Quantcast
Channel: Warrior
Viewing all 254 articles
Browse latest View live

மரத்தடி...!

$
0
0

கவிதை எழுதலாமா?  காஃபி குடிக்கலாமா? எதுவும் செய்யாமல் வெறுமனே பால்கனிக்குப் போய் வேடிக்கை பார்க்கலாமா? இல்லை ஏதேனும் புத்தகத்தின் இரண்டு மூன்று பக்கங்களைப் புரட்டிவிட்டு அதன் தாக்கத்தில் எங்கோ போய் விழுந்து புரண்டு கொண்டிருக்கலாமா? பிரியமான இசையைக் கேட்கலாம் கூடத்தான்.  தமிழின் ஆகச்சிறந்த படங்களின் தொகுப்பினை சேமித்து வைத்திருக்கும் போல்டர் கூட புஷ்டியாகிவிட்டது. பற்றாக்குறைக்கு நண்பர்கள் குறிப்பிட்டுச் சொல்லி பார்க்க சொன்ன உலகத் திரைப்படங்கள் வேறு கூடிக் கொண்டே போகிறது. யூ ட்யூபில் பார்த்து பார்த்து தொகுத்து வைத்திருக்கும் பாடல்களை, இன்னபிற காணொளிகளையும் கேட்டு முடிக்க தொடர்ச்சியாய் ஒருவாரம் கூட ஆகலாம்.

யூ ட்யூப் தொகுப்பில் இன்னதுதான் இருக்கிறது என்று சொல்ல முடியாது. ராஜா சார், ரகுமான், எம்.எஸ்.வி, தியாகராஜ பாகவதர் என்று தொடங்கி கெனி ஜியின் சாக்ஸ்போன்,  பெஸ்ட் ஆஃப் மொசார்ட், பண்டிட் ஹரிபிரசாத் செளரஷ்யாவின் புல்லாங்குழல், யார் யாரோ வெறுமனே பாடி தொகுத்து வைத்திருக்கும் கர்நாடக சங்கீதத் தொகுப்பு, இஷா அமைப்பினரால் கம்போஸ் செய்யப்பட்ட பாடல்கள், சைவ சித்தாந்தம் பற்றிய தொகுப்புகள், உலகின் புகழ்பெற்ற மேடைப் பேச்சுக்கள்,   இதைக் கேளுங்கள் நன்றாயிருக்கும் என்று கூறி அவ்வப்போது நண்பர்கள் கொடுத்த இணைப்புகள், குன்னக்குடி வைத்தியநாதன், மதுரை சோமு என்று எப்போது எது பிடிக்குமோ அதை தொகுத்து வைத்துக்கொண்டு பொறுமையாய் பிறகு மாடு அசை போடுவது போல ஒவ்வொன்றாய் கேட்பதும் எனக்குப்பிடிக்கும். ஒவ்வொரு முறையும் தொடர்ச்சியாய் கேட்க விடாமல் வேறு ஏதாவது ஒரு இடையூறு வந்துவிடுவதால் இதுவரையில் முழுமையாய் அவற்றையும் கேட்டு முடிக்க முடியவில்லை. 

ஏதோ ஒன்றை செய்யலாம். இல்லை எதுவும் செய்யாமல் சிவனே என்று உட்கார்ந்திருக்கலாம். சுற்றி ஓராயிரம்  விசயங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன. எதைப் பற்றியும் யோசிக்காமல் இருப்பதே நலம். இந்த உலகத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தி விவாதம் செய்ய வைக்காத எதையும் நான் செய்யத் தயார்தான். இப்படி இருப்பதாலேயே நண்பர்களோடு கூட பேசுவதற்கு எனக்கு ஒன்றுமே இருப்பதில்லை. வெகு நேரம் பால்கனியில் அமர்ந்து அதிகாலை வானத்தின் நீல நிறத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். எந்த செய்தியும் என்னிடம் இல்லை என்று வானமும் என்னைப் [போலவே மெளனமாய் இருந்தது. தூரத்தில் ஒரு குட்டி மேகம் நடைபயிலும் குழந்தையைப் போல தத்தித் தத்தி மிதந்து கொண்டிருந்தது. என்ன இருக்கும் இந்த வானத்தின் முடிவினில்? எங்கே செல்லும் இந்த அகண்டவெளி என்று நான் சிறுவயது முதலே யோசித்துக் கொண்டிருக்கிறேன். பதில் ஒன்றும் கிடைக்காதுதான் ஆனால் யோசிப்பது சுகமாய் இருக்கிறது எனக்கு. விடுமுறை நாளில் அதிகாலையில் வேலை ஏதும் இல்லாமல் என்னைப் போல எழுந்து கொள்ளும் பைத்தியக்காரர்கள் வேறு யாரும் இருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே நடக்கலாம் என்று கீழே இறங்கினேன்.

இரவின் வாசனையோடு மெலிதாய் விடிந்து கொண்டிருந்தது பொழுது. முழு இரவும், முழுப் பகலும் ஒருவிதமானது என்றால், விடிந்தும் விடியாத அதிகாலையும், மெல்ல இருட்டத் தொடங்கும் அந்திப் பொழுதும் வேறு விதமானது. வசீகரமான அந்தக் கலவை எனக்குப் பிடிக்கும். ஒரு ஓவியன் வர்ணங்களை குழப்பி புது நிறத்தை பெற முனைவது போல இருக்கும் இரவின்நுனியும் பகலின் முடிவும். வேலை நாட்களில் மனிதர்களோடு பேசி, ஓடி, ஆடி, கோபப்பட்டு, சிரித்து, நடித்து, ஏமாந்து, ஏமாற்றி, மிகப்பெரிய நாடகத்துக்குப் பிறகு அசுரத்தனமாய் மாலைப் பொழுதை கடந்து வரவேண்டி இருக்கும். ரசிக்க அப்போது ஒன்றுமே இருக்காது. இப்போது எல்லாம் வாரத்தில் ஒரு நாளாவது ஓய்வாய் இருந்துவிட மாட்டோமா என்று ஏங்கியபடியேதான் நான் ஓடிக் கொண்டிருக்கிறேன். ஓய்வு என்பது விடுமுறை என்று என்னால் எடுத்துக் கொள்ள முடியாது.  ஓய்வு என்பது இடையூறு இல்லாமல் பிடித்த விசயத்தில் லயித்துக் கிடப்பது. 

யோசித்துக் கொண்டே மெல்ல நடந்து கொண்டிருந்தேன். ஆள் அரவமற்ற தெருக்களுக்குள் அதிகாலையிலேயே எழுந்து கொண்ட பட்சிகள் உணவு தேட வெளியே பறப்பதற்கு முன்பாக மரங்களிலமர்ந்து காச் மூச் என்று கத்திக் கொண்டிருந்தன. அவை மகிழ்ச்சியாக  ஒன்றை ஒன்று கொஞ்சிக் கொண்டிருக்கலாம், அதிகாலையிலேயே பசி எடுத்த குஞ்சுகள் அம்மா பறவையையோ அல்லது அப்பா பறவையையோ பார்த்து பசியில் விய்யா.. விய்யா என்று கத்திக் கொண்டிருக்கலாம். குஞ்சுப் பறவையைத் தன் சிறகால் அணைத்து இதோ உணவோடு வந்துவிடுகிறேன் என்று தாய்ப்பறவை அலகால் முத்தமிட்டுக் கொண்டிருக்கலாம், காதல் பறவைகள் உரசிக் கொண்டு உலக மொழிகளில் இதுவரையில் எழுதப்படாத கவிதைகளைப் பரிமாறிக் கொண்டிருக்கலாம், வலியால் சிலதும், கோபத்தில் சிலதும் கத்திக் கொண்டிருக்கலாம்....

வழி நெடுக மரம். மரம் முழுதும் பறவைகள். ஒவ்வொரு மரத்திலும் ஒவ்வொரு வாழ்க்கை. ஒவ்வொரு விடியல். ஒவ்வொரு பிழைப்புப் போராட்டம். நடந்து கொண்டே வெகுதூரம் வந்து விட்டேன். ஒரு மரத்தின் தடித்த வேரின் மீது போய் அமர்ந்தேன். மரத்தின் மீது வாட்டமாய் சாய்ந்து கொண்டேன். பச்சையாய் ஈரத்தோடு இருந்த மரத்தின் பட்டைகள் செதில் செதிலாய் வெடித்துக் கோடுகள் ஆழமாய் இருந்தன. பழைய மரம் போல இருக்கிறது. எனக்கு என் அப்பத்தாவின் நியாபகம் சட்டென்று வந்தது. நகரத்தின் மரங்களும், கிராமத்தின் மரங்களும் ஒரே செய்தியைத்தான் ஒரே உணர்வைத்தான் தருகின்றன. மரங்கள் என்ன மனிதர்களா? இடத்திற்கு இடம், சூழலுக்குச் சூழல் தன்னைத் தானே மாற்றிக் கொண்டு, ஏமாற்றி வாழ்ந்து செல்ல.

எங்கு நட்டாலும் மரம் மரம்தான். கார்பன் மோனாக்சைடை உமிழ்ந்து காற்றை மாசுபடுத்த ஆயிரம் வாகனங்களை மனிதன் கண்டுபிடித்து அதை அறிவியல் சாதனை என்று மார்தட்டிக் கொள்வதைப் போல மரங்கள் மார்தட்டிக் கொள்வதில்லை. அவை போதும் போதும் என்னுமளவிற்கு அவற்றின் கடைசிக் காலம் வரை மனிதர்கள் சுவாசிக்க ஆக்ஸிஜனை கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. மனிதர்களுக்குத்தான் கொஞ்சம் கூட நன்றி விசுவாசம் இருப்பது கிடையாது. இயற்கையின் பிச்சையில் வாழ்ந்து கொண்டு எல்லாம் இவனே செய்தது போல இறுமாந்து கொள்கிறான். பாவம் மரங்களும் இன்ன பிற தாவரங்களும். அவை ஒரு மனிதனை உருவாக்கி, சுமந்து, பின் அவன் மரணிக்கும் வரை அவனோடே பயணிக்கின்றன. பின்னொரு நாள் ஏதோ ஒரு மரம் விறகாகி பின் அது உயிரற்ற மனிதனின் உடலோடு பஸ்பமாகி தன் வாழ்க்கையின் இறுதியை எட்டிப் பிடித்து வேறு வடிவம் எடுத்துக் கொள்கிறது. மரங்கள் எரியும் போது மரங்கள் அழுவதில்லை ஏனென்றால் அவை வாழ்வில் ஊறிக் கிடப்பவை. இருப்பதும் இல்லாததும் பெரியவிசயம் இல்லை அவற்றுக்கு மனிதர்களைப் போல.

நான் நீண்ட பெருமூச்சோடு மரத்தின் வேர்களுக்குள் கிடந்தேன். விடியற்காலையில் இப்படி மரத்தின் மடியில் ஓய்ந்து கிடப்பது சுகமாயிருந்தது. குருக்கத்தியில் நான் என் வீட்டுப் பின்புறத்து தோட்டத்தில் இருக்கும்  பருத்த புளிய மரத்து வேர்களுக்கு இடையே இப்படி கிடப்பதுண்டு என்பதை இங்கே தட்டச்சு செய்து முடிக்கும் போதுதான் குருக்கத்தி பற்றி தெரியாதவர்களுக்கு என்னவென்று தெரியும் குருக்கத்தி பற்றி என்று யோசிக்கிறேன்.  தொடர்ச்சியாய் என்னை வாசிப்பவர்களுக்கு குருக்கத்தியையும் என்னையும் பிரித்துப் வைத்து பார்க்கக் தெரியாது. குருக்கத்தி என் பூர்வீக குக்கிராமம். நகரத்தில் மூச்சு திணற பிழைத்துக் கொண்டிருக்கும் இந்த கிராமத்தானின் மூதாதையர்கள் மண்ணோடு  கட்டிப் புரண்ட இடம். கொத்திக் கொண்டும், உழுது கொண்டும், விதைத்துக் கொண்டும் கண்மாய்க் கரையோரம் படுத்துறங்கி வற்றி போன கண்மாய் தூர்ந்து போவதற்கு முன்னாலாவது வா மழையே.... என்று ஏக்கமாய் வானம் பார்த்த மனிதர்கள் அவர்கள். செம்மண் சரளையும், கருவேல மரங்களும் இப்போதும் என்னிடம் ஊருக்குச் சென்றால் நிறைய பேசுவதுண்டு. நிறைய வலிகளையும் அந்த வலிகளோடு வாழ்க்கையை கொண்டாடிய மனிதர்களையும் பற்றி அதிகம் புரிந்து வைத்திருப்பவை அவைதான். மழை பெய்தாலும் அவற்றுக்குத் தெரியும், மனிதன் மரித்தாலும் அவற்றுக்குத் தெரியும்.

என் உடலுக்குச் சொந்தமான பூமி அது. அங்கேதான் இந்த உடல் காற்றாயிருந்தது, மண்ணில் தாது சத்துக்களாய் கிடந்தது. விதையாயிருந்தது. பழமாயிருந்தது, காய்கறிகளாயும் இழை, தழையாயும் இருந்தது. அங்கிருந்துதான் இந்த உடல் கிடைத்தது. சொந்த ஊர் என்பது வெறுமனே முன்னோர்கள் வாழ்ந்து மரித்த இடம் மட்டுமல்ல. அது இந்த உடலாய் ஆவதற்கு முன்பு  பல்வேறு சத்துப் பொருட்களாயும் இந்த சதைக் கோளம் பரவிக்கிடந்த இடம். எந்த பாட்டன் வைத்த மரம் என்று யாரும் சொன்னதில்லை ஆனால் எல்லோரும் என் வீட்டு பின்னாலிருக்கும் அந்த மரத்தடியில் விளையாடி இருக்கிறார்கள். இன்னமும் போதும் போதுமென்னும் அளவிற்கு காய்த்துக் கொடுக்கிறது அந்த புளியமரம்.

முன்பெல்லாம் ஏதோ ஒரு புத்தகத்தோடு அந்தமரத்தின் வேர்களுக்குள் நான் ஒடுங்கிக் கிடப்பேன்.  மிக பாதுகாப்பான ஒரு கதகதப்பான இடமாய் அது இருக்கும். தாயின் கருவறையில் மிதந்து கிடக்கும் சிசுவாய் அங்கே நான் எண்ணமற்ற வெளியில் மிதந்து கிடந்திருக்கிறேன். மரத்தின் வேர்களுக்குள் போய் அமர்ந்த அடுத்த நொடியில் மனம் நின்று போகும். மரம் இருக்கும். மரம் மட்டுமே இருக்கும். மீண்டெழுந்து நான் பல நாட்கள் உடல் புகுந்திருக்கிறேன். பட்டை பட்டையாய் இருக்கும் அந்த மரத்தினூடே எறும்புகள் ஊர்ந்து கொண்டிருக்கும், சிறு பூச்சிகள், மரம் முழுதும் பறவைகள், என்று மிகப்பெரிய சம்சாரி அந்த மரம். பெரிய கை. என் வீட்டுக் கொல்லையில் நின்று கொண்டு பலரின் மரணத்தை அறிந்து வைத்திருப்பவள். பல திருமணங்களை பார்த்து ரசித்திருப்பவள். சண்டைகளையும் சச்சரவுகளையும் பார்த்து பார்த்து புரிந்து வைத்திருக்கும் அனுபவஸ்தி.

ஏப்ப்ப்பத்தா......என்ன செஞ்சுகிட்டு இருக்க நீய்யி.....என்று கேட்டுக் கொண்டேதான் அவளருகே செல்வேன். கை வைத்து மரத்தை தடவி, கன்னத்தோடு கன்னம் வைத்து கொஞ்சம் மரத்தை விரலால் சுரண்டி, அதன் பச்சைத் தன்மையை விரலுக்குள் வாங்கி முகர்ந்து, புளிக்கும் காயையும், இனிக்கும் பழத்தையும் எடுத்து ஆவலாய் கடித்து தாயின் முலை பற்றி இழுத்து பாலருந்தும் குழந்தையாய் நான் உண்டிருக்கிறேன். அது வெறுமனே பார்ப்பவர்க்கு  ஒரு மரம். அதை வெறுமனே பார்த்தபடி ஆயிரமாயிரம் எண்ண ஓட்டத்தோடு எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கலாம். அந்த மரம் மட்டுமல்ல இந்த உலகிலிருக்கும் எந்த மரமும் ஒரு மரம் மட்டுமல்ல. அங்கே அதைச் சுற்றி ஒரு வாழ்க்கை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இளைப்பாற எத்தனையோ ஜீவன்கள் அதன் நிழலிலும் அதன் மீதிலும் வந்து அமர்ந்து கொண்டே இருக்கின்றன.

எவ்வளவு நேரம் ஆனது என்று யோசிக்காமல் என் நகரத்து விடுமுறை தினத்தின் காலையில் அந்த மரத்தின் மடியில் கால் நீட்டி சாய்ந்தமர்ந்திருந்தேன். புத்தகம் படிப்பதைக் காட்டிலும், இசையைக் கேட்பதைக் காட்டிலும், தத்துவம் பேசுவதைக் காட்டிலும், கடவுள் தேடுகிறேன் என்று மமதை மொழியை மனதோடு பேசிக் கொண்டிருப்பதைக் காட்டிலும்....... மொழியற்ற இயற்கைக்குள் விழுந்து கிடப்பதே பெரு ஓய்வு என்று எனக்குத் தோன்றியது.

இனி ஓய்வென்று கான்கிரீட் சுவர்களுக்குள் அமர்ந்து கொண்டு ஏதேதோ செய்வதைக் காட்டிலும், ஞானம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை ஏதோ ஒரு மரத்தடியில் விழுந்து கிடப்போம் என்று யோசித்தபடியே....

எழுந்து வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.  மரங்கள் எல்லாம் மெளனமாயிருந்தன.


தேவா சுப்பையா...







நந்தி....!

$
0
0

எப்போதாவதுதான் வாய்க்கிறது இப்படியான மனோநிலை அடைமழைக் காலத்தில் இருண்டு இடக்கும் பகல் பொழுதில் மழைச்சாரலை உள்வாங்கியபடி திண்ணையில் அவித்த கடலையை அனுபவித்து கொறிப்பது போல. மழையின் தாளத்தை கேட்டிருக்கிறீர்களா நீங்கள்? தப.. தப.. தப்... தப...தப என்று ஒவ்வொரு மழைத் துளியிலும் நிலம் தொட்டு பின் மீண்டும் துள்ளி எழும் காட்சியைக் கண்டிருக்கிறீர்களா? அலாதி என்பதின் அர்த்தம் அப்போதுதான் விளங்கும். எங்கோ வெறித்தபடி பிடித்த இசையைக் கேட்டுக் கொண்டு ஒரு போர்வைக்குள் சுருண்டு கிடக்கும் கதகதப்பு நிமிடங்களைப் போல இருக்கிறது இன்று எனக்கு.

பேச ஏதுமில்லா தருணங்கள் எப்போதும் வந்து போகுமென்றாலும் எண்ணவே ஏதுமில்லா தருணத்தில் விழுந்து கிடப்பது வரம்தானே. மாட்டினைப் பார்த்திருக்கிறீர்களா? மேயும் போதும் நிதானமாயிருக்கும், ஓடும் போதும் நிதானமாயிருக்கும், வண்டியில் கட்டி ஓட்டினாலும் நிதானமாய் இருக்கும், உழவுக்கு கொண்டு சென்றாலும் நிதானமாயிருக்கும்.  நான் சிறுவயதில் சொந்த கிராமத்துக்கு செல்லும் போதெல்லாம் மேய்ச்சலுக்கு சென்றிருக்கிறேன். மாடு மேய்க்கதாண்டா நீ லாயக்கு என்று என்னை நிறைய பேர்கள் திட்டி இருக்கிறார்கள் சிறுபிராயத்தில். அவர்கள் திட்டியது போலவே நடந்து தொலைத்திருக்கக் கூடாதா என்று ஒரு ஏக்கம் வருகிறது இப்போது. மாடு மேய்த்தல் வெகு சுகமானது. பசுக்களையும், எருதுகளையும், எருமை மாடுகளையும், மொத்தமாய் ஓட்டிக் கொண்டு போய் புற்கள் நிரம்பிய இடத்தில் மேய விட்டு விட்டு மரத்தோர நிழலில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் சுகத்தினை வார்த்தைகளில் கொண்டு வந்துவிடமுடியாது....

செவளை, கருப்பு, வெள்ளை, மோளை, தெப்பப் பசு, வீரன், சோம்பை, நோஞ்சான்.....பேர் சொல்லி அவற்றை அழைத்து ஓய்ய்ய்ய்ய் எங்ங்குட்டு போற மூதேவி...கண்ணுக்குத் தெரியாம ஓடிப்போயிட்டு பொழுது சாஞ்ச பெறகும் ஒன்னியத் தேடிக்கிட்டுத் திரிய முடியுமா....இங்குட்டு வாஞ்ச...என்று அவற்றை அன்பொழுகும் கோபத்தோடு கம்பெடுத்து மெலிதாய் வாலுக்கு அருகே முதுகில் அடித்து திருப்பும் மோது....சில நேரம் அடி சுளீர் என்றும் விழுந்து விடும்..... பாவமாய் நம்மை பார்த்தபடி ...ம்ம்ம்ம்ம்ம்ம்மா என்று அடித் தொண்டையிலிருந்து அவை கத்தும் போது நம் ஈரக்கொலையில் போய் அது சுளீர் என்று வலியாகும்.

ஆடுகளின் கண்கள் கொஞ்சம் போதையிலிருப்பது போலவே இருக்கும். ஒரு குடிகாரனைப் போல கொஞ்சம் மிதப்பில் இருக்கும் ஆடுகளின் கண்களில் ஒரு வெள்ளந்தித்தனம் இருக்காது. அவை சொக்கிப் போய்தான் எப்போதும் இருக்கும். மாடுகளின் கண்களில் பேரமைதி இருக்கும். கோபத்தைக் கூட நிதானமாய் காட்டத் தெரிந்த ஒரே மிருகம் மாடுதான். சொரசொரப்பான நாக்கினை முதலில் நீட்டி புல்லை தடவி இழுத்து முன் பற்களால் கடித்து இழுத்து வாய்க்குள் போட்டு அரைத்து சொடுக்கிடும் நேரத்திற்குள் இரைப்பைக்குள் தள்ளிவிடும். கூர்மையாய் ஒரு செயலை அனுபவித்து செய்கையில் அதில் வேகம் இருந்தாலும் நிதானம் கிடைத்து விடுகிறது. நிதானம் என்பது வேகத்தின் எதிர்ப்பதம் அல்ல. அது குழப்பத்தின் எதிர்ப்பதம்.

மாடு அசைபோடுவது போல வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது எனக்கு இப்போது. எங்கும் பார்க்காமல் மெலிதாய் கண்களை மூடிக் கொண்டு அவ்வப்போது மேலே உட்காரும் எறும்பு, ஈக்களை, சிறு சிறு பூச்சிகளை வாலாலும், தோலை உலுப்பியும் விரட்டிக் கொண்டு கால்கள் மடக்கி எங்கோ எதற்கோ என்னவோ நிகழட்டும் இந்தக் கணத்தில் இந்த உணவை மென்று கூழாக்கி அசைபோடுவதே என் வேலை. எத்தனை அதிசயம் வேண்டுமானலும் இந்த உலகில் நடக்கட்டும். கட்டுக் கட்டாய் எத்தனை புற்கட்டுக்களை என் முன் போட்டாலும் நான் கவலைப் படமாட்டேன் என்பது போல அசை போடும் மாடுகளைப் போல...

வாழ்க்கையை அசைபோடத் தெரிந்துவிட்டால் வாழ்க்கையின் அழகு என்ன என்பது தெரிந்துவிடும். போன வாரம் சந்தித்து வெகு நாட்கள் ஆன நண்பர்கள் சிலரை சந்திக்க நேர்ந்தது. என்னுடைய நண்பர்களில் பெரும்பாலோனோர்கள் தேடலில் இருப்பவர்கள். வாழ்க்கை பற்றி,  மதங்களைப் பற்றி, பல்வேறு கொள்கைகள், சித்தாந்தங்களைப் பற்றி, கடவுளைப் பற்றி நாங்கள் வெகு நேரம் மணிக்கணக்காக முன்பெல்லாம் பேசுவோம். அது ஒரு மாதிரியான காலம். என்னவோ ஏதோ என்று பதறிப் பதறி எதையோ ஒன்றை நிறுவி எல்லாம் தெரியும் என்று சொல்லி கொள்ள முனைந்த ஒரு பருவம். ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் ஒரு சிறு மெதுவடையாய் நினைத்துக் கொண்டு காகிதத்தில் வைத்து என்னை பிழிந்த அறியாமை நிறைந்த காலம். தர்க்கத்தின் மூலம் சத்தியத்தை நிறுவ விரும்பிய தன்முனைப்பும், எதிராளியின் நம்பிக்கையினை உடைத்தெறிய முனைந்த பைத்தியக்காரத்தனமும் மிகுந்து கிடந்த நாட்கள் அவை.

ஓஷோ மெல்ல மெல்ல என்னுள் புகுந்து கொண்டிருந்த அந்த 2002 ஆம் ஆண்டில் தொடங்கி 2004 வரை தொடர்ச்சியாய் ஓஷோவைத்தான் அதிகம் படித்துக் கொண்டிருந்தேன். அதன் நீட்சியாகத்தான் தத்துவங்கள், இதிகாசங்கள், புராணங்கள், கொள்கைகள், இன்ன பிற நிறுவல்களை  விட்டு எல்லாம் என்னால் வெளியே வர முடிந்தது. சுதந்திரம் என்பது எதையோ எல்லையில்லாமல் பின்பற்றுவது அல்ல, பின்பற்ற ஒன்றுமே இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு எதையுமே பின்பற்றாமல் இருப்பது. ஒரு முழு சுழற்சிக்குப் பிறகு சற்றேறக்குறைய பத்து வருடங்களுக்கு பிறகு அதே நண்பர்களை சந்தித்த போது.....

ஏன் யாரையும் இப்போதெல்லாம் அடிக்கடி தொடர்பு கொள்வது கூட இல்லை என்று கேட்டார்கள். அவர்களின் உரிமைக்குப் பின்னால் இருந்தது பேரன்பு. தொடர்பு கொள்வதும் கொள்ளாததும் பிடித்தலிலும் பிடிக்காததிலுமா இருக்கிறது? ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு விதம். என் வாழ்க்கை என்னவிதம் என்றே எனக்குச் சொல்லத் தெரியாத ஒரு மனோநிலையில் நான் வாழ்ந்து கொண்டிருப்பதை எப்படி அவர்களுக்கு நான் சொல்வது. சிரித்தபடியே ஒன்றுமில்லை சும்மா அப்படீயே போய்க்கொண்டிருக்கிறது பொழுது என்று நான் சொன்னதற்கு மழுப்பாமல் பதில் சொல்லுங்கள் என்று நிர்ப்பந்க் கத்தியை என் கழுத்தில் உரிமையோடு வைத்தது நண்பர்கள் கூட்டம். நிஜமாகவே என்னிடம் பதில் ஏதும் இல்லை. சொல்ல ஒன்றுமே இல்லை என்பதை சொன்னால் யாரும் நம்புவதும் இல்லை. நிஜமாகவே யாருக்கான செய்தியும் என்னிடம் இல்லை. சமகால எந்த நிகழ்விலு ம்எனக்குப் பிடிப்பே கிடையாது என்றேன்...அவர்களிடம்.

இப்போது எந்த திசையில் பயணம்? ஓஷோதான் இன்னமுமா என்று பழைய கொட்டிலுக்குள் என்னை வா வா என்று அழைத்த நண்பரின் கையை ஆதரவாய் பற்றிக் கொண்டு சொன்னேன் நான் எதையுமே பின்பற்றுவது கிடையாது நண்பா இப்போது. எனக்கு மதமோ, சாதியோ, சித்தாந்தமோ, கொள்கையோ, கட்சியோ எதுவுமே கிடையாது. நான் வாழ்கிறேன். பிடித்ததை செய்யும் போதே அது பிடிக்காமல் போய்விடுகிறது. பிடிக்கவில்லை என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அது பிடிக்க ஆரம்பித்து விடுகிறது. குளிரில் நின்று கொண்டு வெயிலை நினைத்து ஏங்குவதும், வெயிலில் நின்று கொண்டு குளிரை நினைத்து ஏங்குவதும்தான் இங்கே அனேகரின் வாழ்க்கையாய் இருக்கிறது. எனக்கு எதுவும் வேண்டாம். ஒவ்வொரு நாளும் எந்த திசையில் என்னை விரட்டுகிறதோ அங்கே ஓடிக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள் சரி, நான் தவறு அல்லது நான் சரி நீங்கள் தவறு என்ற கோட்பாடுகளுக்குள்ளும் நான் வர விரும்பவில்லை. என்னை யாரோவாகவோ நீங்கள் பார்க்காதீர்கள். இதோ இந்த சரீரத்துக்குள் கொஞ்ச நாள் வழ்ந்து போக வந்த ஒரு ஜீவன் என்று மட்டும் கருதுங்கள். பிழைப்புக்காய், உயிர் வளர்க்க இந்த வேஷம். இந்த வேஷம் கொஞ்ச நாளில் மாறும் என்றேன். நேரம் கிடைக்கும் போது வாருங்கள் நீங்கள் குழம்பிப் போயிருக்கிறீர்கள் என்று சொன்ன அந்த நண்பர்கள் அனைவருமே நல்லவர்கள். அன்றும் தேடலில் இருந்தார்கள், இன்றும் தேடலில் இருக்கிறார்கள். நாளையும் தேடிக் கொண்டிருப்பார்கள். 

போதும். வயிறு நிரம்பி இருக்கிறது. மேய்ச்சல், மேய்ச்சல் என்று புற்களையும், முட்களையும், தழைகளையும் இழைகளையும் திகட்ட திகட்ட தின்றாகி விட்டது. நான் அசைபோட்டுக் கொண்டிருக்கிறேன் இப்போது. நல்லதோ, கெட்டதோ தின்றது எல்லாம் புத்தி என்னும் இரைப்பையில் கருத்துக்களாய் படிந்து கிடக்கிறது. மீண்டும் அவற்றை எல்லாம் நினைவுபடுத்தி, அசைபோடுவதுதான் வேலை இனி. எது, எது எப்படியோ அவற்றை அப்படியே அசைபோட்டுக் கூழாக்கி செரித்து எரித்து விட வேண்டும். ஒன்றும் இருக்கக் கூடாது மிச்சமாய். ஒரு நாள் ஏதோ ஒரு விறகு அடுக்கின் மீது தீக்கு இரையாகிப் போகும் இந்த உடல், அல்லது பூமியின் ஏதோ ஒரு பகுதியின் மண் அரித்து தின்றுவிடும். எல்லா நினைவுகளையும் அசைபோட்டுக் கொண்டே ஒரு கோயில் காளை மாதிரி சிவனே என்று சிவன் முன் நந்தியாய் நான் கிடக்கிறேன்.

ஒட்டு மொத்த பிரபஞ்சமும் என் முன் சிவனாய் விரிந்து கிடக்க....கேட்கவும் சொல்லவும் எதுவுமற்று வெறுமனே அசைபோட்டுக் கொண்டிருக்கிறேன்....இந்த வாழ்க்கையை வெறுமையாய் பார்த்தபடியே.....


எல்லாம் கொஞ்ச காலம்தான்...!



தேவா சுப்பையா...

புகைப்படம்உதவி: சசிதரனின் பேஸ்புக் பக்கம்







பேசுவது யார்...கடவுளா?

$
0
0

எந்த நுனியை பற்றிக்கொள்வது என்பது தான் தெரியவில்லை. ஏதோ ஒரு நுனியைப் பற்றிக்கொள்ள அது எங்கோ இழுத்துச் சென்று விடுகிறது. இப்போது கூட அப்படித்தான்... எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் ஏதோ ஒன்றை படைக்க விரும்பும் பிரயத்தனத்தோடு இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். அலாதியான விசயங்களை எல்லாம் வார்த்தைப் படுத்த முடியாது என்றாலும் அந்த அனுபவத்தை எப்படியாவது பதிவு செய்து வைத்து விட வேண்டும் என்ற விருப்பம் எப்போதும் ஒரு படைப்பாளிக்கு உண்டு. கனவுகளில் சில பூக்களை நான் காண்பதுண்டு. அந்த பூக்களையும் விவரிக்க முடியாத சில பிரதேசங்களையும், எப்போதும் யாரிடமாவது காட்ட வேண்டும் என்ற ஆவலை என்னால் தடுக்கவே முடிவதேயில்லை.

அதிகாலையில் எழுந்த கொண்ட பின் மெலிதாய் சில கனவுகள் வந்து என் மனக்கதவினைத் தட்டும். யாருமற்ற சமவெளியில் எந்த வித நோக்கமுமின்றி நான் நடந்து கொண்டிருந்த.. அந்த பொழுதுகள் சட்டென்று எனது புத்திக்குள் எட்டிப் பார்க்கும். சமகாலத்தோடு தொடர்பு இல்லாத அந்த பொழுதுகளையெல்லாம், நான் ஒரு எறும்பு இரை சேர்ப்பது போல மெல்ல மெல்ல சேர்த்து என் நினைவுகளுக்குள் பதுக்கி எடுத்து வைத்துக்கொள்வேன்.

எப்போதாவது ஏதாவது எழுத வேண்டும் என்று தோன்றும் பொழுது திட்டங்களில்லாமல்தான் என் பேனாவையும்,வெள்ளை காகிதத்தையும் எடுத்துக்கொண்டு நான் அமர்வதுண்டு. அப்போதெல்லாம் எனக்குள் பதுங்கிக் கிடக்கும் இத்தகைய உணர்வுகள் மெல்ல மெல்ல எழுந்து வீட்டிற்கு வந்த முகமறியாத, யாரென்றறியாத ஆணைக் கூச்சத்தோடு கதவுகளுக்கு பின் நின்று எட்டிப்பார்ப்பது போல.... ஒவ்வொன்றாய் எட்டிப்பார்க்கும்.

