Quantcast
Channel: Warrior
Viewing all 254 articles
Browse latest View live

போதும்..." தலைவா "....போதும்..!

$
0
0
















ஏதாவது ஒரு காட்சியாவது புதுசா இருந்துச்சுன்னு சொன்னா ஏதோ படத்தை பத்தி கொஞ்சாமாச்சும் நாம பேசலாம். டைரக்டர் விஜயும், நடிகர் விஜயும் சேர்ந்து மிஸ்ரி புரடக்சன் தலையில மண்ண அள்ளிக் கொட்டுன கதைய என்னத்த நாம பேசிக்கிட்டு...!  நிறைய கருப்புப் பணம் வச்சு இருக்கவங்க காச காலி பண்ண இப்டி படம் கிடம் எடுப்பாய்ங்களோன்னு கூட ஒரு டவுட்டு..எனக்கு. 

இதுல என்ன கொடுமைன்னா எப்பவும் ஏதாவது ஒரு படத்தை பத்தி நான் எழுதறதுக்கு முன்னாடியே நிறைய பேர் விமர்சனம் எழுதி படத்தோட கதை என்னானு எல்லோருக்கும் முன்னாடியே தெரிஞ்சு இருக்கும். சோ... நான் எனக்கு படம் பாத்தப்ப ஏற்பட்ட உணர்வுகளை மட்டும் பதிவு செஞ்சுட்டு போய்கிட்டே இருப்பேன். தலைவா படத்தைப் பொறுத்த வரைக்கும் சிக்கல் எனக்கு வேற மாதிரி இருக்கு. அதாவது ஊர்ல இன்னும் படம் ரிலீஸ் ஆகலை அதனால படம் ரிலீஸ் ஆன அன்னிக்கே படத்தைப் பார்த்துட்டு விமர்சனம் பண்ற ரொட்டீன் கடமையுணர்ச்சிக் கொண்டவர்கள் படத்தைப் பத்தி எதுவும் இன்னும் எழுதவும் இல்ல..

நாம வழக்கப்படி படத்தை பார்த்த நம்ம உணர்வுகளைப் பதிவு செஞ்சுட்டுப் போகணும்னுனா இப்போ நாலு  கொலை பண்ண வேண்டி இருக்கும் ஆனா அது முடியாது. சரி வேணாம், தலைவா படத்தோட கதைய உங்க கிட்ட சொல்லலாம்ணு யோசிச்சா அப்டி ஒரு மண்ணாங்கட்டியும் படத்துல இல்லை. எனக்கு எல்லாம் டைரக்டர் விஜய பாத்து ஏன்யா..உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட கூச்சம் நாச்சம் இல்லையா....? எத்தனையோ வருசத்துக்கு முன்னால வந்த நாயகன், தளபதி, பாட்சா இப்படி எல்லா படத்தையும் உல்டா பண்ணி ஒரு படம் எடுத்ததோட இல்லாம டயலாக் டெலிவரி மொதக்கொண்டு அப்படியே வச்சு இருக்கீங்களே...இது எல்லாம் கேவலம் இல்லையான்னு கேக்கணும்னு ஆசையா இருக்கு...!

இதுல என்ன காமடின்னா இவனுக சீரியசா ஏதோ புதுசா பேசுற மாதிரி திரையில டயலாக் பேசிட்டு இருக்கானுக ஆனா அது எல்லாமே நாம ஏற்கெனவே பாத்து பாத்து அலுத்துப் போன அதே பில்டப் டயலாக் ஸ்தான் அப்டீன்றதுனால்...ஓ...சரி...அடுத்து இன்னும் பெஸ்ட்டா உங்க கிட்ட இருந்து எதிர்ப்பார்க்கிறோம்ற ரேஞ்சுக்கு ஒவ்வொரு சீனா நவுத்தி நவுத்தி பாத்து அவனுக தளபதி, தளபதின்னு கூட்டம், கூட்டமா திரையில கத்தும் போது எல்லாம்...தப்பாம நமக்கு தலைவலி வர்றத தவிர்க்கவே முடியலைங்க..!

அட...கதை என்னானு கேக்குறீங்களா..? ச்ச்சும்மா கேட்டுப்புட்டு அப்புறம் என்னைய ஏன்டா கதை சொல்லச் சொன்னா பழைய தமிழ் சினிமாவுல இருந்து உல்டா பண்ணி சொல்றியான்னு கேட்டுச் சண்டைக்கு வரப்புடாது....மீ பாவம்...மீ ஒன்லி ஆடியன்ஸ் ஓ.கே....சரி மனச திடப்படுத்திக்கோங்க..

மும்பைல வேதான்னு ஒரு பெரிய தமிழர்களுக்கு ஆதரவா இருக்க தாதாவ....எதிரி குருப்பு போட்டுத் தள்ளிடுது.அதுக்கப்புறம் தராவிப் பகுதி தமிழர்களுக்கு ஆதரவா அவரோடு கையாளு சத்யராஜ் உருவாகுறாரு..இந்த எதிரி குரூப் என்ன பண்ணுது சத்தியராஜ கொல்ல வரும் போது அவரக் காப்பாத்த அவரோட பொண்டாட்டி ரேகா ஆண்ட்டி..(கடலோரக் கவிதைங்க ஜெனிஃபரா வந்த அழகு தேவதையா இப்டி கெழவியாயிடுச்சு..ஓ....ஜீசஸ்..!!!!) வழக்கப்படி குறுக்க விழுந்து சத்திராஜ்ன்ற அன்னா சார காப்பாத்திடுறாங்க..!

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப்பாடா...!

பொண்டாட்டிய கொன்ன தாதாவ சத்தியராஜ் என்கிற அண்ணா போட்டு தள்ளிட்டுறாரு. அப்டி போட்டுத் தள்ளும் போது அந்த தாதாவோட பையன் ஒருத்தன் இருக்கான் அவனை கொல்லாம இரக்கப்பட்டு விட்டுடுறாரு....அந்த பையன் தான் சத்தியராஜ் அன்கோவை பழி வாங்குவான் பின்னாலன்னு நம்ம யாருக்குமே தெரியாதுன்னு டைரக்டர் நினைச்சு இருக்கலாம் ஆனா அது சத்தியராஜ் அவனை கொல்லாம விடும் போதே கிளியரா நமக்குத் தெரியும்.

சத்தியராஜ்க்கு இருக்குற ஒரே ஒரு ஆசைப்புள்ளைய, இந்த அடிதடி வாழ்க்கை பிடிக்காம தன் மகனோட தப்பிச்சுப் போற தன் நண்பர் நாசர்கிட்ட கொடுத்து வளர்க்கச் சொல்லிட்டு சத்தியராஜ் மும்பை தராவி மக்களின் குறைய தீர்த்து வைக்கிற வேலு நாயக்கரா மாறிடுறாரு. சத்தியராஜ் நாசர்கிட்ட வளர்க்கச் சொன்ன பிள்ளைதான் விஜய். நாசரோட புள்ளதான் சந்தானம்ன்றது எல்லாம் ஃபர்ஸ்ட் சீன்லயே நமக்குத் தெரிஞ்சு போய்டுது.

அப்புறம் என்ன சத்தியராஜ அந்த வில்லனோட பையன் போட்டுத் தள்ளிடுவாரு. அப்பா என்ன தொழில் பண்றாருன்றதே தெரியாம ஆஸ்திரேலேயாவுல வளர்ந்த புள்ளை விஜய் மும்பைக்குள்ள எப்டி வருவாரு, ஏன் வரணும்... ? ஆஸ்திரேலியாவுல சாப்பாட்டுக்கு என்ன பண்ணிடு இருந்தாரு..? வெறுமனே மினரல் வாட்டர் கம்பெனி நடத்துறேன் பேர்வழின்னு தமிழ்ப்பசங்கன்னு ஒரு டீம் வச்சுட்டு டான்ஸ் காம்பிட்டேசன்ல எல்லாம் கலந்து ஜெயிச்சாரா...? சத்தியராஜ் சார் அவ்ளோ பெரிய தாதாவா இருந்தது கதைப்படி இருபத்தஞ்சோ இல்ல முப்பது வயசோ ஆன அவரோட மகன் விஜய்க்கு எப்டி தெரியாம இருந்துச்சு....?

தாத்தா ஆகுற வரைக்கும் தாதாவ  இருக்குற தன் அப்பாவை விஜய் எப்டி இழக்குறாரு...? அப்டீன்றதை எல்லாம் நீங்க வெண் திரையில பாத்துக்கோங்க...! ஆனா...தேவர்மகன் கமல் மாதிரி அப்பா விட்ட இடத்தை விஜய் தொடர்ந்து கையில எடுத்குக்கிட்டு, வேலுநாயக்கர் மாதிரி (மாதிரிதான்..!!!!) பாட்சா மாதிரி, தளபதி தேவா மாதிரி சட்டத்தால திருத்த முடியாத பல வேலைகளை தான் செஞ்சு...மக்கள் முன்னாடி தலிவரா நிப்பாருன்ற ரகசியத்தை நான் சொல்ல மாட்டேன்.

சத்தியராஜ் கூடவே இருக்கும் விஜயோட சித்தப்பா பொன்வண்ணன் சத்தியராஜ்க்கு ரொம்ப விசுவாசாமா இருப்பாரு...அப்புறம் விஜய்க்கு விசுவாசமா இருப்பாரு. ரொம்ப விசுவாசமா இருந்து ஓவராப் பேசுறப்பவே நமக்கு எல்லாருக்கும் தெரிஞ்சு போயிடுது இவருதான் எதிரிங்க கூட தொடர்பு வச்சிட்டு இருக்காரு..கடைசில விஜய்க்கு ஆப்பு வைப்பார்னு..., எத்தனை படம் வந்துடுச்சு தமிழ்ல்ல கொஞ்சமாச்சும் யோசிச்சு ஒரு திரைக்கதை  எழுத வக்கு இல்லாம...படத்துக்கு என்னாத்துக்கு இவ்ளோ பில்டப் கொடுக்குறீங்கன்னு கேக்குறேன்...!

சந்தானம், பழைய நடிகர் சுரேஷ், ஓய்.ஜி. மகேந்திரன், டைரக்டர் மனோபாலா இப்டி கூட கொஞ்ச ஆளுங்களும் நடிச்சு இருக்காங்க...! சந்தானம் அப்போ அப்போ லைட்டா சிரிக்க வைக்கிறாரு...மத்தபடி சந்தானமும் டோட்டல் வேஸ்ட்...! தயவு செஞ்சு அமலாபாலை எல்லாம் விஜய்க்கு ஜோடியா போட்டுத் தொலைக்காதீங்கய்யா...அப்போ அப்போ யாரு விஜய், யாரு அமலாபால்னு நமக்கே ஒரு டட்வுடு வருது...அப்டி ஒரு புரோ..சிஸ்டர் பேஸ்கட்டு ரெண்டு பேருக்கும்....ஹக்...ஆம்...!

அல்லாத்தையும் வுட ஒரு பெரிய கொடுமை..டைட்டில் கார்டு போடும் போது உலகத்துல புரட்சி செஞ்சு மாற்றத்தை உண்டு பண்ணின தலைவர்ங்க பேர எல்லாம் போட்டோவோட போட்டு, அது எந்த வருசம்னு வேற காட்றாங்க...உதாரணமா சேகுவாரா, மர்ட்டின் லூதர் கிங், மாவோ, வின்சன் சர்ச்சில், பிடல் காஸ்ட்ரோ..இப்டி....

அப்டி போட்டு என்னா சொல்ல வர்றாங்கோன்னா....அத்து மாதிரி நம்ம தமிழ்நாட்ல விஜய் சார் மாற்றத்தை கொண்டு வருவார்னு சூசகமா சொல்றாங்களாம்...! விஜய்க்குன்னு ரசிகர்கள் கூட்டம் இருக்கறது எல்லாம் நியாயம்தான். ஒரு மாஸ் ஹீரோன்னு சொன்னா தன்னோட இமேஜை கூட்டிக்கிறதுக்காகவும், காட்டிகிறதுக்காகவும் பஞ்ச் டயலாக்ஸ், சூப்பர் பில்டப் ஸ்டோரி, வெயிட்டான வசனங்கள், அதிரடி சண்டைக்காட்சிகள், விறுவிறுப்பான ஸ்கிரீன் ப்ளேன்னு எல்லாமே  பொறி கலங்குற மாறி இருக்கணும். நம்ப முடியாத லாஜிக் இல்லாத சீன்ஸா இருந்தா கூட நம்ம ஹீரோ செய்வார்டா அப்டீன்ற நம்பிக்கையை படம் பாக்குற ஆடியன்ஸ்க்கு கொடுக்கணும்.

ரஜினி  நடிச்சார்னா... அவர் படத்துல ஓவர் பில்டப் இருந்தாலும் இன்னோவேட்டிவா, கிரியேட்டிவிட்டியோட ஒவ்வொரு பிரேமும் வெயிட்டா இருக்கும். நாயகன் படத்துல கமல ஒரு தாதாவா மட்டுமா மணி சார் கட்டி இருப்பாரு..? அவர் வாழ்க்கை எங்க ஆரம்பிச்சு எப்டி முடியுதுன்னு நூல் புடிச்ச மாதிரி காட்டி இருப்பாரு. அதுல ஒரு வலி இருக்கும், நாமளும் படத்தோட ஒன்றிப் போயிடுவோம். தலைவா மாதிரி படம் எல்லாம் புதுசா எடுக்குறோம்னு நினைச்சுக்கிட்டு விஜய் மாஸா ஏத்துறதுக்கு பத்துப் படத்துல பிச்சை எடுத்து எடுக்கப்பட்டது. இதை விடக் கேவலம் ஒண்ணுமே இல்லை.

ஒரே ஒரு பாட்டு அதுல மட்டும் அப்பட்டமான விஜய் டச் இருந்துச்சு. அதே மாதிரி விஜயோட ஒரிஜினல் டேலண்ட்ஸ வெளிப்படுத்துற மாதிரி காட்சி அமைப்புகளும் திரைக்கதையும் இருந்து இருந்துச்சுன்னா கொஞ்சமாச்சும் தப்பிச்சு இருக்கலாம். ஆனால் ஒட்டுப்போட்டு திரட்டிய கதை, மட்டமான திரைக்கதை, கேவலமான எடிட்டிங், படு கேவலமான பாடல்கள், அதைவிட கேவலமான பின்னணி இசை, தொடர்பற்ற, தேவையில்லாத காட்சிகள்னு...

மொத்ததில் தலைவா  ஒரு படம் இல்ல....எப்படி எல்லாம் படம் எடுக்கக் கூடாதுன்றதுக்கு சொல்லப்பட்ட ஒரு பாடம். இந்தப் படத்தை வெளியிடுறதுக்கு பிரச்சினை ஏன் பண்றாங்கன்றதுதான் மில்லியன் டாலர் கேள்வி. அப்டி எல்லாம் நினைக்கிற அளவுக்கு இதுல ஒண்ணும் இல்லை.....ஹா.. ஹா!!!!! இது எல்லாத்தையும் தாண்டி தளபதியோட ரசிகர்கள் படத்தை ஓட வைப்பாங்கன்றது வேற விசயம் அந்த பஞ்சாயத்துக்கு நான் வரலை...!

விஜய் சார்.. ஏன் படம் கிடம்னு எடுத்து இப்டி டைம் டு லீட்னு பில்ட அப் எல்லாம் கொடுத்து டைம் வேஸ்ட் பண்றீங்க....பேசாம அரசியல்ல ஸ்ட்ரெய்ட்டா இறங்கிட வேண்டியதுதானே....அட்லீஸ்ட் இந்த மாதிரி படங்களாவது வராம இருக்குமே.....

நாங்க கேப்டனையே சகிச்சுக்கிட்டோம்....ஒங்கள சகிச்சுக்க மாட்டமா என்ன....?


தேவா சுப்பையா...






மொழியற்றவனின் பாடல்....!

$
0
0













கலவிக்கென்று யாதொரு வரைமுறையும் இல்லை. இது இப்படித்தான் என்றொரு படிப்பு வாசனையோடு எந்த ஒரு பெண்ணையும் அணுகுமிடம் ரொம்பவே செயற்கையானது. மழை பெய்து கொண்டிருந்த அந்த இரவு வேளையில் என் கண்ணாடி ஜன்னலின் வழியே வழிந்து கொண்டிருந்த மழை கவிதையாய்த் தெரிவதும் வாழ்க்கையின் கண்ணீராய் தெரிவதும் எந்த மனோநிலையில் நாம் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது. விடியலில் எழும் பறவைக்கென்று என்ன இலக்கு இருக்க முடியும்..? திரும்பிய திசைகள் எல்லாம் அதற்கான வழிகள் திறந்து கிடக்கின்றன. அமர்ந்த இடமெல்லாம் அவற்றுக்கு வசிப்பிடமாய் ஆகிப்போக்கும்...

இடுப்பில் கை கொடுத்து அணைத்து அவளை கால்களால் இறுக்கியபடியே நான் அந்த மழை பெய்யும் இரவினைக் கொண்டாடிக் கொண்டிருந்தேன். பின்னிரவு வரை சல்லாபித்துக் கிடந்து, இடவலம், மேல் கீழ் என்று உடல் முறுக்கி, மூச்சிறைக்க ஏதோ ஒன்றைத் தேடி அடையும் பிரயாசையுடன் உடல்கள் உரசிக்கொள்ளும் கலவி ஒன்றை நீட்டித்து நீட்டித்து....உடலும் மனமும் போதும், போதும் என்று கெஞ்ச முழுதுமாய் உச்சம் தொடச்செய்து பின் மலைமுகட்டில் சரியும் ஒரு முரட்டுக் குதிரையாய், கழுத்து மடங்கி, வாய் கோணி, கால்கள் இழுக்க, அடுத்த கணம் இறக்கப்போகும் ஒரு மனிதனாய் துடி துடித்து காமத்தை முடித்து வைக்கும் கணத்தில்தான்...கடவுளென்று  போதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் இதுதானென்று நமக்குப் பிடிபடும்.

அதிகாலை அரைத்தூக்கத்தில் புரண்டு படுத்து மீண்டும் கயலை மனதுக்குள் கொண்டு வந்து கலைந்து போயிருந்த கனவை தொடங்க முயன்று கொண்டிருந்தேன்.....

ஏதோ சப்தம் கேட்டு மெல்ல கண் விழித்து படுக்கையிலிருந்து புரண்டேன். கயல் வந்திருந்தாள். அவளிடம் எப்போதும் என் வீட்டின் இன்னொரு சாவி இருக்கும்.

நான் போர்வைக்குள் இருந்து நெளிந்து கொண்டிருந்தேன். நான் வந்து அரை மணி நேரம் ஆச்சு...இன்னும் தூக்கம்.. மணி 9 ஆச்சு...எழுந்திரிடா ஸ்டுப்பிட்........!!!!  என் முன் இரண்டு கப் காபியோடு வந்து அமர்ந்தாள். இரண்டு நாள் இங்க இருக்க மாட்டேன்டா...மறுபடி புதன்கிழமைதான் வருவேன்...! சண்டேதானேன்னு ஒரு நாள் முழுசும் படுத்து புரண்டுக்கிட்டே இருக்காத....என்ன சரியா...முதல்ல இந்த காபிய குடி.......

இப்போது எனக்கு முதுகு காட்டி அவள் கண்ணாடி பார்த்துக் கொண்டிருந்தாள். ஹம்ம்ம்ம் சரிடி....போய்ட்டு வா... என்ன இப்போ இரண்டு நாள் அவசரம்...ஊருக்கு...?

என் பக்கம் திரும்பினாள்..

ஹ்ம்ம்ம்க்கும் இப்போவாவது கேட்டியே...சைட் ஒண்ணு வாங்கினேன்னு சொன்னேன்ல.....அதை விக்கணும் வித்துட்டு...ஏற்கெனவே கிராமத்துல இருக்க வீட்ட இடிச்சுட்டு புது வீடு கட்டலாம்னு ...அம்மா சொன்னாங்க...அதான்...

விக்கப் போறியாக்கும்...? நான் கேட்டதை அவள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

டேய்....எப்போ நம்ம கல்யாணம்டா...அம்மா கிட்ட எல்லாத்தையும் ஏற்கெனவே சொல்லிட்டேன். இப்போ போனா மறுபடி கேப்பாங்களே...என்ன சொல்ல...

நான் குப்புறப்படுத்துக் கொண்டேன்.

ஏதாச்சும் சொல்லுடி.....எனக்கு கல்யாணம் பண்ணிக்குறதுல ஒரு பிரச்சினையும் இல்லை.....உனக்குதான் என்னால பிரச்சினை....நான் சொல்லிக் கொண்டிருந்த போதே...அலைபேசி சிணுங்கியது...

கயல் போனை எடுத்து ஹலோ என்றது...ஹ்ம்.....யாரு கீர்த்தனாவா..? உதடு சுளித்தது கயல்...அவர் படுத்து இருக்காரே......ம்ம்ம்...நான் யாரா...? இந்தாங்க அவர்கிட்டயே கேளுங்க...

போன் படுக்கையில் எனக்கருகே பரிதாபமாய் வந்து விழுந்தது....ஹாய் கீர்த்த்த்...யா...யா.. கயல்தான்...ம்ம்ம்ம் ஒரு ரெண்டுநாள் டைம் கொடுடி எழுதிக் கொடுத்துடுறேன்.....ஓ...யெஸ் வாயேன்...ஐயம் ஃப்ரி.... சுர்..போலாம்...போலாம்...லவ்  யூ டூ...பாய்...

போனைத் துண்டித்தேன். நான் கிளம்பறேண்டா...கயல் கோபமாய் என்னிடம் வந்தாள்.... ஏன்டா இந்த கீர்த்தனா கிட்ட இப்படி வழியுற....தொப் என்று படுக்கையில் அமர்ந்தாள். 

வழிஞ்ச்சேனா...நான் ஏன் அவகிட்ட வழியணும்...?

நான் ஒரு பையன் கிட்ட இப்டி பேசினா நீ ஒத்துக்குவியா..? என்னை பழி தீர்ப்பதாய் நினைத்துக் கொண்டு காலம் காலமாய் இந்த சமூகம் பயன்படுத்தும் ஒரு துருப்பிடித்த தலைமுறைகள் கடந்த ஆயுதத்தை கையிலெடுத்தாள்....நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் என்பது அவளின் மில்லியன் டாலர் கேள்வி...!

எனக்கு உன்னைப் பிடிக்கும் கயல். அத்தோடு விடு...இரவு முழுதும் கயலோடு கனவில் போட்ட ஆட்டம் ஏனோ தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது...

உனக்கு எது பிடிக்குதோ அதை நீ செய் கயல். நான் ஒண்ணும் சொல்லமாட்டேன்...கீர்த்தனா என்னோட கொலிக்,  ஒண்ணா குப்பைக் கொட்றோம். அவளுக்கு என்னை பிடிக்கிறதுக்கு ஏதோ காரணம் இருக்கலாம். எனக்கும் கூட அவளைப் பிடிக்கலாம். அதையும் நம்ம ரிலேஷன்சிப்பையும் கம்பேர் பண்ணாத கயல்...ப்ளீஸ்!

புதன்கிழமை நீ வரலேன்னா நான் உன்னை தேடுவேன். என்ன ஆச்சோன்னு பதறுவேன்....? உன்னை தொடர்பு கொள்ள முயற்சி செய்வேன்...கீர்த்தனாவோ, ப்ரியாவோ, வாணியோ வரலேன்னா தேடமாட்டேன்...

ஒ...உன் லிஸ்ட் இவ்ளோ பெரிசா....?அப்புறம் என்ன டேஷ்க்குடா என்னை லவ் பண்ற..? யூ கேன் என்ஜாய் யுவர் லைஃப் வித் ஆல் தீஸ் கேர்ல்ஸ் ரைட்....? கயல் என் தலையை பிடித்து திருப்பியது...

உன்ன நான் லவ் பண்றேன்...வீ ஆர் கோயிங் டூ மேரி சூன்...உன்ன துரோகிச்சுட்டு இந்த லிஸ்ட்ல இருக்க யார் கூடவும்...ஓடிப் போய்டமாட்டேன்...ட்ரைட்டு அன்டர்ஸ்டேண்ட் தட்....

நான் கொஞ்சம் சப்தமாகவே பேசினேன் ....

தென்.. தென்... வொய் சுட் யூ சே....லவ் யூ டூ...டு சம் ஒன்...? இந்திய தேசத்தின் தொன்மைகள் படித்துக் கொடுத்திருக்கும் ஒரு ஆதாரக் கேள்வி என் கழுத்துக்கு வந்தது.

இஃப் சம் ஒன் சேய்ஸ் லவ் யூ டு மீ....வாட் ஐயம் சப்போஸ்ட் டூ சே பேக்...? சுட் ஐ சே ... ஐ ..ஹேட் யூ....? கோபமாய் வந்து விழுந்த இங்கிலீஷை உள்ளுக்குள் இருந்த செந்ததமிழ்...கோபமாய் முறைத்து கேவலமாய் என்னைப் பார்த்தது

நானும் இப்டி யார்கிட்டயாச்சும் சொல்வேண்டா அப்போ நீ என்ன செய்றேனு பாக்குறேன்....கயல் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்...

கயல்...ஐ..லவ் யூ...உன்ன எனக்குப் பிடிக்கும்...இட் டஸின் மீன் தட் என்னை யாருக்குமே பிடிக்க கூடாதுன்னு நீ எதிர்ப்பாக்குறது.... 

இட்ஸ் ஓ.கே...டா....யூ லிவ் த வே வாட் எவர் யூ லைக்....

ஐயம் லீவிங் ப்ரம் யூ...! எனக்குப் பிடிச்ச மாதிரி நான் வாழ்ந்துட்டுப் போறேன்..உனக்குப் பிடிச்ச மாதிரி நீ வாழ்ந்துட்டுப் போ.......உன்கிட்ட பேசி ஒண்ணும் ஆகப் போறது இல்லை...யூ நெவர் கோயிங் டி லிசன் மீ...ஏன்னா யூ ஆர் ரியலி கிரேசி....பைத்தியக்காரன்...!

கயல் ஏன் இப்போ கத்துற...? நான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு என் மேல இவ்ளோ கோபம் உனக்கு.....

யூ சேட் யூ ஆர் லவ்விங் சம் படி....சோ.. யூ கேன் லிவ் யுவர் லைப்.. அவுங்க கூடயே வாழ்ந்துக்க..., என் முன்னாடியே இன்னொருத்தருக்கு லவ் யூ டூன்னு சொல்ற நீ... என்ன வேண செய்வ....ஐ டோண்ட் ட்ரஸ்ட் யூ...

லூசு மாதிரி பேசாத கயல்....லவ் யூன்றது சாதரண வார்த்தை...

சாதரண வார்த்தையை நானும் என்னை சுத்தி இருக்க ஆம்பிளைங்க கிட்ட சொன்னா..ஹவ் டூ யூ ஃபீல்..?

சரியாய் கத்தியை நெஞ்சில் இறக்கினாள்...

நான் ஸ்தம்பித்தேன்....எனக்குள் சம்மணமிட்டு அமர்ந்திருந்த ஆணாதிக்கப் பொதுபுத்தி நான் லவ் யூ டு என்று சொன்னதை தவறு எனக்குச் சுட்டிக்காட்டி.....அப்படி சொல்லி இருக்கக் கூடாது என்று சொன்னது...

கீர்த்தனா போன் அடிச்சா...என் கிட்ட பேசினா...லவ் யூன்னு சொன்னா..நான் லவ் யூ டூன்னு சொன்னேன்........ஆக்சுவலா கீர்த்தனா போன் அடிச்சா....என்கிட்ட பேசினா...லவ் யூன்னு சொன்னா...நானும் லவ் யூ டூன்னு சொன்னேன்...நடுவுல நிஜமாவே கொஞ்சம் பக்கம் காணாமல் போயிருந்தது...

கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொண்டேன்....ஆமா.. நான் அப்டி சொல்லி இருக்கக்கூடாதுன்னு சொன்னா நான் ஒரு அடைபட்ட பறவை ஆயிடுறேன்....இல்லே நான் சொன்னது சரின்னு சொன்னா நான் அயோக்கியன் ஆகிப் போயிடுறேன்...

இப்போ என்ன பண்ணலாம்...கயலைப் பார்த்தேன்....!!!!ஐ லவ் யூடா செல்லம்..இது வேற லவ் யூ...அது வேற லவ் யூ....கெஞ்சலாய் தோளில் கை போட்டேன்....

கையைத் தூக்கி தூரப் போட்டாள்...!

இட்ஸ் நாட் ஃபர்ஸ்ட் டைம்....பாலா....யூ ரிப்பீட் த சேம் மிஸ்டேக்..

மிஸ்டேக்.....?  எனக்கு இப்போது கோபம் வந்திருந்தது.

கனவுகளை எல்லாம்
மொத்தமாய் எழுதி வைத்தனிடம்
உனக்கு  கையெழுத்துப் போடத்
தெரியுமா என்று கேட்கிறாய்..?

கற்பனைகளில் கூட
உன்னையே தழுவிக் கொள்பவனிடம்
கற்பென்ற ஒன்று 
உனக்கு இருக்கிறதா என்கிறாய்..?

லுக்....கயல்...என் கூட இருக்கறது உனக்கு கஷ்டம்னு நான் எப்பவும் சொல்லி இருக்கேன். இப்பவும் சொல்றேன்......என் கூட இருக்கறது என்னப் புரிஞ்சுக்கறது கஷ்டம்தான்...! மெல்லிய நூலிழை போன்ற என் உணர்வுகளை என்னால மொழிப்படுத்த முடியல....மொழிப்படுத்தவும் முடியாது....

மேலோட்டமா பார்த்தா நீ சொல்றது சரி. சரின்னுதான்..இந்த சமூகம் சொல்லும். ஏன்னா...எனக்கு உன்னை மட்டும் பிடிக்கும்னு படுக்கையறைல காதோரமா கிசு கிசுத்துட்டு..தெருவுல போகையில  செமயா இருக்காலடா மச்சி இவன்னு  இந்த சமூகம் பேசுறதையோ, சந்தர்ப்பம்  கிடைச்சா எல்லை தாண்டலாம்ங்கற...நியாயத்தையோ யாரும் இங்க பேசப் போறது இல்லை...

யாரும் பாக்கலை...எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை...அப்டின்ற ஒரு வசதிக்குள்ளதான்...இங்க கண்ணியம் கருப்பு கண்ணாடிப் போட்டுக்கிட்டு கால் மேல கால் போட்டு உக்காந்து இருக்கு.

உன் மேல எனக்கு இருக்க காதல்.....உன் மேல இருக்க வசீகரம் அது எதோடவும் ஒப்பிட்டு என்னால பேச முடியலை. என்கிட்ட லவ் யூ பாலான்னு சொல்லும் போது லவ் யூ டூன்னு நான் சொல்ற பதில் என்னோட மறுநேசம். அதுக்கும் என் வீட்டுப் படுக்கைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. யாரையும் என்னால வெறுக்க முடியாது...யாரையும் என்னால் நிரகாரிக்க முடியாது....

ஆனா...என் காதலி யாருன்னு இந்த உலகம் கேட்டுச்சுன்னா யோசிக்காம உன் இடையில கைபோட்டு அவுங்க முன்னாடி நடந்து காட்டுவேன்....

என் வானத்தில்
ஆயிரம் நட்சத்திரங்கள்
ஜொலிக்கலாம்...
அவை ஒரு போதும்
ஒற்றை நிலவாக முடியாது....!

ஆமாம்...பூமி இல்லாத வேறு கிரகங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நிலாக்களாம்...அப்போ என்ன செய்வ....டேய்.....இனஃப்டா...! நான் ஏன் உன் மூட ஸ்பாயில் பண்ணனும்... யூ கேன் கோ ஆன் அட் யுவர் பாத்....நான் என் வழில போறேன்...

கயல்விழி.... என்னும் கயல்...விழி தாண்டிய கண்ணீர் எனக்கு சங்கடத்தைக் கொடுத்தது.

அப்போ நம்ம காதல்....? நிதானமாய் அவளைப் பார்த்தேன்.

