கு கொண்டு  வந்து நேசனல் பானாசோனிக் டேப்ரிகார்டரில் கொஞ்சம் கமல் ரசிகர்களுக்கு நடுவே நாங்கள் இரண்டு மூன்று ரஜினி ரசிகர்கள் கேட்ட அந்த நாள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்தான்...

அதே நேரத்தில் வெளிவந்த குணாவிற்கு இளையராஜா வேறு ரேஞ்சில் மெட்டமைத்து இசையமைத்திருப்பார். குணா பாடல்களும் சூப்பர்தான் என்றாலும் தளபதி வாஸ் ரூலிங் த ஹோல் இன்டஸ்ட்ரீ டக்ட் டைம். ஆயிரக்கணக்கான வயலின்கள் இசைக்க அதிரடியாய் எஸ்.பி.பி... அட ராக்கம்மா கையத்தட்டு என்று ஆரம்பித்து ஜாக்கு சக்கு கஜாங்கு சக்கு ஜாக்கு சக்கு சா.....என்று பாட.....கேட்டிக் கொண்டிருந்த இடம் அதிர்ந்தது. கமல் ரசிகர்கள் தவிடு பொடியானார்கள் எங்களால்.....

தளபதி இல்லையேல் தீபாவளி இல்லை....தீபாவளி இல்லையேல் தளபதி இல்லை என்று வேறு படத்தின் தயாரிப்பாளர் ஜி.வி பேட்டிக் கொடுக்க... நிஜமாகவே ரஜினி கமல் என்ற ஜாம்பவான்கள் மோதிக் கொண்ட ஒரு வெறியேற்றும் உற்சாக காலமாயிருந்தது அது. பட்டுக்கோட்டை முருகையாவில் குணா, அண்ணபூர்ணாவில் தளபதி வெளியானது.

கமர்சியலான மசால வெற்றிப் படங்களை தொடர்ந்து கொடுத்து வந்த ரஜினியின் சினிமா வாழ்க்கையில் தளபதி ஒரு மைல்கள் ஆனது. ஆறிலிருந்து அறுபது வரை, அபூர்வ ராகங்கள், எங்கேயோ கேட்ட குரல், உன் கண்ணில் நீர் வழிந்தால் என்று நடிப்பில் சக்கைப் போடு போட்ட ரஜினியின் படங்களை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு ஒரு மாஸ் கமர்ஷியல் ஹீரோவாக ரஜினி ஒரு  வட்டத்துக்குள் மாட்டிக் கொண்டிருந்த நேரம் அது. தளபதியில் பஞ்ச் டயலாக் கிடையாது. ரஜினியின் வழக்கமான ஸ்டைல் கிடையாது. முழுக்க முழுக்க ரஜினி என்ற சிங்கத்தை லாவகமாய் மசாலா ட்ரண்டிலிருந்து நைஸாய் வெளியில் கொண்டு வந்திருந்தார் இயக்குனர் மணிரத்னம். ஆமாம்.... அது ரஜினியின், இளையராஜாவின், கமலின் காலம் மட்டுமல்ல ....மணிரத்னத்தின் காலமும் கூட...

தமிழ் சினிமா ஏதோ ஒரு திசையில் பயணித்துக் கொண்டிருந்த காலத்தில் காட்சியமைப்பில், வசனங்களில், கதையில், இசையில் என்று எல்லாவிதத்திலும் புதுமையைக் கொண்டு வந்து தமிழ் சினிமாவுக்கென்று காலங்காலமாய் இருந்த மரபுகளை மணிரத்னம் ஒரு பக்கம் நொறுக்கி அள்ளிக் கொண்டிருந்தார் அப்போது. தளபதி வெளியாகி ஒரு வாரத்திற்கு தினசரி தியேட்டருக்குப் போய் படம் பார்த்து வந்த பக்தர்களை எல்லாம் எனக்குத் தெரியும். நான் ஒரு நான்கு தடவை பார்த்திருப்பேன். முதல் தடவை பார்த்த போது ரஜினி எது பேசினாலும் எழுந்து கத்தி, பக்கத்திலிருந்த கமல் ரசிகர்களை பார்த்து ஏளனம் செய்து.....பேப்பர்களை கிழித்து திரையில் கொட்டி, பாடலுக்கு எழுந்து கூட்டமாய் ஆடி.....

அண்ண பூர்ணா தியேட்டர் அப்போது அல்லோலகல்லோலப் பட்டது. தமிழகம் முழுதும் அப்படித்தான் இருந்திருக்கும். ரஜினி டயலாக் பேச வாயைத் திறந்தாலே கைத்தட்டுதான்...சூப்பர் ஸ்டார் என்றால் யார்...? தியேட்டர் ரெஸ்பான்ஸ் அவரது படங்களுக்கு எப்படி இருக்கும்..? எப்படியான படங்கள் முன்பெல்லாம் வந்தன.. .அவருடைய ரசிகர்கள் யார்? என்ன என்ன அட்டகாசம் செய்வார்கள் என்று இப்போது 25 வயதுக்கும் குறைவாய் இருக்கும் இளைஞர்களுக்குத் தெரியாது. அப்படித் தெரியாததாலேயே இளைய தளபதி, தலை என்றெல்லாம் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள்...