அவற்றிடம் என்னைப் யாரென்று அறிமுகம் செய்து மெல்ல மெல்ல என்னை பரிட்சயப்படுத்திக்கொண்டு அவைகளோடு மெல்ல,மெல்ல நான் சம்பாஷணையைத்  தொடங்கும் போது  அவை தயங்கித் தயங்கி கேள்விக்கு விடையறியாத மாணவனாய் குழப்பமான விழிகளோடு என்னுடன்பேச ஆரம்பிக்கும். இப்படித் தயங்கி தயங்கி தொடங்கும் தட்டுத் தடுமாறிய பரிமாறல்கள் ஒரு பேராசிரியரைப் போல போகப்போக மிகப்பெரிய விரிவுரையே எனக்கு நடத்தும்.  

இல்லாததில் இருந்து எல்லாமே தோன்றியதாமே...என்று என்னிடம் கேள்வி கேட்டு என் கற்பனையைக் கொஞ்சம் உசுப்பேத்தி விடும். அப்போது நட்சத்திரங்கள் இல்லாத வானத்தில் சிறகுகள் இல்லாமல் நான் மிதந்து கொண்டிருப்பேன். அது ஆழ்கடலில் மிதப்பதைப் போல இருக்கும். மெல்ல மெல்ல எட்டிச்சென்று ஏதோ ஒரு விஷயத்தை பிடித்து விடுவோம் என்ற கனவோடு நான் பிரக்ஞையற்று கற்பனையில் ஆழ்ந்திருப்பது உண்டு நீரில் மீன்கள் மிதப்பது போல. இது தான் இன்னதுதான் என்று அறிவதற்கு முன்பே ஏதோ ஒரு புறச் சூழ்நிலை என்னை வெளியே கொண்டு வந்து போட்டுவிடக்கூடாது என்ற கவனத்தோடு நான் பறப்பதாலேயே பல நேரங்களில் என் சிறகினை இழந்து விடுகின்றேன். 


இது இன்னது தான் என்று அறியாமல் எதையோ ஏதேதோ உணர்வுகளோடு பிரக்ஞை அற்று செய்யும்போது அது முழுமை ஆகிறது. யாருமற்ற ஒரு அருவிகள் நிறைந்த ஒரு மிகப்பெரிய கானகத்தினுள் நான் சென்று கொண்டிருந்தேன். காற்றின் சலசலப்பும், மரத்திலிருந்து விழும் சருகுகளின் சப்தமும், பறவைகளின் கீச்சொலியும் தாண்டி அங்கே வேறெதுவும் எனக்கு கேட்க வில்லை. அருவியொன்று தபதபவென்று விழுந்து கொண்டிருந்தது. இயற்கையில் தண்ணீர் பாறையில் மோதி தானே தனக்கு எழுதிக்கொள்ளும் கவிதைதான் அருவி என்பது. கவிதை என்பது எப்போதும் யாரோ யாருக்காகவோ எழுதுவதாக ஆகிவிடாது. மனிதர்கள் எழுதும் கவிதை மட்டும் அவர்களின் மனதைக் கடந்து யாருக்கோ எழுதுவது போல.. அவர்களிடமிருந்து பிரிந்து நின்று துவைதமாகிப் போகிறது.

இயற்கை அப்படி அல்ல அது தனக்கு தானே கவிதையை எழுதிக் கொள்கிறது. ஒரு மழை கவிதை என்று மனிதனுக்குப் படும். அந்தக் கவிதை அவனை உணர்ச்சியின் உச்சத்திற்கு கூட்டிச்சென்று ஏதேதோ உணர்வுகளை கிளறி விடவும் கூடச் செய்யலாம் ஆனால் ஒரு மழை ஒருபோதும் தன்னை வேறு யாருக்காகவும் வரைந்து  கொள்வதில்லை. மழை தனக்குத் தானே கவிதையாகிறது. இசை தனக்குத் தானே இசையாகிறது... ஒரு மெல்லிய தென்றல் காற்று தனக்குத்தானே தென்றலாகிக் கொள்கிறது இப்படித்தான் படைப்பு என்பது எதன் பொருட்டோ நிகழாத போது அது அதற்கே கவிதையாகிப் போகிறது. கவிதை என்பது திட்டமிடல் அல்ல. அது அந்தக் கணத்தின் வலி. அந்தக் கணத்தின் சந்த்தோசம். அனிச்சையாய் நிகழும் கூடல். அழுந்தப் பதியும் முத்தம். அடர் மெளனம். கேட்க முடியாத சப்தம். வரைமுறைகளற்ற இயக்கம். அது திமிர். அது கர்வம். அது கடவுள். மொத்தத்தில் அது எப்போது நிகழும் என்று யாருக்குமே தெரியாது. தென்றாலாய் வருடிக் கொண்டே பெரும்புயலாய் அது அடித்து தீர்க்கும். இன்பம் என்ற மானுடர் கர்வத்தின் மீது நரக நெருப்பாய் எரிந்த்து அடங்கமாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்யும். யாருக்காவும் அது நிகழ்வதில்லை.  

யாருக்காகவோ என்று ஏதோ ஒன்றை நாம் செய்யும் தருணத்தில் அங்கே எதிர்பார்ப்பு நிறைந்துவிடுகிறது. எதிர்பார்ப்பு திட்டமிடலைக் கொடுத்து விடுகிறது.. திட்டமிடல் வியாபாரத்தை புகுத்தி விடுகிறது.. வியாபாரம் பொருளாதாயத்தைக் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது. பொருள் மமதையைக் கொடுத்து அறியாமயில் தள்ளி விடுகிறது. அறியாமை ஞானத்திற்கு எதிர்பதம். ஞானம் பேரின்பத்தின் உச்சம். அறியாமை நரகம்...!

கவனமின்றி நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்த வரிகளும் கூட ஒரு புரவியில் ஏறி திசைகளற்று எங்கோ செல்லும் ஒரு போர்வீரனின் மனநிலையை ஒத்ததுதான். ஏதோ ஒரு போர் எங்கோ இருக்க வேண்டும்.. ஏதோ ஒரு யுத்தம். யார் எதிரி என்றே தெரியாது, எதற்காகப் போர் என்றும் தெரியாது.. ஆனால் போரிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இங்கே பயணத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது.

இலக்குகளின்று செல்லும் இந்த பயணம்..... கனவுகளுக்கு கூட்டிச் செல்லும். கனவுகளோடு கற்பனை வானத்தில் நாம் பறக்கலாம். ஆமாம்.. நீரில் மிதப்பதைப் போல...! புரியாமல் எதை எதையோ எழுதி வைத்து விட்டு அதைப் புரிந்துகொள்ள செய்யும் எல்லா முயற்சிகளையும் இந்த கட்டுரையிலும் நான் செய்து கொண்டிருக்கிறேன்..!

ஓ..கனவுகளே....
நீங்கள் கலைந்து போய் விடுங்கள்...
எனக்கான சித்திரத்தை...
நானே வரைந்து கொள்கிறேன்....
எனக்கான பாடலை நானே பாடிக்கொள்கிறேன்...!
என் பிரக்ஞை நிலைக்குள் 
வந்து விடாதீர்கள்...கற்பனைகளே..
அது வெண்ணிறமானது; அடர் கருப்பானது
ஒளியையும் இருளையும் அளவுகோலாக்கி
கணிக்க இயலாதது...!

இதோ நான் மரிக்கப் போகிறேன். கனவுகளோடு நான் சுற்றித் திரிந்ததெல்லாம் போதும். என் உடலை சர்வ நிச்சயமாய் நீங்கள் எரியூட்டிவிடுங்கள். என் வார்த்தைகளைத் தவிர நான் இருந்தேன் என்பதற்கான எந்த அடையாளத்தையும் நான் விட்டுச் செல்ல விரும்பவில்லை. என்னை எரியூட்டும் முன்பு என்னை ஒரு வெண்ணிற துணியால் மூடிவையுங்கள். எத்தனையோ வர்ணங்களில் எனக்குள் வட்டமிட்டுக் கொண்டிருக்கும் எண்ணங்கள் எல்லாம் அந்த வெண்மை நிறத்துக்குள் கரைந்து காணாமல் போகட்டும். தணலை மூட்டி அதி உக்கிரமாய் தீயை மூட்டி இந்த உடலை பஸ்மாக்கிப் போடும் உதவியை மட்டும் நீங்கள் செய்து விடுங்கள்.....காற்றில் கரைந்து எங்கெங்கோ பரவி சாம்பலாய் இந்த உடல் மறைந்து போகட்டும்....

நான் இப்போது பிரக்ஞை நிலையில்
தூளி உறங்கும் குழந்தையாய்
புரண்டு கொண்டிருக்கிறேன்.... 
ஓ...பிரபஞ்சமே....
நீ தாலாட்டை நிறுத்தி விடாதே....!



தேவா சுப்பையா...









MH 370 ஒரு அவிழ்க்க முடியாத ரகசியம்...!

$
0
0

ஒவ்வொரு முறை நண்பர்களையும், உறவுகளையும் சந்தித்திப் பிரியும் போது இன்முகத்தோடே செல்ல வேண்டுமென்று என் அப்பா அடிக்கடி கூறுவார். நிதர்சனமில்லாத இந்த வாழ்க்கையில் எது வேண்டுமானலும் அடுத்த கணம் நிகழலாம் என்ற ஒரே ஒரு உண்மையைத் தவிர வேறு பெரிய உண்மை ஒன்றும் கிடையாது. 

எம்.எச் 370 விமானத்தில் பயணித்தது 239 வெவ்வேறு வாழ்க்கைகள். அண்ணன்கள், தம்பிகள், அக்காக்கள், பெரியப்பாக்கள், சித்தப்பாக்கள், மகள்கள், மகன்கள், கணவன்கள், மனைவிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள், பணியாளர்கள், என்று பல்வேறு அடையாளங்களோடு அதில் பயணித்தது வாழ்க்கை. உற்சாகமாய் வழியனுப்பி வைத்தது எத்தனை உறவுகளோ? உற்சாகமாய் வரவேற்க காத்திருந்தது எத்தனை உறவுகளோ? எத்தனை பேரின் சந்தோசங்கள் இன்று நிலைகுலைந்து போயிருக்கிறது என்று எண்ணிப் பார்க்கவே முடியாத ஒரு பெருந்துயரம் இது.

ஒவ்வொரு வாக்குறுதிகள் கொடுக்கும் போதும் குறிப்பாக ஒவ்வொருமுறை விமானத்தில் ஏறும் போதும் இன்ஷா அல்லாஹ் என்ற வார்த்தை எனக்குள் அசரீரியாய் கேட்டுக் கொண்டிருக்கும். பால்யத்திலிருந்து நான் வளர்ந்த, என்னை வளர்த்த சமூகம் அது ஆதலால் இஸ்லாத்தின் மீது அதிக பிடிப்புகள் எனக்கு உண்டு. சாந்தியையும் சமாதனத்தையும் பார்ப்பவர் மீதெல்லாம் நிலவ வேண்டிக்கொள்ளும் பெருங்கருணை கொண்ட மார்க்கம் அது. இன்ஷா அல்லாஹ் என்ற வார்த்தையின் பொருளை  மனிதர்கள் உணர்ந்து கொள்ள இந்த நிகழ்வின் மூலம் இயற்கை கடுமையான போதனையை நடத்தி இருக்கிறது. அதி நவீனமான போயிங் 777 எனப்படும் ராட்ஷச  விமானம்தான் அது. தொழில்நுட்பபெருக்கம் நிறைந்த இந்த வாழ்க்கையில் மில்லி மீட்டர் மில்லி மீட்டராய் பிரித்து மேய்ந்து தவறுகள் எதுவும் இல்லாமல், உறுதியான இறுதி அறிவிப்பு விமானக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து வந்த பிறகுதான் இந்த உலகத்தில் அத்தனை விமான நிலையங்களிலும் இருந்து விமானங்கள் பறக்கவே ஆரம்பிக்கின்றன....

விமானம் பறக்க ஆரம்பித்து அது இலக்கைச் சென்று அடையும் வரையில் தரையிலிருக்கும் கட்டுப்பாட்டு அறைகளைத் தொடர்பு கொண்டிருக்கும் வகையில் எல்லா நவீன அம்சங்களும் இப்போது உண்டு. பிறகு எங்கே நிகழ்ந்தது பிழை? எப்படி மறைந்தது விமானம்? எங்கே கிடக்கிறது அதன் உடைந்த பாகங்கள்....? கடலிலா? காடுகளிலா? கட்டாந்தரையிலா? மலைகளுக்கு நடுவா? அல்லது மொத்தமாய் எங்கே போனது அந்த விமானம்? எங்கே போயினர் அந்த விமானத்தில் பயணித்த அத்தனை பேரும்....? கேள்விகளுக்கு விடை தெரிந்தால் மட்டுமே திருப்தியடைந்து கொள்ளும் மனித மனங்கள் குழம்பித்தவித்தன. பலவிதமான அனுமானச் செய்திகளை வெளியிட்டும் கேட்டும் திருப்திப்பட்டுக் கொண்டிருந்தன. உலக நாடுகள் எல்லாம் இந்த பூமியைத் தங்கள் சக்திக்கு மீறி சல்லடை போட்டு சலித்தும் பார்த்துவிட்டன....

ஆனால்...எம்.எச் 370 என்னும் அந்த விமானத்தைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

கடந்த சில வாரங்களாய் இந்த விமானம் பற்றிய பல அனுமானச் செய்திகளை எந்த உணர்ச்சியுமின்றி திக்பிரமை பிடித்தது போல கேட்டுக் கொண்டிருந்த விமானத்தில் பயணித்தவர்களின் உறவுகள் வெடித்து அழும்படியான செய்தியை மலேசியப் பிரதமர் நேற்று வெளியிட்டிருக்கிறார். இந்தியப் பெருங்கடலில் எம்.எச். 370 விபத்துக்குள்ளாகி மூழ்கி மறைந்து விட்டதென்றும் அதில் பயணித்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் அதிகாரப்பூர்வமாய் அறிவித்ததும் அது இந்த உலகத்தின் மீதே இடியை இறக்கியது போலத்தான் இருந்தது. அறிவியல் இந்த பிரபஞ்சத்தின் கால் தூசியைக் கூட தொட்டுவிட முடியாது என்பதுதான் இதன் மூலம் நிரூபணமாகி இருக்கிறது.


மலேசியப் பிரதமர் இப்போது வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ஆதாரப்பூர்வமானதோ, அறிவியல் ரீதியானதோ அல்லது ஆராய்ச்சியின் முடிவோ அல்ல அது அனுமானத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட முடிவு. நம் வாழ்க்கையின் பெரும்பகுதி இப்படித்தான் இருக்கிறது நண்பர்களே...! எல்லாவற்றுக்கும் ஆதரத்தை தேடும் மனித மனம் பல இடங்களில் திகைத்துப் போய் விடையற்று நின்று போகையில்தான் எல்லாம் வல்ல பெருஞ்சக்தியின் திருவிளையாடல் எவ்வளவு வலிமையானது என்பது மெலிதாய் பிடிபட ஆரம்பிக்கிறது. சந்திரனுக்கும், செவ்வாய்கிரகத்துக்குப் போய் ஆராய்ச்சி செய்யும் அகில உலக விஞ்ஞான மூளைகள் இந்த பூமிக்குள் எங்கோ கிடக்கும் ஒருவிமானத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறிப்போய் நிற்பதைப் பார்க்கும் போது அறிவியலை மையமாக வைத்து பிரபஞ்ச பெருஞ்சக்தியைப் பற்றி வாதிட்டுக் கொண்டிருப்பவர்கள் எவ்வளவு பெரிய அறியாமையில் இருக்கிறார்கள் என்றும் உணரமுடிகிறது.

மனித மூளைகளால் எட்டமுடியாத இடத்திற்கு எல்லாம் அவனின் உள்ளுணர்வுகள் பயணிக்கும். உள்ளுணர்வு என்பது விஞ்ஞானம் அல்ல அது மெய்ஞானம். உள்ளுணர்வு தெளிவாய் வேலை செய்ய நான் இன்னார் என்ற அகங்காரம் அற்ற உள்பார்வை வேண்டும். பார்க்கும் பொருளாய் இருக்கும் போது பார்வை தேவையில்லாமலேயே பல விசயங்களை உணர முடியும். அதாவது இருந்ததனை இருந்தது போல் இருந்து பார்க்கும் ஆன்மீக டெக்னிகாலிட்டியை அறிவியல் உணர்ந்து அதன் கூடவே பயணிக்க இனி பழகிக் கொள்ள வேண்டும். 

வாழ்வின் நிதர்சனமற்ற தன்மையை அறிவியலார், நவீனத்தின் உதவியோடு மானுடர்களுக்கு அதை ஒரு பெருஞ்செய்தியாய் இடைவிடாது அறிவித்துக் கொண்டே இருக்க வேண்டும். முடநம்பிக்கைகளுக்குள் மனிதர் விழுந்து கடவுள் பெயரால் போரிட்டுக் கொள்ளாத, கொலைகள் செய்யாத, பிளவுபட்டு நிற்காத சமூகத்தை உருவாக்க அரசுகளும் முயல வேண்டும். திருக்குர்-ஆனின் ஆயத்து ஒன்றில் வருவது போல இந்த பூமி எங்கும் ஓராயிரம் அத்தாட்சிகளை பேரிறை விட்டுவைத்தும், புதிது புதிதாய் சூழல்களின் மூலம் உருவாக்கிக் கொண்டும் இருக்கிறது....

விடியலில் எழுந்து உணவு உண்டு விட்டு மதிய உணவினை கண்டிப்பாய் நான் உண்ணுவேன் என்று ஒரு மனிதன் எண்ணிக் கொள்ளலாம் அது அவனது நம்பிக்கை. நம்பிக்கைகள் ஒரு புறமும் சாத்தியங்கள் மறுபுறமும் நிறைந்து கிடக்கும் இவ்வாழ்க்கையில் சாத்தியக்கூறுகளே எப்போதும் வெல்கின்றன. அப்படியாய் சாத்தியக்கூறுகள் வெல்லும் போதெல்லாம் அதை தனது நம்பிக்கை, விடாமுயற்சி, திட்டமிடல் என்று மனிதன் விளங்கிக் கொள்கிறான். எத்தனையோ கனவுகளோடு எம்.எச் 370 விமானத்தில் பயணித்தவர்கள் விமானத்தோடு கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என்ற அனுமானத்தோடு இந்த நிகழ்வினை முடிவினுக்கு கொண்டு வர மலேசியா முயன்றிருக்கிறது. அதிக பயணிகள் தங்களின் நாட்டவராய் இருப்பதால் இந்த மலேசிய அறிவிப்புக்கு....சீனா ஆதராம் கேட்டிருக்கிறது.....


எது எப்படியோ கண்களால் காணப்படாதவரை, விமானத்தின் பாகங்களை பரிசோதித்து அறிந்து அது எம்.எச் 370 என்னும் அலுமினியப் பறவைதான் என்று அறிவியலார் உறுதி செய்யாதவரை அந்த விமானத்தின் பயணிகள் அத்தனை பேரும் நித்திய ஜீவன்களாய் இந்த பூமில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கப் போகிறார்கள். ஏதோ ஒரு காலத்தில் விமானம் பற்றிய ரகசியத்தை இந்த பூமி வாய் திறந்து அறிவிக்கக் கூடும் அன்று அறிவியல் சில மைக்ரோ மில்லி மீட்டர்கள் முன்னேறியும் இருக்கக் கூடும்....

அது வரையிலும் அதற்குப் பிறகும்.....இந்த மானுடச் சமூகம் புரிந்து கொள்ள இயலாத இந்த வாழ்க்கை விளையாட்டின் அமானுஷ்யத் தன்மையை மறந்து விட்டு...நான் யார் தெரியுமா என்று மார் தட்டி கொக்கரித்துக் கொண்டே ஜனித்து மரித்து, மரித்து ஜனித்துக் கொண்டே இருக்கும்...!



தேவா சுப்பையா...








யாத்திரை....!

$
0
0

கடும் சூடு நிறைந்த பொட்டல் வெளி அது. சுற்றிலும் செம்மண் சரளைக் கற்களும் ஆங்காங்கே முட்கள் நிரம்பிய கருவேலம் மரங்களும், சப்பாத்திக் கள்ளிகளும் மட்டுமே நிரம்பிக் கிடந்தன. அந்த புளிய மரத்தின் கீழ் நான் நின்று கொண்டிருந்தேன். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இரண்டு மண் மேடுகள் சுற்றிலும் செங்கல் வைத்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இடது புறம் அப்பத்தாவும் வலதுபுறம் தாத்தாவும் அங்கேதான் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் வசித்த வீடு எனக்குப் பின்னால் கொஞ்ச தூரத்தில் அதுவும் கண்ணெதிரேயே தெரிந்தது. எனக்கு முன்னால் அவர்களின் சமாதியும், பின்னால் அவர்கள் வாழ்ந்த வீடும், நடுவில் நானும்..... சுற்றிலும் இருந்த பனைமரங்கள் அனலாய் வீசிய காற்றோடு ஏதோ பேசிக்கொண்டிருந்தன. தாத்தா நட்டு வைத்த மரங்கள்தான் அவை அத்தனையும்...

வானம் பார்த்த பூமியின் புஞ்சைக்காடு பார்ப்பதற்கு அவ்வளவு சுகமாய் ஒன்றும் இருக்காது. பயன்படுத்தாத தரிசு நிலங்கள் தோறும் வகை தொகை இல்லாமல் முட்களும், கரம்பைகளும் பெயர் தெரியாத பல செடிகளும் இஷ்டப்படி வளர்ந்து கிடக்கும். எது வருமோ அது வளரும். என் பூர்வீக வீட்டுக்கு பின் இருக்கும் இந்த புஞ்சைக் காட்டில் முன்பு எப்போதோ கடலை, எள், மிளகாய் எல்லாம் பயிரிட்டுக் கொண்டிருந்ததை அடிக்கடி அப்பத்தா சொல்லிக் கொண்டிருந்த 1990களில் மனதால் கூட நாங்கள் அந்த ஊரில் வசிக்காமல் அப்பாவின் வேலை நிமித்தம் இடம் பெயர்ந்திருந்த ஊரின் வாழ்க்கைக்குள் அகப்பட்டுக் கிடந்தோம். அப்பத்தாவிற்கு மீண்டும் பழைய வாழ்க்கை திரும்பாதா என்ற ஏக்கம் நிறைய இருந்தது. வீடு விட்டுப் போன எல்லா பிள்ளைகளும் மீண்டும் கிராமத்து வீட்டுக்கு வந்து விடமாட்டார்களா என்று கடைசி வரை எதிர்பார்த்து தோற்றுப் போனாள் அவள்.  தாத்தா சாகும் வரை செய்து கொண்டிருந்த அரைகுறை விவசாயம் தாத்தாவிற்குப் பிறகு பங்குக்கு விடப்பட்டு பங்கு போடுபவர் கொடுக்கும் நெல் ஏனோ தானோ என்று வீடு வந்து சேர்ந்து கொண்டிருந்தது. அதுவும் கொஞ்ச காலம்தான்....

தொடர்ச்சியாய் மழை இல்லாமல் போனது. மழை இல்லாமல் போனதால் அங்கிருந்த மனிதர்கள் வெவ்வேறு வேலைகளுக்காய் நகரங்களைத் தேடி ஓடினார்கள். அப்படியாய் ஆட்கள் இடம் பெயர்ந்ததால் அரைகுறை விவசாயம் செய்யவும் ஆட்கள் கிடைக்காமல் போனது. வேலைக்கு ஆட்கள் வந்த காலம் போய் என் நிலத்துக்கு நீ வந்து வேலை பார் உன் நிலத்துக்கு நான் வந்து வேலை பார்க்கிறேன் என்ற நிலை ஏற்பட்டதால், ஆட்களை வைத்து வேலை ஏவி விவசாயம் பார்த்தவர்களுக்கு அந்த சூழல் வசதியில்லாமல் போனது. எல்லா நிலங்களும் பங்குக்கு, பங்குக்கு என்று விடப்பட்டு பங்குக்கு எடுத்தவரால் விவசாயம் செய்ய வேலை ஆட்கள் இல்லாமலும், மழை இல்லாமலும் நிறைய நிலங்கள் கைவிடப்பட்டன. ஐப்பசி கார்த்திகையில் பெய்யும் மழையில் கண்மாய் கொஞ்சமாவது நிறையும். நிறைந்த கண்மாயில் பாதியை நிலம் உறிஞ்சிக் குடித்து விடும், மீதியை சித்திரை வைகாசிக்கு முன்பே சூரியனின் உஷ்ணம் எடுத்துக் கொண்டுவிடும் விளைவு பாலம் பாலமாய் வெடித்த தரையோடு கண்மாய் சூம்பிப் போய் கிடக்கும்....


அது எல்லாம் ஒரு காலம். வானம் பார்த்த பூமி இது என்று கொஞ்சமாவது கரிசனத்தோடு மழை பெய்த காலம்  எல்லாம் மலை ஏறிப் போய்விட்டது இப்போது. ஆற்று பாசனம் என்ற பெயரில் எப்போதாவது வந்து தொண்டை நனைத்து விட்டுப் போகும் வைகைக்கு என்ன ஆயிற்று என்று எப்படி அந்த குக்கிராமத்து மனிதர்களுக்குத் தெரியும்...? 

என் பூர்வீக வீட்டில் யாரும் இல்லை இப்போது. அது பூட்டிக் கிடக்கிறது. வீட்டிற்குள் கொஞ்ச நேரம் சுற்றி வரலாம் என்று வீடு நோக்கித் திரும்பினேன். என் சட்டையைப் பிடித்து இழுத்த கருவேலம் முள் ஒன்று ஏனோ அப்பத்தா என் முகவாய்க் கட்டையை பிடித்து முன்பொரு நாள் திருப்பியதை ஞாபகப்படுத்தியது.வெள்ளைப் பருத்தி வேட்டியும், தலை வழியே மாட்டும் வெள்ளை முழுக்கை சட்டையுமாய் நெற்றி நிறைய விபூதியோடு தாத்தாவின் வாசம் எனக்கு புத்திக்குள் பரவியது. தாத்தாவிற்கு ஏறு நெற்றி. அப்பாவுக்கும் அப்படித்தான், எனக்கும் அப்படித்தான். நெற்றி அகலமாய் இருக்கணும்பா அப்பத்தான் கை நிறைய துண்ணூறு எடுத்து பூசிக்க முடியும் என்று அம்மா அடிக்கடி என்னிடம் சொல்லும். ஏறு நெற்றி விபூதி பூச வசதியானது. எனக்கு எட்டு வயதானபோது தாத்தா இறந்து போய்விட்டார் என்றாலும்...

எனக்கு அவரை நன்றாய் நினைவில் இருக்கிறது இப்போதும். ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்தை எனக்கு அவர்தான் சொல்லிக்கொடுத்தார். அந்த மந்திரத்தை முதலில் அவர் சொல்லக் கேட்டதுதான் இப்போதும் என் நினைவில் இருக்கிறது. என்ன ஏது என்று தெரிந்தும், தெரியாமலும் தலைமுறைகளாய் அந்த மந்திரம் இடைவிடாது எங்களால் உச்சரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. வீட்டுக்குள் போய்விட்டு வருகிறேன் என்று ஏனோ அப்பத்தாவின் சமாதியிடம் சொன்னேன். அப்பத்தாவிடம் சொன்னால் தாத்தாவிடம் சொன்னது போல....

அப்பத்தாவை கடைசி காலம் வரை தாத்தா அதட்டிக் கொண்டேதான் இருப்பார். சிவகாமி என்னும் அப்பாத்தாவின் பெயரை அவர் சிவந்தாயி என்றுதான் கூப்பிடுவார். அதட்டி அதட்டி அவர் பேசுவதும் அப்பத்தா அவருக்குப் பணிந்து பணிந்து ஒடுவதும் என்று எல்லாமே ஒரு வித நடிப்புதான். அவர்களுக்குள் அன்பு நிறையவே இருந்தது. அவர் அதட்டுவதைப் போல அப்பத்தாவுக்கு அடங்குவார், அப்பத்தா அடங்குவது போல அவரை ஆள்வார். பொதுவாக கணவன் மனைவிக்கிடையே இப்படி ஒரு கட்டமைப்பை  நம் சமூகம் திட்டமிட்டே உருவாக்கி வைத்திருக்கிறது. மேலோட்டமாக நம் சமூகக் கட்டமைப்பை பார்த்தால் பெண்களை ஆண்கள் அடக்கி ஆள்வது போலத் தோன்றும் நிஜத்தில் அது உல்டாவாகத்தான் பெரும்பாலும் இருக்கிறது. இது நம் சமூகத்தை உணர்வுப்பூர்வமாய் ஆழ்ந்து உற்று நோக்கினால் விளங்கும். இது போக விதிவிலக்கான விசயங்கள் இந்த உலகின் எல்லா மூலைகளிலும் இருக்கத்தான் செய்கின்றன.

கொல்லைக் கதவினைத் திறந்து வீட்டிற்குள் நுழைந்தேன். மனிதர் வசிக்காத இடங்களுக்குள் எல்லாம் ஒருவிதமான அமானுஷ்யமான தெய்வீகத்தன்மை உட்புகுந்து விடுவதாகவே நான் கருதுகிறேன். வீட்டிற்குள் இருந்த பேரமைதி மனசை ஏதோ செய்தது. எத்தனையோ பேருக்கு சமைத்துப் போட்ட அந்த அடுப்படியில் மண் அடுப்புகள் இன்னும் ஏழு தலைமுறையின் பசியைத் தீர்க்க நாங்கள் தயார் எங்கே போனீர்கள் மனிதர்களே என்று என்னைப் பார்த்து ஏளனமாய் சிரிப்பதைப் போல இருந்தது. ஓடு வேய்ந்த அந்த வீட்டின் ஒவ்வொரு பனைமர உத்திரங்களும் தாத்தா வைத்த மரங்கள்தானாம். ஓடுகளும், செங்கல்லும் நாட்டரசன் கோட்டை செட்டியார்களிடம் சொல்லி வைத்து வாங்கியதாம், இது போக கண்ணாடிகளும், ஜன்னல் கதவு, அலமாரி பலகைகளும் பர்மா தேக்கில் செய்தது என்று அடிக்கடி அப்பத்தா சொல்லும். சுவற்றில் கை வைத்து தேய்த்துப் பார்த்தேன் சில்லென்று இருந்தது. சுவற்றில் சாந்து பூசி கடைசியில் வளவளப்பிற்கு முட்டையின் வெள்ளைக்கருவை ஊற்றி தேய்ப்பார்களாம்....

அடுப்படிக்கு அப்புறம் ஒரு இரண்டாம் கட்டு இருக்கிறது அதன் இரண்டு புறமும் இரண்டு பெரிய அறைகள். ஒற்றைப் பலகையால் ஆன கனமான கதவு அது. இரண்டு அறைகளுக்குள்ளும் இப்போதும் விளக்கு இல்லையென்றால் உச்சிப் பகலில் கூட நடுநிசியைப் போல இருட்டாயிருக்கும். எனக்கு விபரம் தெரிந்த பின்புதான் கரண்ட் இழுத்தோம் வீட்டிற்கு அதுவரையில் அரிக்கேன் விளக்குதான். பழைய பாட்டில்களுக்குள் சீமை எண்ணையை ஊற்றி அதன் மூடியில் ஓட்டை போட்டு சீலைத் துணியை திரியாக்கி காண்டா விளக்கு செய்யும் வேலையை அப்பத்தாதான் சொல்லிக் கொடுத்ததாம் அந்த கிராமத்துக்கு. வீடு முழுதும் வேப்பம் பலகைகளை மேலே வைத்து அடைத்திருப்பதால் வீடுஎப்போதும் குளுமையாகவே இருக்கும்.

யாருமில்லாத அந்த வீட்டிற்குள் தனியாய் நின்று கொண்டிருந்தேன். எங்கே எல்லோரும் போனார்கள்...? எங்கே இங்கே நிலை கொண்டிருந்த வாழ்க்கை? இரவும் பகலும் நிரம்பி வழிந்த வீடு எப்படி வெறிச்சோடிப் போனது? யோசித்துக் கொண்டே ஹாலின் ஓரத்தில் இருந்த எச்சிப் பலிங்கானைப் பார்த்தேன். தாத்தா வெற்றிலை போட்டு துப்ப அதில் மண் நிரப்பிக் கொடுப்பார்கள். சிறுவயதில் பார்த்திருக்கிறேன். பானைகள். சட்டிகள், அலுமினியம், மண் மற்றும் பித்தளைப் பாத்திரங்கள், அண்டாக்கள், ட்ரங்க் பெட்டிகள், குளுமை எனப்படும் நெல் கொட்டும் பத்தாயம், எல்லா சுவாமிகளும் நிறைந்த பூஜை அறை என்று மெளனமாய் ஏதேதோ கதைகள் சொன்ன வீடு என் காலத்திற்குப் பிறகு அதன் பழமையைக் நினைவு கூறக் கூட ஆளில்லாமல் போகப்போகிறது. 