மண்ணாங்கட்டி............அதான்...இருக்காங்களே...கீர்த்தனா....மாலதி...வாணின்னு...கெட் லாஸ்ட் மேன்....!!!! நான் எங்க  இருந்தாலும் உன்னை நினைச்சுட்டுதான் இருப்பேன்....பட் உன் கூட இருக்க மாட்டேன்....நீ உன் ஏகாந்த உலகத்துல சிறகடிச்சுப் பறந்துக்க....நான் தொந்தரவு பண்ணல...

கயல்...ஒன் செகண்ட்...

கதவைப் படார் என்று அடித்து மூடிவிட்டு....கயல் சென்று விட்டாள்.

பக்கத்தில்  பாவமாய் கிடந்த என் அலைபேசியை எடுத்து கயலை டயலினேன்...நான்கு முறையும் போனை கட் பண்ணினாள்.....

வெளியே மழை விட்டிருந்தது...

கூடு விட்டு பறவைகள் வெளியேறத் தொடங்கி இருந்தன. கயல்  எனக்கு போட்டு வைத்திருந்த காபி ஆறிப் போயிருந்தது....தூக்கி ஊற்றி விட்டு கப்பை கழுவி வைத்தேன்.

பிரிட்ஜை திறந்து பியரை எடுத்து கோப்பையில் ஊற்றினேன். நுரைத்துப் பொங்கும் பியரைப் பார்த்த பொழுது ஏனோ ஒரு சந்தோசம்  பிறந்தது. வெறும் வயிற்றில் பியர் பரவி குளுமையாக்கியது. மணியைப் பார்த்தேன் 11:45 ஆகி இருந்தது. கயல் போய்விட்டாள். என் வார்த்தைகளின் அர்த்தம் புரியாமல்...என் வாழ்க்கையின் இலக்கு அறியாமல்...சராசரி சண்டையிட்டு விட்டு...காதல் என்னும் அற்புத உணர்வை சிதைத்து விட்டு....

அவளைச் சொல்லிக் குற்றமில்லை. தனது காதலன் இன்னொரு பெண்ணிடம் லவ் யூ டூ என்று சொன்னால் கோபம் வராமால் யார்தான் இருப்பார்கள். கோபம் வரட்டும் நான் கூறும் விளக்கத்தை செவியுற பகுத்தறிவுமா இல்லாமல் போகும்..? எது எப்படியோ...ஆரம்பிக்கும் எதுவும் முடியத்தான் செய்யும் இது வாழ்வியல் நியதி.

கயல் எங்கே வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். எனக்குள் இருக்கும் கயலை யார் எடுத்துச் செல்ல முடியும்...? ஒரு கணத்தில் அவள் தூக்கி எறிந்த காதல்தான்...இத்தனை நாள் அவள் கொண்டிருந்தது. எனக்கு இனி துணை தேவை இல்லை என்று  தோன்றியது. நானே எனக்குத் துணை. யாருக்கும் யாரும் துணையாகவும் இருக்க முடியாது. எல்லாமே புத்தியில் இருக்கிறது. எதற்காக இன்னொருவர் நமது கூடவே இருக்க வேண்டும்....?

இருக்கும் வரை வாழ்க்கை, இறந்த பின் மரணம்.

ஜன்னலுக்கு வெளியே  பறவைகள் மழை விட்ட வானத்தில் திசைக்கொன்றாய் பறந்து கொண்டிருந்தன. 

அழைத்த அலைபேசியில் கீர்த்தனா வந்தாள்...ஹாய்டா....ஐ வில் பி தேர் இன் 30மினிட்ஸ்...வீ கோ அவுட் ஃபார் த லஞ்ச் " பேசி முடித்திருந்தாள்.

கீர்த்தனா கேட்ட  ஆர்ட்டிக்கிளை அவளது பத்திரிக்கைக்காக எழுதத் தொடங்கி இருந்தேன்....

" அவனுக்கு துணை ஒன்றும் அவசியமில்லை. அவன் எப்போதும் ப்ரியங்களைப் போர்த்திக் கொண்டிருப்பது தன்னை யாரென்று அறிவித்துக் கொள்ள அல்ல...அவனின்  உடலில் வாழ்க்கை கொடுத்த  வடுக்களை மறைத்துக் கொள்ள; அவன் தனித்தவன். அவனுக்கான பெரும் பாடலை எப்போதும் இசைத்துக் கொண்டிருக்கிறது காலம். வாழ்க்கை சக்கரத்துக்குள் நின்று கொண்டு கடமைகளைப் பேசி இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டிய அவசியமற்று...நகரும் அவன் பொழுதுகளை யாருமே வரையறுக்க முடியாது.

காணாமல் போய்விட்ட ஒருவனை யாரும் இனி தேடியடைய முடியாது. மனிதக் கூட்டுக்களை எல்லாம் கழற்றி  எறிந்த பறவையாய்.....

சிறகடித்துக் கொண்டே இருக்கிறான் அவன்...விரிந்து கொண்டே இருக்கிறது அவனது வானம்......"

....எழுதிக் கொண்டிருந்தேன்....
உயிர் இருக்கும் வரை
இருக்கப் போகும்
என் எழுத்துகளை ஒரு நாள்
நான் எழுத முடியாமல்
போகலாம்...
அப்போதும் நினைவுகளில்
எழுதிக் கொண்டிருப்பேன்
எனக்கான ஒரு
.........சந்தோஷப் பாடலை........


தேவா சுப்பையா...



தம்பியுடையான்....!

$
0
0














தம்பிங்க பொறந்தப்ப எனக்கு ஆறு வயசு இருக்கும். காலையில எழுந்தப்ப உங்களுக்குத் தம்பி பாப்பா பொறந்து இருக்குன்னு எதிர்வீட்டு வைதேகி அக்கா சொன்னாங்க. அம்மா, அப்பா ரெண்டு பேரும் இல்லாம நானும் அக்காவும் படுத்து இருந்து இருக்கோம் துணைக்கு வைதேகி அக்கா இருந்து இருக்காங்க. ஒரு ஏழு மணி போல இருக்கும் அப்பா வந்தாங்க...டேய் உனக்குத் தம்பி பொறந்து இருக்காண்டான்னு சொன்னப்ப...எனக்கும் அக்காவுக்கும் ரொம்ப சந்தோசமாயிடுச்சு...! கடையில இருந்து அப்பா டீ வாங்கிட்டு வந்து கொடுத்தாங்க.. குடிச்சுட்டு...கிளம்பி.. நடக்குற தூரத்துல இருந்த கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலுக்கு  போனோம்.

வெள்ளை  பெயிண்ட்ல சுவர சுத்தி பச்சை கலர் பார்டர் அடிச்சு அது மேல சிவப்பு கலர்ல பார்டர் கொடுத்து ஆஸ்பத்திரி ஒரு மாதிரியா மிரட்சியாத்தான் இருக்கும் அப்போ எல்லாம். உள்ள நுழையும் போதே அடிக்கிற மருந்து வாசனைகளை எல்லாம் கடந்து உள்ள போகும் போதே வேற ஏதோ ஒரு உலகத்துக்குள்ள வந்து இருக்க மாதிரி தோணும். அதுவும் எனக்கு ஆஸ்பத்திரில இருக்க டாக்டர்ஸ விட நர்சுங்க, கம்பவுன்டர்கள கண்டா ரொம்பவே பயம்.  அதட்டிக்கிட்டு ஒரு  மாதிரி மிரட்டலாவே பேசுவாங்க எப்பவுமே..! நான் அந்த ஆஸ்பத்திரிக்கு இதுக்கு முன்னால ரெண்டு வாட்டி போயி இருக்கேன்னு நினைக்கிறேன். 

ரெண்டு வாட்டியும் அம்மாதான் மல்லுக்கட்டி அப்பா கூட சைக்கிள்ள அனுப்பி வச்சாங்க. வைத்துல பூச்சி இருக்குடா தம்பி ஆஸ்பத்திரிக்கு போனா சிரப்பு கொடுப்பாங்கன்னு, சிரப்பு ரொம்ப இனிப்பா இருக்கும்டான்னு அதை சாப்டா குண்டா ஆகலாம்னு அம்மா சொன்னத நம்பி நான் ஆஸ்பத்திரிக்குப் போனா அங்க இருந்த டாக்டர் கை நிறைய த/அ மாத்திரையையும் கொடுத்து அதையும் சாப்ட சொன்னாங்க. எனக்கு அடுத்தாப்ல வந்தவருக்கும் அதே த/அ மாத்திரைதான் கொடுத்தாரு டாக்டர் ஆனா அவருக்கு காது வலின்னு சொன்ன மாதிரி எனக்கு கேட்டுச்சு.  அப்போ எல்லாம் அம்புட்டு யோசிக்கறது இல்லை...என்னங்க டாக்டருக்கு தெரியாததையா நாம யோசிச்சுப்புட போறோம்...

ஆக்சுவலா பாத்தீங்கன்னா, வெள்ளை கலர், மஞ்சக் கலர், ரோஸ் கலர். இந்த மூணு வகையான மாத்திரைகளையும் ஒரு ட்ரம்மு நிறைய ஒரு மாதிரி கருஞ்சிவப்புக் கலர்ல இருக்க ஒரு சிரப்பையும் வச்சுக்கிட்டுதான் மொத்த ஆஸ்பத்திரியோட புற நோயாளிகளையும் சமாளிப்பாய்ங்க.. அடிகிடி பட்டு வந்தா இருக்கவே இருகு டிங்சர் ஆஃப் அயோடினும் பஞ்சும், பேண்டேஜும். அந்த ஒத்த ஆஸ்பத்திரியில ஊரு சனமே வந்து மருத்துவம் பாத்துக்கிட்டு அது சரியாவும் போயிரும்னா பாத்துகோங்களேன்..! இப்ப மாதிரியா அப்ப எல்லாம்...உடம்பு சரியா இல்லேன்னா சரியாப் போறதுக்கு சரியா மருந்து கொடுத்த காலம் அது. மருத்துவம் மருத்துவமா இருந்த நேரம். இப்போ மருத்துவம் வியாபாரமா போச்சுன்றது பத்தி இன்னொருக்கா பேசையில பேசுவோம்...

இப்போ தம்பிய பாக்க போலாம் வாங்க...

அப்பா கைய புடிச்சுக்கிட்டு ரொம்ப ஆர்வமா அம்மா இருந்த அறைக்குள்ள நுழைஞ்சோம். பெரிய அறைதான் அதுன்னு வச்சுகோங்களேன். நான் அம்மா கிட்ட படுத்து இருந்த தம்பிய போய் ஆசையா அந்த குட்டியோட பிஞ்சுக் கையில என் கைய வைச்சேன்... டபக்குன்னு புடிச்சுக்கிட்டான்...கொஞ்சம் தடிசாவே இருந்தான். என் தம்பி எனக்கு துணை அப்டீன்னு நான் நினைச்சு சந்தோசப்பட நிறையவே காரணம் இருக்கு.

எங்க ஊர்ல பட்டாணி ராவுத்தர்னு ஒருத்தர் இருந்தாரு அவருக்கு அஞ்சோ ஆறோ பசங்க...பகுருதீன் கிட்ட சண்டை போட்டா முஜிப்பு வருவான் ஏன்டா எங்க அண்ணன அடிச்சேன்னு..., முஜிப்பு கிட்ட தகராறுன்னா அவன் தம்பி கலந்தர் வருவான்...கலர்ந்தர் கிட்ட எதித்து பேசினோம்னா நஜீர் வருவான்... இப்டி மொத்தமா அண்ணன அடிச்சா தம்பி, தம்பிய அடிச்சா அண்ணேன்னு மாத்தி மாத்தி வருவாய்ங்க. பெரும்பாலுமே யார்ட்டயாச்சும் சண்டை போட்டா, அவன், அவன் நான் என் அண்ணன கூட்டிட்டு வருவேன் தம்பிய கூட்டிட்டு வருவேன்னுதான் சொல்லுவாய்ங்க எல்லா பயலுகளும், நான் மட்டுந்தான் எங்க அப்பாவ கூட்டிட்டு வருவேன்னு சொல்லுவேன்...

எங்க அப்பாவே ஒத்தப் பொறந்தாரு. அஞ்சு அக்கா தங்கச்சிக்கும் நடுவுல நாலாவதா பொறந்தவரு. நான் ஒத்தப் பொறந்தவனா இருக்கதால எல்லாத்துக்கும் யோசிச்சு யோசிச்சுதாண்டா காலை எடுத்து வைப்பேன். தனியா வளர்ந்தாலே கொஞ்சம் பயத்தோடதான் வாழ்க்கைய எதிர் கொள்ளணும்ன்னு அப்பா அடிக்கடி எங்கிட்ட சொல்லுவாங்க. எங்க அப்பத்தா கூட சுப்பையா ஒத்த பொறந்தவன் அவனை யாரும் எதுவும் சொல்லாதீங்கன்னு அடிக்கடி சொந்தக்காரங்க கிட்ட எல்லாம் சொல்றத கேட்டு இருக்கேன். எங்க அத்தைங்க எல்லாம் கூட ஒத்தப் பொறந்தவன்ப்பா ஒங்க அப்பன்...பதவுசதான் பேசணும் அவன்ங்கிட்டன்னு நான் காலேஜ் படிக்கிற வரைக்கும் என்கிட்ட சொல்லி இருக்காங்க...

அதனாலேயே அப்பாவுக்கு என்னைய ஒத்தப் பொறந்தவனா விட மனசு இல்ல போல இருக்கு. தம்பிய கைய பிடிச்சிக்கிட்டு ஆசையா அவன பாத்துட்டு இருந்தேன் கொளுக் கொளுக்னு எந்தம்பிய பாத்து  எப்படா தம்பி பெரியாளா வருவா...? எந்தம்பி வருவாண்டா என்னைய அடிச்சான்னு நானும் சொல்வேன்லன்னு சொல்லிப் பாத்துக்கிட்டு இருக்கையில எங்க அம்மாவுக்கு அந்தாண்ட சைட்ல இருந்து இன்னொரு அழுகைச் சத்தம் கேட்டுச்சு...அட.. என்னாட இவன் இங்கிட்டு கிடக்குறான் அங்கிட்டு இருந்து சத்தம் வருதுன்னு எட்டிப் பாத்தா.. அங்கிட்டு ஒருத்தன் அழுதுக்கிட்டு இருக்கான்.. அட என்னங்கடா இதுன்னு அப்பாவ நிமிந்து பாத்தேன்...

உனக்கு ரெண்டு தம்பிங்கடா.. அப்பா சந்தோசமா சொன்னாங்க. நானும் அக்காவும் ஒருத்தரை ஒருத்தர் சந்தோசமா பாத்துக்கிட்டோம். புது வரவு அவ்ளோ சந்தோசமா இருந்துச்சு. ரெண்டு பேரையும் எப்படா வீட்டுக்கு கூட்டிட்டுப் போவோம்,  எந்தம்பிங்க எப்படா வளர்வாங்கன்னு ஒரே ஆசை எனக்கு...

எனக்கு ரஜினி ரொம்ப பிடிக்கும். மூன்று முகம் படத்துல அருண் கேரக்டர்ல இருக்க ரஜினிய வில்லன் கோஷ்டி அடிச்சுட்டு இருக்கப்ப ஜான் கேரக்டர்ல இருக்க ரஜினி தம்பி புடி அப்டீன்னு சொல்லி ஒரு கட்டைய தூக்கிப் போட்டு ஹெல்ப் பண்ணுவாங்க. அடிக்கடி நான் மூன்று முகம் ரஜினி மாதிரி என்னைய என் தம்பிங்க ரெண்டு பேரையும் நினைச்சுப் பாத்துப்பேன். முதல்ல நான் கையத் தொட்ட தம்பி நல்லா புஷ்டியா இருப்பான். அம்மா இவனுக்கு பால் கொடுத்துட்டு, அடுத்தவனுக்கு பால் கொடுக்கறதா நினைச்சு சில நேரம் பை மிஸ்டேக்கா  இவனுக்கே மறுபடி கொடுத்துடுவாங்க அதையும் இவன் குடிச்சுடுவான். நாங்க இருந்த ஊர்ல பெரமையான்னு காவல் தெய்வம் இருக்கு. அத வேண்டிகிட்டு புஷ்டியா இருந்த தம்பிக்கு பிரேம் குமார்னு வச்சோம். கொஞ்சம் ஈசியா இருந்த தம்பிக்கு ராம்குமார்னு வச்சோம். ராம் பிறந்து கொஞ்சம் வினாடிகள்ள பிரேம் பொறந்ததா சொல்லுவாங்க...

எங்க வீட்ல இருக்க எல்லோரும் அவனுகள அடையாளம் கண்டு பிடிச்சுடுவோம் வெளில இருக்க ஆளுங்களுக்கு கொஞ்சம் இல்ல நல்லாவே கஷ்டம். நான் அவனுக தூங்கும் போது தொட்டி பிடிச்சு ஆட்டி இருக்கேன். அக்காவும் நானும் தம்பிங்க ரெண்டு பேரையும் அம்மா சமைக்கும் போது தூக்கி வச்சு இருந்து இருக்கோம். அக்கா என்னோட ஒரு வயசு கூட, சோ.. அக்கா.. அக்கான்ற ஒரு தூரம் இல்லாம ப்ரண்ட் மாதிரிதான் இருப்போம்.  ரெண்டு பேரும் எனக்காகவே பொறந்தவனுங்கன்னு அம்மாவும் அப்பாவும் அடிக்கடி சொல்லுவாங்க...

நான் இல்லாதப்ப தம்பிங்ககிட்ட,  டேய்....அவனுக்காகத்தாண்டா உங்கள் பெத்தேன்னு அடிக்கடி அப்பா சொல்லுவாங்களாம். என்கிட்ட தம்பிங்க ரெண்டு பேரையும் அனுசரிச்சு நல்ல படியா பாத்துக்கணும்பா நீன்னு சொல்லுவாங்க...

அப்பா இறக்கறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட.. தேவா. தம்பிங்க  ரெண்டு பேரும் உன் பிள்ளைங்க மாதிரி, கூட கொறச்சு இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணி போகனும்னு சொன்னது இப்பவும் காதுல கேட்டுகிட்டே இருக்கு...

அப்பா இறந்து 83 நாள் ஆச்சு.. இதோ அப்பா  இல்லாம என் தம்பிங்க ரெண்டு பேரும் 32வது பிறந்த நாள வலியோட எதிர் கொண்டுட்டு இருக்காங்க.  காலையில ராம்க்கு கால் பண்ணி விஷ் பண்ணீனேன்.. அடப் போண்ணே...அதையெல்லாம் மறந்துட்டேன், கலெக்டர் ஆபிசுல இருக்கேன் புது ரேசன் கார்டு வாங்க வந்தேன்னு விரக்தியா சொன்னான்....அப்புறம் பிரேம்க்கு போன் பண்ணினேன்...அம்மா கூட இருக்கேன் அண்ணே...பொறந்த நாள் கிடக்கு பொறந்த நாள்னு சொல்லிட்டு அம்மகிட்ட போன குடுத்துட்டான்...

அம்மாகிட்ட பேச முடியாம பேசினேன்.. அம்மா தம்பிங்களுக்குப் பொறந்த நாளும்மா...ஆசிர்வாதம் பண்ணுங்கம்மா....நீங்கதான்மா அப்பா.. நீங்கதான்மா அம்மா..தம்பிங்க பாவம்மா... இந்த நேரம் அப்பா இருந்தா எனக்கு போன் பண்ணி சொல்லி இருப்பாரும்மா.....டேய் தம்பிங்களுக்குப் பிறந்த நாள் இன்னிக்கு நீ பேசினியாடான்னு கேட்டு இருப்பாரும்மா...ன்னு சொல்லி முடிக்கும்  முன்னாடி அம்மா அழுதுட்டங்க...

14.08.2013 இன்னிக்கு இரண்டு பேரையும் கட்டிப் பிடிச்சு மானசீகமா வாழ்த்திட்டேன்......நூறு வயசுக்கு தீர்க்காயுசா செல்வ செழிப்போட அவனுங்க இருக்கணும்னு....

நாந்தானுங்களே இப்ப அப்பா கூட.....



தேவா சுப்பையா...




வானம் எனக்கொரு போதிமரம்...!

$
0
0





















அடையாளங்கள் அழிந்து போன ஒரு வழிப்போக்கனாய் பெரும்பாலும் ஒன்றுமில்லாததற்குள் கிடந்தேன். மழை நின்று போயிருந்த அந்த மாலை மீண்டுமொரு கனத்த மழையைக் கொண்டு வரவும் கூடும். எதுவமற்று அந்த மரத்தடியில் நான் லயித்துக் கிடந்தது போலத்தான் சித்தார்த்தனுமொரு நாள் போதியின் வேர்களுக்கு நடுவே கிளர்ந்தெழுந்த மனோநிலையில் கிறங்கிக் கிடந்திருக்க வேண்டும். மழையை தேக்கி வைத்துக் கொண்டு காற்றின் அசைவுகளுக்கு எல்லாம் நம்மை ஆசிர்வதிக்கும் மரங்களை நான் தேவதைகள் என்றுதான் கூறுவேன்.

ஒவ்வொரு முறை காற்று சில்லிட்டு வீசும் போதும் நீரை என் மீது தெளித்து விளையாடிய மரங்களை எனக்கு அழகான பெண்களோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது. அழகு என்ற சொல்லுக்கு வரையறைகள் கொடுக்க நான் விரும்பவில்லை. இது இதுதான் அழகு என்ற கோட்பாடுகளை உலகம் செதுக்கிக் கொண்டே இருக்கிறது இன்னமும். கிளியோபாட்ராவை அழகு என்று வர்ணிக்கும் இலக்கியங்களும் வரலாற்று நாவுகளும் இன்று உலகம் முழுதும் பரவிக் கிடந்தாலும் அவள் அழகாய் இருந்தாளா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியவன் எனக்கு நான் மட்டுமே. அழகான என்ற சொல் எப்போதும் தனிமனித விருப்பத்தையும் ஆழ்மன தேடலையும் பொறுத்தது.

எனது அழகு உங்களுக்கு அவலட்சணமாகவும் எனது அவலட்சணம் உங்களுக்கு அழகாயும் இருக்கலாம். 

மரம் எனக்கு அழகான பெண்ணாய்த்தான் தோன்றியது. ஒரு ஆணுக்குப் பெண்தான் வேண்டும். எத்தனை சுகங்களை அவன் அனுபவித்தாலும் அதை பெண்ணிடமிருந்து பெற்ற சுகத்தைக் கொண்டுதான் அளவிடுவான். அப்படி அளவிடாமல் ஏதோ ஒன்றில் லயித்துக் கிடக்கிறான் என்றால் அந்த ஏதோ ஒன்று ஒரு பெண்ணை நோக்கி நகர்த்தும் விசமாய்த்தான் இருக்க முடியும். ஆண்களைப் பற்றி பெண்கள் என்ன நினைப்பார்கள் என்று நான் எவ்வளவு யோசித்து புத்தியை மாற்றி ஒரு பெண்ணின் நிலையில் இருந்து எழுதினாலும் அது ஒரு போதும் ஒரு பெண்ணை ஒத்து இருக்கப் போவதில்லை என்பதால் அந்த கணக்கீட்டுச் சமன்பாடுகளை என் மூளையிலிருந்து ஒதுக்கியே வைத்து விடுகிறேன் பெரும்பாலும்.

ஈரமான மரம் மழைக்குப் பின்னான பூமியின் வாசத்தோடு என்னைக் கிறங்கடித்துக் கொண்டிருந்த போது எனக்கு என் அவள் என்னவளாய் இருந்த காலங்கள் புத்திக்குள் இருந்து எட்டிப்பார்த்துச் சிரித்தன. பெண்ணை புணர்வதை விட வாசம் செய்வது எத்தனை  சுகமென்று அதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத் தெரியும். புணர்ச்சி...புணர்ச்சி என்று ஓடாமல் நுகர்ச்சி நுகர்ச்சி என்று ஓடிப்பாருங்கள் விழுந்து விடாத உச்சத்துக்குள் செழித்துக் கிடப்பீர்கள். பெண்ணைப் பற்றியே எழுதுகிறாயே என்கிறார்கள் பலர் என்னிடம்..ஒரு ஆணுக்கு பெண்ணைப் பற்றி எழுதுவதை விட வேறு என்ன வேலை இங்கு இருக்கிறது...? என்ற என் எதிர் கேள்வி சமூகத்தின் ஒழுக்க நியதிகளுக்கு எதிரானதாய் கூட இருக்கலாம்.

அடித்தால் வலிப்பது போல...அழகினை ரசிப்பது என்பது இயல்பாய் நிகழ்கையில் அதை எந்தக் கடிவாளம் போட்டு நான் நிறுத்த..? கண்டும் காணாதது போல இந்த உலகம் என்னை நடிக்கச் சொல்கிறது. நான் நடிக்க விரும்பாத ராஜாங்கத்தின் சக்கரவர்த்தி என்று யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வாய்ப்பிருந்தால் எமது ராஜ்யத்திற்குள் ஒரு முறை வந்து பாருங்கள். அங்கே நிலாக்களை வீதி தோறும் கைக்கெட்டும் தூரம் பறக்க விட்டிருப்போம். ப்ரியங்களை சுமந்த விழிகளோடு பெண்டிர் எம்மை ஆளவும் செய்வர் எம்மோடு இணக்கமாய் வாழவும் செய்வர். விருப்பங்களின் பெயரில் நகரும் எமது வாழ்க்கையில் சக மானுடரை காயப்படுத்தும் வகையில் செயலொன்றுமே இருக்காது. எங்களுக்கு மொழி என்பது அவசரத்தேவைக்காக பயன்படும் ஊர்தியைப் போலத்தான். மெளனங்கள் சுமந்த அந்த உலகில் உணர்தலால்தான் நாங்கள் எங்களின் உணர்வுகளை விளங்கிக் கொள்வோம்.

ஆயுதங்கள் என்றால் என்னவென்று யாரும் அங்கே அறிந்திலர். புத்தி பிறழ்ந்து போனவர்களை உற்று நோக்கி நாம் அவர்களைச் சரிசெய்வோம். இலக்கணங்களும் தத்துவங்களும் என்றால் என்னவென்று எங்களுக்குத் தெரியவே தெரியாது. மழை பெய்யும் நாளெல்லாம் எமக்கு பண்டிகைகள், எமது ஓய்வுகளில் எல்லாம் ஒன்று கூடிச் சென்று இயற்கையின் அழகினைக் கண்டுகளிப்போம். எங்களின் வேலை என்பது எமக்காய் உணவு தேடுதலும், உணவு உற்பத்தி செய்தலுமே! விருப்பங்களில் சுதந்திரம் இருப்பதால் எமக்கு இயல்பாய் போன நேர்மையில் எமது இருப்புகளை நேசித்து, நேசித்து இன்பம் துய்ப்போம்.

அது வேறு மாதிரியான வாழ்க்கை. அது பற்றி உங்களுக்குப் புரியாது. சப்தங்கள் இல்லாத எமது ராஜ்யத்தில் எமக்கு கண்ணீரும், மகிழ்ச்சியும் ஒன்றுதான். இருப்பதை விளங்கி இல்லாமைக்குள் நகர்ந்து செல்வது எப்படி என்றுதான் வாழ்நாள் முழுதும் பயின்று கொண்டிருப்போம். எமது உணர்வுகள் எம்மை ஆளுகையில் எமக்கு எந்த ஒரு கட்டுப்பாடுகளும், நெறிமுறைகளும் தலைவர்களும் அங்கே இலர். எம்மில் சிறந்தது எப்போதும் எம்மை வழிநடத்தும். இங்கே தலையாய உணர்வுகொண்டோர் தலைவர்கள். தங்களின் இருப்பினை உணர்ந்து இல்லாமல் வாழ்வோர் சக்கரவர்த்திகள். இது வாசனையான உலகம்...வசந்தத்தை மகிழ்ச்சியோடு மட்டும் தொடர்புபடுத்திக் கொள்ளாமல் துக்கத்தோடும் தொடர்புபடுத்தி வாழும் ஒரு துயரற்ற வாழ்வு.

மீண்டுமொரு முறை காற்றுக்காய் தலையசைத்து என் மீது நீர் தெளித்த மரத்தினை வாஞ்சையோடு மனதால் வாங்கிக் கொண்டேன். மனதை முதலில் அவிழ்த்துப் போட்டு புத்தியால் நிர்வாணமானேன். அந்த நிர்வாணத்தில் உடலும் ஓடிப் போய் ஒளிந்து கொள்ள உணர்வொன்று பிரம்மாண்டமாய் சிலிர்ப்பென்னும் உணர்வோடு புணரத்தொடங்கி  இருந்தது. இங்கே சுகம் என்பது மட்டுப்பட்டதாய் இருக்கவில்லை. இது முன்பொரு காலத்தில் பெண்ணோடு சல்லாபித்த சுகத்தை நினைவுபடுத்தியதே அன்றி இது அதுவல்ல. அங்கே இயக்கம் இருக்கும். ஆண் பெண் அசைவுகள் இருக்கும். இங்கே நான் என்னும் என்னுணர்வு மனம் கழிந்து ஓரு ஆணைப் போல நின்றது....உள்ளுக்குள் பரவசத்தைக் கிளறிய ஒர் பெரும் உணர்வு பெண்ணைப் போல நின்றது. இங்கே இரண்டும் சேர, சேர அசைவு அடங்கிக் கொண்டிருந்தது. 

சிலிர்ப்பாய் உள்ளுக்குள் அடங்கிக் கொண்டிருந்த நான் என்னும் உணர்வை, அந்தச் சூழல் என்னும் குளுமை நிறைந்த பெண் அடக்கி கொண்டிருந்தாள். பிரக்ஞையற்று மரத்தின் வேர்களில் நான் நழுவிக் கிடக்கையில் நான் இருக்கிறேன் என்ற உணர்வை வேகமாய் என்னை ஆக்கிரமித்த பெண்ணுணர்வு அழித்துக் கொண்டிருந்தது. வேகமான இயக்கம் அது......ஆனாலும் இயக்கமில்லாதது போலத்தான் தோன்றியது. இங்கே எது உச்சமாயிருக்கும் என்ற கேள்வி ஒன்று மனதிலிருந்து மெல்ல எட்டிப்பார்க்க....பார்த்த கணத்திலேயே உணர்வின் ஆளுமையால் அது அழிந்தும் போனது. 

உடலின் உச்ச இன்பம்தான் இங்கே ஆரம்பமாயிருந்தது....

ஏதேதோ கதவுகள் திறந்து கொள்ள விழிகள் திறந்தபடியே அங்கே அனுபவித்தல் என்ற ஒன்றை மட்டுமே உணர முடிந்தது. இருக்கிறேன் என்ற உணர்வைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை. இடுப்பின் கீழ் தண்டுவடத்தின் அடிப்பகுதியில் ஏதோ ஒரு சக்தி அசைந்து கொண்டிருந்தது. மெல்ல மேலெழுவதும்.. பின் கீழ் செல்வதுமாயிருந்த அந்த ஒன்று...ஒரு கணத்தில் சீறிப்பாய்ந்து அடிவயிற்றில் மோதியது.  அப்போது ஆழமாய் சுவாசித்துக் கொண்டிருந்தேன். கண்கள் மேல் நோக்கிச் சென்று புருவமத்தியில் சென்று தஞ்சமடைந்த அந்த நொடியில் மீண்டும் மேலேறிய அந்த சக்தி அடுத்து வயிறு, நெஞ்சு, என்று சென்று உள்ளுக்குள் இருந்த அடைப்புக்களை கிழித்தபடியே நகர்ந்து கொண்டிருந்தது. இது எல்லாவற்றையும் ஒரு சாட்சியாய் நின்று வேடிக்கைப் பார்த்த மனம் ஒடுங்கிப் போய்க்கிடந்தது. நடுநெஞ்சிலிருந்து புருவமத்திக்கு நகர்ந்த அந்த சக்தி....