தமிழகம் ரஜினி ரசிகர்களைத் தான் கடைசியாக ஆவேசம் கொண்டவர்களாக, ஆத்மார்தமனவர்களாக கொண்டிருந்தது. அதிகபட்ச முட்டாள்தனங்களைச் செய்து கொண்டவர்களும் ரஜினி ரசிகர்கள்தான். ரஜினி ருத்ராட்சம் அணிந்தார் என்று ருத்ரட்சம் அணிவது, ரஜினி ராகவேந்திரரை வணங்கினால் ரஜினி ரசிகனும் ராகவேந்திரரை வணங்குவது, கையில் செப்புக் காப்பு ரஜினியைப் போலவே அணிந்து கொள்வது, ரஜினி போடும் வெள்ளை நிற செருப்பைப் போலவே அணிந்து கொள்வது ஏன் இன்னும் சொல்லப் போனால் நன்றாக தலையில் முடியிருந்த எத்தனையோ பேர் ரஜினிக்கு தலையின் இரண்டு பக்கமும் இருந்த வழுக்கையைப் போல சிரைத்துக் கொண்டு ரஜினி போலவே காட்சியும் தந்திருக்கிறார்கள்...

உச்சபட்ச ரசிப்பில் தன் வசம் இழந்த கூட்டமும் அதுதான்....ஆக்ரோசமாய் தனக்குப் பிடித்த நடிகனை அரசியலுக்கு வரச்சொல்லி இன்னமும் அன்பாய் வம்பு செய்து கொண்டிருக்கும் கூட்டமும் அதுதான்... 

தளபதியைப் பொறுத்தவரை அதை நட்பு பற்றிய படமாகத்தான் எல்லோரும் அறிந்திருப்பார்கள். நண்பனுக்காக என்னவேண்டுமானலும் செய்யும் கர்ணனின் கதாபாத்திரம்தான் ரஜினியின் சூர்யா பாத்திரம். துரியோதனின் பாத்திரம் மமூட்டியுடையது. இறுதியில் ரஜினி இறந்து விடுவது போல மணிரத்னம் காட்சியமைத்து பிறகு அப்படி இருந்தால் தமிழ்நாட்டில் ஒரு தியேட்டர் மிஞ்சாமல் அடித்து நொறுக்கி விடுவார்கள் என்பதால் கடைசியில் மம்முட்டி சாவது போல காட்சி மாற்றியமைக்கப்பட்டது என்றெல்லாம் அப்போதைய நாளேடுகள் செய்தி வெளிட்டன.

நட்பு பற்றிய படம் என்று எல்லோரு மனதில் அது ப்ளாஷ் ஆக காரணமாய் இரண்டு முரட்டு ஹீரோக்கள் அந்த படம் முழுதும் ஆக்கிரமித்து இருந்தார்கள். பற்றாக்குறைக்கு இளையராஜா வேறு....காட்சிக்கு காட்சி திரைப்பின்னணி இசையில் பின்னி எடுத்து இருப்பார். ஆனால் இதை எல்லாம் கடந்து கதையில்  ஒரு காதல் தோல்வி ஒன்று மென்மையாய் சொல்லப்பட்டிருக்கும். ஒரு விதவை மறுமணம் கவிதையாய்க் கோர்க்கப்பட்டிருக்கும். நான் அந்தக் காட்சிகளைப் பார்த்து ரசித்து உருகிப் போயிருக்கிறேன். மீண்டுமொருமுறை இன்று மதியம் தளபதியை ராஜ் டிவியில் பார்த்த போது அதே சோகத்துக்குள் மீண்டும் போய் விழுந்தேன்.


சூழல் காரணமாக ஒரு முரடனுக்குத் மணமுடித்து வைக்க முடியாது என்று அப்பா சொல்லிவிட தன்னை பெற்ற தகப்பனை மறுக்க முடியாத ஷோபனா ரஜினியை விட்டு விலகிப் போகும் இடமும் அந்தத இடத்தில் இளையராஜாவின் சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலின் பிஜிஎம் மும்....நெஞ்சை பிசைய ஆரம்பித்து விட்டது எனக்கு. ரஜினிக்கு காதலை இழக்க விருப்பமில்லாவிட்டாலும் தனக்கு அவளை மணமுடிக்க தகுதி இல்லையென்ற ஒரு தாழ்வு மனப்பான்மையை கோபமாக்கிக் கொண்டு ஷோபனாவை போ..போ.. என்று துரத்துவார்....