தாத்தாவின் புகைப்படங்கள் நிறைய வீட்டில் இருக்கிறது. அவர் அப்பத்தா கூட இருந்து எடுத்த புகைப்படத்தில் எல்லாம் கர்ண கம்பீரமாய் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மனைவி பக்கத்தில் நின்றால் என்ன அவளை சட்டை எல்லாம் நான் செய்வது இல்லை என்பது போல ஒரு அலட்சியமான பார்வையோடு அவரும், எனக்கு எல்லாமே அவர்தான் என்பது போல அப்பத்தாவும் ஒரு புகைப்படத்தில்  நின்று கொண்டிந்தார்கள். கண்டாங்கி சேலையோடு அள்ளிக் கட்டிய தலையோடு காதில் தொங்கட்டான், மூக்கில் புல்லாக்கு, மூக்குத்தி, அழுத்தம் திருத்தமாய் விபூதி, குங்குமம் என்று அப்பத்தா தான் எவ்வளவு அழகு. அப்பத்தா இளமையில் அவ்வளவு அழகாய் இருந்திறது. அத்தனை உயரம் இல்லை என்றாலும் இரண்டு ஆளை தனியாய் நின்று அடித்துப் போடுமளவிற்கு கட்டுமஸ்தான உடல்....

அப்பாவின் இளவயது புகைப்படம் அத்தனையும் என் மூத்த தம்பியைப் போலவே இருந்தது. முறுக்கிய மீசையோடு அப்பாவும் அம்மாவும் இருந்த அந்த புகைப்படம் அவர்கள் திருமணம் முடிந்த பின்பு எடுத்ததாய் இருக்க வேண்டும். அந்தக் கால சிவாஜியும் சரோஜாதேவியும் சட்டென்று என் நினைவுக்கு வந்தார்கள்.... அத்தைகள், மாமாக்கள், சித்தப்பாக்கள், அத்தை பிள்ளைகள், மருமகன்கள்.... என்று எல்லா உறவுகளும் ஹால் சுவரெங்கும் புகைப்படங்களில்....

தாத்தா எப்போதும் படுக்கும் இடத்தில் போய் அமர்ந்து கொண்டேன். இப்போது தாத்தாவும் இல்லை, அப்பத்தாவும் இல்லை, அப்பாவும் இல்லை....

ஆதாரமில்லாத ஆதாரத்தோடு அந்தரத்தில் நிற்பது போலத் தோன்றியது

சுவற்றில் கன்னத்தை வைத்து அழுத்திக் கொண்டேன். சில்லென்று சுவர் என் கன்னத்தில் பட அந்த வீடு என்னை அணைத்துக் கொண்டது போலத் தான் உணர்ந்தேன். வாழ்க்கை சுழற்சி... இதுதான் நான் என்னைத் தெரிகிறதா என்று என்னை பார்த்து கேட்டு விட்டு எனக்காய் காத்திருப்பது போலத் தோன்றியது....

நான் தேம்பி அழுது கொண்டிருந்தேன்.....

காலம் சரியாய் என்னை விட்டால் எங்கே நான் இறக்க வேண்டும் என்று மட்டும் புரிந்தது எனக்கு.

அப்பத்தா, தாத்தாவின் சமாதிக்கு போக எழுந்தேன்.... அந்த மண்ணுக்குள் புதைந்து கொள்ளும் வரம் மட்டும் காலம் எனக்கு கொடுத்தால் போதுமென்ற எண்ணத்தோடு கால்களை அழுந்தப் பதித்து நடந்து கொண்டிருந்தேன்....!

பாசம் உலாவிய கண்களும் எங்கே? 
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே 

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க...! (வைரமுத்து..)




தேவா சுப்பையா...





கலையாத கனவுகள் - 1

$
0
0
மணியைப் பார்த்தான் செல்வம்.. மூன்றரை ஆக இன்னும் பத்து நிமிடம் இருந்தது. நாலே முக்காலுக்கு மதுக்கூர்  வந்துச்சுன்னா பஸ்ஸ்டாண்ட் போய் அப்புறம் ஊரை விட்டு கிளம்ப எப்டியும் ஒரு அஞ்சு அஞ்சே காலாச்சும் ஆயிடும். அஞ்சே காலுக்கு மதுக்கூரை விட்டுக் கிளம்பினுச்சுன்னா படப்பைக்காடு, கண்டியங்காடு, வேப்பங்குளம் பண்ணை, தளிக்கோட்டை பாலத்துக்கு ஒரு அஞ்சே முக்காலுக்கு வந்து சேரும். முத்துப்பேட்டையில இருந்து வர்ற வண்டி பெருமகளூர் போறவரைக்கும் கூட்டம் அதிகமாத்தான் இருக்கும். எப்டிப் பார்த்தாலும் ஒரு ஆறு இல்ல ஆறே காலுக்கு பட்டுக்கோட்டை மைனர் பில்டிங்கிட்ட வந்துடும் சீக்கிரம் வேலைய முடிக்கணும்.....

யோசித்தபடியே பைல்களுக்குள் மூழ்கிக்கிடந்த செல்வம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கணக்கர். மனைவியையும் மகனையும் தீபாவளிக்கு ஜவுளி எடுக்க நாலேமுக்கால் பேருந்து ராஜ்கலாவில் வரச்சொல்லியிருந்தவர் சீக்கிரம் வேலையை முடிக்க பரபரத்துக் கொண்டிருந்தார். மதுக்கூர் தஞ்சாவூர் மாவட்டத்திலிருக்கும் ஒரு பேரூராட்சி. மதுக்கூர் ஜனத்தின் எல்லா தேவைகளையும் பெரும்பாலும் தீர்த்து வைப்பது பட்டுக்கோட்டைதான். இப்போதெல்லாம் பட்டுக்கோட்டை தாண்டி தஞ்சாவூர் தாண்டி திருச்சி வரை துணி எடுக்கச் செல்லும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பூம்புகார், சில்க் ஹவுஸ், ராஜா சில்க் பேலஸ், மகாராணி இவைதான் பட்டுக்கோட்டையின் பிரபலமான கடைகள்.. மீதி அத்தனை கடைகளும் அதற்கு பிறகு வந்ததுதான்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ராசி. அந்த ராசியை அனுசரித்தே ஜவுளிக் கடைகளின் கூட்டமும் நிரம்பி வழியும். எப்போது துணி எடுக்கப் போனாலும் செல்வம் போவது பூம்புகாருக்குத்தான். கடை முதாலாளி ரொம்ப ராசிக்காரர் என்று செல்வம் தன்னுடைய சக ஊழியர்களிடம் சொல்வதும் உண்டு. என்ன சார் பெரிய துணிப் பை எதுவும் கிடையாதா என்று புதுத்துணியைப் போட்டுக் கொடுக்கும் பிளாஸ்டிக் பையை கண்களால் அளவெடுத்துக் கொண்டே முதலாளியைப் பார்ப்பார்....

பேக்கிங் செய்து கொடுப்பது ஒரு இடம். முதலாளி அமர்ந்திருப்பது இன்னொரு இடம்... செல்வத்தின் குரலைக் கேட்டதும் பதறியபடியே முதலாளி ஏய்....தம்பி சாருக்கு பெரிய பையா எடுத்துக் கொடு என்று அதட்டல் போட்டபடியே கல்லாப்பெட்டியில் இருந்து இரண்டு மூன்று மணி பர்ஸ்களை எடுத்து செல்வத்திடம் கொடுப்பார். துணியை நியாயமான விலைக்கு வாங்குகிறானோ  இல்லையோ செல்வத்துக்கு இப்படி துணிப்பையும்,லெதர் பேக்கும், மணிப்பர்ஸும் வாங்கினால்தான் துணி எடுத்த திருப்தியே கிடைக்கும்....! கல்யாணம், காதுகுத்து, எல்லாத்துக்கும் பூம்புகார் லெதர் பேக் செல்வத்தின் கக்கத்தில் இருக்கும். சாமான் செட்டுக்கள் எல்லாம் பூம்புகார் மஞ்சள் பையில் இருக்கும். 

ஒழுங்கா மரியாதையா இந்த வாலுப் பைய பாபு சுமதி கூட வருவானா..? மூக்கில் தொங்கிக் கொண்டிருந்த கண்ணாடி வழியே பைலைப் பார்த்துக் கொண்டே வாயிலிருக்கும் வெற்றிலை எச்சில் பைலில் விழுந்து விடாமல் லாவகமாய் முகவாயைத் தூக்கிக் கொண்டு தன் 10 வயது மகனைப் பற்றி மெலிதான கவலையோடு யோசித்துக் கொண்டிருந்தான் செல்வம்.

                                                                         ***


ஒழுங்கா அளடா..... நான் கேட்டது நூறு. அடிச்ச இடத்துல இருந்து குழி கிட்ட சரியா 100 வருது தண்ணி எல்லாம் ஒண்ணும் குடிக்கல... ஏம்பி... என்ன ஏய்க்கிறியளா.... எங்களுக்கும் கிட்டிப்புல்லு விளையாட தெரியும். பாபு சுரேஷோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தான். ஓய்....புளுகு மூட்டை இங்க பாரு மறுபடி அளக்குறேன்.... சொல்லியபடியே கிட்டிப்புல் விழுந்து கிடந்த இடத்திலிருந்து கிட்டிக் கம்பால் சுரேஷ் அளக்க ஆரம்பித்திருந்தான்....95...96....97...98.....99 ஓய்....பாத்தீல்ல 100க்கு கிட்டிக் கம்பு குழிக்குள்ள போவுது....

சுற்றி இருந்த குட்டி நீதிபதிகள் தீர்ப்பினை சுரேஷ்க்கு சாதகமாக்க....

10 சூ... பத்து வாளக்கா புடிடா.... தம்பி எங்க போய் கட்டக் கடைசில கிட்டிப்புல்லு உழுவுதுதோ அங்க இருந்து மூச்சு விடாம கத்திக்கிட்டே வரணும் சூ...ஊஊஊஊஊஊஊஊஉன்னு.... இடையில வுட்ட அங்க இருந்து மறுபடி அடிப்பேன்.....

தலையெல்லாம் கலைந்து போய் முகம் எல்லாம் வியர்க்க, முட்டிக்கால் வரை இருந்த புழுதியோடு.. சரி தம்பி.... தோத்தா தோத்துட்டுப் போறேன்...நீங்க சரியா அளந்தா நூறு வரும் ஆனா இருக்கட்டும்....சூ நான் புடிக்கிறேண்டா...நான் எல்லாம் ரஜினியாந்து மாதிரி....கெட்டவைங்கள எதித்து நின்னு ஜெயிப்போம்...

கிட்டிப்புல் காற்றில் பறந்து எங்கோ போய் விழுந்தது. அந்த இடத்திலிருந்து ஆரம்பித்தான் பாபு...ச்சூஊஊஊஊஊஊஊஊஊஊஊ இடையிலேயே மூச்சை விட்டு விட....மறுபடி....சுரேஷ் கிட்டிப்புல்லை காற்றில் பறக்க விட்டான்...பாபு சூ பிடிப்பதும் பாதியில் விடுவதும்....சுரேஷ் அடிப்பதும் மீண்டும் பாபு பிடிப்பதும் தொடர்ந்து கொண்டே இருக்க....

டேய்....நான் பட்டோட்டைக்கு போறேண்டா... எங்க அப்பா வரச்சொல்லி இருக்காங்க அம்மாவோட நாலே முக்கால் ராஜ்கலால போறேன்.... நாளைக்கு மிச்சத்த புடிக்கிறேண்டா....சுரேஷிடம் டீல் பேசினான் பாபு. ஏம்பி என்ன...?  புடிக்க முடியலேன்னா... முடியலேன்னு சொல்லும்ம்பி.... விட்டுதர்றேன்... தோத்துப்புட்டு பொய் சொல்லி தப்பிக்கப் பாக்குறியா....

சுரேஷ் கேட்டதும் ரோஷமாக சரி நான் ஒண்ணும் பொய் சொல்லல.. நீ அடி நான் புடிக்கிறேன்.. .மறுபடி ரஜினி ஆனான் பாபு.


                                                                ****

குளித்து விட்டு வந்து புடவையைக் கட்டிக் கொண்டிருந்தவள்..... இந்த குரங்கு எங்க போச்சுன்னு தெரியலையே.... பஸ் நாலே முக்காலுக்கு வந்துடும். சீப்பை வாயில் கடித்தபடி தலையைப் பின்னிக் கொண்டிருந்த சுமதிக்கு பட்டுக்கோட்டைக்கு போவது என்றால் கொஞ்சம் சந்தோசம்தான். 24 மணி நேரமும்  அப்பனுக்கும் மகனுக்கும் அவிச்சு கொட்டறதுக்குன்னே எங்காத்தா என்னை பெத்தெடுத்து இருப்பா போலிருக்கு என்று அடிக்கடி சுமதி சொல்வதற்கு பின்னால் இயந்திரம் போன்ற அவளது தினசரி வேலைகள் இருக்கும். செல்வத்துக்கு 10 மணிக்குதான் ஆஃபீஸ் ஆனாலும் 7 மணிக்கு எழுந்து காப்பி போட்டுக் கொடுத்து காலைக்கு இட்லி அவிச்சு, சட்னி வச்சு, சாப்டக் கொடுத்து, மதியத்துக்கு  லஞ்ச் கட்டிக் கொடுத்து, ஆளைப் பேக்கப் பண்ணிப்புட்டு அஞ்சாவது படிக்கிற அறுந்த வாலுக்கு சாப்பாடு போட்டு ஊட்டி விட்டு, தலை சீவி பவுடர் போட்டு டவுசர் போட்டு சீவி சிங்காரிச்சு பள்ளிக் கூடத்துக்கு அனுப்பிபிட்டு பத்து மணிக்கு ஆறிப்போன காபிய மறுபடி சுட வச்சுக் குடிச்சு புட்டு, வீடு கூட்டி, பாத்திரம் துலக்கி, துணி துவைச்சு, மதியத்துக்கு சமைச்சு, எல்லாம் முடிச்சு செத்த நேரம் படுக்கலாம்னு தலை சாய்க்கிறப்ப நாலரை மணிக்கு பள்ளிகூடம் விட்டு பாபு வந்துடுவான்....மறுபடி காபி போட்டுக் கொடுத்து, அவனுக்கு கை கால் கழுவி விட்டு சாப்பாடு போட்டு, ட்யூசன்க்கு கொண்டு போய் விட்டு...

சுமதிக்கு அவ்வப்போது இது போன்ற சனிக்கிழமைகள் கிடைக்கும். நல்லது கெட்டதுக்கு பட்டுக்கோட்டைக்குப் போய் துணி எடுக்கும் சாக்கில், இரவு எதுவும் சமைக்காமல் பாபு மேல் பழியைப் போட்டு செல்வத்தை சம்மதிக்க வைத்து ஏதாவது ஒரு ஹோட்டலில் டின்னரை முடித்து விட்டு வீடு திரும்பும் சுகம்தான் அவளுக்கு சொர்க்கம்.

தலை பின்னி முடித்தவள் மணி நாலே கால் ஆனதைப் பார்த்து திடுக்கிட்டாள். அடப்பாவி பாபு.. பஸ் வர இன்னும் அரை மணி நேரந்தானடா இருக்கு அடுத்தபஸ் ஆறு பத்துக்குத்தானேடா அதுல கொள்ளைக் கூட்டம் இருக்குமே.... வாசலில் நின்று தெருவை பார்த்துக் கொண்டே இருந்தவள்.. லேட்டா போனா இந்த மனுசன் முனகியே தீத்துப்புடுவாரே நம்மள.....

யோசித்தபடியே கேட்டில் நின்று பார்த்துக் கொண்டிருந்தவள்...... தெரு முனையில் அழுக்கு மூட்டையாக பாபு ஓடி வருவதைப் பார்த்து சந்தோசமானாள்.
                                               
                                   

                                                            ...தொடரும்...





தேவா சுப்பையா...






கலையாத கனவுகள் - 2

$
0
0


இனி.....

எம்.ஜி.ஆர்க்கு அப்புறம் இப்படி கட்சி ரெண்டா உடையும்னு நினைச்சுக்கூட பாக்கல கேஷியர் சார்...? எப்பேர்பட்ட சகாப்தன் உயிரோட இருக்க வரைக்கும் ஒண்ணும் செய்ய முடியலையே...... அவர் செத்துப் போன ஒரே வருசத்துல கட்சி பிரிஞ்சு போயி இப்டி அடிச்சுக்கிட்டு நாறுறாங்க....... எம்.ஜி.ஆர் இல்லைன்னு ஆகிப் போச்சு.. இனி கலைஞர்தான் இப்போதைக்கு ஆள் சி.எம் போஸ்ட்டுக்கு...

செல்வம் கேசியர் ராமலிங்கத்திடம் பேசிய படியே கோப்புகளை மேய்ந்து கொண்டிருந்தான். 

என்ன ஓய்....கவர்மெண்ட் எம்ப்ளாயி அரசியல் பேசுறீர்....? தமிழ்நாட்டு மக்களை எல்லாம் நம்ப முடியாது ஓய்....இப்பத்தானே கலைஞர் சீட்ல ஏறி உக்காந்து இருக்கார் அடுத்த எலக்சன்குள்ள ஜானகி அம்மாவும், ஜெயலலிதாவும் ஒண்ணா சேந்துட மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்...... அரசியலை விடுங்காணும்... ஒங்க வொய்ஃபும் பையனும் ஜவுளி எடுக்க வர்றான்னு சொன்னீரே.... எத்தன மணிக்கு பஸ் வருது...? உம்ம வீட்டுக்கு ஆப்போஸிட்லதானே மதுக்கூர் யூனியன் ஆஃபீஸ் இருக்கு.. ஒரு போன் பண்ணி வாட்ச்மேன் கண்ணுச்சாமிய ஒரு எட்டு வீட்ல பாத்துட்டு வரச் சொல்லுங்காணும்...

இல்லை சார் அவுங்க கிளம்பி இருப்பாங்க. ராஜ்கலா ஆறு பத்துக்குதான் மைனர் பில்டிங் கிட்ட வரும். இன்னும் தான் டைம் இருக்கே... கொஞ்ச நாழி கழிச்சு கிளம்பிப் போனா சரியா இருக்கும். 

கிராமத்தை விட்டு இடம் பெயர்ந்து வேலை நிமித்தம் சிறு நகர வாழ்க்கைக்கு நகர்ந்திருக்கும் செல்வத்துக்கு எல்லாமே பாபுதான். ஐந்து அக்காக்களுக்கு பிறகு ஆறாவதாக பிறந்த செல்வத்தின் ஒரே பிள்ளை பாபு. அதனாலேயே அவ்வளவு செல்லம் கொடுத்து அவனை வளர்க்கவும் செய்தார். வாழ்க்கை எப்போதுமே எது மிகுதியாயிருக்கிறதோ அது மேல் ஒரு சலிப்பை புகுத்தி விடுகிறது. அதுவும் போக பெண்ணை செலவாகவும், ஆணை வரவாகவும் பார்த்து பார்த்து பழக்கப்பட்டு போன பொதுப் புத்தியிலிருந்து வெளிவர முடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்த சமூகச் சூழலில் ஆண்பிள்ளை வேண்டுமென்ற ஆசையில் அடுத்தடுத்து பெண் பிள்ளைகளை பெற்ற ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த செல்வம்  ஆண் பிள்ளை பெற்றதும் அவன் குடும்பமே பாபுவைக் கொண்டாடியது. பெண் வேண்டாம் என்றில்லை இருந்தாலும் ஆண்பிள்ளை ஏன் இல்லாமல் போக வேண்டும் என்ற ஆசையும் ஐந்து பெண்களோடு பிறந்து வளர்ந்த அயற்சியும் பாபுவை சீராட்டி வளர்க்க வைத்தது.

பெண் குழந்தைகளின் விருப்பங்களும் ஆண் குழந்தையின் விருப்பங்களும் வெவ்வேறு வடிவானவை. இந்த விருப்பங்கள் கூட சமூகத் திணிப்புகளாலும் ஜீன்களில் படிந்து கிடக்கும் குணாதிசயங்களாலும் கட்டி எழுப்பப்படுவதுதான். மென்மையான பொம்மைகளை வைத்து விளையாடுவதும் இருக்கும் இடத்தில் அலுங்காமல் குலுங்காமல் விளையாடுவதும் பெண்களின் குணமென்றால்....

பையன்களின் குணம் வேறாயிருக்கும். மல்லுக்கட்டுவது.. சண்டை போடுவது, சிறுவயதிலேயே பொம்மைத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு டுமிக்கில் ....டுமிக்கில் என்று சுட்டுக் கொண்டிருப்பது என்று பையன்களின் உலகம் வெகு அதிரடியானது. இயல்பிலேயே ஒரு சுட்டித்தனம் பையன்களிடமும், அழகுணர்ச்சி பெண்களிடமும் மெலிதாய் துளிர்க்க ஆரம்பித்து விடுகிறது. முட்டியை பெயர்த்துக் கொண்டு ரத்தம் வடியாத  பையன்கள் யாரேனும் இருக்கிறார்களா என்ன? ஆனால் காலமாற்றம் இந்த இயல்பினைச் சமன் செய்து விடும். சமன் செய்து விடும் என்று சொன்னால் பெண் பிள்ளைகள் பையன்களைப் போல அதிரடியாய் வளரமாட்டார்கள் மாறாக ஆண் பிள்ளைகள் பெண்களின் நளினத்தோடு வளரத் தொடங்குவார்கள். எதிர்காலப் பெற்றோர்கள் மிகுந்த பாதுகாப்போடு தனக்கும் தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கும் மட்டும் உபயோகமாய் எப்படி வாழ்வது என்று இடைவிடாது பயிற்றுவிக்கப் போகிறார்கள்.

பாதுகாப்பு பற்றி அதிகம் பேசுகிறோம் என்றால் பயம் அதன் பின்னணியில் வலுவாய் சம்மணமிட்டு அமர்ந்திருக்கிறது என்று அர்த்தம். உணவு உண்ணாமல் உபவாசம் இருப்பவனுக்கு உணவுதான் அடிப்படையாய் நினைவில் நிற்கும். காதல் வேண்டாம் என்று சொல்பவனும் காமம் வேண்டாம் என்று சொல்பவனும் இடைவிடாமல் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறான் என்று அர்த்தம். 

பாபுவின் பயங்கரச் சேட்டைகளை ரசித்த செல்வத்திற்கு ஒரே மகன் பாதுகாப்பாய் இருக்க வேண்டுமே என்ற பயமும் இருந்தது. எங்காவது போய் விழுந்து எழுந்து வந்து விடுகிறான். எதிலாவது மோதிக் கொள்கிறான், யாரையாவது அடித்து விட்டு வந்து விடுகிறான் யாரிடமாவது அடிவாங்கிக் கொண்டு வந்து விடுகிறான்....எத்தனை முறை கண்டித்தாலும் மறுபடி அதே சேட்டை, வாலுத்தனம்தான்.....


ஆறே கால் ஆச்சு இன்னமும் ராஜ்கலா வரலையே....?  மணியைப் பார்த்துக் கொண்டிருந்த செல்வத்திற்கு ஒரு வேளை சீக்கிரமே பஸ் போய்விட்டதா என்ற சந்தேகம் வந்தது. பக்கத்திலிருந்த பெட்டிக்கடையில் போய் விசாரித்தான்...

இல்லண்ணே இன்னும் வரல....வர்ற நேரந்தான்... பெட்டிக்கடைக்காரரின் பதிலைக் கேட்டு கொஞ்சம் சமாதானமான செல்வத்திற்கு அந்த வழியே வந்த எல்லா பேருந்துமே ராஜ்கலாவைப் போலவே இருந்தது. மணி ஆறே முக்கால் ஆகியும் பேருந்து வரவில்லை...

செல்வத்துக்கு ஏதோ தப்பாகப்பட்டது. பக்கத்தில் இருந்த எஸ்டிடி பூத்துக்குப் போய் மதுக்கூர் யூனியன் ஆஃபீசின் நம்பரை தட்ட...

மானேஜர் சாரா...?

சார் நான் பட்டுக்கோட்டை பஞ்சாயத்து யூனியன் ஆபிஸ் அக்கவுண்டண்ட் பேசுறேன்.......
....
நல்லா இருக்கேன் சார்...
.....
வீட்ல துணி எடுக்க வர்றேன்னு சொல்லி இருந்தாங்க....நாலே முக்கால் ராஜ்கலாவுல வரச்சொல்லி இருந்தேன்....வண்டி வரலை.. இன்னும்...
...
...
...
என்னா சார் சொல்றீங்க...ராஜ்கலா தளிக்கோட்டை பாலத்துக்கு முன்னாடி கவுந்துருச்சா....?

யார் சார்  சொன்னது....செல்வம் பதறினான்....தொண்டை அடைத்தது.....

கிராமசேவக் வீரமணி இப்போதான் டி.டி.ஓ ஆபிஸ் போய்ட்டு பட்டுக்கோட்டையில இருந்து வந்தாரு... அவரு பைக்ல வரும் போது பாத்து இருக்கார்...! தளிக்கோட்டை பாலத்துக்கு முன்னாடி ரைட் சைட்ல.... வயலுக்குள்ள வண்டி கவுந்துடுச்சாம்... பெரிய ஆக்ஸிடண்ட்டாம்.... அதுலயா நம்ம வீட்ல போய் இருக்காங்க....? செல்வத்திடம் அவசரமாய் கேட்டார் மதுக்கூர் பஞ்சாயத்து யூனியனின் மேனேஜர்....

செல்வம் கதறி அழுதபடியே சொன்னான்.....சார்....ப்ளீஸ்.... சார்.... ப்யூன கொஞ்சம் நம்ம வீட்டுக்கு அனுப்பி வீட்ல கிளம்பிட்டாங்களான்னு பாத்துட்டு வரச் சொல்லுங்க சார்....நான் ஒரு பத்து நிமிசத்துல திரும்ப கூப்பிடுறேன்....

செல்வம் போனை வைத்தான்....! 

நெஞ்சுக்குள் இருந்து வெடித்து இதயம் வெளியே வருவது போல துடித்துக் கொண்டிருந்தது. கடவுளே...முருகா, காளியாத்தா, வினாயகா அவுங்க இன்னிக்கு கிளம்பி வந்து இருக்கக் கூடாது....எஸ்டிடி பூத் கேபினுக்குள் வேகமாய் ஓடிக் கொண்டிருந்த  மின் விசிறி அவன் சட்டை வியர்வையில் நனைவதை ஒன்றும் செய்யமுடியாமல் வெறுமனே ஓடிக் கொண்டிருந்தது.

பாபுவை நினைத்துப் பார்த்தான். மனைவியின் முகம் நினைவுக்கு வந்தது. பன்னிரண்டு வருட திருமண வாழ்க்கையின் அன்னியோன்யம்,  சிறு சிறு சண்டைகள் எல்லாம் வரிசையாய் மனதில்  மின்னல் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தன. ப்யூன் வீட்டுக்கு போய்க் கொண்டிருப்பான்....போய் பார்த்து....

வீட்லதான் சார் இருக்காங்க.......உங்க வீட்ல உடம்பு சரி இல்லையாம் அதனால இன்னிக்கு வரலையாம்,  உங்களுக்கு போன் பண்ணச் சொல்லி பாபுவ நம்ம ஆபிசுக்கு போடான்னு கிளப்பிட்டு இருந்தாங்க.. நானே போய் பாத்துட்டேன்.....சார்....

ப்யூன் இப்படி போனில் சொல்லிவிட மாட்டானா....

கவலையாய் வாட்ச்சைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு வினாடியும் செல்வத்திற்கு மரண அவஸ்தையோடு நகர்ந்து கொண்டிருந்தது. காலையில் பாபுவை அடித்தது ஞாபகம் வந்தது. லீவு நாளுனா தூங்கித் தொலைக்க வேண்டியதுதானே....முதுகில் ஓங்கி ஒரு போடு போட்டான்....பாபுவை...

பாபு தட்டி விட்ட காபி டம்ளர் டேபிளில் இருந்து உருண்டு நடுக் கூடத்தில் கிடந்தது.

அலுவலகம் கிளம்பும் அவசரத்தில் அடிவாங்கிய பாபு.......செல்வத்தை இப்போது மனதுக்குள் இம்சை செய்தான்.

அவன் அலுவலகத்துக்கு போன் செய்தான். சார்....ராஜ்கலா கவுந்துடுச்சுன்னு சொல்றாங்க....கேஷியர் சார்....., ஆமாம் நான் மதுக்கூர்க்கு போன் பண்ணி இருக்கேன்...ப்யூன் வீட்டுக்கு போய் இருக்கார்....
....
....
....
ஆமா சார் நான் என்னனு கேட்டுட்டு சொல்றேன்.... நம்ம ஜீப் ஆபிஸ்லதானே சார்  இருக்கு..? கேட்டுக் கொண்டே சனிக்கிழமை எங்கும் வெளியில் சென்றிருக்க வாய்ப்பில்லை என்றும் நினைத்தான் செல்வம்.

மறுபடி மதுக்கூர் யூனியன் ஆஃபிசின் நம்பரைத் தட்ட......போனை எடுத்த மேனேஜர் போனை வாட்ச் மேனிடம் கொடுத்தார்....


வாட்ச்மேன் பேசிக் கொண்டே இருக்க...... போனை படார் என்று.... வைத்தபடியே.... சுவரோரமாக இருந்த சேரில் "பொதேர்.."என்று விழுந்தான் செல்வம்.

செல்வத்தின் மனைவியும் மகனும் பட்டுக்கோட்டைக்கு சென்று விட்டனர் என்றும் ராஜ்கலாவில் போகத்தான் கிளம்பிப் போனார்கள் என்றும் பக்கத்து வீட்டுக்காரர்கள் சொன்ன செய்தியை செல்வத்திடம் சொல்லிவிட்டு....

கவலையோடு போனை வைத்த வாட்ச்மேன் கண்ணுசாமி சோகமாய் மேனேஜரைப் பார்த்தான்....




                                                           ....தொடரும்....




தேவா சுப்பையா...




காமம் கொள்(ல்)...!

$
0
0

கடும் குளிரில் கூசிப்போய் உடலை ஒடுக்கிக் கொள்வதை போல இருக்கிறது இந்த கூடலின் உச்சம். தியானத்தில் அமரும் போதும் இப்படித்தான். திடமான ஒரு கருங்கலாய் முதலில் அமர்ந்திருப்பேன். மெல்ல மெல்ல ஒவ்வொரு அடுக்காய் உடைய ஆரம்பிக்கும். ஒவ்வொரு அடுக்கும் உடைந்து விழ கொஞ்ச நேரமாவது ஆகும். அது எப்போது என்று தெரியாது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இருக்கும் தடிமன் எல்லாம் படிப்படியாக உடையாமல் ஒரு கட்டிடத்தை வெடிவைத்து தகர்த்தால் எப்படி சடாரென சாயும் அப்படி சாயும். அதாவது சீட்டுகட்டு சாய்வதைப் போல ஆனால் அதன் மென்மையோடு அல்ல....

உடைந்து எல்லாம் விழுந்த பின்பு கூட இப்படித்தான் கூடலின் உச்சத்தில் ஏங்கிப் போய் உடல் துடிக்க குளிரில் கூசி ஒடுங்கும் உடம்பாய் நடு நடுங்கி தொண்டை அடைபட்டு கேவிக் கேவி அழத்தோன்றும். காமம் அழகானது என்று நான் சொல்லும் போதே வக்கிர பாம்புகள் பலரின் புத்தியில் நெளியத்தொடங்கி இருக்கும். இப்படித்தான் அது. அதன் இயல்பு இதுதான் என்று எழுத்துக்கள் மூச்சு வாங்கிக் கொண்டே ஒரு அனுபவத்தை இறக்கி வைக்கும் போது நான் இறக்கி வைத்த சுமையில் என இருக்கிறது என்று பார்க்காமல் ஒவ்வொரு மூளையும் தத்தமது சுமையை இறக்கி வைத்து என்னவென்று பிரித்துப் பார்த்து.....

இங்கே  எழுதிக் கொண்டிருக்கும் என் வரிகளுக்கு வெவ்வேறு வர்ணங்களில் கற்பித ஓவியங்களை அது வரையத் தொடங்கும். அது அல்ல நான் சொல்வது என்று சொல்லக் கூட விருப்பமில்லாமல் ஸ்பரிசத்தது கொடுத்த போதையிலிருந்து வெளிவர விரும்பாமல் கருப்பை நோக்கி விரைந்து பின்பு கருமுட்டையோடு சேர்ந்த விந்தணுவின் மோன நிலைக்குள் கிடந்தபடி எங்கிருந்தோ கேட்கும் அழுகுரலை செவிமடுத்துக்  கொண்டிருப்பேன் நான். அது யாரோ ஒருவரின் மரண அவஸ்தையை சொல்லும் அப்போது பிறந்த குழந்தையின் குரலாய் இருக்கக் கூடும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது பிணமெரிந்து நிண நாற்றம் பொசுக்கென்று வீசத்தொடங்கும்.

உஷ்ணமான உணர்வொன்று இருப்பதும் இல்லாததும், சரியும் தவறும், தூய்மையும் அசுத்தமுமாய் கிடந்து,கிடந்து பின் நகர்ந்து பிறப்பின் ரகசியம் சொல்லும் கலவிக் கலையை சிம்மத்தின் பிடறி பிடித்து உலுக்கி  எழுப்புவது போல எழுப்ப....பிரபஞ்சத்தின் வாசல் இதுதானென்று அறிந்து வெறித்தனமாய் ஓடி விரிந்து, பரந்து செல்லும் ஒளிக்காட்டிற்குள் தொலைந்தே  போயிருப்பேன் நான். மிச்சம் என்ன இருக்கும்? என்ற கேள்வியை உடைத்து உடைத்து மெலிதாய் பூக்கும் ஒரு பூவின் இதழுக்குள் படுத்துறங்கும் சுகத்தோடு இளஞ்சூடான அவளின் மார்பில் முகம் புதைத்து ஜென்மங்கள் மறந்து, இச்சைகள் கலைந்து, திறக்க விரும்பாத விழிகளால் விரிந்து கிடக்கும் போதியின் கிளைகளுக்குள் ஒரு கருநாகமாய் ஊர்ந்து சென்று....

அதன் உச்சம் தொட்டு சகஸ்கரம் உடைந்து பேரருவியாய் வழிந்தோட இதுவன்றோ நான் என்ற ஞானத்தை கிசுகிசுப்பாய் அவளின் காதுகளில் சொல்லிவிட்டு அப்படியே மூர்ச்சையாகத்தான் ஆசை....!