புணர்ச்சி என்றால் என்னவென்று ஆழமாய் பாடமெடுக்க....கோடிமுறைகள் உச்சத்தை தொடும் நிகழ்வொன்றை நெருங்கிக் கொண்டிருக்கும் கணத்தை எனக்கு கொடுக்கப்போகிறது என்று மெல்ல விளங்கியது. சராசரி வாழ்க்கையில் பெரும்பாலும் ஆண் இயங்க, பெண் வாங்கிக்கொள்ளுமிடத்தில் இருப்பாள். இங்கே நான் பெண்ணாயிருக்க பெண்ணை ஒத்த பிரபஞ்ச சக்தி என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. புருவமத்தியில் நிலைகொண்டிருந்த சக்தி...என்னை உள்ளுக்குள் கதறவைத்தது. போலியாய் உடலுக்குள் நின்று கொண்டு பெண் சுகத்துக்காய இயங்கும் ஒட்டு மொத்த உலகத்தையும் என் முன் தோலுரித்துக்காட்டி அதை மட்டுப்பட்டது என்று சொல்லிக்காட்டி....பிரபஞ்ச விருத்தி என்னும் மையம்தான் வாழ்க்கையின் ஆதாரம் என்றுணர்த்தியது.

காமத்தில் ஜனித்து...காமத்தில் வளர்ந்து....காமத்தில் மரிக்கும் வாழ்க்கைக்கு எத்தனை வர்ணமடித்து வைத்திருக்கின்றனர் இம்மானிடர் பார் என்றொரு உணர்வு உள்ளுக்குள் தோன்ற...கதறியழுது கொண்டிருந்த என் உணர்வுக்குக் காரணமாய் பழைய பொய்க்கற்பிதங்கள் இருந்து போயின. புருவமத்தியில் படுத்துக் கொண்டிருந்த அந்த சக்தியின் ஆளுமைதான் அங்கிங்கெனாதபடி பரவிக்கிடப்பதாய் எனக்குப் பட்டது. நான் என் அகத்தொடர்புகளையும் அறுத்துக் கொண்டிருந்தேன். ஒப்புக்கொடுத்தல் என்னும் சரணாகதி என்றால் என்னவென்று தெளிவாய் விளங்கியது.

இதற்குமேல் ஒன்றுமில்லை இனி எல்லாம் ஈசன் செயல் என்ற ஒரு வாக்கியம் உள்ளுக்குள் ஓடி மறைந்தது. நான் கால்கள் நீட்டி கைகள் விரித்து சரிந்து கிடந்தேன்...முழுமையான பிரவாகத்தோடு ஒற்றை வீச்சில் புருவமத்தியிலிருந்து சீறிப்பாய்ந்த அந்த சக்தி...மூளைக்குள் இறங்கிக் கூடி அந்த கலப்பில் ஏதேதோ திரவங்கள் சுரந்து மூளையை மூழ்கடிக்க...மொத்த உணர்வும் அடங்கி என்னை ஆட்கொண்ட சக்தி எது...? நானெது..? என்றறிய முடியாத உணர்வுக்குள் அமிழ்ந்தே போனேன்...!

கட்டுக்குள் நிற்காத இவ்வாழ்க்கை அழகு.....
புலன்களுக்குள் பூட்டிக்கொள்ளாத பாவம் அழகு....
தேவைகளற்ற விருப்பங்கள் அழகு.....
ப்ரியங்கள் கொண்ட பார்வைகள் அழகு.....
திணிக்கப்படாத அறிவுகள் அழகு....
வர்ணங்கள் நிறை கனவுகள் அழகு...
கற்பனைகள் நிறைந்த கவிதைகள் அழகு
பொருள் கொண்டு கணிக்காத உறவுகள் அழகு
காமம் கடந்த பாலினங்கள் அழகு..
அறிவு நிறை பெண்கள் அழகு...
பெருமைகள் பேசா ஆண்கள் அழகு
காலங்கள் மறக்கும் மனங்கள் அழகு...
கர்வம் கொள்ளாமல் படைப்பவன் அழகு...
சுற்றும் பூமி அழகு....
சுடும் சூரியன் அழகு
தேய்ந்து வளரும் நிலவும் அழகு...
ஆழக்கடல் அழகு...
தேங்கி நிற்கும் நீரும் அழகு...
சுத்தங்கள் அழகு....
அசுத்தங்கள் அழகு...
கண்டவை அழகு.....
காணாதவை எல்லாம் இன்னும் அழகு....

எங்கும் முடிச்சிட்டுக் கொள்ளமல்....காற்றில் தவழும் ஓசையைப் போல, நாசி தொடும் நறுமணம் போல..., உடலைத் தழுவும் மென்குளிர் போல, விரவிப் பரவும் பளீர் ஒளி போல....இருந்தேன்....

மணல் புரளும் அழகிய கடற்கரைகளில் அவன் மீட்டிக் கொண்டிருக்கும் அற்புத இசையொன்றை வாசித்துக் கொண்டிருக்கும் அலைகளையும், நீல வானத்தில் அவன் தீட்டி வைத்திருக்கும் பஞ்சுப்பொதி ஓவியங்களையும்.....உணர்வுகளுக்குள் இருந்து மெல்ல தடவிப்பார்த்தேன். அது அவனா? இல்லை...அவளா...? முன் நெற்றியில் விழுந்த மழைத்துளி ஒன்று என்னை உடலென்னும் பிரக்ஞைக்குள் கொண்டு வர வெகுநேரம் முயன்று கொண்டிருந்தது. பகுதி விழிப்பு நிலையில் மெல்ல கண்கள் திறந்து கொள்ள...

மரம் என்னைப் பார்த்து சிரித்தபடியே மீண்டும் நீர்த்துளிகளை  தெளித்து.... எம்மையும் போதியென்று அறிவிப்பாயோ என்று நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்க்க....

வானத்தைப் பார்த்தேன்...மறுபடி மழை வரும்போலத் தோன்றியது.....மேகங்கள் அவசர அவசரமாய் நகர்ந்து ஏதேதோ செய்திகளைப் பரிமாறிக் கொண்டிருந்த போதே....


அங்கே அடித்துப் பெய்தது மழை.....! 



தேவா சுப்பையா...



செங்காத்து வீசும் காடு....!

$
0
0
















மானம் மப்பா இருக்கு மாப்ளே....மழை பெய்ஞ்சுதுன்னா தேவலாமப்பு.....வெதச்சு வச்சது எல்லாம் கண்ண முழிச்சு எந்திரிச்சுக்கிடுமப்பு...துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டேன். குப்புத்தேவருக்கு எப்பவுமே கிறுத்துருவந்தேன்..இன்னமும் வெள்ளாமைய நம்பிக்கிட்டு நீ அது கூடயே மாரடிச்சுகிட்டு இரு பெரியப்புன்னு அவன் கேலி பேசுனத கண்டுக்காம நான் இந்தாப்பு காசுன்னு டீக்கு காசக் கொடுத்து புட்டு எந்திருச்சு வந்துட்டேன்.

மண்ணோடயே கெடந்தவைங்கதான் எங்க பாட்டன் பூட்டன் அம்புட்டு பேரும். வெள்ளாமை செய்றவைங்கன்னா அம்புட்டு மவுசு மருவாதை இருந்த காலம் மலையேறிப் போச்சு, இப்ப எல்லாம்...நம்மூரு வயலுக்குள்ள எல்லாம் காரு கண்ணி வந்து போகுது. அம்புட்டு நிலத்தையும் பிளாட்டுப் போட்டு செண்டு 50,000ம்னு வித்துப்புட்டு ஊருசனம் பூரா டவுனுக்குப் போயிருச்சுக.... என்னைய மாறி இன்னமும் வெள்ளாம காடுன்னு கட்டிப் புடிச்சுக்கிட்டு கடக்குற சனம் கொஞ்சப் பேருதேன்....! வெவசாயம் பாத்த செனம் வெவரங்கெட்டுப் போயி என்ன என்னமோ வேலை செஞ்சு சம்பாரிக்குதுக....! யாருமே வெள்ளாம செய்யாம போயிட்டா எல்லாரும் எப்புடிப்பு சாப்புடறது..?

சூசை மயனும் என்னைய மாதிரித்தேன். எம்புட்டு பெரச்சினை இருந்தாலும் வெவசாயத்த உடாம மொத்தமா சாவியாப்ப் போனாலும் சிரிச்சுக்கிட்டு மறுவடிக்கா உழுதுபுட்டு வெதைச்சிக்கிட்டு திரிவான்....ஆத்துப் பாசனம் இல்லாத மக்கமாருக நாங்க....வானத்த, வானத்த அண்ணாந்து பாத்து எப்படா ரெண்டு தூத்தப் போடும்னு கையெடுத்து கும்புட்டுக்கிட்டே இருப்போம். எங்கூரு கம்மாவ வெட்ட ஊருசனமே வேல பாத்து இருக்குன்னா பாத்துக்கங்களேன். கடலு மாதிரி கம்மாதேன்.. மழத் தண்ணி இல்லாம.. சுருங்கிப் போன செவத்தா அம்மாயி மாதிரி...ஊரோரமா இழுத்துக்கவா பரிச்சுக்கவான்னு கெடக்குது...! மழை பெஞ்சா கம்மா நெறையும், மழை ஒழுங்காப் பேய மனுசன் ஒழுங்கா இருக்கணும்...ஒண்ணு விடாம அம்புட்டு மரத்தையும் வெட்டி வித்துப் புடுறாய்ங்க..அப்புறம் மழை எப்புடி நல்லாப் பேயும்....

யோசனையோடவே போறியளே...ஏப்பு...மழை பேயுறது கூடவா தெரியல...செத்தவடம் நின்னுட்டுப் போங்கப்பு....வாணியவீட்டு முருகாயி பேத்தி கத்துன கத்துல நான் கிறுக்கோண்டே போயிட்டேன்....ஏத்தா.. ஏத்தா..இருக்கட்டுமத்தா...மழை வேணும்னுதானேத்தா காத்துக் கிடக்கேன்...பெய்யட்டுமத்தா... என்ன செஞ்சுப்புடும் இந்த மழை நம்மள...

காலம் பூரா மழையோட மல்லுக்கட்டுன பயபுள்ளைகதானே நாம எல்லாம்....பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தேன்.

கம்மாய தூறு வாருனப்ப எனக்கு 7 வயசு இருக்கும். எங்கப்பு..  ஆத்தா எல்லாம் கம்மாயிலதேன்...நின்னாக ஏன் ஊருசனமே அங்கனதான் இருந்துச்சு... அத்தனை அடி உசரத்துல கரைய ஒசத்தி, கம்மா மண்ண வெட்டி வெட்டி சேரும் சகதியுமா கரை ஓரமா கொட்டி கொட்டி...அம்புட்டு சந்தோசமா வேலை செஞ்சுகிட்டு இருந்தோம். என் காலெல்லாம் சகதி, என் உடம்பெல்லாம் சகதி.....மண்ணுக்குன்னு ஒரு பாசம் இருக்கப்பான்னு...சேத்தையும் சகதியவும் பாசத்தோட சேத்துப் பூசிக்கிட்டு வேலை செஞ்சுகிட்டு இருந்தோம்...

கம்மாயா தூறு வாருனாத்தானே மழ தண்ணி பேஞ்சா வந்து நிறையும்...மண்ணு மூடிப் போயி மேடாப் போச்சுதுன்னா...பொறவு மழத்தண்ணி எங்க போயி நிறையும்.. அங்குட்டு இங்குட்டு ஓடி மொத்த தண்ணியும் சேதாரமாயி போயிடுமில்ல..., வெள்ளாம செய்றது ஒரு சொகமப்பு....மனுச மக்களோட சேந்தி வேல செஞ்சாலும் பேச்சு கொறவாத்தான் இருக்கும். பேசிக்கிட்டே இருந்தம்னாக்கும் வேலை ஓடி அடையாது...பாட்ட கீட்ட பாடிக்கிட்டு கேட்டுக்கிட்டு ஓடிக்கிட்டே இருப்போம்.

வெத்து வயல தண்ணி கிண்ணி இல்லாம கூரான கலப்பைய வச்சு புழுதி பறக்க உழுகுறப்ப...பூமியில இருந்து கிளம்புற சந்தோசத்தை கலப்ப நமக்கு காமிச்சு கொடுத்துருமுய்யா....கர்ர்ர்ர்ர்ர்ன்னு சத்தத்தோட மாடுகள அடிச்சு பத்திக்கிட்டு நவுரும் போது மொத்த ஆகாசமும் நம்ம தலைக்கு மேல நின்னு ஹோ.ன்னு நம்மள வேடிக்கப் பாத்துகிட்டு இருக்கும். வரப்போறமா இருக்குற ஆவாரம்பூ, காட்டாமுணக்க, இன்னும் எல்லா சின்ன சின்ன புல்லுகளும், முள்ளுகளும்  கைகொட்டி சிரிக்குமப்பு...இந்தா உழுதுட்டான்...இந்தா தண்ணி பாச்சப் போறான்னு பேசிச் சிரிச்சுக்கிட்டே காத்துல தலையாட்டி ரசிக்குமுங்க நம்மள பாத்து. தண்ணி பாய விட்டு மறுக்கா உழுகுறப்ப சேத்தோட சகதியோட வச்ச கால எடுக்க முடியாம மண்ணு கால கெட்டியா பிடிச்சுக்கிட்டு என்ன பெத்த ஐயா....எங்க போற நீ செத்த நேரம் இங்கதான நில்லுப்புன்னு பெத்த ஆத்தாளா நம்மள இழுத்து புடிச்சுக்கிறும்...

எம்புட்டு நாளு காலை எடுக்காம அப்படியே நின்னுக்கிட்டு நான் அழுதுக்கிறேன் தெரியுமா...ஒரு நா அப்பிடித்தேன்.. ஏரோட மாட்டோட நான் வயக்காட்டு சகதியில நின்னுகிட்டு கண்ணக் கசக்கிட்டு இருக்கயில, நான் கட்டிக் கூட்டியாந்துருக்கேனே...சரசு...சோறு கொண்டு வந்தவ...என்னைய கூப்புட்டு என்னாண்டு கேக்கமா அங்கிட்டு இருந்த போயிக்கிட்டு சேர்வாரு வீட்டு அன்னமயிலு, ஒத்தவீட்டு முருகேசன், பட்டாளத்தான் பொண்டாட்டி செகப்பின்னு அம்புட்டுப் பேரையும் கூப்புட்டு இங்க பாருங்களே....இந்த மனுசன் கிறுக்கொண்டு போச்சுன்னு சொல்லி சிரிக்கிறா பொசகெட்ட சிறுக்கி...

நம்ம புத்தி கிறுக்குப் புத்திப்பு மனுசங்கள விட..ஆடு மாட்டையும் சோறு போடுற நெலத்தையும், மழை கொடுக்குற ஆகாசத்தையும், வயக்காட்ல வேலை செய்யயில கூட பேசிச் சிரிக்கிற செடி கொடியளோடயுந்தேன் நமக்கு சினேகம் அதிகம். என் வூட்டு, ஆடு மாடுகளோட நான் பேசுற அளவுக்கு....ஆளுப்பேருககிட்ட பேசுறது இல்லை. விதைச்சமா, நட்டமா, தண்ணி பாச்சுனமா, அறுத்தமா, வித்தமா மிச்சத்த வீட்ல சாப்பாட்டுக்கு வச்சமான்னு போயிகிட்டே இருக்குமப்பு எங்க பொழுது எல்லாம்...

சோற காசு கொடுத்து வாங்கித் திங்கறது கேவலம்னு எங்க பெரிய அய்யா சொல்லுவாக, ஏன்டா பயலே நீ திங்கறதுக்கு நீ வெள்ளாமப் போட்டுக் கூட திங்க முடியலேன்னா என்னலே ஒனக்கு அம்புட்டு திமிறுன்னு...வெவசயாந்தேன் உன் வேலை அதை ஒழுங்காச் செய்யி....அதுதேன் உனக்கும் எனக்குந்தெரியும். அடுத்தவன் வேலைய நீ செய்யப் போனா அதை ஒன்னால ஒழுங்கா செய்ய முடியாது. நீ வெள்ளாமை செஞ்சு கொடு...இந்த ஒலகம் அதைச் சாப்டட்டும்....வெள்ளாமை பாக்குறது சாமி செய்ற சோலியப்பேன்னு சொல்லுவாக...

இன்னிக்கு லேசு பாசா மழை பெய்யிது...தச்சு வச்ச வெதையெல்லாம் சிரிச்சுக்கிட்டே கண்ணு முழிச்சுறுக்குமப்பு... அப்புடி, இப்புடி மிஞ்சுன 5 ஏக்கர வச்சுக்கிட்டு என் வாழ்க்கைய ஓட்டிகிட்டு இருக்கேன்...

கூறு மாறு கெட்டுப்போச்சாய்யா ஒனக்கு....? இப்புடி நனைஞ்சுக்கிட்டு வர்ற...முடியாமப் போயி படுத்தா என்னத்த செய்யிறது...முந்தானைய கொடுத்துக்கிட்டே வைஞ்ச சரச நிமிந்து பாத்தேன்...

மழ என்னத்த செய்ஞ்டுடப் போகுது...? போடி லூசு சிறுக்கி...தலைய தொவட்டிக் கொண்டே....திண்ணயில ஒக்காந்தேன்...

ஏங்க....மாப்புளயோட தாய் மாமான் வந்தாப்ள...

"என்னத்தா இப்புடி சொணங்குறீக...பய நல்ல வேலை பாக்குறேன்....கயல மலேயாவுக்கு கூட்டிக்கிட்டும் போயிருவாம்....75 பவுனுக்கு ஒரு பவுனு கொறைச்சுப் போட்டினாக்கும் அப்புறம் வேற எடத்ததேன் நாங்க பாக்கணும். கையில ஒரு ரெண்டு லெச்ச ரூவா கொடுத்துருங்க...அப்புறம் எங்க அக்காகாரி வேற எங்குட்டாச்சும்...மாறிப்போயிட்டான்னா என்னைய கேக்கப் புடாது, நல்ல சம்பந்தம் அம்புட்டுதேன் சொல்லுவேன்...

ஒன் புருசன் ஒரு கிறுக்குப்பய...இன்னமும் வயலு வெள்ளாமன்னு கெடந்து ஏன் போராடிக்கிட்டு இருக்கான் இந்த பட்டிகாட்லயே கடந்து சாகணும்னு என்ன விதியா என்ன அவனுக்கு.... இருக்குற காடு கரைய வித்துப்புட்டு பேசி முடிங்கத்தா சீக்கிரம்....அடுத்த ஆவணில கல்யாணத்த வச்சுக்கிடலாம்...நீ சரின்னு சொன்னா அடுத்த முகுர்த்தத்துல தட்ட மாத்திகுடுவோம், அம்புட்டுதேன்"னு சொல்லிட்டு போறாப்புலங்க...."சரசு சொல்லியபடியே மூக்கைச் சிந்திக் கொண்டிருந்தாள்...

"ஏய் இந்த வெள்ளாம வெளையட்டுமடி....இருக்குற காசோட சேத்திப் போட்டு செய்யலாம். நான் எங்கடி போவேன் பொசுக்குன்னு 75 பவுனுக்கு..? இருக்குற பொட்டு பொடிசு எல்லாம் சேத்திப் பாத்தாலும்....40 பவுன தாண்டாதடி. மக மகண்டு கயல மட்டும் பாத்தா போதுமா...ராசுகுமாரு இப்பத்தேன் காலேசு படிக்கிறான்...இவள அடிச்சு புடிச்சு ஒரு பட்டதாரி ஆக்கிபுட்டேன். அவனையும் ஆளாக்கணும்ல....சரியா வந்தா பாக்கலாம் இல்லேன்னா வேற சம்பந்தம் பேசிக்கிறலாம்.."சரசை நிமிர்ந்து பார்த்தேன்...

ஒமக்கு நாட்டு நடப்பு ஒண்ணுமே தெரியாதுய்யா...கயலுக்கு இப்ப 23 வயசு....அவளுக்கும்  மாப்பிள்ளய புடிச்சுப் போச்சு....அவனத்தேன் கட்டுவேன்னு ஒத்தக்காலுல நிக்க்கிறா...அவன் மலேயாவுக்கு போயிட்டான ராசுகுமாரையும் கூட்டிக்கிட்டு போயிடுவாயா....அதனால.................

சரசு இழுத்தாள்.

அதனால....என்னடி....?

பேசாம வயக்காட்ட வித்துப்புட்டு...புள்ளையக் கட்டிக்கொடுய்யா....மிச்ச இருக்க காசுல திருச்சி நாடி போயி ஒரு கட கண்ணி வச்சிப் பொளச்சுக்கிடலாம்....

அடி சண்டாளி என் கொலைய அறுக்கப்பாத்தியடி....எங்கப்பன், பாட்டன் எல்லாம் அலைஞ்சு திரிஞ்ச மண்ணுடி..அதை வித்துப்புட்டு பொழப்பு பொழக்கிறதுக்கு நாண்டுகிட்டு சாகலாம்...கன்னத்தில் விழுந்த அறைக்கு பதிலாய் சரசு போட்ட கூச்சலில் உள்ளே இருந்து கயல் வெளியே எட்டிப்பாத்தது...

சண்டாளி தெரியும்டி ஒஞ்சோலி மசுரு....வேற மாப்பிள பாத்துக் கட்டிக் கொடுக்கலாம் போ...நெலத்த விக்கிறதுக்கு நான் நாலு மொழக் கயிறுல தொங்குறுவேன்....

கையில் கிடைத்த விளக்குமாத்தை சரசு மீது வீசினேன்.

ஏத்தா...ஒண்ணுமில்லத்தா நீ உள்ள போ...ஒங்காத்தாக்கு கிறுக்குப் புடிச்சுப் போச்சு...நீ போத்தா அப்பாக்கு காப்பித்தண்ணி வச்சுக் கொடுத்தா...நான் கயலைப் பார்த்தேன்.

அப்பா...இந்த மாப்ளயவே எனக்கு கட்டி வைங்கப்பா..பத்துப் பேரு என்ன மறுக்கா மறுக்கா பாக்க வரவேணம்ப்பா...நல்ல இடம்னுதேன் என் ப்ரண்ஸ் எல்லாம் சொன்னாக....அம்மா பாவம்பா..எப்டியாச்சும் என்ன கரைத்தம்னுதான் ஒங்க கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கு....கயல் என் காலில் விழுந்து அழுதது.

ஆத்தா எந்திரித்தா....கயலை தூக்கி கட்டியழுதேன். சரித்தா பாத்துக்கிறுவோம்...உள்ள போ...அவள் கண்ணைத் துடைத்து உள்ளே அனுப்பினேன்...!

ஒத்த புள்ளைய இப்புடி கலங்க விடக்கூடாதுதேன்...படிச்ச புள்ள  வயசும்...23 க்கு மேல ஆச்சு.......

"அய்யா...வெவசாயம்தாய்யா நமக்கு உசுரு...நீ ஊருக்கே சோறு போடப் பொறந்த பய....சோத்த காசு கொடுத்து வாங்கித் திங்கிற கேவலம் உனக்கு வரவேக் கூடாதுப்பு, அது ஒரு வெவசாயிக்கி அவமானம். இது மண்ணு இல்லய்யா...நம்ம உசுரு....நான் உழுதுருக்கேன்....ஒங்கய்யா உழுதுருக்காக...உன் பாட்டன் பூட்டன் அம்புட்டுப் பேரும்....ஏர் பூட்டி உழுத மண்ணுய்யா....

என்னைய, உன் பெரியப்பன, சித்தப்பன.. ஒங்கத்தை மாரன்னு சொல்லி அம்ம வம்முசத்தையே... காப்பத்துன பூர்வீக சொத்துயா... விவசாயத்தை விட்டுறாதப்பு..."

செத்துப் போன அப்பனும், ஆத்தாளும், தாத்தனும், பாட்டியும், கையெடுத்து உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தார்கள். வாழ வாழ வாழ்க்கைய கொடுத்த விவசாயம் இப்போ செவலை புள்ள மாதிரி செழிப்பழிஞ்சு போச்சு....அதே பொழப்பா இருந்த எங்க வாழ்க்க செத்துப் போச்சு...

"நெலத்த வித்தா இருக்குற கடன அடைக்கலாம்..புள்ளைய கட்டிக் கொடுக்கலாம்... டவுனுக்குப் போயி ஏதோ ஒரு கடகண்ணி வைக்கலாம்... எம்புட்டு நாளைக்கியா இந்த கஷ்டம்...ஊருச்சனமே பொழக்கிற வழியப்பாத்து ஓடிப்போயிருச்சு...நீ மட்டும் ஏய்யா..இப்புடி...உன்னோட சேத்து இன்னும் மூணு உயிரு இருக்குன்னு நெனச்சுப் பாருயா..."சரசு புலம்பி கொண்டிருந்தாள்...

மழை விட்டிருந்தது.....நான் டவுனுக்குப் போயி உரக்கடைகாரன் பேரன் பிளாட்டுப் போட்டு விக்கிறான் அவனைப் பாத்துட்டு வாரேன்....

பொசுக்கென்று எழுந்து துண்டை உதறிப்போட்டு நடந்தேன்..

அடுத்த வண்டி வர இன்னும் அரமணி நேரம் இருக்கப்பே...டீ குடிக்கிறியா...டீய எடுத்துக்கிட்டு கிட்ட வந்த குப்புத்தேவர்....

ஏண்ணே அழுகுற.....தோளில் கையப் போட்டான்.....

தேவரே...............கத்திக் கொண்டு குப்புவின் தோளில் சாய்ந்து தேம்பினேன்...

"சாடை மாடையா மழை பேஞ்சுருக்கப்பு....வெதச்சவன் எல்லோருக்கும் கொண்டாட்டந்தேன்... "யாரோ ரோட்டில் பேசிக் கொண்டு சென்று கொண்டிருந்தனர்....
.......
.......
......
........

ஏப்பு காரு வந்துடுச்சு போகலையா....குப்புத் தேவர் என்னை உசுப்பி விட...

எழுந்து வயக்காட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்...



தேவா சுப்பையா...




யுகங்களின் நாயகன்...கிருஷ்ணா...!

$
0
0

















இந்துக்களுக்கு எப்போதுமே கிருஷ்ணா வசீகரமான கடவுள்தான். சராசரி மனிதனின் எல்லா குணங்களையும் உள்ளடக்கிய ஒரு தெய்வாம்சம் பொருந்திய கேரக்டரை வேறு மதங்கள் இதுவரையிலும் படைத்திருக்கவில்லைதான். எல்லா மதத்திலும் கடவுள் கற்பிதங்களும், இறைத் தூதர்களும் சராசரி மனித வாழ்க்கையிலிருந்து விலகி நின்று கொண்டு நான் இப்போது என்ன சொல்ல வருகிறேன் என்றால் என்று கட்டளைகளைத்தான் பிறப்பித்து இருக்கிறார்கள்.

கிருஷ்ணரை இறைத்தூதர் என்றும் கூட சிலர் சொல்வதுண்டு. அவர் இறைத்தன்மையை பிரதிபலித்த ஒரு ஆன்மா என்று வேறு சில கருத்தியல் கோட்பாடுகள் வரையறுப்பதும் உண்டு. இந்து மதம் தனது சமூகத்திற்கு கிருஷ்ணரை இறைவனின் அவதாரம் என்றுதான் கூறுகிறது. சிதறிக்கிடந்த சிந்து சமவெளி நாகரீகத்தின் தொகுப்பாகத்தான் இந்து மதம் என்னும் ஒரு மாய பிம்பம் எழுந்து நிற்கிறது என்றாலும் இன்றைக்கு இந்தியா முழுதும் இருக்கும் இந்துக்களுக்கு கிருஷ்ணா ஒரு மிகப்பெரிய வசீகரம்தான். ஒரு பிரம்மாண்ட ஹீரோவுக்குரிய எல்லா வித குணாதிசயங்களோடுதான் கிருஷ்ணாவின் காதாபாத்திரம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

பிறந்த உடனேயே அவரைக் கொல்ல நினைக்கும் ஒரு பேராபாத்துக்கு நடுவே அவதரிக்கும் கிருஷ்ணரின் பிறப்பே மிகப்பெரிய த்ரில்லோடு நமக்கு அறிமுகமாகிறது. தெய்வாம்சம் பொருந்திய ஒரு கேரக்டர் என்று அறிமுகம் ஆகும் கிருஷ்ணரின் பால்யப் பிராயத்தைப் பற்றி வாசிக்கும் போது நமக்குள் தொற்றிக் கொள்ளும் அந்த குறு குறுப்பும், கிருஷ்ணா பற்றிய கற்பனைகளும், அவரின் குறும்புகளும் அவர் வளர்ந்து ஒரு  பெரிய மனிதாராக ஆன பிறகும் பிராயத்தை அனுசரித்து அவர் உடன் வளர்ந்து கொண்டே இருப்பதை உணர முடியும். கிருஷ்ணர் எல்லா உணர்வுகளுக்கும்  சொந்தமான லெளகீகத்தின் வசீகர குழந்தை. அவர் வெண்ணை திருடுவார், திட்டு வாங்குவார், தண்டனை அனுபவிப்பார், பதின்மப் பருவத்தில் பெண்களை எல்லாம் வசீகரிக்கும் மாயக்கண்ணனாக உருவெடுப்பார்.

மொத்தத்தில் கிருஷ்ணாவின் வாழ்க்கை ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமாகத்தான் நமக்கு அடையாளம் காட்டப்படுகிறது. பதின்மத்தில் இயல்பாகவே தோன்றும் அவரின் பல உணர்வுகளையும் மறைத்து அவரைப் புனிதராக காட்ட இந்து மதம் முனையவில்லை. இன்னும் சொல்லப் போனால் வாழ்வின் போக்கில் நடக்கும் எல்லா செயல்களுக்குமே ஒரு இயல்பான சாட்சியாய் கிருஷ்ணரை நம் முன் அது நிறுத்துகிறது. ஒழுக்க நெறிகளையும் கோட்பாடுகளையும் மனசாட்சியோடு போட்டுப் பின்னி அந்த நியாய தர்மங்களின் படிதான் கிருஷ்ணா தன் வாழ்நாள் முழுதும் வாழ்க்கையை வாழ்ந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அவன் புல்லாங்குழல் ஒரு போதும் சோகத்தை இசைத்திருக்கவில்லை. துன்பங்களை எல்லாம் வாழ்கையின் ஓட்டத்தில் நிகழும் நிகழ்வுகளாய் கருதி நகரும் கிருஷ்ணா.....அதையும் கூட சந்தோசத்தோடு எதிர் கொண்டு வாழ்ந்துதானிருக்கிறார்.

உலக சினிமாவின் கதாநாயக மனோபாவத்தின் எல்லா சாயல்களும் கிருஷ்ணாவிடம் இருந்து உருவப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் கூட எனக்கு எழுகிறது. இன்னும் சொல்லப் போனால் இது போன்ற எல்லாம் வல்ல சூப்பர் பவரை மனிதர்களால் செய்ய முடியாத செயல்களைச் செயல்களை செய்யக்கூடிய ஒரு கதாபாத்திரத்தை இந்த பூமியின் பல்வேறு பிரதேசங்களும் படைத்திருக்கத்தான் செய்கிறன. என்ன ஒன்று அந்த பாத்திரங்கள் அத்தனையும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் வேற்றுக்கிரகவாசிகளாகவே நமக்கு அறிமுகம் செய்யப்படுகிறன. ஒரு போதும் எந்த இறைத்தூதரும் பொய் சொன்னார் என்றோ...தங்களது கடவுள் பெண்களின் பின்னால் சுற்றுக் கொண்டிருந்தார் என்றோ, பொய் சொல்லிவிட்டு தண்டனையை அனுபவித்தார் என்றோ அவர்கள் சொல்ல முடியாது அலது சொல்ல பயந்தார்கள்.

அந்தத் துணிச்சல் சனாதான தருமம் எனப்படும், சிந்துசமவெளி நாகரீகத்தின் தத்துவங்களின் கூட்டு மனோபாவத்தில் உருவான இந்துமதத்திற்கு  கொஞ்சம் அல்ல நிறையவே உண்டு என்றுதான் நான் சொல்வேன். கிருஷ்ணரின் தர்மங்களும், அதர்மங்களும், மனித சமூகத்தை முன்னிலைப்படுத்தி  கட்டமைக்கப்பட்டது அல்ல அது பிரபஞ்ச நியதியையும், ஒட்டு மொத்த மானுடசமூகத்தின் சுமூக இயங்கு தன்மையையும், மனித வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட சூட்சும பெரும் இயக்கத்தையும் மையப்படுத்தி நிறுவப்பட்டது. எந்த சூழலிலும் பொய் சொல்லக்கூடாது என்று அகில உலக தர்ம சிந்தனை கொண்ட மதங்களும் சொல்லிக் கொண்டிருக்கையில்...