ஏதாவது செய்து தன்னை மணமுடித்துக் கொள்ளமாட்டாரா என்ற எதிர்பார்ப்பில் வரும் ஷோபனாவை பேசக் கூட விடாமல் திட்டி ரஜினி விரட்ட....காதல் தோல்வியை ஷோபனா தன் நடையில் கொண்டு வந்து நடந்து செல்லும் அந்த இடம்......காதலைக் கண்ணெதிரிலேயே இழந்தால் என்ன மாதிரியான வலியை அது கொடுக்கும் என்பதை செவுட்டில் அறைந்து நமக்குச் சொல்லும்..

கலெக்டரரை மணமுடித்த பின்பும்....கூட ரஜினையை பார்க்கும் பொழுதில் ஷோபனாவுக்குள் இருக்கும் காதலும் ரஜினிக்குள் இருக்கும் காதலும் சமகாலச் சூழலை மறந்து விட்டு சூட்சும உணர்வாய் எட்டிப்பார்த்து கண்ணீரோடு கட்டியணைத்துக் கொள்ளும் இடமும் அட்டகாசம்....!

அதே மாதிரி தான் கொன்ற ஒருவனின் மனைவி பிரசவித்திருக்கிறாள் என்றறியாமல் அங்கே அழைத்து வரப்படும் ரஜினியின் கையில் பிறந்த குழந்தையை மம்முட்டி கொடுக்கும் போது குற்ற உணர்ச்சி என்றால் எப்படி இருக்கும் என்ற ஒரு காட்சிப்பாடத்தை ரஜினியின் நடிப்பில் இருந்து நாம் படித்துக் கொள்ளலாம். அப்படி ஒரு லாவகாமான உணர்ச்சியை முகத்தில், உடல் அசைவில் சூப்பர்ஸ்டார் வெளிபடுத்தி இருப்பார். அதானால்தானே அவர் சூப்பர் ஸ்டார்.

எந்த உறுத்தலும் இல்லாமல் ஒரு குழந்தைக்கு தாயாய் இருப்பவளை மணந்து கொண்டு ரஜினி வாழ்க்கையைத் தொடங்குவதும் கவிதை. அந்த சூழலுக்குப் போடப்பட்ட பாட்டு திரையில் வரவில்லை ஆனால் கேசட்டில் இருந்தது. கணவன் இறந்து ஒரு குழந்தையோடு தன் கணவனைக் கொன்றவனையே கைப்பிடித்து வரும் பெண்ணின் மீது படிந்து கிடக்கும் சோகச் சூழல் எப்படி உறுத்தல் இல்லாத ஒரு தென்றல் வீசும் அனுபவமாய் மாறுகிறது என்பதை இளையராஜாவால் மட்டுமே புத்தம் புது பூ  பூத்ததோ என்று இசைத்துக் காட்ட முடியும்.

தளபதி படம் எல்லாமாய் இருந்தது. அதில் எல்லாமும் இருந்தது. ஆமாம் அது சினிமாவின், சினிமா பார்க்கும் ரசிகனின் பொற்காலமாய்த்தான் இருந்தது.

மீண்டுமொரு சூழல் அப்படி இனி கனியலாம்....ஆனால்....கண்டிப்பாய் அந்தச் சூழலில்

ரஜினியும், கமலும், இளையராஜாவும்,  மம்முட்டியும்,  மணிரத்னமும் இருக்க மாட்டார்கள்.....!



தேவா சுப்பையா...






பிரிதல் இனிது....!

$
0
0

பின்னொரு நாளில்
அவள் பிரிந்து செல்வாள்
என்று கூறியது போலவே
இன்று...பிரிவொன்றில்...
நின்று கொண்டிருக்கிறேன் நான்....!
இனிதலென்று பெறுதலைச்
சொல்லிக் கொடுத்திருந்த உலகிலிருந்து
விலகி நின்று தனிமையை
ஊன்றிக் கொண்டு மெல்ல நகர முற்படுகிறேன்
ஒரு மழைத்துளி போல மீண்டுமொருத்தி
என் மீது வந்து விழுந்து
புரிதலாய் சேர்ந்தோம் என்று
சொல்லவும் கூடும்...
அவளிடமும் சொல்வேன்...
பின்னொரு நாளில் நாம்
பிரியக்கூடுமென்று...!


தேவா சுப்பையா...





எம்.ஜி.ஆர்....!