ஆனால்....

ஆசை என்ற வார்த்தை ஒரு சகுனியைப் போல வெகுண்டெழுந்து மீண்டும் ஒரு தாயமாடிப் பார்க்கும். அது பாண்டவர்களின் கண்ணடைத்து திரெளபதியின் துயிலுரிந்த துச்சாதனத்தை உயிர்த்தெழச் செய்யும். பரமாத்மாக்கள் ஆடை கொடுத்து மீட்டு விட்டால் பாரதம் முடிந்தன்றோ போகும். இது முடியக் கூடாத ஆட்டமன்றோ?! சத்தியத்தை தோற்கவைத்து அசத்தியத்தை வெல்ல வைத்து, மீண்டும் சத்தியத்தை வெல்லவைத்து முடிந்தே போய்விடக்கூடாது என்று என்று மீண்டும் மீண்டும் நிகழும் ஆட்டம்.


அவள் உதடுகள் நெற்றியை அழுத்தமாய் முத்தமிட்ட பொழுதினில் மூர்ச்சை தெளிந்து விழித்து மீண்டும் கேவிக் கொண்டிருக்கையில் எழுந்த கேள்வி ஒன்றைத்தான் யுகங்கள் தோறும் கேட்டுக் கொண்டிருக்கிறது இக்காலம்....

நான் யார்..?இவள் யார்...? காமம் கொள்வதென்பது பல்கிப் பெருகவென்றால் சுருங்கி முடிந்து போக விரும்புவது யார்? முக்தி என்ற சொல்லுக்குள் முடங்கிப் போய் இச்சை செதுக்கி, காமம் ஒதுக்கி எல்லாம் கடந்து போய் எங்கோ சேரும் ஆவலும் இதற்கு ஏன்? தொடங்கவும் அது விரும்புகிறது..... முடியவும் அது விரும்புகிறது....! நிகழவும் அது விரும்புகிறது அழியவும் அது விரும்புகிறது! கோட்பாடுகளைச் சொல்லி இதுவென்று நிறுவிக் கொள்ள எந்த ஒரு சாத்தியமுமில்லா அறுதியே..... எதன் இறுதி நீ...?

கேவிக் கேவி அழத் தொடங்கினேன்...! அவள் மீண்டும் என்னை மார்போடு இறுக்கிக் கொண்டாள்....

நின்று போயின நிமிடங்கள்!

இப்படியே சென்று விடேன் காலமே...என்று கெஞ்சவேண்டும் போலிருந்தது எனக்கு.........! அவளின் மார்புக்குள் முகம் புதைத்துக் கொண்டே மீண்டுமொரு புணர்தல் பற்றிய கற்பனையோடு கடவுளோடு விளையாடிக்கொண்டிருந்தேன்  நான்....!




தேவா சுப்பையா...







கலையாத கனவுகள் - 3

$
0
0


இதுவரை



இனி...


என்ன செய்வதென்று தெரியவில்லை செல்வத்திற்கு அவசரம் அவசரமாய் தன் அலுவலகம் நோக்கி ஓடினான். கேஷியர் ராமலிங்கத்திடம் செய்தியைச் சொல்லி கதறி அழுதான். அதே நேரத்தில் பேருந்தில் அடிபட்டவர்களை எல்லாம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து கொண்டிருப்பதாக அவர்களுக்கு செய்தி கிடைத்தது. பதறியபடியே அரசு மருத்துவமனைக்கு ஓடினான் செல்வம்.

ஏங்க ராஜ்கலா பஸ் ஆக்ஸிடெண்ட் கேஸ் எல்லாம் எங்க வச்சு இருக்காங்க...? தொண்டை கம்மியது செல்வத்திற்கு....

அதோ அந்த பக்கம் போங்க சார்... லெப்ட்ல திரும்பி.... நேரா போங்க அங்க பெரிய வார்டு இருக்கு அங்கதான் கொண்டு வந்து போட்டு இருக்காங்க... இன்னொரு வேன்ல மிச்ச இருக்க ஆளுங்கள கொண்டு வர்றாங்க சார்..... ஸ்பாட் அவுட் எப்டியும் பத்து பதினைஞ்சு பேராவது இருப்பாங்கன்னு சொல்லிக்கிறாங்க.... 

ப்ரண்ட் டயர் பர்ஸ்ட் ஆகி இருக்கும் போல வண்டிய இழுத்துக் கொண்டு போய் வயக்காட்ல தள்ளி கவுத்துருச்சு சார்....! முன்னாடி உக்காந்து இருந்த நிறைய பொம்பளைங்க மேல டீசல் கொட்டி உடம்பெல்லாம் வெந்து போய் கிடக்காங்க.... பொம்பளைங்க, வயசானவங்க, சின்னப் பிள்ளைங்கன்னு சகிக்கல சார் பாக்கவே....

செல்வம் கதறியபடியே மருத்துவமனை ஊழியர் கை காட்டிய திசையில் ஓட கேஷியர் ராமலிங்கமும் இன்னும் இரண்டு மூன்று அலுவலக நண்பர்களும் அவன் பின்னால் ஓடினார்கள்....

ஒரே கதறல் ஒலி. வலியால் துடித்துக் கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த மனிதர்களின் மரணப் போராட்டத்தை பார்க்கவே சகிக்க முடியாது என்பது ஒருபுறமென்றால்.... அந்த துக்க நெரிசலுக்கு நடுவே உயிருக்கு உயிரான உறவுகளைத் தேடுவது என்பது மிகப்பெரிய சாபம். ஒரு தீபாவளி சமயத்தில் சாட்டை கொளுத்திக் கொண்டிருந்த பாபுவின் கையில் சிறு தீக்காயம் பட்டதற்கு அவன் பதறியழுது செல்வத்தின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அப்பா...அப்பா... என்று அழுதது செல்வத்தின் நினைவில் எட்டிப்பார்த்தது.

மனிதர்களுக்கு மரணம் எப்படி வேண்டுமானாலும் சம்பவிக்கலாம். வியாதியால் மரணிக்கும் போதும், தற்கொலைகள் செய்து கொண்டு மரணிக்கும் போதும், முதுமையால் மரணிக்கும் போதும் காலம் அங்கே ஏதோ ஒரு நியாயத்தை மறைமுகமாய் ஏற்படுத்தி வைத்து விடுகிறது.. ஆனால் விபத்து எந்தவித நியாமுமற்ற காலத்தின் வன்முறை. அதுவும் எந்தவித தவறுமில்லாமல் யாரோ செய்யும் தவறினால் வேறு யாரோ ஒருவனுக்கு சம்பவிக்கும் மரணம் மிகப்பெரிய கொடுமை. கையிலிருந்த பொருளைத் தட்டிப் பறித்தது போல மனிதர்களின் வாழ்க்கையைக் கொய்து கொண்டு போகும் சூழல்கள் மிகவும் ஈனத்தனமானவை.

மதியம் உணவுண்டு மகிழ்வாய் பேருந்திலேறி பயணித்து எங்கெங்கோ செல்ல விரும்பிய மனிதர்களை ஒரு கவனக்குறைவினால் ஏற்படும் விபத்து தின்று தீர்ப்பதற்கு என்ன விதமான நியாயத்தை இயற்கை வைத்திருக்கிறது என்றுதான் தெரியவில்லை. பயணித்தவர்களுக்காக எத்தனை ஜீவன்கள் காத்துக் கொண்டிருக்கின்றனவோ.... எத்தனை உயிர்கள் பதைபதைத்து இப்படி செல்வம் போல காயம் பட்டவர்களுக்கு நடுவே..... தன் சொந்தங்களை தேடிக் கொண்டிருக்கின்றனவோ....

யோசித்தபடியே செல்வம் அடுத்த வேன் வருகைக்காக காத்திருந்தான். அதுவரையில் கொண்டு வந்து குவிக்கப்பட்ட உடல்களுக்கு மத்தியில் அவன் மனைவியையும் மகனையும் கண்டுபிடிக்க முடியவில்லை....

"என்ன பெத்த அய்யா........போய்ட்டியே........"

வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு யாரோ ஒரு பெண்மணி அழுதபடியே மார்ச்சுவரிக்கு சென்று கொண்டிருந்த ஒரு போர்த்தப்பட்ட உடலின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தாள்.....

செல்வம் சுவற்றில் ஒற்றைக் காலைக் கொடுத்து சாய்ந்தபடியே வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். இருளத் தொடங்கி இருந்தது. அது அமாவாசையை நோக்கிய வானத்தின் நகர்வாயிருக்க வேண்டும். நட்சத்திரங்கள் மட்டும் தூரத்திலெரியும் பிணத்திலிருந்து வெளிப்படும் தீச்சுவாலையாய் எரிந்து கொண்டிருந்தன. 

ஓ... காலமே உனக்கு என்னதான் வேண்டும்.....?

ஏன் இப்படி கூட்டம் கூட்டமாய் மனிதர்களைப் படைக்கிறாய்? ஏன் பல்கிப் பெருகிக் கொண்டே இருக்கிறது இந்தப் பிரபஞ்சம்? எதை நோக்கியது இந்தப் பயணம்.....? என்னவிதமான ஆட்டம் இது...? எல்லாம் உண்டென்று சொல்லி அதை இல்லை என்று அறிந்து கொள்ள வேண்டி  சூழல்களை விதைத்து.... புரிந்து தெளிய வேண்டிய நிர்ப்பந்தம்தான் என்ன...? மொத்தத்தில் ஏன் நீ கொடுக்கிறாய்...? ஏன் நீ எடுக்கிறாய்...? சொந்தங்களையும் பந்தங்களையும் ஏன் நீ உருவாக்குகிறாய்...? ஏன் சூழல்களைக் கொடுத்து அவற்றை நீயே அறுக்கிறாய்..? இந்த வாழ்க்கையின் நோக்கம்தான் என்ன....?

ஜனித்து வளர்ந்து நகரும் இந்த வாழ்க்கையில் உடல்தான் மையமாயிருக்கிறது. உயிர் வளர்க்க உணவு, உணவின் அடிப்படை பசி, பசி தீர பிழைப்பு, பிழைத்து நிற்கையில் தன்னிச்சையாய் தோன்றும் காமம், காமத்தின் அடிப்படையில் புதிய பொறுப்புகள், புதிய பொறுப்புகளுக்காய் பொருள்  தேடல், பொருள் தேடலை ஒப்பிட்டு சந்தோசப்படுத்தி கொள்ள ஒரு சமூகம், கீழே விழுந்தால் சிரிக்க நான்கு பேர்கள், தூக்கிவிட நான்கு பேர்கள், விவாதிக்க நான்கு பேர்கள்,வெற்றி பெற்றால் போற்ற நான்கு பேர், தூற்ற நான்கு பேர், நல்லவனென்று சொல்ல நான்கு பேர், கெட்டவன் என்று சொல்ல நான்கு பேர்...., பணக்காரர்களெல்லாம் வென்றவர்களாகவும், ஏழைகள் எல்லாம் தோற்றவர்களாகவும் கருதி நகரும் வாழ்க்கைச் சூழலே.....எங்கிருந்து தருவிக்கிறாய் இது போன்ற நச்சு நிறைந்த பொது புத்திகளை...?

சுமதியை முதன் முதலில் பெண்பார்க்க சென்ற போது மாடு பார்க்க வந்திருக்கிறார்கள் என்று சொல்லித்தான் சுமதியின் அண்ணன் வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். பெண் பார்க்க வருகிறோம் என்று சொல்லி அமர்க்களமாய் மாப்பிள்ளை வீட்டார் போய் அமர்ந்து கொண்டு பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் தின்று விட்டு காபி குடித்துக் கொண்டே பெண்ணைப் பார்த்து தீர்மானிக்கும் வழக்கம் எல்லாம் தமிழர்கள் மரபில் கிடையவே கிடையாது. ஆண்களைப் போல அல்ல பெண்கள். பெண்கள் ஒரு ஆணைப் பார்த்து அவனைப் பிடித்துவிட்டால் பின் வேறு ஒருவனை மாற்றிக் கொள்வதென்பது வெகு கடினம். இந்தக் காலத்தில் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் சென்று பெண்ணைப் பார்த்துவிட்டு வீட்டில் போய் முடிவு சொல்கிறோம் என்று சொல்லி மாப்பிள்ளைக்கு பிடிக்கவில்லை எனில் அந்தக் கல்யாணம் நின்றே போய்விடும் அவலம் இருக்கிறது. எங்கிருந்து முளைத்தது இந்த ஆணாதிக்க கொம்பு என்பதுதான் தெரியவில்லை. 

பெரும்பாலும் முன்பெல்லாம் பெண் பார்க்கச் செல்பவர்கள் ஏதோ ஒரு வேலை நிமித்தமாய் போவது போல எதார்த்தமாய் பெண் வீட்டிற்குள் போய் ஒப்பனைகள் இல்லாதப் பெண்ணைப் பார்த்துவிட்டு, பெண் பிடித்து இருந்தால் ஆணின் புகைப்படத்தை பெண்ணிடம் கொடுத்து சம்மதம் இருப்பின் பின் சம்பிரதாயமாக நேரில் பெண்ணையும் மாப்பிள்ளையையும் காணச் செய்து முடிவு செய்வார்கள். அப்போது கூட பெண்ணுக்கு மாப்பிள்ளை வேண்டாம் என்று மறுக்க முழு உரிமை இருக்கிறது.  அடுப்படியில் வேலை செய்து கொண்டிருந்த சுமதி மாடு பார்க்க வந்தவர்களுக்கு தண்ணீர் கொடுக்க அள்ளிச் சொறுகிய பாவடையோடு தாவணியை சரி செய்து கொண்டு தூக்கி கட்டிய கொண்டையோடு வியர்வை வழியும் முகத்தோடு வந்திருந்தாள். அப்போதுதான் சுமதியை நேருக்கு நேராய் பார்த்தது. சுமதி அவ்வளவு அழகு. அழகுக்கு ஆடம்பரம் தேவையில்லை என்பதை அந்த தருணத்தில்தான் உணர்ந்து கொள்ள முடிந்தது.

சுமதி வீட்டில் ஒப்புதல் சொல்லும்வரை செல்வத்தின் தூக்கம் தொலைந்தே போயிருந்தது. சம்பிரதாயங்கள், நேருக்கு  நேராய் அவள் விழிகளோடு விழிகள் மோதிக் கொண்ட தருணத்தில் உண்டான அலாதியான சந்தோசங்கள், திருமணத்திற்குப் பிறகு ஏற்பட்ட புரிதலின்மைகள், அந்த புரிதலின்மையிலிருந்து பிறந்த புரிதல்கள்..... ஐந்தாண்டுகள் கீழும் மேலும் ஆடி அலைபாய்ந்து பின் நிதானமான திருமண பந்தம் செல்வத்தின் கண்களில் கண்ணீராய் வழிந்து கொண்டிருந்தது....

எது நிகழும் அடுத்து என்று தெரியாத வாழ்க்கையினூடே எத்தனை எத்தனை அகம்பாவம் கொண்ட மனிதர்கள், மூன்று தலைமுறைக்கும் சேர்த்து திட்டமிடும் திமிர்கள்....!!!!!

உடல் முழுதும் தீக்காயங்களோடு இரண்டு பருத்த பெண்மணிகள் துடி துடித்துக் கொண்டிருந்ததை பார்த்துவிட்டு வெளியே வந்த செல்வத்திடம் அந்த இரண்டு பேரில் ஒருவர் இறந்து போனதை ஒருவர் அழுதபடியே கூறிச் சென்றார். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை அழுகை ஓலங்களாலும், புலம்பல்களாலும், ஒப்பாரிகளாலும் நிரம்பிக் கிடந்தது, செல்வத்தைப் போன்ற பலர் தங்களது உறவுகளை மஞ்சள் குண்டு பல்புகளின் வெளிச்சத்தில் தேடிக் கொண்டிருந்தனர்......

சுமதிக்கும், பாபுவிற்கும் என்ன ஆகி இருக்கும் என்ற பதை பதைப்போடு செல்வம் நின்று கொண்டிருந்த போதே காயப்பட்டவர்களை ஏற்றி கொண்டு அடுத்த வாகனம்  மருத்துவமனை வளாகத்திற்குள் சீறிப் பாய்ந்து வந்து கொண்டிருந்தது....

செல்வம்.... வாகனத்தை நோக்கி உயிரைக் கையில் பிடித்தபடி ஓடிக் கொண்டிருந்தான்...


                                                      ***


எட்டாம் நம்பர் பஸ் பிதுங்கி வழியும் கூட்டத்தை ஏற்றிக் கொண்டு பட்டுக்கோட்டையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. 

ஓய்.... ஏன்யா கால மிதிச்சுக்கிட்டு அம்புட்டு மும்முரமா அங்கிட்டு எட்டிப்பார்க்குற....

பெரியவர் ஒரு இளம் வயது பையனை அதட்டினார்....! அட அந்தப் பக்கம் ஏதோ பஸ்ஸு கவுந்து கிடக்குது பெரியவரே....என்று பையன் சொன்னதைக் கேட்டு பெரியவர் எட்டிப்பார்க்க...பஸ்ஸுக்குள் இருந்த கூட்டம் மொத்தமும் கவிழ்ந்து கிடந்த ராஜ்கலா பஸ்ஸை முண்டியடித்துக் கொண்டு எட்டிப்பார்த்தனர். காவல்துறை வாகனங்களும், தீயணைப்பு வண்டிகளும் என்று நிரம்பிக்கிடந்த சாலையை அலுங்கி குலுங்கி எட்டாம் நம்பர் பஸ் கடந்து கொண்டிருந்தது....

பேருந்தில் உள்ளே கோபமாக அமர்ந்திருந்த சுமதிக்கு வெளியே என்ன நடக்கின்றது என்று யோசிக்க முடியாத அளவு கோபம் தலைக்கேறி இருந்தது. பாபுவை நறுக் என்று கிள்ளினாள்.... சனியன் பிடிச்சவனே.... நீ வெள்ளாண்டுட்டு லேட்டா வந்ததால பஸ்ஸ விட்டுட்டு இப்போ இம்புட்டு நேரங்கழிச்சு போகவேண்டியதா இருக்கு...

அந்த மனுசன் மைனர் பில்டிங் கிட்ட நிக்குறாரோ இல்ல ஆஃபிசுக்குப் போய்ட்டாரோ தெரியலை... தறுதலையா வந்து பொறந்து இருக்கியே எங்களுக்குன்னு.... சொல்லிக் கொண்டே.... மறுபடி பாபுவின் தலையில் அடித்தாள்... பாபு அழுதபடியே கண்ணைக் கசக்கிக் கொண்டிருந்தான்.

பேருந்து முழுதும் ராஜ்கலா பஸ் கவிழ்ந்ததைப் பற்றியே எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.  சுமதி எதைப் பற்றிய கவனமும் இன்றி... காத்திருக்கும் கணவரிடம் தாமதமாய் வருவதற்கு திட்டு வாங்கவேண்டுமே என்ற பதட்டத்தில்.... ஜன்னலுக்கு வெளியே தெரிந்த கருவானத்தின் நட்சத்திரங்களை  வெறித்துக் கொண்டிருந்தாள்.

பஸ் பட்டுக்கோட்டையை நெருங்கிக் கொண்டிருந்தது.



                                                       - முற்றும் -




தேவா சுப்பையா






காலம் வரைந்த கலைஞன் - ரெம்ப்ராண்ட்!

$
0
0

மேலே இருக்கும் ரெம்ப்ராண்ட்டின் ஓவியத்தை மெர்சியிடம் மார்க் கிராஸ் காட்டுகிறார். மார்க் கிராஸ் ஒரு ஓவியரும் கூடத்தான், ஓவியரும் கூடத்தான் என்று சொல்லும் போதே அவர் வேறு எதுவாகவோ இருக்கவேண்டும்தானே...?! ஆமாம் அவர் களிமண்ணால் சிற்பங்கள் செய்யும் சிற்பியும் கூட.  அந்த பாத்திரத்தில் நடித்தவருக்கு குறைந்தபட்சம் 70 வயதாவது இருக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. கொஞ்சம் ஐன்ஸ்டீனின் சாயல்வேறு அவருக்கு. அவர் பெண்களை மட்டுமே படமாக வரைந்து கொண்டு பின் களிமண்ணால் செதுக்கி செதுக்கி சிற்பம் செய்வார். பெண் என்றால் ஏதோ ஒரு பெண்ணின் சிலையாய் அது இருந்து விடமுடியாது.  நிர்வாண மாடலாய் ஒரு பெண்ணை நிற்க வைத்து முதலில் பெண்ணின் உடலை வரைந்து கொண்டு பின் அந்தப் பெண்ணை கொண்டு அவர் சிலையும் செய்தாக வேண்டும்.

நிர்வாணம் என்ற சொல் வெறுமனே விஷமற்ற பாம்பைப் போன்றது ஆனால் பெண்ணின் நிர்வாணம் என்பது கலை என்னும் விசம் நிரம்பிய நாகத்தைப் போன்றது. அது அழகு. அதுவே விஷம். பெண்ணின் உடல், அதன் வளைவு நெளிவுகள், அந்த  உடலில் இருக்கும் சூட்சும குறிப்புகள், மேடு பள்ளங்கள் என்று காமம் என்ற சொல்லை ஒரு உளி எடுத்து செதுக்கி எறிந்து விட்டு பார்த்தோமானால் கலை என்று எதைச் சொல்கிறேன் என்பது விளங்கும். பொதுவாகவே காமம் உள்ளதை உள்ளபடி பார்க்கவிடுவதில்லை. அது  எதிர்ப்பார்ப்போடு எப்போதும் அலையும் ஒரு மிருகம். எப்போது பாயும் என்று சொல்லவே முடியாது. மிருகத்தை உயிரோடு வைத்துக் கொண்டு ஒரு கலைஞனால் படைக்க முடியாது. ரசிக்க முடியாது. உறங்க முடியாது. 

ஹென்றி மாட்டீஸ்

மெர்சி மார்க் கிராஸிடம் மாடலாக வேலை செய்ய வந்திருக்கும் பெண் என்பதையும், த ஆர்ட்டிஸ்ட் அண்ட் மாடல் என்ற திரைப்படத்தின் கதை என்ன என்பதையும், அந்த திரைப்படம் என்ன மாதிரியான அதிர்வுகளை எனக்குள் உருவாக்கியது என்பதை எல்லாம் இப்போது நாம் பார்க்கப் போவதில்லை. படத்தைப் பற்றி பேசுவதற்கு முன்பு படத்தில் இருக்கும் விசயங்களை பற்றியும் அது பகிர்ந்திருக்கும் செய்திகளைப் பற்றியும் அறிந்து கொள்ள விரும்பி இணையத்தை இரண்டு மூன்று நாட்களாகவே மேய்ந்து கொண்டிருந்தேன். 1860களில் பிறந்த ஹென்றி மாட்டீஸ் என்ற பிரெஞ்ச் சிற்பியின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது என்று அறிந்து கொண்டேன். இதை அறிந்து கொண்டு ஹென்றி மாட்டீஸ் எப்படி எல்லாம் வாழ்ந்திருப்பார் என்று போய் அவரின் வாழ்க்கையை வரலாற்றை தேடி அறிந்து கொள்ள நான் விரும்பவில்லை.  ஒருவேளை மாட்டீசின் நிஜவாழ்க்கை எனக்கு போரடித்து இந்த படத்தைப் பற்றி சொல்ல ஒன்றும் தோன்றாமல்  போய்விடுமோ என்ற பயம்தான் அதற்கு காரணம்.

இராஜராஜ சோழனைப் பற்றிய என் ஆவலையும், தேடலையும், ப்ரியத்தையும், வரலாற்றுப் பதிவுகளில் வாசித்து அறிந்து கற்பனை செய்து வைத்திருந்த அந்த பிரம்மாண்டமான சித்திரைத்தையும், சிதைத்துப் போட்டது இராஜராஜ சோழன் என்னும் தமிழ்த் திரைப்படம். சில காரியங்களை செய்யாமலேயே இந்த உலகம் இருந்திருக்கலாமோ என்று எனக்கு தோன்றும். அதில் ஒன்று இந்தத் திரைப்படம்.  உடையார் நாவலை வாசித்துக் கொண்டிருந்த போது சட்டென்று சிறகு விரித்துப் பறந்து போக எத்தனித்த என் கற்பனைக் கழுகினை சட், சட்டென்று சிறகு வெட்டி தரையில் இழுத்துப்போட்டுவிடும் சிவாஜியின் உஷ்ணமான மேடை நாடக நடிப்பு. 

ரெம்பிராண்ட் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதலை இந்த ஆர்டிஸ்ட் அண்ட த மாடல் படத்தில் ஒரு காட்சி வலுவாய் செய்து விடுகிறது. மேலே இருக்கும் புகைப்படத்தை தனது மாடலான மெர்சியிடம் மார்க் கிராஸ் தாத்தா காட்டுவார். இதைப் பார்த்தாயா...? ஓவியம் நன்றாக இருக்கிறதா என்று அவர் கேட்டு முடிப்பதற்கு முன்பாகவே அந்தப் பெண் ஓ....வெறி நைஸ் என்று பதில் சொல்லிவிடுவாள். இது ஒரு தலை சிறந்த ஓவியம். ஒரு நொடியில் இது நன்றாக இருக்கிறது என்று கூறிவிட்டாளே என்ற தன் கோபத்தை ஆதங்கத்தை ஒரு படைப்பின் உன்னதத்தை உணர்ந்தவராய்....

"எந்த ஒரு விசயத்தையும் முதலில் எப்படி பார்ப்பது என்று கற்றுக் கொள்ள வேண்டும். அதில் என்ன இருக்கிறது என்று உற்று நோக்கவேண்டும்.. ..அது அல்லாது வெறுமனே எல்லாவற்றையும் கடந்து சென்று விடக்கூடாது என்று அதட்டிவிட்டு. மேலே இருக்கும் சித்திரத்தை பற்றி விவரிப்பார். இது போன்ற கோட்டு ஓவியங்களை பார்க்கும் போது அதன் வளைவுகளை, நெளிவுகளை நாம் கவனிக்க வேண்டும் என்பார். நடந்து செல்லும் குழந்தை முதன் முதலாய் நடக்கப் பழகுகிறது என்றும் அந்தக் குழந்தை அப்படி நடந்து பழகுவது அதற்கு ஆவலாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்று சொல்லிவிட்டு.....அதன் மகிழ்ச்சியை எப்படி நாம் புரிந்து கொள்வது தெரியுமா...? அந்த சிறு குழந்தையின் பக்கவாட்டு கன்னத்தை பார், அந்தக் புஷ்டியான கன்னம், முன்னால் சிரிக்கும் குழந்தையின் உப்பலான பக்கவாட்டுத் தோற்றம்.....

அந்தக் கோட்டினை உற்று நோக்கினால்தான் அந்த குழந்தையின் மகிழ்ச்சி பிடிபடும்....! அதோடு மட்டுமில்லாமல் அந்த குழந்தையை இடது புறம் கை பிடித்து அழைத்துச் செல்வது குழந்தையி சகோதரியாய் இருக்கலாம், அவளுக்கு குழந்தைகளை பிடித்து அழைத்துச் சென்று பழக்கம் இல்லாததால் வெகு சிரத்தையாய் குனிந்து பிள்ளையை கவனமாய் அழைத்துச் செல்கிறாள்.....வலது புறம் இருப்பது குழந்தையின் அம்மாவாய் இருக்கவேண்டும். இரண்டு பிள்ளைகள் பெற்றவள் அவள், அதனால் தன் அனுபவத்தின்  மூலம் பிள்ளையை எப்படி பிடித்து நடக்க வைக்க வேண்டும் என்று அறிந்தவளாதலால், கொஞ்சம் பயமின்றியே....அவள் குழந்தயையின் கையைப் பிடித்திருக்கிறாள்...."

கிராஸ் விவரித்துக் கொண்டே சென்று கொண்டிருந்தார். நான் படத்தை பாஸ்(Pause) செய்து நிறுத்தி விட்டு யோசிக்க ஆரம்பித்தேன். இது ஒரு படம். ஓவியம். அவ்வளவுதான். ஒரு ஒவியன் வெறும் கோடுகளால் எத்தனை விதமான உணர்வுகளைத் தனக்குள் வெளிப்படுத்தி விடுகிறான். எத்தனை அழுத்தமான நுண்ணுணர்வுகள் கொண்டவனாய் அவன் இருந்திருப்பான்..? ஒவ்வொரு சூழலையும் எவ்வளவு நுணுக்கமாய் அவன் கவனித்தவனாய் இருந்திருப்பான். தன்னைச் சுற்றி நிகழும் சிறு சிறு நிகழ்வுகளையும் அசைவுகளையும்,  உற்று கவனிக்கத் தெரிந்தவனே அதை எழுத்தில், பேச்சில், ஓவியத்தில், இசையில், ஆடலில், பாடலில் கொண்டுவரத் தெரிந்தவனாகிறான்....

இன்னும் சொல்லப் போனால் மொழிகள் என்று நாம் அறிந்து வைத்திருப்பது யாவும் ஒரு தூரமே பயணித்து கேட்டுக் கொண்டிருப்பவனுக்கு புரிதலை உண்டு பண்ணுகிறது. பேசியவர்கள் பேசியது எல்லாம் புரிந்திருந்தால் இப்படி உருவாகி இருக்குமா முரண்பாடான இந்தப் பேருலகம். இரண்டு பேர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மாறி மாறி விளக்கிக் கொள்கிறார்கள். இவனின் நியாயத்தை இவனும், அவனின் நியாத்தை அவனும் நுணுக்கமாய் எடுத்தும் சொல்லிக் கொள்கிறார்கள் ஆனால் கடைசி வரையில் ஒருவரின் வலியையோ, சோகத்தையோ, எதிர்பார்ப்பையோ ஒருவருக்கு ஒருவர் முழுதாய் புரியவைக்க முடிவதேயில்லை. மொழி இந்த உலகம் முழுவதும் தோட்டா இல்லாத துப்பாக்கியாகவே பெரும்பாலும் வெடித்துக் கொண்டிருக்கிறது.

பேசுபவர்கள் எல்லாம் நினைத்துக் கொள்கிறார்கள் தாங்கள் எல்லாவற்றையும் இந்த உலகத்துக்கு புரியவைத்துவிட்டோம் என்று. கேட்கிறவர்கள் எல்லோரும் நினைத்துக் கொள்கிறார்கள்......என்றாவது ஒரு நாளாவது இவன் நாம் நினைப்பதை பேசிவிடமாட்டானா என்று.....ஆனால் இரண்டு நடப்பதே இல்லை.


ஒரு கலைஞன் சராசரி மனிதர்களிடம் இருந்து எப்போதும் வித்தியாசப்பட்டே இருக்கிறான். அவனும் பேசுவான் ஆனால் அவன் வார்த்தைகள் அவனுக்குள் இருக்கும் நியாயத்தை மட்டும் கூர் தீட்டிக் கொள்ளும் சுயநலக் கத்திகளாக எப்போதும் இருப்பதில்லை. அவன் எதிராளியின் வலிபற்றி பேசுகிறான், எங்கோ அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு இனத்தின் விடுதலை பற்றி பேசுகிறான், அதுவரையில் அவன் சந்தித்திராத மனிதர்களின் தேவைகள் பற்றி பேசுகிறான், வானத்தையும், பூமியையும், பூமியில் படிந்து கிடக்கும் நிலையாமைப் பற்றியும், வாழ்க்கையில் சந்தோஷமாயிருக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும், மனிதர்கள் மனிதர்களைப் போற்ற வேண்டிய அவசியத்தை பற்றியும் அவன் பேசிக் கொண்டே இருக்கிறான்.

பூக்களைப் பார்க்கிறான். அதன் சந்தோசத்தை ஒரு கவிதையாகவோ, ஓவியமாகவோ, புகைப்படமாகவோ, ஒரு பாடலாகவோ, இசையாகவோ வடித்து வைத்துவிட அவன் முனைகிறான். ஒரு கலைஞன் எப்போதும் தன்னைச் சுற்றி நிகழும், தான் அனுவிக்கும் விசயங்களை கூர்மையாக சக மனிதனிடம் பகிர்ந்து செல்லவே எப்போதும் விரும்பிகிறான்.

ரெம்ப்ராண்டின் ஓவியங்களை தேடித் தேடி நான் பார்க்க ஆரம்பித்தேன். வாழ்க்கையின் விவரிக்க முடியாத வேறு பக்கத்திற்கு அவை என்னை அழைத்துச் சென்றன. மனித உணர்வுகளை கோடுகளுக்குள் கொண்டு வந்து அதைக் காண்பவர்களிடம் பரிமாற்றம் செய்யக் கூடிய மந்திர சக்திக் கொண்டவை அவனின் ஓவியங்கள். 1600களில் வாழ்ந்து மறைந்த அந்த டச்சுக்காரனைப் பற்றி பற்றி இன்னமும் பேசிக் கொண்டிருக்கின்றன அவனது ஓவியங்கள் அம்ஸ்ட்ர்டாமில் இருக்கும் மியூசியங்களில்.

ஏதேதோ அமானுஷ்யமான உணர்வுகளோடு சல்லாபித்துக் கொண்டிருக்கும் போது தோன்றும் புது புது விசயங்களை பதிவு செய்து கொண்டிருக்கும் எந்த கலைஞன் பொருளாதாய உலகத்தில் வென்றிருக்கிறான் என்று சொல்லுங்கள் பார்ப்போம்? ரெம்ப்ராண்டின் வாழ்க்கையை அறிய முற்பட்ட எனக்கு....அதை வாசித்து முடித்த போது மனம் கனத்துப் போயிருந்தது. அவன் மனைவியை குறுகிய காலத்திலேயே இழந்து, நான்கு குழந்தைகளைப் பெற்று குழந்தையிலேயே மூன்று பிள்ளைகளை இழந்து, பின் தன்னையும் பிள்ளையும் பார்த்துக் கொள்ள வந்த பெண்ணை மனைவியாக்கிக் கொண்டான். அந்த பெண்ணை மாடலாகக் கொண்டு அவன் நிறைய கோட்டோவியங்களை வரைந்துமிருக்கிறான்.