சர்வ சாதரணமாய் கிருஷ்ணர் பொய் சொல்லி பாரதப் போரையே தவறான நாளில் கெளரவர்கள் தொடங்க ஏது செய்வார். புண்ணியங்களால் நிறைந்து கிடக்கும் ஒரு மனிதனின் உயிர் அவன் செய்திருக்கும் நன்மைகள் தானதருமங்கள்  மூலம் காக்கப்படும் என்று நம்பிக்கொண்டிருக்கையில் அவனிடம் மாறுவேடமிட்டுச் சென்று...."செய் தருமம்"அனைத்தும் எனக்குத் தா என்று  வேடமிட்டுக்  யாசகம் கேட்டு அவனை அவர் கொல்வார். என் எதிரிலிருப்பவர்கள் அத்தனை பேரும் என் உறவினர்கள் என்னால் சண்டையிட முடியாது என்று வன்முறையிலிருந்து ஒதுங்க நினைக்கும் ஒரு மனிதனை உபதேசங்கள் செய்து எடு.... வில்லை!!!! தொடு.... அம்பை!!!! என்று வன்முறை கொள்ளச் செய்வார்.

ஆமாம்..கிருஷ்ணா ஒரு போதும் மனித மனங்களின் நியாய தர்மங்கள் என்னும் சுயநல சிறைக்குள் அடைபட்டுக் கொண்டிருக்க விரும்பவில்லை. இந்த உலகில் அவரைப் பற்றிய கருத்துக்களையும், புறங்கூறுதல்களையு ஒரு போதும் அவர் சட்டை செய்திருக்கவுமில்லை. கிருஷ்ணாவின் இயக்கம் பிரபஞ்சத்தின் தேவையாய் மட்டுமே இருந்தது. அதில் எந்தவித லெளகீக நடிப்புகளும் இருந்திருக்கவில்லை. காதல் என்னும் பெரும் உணர்வில் கபடநாடகம் ஆடும் இந்த உலகத்தீருக்கு எல்லாம் கிருஷ்ணர் மிகப்பெரிய சவாலாய்தான் இருந்தார்.

தன்னை நேசித்தவர்களை நேசிக்க அவர் தயங்கி இருக்கவில்லை.  கிருஷ்ணரின் காதல் பற்றிய பார்வை சரியா...? தவறா...? என்று ராதாவிடம் கேட்டுப்பார்த்தால் புரியும். அவன் ஒரு போதும் தன்னை காதலித்தவர்களை கவனிக்காமல் இருந்திருக்கவில்லை. எத்தனையோ பெண்களோடு அவன் பேசிச்சிரித்து விளையாடி இருந்தாலும் அவன் இரு மனைவியரோடு மட்டுமே இருந்தான் என்றுதான் அழுத்தம் திருத்தமாக புராணங்கள் கூறுகின்றன. அவனுடைய போர்களில் இறந்து போன போர் வீரர்களின் விதவை மனைவிகள் அத்தனை பேருக்கும் தேவையில்லாத பாலியல் தொந்தரவுகள் வந்துவிடக்கூடாது என்று...

இனி அத்தனை  விதவைப் பெண்களும் யாரேனும் துன்புறுத்தினால் நீங்கள் கிருஷ்ணாவின் மனைவி என்று தைரியமாய்ச் சொல்லுங்கள் என்று அவன் கூறியதாய் நான் படித்திருக்கிறேன். இதையே உதாரணம் காட்டி கிருஷ்ணாவுக்கு எதிர் சார்பு நிலை எடுத்து பேசுபவர்கள் அவன் பல்லாயிரக்கணக்கான மனைவிகளைக் கொண்டிருந்தான்,  அவன் எப்படி ஒழுக்க சீலனாய் இருந்திருக்க முடியும் என்ற கேள்வியை முன்வைப்பதுமுண்டு....

என் கேள்வி எல்லாம் ஒரு மனைவியக் கட்டிக் கொண்டு வாழும் அத்தனை பேரும் ஒழுக்க சீலர்கள்தானா...? என்பதுதான்.  ஒழுக்கம் என்பது இந்த சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் மாயக் கண்ணாடி அல்ல. ஒழுக்கம் என்பது மனசாட்சி என்று நிறுவி அதன்படி வாழ்ந்து காட்டியிருக்கும் ஒரு அற்புதக் கேரக்டர்தான் கிருஷ்ணா!!!!! அவன் ஏதோ ஒரு மதத்தை ஸ்தாபிக்க பாரதப் போரை நிகழ்த்தவில்லை, இங்கே இருக்கும் மனிதர்களைப் பயமுறுத்தி என்னைப் பின்பற்றுங்கள் என்று சொல்ல பாரதப் போரில் சாரதியாயிருந்திருக்கவிலை..., அவன் கெளரவர்களைக் கொன்று தன்னை மிகப்பெரிய கதாநாயகனாகக் காட்டிக் கொள்ள அந்தப் போரை நடத்தவில்லை...

அவன் ஒரு சுத்த புருஷன், சுயநலமற்ற மாவீரன்....அவன் போர் நடத்தியது எல்லாம்.. தர்மத்தையும் நீதியையும் காக்க....என்று பகிங்கரமாய் நமது செவிப்பறைகள் கிழிய கூறுகிறான். அதோடு மட்டுமல்ல...எப்போது எல்லாம் தர்மமும் நீதியும் அழிகிறதோ அப்போது எல்லாம் நான் மீண்டும் வருவேன் என்று கொடியவர்களை மிரட்டவும் செய்கிறான்.....

பாரதப் போர் நடக்கும் அந்தக் காலம் என்று மட்டும் இல்லை....யுகங்கள் தோறும் நான் அவதரிப்பேன் என்றும் சவால் விடுகிறான்....! இந்த திமிர், இந்த தைரியம், இந்த ஞானம், இந்த விவேகம், இந்த வீரம் மட்டும் அல்ல.. கிருஷ்ணா. அவன் காதலும், காமமும், இன்ன பிற லெளகீக இயல்புகளு பிசைந்து உருவாக்கப்பட்ட யுகங்களின் நாயகன்...!!!!!

அவன்.....

காதலுணர்வால் அனைவரையும் கட்டிப்போட்டு, மயக்கும் ரசனைகளோடு கூடிய இன்னிசையை இந்த பிரபஞ்சம் எங்கும் பரப்பிப் போட தன் புல்லாங்குழலையும் ஊதுவான்.....

மிரட்டும் கொடிய சக்திகளை, மனித வாழ்வின் சுமூக நகர்வுகளுக்கு சவால் விடும் மிருகங்களை, அட்டூழியம் செய்யும் பேய்களை, நரகத்திற்கு தள்ள போர்ச் சங்கும் ஊதுவான்....

ஆமாம்...அவன் யுகங்களின் நாயகன்தான்....!!!!!! அவன் ஒரு போதும் மரிப்பதே இல்லை...!!!!!!!

தர்மத்தை தனிமனிதரோடு தொடர்புபடுத்திப் பார்க்காது ஒட்டு மொத்த பிரபஞ்ச இயக்கத்தோடெ தொடர்புபடுத்திப் பார்க்கும் ஒவ்வொரு நியாயவான்களாகவும்....

அவன் யுகங்கள் தோறும் அவதரித்துக் கொண்டுதானிருக்கிறான்....!

"பரித்ராநாய சாதுனாம்  வினாசாய சதுஶ்க்ருதாம்
தர்மஸம்ஸ்த்தாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே....!



தேவா சுப்பையா...








ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

$
0
0














ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்...

ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்லாம் புதியதொரு சிலை செய்யும் சிற்பியொன்றின் கவனத்தோடும், ஆர்வத்தோடும்தான் நானிருந்திருக்கிறேன்...

உன் பிஞ்சுக் கரங்களால் என் கழுத்தினைக் கட்டிக்கொண்டு நீ உறங்கும் இரவுகளை ஏன் விடியவைக்கிறான் அந்த இறைவனென்று எனக்கு கோபங்கள் வந்ததுண்டு. விடியலில் இமை பிரிக்கும் அத்தனை மென்மையோடு உன் கைகளிலிருந்து விடுவித்துக் கொண்டு நான் பொருள் தேடச் செல்லும் விடியல்களில் எல்லாம் நான் இராட்சசனாய் மாறி வாழ்க்கையை எதிர்கொள்ளச் செல்வதெல்லாம் என் செல்வம் உனக்காக செல்வம் சேர்க்கத்தான்..! நீ பேசிக் கொண்டே இருக்கையில் உன் கிள்ளைத் தமிழை நான் செவிகளில் ப்ரியமாய் வாங்கிக் கொண்டு சொக்கிக்கிடக்கும் சொர்க்க நிமிடங்களை எத்தனை கோடியைக் கொட்டிக் கொடுத்தாலும் யார் கொடுக்க முடியும்...?

முதன் முதலாய் நீ வரைந்த ஓவியமொன்றில் கோடுகளாய் என்னை நீ அடையாளம் காட்டிய அந்த சித்திரத்தில் முதன் முதலாய் என்னை நான் கண்டு கொண்டேன் மகளே...! எத்தனை உறவுகள் என்ன என்னவெல்லாம் சொல்லி என்னை அழைத்தாலும் அப்பா என்று நீ  அழைக்கும் தருணங்களில் எல்லாம் இந்த உடலுக்குள் இருக்கும் உயிரொன்று மெல்ல கைகொட்டி சிரித்து மகிழும் ரகசியத்தை நான் யாரிடம் சொல்லி மகிழ்வேனடி மகளே...!

ஆணும் பெண்ணும் வேறல்ல எந்த குழந்தை என்றாலும் ஒன்றுதான் என்று உலகம் சமப்பட்டு பேசிக் கொள்ளும் நாடக வார்த்தைகளை நான் புறம் தள்ளுகிறேன் மகளே...! மகள்களின் பிறப்பில் அப்பாக்கள் நிஜமாய் கதாநாயகர்களாய் ஆகிப் போகும் அதிசயத்தை நீ பிறந்த அன்று நான் உணர்ந்து கொண்டேன்...

எட்டு மாதத்திலொருநாள் முதன் முதலாய் என்னை உறக்கத்தில் நீ தேடி என் கழுத்தை வளைத்துக் கொண்ட கணத்தை என்னை தெய்வம் தேடி இழுத்து அணைத்துக் கொண்டது என் நாட்க்குறிப்பேட்டில் குறிப்பெழுதி வைத்திருக்கிறேன். உன் விழிகளில் நிரம்பிக் கிடக்கும் காதலில் மிகுந்து கிடக்கும் பாசத்தில் அழுத்தமாய் இருக்கும் ஆதரவு ஒன்றை எந்த வார்த்தை கொண்டு நான் எழுதித் தீர்க்க முடியும். 

அப்பா என்ற
மூன்றெழுத்துக்குள்
என்னை ப்ரியங்களால்
பூட்டி வைத்து 
சிரிக்கும் என் தேவதையை
கவிதைகளில் சொற்களுக்குள்
அடைக்க முயன்று, முயன்று  
தோற்றுப் போய்
மீண்டும் மீண்டும்
அவள் முகம் பார்த்து 
மகிழ்ந்தபடியே
சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறது
என் வானவில் பொழுதுகள்....!

மகள்களைப் பெற்ற அப்பாக்கள் பாக்கியசாலிகளா இல்லையா என்று எனக்கு தெரியாது ஆனால் மகள்களைப் பெற்ற அப்பாக்கள் எல்லோரும் உயிர்ப்போடு இருப்பவர்கள் என்று நான் உறுதியாய் சொல்வேன்..!

அட்டகாசமான பாடலோடு நீங்கள் மூழ்கிப் போவது உறுதி என்று நானறிந்திருந்தாலும் தங்கமீன்கள் போன்ற நேர்மையான படைப்புகளை ஆதரித்து படைப்பாளிகளை வாழச்செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொள்கிறேன்...!




தேவா சுப்பையா..




எழுத்துக்களில் புன்னகைப்பவன்..!

$
0
0

















நீயும் நானும் யாரோவாகிப் போயிருந்த
ஒரு உச்சி நேரத்தில்
என்  சாலையின் முன் எதிர்ப்படுகிறாய் நீ...
வார்த்தைகளை விழுங்கிக் கொண்ட
ஒரு ஆழ் மெளனம் ஒன்று
ஞாபகங்களைக் கிளறி எடுத்து
என்னை பின்னோக்கி இழுத்து
கதைகள் பேசி நாம் நடந்த காலங்களை
ஒவ்வொன்றாய் என் முன்
கடைவிரித்துப் பார்க்கிறது...

ஏதாவது சொல்ல வேண்டும்
என்ற..
ஆசைகளை எல்லாம்
தின்று கொண்டிருக்கும் இயலாமை
குற்ற உணர்ச்சியோடு எழுப்பும்
என் காலடி சப்தங்களை
எதிர் கொள்ள முடியாமல்
தவித்து நடக்கிறேன் நான்....

எத்தனையோ முறை
ஊடுருவிப் பார்த்து
எனக்கான காதலில் நான்
மிதந்து கிடந்த
உன் விழிகள் என்னிடம்
உயிர் இல்லை என்று
பகிர்ந்த செய்தியை
உன் இமைகள் மெளனமாய்
ஆமோதிக்க....
இதோ என்னை கடந்து செல்கிறாய்
நீ....

புன்னகையாவது நீ செய்திருக்கலாம்...
என்ற நினைவுகளோடு
புன்னகைக்க முடியாத
என் கனவுகளை இதோ...
கவிதையாக்கி என் எழுத்துக்களிலாவது
புன்னகைக்கலாமா என்று
முயன்று கொண்டிருக்கிறேன்...
நான்...!


தேவா சுப்பையா...





எழுதிப் பழகுபவன்...!

$
0
0

வாழ்க்கையின் அழகு மிளிரும் இடங்களில் எல்லாம் பரிபூரணமான நண்பர்களும் ஆதரவாளர்களும் நம்மைச் சுற்றி மிகையாய் இருப்பார்கள். பிரியமானவர்கள் சூழ் வாழ்வு ஆசிர்வதிக்கப் பட்டது ஆமாம் பூக்கள் நிறைந்த தோட்டத்திற்கு நடுவே வசிக்க யார்தான் ஆசைப்பட மாட்டார்கள். 

தோழி கெளசல்யாவால் எனக்கு அறிமுகம் செய்யப்பட்டதுதான் எழுத்து.காம். நிறைய வளரும் எழுத்தாளர்கள் தங்களின் ஆக்கங்களை பகிரும் ஒரு களமாக எழுத்து.காம் இருப்பதை அதைக் கண்டபோது என்னால் உணர முடிந்தது. இலக்கிய அரட்டைகளும், தலைக்கனங்களும் இல்லாமல் ஆர்வமாய் நல்ல எழுத்துக்களை வாசிக்க முனைவோரும் எழுதுவோரும் இயல்பாக அங்கே கட்டுரைகளையும் கதைகளையும் கவிதைகளையும் பகிர்ந்து வருகிறார்கள். இலக்கணத்தோடு எழுதும் போதுதான் பொருள் கிடைக்கும். பொருள் கொடுக்கும் யாவும்  இலக்கணத்தில் வெளியாகும் இயலாகிப் போகிறது. இவ்வளவுதானே இலக்கியம் அல்லது இலக்கியம் என்பதற்கு வேறேதேனும் சமைத்து வைக்கப்பட்ட வரையறை சூத்திரம் இருக்கிறதா? புரியாத மொழி கொண்டு உணர்வுகளை பிரதியெடுக்கும் நிகழ்வுதான் இலக்கியம் என்று வரையறை செய்து கொள்வது இங்கே மட்டுப்பட்ட புலனறிவாகிறது. 

ஒரு ஆக்கத்தின் கருப்பொருளை காட்சி வடிவமாக்கி உணர்ச்சிப் பூர்வமாக சொல்வது ஒரு வகை. இப்படியான எழுத்து வெகுஜனத்தின் மனதில் எளிதில் ஏறி அமர்ந்து கொண்டு எழுதியவனின் உணர்வை சரியாய் விளங்க வைத்து விடுகிறது. இங்கே இலக்கியம் என்று வகை பிரித்துக் கொண்டு வார்த்தைகளை வடிப்பவர்கள் எல்லாம் தங்களுக்குள் தோன்றிய உணர்வை உணர்ந்த படிமத்திலேயே வார்த்தையாக்கிச் சொல்கிறார்கள். அவர்களின் எண்ண ஓட்டங்களின் நேர், எதிர் குறுக்கு வெட்டுத் தோற்றங்களை கொண்டிருக்கும் அவர்களின் எழுத்துக்கள்  வாசிப்பவனுக்கு எழுதியவனின் மனோநிலையை எப்போதாவதுதான் கொடுக்கின்றன. 

பெரும்பாலும் வாசிப்பவனின் மனோநிலைக்கு ஏற்றார் போல ஏதோ ஒரு செய்தியை அந்தக் கட்டுரையோ அல்லது கவிதையோ, கதையோ மனதில் பதிய வைத்து விடுகிறது. எழுதுபவனுக்கும் வாசிப்பவனுக்கும் அங்கே மிகப்பெரிய இடைவெளி விழுந்து விடுகிறது. இங்கே எழுதுபவனும் வாசிப்பவனும் மேதாவிகளாய் இருக்க வேண்டிய கால நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுகிறது.   என்னைப் பொறுத்தவரையில் இலக்கில்லாமல் நவீனத்துவத்தோடு எழுதுவது ஒரு வசதி. அந்த எழுத்து வாசிப்பாளனைப் பற்றிய பிரஞ்ஞையற்ற ஒரு யோகியின் மனோநிலையில் செய்யப்படுவது...; என்ன நிகழும் யார் வாசிப்பார்கள் என்ற ஒரு எதிர்பார்ப்புகளைக் கடந்த ஒரு நிலை அது. வெகுஜனத்தைப் பற்றிய அக்கறைகள் இன்றி கரை புரண்டோடும் ஒரு காட்டாறு அது.

கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் என்று எழுதிச் செல்லும் போது, எதைக் கண்டார்? எதை விண்டுவிட முடியாது? விண்டிலர் என்றால் என்ன என்ற கேள்விகளுக்கு பதில் தேட விரும்பாத வாசகன் அந்த வார்த்தைகளை வெற்று வார்த்தைகளாய் பார்த்து விட்டு கடந்து சென்று விடுகிறான். உதாரணமாக் இன்று அதிகாலை நான் எழுந்த உடன் கண்ட அழகிய பனிமூட்டமும் அதீத குளிரும் எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது என்பதை...

" பனி படர்ந்த செடியொன்றின் நடுக்கத்தில் பூத்துச் சிரித்திருந்த ஒரு சூர்ய உதயத்தில் எனக்குள் கிளர்ந்தெழுந்த உணர்வுகள் கண்ணாடி ஜன்னலில் அடர்ந்திருந்த பனித்துவலைகளாய் சில்லிட்டுக் கிடந்தன...."

என்றும்  எழுத முடியும்.

உணர்வுகளை அப்படியே வெளியாக்குபவனும், உணர்வுகளை தெளிவான காட்சி வடிவில் எழுத்தாக்குபவனும் வேறு வேறல்ல... ! அது ஒரு நிலை. இது ஒரு நிலை. புத்தன் தானுணர்ந்த ஞானச்செய்தியை வெகுஜனத்திற்கு கடத்த முடியாமல் உணர்வு நிலையில் பயிலச் சொன்னதால்தான் புத்தமதம் தோற்றுப் போனது.  உணர்வு நிலையில் இருக்கும் பெருஞ்சக்தியை ஸ்தூலமாக கருதி வழிபடும் மதங்கள் எல்லாம் பெரும் வெற்றி பெற்றன. இஸ்லாம், மற்றும் கிறிஸ்தவ மதங்கள் இன்று உலகம் முழுதும் பரவிக் கிடப்பதற்கு காரணம் அங்கே அவர்களின் கடவுள் வலிமையானவராக சித்தரிக்கப்பட்டு மரணத்திற்கு பின்னான நுட்பங்கள் சித்திரவடிவில் மனிதர்களின் மனதில் ஏற்றி வைக்கப்பட்டதே காரணமாய்ப் போனது.

இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. நாம் உணர்வு நிலைக்குத் திருப்பாத காட்சி வடிவங்களை எழுத்தாக்கும் போது சொல்லும் செய்தியில் இருக்கும் புறத்தோற்றத்தை மட்டும் வாங்கிக் கொண்டு உணர்வுகள் எதிர் திசையில் பயணிக்கவும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கின்றன. எனவே இரண்டுக்கும் மத்திமமான ஒரு விசையோடு கட்டி எழுப்பப்படும் கட்டுரைகளும், கவிதைகளும் இன்ன பிற செய்திகளும் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று விடுகின்றன.

அடிப்படையில் மனிதன் ஒரு செய்தி விரும்பி.  அவனுக்கு புதிது புதிதாக செய்திகளை அறியும் ஆவல் இயல்பிலேயே உண்டு. அவனது கற்பனைகளோடு சேர்ந்து பயணித்துக் கொண்டே சமகால இயல்புகளையும், பிரச்சினைகளும் தேவைகளையும் ஒரு குழந்தைக்கு சோறு ஊட்டுவது போல பிசைந்து கொடுக்கும் போது அவனுக்கு எழுத்தின் மீது அந்த எழுத்தை எழுதும் எழுத்தாளரின் மீது மிகப்பெரிய வசீகரமும் பிடிப்பும் தன்னிச்சையாய் வந்து விடுகிறது. வியாபார யுத்திக்காக சேர்க்கப்படும் வர்ணங்களோடு வாசிப்பவனின் நாடி பிடித்துப் பார்த்து உணர்வுகளோடு சங்கமிக்கும் எழுத்துக்கள் வெகுஜன எழுத்துக்களாகிறது. அந்த எழுத்தாளன் வென்றவனாகிப் போகிறான்.

அடிப்படையில் நான் உங்களிடம் பகிர விரும்பியதை தெள்ளத் தெளிவாக சொல்ல முடியவில்லை எனில், என்னுடைய பாண்டம் அதி ரகசியமானது, விலை மதிப்பு இல்லாதது என்றாலும்...அதற்கு ஒரு விலையும் இல்லாமல் போகிறது. பசித்திருப்பவனின் தேவை புல் பிளேட் சிக்கன் பிரியாணியா என்ன? பழைய சோறும் பாதி சிறு வெங்காயமும் கிடைத்தால் அவன் மகிழமாட்டானா...? இலக்கிய தரம், இலக்கிய தரம், என்று வெகு ஜனத்திற்கு தூரமாய் போகும் தலை பெருத்த கூட்டம் ஒரு பக்கமும், அது ஆவது எப்படி? இது ஆவது எப்படி? முப்பது நாளில் மூவாயிரம் கோடிகள் சம்பாதிப்பது எப்படி..?  என்று லேகியம் விற்கும் கூட்டம் ஒரு பக்கமும் என்று...பிரிந்து கிடக்கையில் இதற்கு மத்தியில் காமத்தைக் காசாக்கும் ஒரு கூட்டமும் அலைந்து கொண்டுதானிருக்கிறது.

எல்லோரும் நடிகர்கள்தான் ஆனால் ரஜினிதான் சூப்பர் ஸ்டார். ஏன் தெரியுமா? எல்லா தரப்பினரும் அவரை ஏதோ ஒரு கோணத்தில் ரசிப்பார்கள். வெறுத்து ஒதுக்கும் படியாய் அவரிடம் பெரும்பாலும் ஒன்றும் இருக்காது. புதிதாய் ஏதேதோ செய்தாலும் அது முழு அபத்தமாய் இருந்தாலும் கூட ஏதோ ஒரு வகையில் அவரை ஆதரித்தோ எதிர்த்தோதான் தமிழ் சினிமா உலகம் இயங்கிக் கொண்டிருக்கும். எம்.ஜி.ஆர்., கலைஞர் கருணாநிதி இவர்கள் எல்லோருமே இப்படித்தான். இவர்கள் எப்போதும் மக்கள் மத்தியில் மக்களுக்கான செய்திகளைப் பேசிக் கொண்டே இருப்பார்கள். வெகுஜனத்தின் இதயத் துடிப்பாய் ஏதோ ஒன்றைப் பற்றி கருத்து கூறிக் கொண்டிருப்பார்கள். அதனால்தான் இறக்கும் வரை எம்.ஜி.ஆர் மக்கள் தலைவராய் இருந்தார், இன்னமும் அசைக்க முடியாத ஒரு ஆளுமையாகக் கலைஞர் கருணாநிதி இருக்கிறார்.

சுஜாதாவும், பாலகுமாரனும் உருவாக்கிய வாசகர்கள் கூட்டத்தை விடவா இன்றைக்கு இலக்கியம் பேசிக் கொண்டிருப்பவர்கள் உருவாக்கி விட்டார்கள். அறிவியல் + ஆன்மீகம் + வாழ்வியல், + க்ரைம் + த்ரில் + தொழில்நுட்பம் என்று பட்டையைக் கிளப்பிய சுஜாதாவும், வாழ்வியல் + பக்தி + ஆன்மீகம் + கடவுள் + காமம் + வரலாறு + புராணம்  என்று சூட்சும விசயங்களை எல்லாம் எழுதி மிகையான தனது நாவல்களில் பெண்களை வலுவான சக்திகளாக்கி கதையின் மையப் பொருளாக்கி வாசக மனதில் விருட்சமாய் எழுந்து நின்ற பாலகுமாரன் ஐயாவும் தமிழ் புதின வரலாற்றில் மிகையான மனிதர்களுக்கு தாக்கத்தைக் கொடுத்து வாசக புரட்சியை உண்டாக்கினார்களா..? இல்லையா?

பதின்மத்தில் பாலகுமாரனின் எழுத்து வழிகாட்டாத வாசகர்களை நாம் விரல்விட்டு எண்ணி விடலாம். சுஜாதாவை வாசிக்காமல் இருந்தவர்களும் அப்படியே... இப்படியாய் எழுத்து என்பது வெகு ஜனத்தின் இதயத்தில் நுழையும் வகையில் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. எழுத்து.காமை எனக்கு அறிமுகம் செய்து வைத்த தோழி கெளசல்யா வலைப்பக்கத்தில் நான் எழுத வந்த காலத்திலிருந்தே என் எழுத்துக்களோடு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பவர். எழுதுவது மட்டும்தான் எனக்கு தெரியுமே அன்றி அதை எப்படி எங்கே கொண்டு சேர்ப்பது என்பது எனக்கு பிடிபடாது. 

எழுத்து.காம் என்னும் வலைத்தளத்தில் எனக்கான கணக்கினைத் தொடங்கியவர் கெளசல்யா. என்னுடைய ஆக்கங்களை உடனுக்குடன் அங்கே பதிவு செய்பவரும் அவரே. பல நேரங்களில் அங்கே வரும் கருத்துக்களுக்கு கத்தி முனையில் என்னை மறுமொழியிடச் சொல்லுவார். எழுத்து.காமில் இன்று 57 வாசக, எழுத்தாள நண்பர்கள் என்னைப் பின் தொடர்வதற்கும், அகன் அண்ணா போன்றவர்களின் அற்புத நட்பு கிடைப்பதற்கும், வேலூர் ராஜா, மங்காத்தா, kkpya, அன்பரசன், தாரகை , ப்ரியா அசோக், தாட்சாயிணி, ப்ரியா, பழனிகுமார், தவமணி,கவியாழினி, வேளாங்கண்ணி, சுதா யுவராஜ், எழுத்து சூறாவளி, அன்பரசன், வர்சா போன்றவர்களின் தொடர்ச்சியான உற்சாக கருத்துக்களுக்கும், வாசிப்புக்கும் காரணமாய் இருப்பவரும் கெளசல்யாதான்.

பாலகுமாரன் ஐயா சொல்வது போல நம்மைச் சுற்றி நம்மை நேசிக்கும் உள்ளங்கள் இருக்கும் போது நம் வாழ்க்கை பற்றிய அதிக அக்கறையை நாம் கொள்ள வேண்டியதில்லை என்பதை என்னால் இப்போது தெளிவாக உணர முடிகிறது. சென்ற மாதத்தின் சிறந்த படைப்பாக நான் எழுதிய அரசி என்னும் கதையை எழுத்து.காம் நிர்வாகம் தேர்ந்தெடுத்ததாக மின்னஞ்சல் வந்த போது அதன் முழு பாரட்டுகளும் தோழி கெளசல்யாவுக்கே செல்ல வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

என் அப்பா அடிக்கடி சொல்வார்கள் ஒரு கருத்தை சொல்பவனை விட அதை மிகைப்பட்ட பேர்களிடம் கொண்டு சேர்க்கும் திறன் கொண்டவனே சிறந்தவனென்று...அந்த வகையில் எனது மகிழ்ச்சியை தோழி கெளசல்யாவுக்கு உரித்தாக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

பேஸ்புக்கில் கூட மொய் வைக்காது, மார்க்கெட்டிங் செய்யாது, கவர்ச்சியான விசயங்களைப் பகிராது, அரசியல் கூட்டுக்கள் இல்லாது வெகு ஜனத்தின் இதயத்தை தொடுதல் என்பது குதிரைக் கொம்பே. பேஸ்புக் மூலமாக இந்த எழுதிப் பழகுபவனின் எழுத்தை தொடர்ச்சியாக எழுத்திற்காக வாசிக்கும் அன்பான உறவுகளுக்கும் என்னுடைய அன்பை உரித்தாக்குகிறேன்...

நீண்டு அடர்ந்த காடு 
காத தூரம் கடக்க வேண்டும்
இன்னும் இன்னும்...
என் மீதேறிக் கொள்ளும்
கனவுகளைச் சுமந்தபடியே...



தேவா சுப்பையா...




வாழ்க்கை என்னும் பேராசான்....!

$
0
0

சென்டிமென்ட்டா.. ஆசிரியர்கள் தினத்துக்காக.. ஆசிரியர்கள் வாழ்கன்னு எல்லாம்  உணர்ச்சிப் பூர்வமா என்னால வாழ்த்து சொல்ல முடியலை பாஸ். என்னைப் பொறுத்த வரைக்கும் ஆரம்பப் பள்ளியில ஆரம்பிச்சு, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி வரைக்கும் ஒரு ஆசிரியரைக் கூட என் நெஞ்சு நிறைத்த ஆசிரியரா எண்ணிப் பார்க்க முடியல. சொல்லிக் கொடுத்தது படிச்சது எல்லாம் சரிதான் அதுக்காக நாம நன்றி கடமைப் பட்டு இருக்கோம்ன்றது எல்லாம் உண்மைதான்....ஆனா ஒரு வழிகாட்டியா, ரோல்மாடலா ஒரு ஆசிரியர் கூட என் கல்வி கற்கும் வாழ்க்கையில அமைஞ்சு போகாததை என்னோட துரதிர்ஷ்டமா நான் கருதுறேன்.

எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த எல்லோரையுமே நான் மதிக்கிறேன் பாஸ், அந்த மரியாதையில ஒரு குறையும் கிடையாது. பட் நோ ஒன் இம்ப்ரெஸ்ட் மீ ன்றதுதான் உண்மை. ஆரம்பப் பள்ளி வாத்தியார்கள்னா என் கண் முன்னாடி வந்து போறது நீண்ட பிரம்புக் கம்புகளும், கட்டாமணக்கு செடியோட குச்சிகளும்தான். மிரட்சியோட பள்ளிக் கூடத்துக்குப் போன அந்த நாட்கள்ள,  காலையில இருந்து சாயங்காலம் பள்ளி விடுற வரைக்கும் இன்னிக்கு நமக்கு அடி விழாம இருக்கணுமேன்ற கவலைதான் அதிகமா இருக்கும். படிக்காம வர்ற பையன அவமானப்படுத்துறதும் " மாடு மேய்க்கதாண்டா நீ லாயக்கு"ன்னு முகத்துக்கு நேர காறி துப்புறதும், கொஞ்சம் சரி இல்லாத பசங்கள அவுங்க கை நீட்டிக் கெஞ்சக் கெஞ்ச பிரம்பால அடிக்கிறதும்...