$
0
0

விடியக்காலை ரேடியோ நியூஸ் கேட்டுட்டு அப்பா குலுங்கிக் குலுங்கி அழுதுட்டு இருந்தத பாத்த நான் திகைச்சுப் போய்  படுக்கையில இருந்து எந்திரிச்சேன். எனக்கு அப்போ 10 வயசு.... அப்பா கிட்ட போய் என்னாச்சுப்பான்னு நானும் அழுதுகிட்டே கேட்டேன்....சகாப்தன் செத்துப் போய்ட்டாருடா.....சாகாப்தன் செத்துப் போயிட்டாருடான்னு கலங்கிக்கிட்டே சொன்னாரு..... அடுப்படியில இருந்த அம்மாவும் ஓடியாந்து விசயத்தைக் கேள்வி பட்டு நெஞ்சுல அடிச்சுக்கிட்டு அழுதது இன்னமும் என் மனசுல பசுமையா இருக்கு....

பக்கத்து வீட்டு பாபு அப்பா, பாபு அம்மா, எதிர்வீட்டு ஜோயல் அப்பா, ஜோயல் அம்மா, டைப்பிஸ்ட் சார் அவுங்க வொய்ஃப், சண்முகம் சார்ன்னு எல்லோரும் தேம்பித் தேம்பி அழுத அந்த டிசம்பர் 24தான் 

எம்.ஜி.ஆர் என்னும் தங்கத்தலைவன் அதிகாலை 3 மணி அளவில் மாரடைப்பால் உறக்கத்திலேயே தன் உடலை விட்டு நகர்ந்த நாள்.

அது ஒரு மிகப்பெரிய துக்க தினம். அப்படி ஒரு தலைவனை பிரிய தமிழகத்தின் எந்த ஒரு மனிதரும் விரும்பி இருக்கவில்லை. அவருடைய கட்சி என்று இல்லை மாற்றுக் கட்சித் தொண்டர்களையும் வசீகரித்து  வைத்திருந்த பிரம்மாண்ட பிம்பம்தான் எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டின் இரண்டு பெரிய கட்சிளிலும் திமுக கொள்கை பிடிப்பு கொண்ட, கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று கொஞ்சம் ஸ்ட்ரீக்ட் ஆபிசர் போலத்தான் எம்.ஜி.ஆர் இருந்தவரைக்கும் அடிமட்டத்து மக்களின் மனதில் புரியப்பட்டிருந்தது. காரணம் எம்.ஜி.ஆர் மக்களோடு மக்களாக தன்னை இணைத்துக் கொண்டு தன்னை மக்கள் அவ்வளவு எளிதில் மறந்து போகா வண்ணம் ஒரு இளகு தன்மையோடு தன்னுடைய கட்சியை அடையாளப்படுத்திக் கொண்டார்.

குடிசைகளுக்குள் அவர் நுழைவது எல்லாம் ஏதோ ட்ரெண்ட் செட் செய்து தன்னை மக்களின் பிரதிநிதியாக காட்டிக் கொள்வதற்கான அரசியலுக்காய் அல்ல...அவர் நிஜமாகவே ஏழைகளை, உழைப்பாளிகளை, விவசாயிகளை, கூலி வேலை செய்பவர்களை, வயதான தாய்மார்களை நேசித்திருந்தார். அந்த அன்பின் மிகுதியில்தான் அவர் ஓடி ஓடிப் போய் வயதான தாய்மார்களை கட்டியணைத்தார். அவரை ஏதோ ஒரு வசீகர அரசியல் நடத்திச் சென்ற சினிமா நடிகர் என்ற அளவில் நாம் கடந்து சென்று விட முடியாது. எம்.ஜி.ஆரின் ஆளுமை என்ன என்று இன்றைக்கு அவர் மறைந்து 27 ஆண்டுகள் ஆன பின்னரும் குக்கிராமங்களுக்குள் சென்று மக்களிடம் நாம் பேசிப் பார்த்தால் தெரியும்....

அவர் சினிமாவில் நடித்தது அரசியலில் மேலேறி வர உதவியதே அன்றி அவர் அரசியலில் ஸ்திரத்தன்மையோடு நின்று தொடர்ச்சியாய் வெற்றி பெற அவரின் ஆழமான அன்பும், ஏழைகளை குறிவைத்து செயற்படுத்திய இலவச நலத்திட்டங்களுமே காரணம். எங்கள் பகுதியான பட்டுக்கோட்டையில் எனக்கு விபரம் தெரிந்த போது சட்டமன்ற உறுப்பினர் திரு. பி.என் ராமச்சத்திரன், அதே போல புதுக்கோட்டை நாடளுமன்ற உறுப்பினர் திரு. என். சுந்தர்ராஜன்.  இரட்டை இலைச்சின்னத்திலும், கைச்சின்னத்திலும் தேர்தலில் ஓட்டுப் போடுவது அந்த தொகுதி மக்களின் அனிச்சை செயலாகவே ஆகிப்போயிருந்தது போலவே எம்.ஜி.ஆர் இருந்த வரை பெரும்பாலும் தமிழகம் இருந்தது.