கடன் தொல்லையால் தன்னிடம் இருந்த அத்தனை ஒப்பற்ற படைப்புகளையும் கொடுத்து ஈடு செய்த ரெம்ப்ராண்ட்...வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான சூழலில் இருந்த போது உருவாக்கிய படைப்புகள்தான் வெகு பிரம்மாண்ட புகழை அவனுக்குத் தேடிக் கொடுத்திருக்கிறது.  நிறைய இருக்கிறது ரெம்ப்ராண்ட் பற்றி பேசுவதற்கு,  அவன் ஓவியங்களின் தனித்தன்மை பற்றி விவாதிப்பதற்கு.....


எந்த ஒரு தலை சிறந்த படைப்பும் தன்னைப் பற்றி மட்டும் பேசிவிட்டு வாய் மூடிக் கொள்வதில்லை. அது ஒரு ரசிகனை கிளர்வான மனோநிலைக்கு கொண்டு சென்று பல புதிரான விசயங்களைப்  பற்றி பேசுவதோடு நிறைய விசயங்களைக் கற்றுக் கொடுத்து புதுப் புது திறப்புக்களையும் கொடுக்கிறது. ஒரு படைப்பில் லயித்து முடித்து வெளியே வரும் போது அந்த படைப்பு பற்றிய பிரக்ஞை இன்றி வேறு ஏதோ ஒரு புதிய தேடலில் நீங்கள் இறங்கி இருக்கிறீர்கள் என்றால்...மிகச்சரியாய் அந்த படைப்பு வெளிப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

                                 த ஆர்ட்டிஸ்ட் அண்ட் த மாடல்
                                             (The Artist and the Model)


என்னும் திரைப்படம் வெகு நேர்த்தியாய் அந்த செயலை செய்திருக்கிறது. வேறு ஒரு கட்டுரையில் அந்த திரைப்படம் பற்றி நிறைய பேசுவேன்...!



தேவா சுப்பையா...







காதல் சுகமானது....!

$
0
0

இப்போதும் கூட அப்படியேதானிருக்கிறது காதல்....! எதுவோ வேண்டுமென்ற ஆசைகளை எல்லாம் காலம் பக்குவக் கத்திகளை வைத்து வெட்டி எறிந்த பின்பும் இன்னமும் நம்மை இழுத்து பிடித்து வைத்துக் கொண்டிருப்பது எது என்று யோசித்துப் பார்க்கையில் இன்னும் அழுத்தமாய், ஆழமாய் காதல் என்றால் என்னவென்று புரிகிறது. எத்தனை எழுதினாலும் அழுத்துப்போகாத காதல் இருக்கும் போது வாழ்க்கை என்ன செய்து விடும் நம்மை...?

ஏகாந்தக் கனவுகளுக்கு என்ன பெயர் இடுவது? எதையும் எதிர்ப்பார்க்காத நேசத்தை எப்படி எழுதுவது? கடைசியாய் நாம் ஒன்றாய் அமர்ந்திருந்த அந்த மாலைக்குத்தான் எவ்வளவு பொறுமை இருந்திருக்க வேண்டும் தேன்மொழி...? எதுவுமே பேசிக்கொள்ளாத கனத்த நிமிடங்களைச் சுமந்து கொண்டு எப்படித்தான் நகர்ந்திருக்கும் அன்றைக்கு காலம்...? காதலியைப் பெறும் போது காதல் பரபரப்பான உற்சாகத்துக்கு நடுவே வலுவிழந்ததாய் போனாலும் காதலியை இழக்கும் தருணத்தில் அது ஒரு தாயாய் கட்டியணைத்து ஆசுவாசப்படுத்ததான் செய்கிறது. திருமணத்துக்காக காதலித்துக் கொள்ளும் சமூக நடைமுறையில் காதலிப்பதற்காக காதலிக்கச் சொல்லிக் கொடுத்த காதலோடு தான் நான் இன்னமும் வசித்துக் கொண்டிருக்கிறேன்....

தேன்மொழி தாலியை அடிக்கடி சரி செய்தபடி என்னோடு பேசிக் கொண்டிருந்தது பிரசாத்துக்கு கொஞ்சம் சங்கடமாயிருந்தது. 

தாம்பத்தியத்திற்குள் காதல் தைரியமாய் எட்டிப்பார்க்கும்....இன்னும் சொல்லப் போனால் எல்லா உறவுகளுக்கும் நடுவே எழும் நேசங்களில் எல்லாம் சுதந்திரமாய் காதல் சுற்றிவரும். காதலைக் கட்டிப் போடவோ அல்லது விளக்கம் சொல்லி விதிவிலக்காக ஆக்கவோ முடியவே முடியாது. இந்த உலகின் மூலை முடுக்கெல்லாம் அது தடையின்றி திமிராய்ச் சுற்றிவரும். என் செத்துப் போன அப்பாத்தாவின் மீது இன்னமும் அது மையல் கொண்டிருக்கிறது. அவளின் வாஞ்சையான பேச்சையும், அனுசரனையான உடல் மொழியையும், நட்சத்திரமாய் ஜொலிக்கும் மூக்குத்தியையும், முழுதாய் நரைத்த தலையில் இடைஇடையே எட்டிப்பார்த்து சிரிக்கும் கருப்பு முடிகளையும்....அள்ளிக் கட்டிய கொண்டையையும், கண்டாங்கிச் சேலையையு, குலுங்க குலுங்கச் சிரிக்கும் போது மூடிக் கொள்ளும் சிறு கண்களையும், தன் கணவன் மீதிருந்த ப்ரியத்தை வலது கையில்  பச்சையாய் குத்தியிருந்த அவளது காதலையும் .....

இன்னமும் விட்டு விலகவே இல்லை என் காதல் .

காதல் அப்படித்தான். அது ஒரு காட்டாறு, அது ஒரு புயல், அதுவே தென்றல். அது உருவாக்கும், அழிக்கும், ஆடும், பாடும் எல்லா வேடமும் இட்டுக் கொள்ளும் தன் சுயத்தை மாற்றிக் கொள்ளாமல். அதேபோல்தான் உன் தாம்பத்தியத்திற்குள்ளும் காதல் எட்டிப்பார்த்திருக்கும், உன் வாழ்க்கைத் துணையாய் அது வாழ்ந்து சிரித்துக் கொண்டுமிருக்கும்...ஆனால் காதலுக்குள் எதுவுமே நுழைந்து விட முடியாது. இந்த உலகில் சுற்றிச் சுற்றி நிகழும் எல்லாவற்றுக்கும் காதல் அவசியமாயிருக்கிறது. காதலின்றி எந்த நிகழ்வும் ரசிக்கத் தகுந்ததாய் இருக்க முடியாது ஆனால்....காதலுக்கு எதன் தேவையும், அவசியமும் கிடையவே கிடையாது....

எதன் பொருட்டோ நிகழ்ந்தால் அது காதலுமாகாது........!

பிரசாத் பேசிக் கொண்டிருந்தான். மீண்டும் தேன் மொழியைப் பார்ப்போம் என்று அவன் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. 

தேன் மொழி பிரசாத்தை நிமிர்ந்து பார்த்தாள்....

மூணு வருசம் ஆச்சுல்ல பிரசாத்... நாம கடைசியா பாத்து......எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல....உன்னோட என்னால பேசாமவும் இருக்க முடியலை, ஆனா பேசுறது தப்புன்னும் தோணுது..., 

கோயில் பிரகாரத்தில் யாரும் இல்லாமல் இருந்தார்கள். பெரும்பாலும் பிரதோஷ தினத்தில் சிவன் கோயிலுக்கு வரும் கூட்டம் மற்ற நாட்களில் எட்டிப்பார்ப்பதே இல்லை. கபாலி யார்? ஏன் இங்கே கோயில் வந்தது...? எதற்கு கோயிலுக்கு வரவேண்டும்..? கோயிலில் என்ன கிடைக்கிறது? என்றெல்லாம் பார்த்து வருவதில்லை சனம்....

பிரதோஷ தினத்தில் நந்தியிடம் வேண்டுக்கோள் வைத்தால் வாழ்க்கையில் பணக்காரர்களாகி விடலாம் என்ற ஆசை. முட்டி முட்டி சாமி கும்பிடுகிறார்கள். அவசர அவசரமாய் ஓம்நமசிவாய சொல்கிறார்கள். சம்போ மகாதேவா என்கிறார்கள். உடலை பவ்யமாய் வைத்துக் கொள்கிறார்கள். தாழ்ந்த குரலில் பேசுகிறார்கள். பாவமாய் முகத்தை வைத்துக் கொள்கிறார்கள். சிவபுராணத்தை சப்தமாய் சொல்கிறார்கள். ஏனோ ஒரு வருத்தத்தை விரும்பியே வரவழைத்துக் கொண்டு சோகமாய் பிரகாரம் சுற்றி வருகிறார்கள். எல்லாம் முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது ஊர் வம்பு பேசுகிறார்கள். சாமி கும்பிடுவதை ஒழுக்கமாய் நினைத்துக் கொள்கிறார்கள்....அப்படி  கும்பிடாவிட்டால் ஒரு குற்ற உணர்சி வந்துவிடுகிறது இவர்களுக்கு. இந்தக் குற்ற உணர்ச்சி மதமாச்சர்யம் பார்க்காமல் எல்லா மதத்தில் இருப்பவர்களுக்கும் வந்து விடுகிறது. அப்படி வரவைத்ததுதான் மதவாதிகளின் வெற்றியும் கூட....

ஆன்மீகம் என்பது தேடல் என்பது விளங்காதவரை வாழ்க்கை என்பது என்ன என்று யாருக்கும் விளங்கப் போவதில்லை. வாழ்க்கை விளங்காத போது காதல் என்னவென்று எப்படி விளங்கும்? காதல் என்னவென்று விளங்காமல் போனதால் ஏற்பட்ட அபத்தம்தான் இன்றைக்கு பூமியை பிடித்திருக்கும் மிகப்பெரிய பிணி. காதல் காதல் என்று உச்சரித்தால் எல்லோருடைய காதிலும் காமம், காமம் என்றுதான் பெரும்பாலும் விழுகிறது.

தேனுவை நிமிர்ந்து பார்த்தான் பிரசாத்.

நாம் சந்தித்தது தற்செயலானதுதான் தேனு...!  எனக்குள்ள என்ன இருக்குன்னு நான் உன்கிட்ட சொன்னேன்.  உணர்வோடு பேசினதால கொஞ்சம் உரைநடையாவே சொல்லிட்டேன்...

உன்னை காதலிச்சது உண்மை. இப்போ காதலிக்கிறதும் உண்மை. காதலை நான் திருமணத்தோட தொடர்புபடுத்திப் பார்த்தது கிடையாது. பார்க்கப்போறதும் கிடையாது. நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி காதலிக்க காதல் மட்டும் போதும். எனக்கு உன்னைப் பிடிக்கும்... நாம காதலிச்சோம் ஆனா திருமணம் செஞ்சுக்கல, செஞ்சுக்குற சூழல் அமையலை...அதுக்காக உன்னை நினைச்சு ஏங்கி நான் வேறு திருமணம் செய்யாம இருக்கப் போறதும் கிடையாது. திருமணங்கறது சமூகத் தேவை. வாழ்கைச் சுழற்சியின் நிர்ப்பந்தம். அந்த நிர்ப்பந்தம் இல்லாம போற வாழ்க்கை அமைப்பு எனக்கு இல்ல...அதனால அதை விட்டு நான் விலகவும் முடியாது. அதே நேரத்துல நீ, உன் மீதிருந்த காதல் அது எல்லாம் இல்லவே இல்லன்னு மறைச்சுக்கிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரியும் வாழ முடியாது....

உனக்கு ஒரு பாதை...எனக்கு ஒரு பாதை....

என் காதல் என் நினைவுகள். உன் காதல் உன் நினைவுகள். என்கிட்ட பேச குற்ற உணர்ச்சி வர்றதுக்கு காரணம் காதலை இன்னமும் எதிர்ப்பார்ப்புக்குள்ளயே நீ வச்சிட்டு இருக்கறதுதான்....

எதிர்பாராம உன்னை நான் சந்திச்சேன். காதல் வயப்பட்டோம். சூழல் நம்மள வேறு, வேறு திசைக்கு விரட்டிச்சு, இப்போ ஏதிர்பாராம மறுபடி கோயில்ல சந்திச்சேன். நாம சந்தோஷமாவே மறுபடி நம்ம திசையில நடக்கப் போறோம்..அவ்ளோதான்...!

இன்னும் சொல்லப்போனால்...நீ குற்ற உணர்ச்சியோட என்னை சந்திக்கிறதும், பேசுறதும் இனிமே அமையவேக் கூடாதுன்னும் தோணுது.... 

கோயிலுக்கு ஏதேதோ எண்ணங்களோட மனுசங்க வர்ற மாதிரி வாழ்க்கைக்குள்ளயும் வந்துடுறாங்க  தேனு....! இங்க திருமணம், தாம்பத்யம், கொடுக்கல், வாங்கல், காசு, பணம், சொத்து, பிள்ளைங்க, படிப்பு, கடமைகள் தாண்டி இன்னமும் நிறைய இருக்கு....

பிரசாத் சிரித்தான்.

எப்பவும் போல நீ இப்பவும் நீயே பேசி முடிச்சுட்ட பிரசாத். என்னைச் சுற்றி இருக்குற உலகம் நீ சொன்னதை விளங்கிக்காது....ஆனா உன்னை எனக்குத் தெரியும். எல்லாத்துக்கும் மேல உன்னை ரொம்பப் பிடிக்கும்....

என்றாவது ஒரு நாள்...
நான் இறந்த செய்தி கேள்விப்பட்டால்...
என் கல்லறையில் வந்து
செடி ஒன்றை நட்டு வைத்து விட்டுப் போ...
என் ப்ரியக் காதலனே...!

சொல்லிவிட்டு கண்ணீரை துடைத்துக் கொண்டள் தேன்மொழி...கிளம்பலாம்...ப்ரசாத்.......என்றாள்.

எப்போதும் போல இனிமேலும்
உனக்கான கவிதை வரிகளை
நான் காதல் என்ற பெயரில்
கிறுக்கிக் கொண்டுதான் இருப்பேன்...
என் வார்த்தைகளுக்குள் ஊன்றி நிற்கும்
மெளன மரத்தின் கிளைகளில்
கூவிக் கொண்டிருக்கும் குயில்கள்
எல்லாம் உனக்கான பாடலைத்தான்
பாடிக் கொண்டிருக்கும்....

நீ கிளம்பு தேன்மொழி...நான் கொஞ்ச நேரம் ஆகும் கிளம்ப...சிரித்தபடியே சொன்னான் பிரசாத். 

தேன்மொழி போய் வெகுநேரம் ஆகியும் கோயில் வாசலைப் பார்த்தபடி இருந்த பிரசாத் சம்மணமிட்டு அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான்.

இனிமேல் தேனை சந்திக்க வைத்து விடாதே காலமே.......

யோசித்தபடியே தன்னுள் காணாமல் போயிருந்தான்...!



தேவா சுப்பையா...






கனவுகள் விற்பனைக்கு...!

$
0
0

என் நினைவுகளை என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ? தூரத்தில் கண்சிமிட்டிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் ஒன்றும் சொல்வதில்லையா உன்னிடம்? நிலவற்ற கருமை நிற வானத்தில் மூழ்கிக் கிடக்கையில் அந்த பெருமெளனம் எதை நினைவு படுத்தியது உனக்கு...?

ஏதோ ஒரு பாடல் கொண்டு வந்து கொட்டும் ஞாபகங்களுக்கு கூடவா ஒன்றும் தெரியாது...? யாரிடம் பேசுகிறேன் என்று தெரியவில்லை. இருந்தாலும் இப்படி வெறுமனே பேசுவது பிடித்திருந்தது.

இந்த வனத்திற்குள் நான் வந்து வெகுநாளாகிவிட்டது...! நான் வந்தமர்ந்த மலைமுகட்டிலிருக்கும் இந்தப் பெரு மரத்தின் அடியில் என்னைச் சுற்றி புற்கள் வளர்ந்தும் விட்டன. காலம் வேகமாய் நகர்ந்து கொண்டிருப்பதாய் தூரத்து வானத்தின் நீலத்தில் நீந்திக் கொண்டிருந்த ஒற்றை மேகம் என்னிடம் ஒரு மழலையாய் சொல்ல முயன்று கொண்டிருந்தது. ரோம் நகரம் அழிந்து போய் அதே வேகத்தில் மீண்டெழுந்து கொண்டதாம். கிரேக்கத் தத்துவ ஞானிகளை எல்லாம் புதைத்த இடங்களில் இப்போது தொழிற்சாலைகளை கட்டிக் கொண்டிருக்கிறார்களாம்... பிரமீடுகளுக்குள் படுத்துக் கிடக்கும் ராஜாக்கள் மட்டும் தங்கள் உறக்கத்தை யாரும் கெடுத்து விடக்கூடாது என்பதில் வெகு கவனமாயிருக்கிறார்களாம்....

பித்தக்கரஸ் தேற்றத்தை அடித்து அடித்து எழுதி நிறுவிக் கொண்டிருந்த போது அது பெருந்தச்சனுக்கு தஞ்சாவூர் பெரியகோயில் கட்ட உதவக்கூடும் நின்று நினைத்துப் பார்த்திருப்பானா என்ன? எதுவோ நிகழுகிறது... அது எங்கோ கற்பனையாய் உதிக்கிறது. யாரும் சொல்லாமலேயே சூட்சும அதிர்வுகளாய் சத்தியங்கள் மூளைகளில் கால் உதைத்து யோனி விட்டு வெளியே வரும் சிசுவாய் ஜனித்துக் கொண்டே இருக்கின்றன. குவளை மலர்களை இப்போது காண முடிவதில்லை, குருக்கத்தி என்ற பூ இருந்ததே பலருக்குத் தெரியாது, சேக்கிழாருக்கும் தழிழுக்கும் என்ன தொடர்பிருக்கிறது என்று கேட்பவன் தன்னை ஒரு தமிழ் தேசியவாதி என்று அறிமுகம் செய்து கொள்கிறான்....

முரண்களும் ஆச்சர்யங்களும் நிறைந்த இந்த உலகத்தில் வயிறுகள்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன, அதற்குப் பிறகுதான் எல்லாமே. மரணம் தனக்கு நிகழ்ந்து விடாது என்று ஒவ்வொருவனும் நம்புகிறான் அவன் இறக்கும்வரை.

இந்த வனம் எனக்கு வசதியாய் இருக்கிறது. இங்கே சட் சட்டென்று நினைத்த விசயங்களுக்குள் போய் விழுந்து, ஊன்றி விருட்சமாய் எழுந்து நின்று கொள்ள ஒரு வசதி இருக்கிறது. போலி ஆன்மீகவாதிகளின் தொந்தரவு இல்லை, வனப்பு நிறை உடல் கொண்ட பெண்கள் யாருமில்லையாதலால் பிரபஞ்சத்தின் மைய ஈர்ப்பிற்கு இங்கே வேலையே கிடையாது. சொல்லவும் கேட்கவும் ஒருவருமில்லை.. இன்னும் சொல்லப் போனால் புதிதாய் அறிந்து கொள்ள ஒன்றுமே இல்லை. இருப்பதைக் கண்டு எப்போதும் படுத்துக் கிடக்கிறதே அதோ அந்த மேற்குத் தொடர்ச்சி மலைகள் அவற்றுக்கு என்ன கத்திரிக்காய் அறிவு அவசியம் இருக்கிறது? மெல்லிய அட்டைப் பூச்சிகளைப்போல பாறைகளின் இண்டு இடுக்குகளில் கசிந்து, பின் ஒன்றும் தெரியாதது போல நான் எப்போதும் இப்படித்தான் பிரம்மாண்டமாய் இருப்பேன் என்ற கர்வத்தோடு கரைகளை உரசியபடி நகர்ந்து செல்கிறதே நதி அதற்குத்தான் என்ன நோக்கமிருக்க முடியும்...

ஜூலியட்டுக்காக விஷம் குடித்த ரோமியோ அவசரப்பட்டிருக்க கூடாதுதான் என்றாலும் இருவரும் இறந்து போனால்தான் காதல் நித்யமாய் நிலைத்து நிற்கும் என்று ஷேக்ஸ்பியர் என்ற மகா கவிஞன் நினைத்திருப்பான் போலும். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிக்குள்ளும் பதுங்கிக் கிடக்கும் ரகசியம் இதுவென்று கணிக்க முடியாதிருப்பதுதான் இங்கே மிகப்பெரிய வசீகரம் என்ற புதிரினை காதலுக்குள் வைத்து துடிக்க வைத்து விட்டான் ஷேக்ஸ்பியர் இதோ... இத்தனை காலம் ஆகியும் அதே  துடிப்போடுதான் இருக்கிறார்கள் ரோமியோவும் ஜுலியட்டும்.

ஒரு காற்றைப் போல பயணம் செய்து கொண்டிருப்பதுதான் எவ்வளவு சுகம்? ஆசைகள் இல்லாத தேவைகளோடு மட்டும் வாழ்வது எவ்வளவு இதம்? எத்தனை மிதமானது இந்த வாழ்க்கை என்று யோசித்தபடியே நான் மூன்றாவது மிடறு தேநீரை என் தொண்டைக்குள் இறக்குகிறேன். அது நெஞ்சு தொட்டு இதமாய் சூட்டினை பரவச் செய்து வயிறு வரை பயணிப்பதை நீண்ட பெருமூச்சோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன்....

காதல் என்னை ஒன்றும் செய்வதில்லை. வெகு சாதுவாய் அது என்னை வாஞ்சையாய் அணைத்துக் கொள்கிறது. எதையும் தேடச் சொல்வதில்லை. அது காற்றாய் என் முடி கோதுகையில் சட்டென்று விழித்துக் கொள்ளும் ஏதோ ஒரு ப்ரியமான பெண்ணின் நினைவுகளை குளிர் காலத்தில் குழந்தையை போர்த்தி எடுத்துச் செல்லும் ஒரு தாயின் பரிவோடு நெஞ்சோடு அணைத்துக் கொண்டு எங்கே செல்கின்றோம் என்ற பிரக்ஞை இன்றி நினைவுகளுக்குள் தன் வசதி போல பயணித்துக் கொள்கிறது. நான் வந்து தங்கி இருக்கும் இந்த மலைப்பிரதேசத்தில் குளிர் அதிகமாய் இருக்கிறது. எழுந்து நடக்கலாம் என்று தீர்மானித்தேன். இறுக்கமாய் போர்த்திக் கொண்ட கம்பளிக்குள் கதகதப்பாய் நடப்பதை விட ஒரு பெருஞ்சுகம் இருக்கிறதா என்ன இந்த வாழ்க்கையில்...?

எங்கோ தூரத்திலிருந்து மிதந்து வரும் இசை ஒன்று காதைத் தடவிச் செல்கிறது...

ஆசையா காத்துல தூதுவிட்டு
ஆடிய பூவுல வாட பட்டு
சேதிய கேட்டொரு ஜாட தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு
குயில் கேக்குது பாட்ட நின்னு
.....
....
உள்ளுக்குள் காதல் முரட்டுத்தனமாய் நிரம்பத் தொடங்கியது. ததும்பிக்கொண்டிருக்கும் காதல் யாருக்கானது என்று தெரியவில்லை என்றாலும் இந்த ததும்பல் அலாதியானது என்று யோசித்தபடியே நடந்து கொண்டிருக்கிறேன்... ஷேக்ஸ்பியர் நிறுவ முயன்றதும் பித்தகரஸ் நிறுவ முயன்றதும் ஒன்றாய் இருக்குமோ மீண்டும் ஒரு தர்க்க வாய்ப்பாட்டிற்குள் தடதடவென்று ஒரு சிறு பிள்ளையாய் மனம் ஓடத் தொடங்கியது....

யாருமற்ற இந்த வனம் எனக்குப் பிடித்திருக்கிறது.



தேவா சுப்பையா...


அது அப்படித்தான்...!

$
0
0

அது அப்படித்தான். அதிகம் அலட்டிக் கொள்ளாது. வியாக்கியானங்கள் பேசி தன்னை புகழ்ந்து கொள்ளாது. சோகமாய் தலை சாயும் போது அதுவே தோள் கொடுக்கும். கீழே விழும் போது மடி கொடுக்கும். ஆதரவாய் எப்போதும் கரம் பற்றிக் கொள்ளும், பற்றும். கவிதையாய் பேசிக் கொண்டு உரைநடையாய் வாழும் மனிதர்களுக்கு நடுவே பேச வார்த்தைகளின்றி அது மெளனமாய் நடந்து கொண்டிருக்கும்.

அடிக்கடி உணர்ச்சிவசப்படும். கோபத்தில் ஊரையே தீக்கிரையாக்கும். நேசித்து நேசித்து பிரளயம் உண்டாக்கும். பிடிக்கும் என்று சொல்லும். பிடிக்காது என்றும் முகம் திருப்பிக் கொள்ளும். பட்டாம் பூச்சியாய் எப்போதும் பட படக்கும், அந்த படப்டப்பினை கண்டும் மகிழும். அதற்கு தேவைகளென்று ஒன்றுமே கிடையாது. ஒரு கோப்பை தேநீரோடு ஆகாயத்தை வேடிக்கப் பார்த்தபடியே கண் சிமிட்டும், மழை பெய்யும் பொழுதினில் வேண்டுமென்றே குடை மறந்து நடை பயில வா என்று அழைக்கும்.

பேசிக் கொள்ள உலகமே அதனிடம் இருக்கும். பேசாமல் இருக்கவும் அதே உலகம் அதனிடம் இருக்கும். நெகிழ்ச்சியாய் உச்சிமுகந்து, ஆழமாய் நெற்றி வழி தன் அன்பினை செலுத்தும், வாங்கியும் கொள்ளும். கவிதை எழுதுகிறேன் என்று ஏதேதோ எழுதிக் கிறுக்கும். எழுதிக் கிறுக்கியதை பெருங்கவிதை என்று அதுவே வாசித்து விழிகள் விரித்து வாய் பிளக்கும். இருக்கும் போது உதாசீனப்படுத்தும். இல்லாத போது ஏங்கி அழும்.....

ஆமாம் காதல்தான் எத்தனை வலியது. எத்தனை இனியது.

இதோ..
இங்கே உனக்காக ஒரு கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்
அதில் நாம் சந்தித்த நாளில் தொடங்கி
ஒவ்வொரு கணத்திலும் நிகழ்ந்தவற்றை
ஒரு பொக்கிஷத்தை அடைத்து வைப்பது போன்று
என் வார்த்தைகளுக்குள் அடைத்துக் கொண்டிருக்கிறேன்...
மழைநாளில் நீ எனக்கு கம்பளி போர்த்தியதும்
கடுங்குளிரில் நீ நடுங்கிக் கொண்டிருந்த போது
உனக்கு நான் கால் பிடித்து விட்டதும் 
இந்த கவிதையில் கவிதையைப் போல தோற்றமளிக்க முயன்றாலும்
நிஜத்தில் அந்த நாட்கள்தான் எத்தனை சுகமானவை...
ஒரு நாள்...
என்னால் நடக்க முடியாமல் மூச்சிறைத்து நின்றபோது
நான் அறியாதபடி கண் கலங்கி எனக்காக
மெதுவாக நடந்து சென்றதை நான் கவனித்து...
கலங்கிப் போனது உனக்குத் தெரியுமா?
காலத்தின் மாற்றத்தில்
நாம் வலுவிழந்து கொண்டே இருந்தோம்...
ஆனாலும்...
உனக்கு மட்டுமே வயதாகிறது என்பாய்
எனக்கு வயதே ஆகதென்று கூறி உன் காதலால்
என்னை எப்போதும் இளைஞனாகவே வரைந்து கொள்வாய்...
 உன் நெஞ்சினில் காது வைத்துக் கேட்கச் சொல்லி
அங்கே துடிப்பது இதயமல்ல உன் மீதான காதலென்பாய்...
மிச்சமில்லாமல் வாழ்ந்து விட்டோம் என்று அடிக்கடி நீ சொல்வாய்
இதோ மிச்சமிருக்கும் உன் நினைவுகளோடு
வழக்கம் போல கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்...
இதை நீ கவிதை என்று சொன்னாலும் சரி
அல்லது
காதல் என்று சொன்னாலும் சரி...



தேவா சுப்பையா..




கோச்சடையான்....ஒரு பிரம்மாண்டத்தின் வருகை...!

$
0
0

ஆடிப்போய் கிடக்கிறது தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறை. இந்திய சினிமாவோ இன்னும் வரப்போகும் காலத்திலும் அசைக்க முடியாமல் உலாவப்போகிறதெ இந்த உருவம் என்று அதிர்ந்து போய் கிடக்கிறது. அடுத்த சூப்பர் ஸ்டார் என்று தங்களைத் தாங்களே அழைத்துச் சப்புக் கொட்டிக் கொண்டிருந்த நாயகர்கள் எல்லாம் பேயறைந்தது போல நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள் இப்போது. காரணம் ரஜினி என்ற் பிம்பம் முதுமை என்னும் காலச் சக்கரத்திற்குள் கரைந்து போய்விடும் என்று மனப்பால் குடித்தவர்களுக்கெல்லாம் நவீனத்தின் உதவியோடு சம்மடி அடி கொடுத்திருக்கிறார் சூப்பர் ஸ்டாரின் புதல்வி செளந்தர்யா அஸ்வின்.....

                                   ....கோச்சடையான்......

இது ஒன்றும் பத்தோடு பதினோராவதாக வரும் ஒரு தமிழ் சினிமாப்படம் கிடையாது. மோஷன் கேப்சரிங் என்பது உயரிய தொழில்நுட்பத்தை வைத்து குறிப்பிட்ட நடிக நடிகையர்களின் உடல் சலனத்தை துல்லியமாய் பதிவு செய்து அதை கணிணிப் படுத்தி விரும்பியபடி ஒப்பனையிட்டு, விரும்பிய இடத்தை எல்லாம் கற்பனையாய் வடித்தெடுத்து அதில் ரத்தமும் சதையுமாய் அவர்களை உலாவவிடுவது, கோச்சடையான் அப்படித்தான் ஒவ்வொரு ப்ரேமாக செதுக்கப்பட்டிருக்கிறது.  எந்திரன் படம் செய்த துவம்சத்தையே இந்திய சினிமா தாங்கிக் கொள்ள முடியாமல் ஆடிப்போயிருந்த போதுதான் சூப்பர்ஸ்டார் ராணா படத்தை அறிவித்து பூஜையும் போட்டார். ரஜினி இருக்கும் வரை அவருக்கு அடுத்து இரண்டாவது, மூன்றாவது ஏன் இன்னும் சொல்லப்போனால் நான்காவது ஐந்தாவது இடத்தில் கூட யாரும் நிற்கமுடியாது என்பதை தமிழ் சினிமா ரசிகர்களை விட தெளிவாய் அறிந்து வைத்திருப்பவர்கள் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்களும், நடிகர்களும் இயக்குனர்களும்தான்....! ஏனென்றால் அவர்களுக்குத்தான் தெரியும் ரஜினி என்னும் மாஸ் என்ன செய்யும்? ரஜினிக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் எத்தகையது? வசூல் என்றால் என்ன? ரெக்கார்ட் ப்ரேக் என்றால் என்ன? பாக்ஸ் ஆபிஃஸ் கணக்கீடுகளை ரஜினி என்னும் நடிகன் எப்படி தூள் தூளாக்குவான் என்பதெல்லாம்...

அதனால்தான் ரஜினி படம் வெளிவரும் போது அதற்கு இணையாக வேறுபடத்தை வெளியிட எல்லோரும் அரண்டு போகிறார்கள் தமிழ் சினிமா வியாபாரிகள் அத்தனை பேரும். ஏனென்றால் ரஜினியின் படுதோல்விப் படம் என்று தமிழ் சினிமா கூறும் பாபா படத்தின் வசூலே இன்றைக்கு முன்னணி நடிகர் என்று கூறிக்கொள்ளும் ஒரு நடிகரின் சூப்பர் ஹிட் வெற்றிப் படத்தின் வசூலுக்கு இணையானதுதான் என்பதை யாரலும் நம்பமுடிகிறதா? ராணா பூஜை போட்ட உடனேயே உடல் சுகமில்லாமல் போய்விட்டார் சூப்பர்ஸ்டார். இனி அவர் மீண்டு வருவாரா என்ற கேள்விகளை எல்லாம் கடந்து அவர் உயிரோடே இல்லை என்றெல்லாம் புரளிகள் கொடியவர்களால் பரப்பப்பட்டதை கேட்ட ரஜினி ரசிகர்கள் எல்லாம் துடி துடித்துதான் போனார்கள்.

ஏதாவது செய்வான் என்று எதிர்ப்பார்த்து ஒரு அரசியல் தலைவனுக்கு கொடிபிடித்து கோஷமிடும் ஒரு கலச்சார வாழ்க்கைக்கு நடுவே ரஜினியிடம் எதையுமே எதிர்ப்பார்க்காத அவரது கோடாணு கோடி ரசிகர்கள் ரஜினி நலம் பெற வேண்டும் என்று அன்பின் மிகுதியில் அப்போது தீமிதித்தார்கள், காவடி எடுத்தார்கள், மண் சோறு சாப்பிட்டார்கள், தமிழகமெங்கும் மதமாச்சர்யங்களைக் கடந்து ரஜினி மீண்டும் வரவேண்டும் என்றெல்லாம் வழிபாடுகள் நடத்தப்பட்டது. 