முட்டிப் போடவச்சு பின் பாதத்துல லாடம் கட்றதும்னும் ஒரு போலிஸ் ஸ்டேசனாத்தான் என்னோட பள்ளிக்கூட வாழ்க்கை இருந்திருக்கு. பயம்...பயம்.. பயம்.....!!!! இந்த பயத்தை தவிர வேற ஒண்ணுமே மனசுல அப்போ இருந்தது இல்லை. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள்லயும், நடுநிலைப் பள்ளிகள்லயும் ஒரு உதவியாளர்கள் கூட இருக்க மாட்டங்க...! காலையில பத்து மணி ஸ்கூல் திறக்கறதுக்கு முன்னாடியே போயி 5 வது படிக்கிற பெரிய பசங்க (9 வயசு!!!!!)  எல்லோரும் தினமும் பெஞ்சு தூக்கிப் போடணும், ஒண்ணாவது ரெண்டாவது படிக்கிற பிள்ளைங்க உட்கார பலகை தூக்கிப்போடணும்.....

அது மட்டும் இல்லாம சுழற்சி முறையில ஒவ்வொரு பீரியட்ஸ்க்கும் நடுவுல பெல் அடிக்கணும். பள்ளி ஆரம்பிக்கும் போதும் மூடும் போதும் பெல் அடிக்கிறதோட மட்டும் இல்லாம... நம்பிக்கையான ஒரு பையன் கையில பள்ளிக் கூட சாவிய கொடுத்துடுவாங்க... அந்த பையன் காலையில போய் பள்ளிய திறந்து மிச்ச வர்ற பசங்க கூட சேர்ந்து பெஞ்ச் தூக்கிப் போடணும்...

நான் அஞ்சாவது படிச்சப்ப பள்ளிக்கூட சாவி என்கிட்ட இருந்துச்சு. தோள் மாட்டிப் பையை தலையில சபரி மலைக்குப் போற பக்தன் மாதிரி மாட்டிக்கிட்டுப் போய் பள்ளிக்கூடத்த தொறப்பேன். அந்த பள்ளிக் கூடத்துல என் கூட படிச்ச 30 பேர்ல என்னால ஈஸியா முதல் மார்க் எடுக்க முடிஞ்சதோட இல்லாம..அப்பாவ எல்லா சாருக்கும் நல்லா தெரியும்ன்றதால இந்த சாவி பொறுப்பு நம்ம கைக்கு வந்துச்சு. ஆரம்பப் பள்ளியக் கடந்து  நடுநிலைப் பள்ளிக்குப் போனப்ப...சில மாணவர்கள் சரியா படிக்கலேன்னு தலைகீழா நிக்க வச்சு சில வாத்தியாருங்க அடிச்சதை எல்லாம் நான் நேரடியாவே பாத்து இருக்கேன். டேய் கொறப்பய மவனே இங்க வாடான்னுதான் கோபத்துல அவுங்க கூப்புடுவாங்க....வாத்தியார பாத்தாலே பயந்து நடுங்கற அந்தக் காலங்கள இப்ப நினைச்சாலும் மிரட்சியா இருக்கு.....! எல்லோருமே அப்டி இருந்தாங்கன்னு சொல்ல மாட்டேன் ஆனா பத்துல 6 பேர் அப்டிதான் இருந்தாங்க.

தலை முடிய பிடிச்சு இழுத்து பெரமையன ஒரு வாத்தியார் அடிச்சாரு, அதுவும் ஏழாவது படிக்கிற அந்த பதின்மத்தோட துவக்கத்துல. எல்லா பொம்பளை புள்ளைங்களுக்கும் முன்னாடி அவன் கால்சட்டையில யூரின் பாஸ் பண்ணிட்டான்.....இங்கிலீஸ் கிராமர் தெரியல அவனக்கு... டைரக்ட் சென்டஸ இன்டைரக்ட்டா மாத்த தெரியலை, அதுக்குதான் அடி. 1987 வாக்குலன்னு இல்ல இன்னிக்கு தேதி வரைக்கும் எல்லா அரசாங்க பள்ளியிலயும் படிக்கிற பிள்ளைங்க யாரும் சாஃப்ட்வேர் இஞ்சினியரோட பிள்ளைங்களோ, பணக்கார வீட்டுப் பிள்ளைங்களோ அல்லது ரொம்ப விவரமான பெற்றோர்களின் பிள்ளைகளோ கிடையாது...

ஆசாரி வேலை செய்றவங்க, வயல்ல கூலி வேலை செய்றவங்க, சைக்கிள் கம்பெனி வச்சு இருக்கவங்க, டீக்கடை, மளிகைக் கடை, லாண்டரி, சலூன், இப்படி பொதுவான விரிந்த அறிவுப் பெருக்கம் இல்லாத பெற்றோர்கள் அவுங்க பிள்ளைங்கள பள்ளிக்கூடத்துக்கு படிக்க அனுப்பிச்ச காலங்கள் அது இவுங்களுக்கு நடுவுல என்னைய மாதிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துல வேலை பாக்குறவரோட பிள்ளைகளும், ஒண்னு ரெண்டு வாத்தியார் பிள்ளைங்களும் இருப்பாங்க....! அப்போ கூடஎங்க அப்பா அம்மாக்களுக்கு வீட்ல பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கறதோ அல்லது என்ன படிச்சி இருக்கான் அப்டீன்னு க்ராஸ் செக் பண்றதோ தெரியாது. பெற்றோர் ஆசிரியர் கழகம்னு ஒண்ணு இருந்துச்சே தவிர அது ஒரு நாளும் பெற்றோர்களையும் பிள்ளைகளையு ஆசிரியரையும் ஒருங்கிணைச்ச்சு அப்போ கூட்டங்கள் நடத்துனதே இல்லை....

பெத்தவங்களுக்கு நாங்க பண்ற சேட்டையில கோபம் வந்தா புத்தகத்த எடுத்து வச்சுப் படின்னு அதட்டுவாங்க அவ்ளோதான் அவுங்க உச்சபட்ச அக்கறை. பெரும்பாலும் பள்ளிக்கூடத்து வாத்தியார்கள நம்பி இருந்த எங்க வாழ்க்கையில வாத்தியார்கள் எல்லாம் எங்கள  மாணவர்களா பாக்குறதுக்குப் பதிலா குற்றவாளிகளாத்தான் பாப்பாங்க...

யாரோ ஒரு ஜோன்ஸ் பையனும், முருகேசனும் மகனும், பஷீர் மகனும் 11 மணிக்கு மாத்தி மாத்தி போய் வாத்தியாருங்களுக்கு டீ யும் வடையும் வாங்கிட்டு வந்து கொடுப்பாங்க. ஏழாவது படிக்கிற பையன் 10 வடையும் 5 பார்சல் டீயும் வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு....எச்சில் ஒழுக வந்து மறுபடி க்ளாஸ்ல உட்கார்ந்துகிட்டு சைன் தீட்டா மைனஸ் காஸ்தீட்டானு எப்டி சார் படிப்பான்...? வயலுக்கு போயி அப்பாவுக்கு சோறு கொடுத்துட்டு வெறுங்காலோட ஓடியாந்து வீட்ல பீச்சுன பாலை பண்ணையில கொடுத்துட்டு வந்து... 

ஷேக்ஸ்பியரோட போயெட்ரிய அவன் மனப்பாடம் செய்ய கொஞ்ச நாள் ஆகுமா..? ஆகாதா? அவனைப் போயி படிப்பு வரலேன்னு அடிக்கிற வாத்தியார்கள என்ன சார் செய்றது...?

ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளை பல கசப்பான உண்மைகளோட கடந்த என்னோட லைப்  பதினொன்னாவதுல ஆரம்பிச்சு காலேஜ் முடிக்கிற வரைக்கும் வாத்தியார்களை பணம் உண்டாக்கும் மெசின் மாதிரிதான் காட்டிச்சு. அரசு உயர்நிலைப் பள்ளியில பதினொன்னாவாது படிக்கிறப்ப பண்ணென்டாவதுக்கு வச்ச ட்யூசன்...காலையில 7:30 - 8:30 = கணக்கு ட்யூசன், 8:30 - 9:30 = கெமிஸ்ட்ரி அது முடிச்சு பள்ளிக்கூடம் பத்து மணிக்கு பள்ளிக் கூடம் போனா மறுபடி ஸ்கூல் விட்டப்புறம் 4:30 - 5:30 = பிஸிக்ஸ் ட்யூசன் அப்புறம் 5:30 - 6:30 = பையாலஜின்னு முடிச்சுட்டு 7 மணிக்கு பஸ் புடிச்சு வீட்டுக்கு வர மணி எட்டாயிடும். படிக்காத பசங்களுக்குன்னு இல்லங்க நல்லா படிச்சாலும் படிக்காட்டியும் ட்யூசன் போய்தான் ஆகணும்... சத்தியமா க்ளாஸ்ல ஒண்ணுமே நடத்தமாட்டங்க ..சார் எல்லாம்...! ட்யூசன் அவுங்க கிட்ட வச்சுக்காட்டி ப்ராட்டிகல் மார்க்ல கை வைப்பார்ன்ற ஒரு டீஃபால்ட் த்ரெண்டெண்ட் எங்களுக்கு இருந்துக்கிட்டே இருக்கும்.

திறமை இருக்கவன் படிச்சு தன்னால மேல வருவான்றது எல்லாம் சரிங்க, திறமை இல்லாதவன் என்னங்க செய்றது...? பிஸிக்சும் கெமிஸ்ட்ரியும் வராதவன் எல்லாம் முட்டாள்னு ப்ரூஃப் பண்ணத்தான் இந்த சமூகம் முயற்சி பண்ணிச்சே தவிர.. ஏன் வரல... அப்டீன்னு வழிகாட்ட ஒரு நாதி இல்லேங்க அப்போ எல்லாம்...(இப்பவும் கூட இருக்கத்தான் செய்யுது...)

காலேஜ் படிக்கும் போதும் அப்டித்தான்...பென்சாய்க் ஆசிட் பிரிப்பரேசன மனப்பாடம் பண்ணி, கொடுக்குற ஆங்கில நோட்ச அப்டீயே எழுத சொன்ன ஆசிரியர்கள்..ஏன் பென்சாயிக் ஆசிட் பிரிப்பேர் பண்ணனும்...னு சொல்லிக் காட்டவே இல்லை. ஒரு நாள் 40 மாணவர்களையும் மாணவிகளையும் நிக்க வச்சு....மொத்தமா ஒரு நாள் ப்ராக்டிகல் செஞ்சு காட்டினதுதான் எங்க பென்சாயிக்  ஆசிட்டோட அறிவு....

இன்னமும் என்னோட நண்பர்கள்ல நிறைய பேருக்கு சால்ட் டைட்ரேசன் எல்லாம் ஏன் செஞ்சோம் அல்லது எதுக்கு அதைச் செய்யணும்னே தெரியாதுங்க....!

இன்னும் சொல்லப் போனா நகராத மாட்ட அடிச்சு இழுத்துட்டுப் போறது மாதிரியான ஒரு வலுக்கட்டாய திணிப்புதான் என்னோட கல்வி வாழ்கையில ஏற்பட்ட அனுபவமா இருக்குது. ஆசிரியர்கள் தினம் அப்டீன்றத நான் பள்ளி, கல்லூரி வாழ்க்கையோட தொடர்புபடுத்தி மட்டு பார்த்தா... நான் உங்க எல்லார்கிட்டயும் ஐயம் சாரின்னுதான் சொல்ல வேண்டி இருக்கும்....

படிச்சு முடிச்சு வெளில வந்ததுக்கு அப்புறம் வாழ்க்கை கல்விய கத்துக் கொடுத்த நிறைய குருக்கள் என் வாழ்க்கையில இருக்காங்க...தக்ஸின் அப்டீன்ற அந்த நட்சத்திர ஹோட்டலோட எம்.டி ஆனந்த்குமார் சார், புத்தகங்களின் வாயிலா பாலகுமாரன் சார், வாழ்க்கையின் எல்லா பக்கத்திலும் நிறைஞ்சு நின்ற என் அப்பா, ஆன்மீகத்தை புரிய வைச்ச விக்னேஷ் அண்ணன், இங்க துபாய் வந்ததுகு அப்புறம் இஸ்லாத்தை தெளிவா சொல்லிக் கொடுத்த காலிது ஷா அண்ணன்..., எப்பவுமே என் உள்ளுணவா இருந்து என்னை வழி நடத்தும் சிவம் அப்டீன்ற வெறுமை..... இப்டி என் பட்டியல்  நீண்டுகிட்டே போகும்....

ஆசிரியர்கள் என்பவர்கள் கல்விச் சாலைகளுக்குள் இருப்பவர்கள் மட்டுமல்ல...இந்த வாழ்க்கை முழுந்து பரந்து விரிந்து எப்போதும் நம்மை வழி நடத்துபவர்கள்....அவர்களை இன்று மட்டும் நினைவு கூர்ந்து கடந்து செல்லும் தர்மத்தை நான் அதர்மமென்றே சொல்லுவேன்...!

கற்றுக் கொடுக்குமொறு
பேராசான்...
தினம் கற்றுக் கொண்டிருக்கும்
விந்தையொன்றில்
வியந்து நிற்கிறேனடி....
ஞானப்பெண்ணே....
நான் வியந்து நிற்கிறேன்....!



தேவா சுப்பையா...



வாங்கண்ணா...வணக்கங்கண்ணா...!

$
0
0

தில்லானா ஆடுற வாழ்க்கையில கோடாணு கோடி மனோநிலையில கோடி மக்கள் நம்ம முன்னால எப்பவுமே வந்து போய்ட்டு இருக்காங்க. ஏதேதோ காரணங்கள் யாரையோ பிடிக்கறதுக்கும் பிடிக்காததுக்கும் இருந்துகிட்டேதான் இருக்கு. எந்த கருத்தும் எடுத்துக்காம 'பளீச்'ன்னு பிடிக்கிற விசயத்தை பிடிச்சுதுன்னு சொல்ற இடத்துல ஒரு மேகத்து மேல ஏறி உட்கார்ந்து ச்ச்சும்மா ஜிவ்வுன்னு பறந்து போற ஒரு சந்தோசம் தப்பாம நமக்கு கிடைச்சுடும். சந்தோசமாவே இருக்க பொறந்திருக்க நம்ம வாழ்க்கையில நமக்கு சந்தோசத்தோட முக்கியத்துவம் என்னனு  புரியவைக்கிறதுக்காக இடையிடையே ச்சும்மா அப்டி இப்டி ஏதாச்சும் ஒரு கட்டையத் தூக்கிப் போட்டு வாழ்க்கை எப்பவுமே விளையாடிட்டே இருக்குது. 

பொறக்குறப்பவே இறப்போம்ன்றது கன்ஃபார்மான வாழ்க்கையில மிச்சம் இல்லாம எல்லா மனுசங்களும் ஒரு கட்டத்துக்கு மேல நம்மள விட்டுட்டு போய்டுறாங்க. ஒரு நிமிசம் நின்னு யோசிச்சுப் பாத்தா இங்க சந்தோசமா இருக்குற ஒவ்வொரு நொடி மட்டும்தான் நமக்கு மிச்சம்ன்றது தெளிவா விளங்கும். எவ்ளோ பணத்தோட வாழ்ந்தீங்க...எவ்ளோ புகழோட வாழ்ந்தீங்கன்றது எல்லாம் மேட்டரே இல்ல பாஸ்...எவ்ளோ திருப்தியா வாழ்ந்தோம் அப்டீன்றதுதான் மேட்டர். சுத்தி சுத்தி எது எதையோ பேசி மூளைய சூடாக்கிக்கிட்டு எனக்கு இது பிடிக்கும், இது உனக்கும் பிடிக்கலேன்னா நீ எனக்கு எதிரி.. பிடிச்சுதா நீ என் நண்பன் அப்டீன்னு நினைக்கிறதே அபத்தம். ஆயிரம் விருப்பங்கள், ஆயிரம் திசைகள் ஆயிரம் முரண்கள்னு இப்டி, அப்டி போயிட்டு இருக்க வாழ்க்கையோட அழகே முரண்கள்தானோன்னு பல தடவை யோசிச்சு இருக்கேன்.

தண்ணி அடிக்க மாட்டேன், தம் அடிக்க மாட்டேன், பொண்ணுகள பாக்க மாட்டேன், ரொம்ப யோக்கிய சிகாமணியா நான் வாழ இந்த சமூகம் போட்டுக் கொடுத்த ஒரு ஃபார்முலாக்குள்ளயே கட்டம் கட்டி வாழ்ந்துட்டு போய்டுவேன்னு சில பேர் இருப்பாங்க, கடவுளே இல்லைன்னு சொல்லி பகுத்தறிவ பாயா செஞ்சு குடிச்சிக்கிட்டே கருப்புச் சட்டைய மட்டும்தான் போடுவேன்னு இறுகிப் போயி ரொம்பப் பேரு திரிவாங்க, நான் சாமிய கும்புடுறேன் எனக்கு சொர்க்கம் நிச்சயம்னு எதித்தாப்ல விளையாடிட்டு இருக்க பெத்த புள்ளைய தூக்கிக் கொஞ்சக் கூட நேரமில்லாம வழிபாட்டுத் தளங்கள நோக்கி இயந்திரத்தனமா ஓடி, ஓடிப் போயி கடவுள வேண்டிகிட்டே  பலர் இருப்பாங்க. செத்துப் போனா சொர்க்கத்துல சொக்கட்டான் விளையாடி சந்தோசமா வாழ்க்கையை என்ஜாய் பண்ண ஆசைப்பட்டு இங்க உயிரோட கண்ணு  முன்னாடி இருக்குற வாழ்க்கையை கண்டுக்காம  விட்டுடுவாங்க..

பஸ்ல புட் போர்ட் அடிக்காம பதின்மத்த கடந்த பெருசுகளுக்கு எல்லாம் இப்போ புட்போர்ட்ல போற புள்ளைங்கள பாத்தா கடுப்பாகத்தான் செய்யும். புட்போர்ட்ல போறது ஆபத்துதான் ஆனாலும அவன், அவன் டேலண்ட் அது .....,  அவார்னஸோட போறான்னா போய்ட்டு போகட்டுமே..தமிழ்நாடு புல்லா புட்போர்ட்ல போயி கீழ விழுந்து செத்தவன் எத்தன பேர்னு ஏதாச்சும் புள்ளி விபரம் இருந்தா எடுத்துப் பாருங்க அதை விட அதிகமா ரோட்டு ஓரமா மரியாதைய போனவங்கள வாழ்க்கை அகோரமா அழிச்சு இருக்க விபரீதம் நமக்குப் புரியும். சாமி ரொம்ப கும்புடுறான்டா முட்டாள் அப்டீன்னு ஒரு க்ரூப்பு திட்டிக்கிட்டு இருக்குது...,  சாமியே கும்புடவே மாட்டான் முட்டாள்னு இன்னொரு க்ரூப் திட்டுது....

காங்கிரஸ்தான் நாட்ட காப்பாத்துற ஒரே கட்சி அவுங்கதான் மதச்சார்பற்று இருக்காங்க பெஸ்ட்டுன்னு திங்க் பண்ற நிறைய ஸ்டேட்ஸ் இந்தியாவுல இருக்கு, பிஜேபி தான் வரணும்னு பேசிட்டு இன்னொரு க்ரூப், கலைஞர் பேர சொல்லி ஏதாச்சும் விமர்சிச்சா எதிர்க்க ஒரு க்ரூப், ஜெயலலிதாவ திட்டினா அதை எதிர்க்க ஒரு க்ரூப், எது நடந்தாலும் அதைப் பத்தி கருத்து சொல்லியே ஆகணும்னு கம்ப்யூட்டர் முன்னாடி ஒரு க்ரூப்னு இந்த வாழ்க்கை புல்லா எல்லாமே கலர் புல்லா ஏதாச்சும் நடந்துகிட்டே இருக்கு.

எல்லோருக்கும் யாரையோ பிடிக்குது... அல்லது கடுப்பா இருக்கு. சில பேர், சிலர காதலிக்கிறாங்க, சில பேர் கல்யாணம் பண்ணிக்கிறாங்க, சில பேர் முயற்சி பண்றாங்க, பல பேர் கனவுகளோட அலையுறாங்க, குழந்தை இல்லாதவங்களுக்கு குழந்தை வேணும், குழந்தை இருக்கவங்களுக்கு பிள்ளைகள நல்ல படியா வளர்க்கணும், கடமை.. கடமை .. பொறுப்புகள், ஆசைகள், கனவுகள், நிராசைகள்...இது ஒரு பக்கம்.

வறுமை, நோய், வறட்சி, இயலாமை, கோபம், ஆத்திரம், களவு, பொய், கொலை, முரட்டுத்தனம் இப்டி முரண்பாடுகள்னு நாம நினைக்கிற விசயங்கள் ஒருபக்கம்னு எந்த யோசனையும் இல்லாம  எல்லாமே நடந்துகிட்டே இருக்கு. கழுத்துல இருக்க செயின அறுக்குறவனுக்கு அறுக்குறவளோட குடும்பத்தப் பத்தி யோசிக்கவோ அப்டி அறுக்கும் போது அவளுக்கு வலிக்குமோன்னோ நினைச்சு பாக்கமுடியலை. அவன் வயிறு படுத்துற பாட்ல எப்டி அவன் இதை யோசிப்பான்...? மனுசனே மனுசன ஆதரிச்சு மனிதநேயம் பேசுற இந்த பூமில தான் கெமிக்கல் வெப்பன்ஸ் வச்சு மனுசங்கள கொத்து கொத்தா கொல்லவும் செய்றாங்க..., வலிமையானவன்னு இந்த சமூகம் அடையாளப்படுத்துற யாரோ ஒருத்தன் எல்லோரையும் அடக்கி ஆளக்கூடியவனா இருக்குறான்...

அன்பானவன் எப்பவும் அன்பா மட்டும்தான் இருக்க முடியுது. அவனால இந்த உலகத்தோட  ஒரு சிறு பகுதிய கூட அன்பால கட்டிப் போட முடியலை. அன்ப போதிக்க வந்தவங்கள எல்லாம் கடவுளாக்கிக்கிட்டு மறுபடி செகண்ட் ரவுண்ட்ல மதம்ன்ற பேர்ல எல்லோரும் அடிச்சுக்கிறாங்க...

யாரும் யாரையும் இங்க திருத்த முடியாது. நான் பேசுறது உங்க கேரக்டர் கூட ஒத்துப் போச்சுன்னா சூப்பர் பாஸ்னு சொல்லுவீங்க.. இல்லேன்னா...ஹ்ம்ம்க்கும்னு சொல்லிட்டு தோள்பட்டையில முகவாயை இடிச்சுக்கிட்டு போய்கிட்டே இருப்பீங்க. இங்க அங்கீகாரம் அப்டீன்றது தனி மனித விருப்பமாத்தான் இருக்கு. எது பிடிக்கணும் பிடிக்க கூடாதுன்னு யாருக்குமே நாம வரையறை செய்ய முடியாது. ஊருக்குள்ள எந்த மூலையிலயாவது ஏதாவது அபத்தமா நடந்துச்சுனா அதை மீடியா காசாக்கிடுது, விவாதம் செய்ய டிவிக்கு கூப்டுற ஆளுங்களுக்கும் இதனால பாப்புலாரிட்டி வெகு சீக்கிரமா கிடைக்கிறதோட இதுக்கு பொருளும் கிடைக்கறதால அடுத்து எங்க எப்ப ஏழரை விழுந்தாலும் நம்மள கூப்டுவாங்களான்னு மனசு அவுங்க அறியாமலேயே ஏங்க ஆரம்பிச்சுடுது...இல்லேன்னா என்னடா ஒண்ணுமே நடக்க மாட்டேங்குதுன்னு யோசிக்க வைக்குது....

நல்ல செய்திகளை மட்டுமே ஊடகங்கள் விவாதிக்கவும், வெளியிடவும் கூடிய சூழல்னு ஒண்ணு உருவாகவே போறது இல்லை. எப்பவுமே அடுத்தவன் பிரச்சினைய வேடிக்கப் பார்க்குறது மனிதர்களோட இயல்பு. அந்த இயல்ப இப்ப இருக்குற ஊடகங்கள் எல்லாம் நல்லா சொறிஞ்சு விட டி.ஆர்பி. ரேட்டிங் எக்குத்தப்பா எகிறிப் போயிடுது. எல்லாமே இங்க காசுன்ற ஒரு விசயத்தை மையமா வச்சுதான் பெரும்பாலும் நடக்குது.

ஏங்க இப்டி எல்லாம் நடக்காத  ஒரு அமைதியான பூமி சகிப்புத்தன்மையோட உருவாகாதா....?ன்னு நீங்க கேட்கலாம்..! அப்டி எல்லாம் நடக்காது பாஸ்...சகிப்புத்தன்மையோட அமைதியா ஒண்ணுமே நடக்காம இருந்தா அப்புறம் என்னா சார் இருக்கு லைப்ல சுவாரஸ்யம்.....? மரணம்னு ஒண்ணு இல்லேன்னா இந்த வாழ்க்கை ச்ச்சீன்னு போய்டும் சார்....

எதுவும் மாறாது எல்லாமே இப்டிதான் இருக்கும்.. எனக்கு எது திருப்திய தருதோ அதை  செஞ்சுட்டு, படுக்கையில விழுந்த மூணாவது செகண்ட்ல நிம்மதியா தூங்க முடிஞ்சா நான் ஏதோ திருப்தியா வாழ்ந்துட்டு இருக்கேன்னு அர்த்தம். ஒரு நாள் டக்குனு எல்லாம் முடிஞ்சு போகும்... அப்போ யாருமே நம்ம கூட வரப் போறது இல்லை. அன்னிக்கு என்ன நடக்குதுன்னு அன்னிக்கு பாத்துக்கலாம் பாஸ்....

கேவலமான படமா இருந்தாலும் இந்த பாட்டு நல்லா இருக்கும் இதுல அக்மார்க் விஜய்ன்ற ஒரு இமேஜ் ரொம்ப ஷார்ப்பா வெளிப்பட்டு இருக்குனு நான் சொல்லி, இந்தப் பாட்டை கேட்டு என்ஜாய் பண்ணுங்கன்னு சொல்றதுக்கும் ஒரு காரணமும் இல்ல பாஸ்....

ஏதாச்சும் ஒண்ணு செய்வோமே.... ஒண்ணுமே செய்யாம கட்டுப்பாடுகள் விதிச்சுக்கிட்டு வாழ்ந்து என்னத்த அள்ளிக்கிட்டு போகப்போறோம்...

அதனால.. வாங்கண்ணா............வணக்கங்கண்ணா....இந்த சாங்க நீங்க கேளுங்கண்ணா.....நான் உளற உளறளலண்ணா.. ரொம்ப ஃபீலிங்கு ஃபீங்குண்ணா....!



தேவா சுப்பையா...




ஏரிக்கரை பூங்காற்றே....!

$
0
0

வாழ்க்கையின் எல்லா பக்கங்களிலும் நிறைந்து கிடக்கும் உணர்வொன்றை மொத்தமாய்  என்னுள் திணித்துப் போட்டிருக்க்கும் உனது பேரன்பினை விவரிக்க இயலாமல் ஒரு குருடனாய் தட்டுத் தடுமாறி உனக்கான வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன். எத்தனை முறை இயம்பினாலும் தீராத காதலொன்றை என் வார்த்தைகளுக்குள் கொண்டு வரும் பிராயத்தனத்தை நான் வலி என்பதா சுகம் என்பதா இல்லை இரண்டும்  பிசைந்தெடுத்த கலவை என்பதா?

அடர் இரவொன்றின் நீண்ட பயணத்தில் துணைக்கு வரும் நிலவாய் என்னை துரத்தும் உன் நினைவுகளை மென்று கொண்டே என் ஜன்னலோரப் பேருந்தில் நகர்ந்து கொண்டிருக்கும் சொர்க்க நிமிடங்களின் ஏக்கத்தை காதலென்று அடையாளப்படுத்தியபடியே தூரத்தில் சிறகடிக்கும் ஒற்றை பறவை ஒன்று தன் துணையத் தேடி சென்று கொண்டிருக்கலாம்....ஆழமான பேரமைதியை உள்வாங்கிக் கொண்டு ஏதேனும் ஒரு மரக்கிளையில் அதன் துணை காத்துக் கொண்டுமிருக்கலாம்..

இறக்க முடியாத சிலுவையினை சுமக்கும் தேவனாய் உன்னை மறக்க முடியாமால் நகரும் என் பொழுதுகளை எல்லாம் நீயே விடியவைக்கிறாய்...நீயே அணைத்தும் வைக்கிறாய்.  எடுத்தியம்ப இயலாத உணர்வுகளைத்தான் எப்போதும் போல இப்போதும் எழுதி வைக்கிறேன்....! 

ப்ரியங்கள் எப்போதும் சொல்லிக் கொள்வதில் முடிந்து விடுவதில்லை. நேசங்கள் ஒரு போதும் மேடையேறி தன்னை கோடி பேருக்கு அது அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. எதையும் பகிரவேண்டிய அவசியமற்று மெளனமாய் சுற்றும் இந்த பூமியையும், தூரத்தில் எரிந்து கொண்டிருக்கும் சூரியனையும் இருக்கிற்தென்று சொல்லி நியாயங்கள் பேச வேண்டியதும் இல்லை. 

காதலென்ற ஒற்றை சொல்லுக்குள் 
அடைபட முடியாமல் துடிக்கும்
என் உணர்வுகளை பிரம்மாண்டமாய்
விரித்துப் போட்டிருக்கிறேன்
இந்த பிரபஞ்சப் பெருவெளியெங்கும்
திறந்து கிடக்கும் வானத்தின்
நட்சத்திரங்களாய் கண்சிமிட்டும்
உன் மீதான என் காதலுக்கு
மறுமொழி பகிராவிடினும்
இமைகள் சிமிட்டி விழிகளாலாவது
நீ சிரித்து விட்டுப் போ....!!


இப்படியாய் கிறுக்கிக் கொண்டே பின்னணியில்  இசைத்துக் கொண்டிருக்கும் இளையரஜாவின் இசைக்குள் சிக்கிக் கொண்டு திணறிக் கொண்டிருக்கிறேன். இந்த பாடலுக்காக நான் ஏதோ எழுதினேன் என்று சொல்ல முடியாது ஆனால் பாடல் கொடுத்த உணர்வுகள் எங்கோ இழுத்துச் சென்று என்னை நிறுத்தியதால் எழுதினேன் என்பது உண்மை. அட்டகாசமான ஒரு சூழலை எடுத்துச் சொல்லும் இது போன்ற பாடலின் சூழல்கள் எல்லாம் கவிதைத்தனமானது. தன்னுடைய துணையை நினைத்து படத்தின் ஹீரோ பாக்கியராஜ் சோகமாய் பாடிக் கொண்டிருக்கையில் நம்பியார் அப்படியே ப்ளாஸ் பேக்கில் தன்னுடைய காதலியோடு டூயட்  பாடுவார். ஒரே பாடலை சோகமாகவும் டூயட்டாகவும் உணர வைக்கும் வித்தையை செய்திருப்பார் ராஜா சார்.

முழுக்க முழுக்க ஏக்கத்தையும் காதலையும் பிசைந்து உருவாக்கப்பட்டிருக்கும் பாடலை சிதம்பரநாதன் என்று ஒருவர் எழுதி இருக்கிறார்.

" ஓடிச்செல்லும் வான்மேகம் நிலவ
மூடி கொள்ள பார்க்குதடி அடியே
ஓடிச்செல்லும் வான்மேகம் நிலவ
மூடி கொள்ள பார்க்குதடி அடியே
ஜாமத்தில் பாடுறேன் தனியா
ராகத்தில் சேரணும் துணையா
நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்
அந்த ராசாங்கம் வரும்வரை ரோசாவே காத்திரு "

வலியை ஏந்தி வரும் பாடலோடு  கரைந்து போக வாழ்த்துகள்...!