இரட்டை இலை என்னும் பசுமையான வசீகரத்தை தனது சின்னமாகக் கொண்டு எம்..ஜி.ஆர் கடைசிவரை வெற்றியின் நாயகனாக இருந்து  தனது ஆளுமை என்னவென்று நிரூபித்துச் சென்றார். எம்.ஜி. ஆர் யார்..? அவரது வல்லமை என்னவென்று அதிமுகவினருக்கும் ஏன் தமிழக மக்களுக்குமே கூட அவ்வளவாகத் தெரியாது ஆனால் ஐயா கலைஞருக்குத் தெரியும்...

எம்.ஜி.ஆர் யார் என்று...?

ஒரு நடிகர் என்ன செய்து கிழித்துவிட முடியும் என்று யோசித்த கலைஞரின் அலட்சியமே அவரை 13 ஆண்டுகள் எம்.ஜி.ஆர் என்னும் தலைவன் உயிரோடு இருக்கும் அவரை முதலமைச்சர் பதவியை விட்டு தூர விலக்கி வைத்திருந்தது. தனியாக எம்.ஜி.ஆர் திமுகவை விட்டு வெளியேறி வந்து கட்சி ஆரம்பித்த போது அவரின் ஆக்ரோஷமான அரசியலை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது திமுக என்னும் பெருங்கப்பல். எம்.ஜி.ஆர் மிகச்சாதுர்யமாய் காங்கிரஸின் ஓட்டு வங்கியையும் தனது ஓட்டுக்களாக மாற்றி மாறாத வெற்றிக்  கூட்டணியாக தொடர்ச்சியாக காங்கிரசுடன் இணைந்து  வெற்றிக் கனியை சுவைத்துக் கொண்டிருந்த போது அரசியல் சாணக்கியரான கலைஞரால் அந்த கூட்டணியை உடைத்து மாற்று அரசியல் செய்ய முடியவே இல்லை. 

இலங்கையில் தமிழர்களை சிங்கள இராணுவம் கொன்றழித்த போது எம்.ஜி.ஆர் பெரும் தூணாய் நின்று விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு உதவிகள் செய்தார். எம்.ஜி.ஆர் திராவிடன் என்ற உணர்வு கொண்டவர் மட்டுமில்லாத தமிழகத்தின் மீது தமிழ் மக்களின் மீது ஆழமான அன்பு கொண்டவர். நீ சண்டை பிடி தம்பி நான் அண்ணன் இருக்கிறேன் என்று பிரபாகரனிடம் எம்.ஜி.ஆர் சொல்லி பணத்தையும் கொடுத்ததாகச் சொல்வார்கள். ஈழப்பிரச்சினையில் தன்னுடன் கூட்டணி வைத்திருந்த காங்கிரசுக்கும் சூழலை எடுத்துச் சொல்லி எல்.டி.டி.யினருக்கு இந்தியாவிலேயே இந்திய ராணுவம் பயிற்சி கொடுக்கும் ராச தந்திர ஏற்பாடுகள் எல்லாம் புரட்சித் தலைவரின் உதவியின்றி நடந்திருக்க முடியமா...? என்று யோசித்துப் பாருங்கள்.

அரசியலில் கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆரின் சினிமா வெற்றி என்னவென்று நான் இங்கே எழுதி ஒன்றும் உங்களுக்குத்  தெரியவேண்டியது இல்லை. இன்றைக்கு அவரின் சினிமாப் பாடல்களையும், திரையில் அவர் ஏழைப்பாங்களனாக தோன்றி அவர்களின் உரிமைக்குப் போரடுவதையும் பார்க்கும் மக்கள் அவர் திட்டமிட்டு முதல்வர் பதவிக்காக அப்படி நடித்தார் என்று சொல்லலாம்....ஆனால் இப்படியான ஒரு பார்வையைக் கடந்து....

அந்தக் காலத்தில் மக்களை விழிப்புணர்வு செய்ய, திராவிடக் இயக்கக் கொள்கைகளை ஏழை எளியவர்களிடம் பறை சாற்ற, சாதிக் கொடுமையை ஒழிக்க, எம்.ஜி.ஆர் என்னும் மனிதர் திரையில் செய்த புரட்சி என்றுதான் இதைச் சொல்ல முடியும்....! ஊடகங்கள் அதிகமில்லாத அந்தக் காலத்தில் அது மிகப்பெரிய தேவையாய்தான் இருந்தது. சினிமாதான் தமிழக மக்களின் ஒரே வலிமையான எளிதாக செய்தி சொல்ல முடிந்த ஊடக்ம்.