எம்.ஜி.ஆர் என்ற கலைப் பிம்பம் அரசியல் வாழ்க்கைக்கு வந்து முதல்வராய் அதிகாரபலத்தோடு வலம் வந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை எல்லாம் தூக்கி சாப்பிட்டது ரஜினி மீது தமிழக மக்கள் வைத்திருந்த பாசம். ரஜினி அரசியலுக்கு வந்து நின்றால் தெரியும் அவரது பலம் என்று சவால் விட்டு அறைகூவல் விடுக்கும் பலதரப்பட்ட அரசியல்வாதிகளுக்கு நடுவே ரஜினியின் ரசிகர்கள் இப்போதெல்லாம் ரஜினி அரசியலுக்கு வரவே கூடாது என்று நினைக்கவும் தொடங்கி இருக்கிறார்கள்.

அரசியல் பிரவேசம் பற்றிய தனது நிலைப்பாட்டை மிகத் துல்லியமாய் ரஜினி கூறியதைப் போல இந்த நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு யார் வந்தாலும் நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டமும் இன்ன பிற  நடைமுறை சட்டங்களும் மக்கள் எதிர்ப்பார்க்கும் அளவிற்கு அவர்களை இயங்கவிடாது. தண்டிக்க ஒரு சட்டமும் தப்பிக்க பதினாறு வழிகளும் இருக்கும் சட்டங்களை வைத்துக் கொண்டு யாராலும் ஒரு மாற்றத்தையும் கொண்டுவரவும் முடியாது. இதை நாம் இந்தியா சுதந்திரமடைந்த தினத்திலிருந்து இன்று வரை நம் கண்கூடாகவே கண்டுகொண்டுதானிருக்கிறோம்.

ரஜினி சொன்னது போல அரசியல் புரட்சி ஒன்று ஏற்பட்டு நவீனகால சர்வதேச சமூகத்திற்கு இணையாய் நாம் திகழ வேண்டுமெனில் அடிப்படையில் ஒரு மாற்றம் ஏற்படவேண்டும். அது ஏற்படாமல் தலைமைப் பொறுப்புக்கு வரும் யாராலும் மிகப்பெரிய சமூக மாற்றத்தை கொண்டுவர இயலாது என்பதாலும் இத்தகைய நெருக்கடியான ஒழுங்குகள் கொண்ட ஒரு வரையறைகள் கொண்ட அரசியல்வாதியாய் இருந்து மனநிம்மதியை இழந்து அலைவதை விட தனக்கு கிடைத்திருக்கும் பணத்தையும் புகழையும் கொண்டு மனதிருப்தியோடு உதவிகள் செய்து வாழ்ந்து முடிக்கலாம் என்று ரஜினி நினைத்ததின் விளைவே அவரை அரசியலில் ஈடுபடமால் இருக்க வைத்தது. பணம், புகழ், அதிகாரம், குடும்ப வாழ்க்கையில் வெற்றி என்று எல்லாவற்றிலும் சாதனைகள் புரிந்த ஒரு மனிதன் இது எல்லாம் எதுவும் கிடையாது என்று ஆன்மீகத்தின் மூலம் அறிந்து தான் யார்? இந்த வாழ்க்கை எவ்வளவு நிலையானது என்றெல்லாம் புரிந்த பின்பு....ஆதாய அரசியல் சூழ் உலகிற்குள் நுழைய விரும்புவாரா என்ன...?

அரசியல்வாதிகள் அவர்கள் செய்யும் அரசியலால் எதை எதை அடைய விரும்புகிறார்களோ அல்லது விரும்பினார்களோ அதை எல்லாம் தன் காலுக்கடியில் போட்டு மிதித்து விட்டு இயல்பாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ரஜினியை சகாப்தன் என்று கூறாமல்வேறு யாரை சகாப்தன் என்று கூற முடியும்?

கோச்சடையானில் ரஜினி நடிக்கவே இல்லை வேறு யாரோ நடித்து ரஜினி போல முகமாற்றம் செய்யப்பட்டது, ரஜினி கோச்சடையான் படம் ஓடவேண்டும் என்பதற்காகத்தான் ட்விவிடருக்கு வந்திருக்கிறார், ரஜினிக்கு கோச்சடையான் படத்தை வெளியிட பயம் என்றெல்லாம் அவதூறு பேசும் பதர்களே...ரஜினி என்ற ப்ராண்ட்டை வைத்துக் கொண்டு அவர் இல்லாமலேயே இன்றைக்கு சம்பாதித்துக் கொண்டிருப்பவர்கள் எத்தனை லட்சம் பேர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ரஜினியைப் பற்றி பேசுவதால் உங்களை சலிப்புடன் பார்த்துக் காறித் துப்புவதற்கு கூடும்  கூட்டம்  மட்டும் பார்த்தாலே அவரது படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்பது உங்களுக்குத் தெரியுமா..?

இதோ இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுதும் கோச்சடையான் ஜுரம் பிடித்து ஆட்ட ஆரம்பித்து விட்டது. மே 9 ரிலீஸ் என்று கேள்வி பட்டு பதினைந்து நாட்கள் முன்னதாகவே தியேட்டர்களைச் உலகமெங்கும் சூழ ஆரம்பித்து விட்டனர் அவரது ரசிகர்கள். கோச்சடையானைப் பற்றி பேசாத இந்தியர்கள் யாருமே கிடையாது. இந்திய மீடியாக்கள் அதிர்கின்றன.....தியேட்டர்கள் விழாக்கோலம் பூணத் தொடங்கி விட்டன...ரசிகர்கள் ஆர்ப்பரிக்கத் ஆரம்பித்து விட்டனர்..... 

சுமார் நான்காண்டுகளுப் பிறகு ரஜினி என்னும் மாஸிவ் ப்ளாஸ்ட்டை தியேட்டரில் அனுபவித்து ரசிக்கும் சுகத்திற்காக கிறங்கிப் போய் கிடக்கும் இத்தனை கோடி ரசிகர்களையும் எப்படி வசியப்படுத்தினார் ரஜினி என்பது படைத்த கடவுளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். கோச்சடையான் என்னும் சலன வரைகலையில் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரஜினிக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவிற்கே ஒரு மைல் கல்லாவதோடு மட்டுமில்லாமல் ரஜினி ரசிகர்களுக்கு தீராத வரப்பிரசாதமாய் அமையப்போகிறது. நாம் கண்டு அனுபவித்த ரஜினி என்னும் காந்தத்தின் ஸ்டைல் மேஜிக்களை நவீன தொழில்நுட்பம் காலங்கள் கடந்தும் நம் தலைமுறையினருக்கு கொண்டு செல்ல இருக்கிறது....


ரஜினி என்ற பிம்பம் காலத்தால் அழியாததாய் நிலை நிறுத்தப்பட்டு இதே மோஷன் டெக்னாலஜி என்னும் தொழில்நுட்பத்தால் ஓராயிரம் கோச்சடையான்கள் உருவாக்கப்பட்டு இந்திய சினிமா வரலாற்றின் இதிகாச நாயகனாய் ரஜினி என்றென்றும் வாழத்தான் போகிறார். அதோடு  மட்டுமில்லாமல் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்னும் மனிதன் ஒரு கண்டக்டராய் தன் வாழ்க்கையை ஆரம்பித்து எவரின் உதவியுமின்றி இந்திய சினிமாவில் அழிக்க முடியாத ஒரு சக்தியாய் நின்றதற்குப் பின்னால் அவர் கடந்து வந்த வேதனைகளும் வலிகளும், அவமானங்களும், கடுமையான உழைப்பும் கோடாணு கோடி பிள்ளைகளுக்கு மிகப்பெரிய உந்துசக்தியாய் நின்று வாழ்வின் பல உயரங்களை அவர்கள் தொடவும் உதவத்தான் போகிறது....


மே 23 வரை காத்திருங்கள் கோச்சடையானின் அதிரடிக்காக....



தேவா சுப்பையா...




பிடிபடாததின் ரகசியம்...!

$
0
0

திருவள்ளுவர் பேருந்தில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தோம். அப்போது எனக்கு எட்டு வயது இருக்கும். இருக்கையில் அமர்ந்தபடியே உறங்குவது எனக்கு கடினமாயிருந்தது. எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்தபடியால் நடைபாதையில் ஒரு விரிப்பை விரித்து என்னை அம்மா படுக்கச் சொன்னாள். நான் ஒருக்களித்து படுத்திருந்தேன். கீழே வேகமாய் சாலை ஓடிக் கொண்டிருப்பது போல தோன்றியதாலும், வண்டியின் சப்தம் காதுக்கு வெகு சமீபமாய் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று கேட்டதாலும் என்னால் உறங்க முடியவில்லை. உறங்கினேனா இல்லையா என்று யோசிக்கும் படியான ஒரு உறக்கம் அது. உறங்கிய மாதிரியும் தெரிந்தது உறங்காத மாதிரியும் தெரிந்தது.

உண்மை என்று எதைச் சொல்கிறோம் நாம்? எதை நாம் நம்புகிறோமோ அதைத்தானே..? நான் சென்னை வந்து இறங்கியது உண்மையாய் இருக்குமா என்ற பயம் மெலிதாய் என்னை தொற்றிக் கொண்டதற்கு காரணம் உண்டு. காரணம் அன்று இரவு நான் பேருந்திற்குள் நடைபாதையில் படுத்திருந்த போது  அதிலிருந்த ஒரு ஓட்டையின் வழியாக ஒரு காட்டிற்குள் விழுந்து விட்டேன். விழுந்த வேகத்தில் உருண்டு சாலை ஓரமாக இருந்த புதருக்குள் விழுந்து, தூக்கம் தெளியாமலேயே இன்னமும் நான் உறங்கிக் கொண்டே இருக்கிறேன். அந்த உறக்கத்தில் வந்த கனவுதான் என்னுடைய தற்போதைய வாழ்க்கை. கனவிலேயே சென்னை வந்து கனவிலேயே விடுமுறை கழிந்து மீண்டும் ஊர் திரும்பி, பள்ளி, கல்லூரி, காதல், கவிதை வேலை, திருமணம், பிள்ளை என்று என்னைச் சுற்றி எல்லாமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது ஆனால் இது எல்லாமே கனவுதான். நான் இன்னமும் பேருந்திலிருந்து விழுந்த புதருக்குள் உறங்கிக் கொண்டே இருக்கிறேன். 

ஏன் இப்படி இருக்கக் கூடாது....? என்று இப்போது நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அதாவது இதைத் தட்டச்சு செய்து கொண்டிருப்பது என் கனவில், இதை நீங்கள் வாசிப்பதும் என் கனவில் என்று வைத்துக் கொள்ளுங்களேன். கனவு முடிந்த பின்பு ஒரு வேளை நான் எட்டு வயது பாலகனாய் அந்த புதருக்குள் இருந்து எழுந்து ஓ....என்று அழுதபடியே என் பெற்றோரைத் தேடவும் கூடும். இப்படி எல்லாம் இருக்க சாத்தியமில்லை என்று கூற முடியாததுதானே...? கனவில் இது கனவா என்று கேள்வி கேட்டு இது கனவில்லை என்று கூறிக் கொண்டால் அது கனவு இல்லாமல் போய்விடுமா என்ன?

எனக்கு  அந்த சென்னைப் பயணத்திற்குப் பிறகு தொடர்ச்சியாய் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இப்படி தோன்றிக் கொண்டே இருக்கும். அந்தக் கனவில்தான் உண்கிறேன், பேசுகிறேன், சிரிக்கிறேன், அழுகிறேன், உறங்குகிறேன், கனவு காண்கிறேன். கனவிற்குள் கனவு அந்தக் கனவிலும் சில கனவுகள் வேறு வித கனவுகளைக் காண்கின்றன. இது ஒரு முடிவிலி போலவே இருக்கிறது எனக்கு. இது புரிந்தும் புரியாமலும் நீங்கள் வாசிப்பது போலவே நான் நித்தமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

இது சர்ரியலிசம் என்னும் மிகை எதார்த்தவாதமாகக் கூட இருக்கலாம். இல்லாததை இருப்பது போன்று சொல்லி அது இல்லை என்று உணர முயலும் போது அது இருப்பது போல உங்களுக்கும் எனக்கும் தோன்றலாம். யாருமே பார்த்திராத விசயங்களைப் படைப்பதுதான் சர்ரியாலிசம். சால்வடோர் டாலி, மேக்ஸ் எர்னஸ்ட், ரெனே மக்ரிதே போன்றவர்கள் படைத்த ஓவியங்கள் எல்லாம் சர்ரியலிசத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். கனவில் விரியும் கற்பனையோடு ஒரு புதிர்தன்மையை சேர்த்து நிஜத்தில் அதைப்படைத்துக் காட்டுவதுதான் சர்ரியலிசம் அல்லது மிகை எதார்த்தவாதம் என்பது. உங்கள் முன்பு அந்த படைப்பு இருக்கும் ஆனால் அது போல நீங்கள் வேறெங்கும் பார்த்திருக்க முடியாது. அதற்காக அப்படி ஒன்று இருக்கவே இருக்காது என்று நீங்களும் நானும் மறுக்க முடியாது. அது இருக்கலாம். நாம் பார்த்திருக்கவில்லை அவ்வளவுதான்.

எனக்குத் தோன்றுவது எந்த வகையில் சர்ரியாலிசத்தோடு ஒத்துப் போகும் என்று எனக்குத் தெரியவில்லை என்றாலும் இந்த வாழ்க்கை முழுதுமே நான் கண்டு கொண்டிருக்கும் கனவாய்த்தான் எனக்கு அழுத்தம் திருத்தமாய் தோன்றுகிறது. இங்கே இறக்கும் போது ஒருவேளை கனவு முடிந்து நான் புரண்டு எழுவேனோ என்னவோ...? யார் கண்டது..? எல்லாவிதமான அமானுஷ்யத்தன்மையும் கொண்ட காலத்தின் நகர்வுகளில் எது இல்லை என்று மறுக்க முடியும். எதுவும் நடக்கலாம். இந்த உலகமே யாரோ எங்கோ காணும் ஒரு பெருங்கனவாகவும் கூட இருக்கலாம்...!


நேற்று மதியம் உறங்கும் போது எனக்கு ஒரு கனவு வந்தது. அதில் நான் சிறுவயதில் குடி இருந்த அந்த வாடகை வீட்டிற்குள் கொல்லைப் புறம் வழியாக நுழைகிறேன். அது ஒரு இருளத் தொடங்கும் மாலைப் பொழுதாக இருக்கிறது. வீட்டிற்குள் சிறிது கூட விளக்கு வெளிச்சம் கிடையாது. கவலைகள் இல்லாது துள்ளித் திரிந்த அந்த வீட்டிற்குள் ஒரு சிறுவனாய்த்தான் நான் நுழைகிறேன் என்றாலும் சமகாலத்தில் ஏற்பட்டிருக்கும் எல்லா அனுபவங்களும் எனக்குள் இருக்கிறது. பெற்றது இழந்தது இரண்டும் சமவிகிதத்தில் மூளைக்குள் இடித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறது. பெற்றதைப் பற்றிய கவலைகள் எதுவும் எனக்கு இல்லை என்றாலும் இழந்தது எல்லாம் கிடைத்துவிடக் கூடுமே  என்ற ஒரு புதிரான ஆவல் எனக்குள் இருக்கிறது. வீடு சப்தம் ஏதுமின்றி பாழடைந்து கிடப்பது போல இருக்கிறது.

வீட்டின் வாசல் கதவு ஒருக்களித்து திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அந்த சிறு இடைவெளியில் மெலிதாய் வெளிச்சம் வீட்டிற்குள் வந்து விழுகிறது. வாசலில் என் 10 வயதில் இருந்த எதிர் வீட்டுக்காரர்களும் பக்கத்து வீட்டுக்காரர்களும் பேசி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். என் வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு கிணறு இருக்கிறது. அதில் எப்போதும் போல எல்லா வீட்டுக்காரர்களும் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கும் சப்தம் மட்டும் கேட்கிறது. தண்ணீர் இறைக்கும் போது சகடை ஒரு போல சத்தம் கொடுக்கும். அடிக்கடி சைக்கிள் துடைக்கும் போது எண்ணை போடும் டப்பாவிலிருந்து நான் தான் அதற்கு எண்ணை போடுவேன். சகடை சத்தம் கிரீச்...கிரீச் என்று கேட்கிறது. நான் இல்லாவிட்டால் யாருமே எண்ணை போட மாட்டீர்களா இந்த காலனியில் என்று ஒரு கோபம் வேறு என்னுள் இருந்து எட்டிப்பார்க்கிறது. எல்லா வீட்டிலும் ஆட்கள் இருக்கிறார்கள் ஆனால் என் வீட்டில் மட்டும் யாருமில்லை. எனக்கு அழுகையாய் வருகிறது. அந்த சிறிய ஹாலில் உட்கார்ந்து நாங்கள் அனைவரும் உணவருந்தி இருக்கிறோம். அங்கேயேதான் பாய் விரித்து உறங்கவும் செய்வோம்.அந்த ஹாலின் வலது மூலையில் சாலிடர் சிலைடிங் டோர் டிவி தூசு படிந்து கிடக்கிறது. 

நான் எட்டு மாதக் குழந்தையா இருந்தேனாம் அந்த வீட்டிற்கு நாங்கள் குடி வந்த போது. காலி செய்து போனது என்னுடைய 21வது வயதில் என்றாலும் இப்போது காலி செய்து போனதை வேண்டுமென்றே மறந்து கொள்கிறேன். அலமாரி, ஜன்னல், ஜன்னல் கம்பிகள், நிலைப்படி, அடுப்படி, இருக்கும் ஒரே ஒரு அறையில் இருக்கும் சாமிப் படங்கள், அப்பா, அம்மா மட்டுமே திறக்கும் பச்சைக் கலர் காட்ரேஜ் பீரோ, சுவற்றில் ஓடும் பல்லிகள், மழை வந்தால் ஒழுகும் மேலே இருக்கும் ஓடுகள், பனை உத்திரம், அந்த உத்திரத்தில் ஆங்காங்கே ஒட்டிக் கொண்டிருக்கும் ஒட்டடைகள், அலமாரியில் கலைந்து கிடக்கும் என் பள்ளிப் புத்தகங்கள், அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அக்காவின் புத்தகங்கள். என் புத்தகத்துக்கு நடுநடுவே இருக்கும் சினிமாப் பாட்டுப் புத்தகங்கள்..... என்னுடைய பள்ளிக்கூடப் பை, அக்காவின் வயர் கூடை, பானாசோனிக் டேப்ரிக்கார்டர், அது இருக்கும் செல்ஃபில் இருக்கும் சோனி 90 கேசட்டுகள், கேசட் டப்பாக்கள், இன்னொரு அலமாரியில் இருக்கும் அக்காவின் கேசவர்த்தினி தைலம்...., தேங்காய் எண்ணை தூக்கு, மேல் செல்ஃபில் இருக்கும் அமிர்தாஞ்சனம் டப்பா, மூட்டு வலிக்குத் தேய்க்கும் தென்ன மரக்குடி எண்ணை, ஏதேதோ மாத்திரைகள், ரேஷன் கார்டு, கரண்ட் பில் அட்டை, இன்ன பிற ரசீதுகள்....

எல்லாமே இருக்கிறது ஆனால் வீட்டில் யாருமில்லை. பயந்து கொண்டே ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து ஹாலில் மஞ்சள் குண்டு பல்பைத் மாற்றிவிட்டு நாங்கள் போட்டிருந்த ட்யூப்லைட்டைத் தட்டுகிறேன்......ட்யூப் லைட் எரியவில்லை. அப்பா எங்கே, அம்மா எங்கே....கேள்விகள் துளைக்க அம்ம்ம்மமா என்று அழுதபடியே என் உடையாத குரலில் சப்தமெழுப்புகையில் பட்டென்று விழிப்பு வந்து விட்டது. 


ஹாலில் சோபாவில் நான் கழுத்து வரை போர்த்தியபடி படுத்திருக்கிறேன். கனவு கலைந்தது போல எனக்குத் தோன்றவில்லை....வாழ்க்கை முறிந்தது போலத் தோன்றியது. நெஞ்சு பட பட என்று அடித்துக் கொண்டிருந்தது. எழுந்து ஏசியை அமர்த்தினேன். குளிர் நிற்கவில்லை உடம்பு தூக்கி தூக்கிப் போட்டபோது அலைபேசி அடித்தது. எடுத்துப் பார்த்தேன்....அம்மா....! அழைப்பைத் துண்டித்து விட்டு மறுபடி அம்மாவை அழைத்தேன்....அம்மாவின் குரலைக் கேட்டதும் வந்த அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். அம்மாவிடம் ஒன்றும் சொல்லவில்லை ஆனால் அம்மா...சிறுவயதில் வாடகை வீட்டில் இருந்த போது இருந்த மகிழ்ச்சி சொந்த வீட்டில் இல்லை என்பது போல பேசிக் கொண்டிருந்தாள்....நான் கனவில் கண்டதை எல்லாம் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தவள் எப்போது நான் ஊருக்கு வருகிறேன் டிக்கட் எடுத்துவிட்டாயா என்று கேட்டுவிட்டு போனை வைத்துவிட்டார்.

என்ன தொடர்பு இது? எனக்கு விசித்திரமாய் தோன்றியது. வெகு நேரம் எதுவும் பேசாமல் கனவையும் அம்மாவின் அழைப்பையும் யோசித்தபடி அமர்ந்திருந்தேன். வாழ்க்கை என்னை பணி நிமித்தமாய் எவ்வளவு தூரம் அழைத்து வந்து விட்டது என்று யோசித்தேன். எனக்கு கனவு சுகமாயிருந்தது. கனவுகள் இன்னும் நிறைய நிறைய வேண்டும் என்று தோன்றியது. வண்ணத்துப் பூச்சிகளுக்கு துதிக்கை வைத்து தந்தத்தோடு பார்க்கும் கனவு..... சிறுபிராயத்தில் புல்வெளிக்குள் வண்ண வண்ண வண்டுகள் தேடியதைப் போல புற்களுக்கு இடையே யானைகளைத் தேடும் கனவு..., நட்சத்திரங்கள் எல்லாம் நீரில் நீந்திக் கொண்டிருக்க ஆகாயத்தில் வண்ணத்துப் பூச்சிகள் நட்சத்திரங்களைப் போல பலவண்ணங்களிலும் படபடத்து ஒட்டிக் கொண்டிருக்கும் கனவு.....

நிறைய நிறைய நிகழவேண்டும் கனவுகள். அதை ததும்ப ததும்ப நிரப்பி வைக்கவேண்டும் காகிதங்களில். யாரும் காணாத காட்சிகளைக் கனவிலிருந்து கைப்பிடித்து அழைத்து வந்து இதோ பாருங்கள் என்று என் சமூகத்தாரிடம் காட்டும் பேராசை ஒன்று உண்டு எனக்கு..... ஜீசஸ் கிரைஸ்ட்டைப் போல...

சிலுவையில் அறைந்து கொள்ளுங்கள்
கவலையில்லை என்றுதானே தேவன் 
லில்லி மலர்களின் அழகிற்குள் மயங்கிக் கிடந்தான்...
அவன் படைக்க விரும்பியதைப் போன்ற ஒன்றை
அதுவரையில் அறிந்திராததால்தானே....
விசாலமான பார்வையற்றவர்கள் தங்கள் குருட்டு உலகத்திற்குள்
வெளிச்சத்தை அனுமதிக்க மறுத்தார்கள்...!
சாக்ரடீஸுக்கு கொடுத்தது போல, 
ஓஷோவிற்கு செலீனியம் கொடுத்து கொன்றது போல..
ஏதாவது ஒன்றை உலகம் செய்து கொண்டுதானிருக்கும்...
அதற்காக படைப்பவன்  நிறுத்தமுடியுமா
அவன் கற்பனைக் குதிரையை...?
கனவிலிருந்து ஒரு இழை
கற்பனையிலிருந்து ஒரு இழை
புதிர்த்தன்மையிலிருந்து ஒரு இழை
அமானுஷ்யத்திலிருந்து ஒரு இழை...
தத்துவத்திலிருந்து ஒரு இழை....
கொஞ்சம் காமம், 
நிறைய காதல் என்று 
அவன் பின்னிக் கொண்டேதான் இருக்கவேண்டும் வலையை... 

முடிந்து விடுவதும், தொடங்கி நிகழ்வதும் எப்படி, எப்போது என்று தெரிந்து விட்டால் அந்த படைப்பு என்ன படைப்பு? அதைப் படைப்பவன் என்ன படைப்பாளி...?!




தேவா சுப்பையா...








கோச்சடையான் – இது பொம்மை படம் இல்லை.. .செம்ம படம்!

$
0
0

திருடனுக்கு தேள் கொட்டியது போல முழித்துக் கொண்டிருக்கிறார்கள் கோச்சடையானைப் பற்றி விமர்சனம் செய்த கொக்குகள். இந்திய சினிமா வரலாற்றில்… ஏன் உலக சினிமா வரலாற்றில் சலனப் பதிவாக்கத்தில் உருவாக்கம் செய்யப்பட்ட அனிமேஷன் காட்சி வடிவாக தனது ஆதர்ச நாயகனைப் பார்த்த மாத்திரத்தில் திரையரங்கம் அதிர்ந்து நொறுங்கி இருக்குமா என்பது சந்தேகமே….!!!!!!! செளந்தர்யா அஸ்வின் ரஜினி மகளென்றுதான் இதுநாள் வரையில் நான் நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் கோச்சடையான் பார்த்த பின்புதான் தெரிந்தது செளந்தர்யாவும் எங்களைப் போன்ற ஒரு ரஜினி பைத்தியம் என்று!

திரையில் மனிதப் பிம்பங்களை நேரடியாக பார்த்துப் பழகிப் போயிருந்த  கண்களுக்கு படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களுக்கு புதிய திரைவடிவம் கொஞ்சம் பயிற்சி கொடுப்பது என்னவோ உண்மைதான் என்றாலும்… சூப்பர்ஸ்டார் குதிரையிலிருந்து குதித்து நடந்து வரும் காட்சியில் மெல்ல மெல்ல திரைக்குள் குவியத் தொடங்கும் நமது மனது ரஜினியின் காந்தக் குரலைக் கேட்கத் தொடங்கும் அந்தக் கணத்திலிருந்து கதைக்குள் தொபுக்கடீர் என்று விழுந்து மொத்தமாய் கரைந்து போயே விடுகிறது!

அதன் பிறகு கோச்சடையானின் பிரம்மாண்டத்தில் வாய்பிளந்து திரையில் நடக்கும் மாயாஜாலத்தை பார்த்து படத்தை விமர்சித்து, படம் தோற்க வேண்டும் என்றெண்ணிய பக்கிகள் கூட கை தட்டி விசிலடிக்கும் ஆச்சர்யக் கூடமாக மாறிப்போய்விடுகிறது மொத்த திரையரங்கமும்….

எப்படி ஜெயிப்பது என்பதை ஜெயித்து பிரம்மாண்டமாய் நிற்கும் ஒருவருக்குத் தெரியாதா என்ன? ரஜினியின் ஜிம்மிக்ஸ் வேலைகளுக்கும் வசீகர ஸ்டைல்களுக்கும், ரசிகனின் நாடித் துடிப்பு எப்படிப்பட்டது என்றறிந்து விருந்தளிக்கும் திறமைக்கும் கண்ணை மூடிக்கொண்டு நாம் சல்ட்யூட் அடித்துதான் ஆகவேண்டும். இதுவரைக்கும் எத்தனையோ புராண, இதிகாச வரலாற்று டொட்டடாயிங் படங்கள் உலகெங்கும் வந்திருந்தாலும் கூட இடுப்பிலிருக்கும் வாளை இப்படியும் கூட எடுக்கலாம் என்று பாடம் சொல்லிக் கொடுக்கும் படம்தான் கோச்சடையான்.

ரணதீரன் என்னும் மாவீரன் ஏன் கலிங்கபுரிக்குள் சிறுவயதிலேயே வருகிறான், எப்படி சாதுர்யமாய் அங்கே அடைபட்டுக் கிடக்கும் கோட்டைப்பட்டினத்து அடிமைகளை மீட்கிறான்…? கோட்டைப்பட்டினத்துக்கும் ரணதீரனுக்கும் என்ன தொடர்பு, கோட்டைப்பட்டினத்தின் மன்னனை ஏன் ராணா கொல்ல நினைக்கிறான்…? யார் இந்த கோச்சடையான்…? இதை எல்லாம் திரையில் பார்க்கும் போதுதான் அதன் முழுப் பரவசத்தையும் உணர முடியும் என்பதால் கதைக்குள் முழுதாய் நான் போக விரும்பவில்லை.


ராணா ரஜினியை திரையில் கொண்டு வர செளந்தர்யா & டீம் பட்டிருக்கும் கஷ்டம் வீண் போகாமல் வெகு ஜோராய் ரஜினி ரசிகர்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளுமளவிற்கு இருக்கிறது. இளமைத் துள்ளலோடு தலைவரை திரையில் பார்த்து விட்டு அந்த போதையில் ரஜினி ரசிகர்கள் கிறங்கிக் கிடக்க….இது என்னடா இது… இந்த ரஜினியை ஒண்ணுமே செய்ய முடியாதா இனிமேல், அடுத்தடுத்த தலைமுறைகளின் இதயங்களையும் கொள்ளை கொண்டு போக இது போன்ற சலனப் பதிவாக்கத்தில் வந்து அட்டகாசம் செய்கிறாரே….? நாங்கள் எல்லாம் பிழைக்க வேண்டாமா? எங்கள் பிழைப்பில் மண் அள்ளிப் போடுகிறார்களே இப்படி என்று தமிழ் சினிமா உலகின் நாயகர்கள் எல்லாம் வயிறெரிந்து கொண்டிருப்பதுதான் இப்போதைய உச்ச பட்சக் காமெடி. ஆமாம் ரஜினியின் அட்ராசிட்டியால் திக்பிரமை பிடித்துப் போய் கிடக்கும் கூட்டம் அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் திணறிப் போயிருக்கும் இந்நேரம்.

நான் ஏற்கெனவே கூறியது போல கோச்சடையான் ஒன்றும் பத்தோடு ஒன்று பதினோராவது படம் அல்ல. அது காலங்கள் கடந்தும் வெள்ளித் திரையில் ரஜினி என்னும் லெஜண்ட்டை நிலை நிறுத்த எடுத்து வைக்கப்பட்ட முதல் அடி. இந்த முதல் அடியே மரண அடியாய் விழும் என்பது ரஜினி ரசிகர்களே எதிர்ப்பார்த்திராத ஒரு இனிய ஆச்சர்யம். ரஜினியிடம் எப்போதும் ஒரு பிரச்சினை இருக்கிறது.. அதாவது சாதாரணமாய் ஒரு சூப்பர் படத்தைக் கொடுத்து ரசிகர்களை அவர் சந்தோசப்படுத்தாமல் அட்டகாசமான அதிரடியை கொடுத்து தன் ரசிகர்களை சந்தோஷக் கடலில் தூக்கிப் போட்டு மூழ்க அடித்து விடுவதுதான் அவருக்கு வாடிக்கை. கோச்சடையானும் ஒரு அட்டகாசமான மாஸ் என்டெர்டெயினர் என்பதோடு மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆஃபீசை அடித்து நொறுக்கி எவனும் எட்டாத அளவில் ஒரு சாதனையை நிகழ்த்தி வைக்கவும் போகிறது என்பதுதான் உண்மை.

ஏ.ஆர் ரஹ்மானின் மிரட்டும் பின்னணி இசையும் அட்டகாசமான பாடல்களோடு அதிவேக ரயிலின் வேகத்தில் பயணிக்கும் கே.எஸ். ரவிக்குமாரின் திரைக்கதையும் படத்திற்கு மிகப்பெரிய ப்ள்ஸ் பாயிண்ட்ஸ். கோட்டைப்பட்டினம் மன்னரான நாசரைக் கொல்ல மாறுவேடத்தில் வரும் ராணா ரஜினிக்கும் தீபிகாபடுகோனுக்கும் இடையே நடக்கும் அந்த மாஸ் ஃபைட்டைப் பார்த்தாவது இனிமேல் சண்டைக் காட்சிகள் எப்படி இருக்கவேண்டும் என்று சினிமாக்காரர்கள் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதிரடியான அந்த சண்டைக்காட்சியில் தீபிகா படுகோனை ஈடுபடுத்தி இருப்பதும் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்…..!!!!!!

ரஜினி படம் என்றால் வசனம் ச்ச்சும்மாவே தூள் பறக்கும். அதுவும் இது அரசியல் சதிகள் நிறைந்த படம். ஒவ்வொரு வசனத்திலும் அனல் பறக்கிறது, தியேட்டர் கைதட்டலில் குலுங்குகிறது. கோச்சடையான் ரஜினியைக் கொல்ல கூட்டிச் செல்லும் போது சிறுவயதிலிருக்கும் ராணா, ‘அப்பா எங்கப்பா போறீங்க?’ என்று கேட்பார். ‘நான் ஆண்டவன் கிட்ட போறேன்ப்பா’ என்று கோச்சடையான் ரஜினி கூற….

‘ஏன்ப்பா என்னை ஆண்டவன் கூப்டல….’ என்று சிறுவன் கேட்க, அதற்கு ரஜினி…. ‘எல்லோரையும் ஒரு நாள் அவர் கண்டிப்பாய் கூப்பிடுவார்ப்பா’ என்று கூறிக்கொண்டே மரண மேடையை நோக்கி நடக்கும் காட்சியிலும் சரி, கோச்சடையான் ரஜினியின் தலையை கொய்வதற்கு முன்பு ராணா சிறுவனாய் ஓடிப்போய் தன் தகப்பனின் முன் நெற்றியில் முத்தமிடும் காட்சியிலும் சரி…. நெஞ்சம் நமக்குப் பதறிப்போகத்தான் செய்கிறது. சலனப் பதிவாக்கம் செய்யப்பட்ட படத்தில் நம்மை மீறி உணர்வுகள் பீறிட்டு, கண்ணீர் தளும்புகிறது எழுகிறது என்றால் அதற்கு முழு முதற்காரணம் தலைவர் அன்றி வேறு யாராக இருக்க முடியும்?