தேவா சுப்பையா...



Photo Courtesy: யோ

தங்கமீன்கள்...!

$
0
0
ஒரு கதையின் சாயல் நம் வாழ்க்கையை ஒத்திருக்கும் போது அந்த திரைப்படத்தைப் பற்றி பெரிதாய்  என்ன  சொல்லி வியக்க முடியும்... அதில் ஆழ்ந்து அமிழ்ந்து போவதைத் தவிர. டீசர்கள் வெளியான போதே பதை பதைப்பை அந்த திரைப்படம் ஏற்படுத்தியதற்கு காரணம் தங்கமீன்களின் செல்லம்மா என் வீட்டிலும் வளர்கிறாள் என்பதால்தான். வசதியான அப்பாக்களால்எல்லாவற்றையும் எப்போதும் தங்களின் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்து விடமுடிகிறது. கல்யாணியைப் போன்ற அப்பாக்களின் நிலைமைதான் இங்கே மிகவும் கடினமாகிப்போகிறது.

ஒரு அப்பாவிற்கும் மகளுக்கும் இருக்கும் உறவு முறையை, பாசத்தின் அதிர்வுகளை எடுத்து சொல்ல இதுவரைக்கும்  தமிழ் சினிமா இது போல ஒன்றும் வந்தது இல்லை. இனி வரப்போவதுமில்லை. அம்மாக்கள் எப்போதுமே பிள்ளைகளின் மீது பாசமாய் இருப்பார்கள். ஒரு தாய் எப்போதும் தாய்தான். அவளுக்கு பிள்ளை பேதங்கள் எப்போதும் கிடையாது. ஒரு ஆணிடம் பெண்ணின் இயல்புகள் மிகுந்து போய் தன் பாசத்தை செலுத்தும் வாய்ப்பினை மகள்கள் தப்பாமல் கொடுத்துதான் விடுகிறார்கள். தாய், காதலி, மனைவி, சகோதரி , தோழி, என்று சுற்றிச் சுற்றி பல பெண்களிடம் பல்வேறு விதமான அன்பினை எதிர்ப்பார்க்கும் ஒரு ஆண் தன் உயிரிலிருந்து ஜனித்த பெண் குழந்தையை பார்த்தவுடன் பூரித்துப் போகிறான். கடந்த கால பெண்கள் பற்றிய எல்லா தவறான அபிப்ராயங்களையும், அழிச்சாட்டியங்களையும் அவள் உடைத்துப் போட ஒரு பெண்ணை முதன் முதலாய் அவன் பெண் என்னும் பரிபூரணத்துடன் தன் இயல்பில் உணர ஆரம்பிக்கிறான்.

ஆரம்ப காட்சியில் " நீ மட்டும் சாகாம இருப்பா.." என்று கிறக்கமாய் செல்லம்மா அப்பாவின் கழுத்தைக் கட்டிக் கொள்ளுமிடத்தில் கண்களில் துளிர்க்கும் கண்ணீர் வலியாய் மாறி படம் முழுதும் பரவிக் கிடக்கிறது. கிட்டத் தட்ட ஒரு ஞானக்கிறுக்கனை ஒத்த ஒரு பாத்திரப் படைப்பை கல்யாணி என்னும் கேரக்டரில் அப்பட்டமாய் பிரதிபலித்திருக்கிறார் ராம். ராமை விடுத்து வேறு யாராலும் அவ்வளவு அட்டகாசமாய் அந்தப் பாத்திரத்தை வெளிப்படுத்தி இருக்க முடியாது. பொருள் சேர்த்தல் என்பது ஒரு விளையாட்டு. பாசத்திற்குள் விழுந்து கிடக்கும் மிகையான பேர்களுக்கு பொருள் என்பது இரண்டாம் பட்சமாய் போய்விடுகிறது. அதுவும் மகளோடு ஒன்றிப் போன ஒரு தகப்பன் மகளின் மீது கொண்ட பாசத்தால் அவளை விட்டு நகரமுடியாமல் அவளோடு பிண்ணிப் பிணைந்த வாழ்க்கை ஒன்றை வடிவமைத்துக் கொள்கையில் அங்கே பொருளாதாரம் வந்து தன் கோரப்பற்களைக் காட்டுகிறது.

அப்பா மகளின் பாசத்தை  எடுத்துச் சொல்லி இருக்கும் அதே நேரத்தில் ஒரு பிள்ளையை எப்படி நமது ஊர் ஆங்கிலவழிப் பள்ளிக் கூடங்கள் சீரழிக்கின்றன என்ற அவலத்தையும் கதையினூடே பளீச் என்று சொல்லி இருக்கும் இயக்குனரை பல இடங்களில் நமக்குப் பாராட்டத்தோன்றுகிறது. ஏன் இப்படி ஒரு கிறுக்குத்தனமாய் ஒரு தகப்பன் இருக்கவேண்டும்..? மகள் மேல் பாசம் இருந்தால் போய் எங்கேயாவது பிழைக்க வேண்டியதுதானே..? இப்படி ஒரு பைத்தியக்காரனைப் போல சமகாலத்திற்கு ஏற்றார் போல தன்னை அப்டேட் செய்து கொள்ளாத ஒரு பாத்திரத்தை ஏன் ராம் படைக்க வேண்டும் என்றெல்லாம் நிறைய பேர்கள் விமர்சனங்களில் எழுதி இருந்தார்கள்.

வாழ்க்கை என்பது எப்போதும் ஜெயிப்பது மட்டுமல்ல. வாழ்க்கை என்பது எப்போதும் டெக்னிக்கலாய் சிந்திப்பது மட்டும் அல்ல. வாழ்க்கை என்பது திட்டமிடுதல் மட்டுமல்ல. வாழ்க்கை என்பது எப்போதும் எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பதும்  அல்ல. வாழ்க்கை என்பது தோற்பதும் கூட. வாழ்க்கை என்பது இயலாமையும் கூட. வாழ்க்கை என்பது அன்பினில் கட்டுப்பட்டு அதன் சிறப்பை உணர்ந்து போய் போதும் என்று வாழ்தலும் கூட. கல்யாணியை போன்ற கோடி அப்பாக்கள் இந்த உலகம் முழுதும் இருக்கிறார்கள். அவர்கள் இந்த சமூகத்தின் முன்பு பைத்தியக்காரர்களாய் இருக்கலாம். தங்களின் முகத்தில் பாத்திரம் பாலிஸ் செய்த வெள்ளியை முகத்தில் பூசியபடியே மகளை மகிழ்விக்க யாதொரு கவலையுமின்றி சைக்கிளில் பள்ளிகளின் வாசலில் அவர்கள் காத்திருக்கவும் செய்யலாம்.

அவர்களுக்குத் தெரியும் அன்பு என்றால் என்ன என்று. அதே போல தன் அப்பாவை அன்பின் வடிவமாய் பார்க்கும் எல்லா மகள்களுமே பரிபூரணத்தின் உச்சத்தில் இருப்பவர்கள். தங்களை புரிந்து கொள்ளும் ஒரு ஆன்மாவை இயல்பில் உணர்ந்து கொண்டு அவர்களின் கழுத்தைக் கட்டிக் கொண்டே அவர்களும் ஆனந்தித்து சுற்றிச் சுற்றி வருகிறார்கள். லெளகீக கொடுக்கல் வாங்கல்கள், எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி அவர்களின் குளத்தில் தங்கமீன்கள் எப்போதுமே நீந்தி விளையாடுகின்றன.  மகளுக்கு பிடித்தமான எவிட்டா டீச்சரைப் பார்க்க எத்தனை மணியானாலும் அந்த தகப்பனால் செல்ல முடிகிறது. அந்த டீச்சரை தன் மகளோடு பேச வைத்து எதிர்பாராத சந்தோசத்தைக் கொடுத்து அந்த  நிறைவில் அவனால் நெகிழ முடிகிறது. பாக்கெட்டில் பணம் இல்லை என்று பணம் தேடுகிறேன் பேர்வழி என்று வாழ்க்கையைத் தொலைத்துக் கொள்வது எல்லாம் சராசரி  அப்பாக்கள் எப்போதும் செய்வதுதானே...

கல்யாணி மாதிரி அப்பாக்கள் வாழ்க்கையை வாழ முற்படுகையில் இடையே பொருளின் தேவை பற்றிய முகத்திலறையும் உண்மையை எதிர்கொள்ள முடியாமல்தான்.....பொருள் சேர்க்க ஓடுகிறார்கள். ஒரே நேர்கோட்டில் இயல்பான ஒரு சினிமாவை வெகு காலத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் காணப் பெற்றதற்காய்  ஒவ்வொரு தமிழனும் பெருமிதப்பட்டுக் கொள்ளலாம். ஒவ்வொரு பிரேமாய் பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்கும் இயக்குனரின் கடின உழைப்பு நம்மை பிரமிக்க வைப்பதோடு....யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை நம் நெஞ்சை கிழிக்கவும் செய்கிறது. நா. முத்துக்குமாரின் கவிதை வரிகள் இன்னும் கூடுதல் வலிமையைச் சேர்க்க ஆனந்த யாழ் நமக்குள் தன்னிச்சையாய் மீட்டப்படுகிறது. படத்திற்கு யார் வசனம் எழுதி இருப்பார்கள் என்று தெரியவில்லை. நிறைய இடத்தில் எதார்த்தமாய் வந்து விழும் வார்த்தைகள் செவுட்டில் அறைகின்றன. உதாரணமாக " பணம் இல்லாம இருக்கறது பிரச்சினை இல்லைங்க.. பணம் இருக்கவங்க மத்தியில பணம் இல்லாம இருக்கறதுதான் பிரச்சினை" என்று சொல்வது போன்று நிறைய இடங்களில் வசனகர்த்தா கொடிகட்டிப் பறக்கிறார்.

கடந்த ஆசிரியர் தினம் அன்றுதான் நான் என் அனுபவத்தில் சந்தித்த ஆசிரியர்களைப் பற்றி எழுதி இருந்தேன். எப்போதுமே மிரட்டுவதும் ஸ்டுப்பிட், ஷட் அப் என்று சொல்வதுமே ஆசிரியர்களின் கல்வி சொல்லிக் கொடுக்கும் நெறிமுறையாக நமது நாட்டில் இருக்கிறது. அமீரகத்தில் எல்லாம் பள்ளி செல்ல பிள்ளைகள் எப்போதும் ஆர்வமாய் இருப்பார்கள். இந்தப்படத்தில் செல்லம்மா கனவு காணும் பள்ளியைப் போலத்தான் இங்கே எல்லா பள்ளிகளும் பெரும்பாலும் இருக்கின்றன. மாணவர்களை கடிந்து கூட யாரும் பேசமாட்டார்கள். பெற்றோர்களுக்கு அவ்வளவு மரியாதை கொடுப்பதோடுபிள்ளைகளுக்கும் இன்முகத்தோடே பாடங்கள் சொல்லித் தருகிறார்கள். இப்போது நமது ஊரில் கொஞ்சம் மாறி இருக்கலாம். 

அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க  பெற்றோர்கள் முன் வரவேண்டும் என்ற கருத்தையும் ராம் இந்தப் படத்தில் பதிவு செய்திருக்கிறார். மகள் ஆசைப்பட்டு விட்டாள் என்று அவளுக்கு அந்த வோடபோன் நாயை வாங்க கடுமையாய் ராம் முயலும் இடமும் அதற்காய் அவர் மலைகளைக் காடுகளைத் தாண்டி, ஏரியைத் தாண்டி செல்லுமிடம் மட்டும் கொஞ்சம் அம்புலி மாமா கதை மாதிரி படத்தோடு ஒட்டவில்லை. நாயின் விலை 22 ஆயிரம், அவர் ஒரு இசைக்கருவியைக் கண்டு பிடித்துக் கொண்டு வந்து கொடுத்தால் 25 ஆயிரம் கிடைக்கும் என்று கதை சொல்லும் இடங்களில் திரைக்கதையை சேர்த்து இழுத்து தைக்க கொஞ்சம் பிராயத்தனப்பட்டு இருப்பது தெளிவாய் தெரிகிறது.  25 ஆயிரம் சம்பாதித்து அதிலிருந்து 22 ஆயிரத்துக்கு வோடபோன் நாய் வாங்கி வந்து கொடுத்து மகளை சந்தோசப்படுத்தி விடுகிறார்.

ஒரு கதாசரியர் வேறு ஒன்றும் செய்ய முடியாது. மெல்லிய உணர்வுகளைப் பதிவு செய்யும் ஒரு ஆக்கத்தில் இது போன்று நெய்துதான் முழுமையைக் கொண்டு வர முடியும். ராமின் அற்புதமான நடிப்பிற்கு முன்பும், செல்லம்மாவின் எதார்த்த நடிப்பிற்கு முன்பும் இது ஒன்றும் பெரிய குறையாய்த் தெரியவில்லை. எல்லோரும் வெறுக்கிறார்கள் என்று தண்ணீரில் விழுந்து தங்க மீனாய் செல்லம்மா மாறிவிட முடிவு செய்கையில் கடைசியில் ராம் வந்து காப்பாற்றி விடுகிறார். வோடாபோன் நாயை மகளிடம் கொடுத்து விட்டு அவர் ஆசுவாசப்படுத்திக் கொண்டு அமரும் காட்சியில் பிரசவித்த பின்பு வலிகளை மறந்து குழந்தையைக் காணும் தாயின் திருப்தியை நம்மாலும் உணர முடியும். மகள்களை பெற்ற அப்பாக்கள் தாயாய் மாறிவிடுகிறார்கள். 

மகள்களைப் பெற்ற அப்பாக்கள் பாக்கியசாலிகள்தான் ஏனென்றால் அவர்களால்தான்  தாய்மை என்றால் என்ன என்னும் ஒப்பற்ற உணர்வினை அடையமுடிகிறது. 

எல்லோரும் திரைப்படங்களை வர்த்தகரீதியாய் எடுத்து இயல்புக்கு முரணான காட்சிகளை வைத்து ஹீரோக்களை முன்னிலைப்படுத்தி கதைகளை உருவாக்கி இதுதான் சினிமா என்று நமக்கு கற்பிதம் செய்து விடுகிறார்கள். ராம் போன்ற படைப்பாளிகள் கண்டிப்பாய் போற்றப்படவேண்டியவர்கள். தங்கமீன்கள் போன்ற சினிமாக்கள் கொண்டாடப்பட வேண்டியவைகள். மகளிடம் பாசம் காட்டும் ராம் தன் அப்பாவின் முன்பு வளர்ந்த குழந்தையாய் அடி வாங்கிச் செல்வது போன்ற இயல்பை மீறாத காட்சிகள் படம் பார்க்கிறோம் என்ற உணர்வை விடுத்து அந்த கதைக்குள் நாம் வாழ்கிறோம் என்ற உணர்வைக் கொடுத்து விடுகின்றன.

விகடன் இந்த படத்துக்கு 44 மார்க் கொடுத்து இருப்பதாய் வாசித்தேன். ராம் அதற்காய் விகடன் ஆசிரியர்களிடம் எல்லாம் பேசியதாய் செய்திகள் வெளியாயின. உண்மையில் சொல்லப் போனால் அதற்கான அவசியமே இல்லை. விகடன் போன்ற கமர்சியல் ஊடகங்கள் வெகுஜனத்திற்கு எது இஷ்டம் என்று  பார்த்து பார்த்து தொழில் செய்யும் ஆதிக்க மனப்பான்மை கொண்டவை. அவற்றின் சமூகப் பார்வை, திரைப்படம் பற்றிய பார்வைகள் எல்லாமே பிறழ்ந்த கோணங்கள் கொண்டவை. சமூகத்தின் மீது அக்கறை இருந்தால் ஏன் அவர்கள் டைம்பாஸ் விகடன் போன்ற பத்திரிக்கைகள் மூலம் ஆபாசத்தை விற்கவேண்டும்...?

தலைவா படத்தையும், தங்கமீன்கள் படத்தையும் மதிப்பெண்கள் ரீதியாக சரி சமானமாய் பார்க்கும் போதே அவர்களின் லட்சணம் என்ன என்று நமக்கு புரிந்து விடுகிறது. விகடன் விமர்சனத்தில் கொடுக்கப்பட்ட மதிப்பெண் அவர்களின் தனிப்பட்ட பார்வை. அது பொதுவான பார்வை அல்ல....

தொடர்ந்து தங்கமீன்கள்  போன்ற தமிழர்களின் வாழ்க்கையை, உணர்வை, சமூகவியலை பிரதிபலிக்கும் படங்களை இயக்குனர் ராம் எடுக்க வேண்டும். நல்ல திரைப்படத்தை விரும்பும் தமிழ் ரசிகர்கள் ராம் போன்ற படைப்பாளிகளை மாற்றுக் கருத்துக்களின்றி அவர்களின் நல்ல ஆக்கங்களுக்காக ஆதரிக்க வேண்டும்...!


ஹேட்ஸ் அப்....ராம் சார்...!!!!!



தேவா சுப்பையா....





நித்ய கன்னியே... கண்ணம்மா...!

$
0
0

இறக்கி வைக்க முடியாத சுகங்களை எல்லாம் சுமந்து செல்லும் வழிப்போக்கனாய் பயணித்துக் கொண்டிருக்கிறது என் நினைவுகள். காவியங்கள் என்று தம்மை இயம்பிக் கொள்பவைகள் எல்லாம் அழுத்தமான வலிகளையே காலங்களாய் இன்னமும் பேசிக் கொண்டிருக்கின்றன. வலிகளோடு கூடிய தனிமையின் சுகம்தான் ஆதி பிரபஞ்சமாய் இருந்திருக்குமோ..? உறக்கத்தின் போது காணும் கனவுகள் எப்போதுமே நமது கட்டுப்பாட்டில் இருப்பது இல்லை. உணர்வோடு காணும் கனவுகள் எப்போதுமே அலாதியானவை...அவற்றுக்கு யாதொரு கட்டுப்பாடுகளும் கிடையாது.

ஒரு அழகிய பாடலை கேட்டு ரசிக்கையில் சப்தத்தை ஏற்றி இறக்கி வைத்துக் கொள்வது போல, ஒரு விருப்ப ஓவியத்தை வரையும் போது நமது இஷ்டப்படி கோடுகளை நீட்டி மடக்கி நகர்வது போல, யாருமற்ற சாலையில் அதிகாலையில் வாகனத்தில் ராஜாசாரின் துணையோடு புரண்டு படுத்து எழும் அதிகாலையை எதிர் கொள்வது போல, உணர்வோடு கால் உதைத்து எழும் நினைவுகளின் முதுகு தட்டி ஒரு புரவியில் பயணிக்கும் சுகத்தோடு கனவுகளை நாம் முடுக்கி விட்டுக் கொள்ள முடியும்.

எப்போதும் நிஜம் கொடுமையானது. அது பல கோரங்களை உள்ளுக்குள் மறைத்துக் கொண்டு வெளியே அஷ்ட கோணலாய் நடித்துக் கொண்டிருப்பது. சரிகளுக்குள் தவறுகளும், தவறுகளுக்குள் சரிகளும் என்று எப்போதும் ஒரு புதிர் விளையாட்டைப் போல நிஜம் நம்மை ஏற்றி, இறக்கி நகர்கிறது ஆனால் கனவுகள் எப்போதுமே வரையறை செய்யப்படாத, யாரென்றே அறிந்திராத ஒரு கற்பனைக் காதலியை ஒத்த சுகத்தைக் கொடுக்கக் கூடியது. அது என்ன வரையறுக்கப் படாத காதலி என்று கேட்கிறீர்களா? காதல் என்பது கட்டுகளற்றது என்று உணர்ந்த பின்பு காதலியை மட்டும் ஏதோ ஒரு உடலுக்குள் சூழலுக்குள் அகப்பட்ட ஒரு பெண்ணாய் தேடிக்கொள்வது அபத்தம்தானே..? காதல் புலனறிவுக்கு அப்பாற்பட்டது.....அது எல்லைகளற்ற பெருவெளி.

வரலாற்றின் ஏடுகளைப் புரட்டிப் பாருங்கள் ஒப்பற்ற கவிதைகளை எழுதியவர்கள் எல்லாம் ஏதோ ஒரு காதலியை தன் முன் வைத்துக் கொண்டு எழுதி இருந்திருக்க மாட்டார்கள். நித்ய கன்னியாய் கண்ணம்மாவை எங்கேனும் கண்டேன் என்று ஒருபொழுதும் பாரதி நம்மிடம் பகிர்ந்திருக்க மாட்டான். கண்ணம்மா அவனின் கனவுக் காதலி. அவள் பாரதியின் ஏகாந்தக் கனவுகளுக்கு எப்போதும் துணையாயிருக்கும் லெளகீக கட்டுக்கள் அற்ற ஒரு முழுமை. பாரதி இமை மூடினால் கண்ணம்மா அவனுள் உதயமாவாள். அவனின் எல்லா செயல்களுக்கும் அவனுக்கு துணை இருந்தது ரத்தமும் சதையுமான மனிதர்கள் அல்ல...

அவன் கற்பனைக் கடவுள் அவனுக்குப் படைத்தளித்துக் கொடுத்த கண்ணம்மாதான் பாரதியோடு எப்போதும் இருந்தாள். பாரதி சோகமாய் இருந்த போதெல்லாம்  அவன் தலை தடவி அவள்தான் ஆறுதல் சொல்வாள். அவன் எழுதிய எல்லா கவிதை வரிகளையும் முதலில் வாசித்து பாரதிக்கு சொல்வதும் அவள்தான்.... உலகமே நிராகரித்தாலும் கண்ணம்மா பாரதியின் கை பிடித்து கொண்டு கம்பீரமாகச் சுற்றித் திரிவாள். அவன் காக்கை குருவி எங்கள் ஜாதி என்று எழுதினாலும் சரி,  மானங்கெட்ட மாயையே நீ மாயாயோ..? என்று மாயையைப் பழித்தாலும் சரி..., அச்சமில்லை அச்சமில்லை என்று வீரமுழக்கமிட்டாலும் சரி...

கடைசியில் இதுவன்றோ தலைமை இன்பம் ஆதலால் காதல் செய்வீர் என்று அவனை அறைகூவல் விடுக்க அவள்தான் காரணமாவாள்.

காதலிகளை பெரும்பாலும் படைப்பாளிகள் தங்களின் கற்பனையில் இருந்து ஜனிப்பித்துக் கொண்டார்கள். எதார்த்தத்தில் அவர்களின் எதிர்ப்பார்ப்புகளை அவர்கள் விரும்பும் ஒரு ஆணிடம் இருந்தோ, பெண்ணிடம் இருந்தோ அவர்களால் பெற முடிவதில்லை. மனித மனங்கள் மிகவும் குழப்பமனாது அது எப்போதுமே சிக்கலை கருத்தரித்துக் கொண்டு அமைதியை பிரசவிக்க போராடிக் கொண்டிருக்கும். ஒரு பெண்ணையோ அல்லது ஆணையோ நிஜத்தில் காதலிக்கத் தொடங்கும் போதே அங்கே பல்வேறுபபட்ட சூழல்களுக்கு ஒரு படைப்பாளி தன்னை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. விரும்பினால் பொறியைத் தட்டி மின்விசிறியை ஓடவிடவும் வேண்டாமென்றால் அதை நிறுத்திக் கொள்ளவும் ஒரு படைப்பாளி விரும்புவதே இல்லை...

அவன் தோட்டத்தில் எப்போதுமே பூக்கள் பூத்துக் குலுங்கும், நின்று விடாத தென்றல் காற்று பட்டு தலையாட்டிக் கொண்டிருக்கும் மரங்களில் பட்சிகளின் ஒலி இடைவிடாமல் கேட்டுக் கொண்டே இருக்கும்....நட்சத்திரங்கள் நிரம்பிக் கிடக்கும் வசீகர இரவுகளின் பேரமைதியில் அவனுக்கான தாலாட்டை எப்போதும் இந்த பிரபஞ்சம் இசைத்துக் கொண்டிருக்க...அவன் விரும்பிய ஓவியங்களை எல்லாம் இயற்கை பகல் முழுதும்  அவனுக்கு காட்சிகளாக்கி வைத்திருக்கும்.

நிஜம் கட்டுப்பாடுகள் கொண்டது. கற்பனைகள்...எல்லைகளற்றது.

நிஜத்தில் வாழ்ந்து கொண்டே கற்பனைகளில் சிறகடிக்கும் மனோநிலை கொண்டவனுக்கு எதற்கு புறத்தில் ஒரு காதலி? ஏதோ ஒரு நல்ல புத்தகம், திரைப்படம், சூழல் அல்லது நல்ல ஒரு இசை என்று சுற்றிச் சுற்றி அவனை மகிழ்ச்சியாக வைத்திருக்க ஓராயிரம் விசயங்கள் இருக்கும் போது எல்லாவற்றையும் தன் கற்பனைக் காதலியோடு கை கோர்த்தபடியே அவனால் லயித்து விட முடியாதா என்ன....?

ஒரு பெருமழைக்குப் பின்னான
நனைந்து கிடக்கும் நிலமாயிருக்கும்
என் கற்பனைகளில் சம்மணமிட்டு
அமர்ந்திருக்கும் பெண்ணொருத்தி
என் வார்த்தைகளைக் கொண்டு
எப்போதும் எழுதிக் கொள்கிறாள்
அவளுக்கான கவிதை வரிகளை...

பாரதிக்குள் விழுந்து கண்ணம்மாவிடம் சரணடைந்து மீளமுடியாமல் போனதற்கு பரிகாரமாய் இந்த கட்டுரையை எனக்குள் இருக்கும் கண்ணம்மாவிற்கு சமர்ப்பித்துதான் ஆகவேண்டும். நீங்களும் பாரதியைக் கேட்டு மீள முடியாமல் போகக் கடவீர்களாக;



தேவா சுப்பையா...



வருத்தப்படாத வாலிபர் சங்கம்...!

$
0
0

சிவகார்த்திகேயன் மாதிரி நடிகர்கள் வேற ஒரு தளத்துக்கு தமிழ் சினிமாவ கொண்டு சேர்க்கப் போறது என்னமோ கண்டிப்பா நிஜம். காம்பியரிங் செய்யும் போது சின்னத்திரையவே கலக்கு கலக்குன்னு கலக்கிட்டு இருந்த புயல் பெரிய திரைய சும்மா விடுமா என்ன..?! அதே வேகம் அதே எனர்ஜியோட அவர் அடிச்சிருக்க அடுத்த சிக்ஸர்தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். எந்த சத்தமும் இல்லாம எது தனக்கு வருமோ அதை வச்சு ஆரம்ப காட்சியில இருந்து படம் முடியுறவரைக்கும் பட்டைய கிளப்பி இருக்கார். தமிழ் சினிமாவுல இது வரை மையப்படுத்தி வச்சிருந்த அந்த மாஸ் ஹிரோ பில்டப் இனிமே ஒண்ணும் வொர்க் ஆகாது  போல.

எம்.ஜி.ஆரோட காலத்துல உச்ச கட்டத்துக்கு போன இந்த நடிகன கடவுளா பாக்குற மரபு, அந்த மாயபிம்பம் ரஜினி கமலுக்கு அப்புறமா உடைஞ்சு சரிஞ்சு விழ ஆரம்பிச்சு ரொம்ப காலமாச்சு. கைய சுண்டிக்கிட்டு பஞ்ச் டயலாக் பேசுற பில்டப்ஸ் எல்லாம் இனிமே வியாபாரம் ஆகாது. திரையப் பாத்து தலைவா அப்டீன்னு தமிழ் ரசிகன் தொண்ட வலிக்க கத்திக் கத்தி கொழு மோர் காச்சி குடிச்சதுதான் மிச்சம். இன்னும் சொல்லப் போனா தமிழ்நாட்ல அரசியல்வாதிகள்ன்ற பேர்ல மகாராஜாக்களும் மகாராணிகளும் அரியணை ஏற தமிழ் ரசிகர்களோட வரைமுறை இல்லாத சினிமா மோகம்தான் காரணம்னு அடிச்சு கூட சொல்லலாம். திரையில ஏழைங்கள இழுத்து வச்சு கொஞ்சுன எம்.ஜி.ஆர் நிஜத்துலயும் அப்டியே இருந்து பாட்டாளி வர்க்கத்தை காப்பாத்திடுவாருன்னு ஒவ்வொரு ரசிகனும் நம்பி தொண்டனா மாறின இடம் தமிழகத்துக்கு ப்ளஸ்ஸா இல்லை மைனஸ்ஸான்னு எனக்குச் சொல்லத் தெரியல....

ஓப்பனா சொல்லப்போனா அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு மிகப்பெரிய புரட்சி ஒன்றும் தமிழகத்தில் நடந்துடல!  மூணு ரூபாய்க்கு திட்டத்தை அறிவிச்சுட்டு 2 ரூபாயை பாக்கெட்ல போட்டுக்கிட்ட ஆளுங்கதான் இங்க அதிகம். எம்.ஜி.ஆரின் திரையும் நிஜமும் ஓரளவிற்கு ஒன்றாய் இருந்துச்சு. எம்.ஜி.ஆரை பாத்து அதே மாதிரி அரசியலுக்கு வந்து மக்கள் ஆதரவைப் பெறலாம்னு நினைச்ச சிவாஜிய தமிழக மக்கள் ஏத்துக்கல...ஆனா எம்.ஜி.ஆர் ஃபார்முலாவ  நேத்திக்கு வந்த விஜய் வரைக்கும் பின்பற்ற நினைச்சு அப்போ அப்போ கை கால்ல கட்டு போட்டுக்கிட்டு இப்போ மூக்கு முகறை எல்லாம் பேந்து போய் தலைவாக்கள் கொடுத்த அனுபவத்துல சுருண்டு கிடக்குறாங்க.

ரஜினிதான் இதுல உஷாரா எஸ்கேப் ஆன ஆளு. அவர் இந்த தலைவர் மாயையில இருந்து வெளியில வர அவருக்கு அவரோட ஆன்மீகம் கடுமையாக உதவியது. பற்று இருந்திருந்தால் இந்நேரம் தேரை இழுத்து தெருவுல விட்டு இருந்திருப்பாய்ங்க.. நிம்மதியா அவர் இருந்திருக்க முடியாது. ரஜினிக்கு இருந்த சினிமா மாஸ் சினிமாவுக்குன்னு அவர் உணர்ந்து விலகினார். ரஜினிக்குப் பிறகு பஞ்ச் டயலாக்ஸ், அப்புறம் திரையில தலைவன தேடுற ஒரு மனோபாவம் உடைஞ்சு விழத்தான் ஆரம்பிச்சுது. மக்கள் மனம் மாறிக் கொண்டிருந்த போது தப்பித்த ஒரு நடிகர் ரஜினி, வகையாய் மாட்டிக் கொண்டவர் விஜயகாந்த். விஜய்காந்த் இன்னிக்கு எதிர்கட்சி வரிசையில் உட்கார்ந்து இருப்பதற்கு காரணம் அம்மாதான் அப்டீன்றது நேத்து பொறந்த கொழந்தைக்கு கூட தெளிவா தெரியும். ஆட்சிய பிடிக்கிற அளவுக்கு அவரோட சினிமா இமேஜ் கண்டிப்பா அவருக்கு உதவாது. ஏதாவது அதிசயம் நடந்தாதான் உண்டு. தொழில் நுட்ப வளர்ச்சி இப்போ அசுரத்தனமா இருக்கு...

பட்டிகாட்ல குடிசையில இருக்க ஏழை ஜனங்களுக்கு மத்தியில நாட்டு நடப்பு எப்டியோ போய் சேந்துடுது. நியூஸ் பேப்பர் பாத்து, ரேடியோல நியூஸ் கேட்டு, டிவில நியூஸ் பாத்து அரசியல் கட்சியோட மீட்டிங் போய் உட்கார்ந்து, அரசியல் நிலவரம் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமே இப்போ இல்லாமப் போச்சு. எல்லா மொபைல்லயும் கேமரா இருக்கு. செய்தி பரிமாற்றம் ரொம்ப வேகமா நடந்துகிட்டு இருக்கறதாலதான்....இணையத்தை இன்னிக்கு எல்லா அரசியல் கட்சிகளும் சூழ்ந்துகிட்டு இங்கே அதிகாரப்பூர்வமா நியமிக்கப்பட்டிருக்க தங்களின் பரப்புரையாளர்கள வச்சுக்கிட்டு....ரொம்ப வேகமா தொடர்ச்சியா தங்களோட கட்சிகளுக்கு பரப்புரைகள் செஞ்சுட்டு இருக்காங்க..!