” கடவுளென்னும்  முதலாளி... கண்டெடுத்த தொழிலாளி”  என்ற கவிஞரின் வரிகளைத் திரையில் வந்து எம்.ஜி.ஆர்... விவசாயி.........!!!!!.விவசாயி....! என்று பாடி நடித்த  போது திரை அரங்கம் அதிர்ந்தது....! சாமனிய மக்கள் நம்மை போல ஒருவன் வந்து விட்டான் என்று கை தட்டி ஆர்ப்பரித்தனர். காதலோ, வீரமோ, கொள்கையோ எம்.ஜி.ஆரின் பாணி என்பது இலைமறைக் காயாய் பேசுவதோ, நடிப்பதோ, பாடுவதோ அல்ல....

” நான் பார்த்ததிலே..அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன்....நல்ல அழகி என்பேன் “ என்று ஆரம்பவரிகளிலேயே பட்டவர்த்தனமாய் காதலைச் சொல்லும் அழுத்தமான வரிகளைத்தான் அவர் கவிஞர்களிடம் எழுதிக் கேட்டிருந்தார். ” நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான்....” நான் என்று எந்த நேரத்தில் அந்தக் கவிஞனின் பேனா வார்த்தைகளை எழுதியதோ தெரியவில்லை.....

தன் வாழ்நாள் முழுதும் எம்.ஜி.ஆர் நினைத்ததை முடிப்பவனாய்த்தான் வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர் மறைந்த நாள் இன்று........!!!!

இன்னும் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் தமிழ்நாட்டில் அரசியல் என்ற ஒன்று நடத்த வேண்டுமெனில் அறிஞர் அண்ணாவின் பெயரை புறக்கணித்து விட்டு எப்படி அரசியல் செய்ய முடியாதோ....அதே போல....

எம்.ஜி.ஆர் என்னும் மந்திரச் சொல்லை சொல்லாமல் இங்கே அரசியல் செய்யவும் முடியாது என்பதே உண்மை....!

 

ஆமாம்.... எம்.ஜி.ஆர். காலத்தை வென்றவர் தான்...!



தேவா சுப்பையா...





காதல் மொழி...!

$
0
0

உயிர் திறக்கும் இசை ஒன்றை கேட்டுத் தொலைத்து விட்டு தேன் குடித்த வண்டாய் கிறங்கிக் கிடக்கிறேன். ப்ரியமான காதலியாய் உள்ளுக்குள் உட்கார்ந்து கொண்டு இம்சிக்கும் இந்த பாடலின் வசீகரம் என்னவென்று தெரியாமல் அது சொல்ல முயலும் அவஸ்தைக்குள் சிற்றெறும்பாய் ஊர்ந்து செல்கையில், அடாவடியான ஒரு காதலின் கன பரிமாணங்கள் புலப்படுகின்றன. காதலை முதலில் பார்வையால் அவள் சொல்லிவிட அதற்கு மேல் அதை முன்னெடுத்துச் சென்று அவளிடம் வார்த்தையாக்க வேண்டிய பெரும் அவஸ்தை காலம் காலமாக ஆண்களுக்கே உரித்தானது.

மிக மெலிதாய் காதலைச் சொல்லும் ரகம் இல்லை இந்தப் பாடல். நளினமாய் காதலைச் சொல்லத் தெரியாத ஒரு முரட்டு கிராமத்து இளைஞனின் எண்ண வெளிப்பாடு இந்தப் பாடல் போன்றுதானிருக்கும். அது அவஸ்தைதான் அது இம்சைதான், அது வலிதான் ஆனாலும் அதில் ஆனந்தித்துக் கிடக்க முடிகிறது. உள்ளுக்குள் ஏதேதோ உணர்வுகளைக் கிளறிவிட்டு தொட்டுப் பிடித்து விடும் வண்ணத்துப் பூச்சியாய் நகர்ந்து கொண்டே இருக்கும் காதலைத் துரத்திக் கொண்டிருக்கும் ஒரு விளையாட்டாய் இது இருக்கிறது.

காதல் என்பது புரிந்து கொள்ளுதல், காதல் என்பது அறிவை பகிர்ந்து கொள்ளுதல், காதல் என்பது உலக அறிவு, காதல் என்பது இலக்கியம் என்பதெல்லாம் நவீனம் சொல்லிக் கொடுத்திருக்கும் காதலுக்கான அலங்காரங்கள். காதல் என்பது காமத்தினை திருமணமென்னும் பந்தம் மூலம் கடந்து செல்லும் ஒரு உணர்வு என்றுதான் தலைமுறையாய் புரிந்து வைத்துக் கொள்ளப்பட்டிருந்திருக்கிறது. காதல் என்பது காமம் அல்ல...காதல் என்பது இணைந்து வாழ்தல் அல்ல ஆனால் இவற்றை எல்லாம் கடத்தல். உலக அறிவுகள் இல்லாத வெகுளித்தனமான கிராமத்துக் காதல் வெகு எளிதாய் இந்த உணர்வுகளை முன்னெடுத்துச் செல்கிறது. காதலிப்போம் காதலித்து உன் கழுத்தில் தாலியைக் கட்டி நான் மனைவியாக்கிக் கொள்கிறேன். இங்கே விதிக்கப்பட்டதை இயற்கையின் நகர்வோடு கடப்போம்....