இரண்டு மணி நேரத்தில் படம் முடிந்து விடுகிறது. படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ‘என்வழி வினோ’ அண்ணனுக்கு அந்த நள்ளிரவில் செய்தி அனுப்பினேன், ‘..அண்ணா கோச்சடையான் தமிழ் சினிமாவின் மைல்கல் அண்ணா! இந்திய சினிமாவின் அத்தனை கதாநாயகர்களுக்கும் இந்தப்படத்தின் மூலம் தலைவர் செக் வைத்திருக்கிறார்’ என்று. அந்த நள்ளிரவில் அவர் ஏன் விழித்துக் கொண்டிருந்தார், நான் ஏன் அவருக்குச் செய்தி அனுப்பினேன் என்பதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது.

அந்தக் காரணம், ரஜினி என்னும் மிக அற்புதமான மனிதர்!!!!!! 

ரஜினி வெறுமனே படத்தில் நடித்துச் செல்கிறேன் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டாலும் எங்களைப் போன்ற கோடாணு கோடி ரசிகர்களை தனது அன்பால் இணைத்து வைத்திருக்கும் மாயாஜாலத்தையும் செய்திருக்கிறார். எங்களுக்கெல்லாம் ரஜினி எதுவும் செய்வார் என்று நினைக்கவில்லை, செய்ய வேண்டிய அவசியமும் இல்லை… ஆனால் எங்களுக்குள் ஒரு பாஸிட்டிவ் அலை உருவாவதற்கும், ஆன்மீகம் பற்றிய புரிதல் உண்டாவதற்கும், எங்கள் குடும்பத்தின் மீது ஒரு பிடிப்பு உண்டாவதற்கும், தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழும் போதே சமூகத்தில் ஏற்படும் பிறழ்ச்சிகளைக் கண்டு வெகுண்டெழவும் அவர்தான் எங்களுக்கு ரோல் மாடலாய் இருந்திருக்கிறார், இருக்கிறார், இருப்பார்.

கோச்சடையான் ஒரு மாஸ் சூப்பர் ப்ளாஸ்டர் வெற்றிப்படமாய் அமைந்திருக்கிறது. இங்கும் அங்கும் குறைகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் நண்பர்கள் குறைகளைப் பற்றி பேச வேண்டும் என்பதற்காகவே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை யாரும் தடுக்கவே முடியாது, தளபதி வந்தபோது பேசினார்கள், அண்ணாமலையில் ஒன்றுமே இல்லை என்றார்கள், பாட்ஷா எல்லாம் ஒரு படமா என்றார்கள்…., எந்திரன் ஒரு டுபாக்கூர் படம் என்றார்கள். அவர்கள் பேசட்டும், பேசிக் கொண்டே இருக்கட்டும். பேசுவது அவர்களின் இயல்பு!

ஓடிக் கொண்டே இருப்பது நமது இயல்பு. இதைத்தான் தலைவரின் வாழ்க்கை நமக்கு எடுத்தும் சொல்கிறது. கோச்சடையானின் ஏதோ ஒரு குறியீட்டை உணர்த்தும், பேரிலக்கியவாதிகளுக்கான படம் அல்ல அது. உலகப் படங்களைப் பார்த்து அது பற்றி பேசிப் பேசி நம் சொந்த மண்ணில் நிகழும் சாதனையை கிண்டலடிக்கும் மேதாவிகளுக்கான படமும் அல்ல. ரஜினியின் எல்லாப் படங்களையும் போல படம் ஆரம்பித்ததிலிருத்து இறுதி வரை…. உற்சாக அலைகளால் கவலைகளை மறந்து லயித்து ரசிக்கும் ரசனை உள்ளவர்களுக்கான படம் இது.

மொத்தத்தில்…. சிலர் சொல்லிக்  கிண்டலடித்தது போல,



இது ஒன்றும் பொம்மைப் படம் இல்ல…….செம்மப் படம் என்பதுதான் உண்மை!



தேவா சுப்பையா...






தமிழ் பேச்சு எங்கள் மூச்சு....!

$
0
0

ஜோடிப்பொருத்தமும், வார்த்தை விளையாட்டும் சன்டிவி ஆரம்பித்த காலத்தில் வெகு பிரபலமான நிகழ்ச்சிகளாய் இருந்தன. எம்.ஜே. ரெகோ ஜோடிப்பொருத்தம் நிகழ்ச்சியையும், ஆனந்த கீதன் வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சியையும் தொகுத்தளித்துக் கொண்டிருந்தனர். இவர்களோடு சேர்ந்து ஈ. மாலா,  ரமேஷ் பிரபா மற்றும் நேருக்கு நேர் நிகழ்ச்சியை தொகுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த ரபி பெர்னார்ட் எல்லாம் செயற்கைக்கோள் தொலைக்காட்சியின் அந்த நாளைய ஹீரோக்கள். சன் டிவியின் தமிழ் மாலை வீடுகள் தோறும் தோரணங்கள் கட்டிக் கொண்டிருந்த அந்தக் காலங்களில் தூர்தர்சனின் பட்டிமன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பார்த்து சலித்துப் போய்க் கிடந்த தமிழகம் உற்சாக போதையில் மெல்ல தள்ளாடிக் கொண்டிருந்தது.

விவாத  நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், பேச்சுப் போட்டிகள்  போன்ற சுவாரஸ்யங்களின் மீது ஏறி நின்று வருடக்கணக்கில் கோலேச்சியது விசுவின் அரட்டை அரங்கம் மட்டுமே.  எட்டு எட்டு பேராய் நான்கு அணிகள், அணிக்கு ஒரு தலைப்பு, அந்த தலைப்பை ஒட்டி  பங்கேற்பாளர்கள் பேச விசு அவர்களை குறுக்கீடு செய்து கேள்விகள் கேட்பார், கோபப்படுவார், வருத்தப்படுவார், திடீரென்று எமோசனலாகி அழக்கூடச் செய்வார், கேமரா விசுவை டைட் க்ளோசப்பில் திரை முழுவதும் காட்டும் அப்போது பார்த்துக் கொண்டிருக்கும் கூட்டம் விண்ணதிர கரகோஷம் செய்யும். இதை தொலைக்காட்சித் திரையில் பார்த்துக் கொண்டிருக்கும்  என்னைப் போன்ற அறுந்த வால்கள் எல்லாம் விசுவைக் கிண்டலடிப்பதைக் கண்டு மனம் கொதித்து சரமாரியாய் திட்டும் தாய்க்குலங்களைப் பார்க்கும் போது விசு ஏன் தேர்தலில் நிற்கக்கூடாது என்று கூட நான் நினைத்திருக்கிறேன்.

1997ல் விசுவின் அரட்டை அரங்கம் பட்டுக்கோட்டைக்கு வந்திருந்த போது போட்டியிட்ட 300 பேரில் நானும் ஒரு குழுவின் சார்பில் பேச எட்டு பேரில் ஒருவனாய் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தேன். தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முதல்நாள் இரவு நடந்த கடைசித் தேர்வில் பேசியதை வீடியோவில் பதிவு செய்து விசுவிடம் காட்டி அவர் தேர்ந்தெடுத்த 24 பேருக்கு மட்டும் மறுநாள் காலையில் தொலைபேசியில் அழைத்து நீங்கள் தேர்த்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று சொன்னார்கள். மாலை 5 மணிக்கு சூட்டிங் என்றால் காலையிலேயே வரச்சொல்லி இன்ச் பை இன்ச் ஆக விசுவின் அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் எங்களை செதுக்க ஆரம்பித்தார்கள். மேடையில் பேசும் போது அது ஒரு போதும் வழமையான மேடைப்பேச்சாய் இருந்து விடக்கூடாது மேலும் அது  எந்த வகையிலும் ஒரு பட்டிமன்றத்தை நினைவுபடுத்துவதாய் இருந்து விடக்கூடாது என்பதுதான் அவர்கள் உறுதியாக சொல்லிக் கொடுக்கும் ஒரு விசயம். அது போக சில காட்சிகள், சில பாடல்கள், என்று கூட்டத்தை வசீகரிக்கும் சில ஜிகினா வேலைகளையும் அவர்கள் செய்யச் சொல்வார்கள். மொத்தத்தில் அரட்டை அரங்கம் ஒரு சூப்பர் மசாலா பேச்சு மன்றமாக பார்ப்பவர்களை கவரும் வகையில் டைரக்ட் செய்யப்பட்டு மக்களின் முன்னால் காட்சி பதிவாக்கம் செய்யப்படும்.

ஞாயிற்றுக் கிழமை என்றால் அரட்டை அரங்கம் பெரும்பான்மையான வீடுகளில் அதிர்ந்ததற்குக் காரணம் அரட்டை அரங்கத்தை வெறுமனே ஒரு பேச்சு  மேடையாக மட்டும் விசு கொண்டு செல்லாமல் உலகத் தமிழர்கள் வாழும் எல்லா பகுதிகளுக்கும் பயணித்து அந்த அந்தப் பகுதிகளின் பிரச்சினைகள், சிறப்புக்கள் எல்லாவற்றையும் ரசனையாய் வெளியே கொண்டு வந்து காட்டவும் செய்தார். அதுவும் போக அரட்டை அரங்கத்தில் பங்கு பெறும் நலிவடைந்தோருக்கு மேடையிலேயே உதவிகளையும் அவர் பெற்றுத் தருவார். தமிழகத்தில் எந்த எந்தப் பகுதியில் எல்லாம் அரட்டை அரங்கம் குழு செல்கிறதோ அந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் பிரச்சினையையும் அரட்டை அரங்கம் பேசியது.

விசு கூடவே ஒட்டிக் கொண்டிருந்த அவரின் உதவி இயக்குனர் வி.எல். பாஸ்கர் ராஜ்க்கு அரட்டை அரங்கம் அத்துப்படியாகிப் போக அவர் விசுவை விட்டு கழன்று கொண்டு ராஜ்டிவியில் அதே அரட்டை அரங்கம் இட்லியை பிச்சுப் போட்டு அகடவிகடம் உப்புமாவாக்கினார். அரட்டை அரங்கம் அளவுக்கு இல்லாவிட்டாலும் அரட்டை அரங்கத்தின் சாயல் இருந்ததால் அந்த நிகழ்ச்சிக்கும் ஓரளவிற்கு வரவேற்பு இருக்கத்தான் செய்தது. பக்தி இலக்கியங்கள், புராணங்களில் இருந்து மேற்கோள்கள் என்று திருமுருக கிருபானந்த வாரியார்,  புலவர் கீரன் போன்றவர்களின் மேடைப்பேச்சுக்களை கோயில் திருவிழாக்களிலும்,  இன்ன பிற விழா மேடைகளிலும் கேட்டு ரசித்துக் கொண்டிருந்த தமிழ் சமூகத்தை பட்டிமன்ற பேச்சு வசீகரித்து இழுத்துப் பிடித்து எதுகை மோனையோடு அவர்கள் பேசி மேற்கோள் காட்டும் விசயத்தை நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டு ரசிக்க வைத்தது. பட்டிமன்றங்கள் இலக்கிய வாசனையோடு தூள் கிளப்பிக் கொண்டிருந்த அந்தக் களம் ரசிக்கத் தகுந்ததாய் இருந்தாலும் கொஞ்சம் இறுக்கமானதாய் இருந்தது. அந்த இறுக்கத்தை உடைத்தெறிந்தவர்கள் தமிழகத்தைப் பொருத்தவரை இரண்டு பேர்கள். ஒன்று ஐயா சாலமன் பாப்பையா இன்னொருவர் திண்டுக்கல் ஐ. லியோனி.

சாலமன் பாப்பையாவை விட இன்னும் ரகளையாய் பாட்டுப்பாடி ஆட்டம் ஆடி கேட்பவர்களை சிரிக்க வைத்து முழு நீள காமெடி ஷோவாய் பட்டிமன்றங்கள் இருக்கும்படி பார்த்துக் கொண்டார் திண்டுக்கல் ஐ. லியோனி. சாலமன் பாப்பையாவும் சரி, திண்டுக்கல் ஐ. லியோனியும் சரி இவர்கள் இருவருக்குமே ஒரு குழு இருக்கும்.. அந்த குழுதான் எந்த ஒரு பொது நிகழ்ச்சியாய் இருந்தாலும் மேடை ஏறி கொடுக்கப்பட்ட தலைப்பில் பேசி, சிரித்து நையாண்டி செய்து விவாதம் செய்து கொள்ளும். இதை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்த தமிழ் மக்களுக்கு அவர்களின் செட்அப்பில் ஒரு நாடகத்தன்மை இருப்பது பிடிபடத் தொடங்கியது. அந்த பிடிபடல் மெல்ல மெல்ல சலிப்பாய் மாறவும் தொடங்கியது. அந்த சலிப்புதான் விசு போன்றவர்களுக்கு மிகப்பெரிய ப்ளஸ்ஸாக அமைந்து அரட்டை அரங்கம் பாணி பேச்சு நிகழ்ச்சிகள் கொடி கட்டிப் பறக்கத் தொடங்கியது.


மேடைப்பேச்சு என்பது அத்தனை வசீகரம் கொண்டது. மேடைப்பேச்சுக்களால் உலகத்தில் மாற்றி எழுதப்பட்ட வரலாறுகள் ஓராயிரம். யாராவது பேசுவதில் உணர்ச்சியும், உண்மையும் இருந்து விட்டால் கேட்பவர்களுக்குள் பிரளயமே ஏற்பட்டு மனதில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு விடுமாம். தமிழக அரசியல் வரலாற்றை தீர்மானித்தது எல்லாம் பேச்சுக்கள்தான். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர் போன்றவர்கள் எல்லாம் வசீகரிக்கும் பேச்சுத் திறமை கொண்டவர்கள். தங்கள் தொண்டர்களைப் பார்த்து ”தம்பி “ என்று அண்ணா அழைத்ததும், ”உடன்பிறப்பே” என்று கலைஞர் அழைத்ததும், ”இரத்தத்தின் இரத்தமே” என்று எம்.ஜி.ஆர் அழைத்ததும் சாதாரண விளித்தலுக்கான வெற்று வார்த்தைகள் கிடையாது. அந்த வார்த்தைகள் இன்று வரை தமிழனின் நாடி நரம்பெல்லாம் ஊறிப் போய்க் கிடக்கிறது என்றால் மேடைப்பேச்சின் வல்லமை அழுத்தம் என்ன என்பதை நாம் உணர முடியும்.

கேட்பவரை கேட்ட மாத்திரத்தில் சொடுக்குப் போட்டு தான் கூற வரும் கருத்தை நடு மண்டையில் உரைப்பது போல பேசுவது ஒரு கலை. எல்லா விசயமும் அறிந்து கொண்டவர்கள் கூட அதை எப்படி எடுத்துச் சொல்வது என்பதில் பலவீனர்களாக இருப்பார்கள். நாடகத்தன்மை கொண்ட நடிப்பாய் மேடைப்பேச்சு மாறிய போதெல்லாம் நம் சமூகம் அதை நிராகரித்து நகர்ந்து வேறு பக்கம் தன் தலையை திருப்பிக் கொண்டது. ’அரட்டை அரங்கம்’ போன்ற நிகழ்ச்சிகள் இன்று தொய்வுற்றுப் போய் ’நீயா நானா’க்கள் மேலேறி வந்து நின்று பிரபலமானதற்குக் காரணம் அந்த நிகழ்ச்சியில் இருக்கும் கருத்துச் செறிவுகள் மட்டும் கிடையாது. கருத்துக்களுக்கு மேலாக அந்த நிகழ்ச்சியில் ஒரு சத்தியம் நமக்குப் பிடிபட்டிருப்பதும், அந்த விவாதத்தில் இருக்குமொரு தார்மீக நியாயம் சாதரணனின் குரலை மிகைப்படுத்தாமல் வெளிப்படுத்துவதும் நமக்குப் பிடித்திருக்கிறது என்பதே அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாயும் இருக்கிறது.

பழங்காலத்தில் போருக்குச் செல்வதற்கு முன்பு அந்த நாட்டின் மன்னனோ அல்லது தளபதியோ தங்களின் போர்ப்படை வீரர்களிடம் உரையாற்றுவார்களாம். அவர்களின் உணர்ச்சி மிகு பேச்சில், உரம் ஏறிப்போய் மதம் கொண்ட யானையாய் கூட்டம் வெறிகொண்டு தாக்கி எதிரிகளை துவம்சம் செய்யுமாம். இராஜராஜனை விட இராஜேந்திரன் மிகப்பெரிய மேடைப்பேச்சுக்காரனாய் இருந்தானாம். அந்த வெறியேற்றும் பேச்சுதான் சோழ சாம்ராஜ்யத்தை கடல் கடந்தும் விரிந்து பரவச் செய்ததாம். இப்போதெல்லாம் எல்லோரும் பேசுகிறார்கள். மொழியை அறிந்ததாலேயே, உரக்கப் பேசுவதாலேயே அவர்கள் சிறப்பாக பேசுவதாய் எண்ணியும் கொள்கிறார்கள். நிஜத்தில் சத்தியத்தை வெளிப்படுத்தும் பேச்சும் எழுத்துமே காலங்கள் கடந்து மேலெழும்பி நின்றிருக்கிறது. 


ஜோடனையானவர்களின் பேச்சுக்களும், எழுத்துக்களும் அவ்வப்போது வசீகரமாய் தெரிந்தாலும் அப்படி பேசவும் எழுதவும் செய்கிறவர்களை மனிதர்கள் வெகு சீக்கிரத்தில் மறந்தே போய்விடுவார்கள் என்பதே நிதர்சனம்.




தேவா சுப்பையா...







கடவுள் இல்லாதவர்தான்....!

$
0
0

திடீரென்று படத்தின் பெயர் மனதில் தோன்றியதாகவும், உடனே இயக்குனர் சுந்தர். சியைக் கூப்பிட்டு நாம ஒரு படம் பண்றோம் படத்தோட பேர் அருணாச்சலம் என்று சொல்லி முடித்த கையோடு இசையைமைப்பாளர் தேவாவையும் அழைத்து இந்த விசயத்தைக் கூறினாராம் சூப்பர் ஸ்டார். கதை எதுவுமே முடிவாகவில்லையாம் அப்போது, அதனால்தான் படத்தில் வந்த பஞ்ச் டயலாக்கை கூட "ஆண்டவன் சொல்றான் இந்த அருணாச்சலம் செய்றான் "என்று கூட வைத்தார்களாம். அதாவது எதுவுமே மனிதர்கள் முடிவு பண்ணாமல் கடவுள் முடிவு பண்ணியதாம்.

நிஜத்தில் இந்த உள்ளுக்குள் தோன்றும் விசயங்களை ஆண்டவன் தான் தீர்மானிக்கிறாரா? என்ற ஒரு கேள்வி எனக்குள் வெகுநாளாய் இருந்து கொண்டிருப்பதற்கு காரணம் இதே போன்று எழுத்துச் சித்தர் பாலகுமாரனும் கூறுவதுதான். அவரும் கூட நான் எழுதுவது எல்லாம் எனக்குள் ஸ்பூரித்தது என்று அடிக்கடி சொல்வார்.  கடவுள் என்னை வழிநடத்துகிறார், எல்லாம் கடவுள் கிருபை, நான் ஆன்மீகத் தேடலில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்வதில் ஏதோ ஒரு கிறக்கம் நிறைந்த சுகம் இருப்பதாகவே எனக்குப் படுகிறது. இந்தக் கட்டுரை நாத்திகம் பேசி ஆத்திகத்தை அமுக்கவோ அல்லது ஆத்திகம் பேசி நாத்திகத்தை நசுக்கவோ விரும்பவில்லை  மாறாக இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு மியூட் மனோ நிலையில் எழுதப்பட்டது என்பதை வெகு குறிப்பாக இங்கே கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

எல்லோருக்குள்ளும் ரஜினிக்குத் தோன்றியதைப் போல, பாலகுமாரன் கூறுவதைப் போல எப்போதும் ஏதோ ஒன்று ஸ்பூரித்துக் கொண்டுதான் இருக்கிறது... ஆனால் இந்த ஸ்பூரிப்புத் தன்மைக்கு ஏன் நாம் ஒரு அமானுஷ்யத் தன்மை கொடுக்க வேண்டும் என்பதுதான் எனக்குப் பிடிபடவில்லை. ஒரு கட்டுரையாளனோ, அல்லது கதாசிரியனோ உருவாவது கடவுள் விருப்பம் என்று நான் நினைக்கவில்லை. அதைக் கடவுள் அனுக்கிரகம் என்று சொல்லும் பதம் கூட எனக்கு அபத்தமாய் தெரிகிறது. இதே போலத்தான் ஆன்மீகக் குருக்களையும் நான் வெகு சமீப காலமாய் நினைக்கத் தொடங்கி இருக்கிறேன். ரஜினிக்கு அருணாச்சலம் பிடித்த கடவுள், அதே சிந்தனையில் இருந்திருப்பார், கிரிவலம் போகும் போதெல்லாம் சிவனை பற்றி யோசித்து யோசித்து அந்த ஆழமான எண்ணம், அந்த பாசம், அந்த கடவுளின் மீது கொண்ட ஈர்ப்பு டக்கென்று அவரை அந்தப் பெயரை சூட்டவைத்து படம் எடுக்கச் சொல்லி விட்டது. அவருக்கு இருந்த வசதிகள் அதுநாள் வரை கட்டமைத்து வைத்திருந்த அவரது தொடர்புகள் சூழலை சாதகமாக்கி வைத்து விட்டது அவ்வளவுதான்.

இதே போல அபூர்வ ராகங்கள் நடித்து முடித்த பின்பு ரஜினிக்கு மனதில் ஏதோ ஒரு படத்தின் பெயர் ஏன் தோன்றவில்லை?  அது தோன்றாது. அப்போது அப்படி எண்ண மனதுக்கு தைரியமும்  கிடையாது. மனம் கூட நமது வசதி பார்த்துதான் செலக்டிவாக இந்த ஸ்பூரித்தல்களை உண்டாக்குகிறது. இதே போலத்தான் எழுத்தாளர்களுக்கும்... எழுத்தாளன்  என்பவன் ஏதோ பேனா பிடித்து காகிதத்தில் எழுதத்தெரிந்தவன் மட்டும் அல்ல. எழுத்தாளன் என்பது ஒரு குணம். அது சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்கும் பிறப்பியல் தன்மை. அந்த பிறப்பியல் தன்மைக்கு கர்மா காரணமாகிறது. கர்மாவை ஏற்றுக் கொள்ளும் நான் ஏன் கடவுளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றுதானே கேட்கிறீர்கள்...! 

நான் கடவுளை ஏற்றுக் கொள்கிறேன். அதன் பரிபூரண இயக்கத்தை மானசீகமாய் நம்புகிறேன்... ஆனால் அதை மனிதர்கள் தங்களோடு தொடர்புபடுத்திக் கொண்டு ஒரு அசாதாரண நிலைக்கு தங்களை உயர்த்திக் கொண்டு சுற்றி இருக்கும் மனிதர்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டிக்கொள்ளும் அந்த போலி புனிதத்தன்மையை நான் எதிர்க்கிறேன் அவ்வளவுதான். கடவுளை தொடர்புபடுத்திக் கொள்ளாத புனிதனாக ஏன் நம்மால் இருக்க  முடியாது? வெகுஜனத்தை வசீகரிக்க ஒரு சூப்பர் பவர் நமக்குத் தேவைப்படுவதால்தானே.... நான் கடவுளின் பிரதிநிதி அல்லது நான் கடவுள் என்றெல்லாம் கூறவேண்டி இருக்கிறது?

தொடர்ச்சியாய் எதைச் சிந்திக்கிறோமோ எது பற்றி அதிகம் ஆர்வம் காட்டி ஈடுபாடு கொள்கிறோமோ இன்னும் சொல்லப்போனால் எது நமக்குப் பிடிக்கிறதோ அதன் மீது ஒரு ப்ளூயன்சி நமக்கு வந்து விடுகிறது. அது கடவுளாய் இருந்தாலும் சரி கடா வெட்டுவதாய் இருந்தாலும் சரி. எல்லோர் முன்பும் நான் நல்லவன் என்று காட்டிக் கொள்ளும் முயற்சியில்தான் இந்த பூமிப்பந்தில் வசிக்கும் எல்லா தரப்பு மனிதர்களும் இருக்கிறார்கள். என்ன ஒன்று ஒருவன் டாஸ்மார்க்கில் தனது கட்டிங்கிற்கு சைட் டிஷ் நன்றாக இருக்கிறது என்ற சந்தோசத்தோடு ஒரே மடக்கில் குடித்தபடியே தன்னை நல்லவனாக எண்ணிக் கொள்கிறான்.... இன்னொருவன் பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடி தன்னை யாரென்று அறிந்து கொள்கிறேன் பேர்வழி என்று சாந்த சொரூபியாக தன்னை நல்லவன் என்று நிலை நிறுத்திக் கொள்ள முயல்கிறான். 

இதில் ஒன்று சிறப்பு இன்னொன்று தவறு என்று நாம் சொல்வதற்குப் பின்னால் திணிக்கப்பட்ட வழமையான பொதுபுத்தி மட்டுமே இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? கெட்டுப்போபவன் குடித்து குடித்தும் கெட்டுப் போவான், கடவுள் எனக்கு வெகு பரீட்சயம் என்று கூறிக் கொண்டு சராசரி வாழ்க்கையின் எதார்த்தங்களை எதிர்கொள்ள முடியாமலும் கெட்டுப்போவான்.


கடவுள் தேடல் என்பதும் ஆன்மீகத்தில் ஈடுபாடு என்பதும் ஒரு பாட்டு கற்றுக் கொள்ளவும், ஆட்டம் கற்றுக் கொள்ளவும், கவிதை எழுதவும், கணக்குப் போடவும், கொலை செய்யவும், திருடவும் ஒரு மனிதன் கொள்ளும் ஆர்வத்தைப் போன்றதேதான். இங்கே சிறப்பு விகுதி எங்கே இருந்து வந்தது என்பதுதான் எனக்கு இதுவரை பிடிபடவில்லை. ஒரு ஓவியன் தன்னை தலை சிறந்த மனிதப்படைப்பாக கருதிக் கொண்டானேயானால் அது எவ்வளவு பெரிய அபத்தமோ, ஒரு பாடகன் தான் தான் உலகை வழிநடத்த வந்த அதி சிறந்த மனிதன் என்று கூறிக் கொள்வது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தமானது கடவுள் பெயரால் வழிகாட்டுகிறேன் என்று சொல்வதும் கடவுள் வழிகாட்டுகிறார் என்று சொல்வதும்....

காலங்கள் தோறும் மனிதர்களை வழிநடத்த ஏதோ ஒரு சக்தியோ அல்லது சூழலோ அல்லது மனிதர்களோ அவசியப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இது ஒரு சராசரியான நிகழ்வு. சிந்திக்க தெரிந்தவன் சிந்தனையின் தெளிவினை சக மனிதனுக்குச் சொல்லிக் கொடுப்பதில் என்ன அமானுஷ்யம் இருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? எவ்வளவுதான் கற்றுக் கொடுத்தாலும் மெளனத்தை யார்தான் நமக்குச் சொல்லிக் கொடுத்துவிட முடியும்? யாராவது நமக்காக நடக்க முடியுமா? உயிர் வாழ முடியுமா? அல்லது உறங்க முடியுமா? முடியாதுதானே...? ஜென்மங்களாய் அலைந்து திரிந்து, மிதிபட்டு, அடிபட்டு அனுபவத்தோடு பயணிக்கும் ஒரு ஆத்மா அந்த அனுபவத்திலிருந்துதான் தனது அடுத்த அடுத்த வாழ்க்கையைப் பார்க்கிறது. இங்கே தேடிக் கொண்டிருக்கிறேன் என்று நாம் கூறுவதும் எனக்கு கடவுள் தேடல் பிடித்திருக்கிறது என்று எண்ணிக் கொள்வதும் கர்மாவின் தொடர்ச்சி. இந்த பிறவியில் நமக்கு வாய்த்தது அடுத்த பிறப்பில் வேறு ஒருவனுக்கு வாய்க்கும் அல்லது போன பிறவிகளில் யார் யாருக்கோ வாய்த்தது இந்த பிறவியில் நமக்கு வாய்த்திருக்கிறது அவ்வளவுதான்.

’சும்மா இரு சொல்லற” என்று ஒரு மகா வாக்கியம் இருக்கிறது. இந்த சும்மா இருத்தல் என்பது கடவுள் தேடலையும் தூக்கி ஓரமாகத்தான் வைக்கச் சொல்கிறது. எந்த வழிமுறையையும் பின்பற்றாமல் இருந்ததனை இருந்தபடி இருந்து போகத்தான் சொல்கிறது. கடவுள் தேடுகிறேன் பேர்வழி என்று நானும் பல்வேறு அபத்தங்களுக்குள் சிக்கிக் கொண்டிருந்திருக்கிறேன். மனதால் கற்பனைகள் கூட செய்து பார்த்திட முடியாத பிரபஞ்சத்தின் முழுமையை இங்கே சொற்களில் இறக்கி வைத்து விட முடியுமா என்ன? கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பதுதான் உண்மை. அறிந்த மாத்திரத்தில் அங்கே அறிவிக்க ஒன்றுமே இல்லாமல் போய்விடுவதுதான் இந்த பிரபஞ்சத்தைப் பற்றிய உச்சபட்ச அறிவாய் இதுவரை அறியப்பட்டிருக்கிறது. இந்த சத்தியத்தை முழுமையாக ஒரு வார்த்தைப் பகிர்தலும் இன்றி உணரவைத்தவர், உருவாக்கிக் கொடுத்தவர்கள் என் அறிவுக்கு எட்டியவரை புத்தரும்.. லாவோட்சுவும் தான்...!

இவர்கள் இருவரைத் தவிர நான் பார்த்த அத்தனை பேரும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். சட்ட திட்டங்கள் வகுத்துக் கொடுக்கிறார்கள். தங்களை பீடத்தின் மீது இருத்திக் கொண்டு என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சிஷ்யகோடிகளுக்கு ஆணையிடுகிறார்கள். புத்தரும், லாவோட்சுவும் தன் வாழ்நாள் முழுதும் எதையுமே போதிக்க விரும்பியிருக்கவில்லை. இங்கும் அங்கும் இருக்கும் அவர்களின் தத்துவங்கள் எனப்படுவது யாவுமே சுற்றி இருந்தவர்களின் நச்சரிப்பு தாங்காமல் அவர்கள் உரைத்துச் சென்ற சில பொய்கள்தான்....!

எதுவும் இங்கே யாருக்கும் தன் முயற்சியின்றி ஸ்பூரிக்காது. ஸ்பூரிக்க வைக்கவும் யாரோ ஒருவரை ஆகச் சிறந்தவராக்கி தன்னோடு அழைத்துச் செல்லவும் கடவுள் ஒரு போதும் விரும்பியதில்லை, விரும்பப்போவதும் இல்லை....! முழுதும் தன்னை உணர்ந்த யோகியாய் தன்னுள் ஆழ்ந்து கிடந்து தன்னை மறந்து கிடப்பதும் அவர்தான்......

பாசி பிடித்த குளத்தின் அழுக்கு நீரில் ஒரு சொறித்தவளையாய் மிதந்து கொண்டே இன்னொரு சொறித்தவளையை புணர்ந்து கொண்டிருப்பதும் அவர்தான்....

கடவுள் இல்லாதவர்தான்....

ஆமாம்...

இங்கிருப்பவர்கள் எல்லாம் கடவுளென்றால் என்னமோ ஏதோ என்று எண்ணிக் கொண்டு தேடி ஓடும் இலக்குகளில் எல்லாம் அவர் எப்போதும் இல்லாதவர்தான்...!



தேவா சுப்பையா...





காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்னே... விந்தையடி?!

$
0
0

ஒரு மாதிரியான தருணம்தான் அது. இமைக்க கூட மறந்து அவளின் விழிகளுக்குள் நான் கிடந்தது. காதலைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கெல்லாம் என்ற ஒரு கேள்வி மமதையாய் புத்திக்குள் ஏறி சிவதாண்டவம் கூட அப்போது ஆடிக் கொண்டிருந்தது. காதல் வெளிப்படுவது விழிகளில்தான் என்று மீண்டுமொரு முறை காலம் எனக்கு மெய்ப்பித்தது. இதற்கு முன்பு இரண்டொரு முறை காதல் கண்களுக்குள்ளிருந்து என்னைப் பார்த்து என்ன செளக்யமா என்று கேட்டதும் உண்டு. நிறைய கண்களை நான் கண்டிருக்கிறேன் என்று சொல்லும் போதே ஆண்களின் கண்கள் எல்லாம் உங்கள் மனதில் இருந்து கழன்று போகக் கடவதாக;

ஆண்களின் கண்களைப் பற்றி பெண்கள் அல்லவா சிலாகித்து எழுத வேண்டும் அது பற்றிய கவலை எனக்கெதற்கு? குண்டு கண்கள், கூர்மையான கண்கள், சிவந்த வரியோடிய கண்கள், வெள்ளை வெளேறென்ற தும்பைப்பூ நிற கண்கள், துரு துரு கண்கள், சாந்தமான கண்கள், எப்போதும் கோபமேறிப்போய் உஷ்ணம் வீசும் கண்கள், வசீகரமாய் சொடக்குப் போட்டு அழைத்து இன்று இரவு எதுவும் வேலை இருக்கிறதா என்று கேள்வி கேட்டு சொக்க வைக்கும் கண்கள், எனக்கு ஒன்றுமே தெரியாது என்று அப்பாவியாய் பேந்த பேந்த விழிக்கும் கண்கள் என்று பெண்களின் கண்களைப் பற்றி டாக்டரேட் செய்யும் அளவிற்கு எனக்கு அனுபவம் உள்ளது என்கிற சுயதம்பட்ட நாற்காலியை எடுத்து ஒரு ஓரமாய் வைத்து விடுகிறேன்....