என்னதான் கூவி கூவி விளம்பரம் செஞ்சாலும் தலைவா புட்டுக்கிட்ட மாதிரி நிறைய அரசியல் கட்சிகள மக்கள் தூக்கி எறியப் போறாங்க. பழைய பருப்பு இனி வேகவே வேகாது. வீட்டுக்கு ஒரு பய 17 வயசு தாண்டின இளைஞனா இருக்கான், அவன் கையில கணிணி இருக்கு. அவனை யாராலும் வசியம் செய்ய முடியாது. க்வாட்டருக்கும் பிரியாணிக்கும் கட்சியில சேந்தவைங்களுக்கும், கூட்டங்களுக்குப் போயி வாழ்க  ஒழிக கோஷம் போட்டவனுக்கும் இப்போ வயசாயிப் போயிடுச்சு ... இது இளைஞர்களின் காலம்.

அதனலாதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மாதிரி படங்கள் அட்டகாசமா ஓடுது. சிவகார்த்திகேயன் மாதிரி நம்ம பக்கத்து வீட்டுப் பையன் மாதிரி பசங்க ஹீரோவா நடிக்க முடியுது.  ஆபத்பாண்டவன், அனாதை ரட்சகன் மாதிரியான ஹீரோவை மையமா வச்சு வந்த படங்கள பாத்து, பாத்து ரொம்பவே போரடிச்சுப் போன தமிழ் சமூகத்துக்கு இந்த மாதிரி படங்கள் ரொம்ப சிம்பிளா ரெண்டு ரோஸ்ட், சாம்பார், ஒரு காரச் சட்னி, கொத்தமல்லி சட்னி, தேங்காய் சட்னி வச்சு சாப்டுட்டு ரொம்ப ஹெவியா இல்லாத நிதானமான வயித்தோட எழுந்து வரமுடியுது.  

ஹீரோக்கள் காமெடின்ற பேர்ல பண்ற அட்ராசிட்டிய எல்லாம் ஏப்பம் விட்டு முழுங்கிட்டு  இயல்பான தன்னோட நகைச்சுவை உணர்வுகள் ததும்பிய ஹீரோ தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே புதுசு. சீன் பை சீன்  சூரியோட சேர்ந்துகிட்டு சிவகார்த்திகேயன் அடிக்கிற லூட்டி ரொம்பவே சூப்பர். இந்த மாதிரியான படங்கள்ல நடிச்சு கொண்டு போற தில்லு சமகாலத்துல சிவகார்திகேயன விட்டா ரேடியோ மிர்ச்சி சிவாவுக்கும் வாகை சூடவா சற்குணத்துக்கும் இருக்கும்னு நான் நினைக்கிறேன்.

இந்தப்படத்துல ஒரு பஞ்சாயத்து சீன் வரும். ஊர்ல திருவிழாவுக்கு திண்டுக்கல் ரீட்டாவா வச்சு ஆடல், பாடல் நடத்த ஊர்பெருசுகளான சத்யராஜ் & கூட்டணி கூட சிவகார்திகேயன் & டீம் மோதுற இடம்.....நிஜ சீரியசான பஞ்சாயத்து மாதிரியே ட்ராவல் ஆகி பட்டைய கிளப்புற காமெடி சீனா மாறியிருக்கும். சத்யராஜ் ரொம்ப சீரியசான வில்லனா இருப்பாரோன்னு நாம நினைச்சுக்கிட்டு இருக்கும் போது கதையோட போக்குல அந்த கேரக்டரையும் இயல்பா காமிச்சு இருக்க இயக்குனரை கண்டிப்பா பாராட்டியே ஆகணும். 

ரகுமானோட இசை உலகதரத்தை நோக்கி பயணிச்சு ரொம்ப காலமாயிடுச்சு, இளையராஜா சார் இசையமைக்க சரியான கதையம்சம் கொண்ட படங்கள் கிடைக்கிறது இல்லை. இந்த கேப்ல இமான் கும்கி மாதிரி படங்களுக்கு மண்ணின் மணத்தோட இசையமைச்சு பட்டி தொட்டி எல்லாம் பாடல்களைக் கொண்டு போய் சேர்த்தார். இந்த படத்துலயும்...செம குத்துப் பாட்டுக்கு சிவகார்த்திகேயனையும் பாடவச்சு இருக்கார். படம் பாக்குறவங்கள எழுந்து குத்தாட்டம் போட வைக்கிறதுக்கு இந்தப்பாட்டுனா... ஊதாக் கலரு ரிப்பன்னு இன்னொரு பாட்டு மனசுக்குள்ள தாளம் போட வைக்குது. இந்த மாதிரி மினி பட்ஜெட் படங்களோட சக்கரவர்த்தியா இமான் வளர்ந்துட்டு இருக்கார் என்பது உண்மை. படம் முழுசுமே சிவகார்த்திகேயனும் சூரியும் பூந்து விளையாண்டு இருப்பாங்க.. " சர்க்கஸ்னு சொன்னா சிங்கம் இருக்கணும்......சபைன்னு சொன்னா சங்கம் இருக்கணும் " போன்ற வசனங்கள்.. பஞ்ச் டயலாக் கதாநாயகர்களை நன்றாகே பஞ்சர் பார்த்திருக்கின்றன.

ஒரு நடிகனுக்காக படம் போய் பாத்து அந்த படம் நல்லா இருந்த காலங்கள் எல்லாம் மலையேறிப் போச்சு. மூணு மணி நேரம் அந்த திரைப்படம் நமக்கு ஏதோ கட்சிக் கூட்டதுக்கு போனது மாதிரியான பீலைக் கொடுக்காம, ஏதோ தேவன் எழுந்தருளி இருக்கிறார் பாவிகளே அவரைச் சந்தித்து உங்கள் பாவங்களை தீர்த்துக் கொள்ளுங்கள் அப்டீன்ற ரேஞ்சுக்கு விளம்பரம் செஞ்சுக்காத இயல்பான திரைப்படங்கள்தான் இனிமேல் தமிழ்நாட்டில் சக்கைப் போடு போடப் போகிறது....! நடிகனை நடிகனாய் பார்த்து சினிமாவை தியேட்டரோடு விட்டு விட்டு வரும் ரசிகர்ளுக்கு மத்தியில் சிவகார்த்திகேயன்கள் வருங்காலத்தில் சூப்பர் ஸ்டார்களாய் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...!

சினிமா தியேட்டரும் தேர்தலில் வாக்களிக்கும் வாக்குச்சாவடியும் வெவ்வேறு என்று என் தமிழ் மக்கள் விளங்கி ரொம்ப நாளாச்சு....பாஸ்...!!!!

வாழ்த்துகள் சிவகார்த்திகேயன்....!!!!!



தேவா சுப்பையா....






தெய்வீக ராகம்..தெவிட்டாத பாடல் - 1

$
0
0

இந்த தடவை கொடைக்கானல்  வருவதற்கு ஐந்து வருடம் ஆகி விட்டது. ஐந்து வருடத்திற்குள் ஏதேதோ நிகழ்வுகள் நிகழ்ந்தேறி விட்டன..! பெருமூச்சு விட்டபடி மெதுவாய் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன். " தாஜ்மகாலின் காதிலே ராம காதை ஓதுவோம்..." என்று ராஜா சார் காருக்குள் ஆசிர்வதித்துக் கொண்டிருந்தார். துரத்தும் வாழ்க்கையை தொலைவில் நிற்க வைத்து விட்டு, சமப்பட்ட  பூமியை விட்டு மலையேறும் அனுபவம் அலாதியானது. சூட்டில் எப்போதும் சுருங்கிக் கிடக்கும் புத்தி மெல்ல மெல்ல மலர்ச்சியடைய புலன்கள் எல்லாம் புதுக்கவிதை வாசிக்கத் தொடங்கி விடுகின்றன. காட்டுக்குள் உயர்ந்த மரங்கள் பச்சை பசேலென்று இருப்பதைப் பார்க்கும் போதே உச்சத்தை எட்டிப் பிடிப்பதற்கு முன்பான காமத்தை ஒத்த உணர்வொன்று புத்திக்குள் கால் உதைத்து தக திமி...தா....தக... தகதமிதா.. தகதிமி தா...என்று ஜதி சொல்ல ஆரம்பித்தது.

உடல் தாங்கும் குளிர் அழகானது. அதாவது அச்சச்சோ குளிர் அடிக்கிறதே என்று சொல்லி கத்திக் கொண்டே தாங்கிக் கொள்ளும் குளிர். டேய்...வலிக்குதுடா என்று சொல்லிக் கொண்டே உதட்டைக் கவ்வும் காதலனை சேர்த்து அணைத்துக் கொள்ளும் காதலி போல இந்தக் குளிரையும் நாம் சிணுங்கி கொண்டே அனுபவிக்கவேண்டும். கொடைக்கானல் 6  கிலோமீட்டர் என்ற அறிவுப்பு பலகை தாண்டி ஒரு கிலோமீட்டரில் நான் வண்டியை காரை ஓரம் கட்டி நிறுத்தினேன். புகைக்க வேண்டும் போன்றிருந்தது. ப்ரண்ட் பானட் மீது வந்தமர்ந்து சிகரட்டை ஆழமாய் உள்ளே இழுத்தேன். நிக்கோடின் துகள்கள் ஆணையிடப்பட்ட இராணுவ வீரர்களாய் இரத்தத்தில் கலந்து புத்திக்குள் சென்று....புத்தியின் பரபரப்பை கட்டுப்படுத்த நெஞ்சுக்குள் ஒரு இதம் பரவியது. 

எவ்வளவு அழகான பூமி இது. எல்லா சுகத்தையும் வஞ்சகமில்லாமல் அது இறைத்து வைத்திருக்கையில் ஏனோ எல்லோருக்கும் எப்போதுமே ஒரு பரபரப்பு இருந்து கொண்டே இருக்கிறது. மேகங்கள் அடர்த்தியாய் எங்கோ நகர்ந்து கொண்டிருந்தன. என்ன இலக்கு இருக்கிறது அவற்றுக்கு...மிதப்பதும், நகர்தலும், கனத்தலும் பின் மழையென பொழிதலும் அன்றி வேறென்ன தேவை இருக்கிறது அதற்கு. மழை வருவதற்கு எல்லா சாத்தியக்கூறுகளும் இருந்தது. நான் செல்போனை எடுத்து பிரதீப்பை தொடர்பு கொண்டேன். என்னைப் பற்றி நன்றாகவே அறிந்த நண்பன் அவன். எல்லோரும் நண்பனைப் பார்க்க வருவதாய் சொல்லி விட்டு கொடைக்கானலைச் சுற்றி விட்டு அவனிடம் ஹாய்...பாய் சொல்லி விட்டு சென்று விடுவார்களாம். நான் மட்டும் கொடைக்கானலைப் பார்க்க வருகையில் அவனை பார்த்து செல்வேனாம்.

ஒவ்வொரு முறையும் என் தனிமைக்கு அவன் கேரண்டி செய்து கொடுப்பான். இந்த முறையும் கூட...ஆள் அரவமற்ற ஒரு தனியான காட்டேஜில் என்னை தனியே விட்டுச் செல்லவேண்டும் என்ற நிபந்தனையை எப்போதும் போல பூர்த்தி செய்யப் போகிறான். என் பயணம் முடிவதற்கு முன்பான கடைசி இரண்டு நாட்கள் அவனோடு தான் சுற்றிக் கொண்டிருப்பேன் என்பன போன்ற பர்சனல் விசயங்களை எல்லாம் நான் யாரிடமும் சொல்ல விரும்புவதில்லை. நிகழ்வுகளை பகிர்பவர்களை எனக்குப் பிடிக்காது. அது கொடுக்கும் உணர்வுகளைப் பகிர்பவர்களையே நான் எப்போதும் ரசிப்பேன்.

" வானில் தோன்றும் கோலம் அது யார் போட்டதோ...'" 

என்று சொட்ட சொட்ட நனைத்த இசையோடு காரை நிறுத்தி விட்டு...பிரதீப்பை நெஞ்சோடு அணைத்து பார்மல் பரிமாறல்கள் எல்லாம் முடித்து இதோ ஒரு மணி நேரம் ஆகி விட்டது. பெரிய சைஸ் வீடுதான் இது. ஒரு பெரிய வரவேற்பரை அதன் மையத்தில் ஆட்கள் வந்து அமர்ந்தால் உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளும் மூன்று சோஃபாக்கள் எல் சேப்பில், நடு சோபாவுக்கு எதிரே 39 இன்ச்சில் உலகத்தை உன் முன் கொண்டு வரவா என்று இளித்தபடியே ஒரு எமன். வரவேற்பரையில் இருந்து நேரே சென்று இடது பக்கம் திரும்பினால் மாஸ்டர் பெட்ரூம். கிங் சைஸ் பெட் பெரியதா அல்லது கியூன் சைஸ் பெட் பெரியதா என்ற சந்தேகம் எனக்கு எப்போதும் வரும் அப்படியே இன்றும் தோன்றிய கேள்வியை ஒடித்துப் போட்டேன். மெத்தை எப்போதும்  முக்கியமில்லை மெத்தையில் படுத்தால் உறங்க முடியுமா என்பதுதான் முக்கியம். பெட்ரூமை அடுத்து ஒரு க்யூட் கிச்சன், கிச்சனின் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து கண்ணடிக்கும் குட்டிக் குட்டி மரங்கள். கிச்சன் வழியே பின்புறக்கதவைத் திறந்து இண்டு நிமிடம் நடந்தால்...ஹோ...என்று விரிந்து  பரந்து கிடக்கும் பசுமைப் பள்ளத்தாக்கு....

கால் நீட்டி மலை முகட்டின் ஓரமாய் அமர்ந்தேன். மதியம் மூன்று மணி சூரியனை சட்டை செய்யாமல் மேகங்கள்  என்னை இழுத்து அணைத்து உச்சி நுகர ஆரம்பித்தன. கைகளைக் விரித்து மெல்ல புற்களின் மீது படுத்தேன்....என் தலைக்கு நேர் உச்சியில் பரந்து விரிந்த ஆகாயம்....கீழே பரந்து விரிந்த புல் வெளி....ஆழமாய் மூச்சினை இழுத்து விட்டேன்....புத்திக்குள் சிரமப்பட்டுக் கொண்டிருந்த என் வார்த்தைப் பறவைகள் மெல்ல மெல்ல என் நினைவு விட்டு இறங்கித் தத்தி தத்தி என்னைச் சுற்றி அமர்ந்து கொண்டன....

கனவுகள் நிரம்பிக் கிடக்கும்
இந்த பெருவெளிக்குள் 
விழுந்து  நான்
கரைந்தே போய்விட முடியாதா...?

புற்களிள் நடுவில் நான் 
ஒடுங்கி ஒளிந்து
சிறுவண்டுகளோடு ஓடிப் பிடித்து
விளையாட சபித்துப் போங்களேன் யாரேனும்...?

என்னைக் கடந்து செல்லும் 
மேகத்திலேறி இந்தப் பள்ளத்தாக்கின்
நடுவே சென்று....ஆழப்பள்ளத்தில்
மெல்லவே விழுந்து பின்
சட்டென மேகத்தின் நுனி பற்றி
மேலேறி வர யுத்திகளேதேனும்
சொல்லித்தான் கொடுங்களேன் எனக்கு...

தனிமை பெரும்பாலும் யாராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. மனிதர்களுக்கு எப்போதும் யாருடனாவது பேசிக் கொண்டிருக்கவேண்டும். ஒருநாளும் காற்றின் கனபரிமானம் தடவி நீ என்னதான் விரும்புவாய் என்று கேட்பதற்கான அவகாசம் யாருக்கும் இருப்பதில்லை. பெருமரத்தின் கிளைகளிலிருக்கும் குருவிகளுக்கென்று கனவுகள் ஏதேனும் இருக்குமா என்று யாரும் யோசித்துப் பார்ப்பதில்லை...சிறு செடியிலிருந்து எட்டிப்பார்த்து சிரிக்கும் குட்டிப்பூவை விழிகளால் வாங்கிக் கொண்டு புன்னகைத்து அவற்றின் வரவை வாழ்த்த யாருக்கும் இங்கே ஆசைகள் இல்லை....

கிடந்த நேரம் எவ்வளவு என்று யோசிக்காமல் எழ வேண்டும் என்ற எண்ணம் வரும் வரையில் கிடந்தேன். மெல்ல நடந்து மீண்டும் வீடு தொட்டேன். ப்ரிஜில் ஏற்கெனவே பிரதீப் வாங்கி நிரப்பி இருந்தான். ஏதேதோ காய்களை வெட்டினேன்....மஞ்சள் பொடி மிளாகாய்ப் பொடி உப்பு, எல்லாம் போட்டு கொதிக்க வைத்து, பின் சாதம் வடித்து என் உணவினை நான் செய்து முடித்த போது மெல்ல மணி பார்த்தேன் இரவு எட்டு ஆக இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. மூன்று ஆஃபாயில்கள் நிரம்பிய தட்டோடு வரவேற்பறை சோபா முன்பு இருந்த டீப்பாயில் அதை வைத்து விட்டு....சிப்ஸ் பாக்கெட்டை உடைப்பதற்கு முன்பு தலை திருகி ராஜதிரவத்தை என் கோப்பையில் ஊற்றினேன்...

நான் சாதாரணமாக நிறைய பேசுவேன். மது அருந்திவிட்டால் எனக்குப் பேச்சு வராது. அது ஏதோ ஒரு அனுபவத்தைக் கொடுக்க அது என்ன என்று கவனமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விடுவேன். சமூகம் தவறென்று சொல்லும் ஒரு பழக்கம். என்னைப் பொறுத்தவரையில் அது பழக்கமாகிப் போகாத ஒரு பழக்கம் என்பதால் எனக்கு மது அருந்துவது பற்றி மாற்றுக் கருத்துக்களே இல்லை. அளவுக்கு அதிகமாய் உண்டால்  உணவு கூட தவறுதான்.... ஆக்ச்ச்ச்சுவலி டூ மச் ஆஃப் எனிடிங் இஸ்ஸ்ஸ்ஸ்ஸ் குட் ஃபார்.....

என்று ஆங்கிலத்தில் சொல்லச் சொல்லி புத்தி நச்சரித்த போது மூன்றாவது ரவுண்ட் முடிந்திருந்தது. எப்போது உணவருந்தினேன் எப்போது உறங்கினேன் என்று தெரியாமல் நான் விழித்த போது என் படுக்கை அறையின் ஜன்னலை தட்டி என்னை எழுப்பிக் கொண்டிருந்தது மழை. காலை பதினொரு மணியாயிருந்தாலும் எனக்கு மட்டுமல்ல கொடைக்கானலுக்கே அன்று அது அதிகாலைதான்..இருள் இன்னும் போகவே இல்லை. மெல்ல ஜன்னலைத் திறந்து ஜன்னல் வழியே எட்டிப்பார்த்த செடியொன்றுக்கு குட்மார்னிங் சொன்னேன். செம்பருத்தி செடி அது. செம்பருத்தி செடியின் இலையின் இரண்டு பக்கவாட்டிலும் கூறாய் அடுக்கடுக்காய் இருக்கும். மழையில் நனைந்து சொட்டிக் கொண்டிருக்கும் அதன் சுகம் எப்படி இருக்கும்....என்று யோசித்தேன்....

ஒவ்வொரு துளியும் மேலே விழுகையில் சிலிர்த்து சிலிர்த்து....தன்னிலை மறந்து மழையை வாங்குகையில் மழை அங்கே கவிதையாகிறது, கனவாகிறது, காதலாகிறது, கணவனாகிறது, உயிர் கொடுக்கும் தகப்பனாகிறது. ஒரு மழை இந்த பூமி நனைத்து அத்தனை ஜீவன்களுக்கும் உயிராகிறது. கை நீட்டி தாழ்வாரத்தின் மழை நீரை வாங்கி விளையாடினேன். மழை லேசாக தூறிக் கொண்டிருந்த போது நடக்கலாம் என்று ஒரு எண்ணம் தோன்றியது. மணி எத்தனை இருக்கும் என்று பழக்கப்பட்ட நாயாய் மனம் கடிகாரம் பார்க்கச் சொன்னது. உண்மையில் சொல்லப் போனால் இதை, இதை இந்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்று துரத்தும் வாழ்க்கைக்கு கடிகாரம் அவசியம் தான். அதைத் தொலைக்கத்தானே இவ்வளவு தூரம் வந்தேன்...நேரம் பார்த்து என்ன செய்யப் போகிறோம்....

உறக்கம் போன உடன் எழலாம். பசிக்கும் போது உண்ணலாம். நடக்கத் தோன்றினால் நடக்கலாம்...வேடிக்கைப் பார்க்கத் தோன்றினால் பார்க்கலாம்....உள்ளுணர்வுதான் எப்போதும் நம்மை வழிநடத்த வேண்டும். அதுதான் இயல்பு. மனம் எப்போதும்  பசித்தவுடன் குரைக்கும் நாயைப் போல கற்பனை செய்ய ஏதுமில்லாவிட்டால் குரைக்கத் தொடங்குகிறது. எதார்த்த வாழ்க்கையில் அதற்கு மனிதர்கள் உணவிட்டுக் கொண்டே இருப்பதால் அது தின்று கொளுத்து விட்டு மனிதர்களை ஆட்டுவிக்கிறது.

என் ஜிம்மி பெரும்பாலும் பட்டினியில் சுருண்டுதான் கிடக்குமென்றாலும், மனிதர் சூழ் ஒரு சமூக வாழ்வில் என்னைச் சுற்றி இருக்கும் யாரோ  அல்லது ஒரு சூழலோ,அல்லது மறந்து போய் நானோ அதற்கு அவ்வப்போது பிஸ்கெட்களைப் போட  அது குலைப்பதும் பின் நான் அதைப் பட்டினி போடுவதும் என்று தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கும். இன்று மனம் பட்டினி கிடந்து கிடந்து மறைந்தே போய்விட உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதைக் கேட்டு நகர்ந்து கொண்டிருந்தேன். எழுந்து ப்ரஸ் அப் ஆகி.. பிரிட்ஜைத் திறந்து பார்த்தேன். பழங்கள் வாங்கி வைத்திருந்த நண்பனை மனதார வாழ்த்திய படியே ஒரு ஆப்பிளை எடுத்துக் கடித்துக் கொண்டே கிளம்பினேன். தனியான வீடு அது. சுற்றும் முற்றும் வேறு காட்டேஜ்களோ இல்லை வீடுகளோ  ஒன்றையும் பார்க்க முடியவில்லை. ஊரை விட்டு ஒதுங்கிய  இடம் அது. 

நடந்து கொண்டிருந்தேன். எனக்கு எதுவுமே தோன்றவில்லை...! அப்போதுதான் பெய்து முடித்திருந்த மழையை வாங்கிக் கொண்டு நாணியபடி ஈரமாய் இருந்த நிலத்தில் கிடந்த சருகுகள் எல்லாம் சப்தமின்றி கிடந்தன....! வாழ்க்கை முழுதும் தனிமையில் இருப்பவனுக்கு மரணம் ஒன்றும் பெரிய விசயம் கிடையாது. என்ன ஒன்று உயிர் இருக்கும் வரை உடல் இருக்கும்...உயிர் போனால் உடல் இருக்காது. உடல் இல்லாமல் அவன் பயணம் இன்னும் பயணம் தெளிவாய் இருக்கும். மனம் என்ற ஒரு மாய வஸ்து இல்லாமல் அங்கிங்கினாத படி பிரபஞ்சம் முழுவதிலும் நாம் ஒரு மல்லிகையின் வாசம் படர்வது போல படர்ந்து கிடக்கலாம்....

ஹலோ...எக்ஸ் க்யூஸ் மீ....ஹலோ சார்....

எனக்கு வெகு பக்கத்தில் மூச்சிறைக்க அழைத்த அந்தப் பெண்ணை திரும்பிப் பார்த்த நொடியில் ஸ்தம்பித்தேன்....!

யார் வரைந்து வைத்த ஓவியம் இது...
கால் முளைத்து நடந்து வருகிறது...?
கவிதையொன்று காற்றில்
ஒரு பட்டாம் பூச்சியென பறந்து வருகிறது...

என்று யோசித்த படியே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்


                                      ... பாடல் தொடரும் ....




தேவா சுப்பையா....




தெய்வீக ராகம்..தெவிட்டாத பாடல் - 2

$
0
0



இனி....

ஹலோ...எக்ஸ் க்யூஸ் மீ....ஹலோ சார்....

எனக்கு வெகு பக்கத்தில் மூச்சிறைக்க அழைத்த அந்தப் பெண்ணை திரும்பிப் பார்த்த நொடியில் ஸ்தம்பித்தேன்....!

யார் வரைந்து வைத்த ஓவியம் இது...
கால் முளைத்து நடந்து வருகிறது...?
கவிதையொன்று காற்றில்
ஒரு பட்டாம் பூச்சியென பறந்து வருகிறது...

என்று யோசித்த படியே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்

நான்.....பூர்ணா...பிரண்ட்ஸ் கூட வந்தேன் வழி மாறிட்டேன்....தனியா வந்தேனா கொஞ்சம் பயந்துட்டேன்...அதான் உங்களை டக்குனு கூப்ட்டேன்.....

மனம் மயக்கும் ஒரு இசையொன்று
புத்திக்குள் பரவி
எண்ணத்தை கிளர்ச்சியூட்டி
ஒரு ஏகாந்த உலக்குக்கு கூட்டிச் செல்லுமே...

அப்படியான உணர்வு நிலைக்கு பயணித்துக் கொண்டிருக்கையில்...ஹலோ...சார்....அவள் என் கனவு கலைத்தாள்...! சொல்லுங்க பூர்ணா...நோ..இஸ்யூஸ்...நான் உங்களை பக்கத்துல மெயின் ரோட்ல கொண்டு விடுறேன்.  நான் சும்மாதான் நடந்துட்டு இருக்கேன்....

தேங்க் யூ சார்...? என்ன தனியா வந்து இருக்கீங்களா இல்லை பேமிலி கூடயா...? இல்லை ப்ரண்ஸ் கூடயா... என் முகம் பார்த்து பேசினாள். எனக்கு  ஏனோ பேசவே பிடிக்கவில்லை. அந்த சூழலும் அவள் தலையில் வைத்திருந்த மல்லிகையின் வாசமும் என்னைத் தொந்தரவு செய்ய...எனக்குள் இருந்த உணர்வு நிலை மனமாக திடப்பட்டுக் கொண்டிருந்தது.

இல்ல நான் மட்டும்தான் தனியா வந்தேங்க...எனக்கு எனக்கு...இன்னும் கல்யாணம் ஆகலை...சொல்லிவிட்டு நீங்க உங்க பேமிலி கூட வந்தீங்களா...? ப்ரண்ட்ஸ் கூட வந்திருக்கிறேன் என்று அவள் சொன்னது தெரிந்திருந்தும்...வேண்டுமென்றே கேட்டேன்.  இல்லை சார் நாங்க ஸ்டே பண்ணி இருக்க ஸ்பின்ஸ்டர் ஹாஸ்ட்டல்ல இருந்து பிரண்ட்ஸ் கூட வந்து இருக்கேன். நான் சென்னை டி.சி. எஸ்...ல வொர்க் பண்றேன்..நேட்டிவ்....

அவளை பற்றி சொல்லி முடித்ததும் என்னுடைய தொழில் பற்றி கேட்டுக் கொண்டாள்.  ப்ராப்பர் ரோடு வந்தவுடன் தூரத்தில் அவளின் தோழிகள் வாகனத்தோடு நின்று கொண்டிருந்தார்கள்.

ஏன் சார் தனியா வந்தீங்க...? கண்களால் என்னை அளந்தவளை சார்னு ஏன் பூர்ணா கூப்டுறீங்க....முகில்னு கூப்பிடுங்க...

ஓ.. சாரி முகில்...தனியா எதுக்கு வந்தீங்க.. மறுபடி பூர்ணா கேள்வியைக் கேட்டு விட்டு கண்களால் ஆவலாய் பார்த்தாள்...

தனியா இருக்கணும்னு இப்டி அடிக்கடி வருவேன் பூர்ணா...என் முப்பதாறு வயது அவளின் இருபத்தேழுக்கு புரியுமா என்று நான் யோசிக்கவில்லை...! ஓ... தனிமை விரும்பியா நீங்க நான் கூடத்தான் என்று அவள் சொல்லி முடித்ததை நான் கேலியாக பார்த்தேன்.....அவளுக்கு பின்னால் வெகு தூரத்தில் நின்று கொண்டிருந்த பட்டாளத்தைப் பார்த்தபடி.....

நோ..நோ..இப்போ வேற வழி இல்ல அதான் எல்லோர் கூடயும் வந்தேன்.. அதோட இல்லாம கல்யாணம் ஆகாத பொண்ணு தனியா வர்ற மாதிரியா இருக்கு முகில் நம்ம நாடு...? சமூகம் பற்றி பேசினாள்....

ஹ்ம்ம்ம் நிறைய பேசணும் உங்க கிட்ட அப்டீன்னு தோணுது...பட் டக்குன்னு ஒரு ஆம்பளைய எப்டி நம்புறதுன்னு ஒரு பொதுபுத்தி கேள்வி கேட்கவும் சொல்லுது....? 


ஏன் தனியா என் கூட அந்த மண் ரோட்ல வரும் போது அந்த பயம் வரலையாக்கும் உங்களுக்கு...?  பயம் மட்டும் இல்லை பூர்ணா இந்த உலகத்துல மனித உறவுகளே மனித வசதிதான். பிடிச்ச ஆணா இருந்தாலோ இல்லை பெண்ணா இருந்தாலோ எல்லாமே ஓ.கே தானே....? பிடிக்காத போது எல்லாமே தப்புதான்..! என்னைப் பொறுத்த வரைக்கும் உறவுகள் எல்லாமே..கொஞ்சம் இப்டி அப்டின்னு இருக்கதாலதான் கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணவே இல்லை...

அட...முகில்..ரொம்ப அழகா பேசுறீங்க...

வழக்கமாய் பெண்களுக்கு ஒரு ஆணைப் பிடிக்க ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் அவளிடம் தென்பட்டன. நானும் உங்களை மாதிரிதான் முகில்...எனக்கும் இப்டி, அப்டி நிறைய எதிர்ப்பார்ப்புகள் இருக்கு... கட்டுக்குள் வாழுற வாழ்க்கை எனக்கும் பிடிக்காது. என்னை ஒரு பட்டாம் பூச்சியா சிறகடிச்சு பறக்க விட்டு ரசிக்கிற ஒரு இடியட்டை தேடித் தேடி இதுவரைக்கும் கிடைக்கவே இல்லை...

வீட்ல பொண்ணு பாக்குறேன்னு சொல்லிட்டு வந்துட்டுப் போற தடியன்கள் எல்லாம் ....வந்து காபி, டீய குடிச்சுட்டு...மூக்கு நல்லா இருக்கா..., மார்பு எடுப்பா பெருசா இருக்கா...இடுப்பு கைக்கு அடக்கமா இருக்கா,  பிருஷ்டம் பெருசா இருக்கா, மொத்தத்துல அழகான முகத்தோட வக்கனையா செக்ஸ் வச்சுக்க சரியான ஆளான்னு முதல்ல பாக்குறாங்க...

அப்புறம் எவ்ளோ பணம் தேரும், ஆளுங்க கூட்டம் எப்டின்னு கணக்குப் போட்டுப் பாத்துட்டு அப்புறமா பிடிக்குது பிடிக்கலேன்னு அவுங்க வீட்டு ஆளுங்கள விட்டு சொல்லச் சொல்லுவானுங்க...இதுதான் கலாச்சாரம்னு வெக்கம் இல்லாம சொல்ற சமூகம்தான் இங்க எல்லாருக்குமே பெருசு...