காலங்கள் கடந்து செல்கையில் காமச்சுமையை இறக்கி வைப்போம், நான் நீ என்று ஒருவரை ஒருவர் ஆளுமை செய்து கொள்ளும் அதிகாரநிலைகளை இறக்கி வைப்போம்...ஆனால் காதலென்னும் உள்ளுக்குள் சுரந்த அந்த ப்ரியத்தின் அதிர்வுகளை காலம் முழுதும் சுமந்து செல்வோம். காதல் உன் வலிக்கு என்னை அழ வைக்கும், என் வலிக்கு உன்னை அழ வைக்கும்...

அது எப்போதும் உடலில் வாழ்வது அல்ல உணர்வில் வாழ்வது என்று நிறைவாய் முடியும் இல்லறத்தில் முரண்களின்றி வாழ்ந்து முடித்தது நம் சமூகம்.

அறிவு, புரட்சி, ஞானம் என்பதெல்லாம் எதற்கு உதவுமென்று நாம் நம்பி அதைப் பொக்கிஷமாய் நினைத்துப் பேசிக் கொண்டிருக்கிறோமோ அதை எல்லாம் காலில் போட்டு மிதித்து அறியாமையான முழுக்காதல் சொல்லிக் கொடுத்து விடுகிறது. பகுத்தறிதல் உயர்வு என்று கூறும் இந்த சமூகத்தின் பேரறிவுப்பக்கங்களை கிழித்துப் போட்டுவிட்டால்....இயல்பாய் கோபப்பட்டு,இயல்பாய் காதல்வயப்பட்டு, காமவயப்பட்டு, எங்கே பிணைத்துக் கொள்கிறோமோ அந்த பிணைப்போடு நாம் தரைவிழுந்த ஒரு மழைத் துளியாய் மண்ணில் கரைந்து போக முடிகிறது.

பகுத்தறிவு இல்லாத நிலை மிருகநிலையாயிற்றே..? அது எப்படி சிறப்பானது என்று கேள்வி கேட்பவர்கள், எது சிறந்தது..? எது உன்னதமானது என்பதற்கு என்ன வரையறையை இங்கே நாம் விதித்து வைத்திருக்கிறோமோ அது எல்லாமே மனித மனதின் வசதிகள்தான் என்பதை உணரவேண்டும்.

சிக்கலில்லாத நிலையே உயர்வு என்று நீங்கள் சொல்வீர்களேயானால் மிருகநிலையே உயர்ந்தது என்று நான் சொல்வேன்...! அது கடவுள் நிலைக்கு மிக சமீபம் மனித நிலைக்கு வெகுதூரம். இந்தப்பாடலைக் கூட அது வெளியான படத்தின் கதையை  மையமாக வைத்தோ அல்லது பாடல் காட்சியின் பின்புலம் சொல்லும் செய்தியை வைத்தோ நான் இதை எழுதவில்லை. இதன் பாடல் வடிவத்தை ஒலியாக கேட்ட பொழுதில் எந்த திசையில் என் மனப்புரவி ஓடியிருக்கிறதோ அந்த திசை நோக்கியே நகர்ந்து அந்த உணர்வுகளையே பதிந்திருக்கிறேன். 

இளையராஜா சாருக்கும், ரஃகுமான் சாருக்கும் இடையில் முன்பெல்லாம் தேவா சார் இருந்தார். நிறைய அழகான பாடல்களுக்கு அவர் இசை அமைத்திருந்தாலும் அவரது இசை நிறைய இளையராஜா ரஃகுமான் இசையின் கலப்பாய்த்தானிருக்கும். தேவா சாரின் தனித்துவம் அவரது கானா பாடல்கள்தான்.. இன்றைக்கும் அவர் இசையமைத்த பல கானா பாடல்கள் கேட்ட மாத்திரத்திலேயே எழுந்து ஆட்டம் போட வைக்கும். ராஜா சாருக்கும் ரஃகுமானுக்கும் மாற்றாய் இருந்த தேவா சார் நிறைய புதியவர்களின் வருகையால் காற்றில் கரைந்த கற்பூரமாய் மறைந்தே போய்விட்டார்....