காதலோடு நான் கண்ட அந்தக் கண்களுக்கும் மேலே நான் சொல்லியிருக்கும் கண்களுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. காதல் நிறைந்த கண்கள் கொஞ்சம் மிதமான கண்ணீரில் நீந்தும் மீன்களைப் போலவே துடித்துக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றும். வாழ்வா சாவா என்பது போன்று ஒரு வித படபடப்புடனேயே தனக்குப் பிடித்தவனின் கண்களை பார்த்துக் கொண்டிருக்கையில் அந்த வாஞ்சையை எப்படி வார்த்தைப் படுத்துவது என்று என்னைப் போன்ற கிறுக்கன்களால் மட்டுமே யோசிக்க முடியுமோ என்னவோ....

நான் அவள் விழிகளை பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் தட்டுத் தடுமாறி பேச முயன்ற அத்தனையையும் இம்மி பிசகாமல் சொல்லிக் கொண்டிருந்த அந்த கண்களுக்குள் மெல்ல மெல்ல ஊடுருவி என் பார்வை பயணித்துச் சென்று ஸ்தம்பித்து நின்றது அவளின் இதயமாயிருந்தது. ஓ....கடவுளே இத்தனைக் காதலையும் சுமந்து கொண்டு எப்படி துடித்துக் கொண்டிருக்கிறது இந்த சிறு இதயம் என்று நான் திணறலாய் யோசித்துக் கொண்டிருக்கையில் வாஞ்சையாய் என் கரம் பற்றிக் கொண்டாள் அவள்.

தேவதை, அழகி, இம்சை, நிலவு, தென்றல், குளிர், நறுமணம், மென்மை, மலர், பட்டாம் பூச்சி, கவிதை, மழை, நனைதல், அருவி, வானம், நட்சத்திரம், யாருமில்லாத பெரும் மெளனம், இளையராஜாவின் ஒரு பழைய பாடல் என்றெல்லம் வர்ணித்து தனக்குப் பிடித்தவளை ப்ரியமான வார்த்தைக்குள் கொண்டு வர எவ்வளவு பிரயத்தனம் செய்திருக்கும் இந்த உலகம் என்று நினைத்த போது உவமைகள் எல்லாம் காகிதப்பூக்களாய் எனக்கு தெரிந்தன. இது வேறு விதமானது என்று எனக்குத் தோன்றியது. இது சுகமும் அல்ல, துக்கமும் அல்ல. இது ப்ரியமானது அல்ல வெறுப்பானதும் அல்ல. இது இனிமையானதும் அல்ல கொடுமையானதும் அல்ல. இது எதுவுமே கிடையாது ஆனால் இது தான் எல்லாமே......!!!!!

அவள் என்னெதிரில் அமர்ந்திருந்தாள். குறைந்து போய்விடாமல் அவளின் முன்பிருந்த முழுக் குவளையில் ததும்பிக் கொண்டிருந்த பழரசம் இன்னமும் அவளின் தொண்டையை நனைத்து நகரும் பாக்கியம் கிட்டவில்லையே என்று கொதித்துக் கொண்டிருப்பது போல தோன்றியது எனக்கு.....

உண்மையில் அப்போது மொழி என்பது அனாவசியமானதாய் எனக்குப் பட்டது. பேசவோ கேட்கவோ நாங்கள் இருவருமே விரும்பி இருக்கவில்லை. மெளனத்தை மென்று கொண்டிருக்கையில் சப்தநாய்களின் குரைச்சல்கள் யாருக்குத்தான் பிடிக்கும்...? நான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கு ஒரு ஓவியம் ஒன்றைக் காலம் தீட்டிக் கொண்டிருப்பதாய் பட்டது. தூரிகைகள் இலக்கற்று பயணிக்கும் அந்த சுகத்தில் நான் தூரிகையாகவும் அவள்  என்னை நனைத்துக் கொண்டிருக்கும் வர்ணக் கலவையாகவும் எனக்குத் தோன்றியது.

இந்தக் காதல் ஏன் எனக்கு மொழி வடிவமாகவோ, அல்லது இசை வடிவமாகவோ அல்லது ஏதோ ஒரு கற்பனை வடிவமாகவோ தோன்றாமல் ஓவிய வடிவமாய் தோன்றுகிறது என்று யோசிக்க முடியவில்லை என்னால்....

அவள் இமைத்தாள்....
தூரிகை நகர்ந்தது....
அவள் சிரித்தாள் ....
தூரிகை நகர்ந்தது....
அவளின் கேசம் காற்றில் பறந்தது
தூரிகை நகர்ந்தது....
விழிகளால் என் விழிகளுக்கு
ஒத்தடம் கொடுத்தாள்....
தூரிகை நகர்ந்தது....
அந்த மாலை நேரத்துக் காற்றில்
திரைச்சீலைகள்...அங்குமிங்கும் பறந்தன....
தூரிகை நகர்ந்தது....,
நான் ஏதுமற்ற தூரிகை...
அவள் எல்லாமான வர்ணக்கலவை...!

எனக்குள் ஒரு காட்சியாய் தைல வண்ண ஓவியமாய் அந்த சூழல் உருவாகிக் கொண்டிருந்தது. இது அழகு. இது மென்மை. இது சுகம். இது நலம் என்றெண்ணியபடியே நான் ஆழமாய் பெருமூச்சு விட்ட போது அவள் சும்மாயிருந்திருக்கலாம்.... எனக்குள் சாதாரணமாய் வெளிப்பட்ட பெருமூச்சு அவளுக்குள்ளும் இருந்து வெளிப்பட்டு அடங்கிய பொழுதில் ஏறி இறங்கிய அவளின் கூர்மையான மார்பின் மீதிருந்து தட தடவென்று நான் கீழே விழுந்து பின் கவனமாய் மேலேறி அவளின் மென் உதடுகளின் மீதமர்ந்து கொண்டு அவள் சுவாசித்தலை மீண்டும் ரசிக்கத் தொடங்கினேன்....

கேட்க யாருமில்லை அங்கே என்பது தெரிந்திருந்ததால் பேச எதுவுமில்லை என்பது இருவருக்குமே தெரியும். விழிகள், இமை, நாசி, காதுமடல்கள், காற்றில் பறக்கும் கேசம், நீளமான கழுத்து, ஆழமான பார்வை....அவள், நான்.....

இதற்கு மேல் அங்கே வேறொன்றும் இல்லை பேசித் தொலைக்க...! பேசி பேசி என்ன செய்து விட்டது இந்த உலகம். காதல் என்று சொல்லி பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறது. திருமணம் என்று சொல்லி ஒருவரை ஒருவர் சிறையிலடைத்து வைக்கிறது. பொருள், அருள், தேவை, அனாவசியம், அரசியல், தத்துவம், ஆன்மீகம், பக்குவம், பரவசம், புத்தகம் புண்ணாக்கு என்று ஏதேதோ பேசிப் பேசி எப்போதும் இரைச்சலுக்குள் வாழச்சொல்கிறது.....

நானும் நீயும்....நீயும் நானும் 
எங்கிருந்து வந்தோம்....?
யார் சொல்லிக் கொடுத்தது 
நமக்கு சப்தமில்லாத இந்த
ஜீவ இசையை...?

ஜீவன்களுக்கான இசையை எப்போதும்
இசைத்துக் கொண்டிருக்கிறது காலம்
எனக்கு இவள் இசைக்கிறாள்...
அவளுக்காய் நான் இசைக்கிறேன்....
காலங்களைப் பற்றி எங்களுக்கென்ன கவலை
இதோ நகர்ந்து கொண்டே இருக்கிறதே காலம்
இது தானே எங்களைச் சேர்த்தது....
இதுதானே பிரிக்கவும் செய்யும்....
மீண்டும் இதுவன்றி
வேறு எது எங்களை இணைத்து விட முடியும்?

புலன்களுக்குள் பூட்டுப் போட்டுக் கொண்டு வாழும் மானுடர்க்கு நடுவில் திக்குகளற்றுப் பாய்பவர்களுக்கு  ஏது பூட்டு? எது சாவி? உடல் என்பது மனதின் பார்வைதானே...சூட்சுமங்களை இல்லை என்று சொல்லி விட்டால் அவை இல்லை என்றாகி விடுமா என்ன?

மீண்டும் அவள் கரம் பற்றினேன்...
அவள் கண்ணீர் சிந்தினாள்...
என் கைவிரல்களில் சூடாய் பட்டுத் தெரித்தது
யுகங்களாய் இந்தப் பிரபஞ்சத்தில் 
பயணித்துக் கொண்டிருக்கும் காதலின் சூடு
அவள் கண்களிலிருந்து அது ததும்பிக் கொண்டிருந்தது...

எனக்கு என்னவோ செய்தது. கட்டியணைக்க நினைத்தபடி அவளின் தலை தடவினேன்.... வாஞ்சையான காதலனாய் மட்டுமல்ல.....வலி நிறைந்த தகப்பனாயும் கூட....! காதலனாய் இருப்பது சுகம்தான்....அதைவிட பெருஞ்சுகம் அதே காதலிக்கு  தகப்பனாய் இருப்பதும்தான்....

பிரிந்து விட்டோம்....., மீண்டும் சேர்வோம்....!



தேவா சுப்பையா...





தக்க்ஷின் குட் ஈவினிங்...!

$
0
0

தக்க்ஷின் குட் ஈவினிங் மே ஐ ஹெல்ப் யூ.....

தட்டுத்தடுமாறி பிபில் டெலிபோன் ஆப்பரேட்டர் போர்டை ஹேண்டில் செய்து கொண்டிருந்த 1998 ஆகஸ்ட் மாதத்தில் ஒரு விநாயகர் சதுர்த்தியின் இரவு அது. முதல் நாள் வேலை அதுவும் வாழ்க்கையின் முதல் முதல் வேலை எவ்வளவு கடினமாய் இருக்குமோ அதை விட பலமடங்கு கடினமாயிருந்தது எனக்கு. கிராமப்புற பகுதிகளிலேயே உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பினை முடித்து விட்டு தட்டுத் தடுமாறி ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்த நான் எவ்வளவு தைரியம் இருந்தால் ஒரு ஸ்டார் ஹோட்டலில் ப்ரண்ட் ஆஃபிஸ் அஸிஸ்டெண்ட் ஆக வேலைக்கு சேர்ந்திருப்பேன். ஏதோ அடிச்சு மாற்றி பேசுவேன் என்றாலும் ஆங்கில புளூயண்ட்சி என்னிடம் மண்டியிட்டு கதறி அழுது என்னை விட்டு விடு என்று கெஞ்சத்தான் செய்யும்.

என்னுடைய முதல் வேலையின் முதல் இரவு. துணைக்கு ஒரு ஆக்ராக்காரன் அசோக் குமார் சிங் என்று....என் வயதை ஒத்தவன் தான் ஆனால் 21 வயதில் என்னிடம் எம்.என் நம்பியாரைப் போல வில்லத்தனம் செய்த ஆங்கிலம் அவன் நாக்கில் 16 வயதுக் குமரிப் பெண்ணாக நர்த்தனம் ஆடியதுதான் காலத்தின் கோலம். அப்போதைக்கு என்னைக் காப்பாற்ற  பாரதத்து கிருஷ்ணனாக அசோக்குமார் சிங்கும் திரெளபதியைப் போல பரந்தாமா என்னைக் காப்பாற்று என்றிருந்த நானும் தத்து பித்து வென்று ஆங்கிலத்தில் அவனிடம் பேசி சமாளித்துக் கொண்டிருந்தேன். அந்த இரவு  இன்னும் கொஞ்ச நேரத்தில் மட்டையாகப் போகும் ஒரு குடிகாரனைப் போல ஆடி அசைந்து நகர்ந்து கொண்டிருந்தது....

ரிஷப்சன் குட் மார்னிங் மே ஐ ஹெல்ப் யூ என்று வரவேற்பரையின் தொலைபேசியில் நான் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த அந்த விடியற்காலை... பனிரெண்டரை மணிக்கு ஹோட்டலுக்குள் நுழைந்த அந்த மனிதரை எவ்வளவு பிசியாக இருந்தாலும் யாராலும் கவனிக்காமல் இருக்க முடியாது. ஆஜானுபாகுவான நல்ல தடித்த உருவம், அதற்கேற்ற உயரம், அடர்த்தியான தாடி, தாடிக்கு மேல் தொங்கும் கூர்மையான மீசை, புருவ மத்தியில், நெற்றியில், வயலட், மற்றும் சிகப்பு நிற குங்குமம், கழுத்தில் ஸ்படிகமாலை, ருத்ராட்சம், இன்ன பிற மாலைகள், கையில் ரத்தினம் பதித்த மோதிரங்கள்.... வெள்ளை வெளேரென்று சபாரி..... வாயில் மணக்க, மணக்க மாணிக் சந்த்......

சடாரென்று அவர் வரவேற்பரைக்குள் நுழையவும் நான் போனை வைத்து விட்டு குட் மார்னிங் சார் என்று சொன்னேன். என்னருகில் வந்தார் பவ்யமாய் குட் மார்னிங் மிஸ்டர் தேவேந்தர்....ஹவ் ஆர் யூ? என்று கேட்டவுடன் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது....இது என்னடா வம்பாப் போச்சு இவர பாத்தாலே மிரட்டலா இருக்கே...இவருக்கு எப்டி நம்ம பேரு எல்லாம் தெரியும் என்று யோசித்துக் கொண்டே டெலிபோன் ஆப்பரேட்டர் கேபினில் உட்கார்ந்திருந்த அசோக்குமாரை அதிர்ஷ்ட சாலி தப்பித்தான் என்று நினைத்துக் கொண்டேன்....

ஐய்யம் ஃபைன் சார்.... என்று அழுத்தமான என் தங்கிலீசில் அவருக்கு மறுபடி சொன்ன போது கையை நீட்டி ஹோப் யூ வில் டு த பெஸ்ட் என்று  கை குலுக்கி விட்டு ஹோட்டலுக்குள் சென்றுவிட்டார் அந்த மனிதர்.....

அவர் அந்தப் பக்கம் போனவுடன் பெல் கேப்டன் ராமமூர்த்தி ஓடி வந்தான்.. என்னிடம்... தேவ் சார்.... அது யாரு தெரியுமா அவர்தான் நம்ம ஹோட்டலோட எம்டி.....பேரு....

                                  ஆனந்த்குமார் டியோகார்

என்று சொன்னான்.....! ஹெச். ஆரை முடித்து விட்டு ஜி.எம்மோடு நேர்முகத்தேர்வு முடிந்த பின்பு நேரே வேலைக்கு அழைக்கப்பட்டதால் எனக்கு அவரைத் தெரிந்திருக்கவில்லை. நான் எனக்குப் பின்னாலிருந்த ரிஷப்சன்  சுவரில் பித்தளையில் பாலிஷ் செய்யப்பட்டிருந்த வாசகத்தை மீண்டுமொரு முறை வாசித்தேன்... ” த தக்க்ஷின்”  என்று எழுதி அதன் கீழே ” டியோகார் குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ்..”  என்று பொறிக்கப்பட்டிருந்தது. ஆனந்த்குமார் டியோகார் தான் அந்த ஹோட்டலின் எம்.டி. நந்தனம் வெங்கட்நாராயணா ரோட்டில் தேவர் சிலைக்கு வெகு அருகில் இருந்த அந்த த்ரீ ஸ்டார் ஹோட்டல்தான் எனக்கு வாழ்க்கையை பிச்சைபோட்டது. வாழ்க்கை என்பது பணம் மட்டுமல்ல, வாழ்க்கை என்பது கற்றுக் கொள்ளல், வாழ்க்கை என்பது நம்பிக்கையோடு இருத்தல் வாழ்க்கை என்பது மற்றவரை மதித்தல், வாழ்க்கை என்பது நாகரீகமாய் இருத்தல், வாழ்க்கை என்பது புதிது புதிதாய் படைத்தல், ரசித்தல்.

எனக்கு எல்லாமே தக்க்ஷின் ஹோட்டல்தான். கூட வேலை பார்த்த மற்ற டிப்பார்மெண்ட் ஆட்கள் எல்லாம் என் ஆங்கிலத்தை அப்போது எள்ளி நகையாடி இருக்கிறார்கள். முதல் ஒரு வருடம் எனக்கு அங்கே நரகமாய் இருந்தது. ஒவ்வொரு நாளையும் அவமானத்தோடு தான் நான் நகர்த்திக் கொண்டிருந்தேன். அஸிஸ்டெண்ட் எஃப் & பி மேனேஜராய் இருந்த ஒரு தங்கத்தமிழன் உன்னை எல்லாம் யார் வேலைக்கு எடுத்தது என்று முகத்திலடித்தாற் போல சொல்லி உன் ப்ரெளனன்சியேஷனே தப்பு தப்பா இருக்கே..... என்று என்னுடன் வேலை பார்த்த ஒரு ஆங்கிலோ இந்தியன் பெண்ணை வைத்துக் கொண்டு கிண்டலடித்தான். என்னை அவன் கிண்டலடித்து அந்த பெண்ணை மடக்கவேண்டும் அவ்வளவுதான்....! அவமானம் பிடிங்கித் தின்றது எனக்கு. 

எனக்கு முந்திய ஷிப்ட்டில் இருந்தவன் ஒரு விருந்தினரின் விமான டிக்கெட்டை ரீகன்பார்ம் செய்யாமல் மறந்து போனதால் ஏற்பட்ட குழப்பத்தை ஆராய்ந்து யார் தவறு செய்தது என்று முடிவெடுக்கும் முன்னரே.... அது நானாய்த்தான் இருக்கும் என்ற அனுமானத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு கெஸ்ட் ரிலேஷன் எக்ஸியூட்டிவ் ப்ரண்ட் ஆஃபீஸ் லாக் புக்கில்...... வரவேற்பாளன் உத்தியோகத்திற்கு நான் லாயக்கற்றவன் என்றும் மேலும் அந்த நட்சத்திர ஹோட்டலில் என் தகுதிக்கு ஒரு வேலையுமே கிடையாது என்றும்  கேவலமாய் எழுதி வைத்திருந்தாள்.....

தவறு என்னுடையது இல்லை என்று புரிந்த பின்னும் நான் போய் அவளிடம் கெஞ்சிக் கேட்டும் அந்த லாக் மெசேஜை அவள் மறைக்கவோ அழிக்கவோ மறுத்து விட்டாள். இதற்கெல்லாம் ஒரே காரணம் எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாத ஒரு கிராமப்புற மாணவனாய் மட்டுமே நான் இருந்ததுதான்.


இத்தனைக்கு நடுவே நான் வேர்பிடித்து அங்கே வளர ஒரே ஒரு காரணம்தான் இருந்தது. அந்த ஒரு காரணம் ஆனந்த்குமார் டியோகார்..... அந்த நிறுவனத்தின் எம்.டி. ஒட்டு மொத்த ஹோட்டலுமே அவருடைய மாருதி ஜிப்ஸி ஜீப்பைக் கண்டாலே அதிரும். ஒரு வார்த்தைப் பிசகினாலும், ஒரு விபரம் தவறாய்க் கூறினாலும் சீட் கிழிந்து போய்விடும் என்ற பயம் எல்லோருக்குள்ளும் இருக்கும். அவர் ஹோட்டலுக்குள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் 24 மணிநேரம் எப்போது அவர் வருவார் எப்போது போவார் என்பது யாருக்குமே தெரியாததால் ஒரு வித அச்சத்தோடுதான் எல்லோருமே வேலை செய்து கொண்டிருப்பார்கள்.

எம்.டி இஸ் காலிங் யூ..... என்று நுனி நாக்கில் அவருடைய செக்கரட்டரி என்னை ஓர் நாள் அழைத்த போது நான் முதல் ஷிப்ட்டில் இருந்தேன். காலையிலேயே  எதற்கு என்னை கூப்பிட்டிருக்கிறார். இவ்வளவு நாள் அப்படி இப்படி ஓட்டி விட்டோமே என்ற பயத்தோடு மெல்ல மெல்ல பேஸ்மெண்ட்டிற்கு சென்றேன். பேஸ்மெண்டில் இருக்கும் அலுவலகத்தைக் கடந்து அவருடைய கண்ணாடி அறைக்குள் நுழைந்த போது மெல்லிய விளக்கொளியும் அவருடைய நாற்காலிக்குப் பின்னால் வைக்கப்பட்டிருந்த சாமிப்படங்களுக்கு இடப்பட்டிருந்த பூக்களின் வாசமும், ஊது பத்தி வாசமும், கம்பீரமாக வெள்ளை சபாரியில் அமர்ந்திருந்த எம்.டி சாரும், அவர் மென்று கொண்டிருந்த மாணிக் சந்த் குட்காவின் வாசனையும், என்று அந்த சூழல் ஒரு மாதிரி பயத்தையும், நடுக்கத்தையும் எனக்குள் ஏற்படுத்தியது.....

தயங்கியபடியே நின்று கொண்டிருந்தேன்.  சிட்...சிட்..மேன்... என்றார். அமர்ந்தேன்.

ஹவ் லாங் ஆர் யூ வொர்க்கிங் ஹியர்...? அதட்டலாய் கேட்டார்.

இன்னைக்கு அனுப்பிடுவாங்க போல வீட்டுக்கு என்ற பயத்தோடு.... மோர் தென்....சி...ச்சிக்ஸ் மன்ந்த்ஸ் சார் என்றேன்.  வறண்டு போயிருந்த தொண்டையை நனைக்க கூட எச்சில் இல்லாமல் வாய் உலர்ந்து போயிருந்தது.

வாட் யூ வான் டூ ஹேவ்.... காபி... ஆர் டீ.... என்று கேட்டவர்...கெட் டூ காஃபிஸ் என்று ரூம் சர்வீஸுக்கு டயலினார்.

யோவ்... என்னய்யா.. பயந்து நடுங்கிட்டு இருக்க...என்று லோக்கல் தமிழில் பேசிய ஆனந்த்குமார் சார் புனேவுக்கு பக்கத்திலிருக்கும் சங்கிலி என்னும் ஒரு கிராமத்தை சேர்ந்தவராம். சென்னைக்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்பதை அவரது தமிழ் எனக்குச் சொல்லியது...

இல்லை சார்... என்று மீண்டும் தயங்கிய படியே நுனி நாற்காலியில் அமர்ந்திருந்தேன்.

இங்கிலீஷ் தெரியலேன்னா பயப்படக் கூடாதுய்யா.... தெரிஞ்சுக்கணும். டெய்லி எவ்ளோ கெஸ்ட்ஸ் வர்றாங்கோ..., அவுங்க பேசுறத எல்லாம் கவனமா கேட்டுக்க, கூட வேலை பாக்குறவங்க என்ன பேசுறாங்கன்னு கவனி, டெய்லி ஹிண்டு பேப்பர் படி, புரியாத வார்த்தைய எழுதி வச்சுக்க, டிக்சனரியில அர்த்தம் பாரு, அந்த வார்த்தைகள யூஸ் பண்ணி உன்னோட லாக் புக்ல அடுத்த ஷிப்ட் வர்றவனுக்கு லாக் எழுதி வைச்சுட்டுப் போ....

நாய் மாதிரிதான்யா எல்லா விஷயமுமே.... தெரியாதவன், புரியாதவன் வந்தா லொல் லொல்லுன்னு குலைக்கும், பழக்கப்படுத்திக்கிட்டேன்னா... வாலை ஆட்டிக்கிட்டு வந்து காலை நக்கும் அவ்ளோதானே....உன்னோட ஹார்ட் வொர்க்க நான் பாத்துருக்கேன்..... நாலு ஷிப்ட்ன்னாலும் தைரியமா நின்னு கண்டினியூ பண்ற உன்னோட சின்சியாரிட்டிய கவனிச்சு இருக்கேன்....கூட இருக்கவன் எல்லாம் எப்ப யார கால வாரிவிடலாம்னு தான் யோசிப்பான்.... மொத்தத்துல உன் பயத்தை தூக்கி ஓரமா போட்டுட்டு தில்லா வேலையப்பாரு சரியா....என்றார்.

மெல்ல புன்னகைத்த படியே பயத்தோடு காபியை குடித்து முடித்தேன். எழுந்து தேங்க்யூ சார் என்று சொல்லியபடியே கதவைத் திறக்க முயன்ற போது சாக்லேட் பேபி.....என்று அழைத்தார்.... சந்தேகமாய் திரும்பினேன்...

உன்னதான்யா கூப்டேன் போய் ஆக்குபென்ஸி லிஸ்ட்டையும், எக்ஸ்பெட்டட் அர்ரைவல் லிஸ்ட்டையும் எடுத்துட்டு வா என்றார். வெளியே வந்து மெயிண்டெனன்ஸ் டிப்பார்ட்மெண்ட்டை கடந்த போது எம்.டியின் வலது கையாயிருந்த மெயின்டெனன்ஸ் டிப்பார்மெண்டின் எச்.ஓ.டி ஹரி அண்ணா என்னை பார்த்து சிரித்தார். பயப்படாம வேலை பாருய்யா என்று முதுகில் தட்டிக் கொடுத்தார்.  ஹரி அண்ணாதான் எம்டியிடம் என்னைப் பற்றி ஏதோ சொல்லி இருக்க வேண்டும் என்று தோன்றியது எனக்கு....

அவ்வளவுதான்... அன்று முதல் எம்.டி சாருக்கு நான் சாக்லேட் பேபிதான்....! அவர் அடித்த உற்சாக சிக்ஸராய் நான் பறந்து கொண்டிருந்தேன். ஒரு வருடம் முடியும் முன்னரே ப்ரண்ட் ஆஃபிஸ் சூப்பர்வைஸர் ஆக்கினார். ஒன்றரை வருடத்தில் அஸிஸ்டெண்ட் லாபி மேனேஜர் ஆக்கினார். இரண்டு வருடம் முடியும் முன்னரே நைட் டூட்டி மேனேஜர் ஆக்கினார்.  இரண்டு வருடம் முடிந்து ஒரு நாள் நைட் ஷிப்ட் முடிந்து வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்த என்னை அவருடைய ஜீப்பில் ஏற்றிக் கொண்டு மெளன்ட் ரோட்டிலிருக்கும் ரேமாண்ட்ஸ் ஷோரூம் அழைத்துச் சென்று புதிதாய் பிஸ்கட் கலரில் கோட்டும், சூட்டும் புதிய டைகளும் வாங்கிக் கொடுத்துவிட்டு இன்னைக்கு உனக்கு டே ஆஃப் எடுத்துக்கோ...நாளையில இருந்து மார்னிங் நைன் டூ நைட் நைன் உனக்கு டூட்டி என்று சொன்னார்,  அடுத்த நாள் வேலைக்கு சென்ற போது ப்ரண்ட் ஆபிஸ் மேனேஜர் நீதான் என்றார்.....

என்னை ஏளனம் செய்தவர்கள் எல்லாம் என் முன்னாலேயே பல சூழல்களில் வேலையை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.....காலம் வெகு வேகமாய் உருண்டோடியது.

2002ல் துபாய்க்கு வந்த பிறகு எனக்கு தக்க்ஷினில் வேலை பார்த்த அனுபவமே தைரியத்தை கொடுத்தது. புதிய வேலையையும் கொடுத்தது. அப்படி இன்னொரு வேலையில் சேர்ந்த போது யானையைக் கட்டி இழுத்தவனிடம் கொசுவைக் கட்டி இழுக்கச் சொன்னால் என்ன எளிதாக இருக்குமோ அவ்வளவு எளிதாயும் இருந்தது.  எப்போதும் தக்க்ஷினை நினைப்பேன் உடனேயே ஆனந்த்குமார் சாரையும் நினைப்பேன். வருடங்கள் வேகமாய் ஓடின. அதற்குப் பிறகு ஏதோ பிரச்சினை காரணமாக தக்க்ஷின் ஹோட்டல் மூடப்பட்டு விட்டதாக சொன்னார்கள். சொந்தப் பிரச்சினையா இல்லை வேறு ஏதேனும் பிரச்சினையா என்று விசாரிக்க கூட அப்போது யாரும் என்னோடு தொடர்பில் இல்லை. விடுமுறைக்கு ஒவ்வொரு வருடமும் செல்லும் போதும் பூட்டிக் கிடக்கும் தக்க்ஷினின் வாசலில் நின்று ஏக்கமாய் பார்த்துக் கொண்டிருந்து விட்டு கிளம்புவது எனக்கு வழக்கமாய் ஆனது.

ஹோட்டல் இயங்கிக் கொண்டிருந்த போதே அதை அப்படியே மூடியிருப்பார்கள் போல...ஏனென்றால் இன்னமும் அதன் உள்ளே இருக்கும் பொருட்கள் எல்லாம் கண்ணாடிக்கு வெளியே அப்படியே எனக்குத் தெரிந்தன. வெளியே இருந்த பார்த்த போது காஃபி ஷாப்பில் அப்படி அப்படியே எல்லாம் இருப்பது தெரிந்தது. அறைகளின் கர்ட்டெய்ன்ஸ் எல்லாம் அப்படியே கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தன. பார்த்து பார்த்து பிராஸிங்க் செய்யும் தக்க்ஷின் ஹோட்டலின் பித்தளைப் பெயர் மங்கிப் போய் கிடந்தது. அலங்கார விளக்குகள் தூசு படிந்து ஒட்டடையோடு கருத்துக் கிடந்தன. உள்ளே நுழையும் போதே கண்ணாடிகளை ஒற்றை ஆட்காட்டி விரல் வைத்து இழுத்து பார்த்து சிறிதளவு தூசி இருந்தாலும்  ஹவுஸ் கீப்பிங் சூப்பர்வைசரைக் கூப்பிட்டு திட்டி இருக்கிறேன்...

எனக்குள் சந்திரமுகி படத்தின் ப்ளாஷ் பேக் போல ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட....என்று கம்பீரமாய் அந்த ஹோட்டல் பீடு நடை போட்ட நாட்கள் நினைவுக்கு வந்தது.

யாரையும் சந்திக்க முடியவில்லை...யாரிடமும் அந்த ஹோட்டல் பற்றி கேட்க முடியவில்லை என்ற ஏக்கத்தோடே  ஒவ்வொரு முறையும் விடுமுறை முடிந்து திரும்பும் எனக்கு இந்த முறை ஒரு ஆச்சர்யம் காத்துக் கிடந்தது.....

வழக்கம் போல விடுமுறைக்கு ஊருக்கு வந்த நான் தக்க்ஷின் ஹோட்டல் பக்கம் வண்டியை திருப்பி  வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்த போது பூட்டிக் கிடந்த அந்த ஹோட்டலின் பக்கவாட்டில் இருந்த டைம் ஆபிஸில் யாரோ ஒரு இந்திகாரன் நிற்பதைப் பார்த்து விட்டேன்....

குடித்திருப்பான் போல அவ்வளவு சப்தமாய்  கூப்பிட்டும் நான் அழைத்தது அவனுக்கு கேட்கவே இல்லை. நான் உச்சி வெயில் பன்னிரென்டு மணிக்கு அவனை அழைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த அங்கே நின்று கொண்டிருந்த ஆட்டோக்காரர் என்னை ஏற இறங்க பார்த்தபடி இன்னா சார் வோணும்...... என்று கேட்டார்.

இல்லங்க நான் இங்க வேலை பார்த்தேன். ஓட்டல் மூடிக் கிடக்குது அதான் என்ன விபரம்னு கேக்கலாம்னு என்று இழுத்தபடியே.... அந்த ஆட்டோ டிரைவரைப் பார்த்த எனக்கு.....அவர் முகம் பளீச்ச்சென்று நினைவுக்கு வர..... ” மதிண்ணா.....என்னை தெரியுதா....நான் தேவேந்தர்...இங்க ரிஷப்சன்ல வொர்க் பண்ணினேன்ல....நீதானண்ணா நிறைய சவாரி ஏர்போர்ட்ல இருந்து கொண்டு வருவ... என்னண்ணா இப்டி தலை எல்லாம் நரைச்சுப் போச்சு.....

கண்ணில் பிரகாசம் வந்தவராய் மதி அண்ணன் தன் நரைத்த தாடி மீசையையும், தலை முடியையும் சரி செய்த படியே..... இன்னாபா.... எப்டி கீற...எவ்ளோ நாளாச்சு.....என்னை கட்டிக் கொண்டார்.....! வெகு நாட்கள் கழித்து தொலைந்து போன தொடர்புகளில் யாரேனும் ஒருவரை காணும் போது ஏற்படும் உணர்வுகளை எந்தக் கொம்பனாலும் எழுதிக் காட்ட முடியாது என்று இப்போது இதை தட்டச்சு செய்யும் போது எனக்குப் பிடிபடுகிறது. இங்கே யாருக்கும் யாரையும் அவ்வளவு எளிதாய் அடையாளம் தெரிந்து விடுவதில்லை. கடந்த கால நினைவுகளை மீட்டெடுப்பதற்கு அப்போது நம்மோடு இருந்த யாரேனும் ஒருவர் நமக்கு அவசியமாகிப் போய்விடுகிறார்......! மதி அண்ணனின் கண்களும் கலங்கி இருந்தன...

என்னாச்சுன்னா ஓட்டலுக்கு.......? கேட்டேன்.....

வா வா டீக் குடிச்சுக்கினே பேசலாம்...... என்று எதிரிலிருந்த சிம்லா ஸ்னாக்ஸ்க்கு என்னை அழைத்தார்.

அவர் பேசத் தொடங்கினார்.....எனக்கு கண்கள் கலங்கத் தொடங்கியது.....


(மீதி அடுத்த பதிவில்....)




தேவா சுப்பையா...








Viewing all 254 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>