வெகு நாட்களுக்குப் பிறக்கு டி. இமான் இப்போது ஒரு மாற்று இசையை அதுவும் தமிழ் மண்ணோடு ஒட்டுதலான ஒரு இசையமைப்பாளராய் பரிணமித்திருக்கிறார். கும்கி படத்தில் அவர் மெட்டமைத்த பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் பரவி, கிராமாத்து குடிசைகளுக்குள் இருந்து மிகப்பெரிய ஸ்பீக்கர் செட்களில் அலறின. உலக இசை ரசிகர்ளை திருப்தி படுத்த வேண்டி ரஃகுமான் வேறு தளத்திற்கு பயணித்து சென்று விட்டார், பல நாட்டு இசைகளையும் இணைத்து ஒரு ப்யூசனாக  உயர் மட்ட ரசனைக்காரர்களை திருப்திப்படுத்த வேண்டி இசைமைக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டுப் போய் விட்டது. இதனாலேயே தமிழ் மண்ணோடு பந்தப்படாத இசையாய் அது இப்போது மாறிப் போய் விட்டது. 

ஒரு இசை நன்றாக இருக்கிறது என்பது வேறு அது எனக்கு, என் மண்ணின் மைந்தர்களுக்குப் பிடிப்பது என்பது வேறு. மேல்நாட்டு இசையை நாங்கள் எப்போதாவது கேட்டு ரசிப்போம். அதாவது மாதத்தில் ஒரு நாளோ இரண்டு நாளோ பிஸ்ஸாவோ, கேஎஃப்சியோ சாப்பிட்டு உலகமயமாக்களின் மந்தை ஆடாய் ஆவது போல அது.... ஆனால் தினம் அது எங்களுக்கு ஒத்து வராது. தட்டு நிறைய சோறு போட்டு எண்ணெய் மிதக்கும் கோழிக் குழம்பை ஊற்றி அழுந்தப் பிசைந்து ஒரு கோழிக் காலை எடுத்து கடித்து, ஊறுகாயை தொட்டுக் கொண்டு வாய் நிறைய சாப்பிட்டு விட்டு, மோரை ஊற்றி சோறு சாப்பிட்டு விட்டு தட்டைத் தூக்கி மோர்த் தண்ணீரைக் குடித்து விட்டு, சொம்புத் தண்ணியை குடித்து, வெளியே வந்து லுங்கியை தூக்கிக் கட்டிக் கொண்டு ஏப்பம் விடும் சுகத்தை.... ஒரு நாளும் மேல் நாட்டு உணவுகளும், பழக்க வழக்கங்களும் எங்களுக்கு கொடுத்து விட முடியாது.

இசையும் அப்படித்தான். நாங்கள் எல்லாம் வாய்க்கால் வரப்பு வெட்டும் போது சந்தோசமாய் பாடியவர்கள், வரப்பில் தூங்கும் குழந்தைக்கு தாலாட்டுப் பாடிக் கொண்டே வயலில் நாற்று நட்டவர்கள், கதிர் அறுத்தாலும் பாட்டு, வயசுக்கு வந்தாலும் பாட்டு, கல்யாணத்துக்குப் பாட்டு, சாவுக்கு பாட்டு என்று எங்களுக்கென்று ஒரு இசை இருக்கிறது. அந்த இசையை இளையராஜாவின் வாத்தியம் எல்லா படங்களிலும் பெரும்பான்மையாக இசைத்திருக்கிறது. அந்த ராகதேவனிடம் பால் குடித்து வளர்ந்த குழந்தைகள் நாங்கள்....

உலகத்தரமான டெக்னிகாலிட்டிகள் நிறைந்த இசையைப் பற்றிய அறிவெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை. எது எங்களை குஷிப்படுத்துகிறதோ எது நேர்மையாய் உறுத்தல் இல்லாத சந்தோசத்தைக் கொடுக்கிறதோ அது போதும்....என்று நினைப்பவர்கள் நாங்கள்.

இப்போது டி. இமான் இடையிடையே தமிழர்களுக்கான பாடல்களாய் மெட்டமைத்து எங்களின் தாகத்தை அவ்வப்போது தீர்த்து வைக்கிறார். மேற்கத்திய இசையாய் இருந்தாலும் அதை மண்ணின் மணத்தோடு குழைத்துக் கொடுக்கிறார். இவர் ராஜா சார்,  மற்றும் ரஃகுமானின் மாற்று என்று சொல்வதற்கில்லை என்றாலும்....

தாளத்தோடு, இயல்பாய் இவர் அமைக்கும் மெட்டுக்கள்....ஏதோ ஒருவகையில் உள்ளத்தை வருடத்தான் செய்கின்றன....!


யுகபாரதியின் வரிகளும் இமானின் இசையும்....மீண்டும் மீண்டும் இந்தப்பாடலைக் கேட்கத் தூண்டப்போவது என்னவோ நிஜம்..!



தேவா சுப்பையா...


Photo Courtesy: Ashokarsh Photos - Source: Web





Viewing all 254 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>