அதையும் தான்டி கல்யாணம் நடந்து அன்னிக்கு ராத்திரியே வேட்டியையும் சேலையும் அவுத்து எறிஞ்சுட்டு அது வரைக்கும் கட்டிக் காப்பாத்தி வச்சிருந்த காமத்தை தீத்துக்கிட்டுதான் இங்க எல்லோருடைய வாழ்க்கையும் ஆரம்பிக்குது...

3 மாசத்துக்கு முன்னாடி நிச்சயம் பண்ணி மூணு மாசம் போன் பேசி அப்புறம் கல்யாணம் பண்ணி...உடம்பை மையமா வச்சு இவுங்க எல்லோரும் காதலிக்க ஆரம்பிக்கிறாங்க...., போன் கூட சில பேர் பேசுறது கிடையாது அவுங்க எல்லாம் பொண்டாட்டிய ஸ்ட்ரெய்ட்டா பாக்குற இடம் பெட்ரூம்தான்....

ஆக்சுவலா எனக்கு இது எல்லாம் பிடிக்கல...! காமம்ங்கிறது திட்டம் போட்டு வரக்கூடாது, அது ஒரு பூ பூக்குற மாதிரி இயல்பா நிகழணும். கல்யாணம் பண்ணியாச்சு அதனால இன்னிக்கு நைட் அது வேணும் அப்டீன்றது என் அறிவுக்கு எட்டல....! வீட்ல கடைக்குட்டி நானு அப்பா ரிட்டையர்ட் ஆன தாசில்தார்...நாலு அக்காவுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு ஒரு அண்ணா ஒரு சிட்பண்ட் கம்பெனில குப்பைக் கொட்றான். நான் என் இஷ்டம் எப்டிவேணா இருந்துப்பேன் கொஞ்சம் பொறுங்கடான்னு சொல்லிட்டேன்...

அப்பா செல்லம் ஜாஸ்தி அதனால யாரும் ஒண்ணும் சொல்லமுடியாது....! பாக்கலாம் சார்....சாரி சாரி முகில்....

காதல் என்பது கொடுப்பதுமல்ல...
பெறுவதுமல்ல...
அது நிகழ்வது....

அப்டீன்னு படிச்சிருக்கேன் முகில்....! 

அவள் பேசி முடித்தவுடன் ..பெருமூச்சு விட்டேன்....ஓ. மை.. காட்...பூர்ணா யூ ஆர் சான்ஸ் லெஸ்....வைரமுத்து கவிதை எல்லாம் சொல்றீங்க...நீங்க புத்தகம் எல்லாம் படிப்பீங்களா....

என்ன கொடுமை சார் இது...ஏன் நாங்க படிக்க மாட்டோமா? ரொம்பத்தான்...நீங்க எப்டி...?

ரசனையுடன் நேசிப்பாய்
தொடங்கிய அந்த நாள்...
சரியாக நினைவிலில்லை....
அது முழுதாய் என்னை...
உள்வாங்கிக் கொண்ட..
அந்த கணத்தில் தான்...
என் உயிர் நகரும்...
ஓசையினை உணர்ந்தேன்.....

புத்தகத்துக்குள் ஊடுருவி...
என் விழிகள் உறவாடிய
பின் தான்...இமைகள்...
கவிழ்ந்து.....உறக்கம் சூழ்கிறது...!
அப்போதும் கூட...
என் நெஞ்சினில்..தலை சாய்த்து...
அது உறங்கும் அழகினை ...
கலைக்க விரும்பாமல்..
அணைத்துக் கொண்டே.....
கடத்தியிருக்கிறேன்..
என் அநேக இரவுகளை....

நான் சொல்லி முடித்ததும் கை தட்டிச் சிரித்தாள் பூர்ணா...! எக்ஸளண்ட் முகில்...நீங்க பெண்களை பற்றி என்ன நினைக்கிறீங்க....என்று அவள் கேட்க ஆரம்பித்த பொழுது...

" பூர்ணா கெட்டிங் லேட்.....ஹோட்டல் போகலாம் வா...." தூரத்திலிருந்து கேட்ட தோழிகள் கூட்டத்தைக் கடிந்து கொண்டே...அச்ச்சச்சோ நேரம் ஆச்சு முகில்....நாளைக்கு வேணா மீட் பண்ணலாமா.....

பூர்ணா அவசரமாய் கேட்டாள்....

நான் எங்கயும் சுத்திப்பார்க்க வரல பூர்ணா..ஜஸ்ட் டு ஸ்டே அலோன்....ஐ கேம்...,  சோ என் கூட வந்தா யூ  கேனாட் சீ மோர் ப்ளேசஸ்.....

அது ஒண்ணும் பிரச்சினை இல்லை முகில்...பார்க்கலாம்...நாளைக்கு காலையில  வர்றேன்... ஐ வில்  நாட் கோ வித் மை ப்ரண்ட்ஸ்...அங்க நான் உங்களை கூப்டப்ப பின்னால் இருந்த்துச்சே அதுதானே உங்க வீடு....நீங்க வீடு விட்டு வெளியில வரும் போதே நான் தூரத்துல பார்த்தேன்....

இப்போ கிளம்புறேன்......

கை அசைத்தபடியே ஓடியவளை பார்த்துக் கொண்டிருந்தேன் அவள் போகும் வரை...!


                                              ...பாடல் தொடரும்...




தேவா சுப்பையா....





தெய்வீக ராகம்..தெவிட்டாத பாடல் - 3

$
0
0


இதுவரை...



இனி...

அது ஒண்ணும் பிரச்சினை இல்லை முகில்...பார்க்கலாம்...நாளைக்கு காலையில  வர்றேன்... ஐ வில்  நாட் கோ வித் மை ப்ரண்ட்ஸ்...அங்க நான் உங்களை கூப்டப்ப பின்னால் இருந்த்துச்சே அதுதானே உங்க வீடு....நீங்க வீடு விட்டு வெளியில வரும் போதே நான் தூரத்துல பார்த்தேன்....

இப்போ கிளம்புறேன்......

கை அசைத்தபடியே ஓடியவளை பார்த்துக் கொண்டிருந்தேன் அவள் போகும் வரை...

பெண்கள் எப்போதும் ஒரு விசயத்தை முடிவு செய்ய ஆண்களைப் போல பல்வேறு தரப்பட்ட ஆலோசனைகளைக் கேட்பது கிடையாது. அவர்களுக்கு விசாரித்து அறிதல் என்னும் ஒரு விசயம் பற்றி அதிகம் தெரியவே தெரியாது. இயல்பாகவே பெண்களின் உள்ளுணர்வு பிரபஞ்சத்தின் ஆதி உணர்வோடு முடிச்சிட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு உடல் எடுக்கும் ஆன்மா பெண்ணாய் பிறக்கவேண்டும் எனில் பூர்வஜென்மத்தில் இருக்கும் பக்குவ நிலையைப் பொறுத்தே அந்த நிகழ்வு நிகழ முடியும்.

ஆன்மாவில் ஆண் பெண் கிடையாது ஆனால் ஒரு பெண்ணின் உடலுக்குள் ஆன்மா நுழைய வேண்டுமெனில் நிறைய சகிப்புத்தன்மைகள் கொண்ட பூர்வ ஜென்ம அனுபவங்கள் அதற்கு அவசியமாகிறது. இயல்பிலேயே பெண்கள் மனமற்ற நிலைக்கு எழுதில் செல்லக் கூடிய வகையில்தான் அவர்களின் உடற்கூறுகளும், அனுபவங்களும் அமைந்து போகின்றன. சரணாகதி என்ற வார்த்தை பெண்களின் இயல்பிலிருந்து உணர்ந்து சமைக்கப்பட்ட வார்த்தை. கேள்விகள் கேட்காமல் உள்ளுணர்வு அவர்களுக்கு சரி என்று சைகை செய்த உடன் சரணாகதி அடையும் பெண் தான் ஏற்றுக் கொண்ட விசயம் தவறாகவே போனாலும் அதைச் சரி செய்து தனக்கு ஏற்றவாறு மாற்றியும் கொள்கிறாள்.

உலகில் இருக்கும் பெரும்பான்மையான மதங்களில் பெண்கள் இறைத்தூதராகவோ அல்லது ஞானியர்களாகவோ இருந்தது கிடையாது. பெண்கள் ஆண்கள் சொல்வதை ஏற்று நடப்பதாகவே பெரும்பாலும் அவர்களின் மதக்கோட்பாடுகள் போதிக்கின்றன. இவை எல்லாம் ஆணாதிக்கம் கொண்ட ஒரு சமூகம் பெண்களை போகத்தை மையப்படுத்தி பார்த்ததின் விளைவுகள்தான். பெண்ணுக்கு சட்டங்கள் தீட்டி அவள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று கூறும் ஆண்களே..நீங்கள் யார் அவர்களுக்கு உரிமைகள் கொடுக்க....? நீங்கள் யார் அவர்களுக்கு வரைமுறைகள் படைக்க.....உங்களைப் போலவே அவர்களும் இந்த பூமிக்கு வாழ வந்த சரிபாதிகள்...என்றெல்லாம் கேள்விகள் கேட்டுப்பார்க்கையில் அவற்றை மறுக்க கடவுளை துணைக்கு அழைத்து வந்து பயமுறுத்தும் பல சமூகங்கள் இந்த பூமியில் இருக்கின்றன.

ஒரு ஆணுக்கு பிடித்த ஒன்று கொஞ்சம் முரண் பட்டாலும் அதை விட்டு நகர்ந்து விடுவான் ஆனால் ஒரு பெண்ணுக்கு பிடித்த ஒன்றை அவள் ஏற்றுக் கொண்ட பின்பு கோடி முரண்கள் அங்கே வந்தாலும் அதை விட்டு அவள் எளிதில் நீங்குவது கிடையாது. அதை சரியாக்கி தன்னுடன் வைத்துக் கொள்வாள்..இல்லையேல் அதை சரியாக்குவதிலேயே போராடி மடிந்து போவாள்...

சூழல் மாறினால் ஆண்கள் எளிதில் மாறிவிடுவார்கள் ஆனால் பெண்கள் அப்படி அல்ல...எப்போதும் பற்றியதை விடுதல் அவர்களுக்கு மிகக்கடினம். அப்படியே விட்டாலும் பற்றியதை மறப்பார்கள் என்று சொல்லவே முடியாது. ஒரு பெண்ணை பார்த்தவுடன் அவள் எப்படிப்பட்டவள் என்று ஒரு ஆணால் கணிக்க முடியாது. அப்படி கணிக்க அவன் வெகுதூரம் பயணிக்க வேண்டிவரும். ஒரு பெண் பார்த்த மாத்திரத்திலேயே ஒருவனைக் கணித்து விடுகிறாள். தவறான ஆண்களைத் தன் பக்கம் சேர்த்துக் கொண்டு வாழ்ந்து ஏமாந்து போகும் பெண்கள் கூட அறிந்தே ஏமாந்து போகிறார்கள்....

அப்போதும் அவனுடனே வாழ்வேன் என்றும் கூறுகிறார்கள். மேலோட்டமாக பார்த்தால் அது முட்டாள்தனமாக தோன்றும் ஆனால் அவர்களுக்கு தெரியும் அவர்களால் முரண்களையும் மாற்றி சரியாய் ஆக்க முடியும் என்று...! பெண் மென்மையானவள் ஆனால் வலிமையானவள். தாய்வழிச் சமூகமாய் இருந்த நமது ஆதி நாகரீகத்தில் அவளே தன் இனக்குழுக்களை வழி நடத்தும் தலைவி. அவளே உணவு தேடிச் செல்கையில் வழி நடத்துவாள். எதிர்களிடம் இருந்து தனது கூட்டத்தைக் காக்க வியூகங்கள் வகுத்து போரிடுவாள். ஆண் அவளின் பின்னால்தான் அப்போதெல்லாம் இருந்திருக்கிறான்.

ஆண் அறிவினால் சிந்திப்பவன். பெண் உணர்வினால் சிந்திப்பவள். அறிவு அழியக்கூடியது. உணர்வு அழியாதது. உணர்வுதான் இந்த பிரபஞ்சத்தை இழுத்துப் பிடித்து வைத்துக் கொண்டிருப்பது. சட்டென்று ஒரு பாதுகாப்பு உணர்வு வராமல் ஒரு பெண் எந்த ஒரு ஆணையும் அணுகுவதே இல்லை....அவள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடனே பெரும்பாலும் நடந்து கொள்கிறாள்.

பூர்ணாவை பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்...வரவேற்பரைத் தாண்டி வெளிவாசலுக்குச் செல்லும் படிக்கட்டில் அமர்ந்திருந்தேன். இருள் என்பதன் அர்த்தம் நகரத்தில் வாழ்பவர்கள் என்று மட்டுமில்லை கிராமங்களும் கூட அறிவதில்லை. அவர்கள் இருள் என்பதை வெளிச்சமின்மை என்று மட்டுமே கருதுகிறார்கள். இருள் வெளிச்சமின்மை மட்டுமல்ல. அது சப்தமின்மை, சிந்தனையின்மை, பொருளின்மை, இப்படி பல இன்மைகளைக் கொண்ட கருமை சூழ் இருளை அனுபவிக்க சப்தமின்றி புலனடக்கி இருக்கவேண்டி இருக்கிறது. இருள் என்பது ரகசியம்.


பூச்சிகள், பறவைகளின் சிற்சிறு சப்தங்களும் அடங்கிப் போய் பின்னிரவு தொடங்கி இருந்த அந்த மலைப்பிரதேச கானகத்தின் அனுபவம் அதி சுவாரஸ்யமாய் இருந்தது. இருளில் உறங்கும் மலைகளும், இருண்ட வானிலிருந்து எட்டிப்பார்த்து சிரிக்கும் நட்சத்திரங்களும், இன்னும் பதினைந்து நாளில் பார் நான் எவ்வளவு புஷ்டியாய் மாறிக் காட்டுகிறேன் என்று சவால் விடும்...சிறு நிலவும், பேரமைதியை வருடிக் கொடுக்கும் நீண்ட நெடிய மரங்களும் என்று..என்னைச் சுற்றிக் கிடந்த சூழ்நிலையை விழிகளால் வாங்கி எனக்குள் நிறைத்து பேச்சற்று கிடந்தேன்.

யார் இருக்கிறார்...
யாருக்கு இங்கே...?
மனிதர்கள் மாறி மாறி
வந்து செல்லும்
பெரும் பூமியில்
யோனிகள் வழியே 
குதித்து வெளிவரும்
பிண்டங்கள் எரிந்து
சாம்பலாகும் போதும்
மட்கி மண்ணாகும் போதும்
யார் இருக்கிறார் 
யாருக்கு இங்கே...?

முட்களாய் தைத்த வார்த்தைகளை புத்தியிலிருந்து பிடுங்கிப் போட்ட படியே நான் புகைத்த சிகரெட் கையைச் சுட்டவுடன்...உதறி கீழே போட்டேன்...! ஒவ்வொரு முறையும் தனியே வரும் போதும் ஏதேதோ அனுபவங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது வாழ்க்கை. எப்போதும் நான் கொடைக்கானலை தேர்ந்தெடுக்க இரண்டு காரணங்கள்தான்...ஒன்று தெரிந்த இடம்... இரண்டாவது மலைப்பிரதேசம். கொடைக்கானல் தென் தமிழகத்தின் மிகப்பெரிய சுற்றுலாப் பிரதேசமாக இருந்தாலும், எத்தனை கூட்டம் வந்தாலும் அது குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே பிதுங்கி வழிகிறது. பழனி கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மனிதர்களின் காலடி படாத இயற்கையின் ரகசியங்களை உள்ளடக்கிய பல இடங்கள் இருக்கின்றன. உயரமான இடத்தில் இயற்கை சூழ்ந்த வாழ்க்கைக்கு நடுவே பரபரப்பான சமப்பட்ட நிலத்தில் வாழ்பவர்களின் வாழ்க்கை ரொம்பவே அன்னியப்பட்டுப் போகிறது. மாடியிலிருந்து தெருவை வேடிக்கைப் பார்க்கும் ஒரு உணர்வு நமக்கு இயல்பாகவே தோன்றுகிறது.

வேடிக்கைப் பார்த்தல் என்பது தொடர்பற்று இருத்தல். நிகழும் யாவையும், பார்த்து, கேட்டுக் கொண்டிருந்தாலும் அந்த நிகழ்வோடு நமக்கு யாதொரு தொடர்பும் இருப்பதில்லை..!

உறக்கம் மெல்ல தோளில் கை போட்டு தலை தடவி....முதுகு தடவி என்னை இழுக்க...பாதி மூடிய இமைகளோடு படுக்கை அறையை நோக்கிச் சென்றேன்.....இந்த இரவுக்கு எனக்கு மது அவசியமில்லாமல் இருந்தது.....படுக்கையில் தொப் என்று விழுந்தேன். பாதி உறக்கத்தில் அம்மாவின் மார்பகம் தேடும் குழந்தை போல எழுந்து இரண்டு பெக் அடிக்கலாமா என்று தோன்றியது. தோன்றிய கேள்வியை ஆழமான நிசப்தத்துக்குள் உறக்கம் இழுத்துச் செல்ல....மீண்டும் உறங்கிப் போனேன்.

டக் டக் என்று யாரோ கதவு தட்டும் சப்தம் கேட்க....திடுக்கிட்டு விழித்த போது நல்ல வெளிச்சம் வீட்டுக்குள் பரவி இருந்தது. இது என்ன நேற்று மழை வந்து என் ஜன்னல் தட்டியது இன்று புயல் வந்து கதவு தட்டுகிறது என்று யோசித்த படியே கதவினை திறக்க....வாசலில் நின்றிருந்தது புயல் அல்ல...

தென்றல்...

பூர்ணா பூங்கொத்தாய் நின்று கொண்டிருந்தாள். என்னங்க பூர்ணா நேத்து ஒரு குத்து மதிப்பாதான் வீடு தெரியும்னு சொல்றீங்கன்னு நினைச்சேன்.... வீட்டைக் கரெக்டா கண்டு பிடிச்சுட்டீங்க....பொய்யாய் ஆச்சர்யம் காட்டினேன்....

வண்டுகளைத் தேடிப் பூக்கள்
செல்லும் காலங்களில்
மன்மதனின் கரும்பு விற்களுக்கு
வேலையில்லாமல் போகுமாம்....

சொல்லிவிட்டுச் சிரித்தாள். 

நீ கவிதை கூட சொல்வியா...?  என்று கேட்டு விட்டு....

கவிதை சொல்லும்
கவிதைகளைக் கேட்டுக் கொண்டே
பார்க்கவும் முடியும்....
என்பது வரம்தானே...?

நான் சொல்லி முடித்தேன்...

ஓ..கோ....
கவிதைகளை வாசலிலேயே 
நிற்க வைக்கும் கவிஞர்களை
நான் வரம் என்பதா...
சாபம் என்பதா..?

சிரித்துக் கொண்டே கேட்ட பூர்ணாவின் ஊதாக்கலரில் சிறு பூக்கள் சிதறிக் கிடந்த வெள்ளை நிறச் சுடிதார் அவளுக்கு கூடுதல் வசீகரம் கொடுக்க...அவள் உள்ளே வருவதற்கு முன் நான் மறைக்க நினைத்த மது பாட்டில்கள் எங்கே இருக்கின்றன..வரவேற்பரையிலா..ப்ரிட்ஜிலா இல்லை கிச்சனிலா..புத்திக்குள் கணக்குப் போட்டபடியே..யோசித்துக் கொண்டிருந்தேன்...


                                             
                                                      ... பாடல் தொடரும் ...




தேவா சுப்பையா...




தெய்வீக ராகம்..தெவிட்டாத பாடல் - 4

$
0
0

இதுவரை...




இனி....

சிரித்துக் கொண்டே கேட்ட பூர்ணாவின் ஊதாக்கலரில் சிறு பூக்கள் சிதறிக் கிடந்த வெள்ளை நிறச் சுடிதார் அவளுக்கு கூடுதல் வசீகரம் கொடுக்க...அவள் உள்ளே வருவதற்கு முன் நான் மறைக்க நினைத்த மது பாட்டில்கள் எங்கே இருக்கின்றன..வரவேற்பரையிலா..ப்ரிட்ஜிலா இல்லை கிச்சனிலா..புத்திக்குள் கணக்குப் போட்டபடியே..யோசித்துக் கொண்டிருந்தேன்...

நோ.. நோ.. வாங்க.. வாங்க.. வழிந்த படியே வீட்டுக்குள் அவளை அழைத்தேன்..! மது அருந்துதல் எப்போதுமே ஒழுக்க நெறிமுறைகளுக்கு எதிராய்த்தான் பார்க்கப்படுகிறது. மது அருந்தி விட்டு குடித்தேன் அதனால் இப்படி ஆனது, அப்படி ஆனது என்று சொல்லி தப்பித்துக் கொள்ளும் கோழை மனிதர்களின் விழிப்புணர்வில்லாத தன்மையால் குடி குடியை கெடுக்கவும் செய்தது. புரிந்து தெளிந்து அளவாய் அருந்துகையில் மது மிகப்பெரிய சந்தோசமாகிறது. அறிதலும் புரிதலும் இருந்தால் வாழ்க்கையே சுகம்தானே...அதுதானே இங்கே இல்லாமல் இருக்கிறது.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா... பிரிட்ஜில்தான் இருக்கிறது. பெரு மூச்சு விட்டபடியே... ஒரு பத்து நிமிடம் கொடுத்தால் பிரஷ் அப் ஆகிட்டு வந்துடுவேன்...அவளிடம் சொன்னேன். 

பத்து மணி வரை உங்களுக்கு ஒரு பத்து நிமிடம் கிடைக்கவில்லையா...

கேள்வி கேட்டாளா இல்லை ஏதேனும் அடுத்து கவிதை சொல்கிறாளா?  இரண்டு நொடிகள் அவளின் வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டு....கிவ் மீ 10 மினிட்ஸ்...வில் ஹேவ் ஷவர் அண்ட் கம்....பாத்ரூமிற்குள் ஓடினேன்....

ஆண்களின் உலகம் எப்போதுமே கதாநாயக மனோபாவத்தில் கட்டமைக்கப்பட்டு வார்க்கப்பட்டது. தாய்வழிச் சமூகம் என்றறியப்படும் திராவிட சமூகத்தில் பெண் தான் எல்லாமாய் இருந்திருக்கிறாள். அவள்தான் ஒவ்வொரு குழுவாய் வாழ்ந்த ஆதி மனிதர்களை வழி நடத்தி இருக்கிறாள். உணவு தேடுவதிலிருந்து, தங்களின் குழுவுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் தலைமை தாங்கி எதிரிகளிடம் சண்டையிடுவதிலிருந்து, திட்டங்கள் தீட்டி பருவகாலங்களுக்கு ஏற்றார் போல தங்களின் இருப்பிடத்தை மாற்றிக் கொள்வதிலிருந்து எல்லாமே பெண்தான்.

ஒரு பெண்தான் தனது துணையை தேர்ந்தெடுத்துக் கொள்கிறாள்.  ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களை தனது துணையாகக் கொண்டு அவள் நகர்ந்த ஆதி சமூகத்தில் உறவுகள் என்று யாதொரு வரைமுறையும் இருந்திருக்கவில்லை பருவம் எய்திய பின்பு புணர்ச்சி...என்று உள்ளுணர்வு என்ன சொன்னதோ அதை செய்து நகரும் ஒரு இயல்பான வாழ்க்கை முறை இருந்தது. அங்கே குற்ற உணர்ச்சி என்ற ஒன்று இருந்திருக்கவே இல்லை...மிருகங்களை கீழ்த்தரமாக மனிதன் நினைக்க ஆரம்பித்தது எல்லாம் அவன் குறுகலான மனோநிலையில் சிந்திக்க ஆரம்பித்த பின்புதான்...

ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு இயல்பு இருந்தது. ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்றார் போல மாறி மாறி சிந்தித்து தங்களை தற்காத்துக் கொள்தல் ஒன்றே உயிர்க் கொள்கையாய் இருந்தது. வாழவேண்டும் என்பதும் இனப்பெருக்கம் செய்யவேண்டும் என்பது மட்டுமே உயிர்களின் தலையாய நோக்கமாய் இருந்தது. இப்படியான ஒரு காலச்சூழலில் பெண் மட்டுமே எல்லாவற்றையும் அரவணைப்பவளாக, எதிர்த்து நிற்பவளாக, திட்டமிடுபவளாக ஒரு சூப்பர் பவராக இருந்திருக்கிறாள்....

இதில் எப்போது ஆண்கள் கதாநாயக கட்டமைப்பை உருவாக்கி தங்களை இனத்தின் தலைவர்களாகவும், குழுக்களின் தலைவர்களாகவும் ஆக்கிக் கொண்டார்கள் என்றுதான் தெரியவில்லை. பெண்களை அவர்கள் குறுக்குப் புத்தியால் அடக்கி ஆண்டதைத்தான் வரலாறு முழுதும் பதிந்து வைத்திருக்கிறார்கள்....ஆனால் பெண் தோற்கடிக்கப்பட வில்லை..அவள் விட்டுக் கொடுத்திருக்கிறாள் அவ்வளவே....!

குளித்து விட்டு வெளியே வந்து ஷார்ட்ஸ் டீ சர்ட்டுக்குள் நுழைந்து பூர்ணாவிற்கும் எனக்கும் காஃபி போட்டு கொண்டு வந்து அவளின் முன் காபியை வைத்து...ஹேவ் இட்.. பூர்ணா...என்றேன்...

ஓ...இவ்ளோ சீக்கிரம் குளிச்சுட்டீங்க...காக்கா குளியலா...? கண்ணடித்து கிண்டல் செய்தாள்....

குளிருக்கு இதமாயிருந்த காபியை உறிஞ்சியபடியே அவளின் கண்ணடிப்பை ரசித்தேன். பெண்களின் வசீகரமே அவர்களிடம் குடி கொண்டிருக்கும் நளினம்தான். ஒரு ஆணுக்கு பெண்ணின் மென்மையான எல்லா செயல்களுமே பிடித்துப் போகிறது. அவள் பேசுவதிலிருந்து, அழகாய் முடி ஒதுக்குவதிலிருந்து, சிரிப்பதிலிருந்து எல்லாவற்றிலுமே அவர்கள் நளினமாய் நடந்து கொள்கிறார்கள். பூர்ணா சோபாவில் அமர்ந்திருந்த விதமும் அவள் காஃபியை உறிஞ்சிய விதமும் ஒரு ஸென் ஹைக்கூவை வாசிப்பதைப் போலிருந்தது....

ஆள் அரவமற்ற 
சாலையோரங்களை
அலங்கரிக்கும் மரங்கள்
எல்லாம் பூக்கின்றன
பிறகு ஒன்றன் பின்
ஒன்றாக விழுகின்றன...
ஒன்று விழுகிறது..
பின் சிறிது நேரம்...
எதுவும் விழுவதில்லை....
பின் மற்றொன்று விழுகிறது...

சந்தோசம் என்பது நிகழ்வு அல்ல. நிகழ்விற்குப் பின்னான நினைவு.......

ஹேய்.......முகில்...வேர் ஆர் யூ மேன்.....?

கனவைக் கலைத்தது கவிதை. தெளிந்த நீரில் அழுந்தாமல் விழுந்த ஒரு சிறு பூவாய் என்னை சலனப்படுத்திக் கொண்டிருக்கும் உன்னைத்தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று எப்படி அவளிடம் சொல்வது...


தேவதைகள் வெள்ளை உடைதான் அணியுமாம் பூர்ணா..உன்னை மாதிரி இருக்கவேண்டும் என்றா...?

ஹா.. ஹா சட்டென்று சிரித்தவள்.....வைரமுத்து  எல்லோரையும் கெடுத்து வைத்து விட்டார் என்றாள்.....

வைரமுத்துவின் வார்த்தைகள்தானே பெரும்பாலான இளைஞர்களை காதலூருக்கு கூட்டிச் சென்று கற்பனைப் பால் புகட்டிய தாய்.....

கவிதைகள் என்றாலே கிளர்ச்சியூட்டுபவையாய் இருக்கவேண்டும். இரண்டு வரியை வாசித்து விட்டு இரவும் பகலும் நாம் உறக்கம் தொலைக்க வேண்டும். வைரமுத்து கற்பனைகளுக்கு சிறகு கொடுத்தவர் என்றால் கலீல் ஜீப்ரான்....என் கனவுகளுக்கு வர்ணம் தீட்டியவர்....

முறிந்த சிறகுகள் வாசித்து மூன்று இரவு இரண்டு பகல்கள் நான் எங்கோ தொலைந்து போயிருந்தேன்...நான்காம் நாள்...ரிச்சர் டாக்கின்ஸைப் படித்து மீண்டெழுந்து வந்தேன். .....

ரிச்சர் டாக்கின்ஸ்... யார் அவர்...? அவளிடம் கேட்டேன்...

ஓ.. ..நீங்கள் த காட் டெலுயூசன்ற ( The God Delusion) புக் படிச்சது இல்லையா ? பேசிக்கலி அவர் ஒரு எத்தாலிஜிஸ்ட்....கனவுகளுக்கு அவர் வேலை கொடுப்பதே இல்லை. நிகழ்வுகளுக்கும் அர்த்தம் கொடுப்பதும் இல்லை...

நீங்க சென்னை வரும் போது அந்த புத்தகமும் த  கிரேட்டஸ்ட் ஷோ  ஆன்  எர்த்  (The Greatest Show on Earth) இந்த ரெண்டு புத்தகமும் தர்றேன் மறக்காம வாங்கிப் படியுங்க...

டார்வின் தியரிய பேஸ்பண்ணி நிறைய நிறைய விசயம் அதில பேசி இருப்பாங்க முகில்...

கடவுள் இல்லேன்னு சொல்றீங்களா...பூர்ணா...?

இந்த "ங்களா" போடுறத கொஞ்சம் ஸ்டாப் பண்றீங்களா சார்...?  நான் உங்கள விட சின்னப் பொண்ணுதான்....தலை முடியைப் பின்னுக்குத் தள்ளியபடியே நாக்கு காட்டி பளிப்பு காட்டினாள்...

ஆல்ரைட்... கடவுள் இல்லேன்னு சொல்றியா...நீ..? கேட்டேன்

இருக்க வேண்டிய அவசியம் இல்லேன்னு நினைக்கிறேன்....பதிலினாள்..

ஏன் அப்டி நினைக்கிற...?

கடவுள் உனக்கு எதுக்கு தேவைப்படுறார் முகில்..? வாழ்க்கைக்கு கடவுளின் அவசியம்தான் என்ன....? அதை சொல்லு முதல்ல....ஒழுக்கமா இருக்கறதுக்கு, இன்னொரு மனுசன துன்பப்படுத்தாம இருக்கறதுக்கு, மொத்ததுல அடுத்த மனுசன தொந்தரவு பண்ணாம நிம்மதியா வாழ்றதுக்கு ... வேற எதுக்கு கடவுள் தேவைப்படுறார்..? கடவுள் மனிதர்களுக்கு ஒரு பெரிய டைம் பாஸ்....அவர் நிஜமா இருக்கணும்னு  அவசியமில்லை...ஹா... ஹா... சிரித்தாள்.

யூ  நோ முகில்...நான் ஒரு ஆன்மீகவாதி..ஆனால் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறவள் இல்லை. கடவுள் இல்லை என்றும் சொல்கிறவளும் இல்லை. நான் இருக்கிறேன்,  நீ இருக்கிறாய்.. இந்த வாழ்க்கை இருக்கிறது....அவ்வளவுதான்....

என்ன பூர்ணா ஓஷோவுக்குள் வழுக்கி  விழுகிறாயே....? அவள் விழிகளை பார்த்துக் கொண்டிருந்தேன்...

இஸ் இட்... ?ஆக்சுவலி.. நான் அதிகம் ஓஷோவைப் படிச்சது இல்லடா.......ஐயம்..சாரி...டா போட்டுட்டேன்...உனக்கு ஒண்ணும் பிரச்சினை இருக்காது இருந்தாலும் பரவா இல்ல...

இட்ஸ் ஓ.கே.. நோ. ..ப்ராப்ளம் அட் ஆல்..எல்லா ஆண்களையும் போல நானும் சொல்லி வைத்தேன்....


வாழ்க்கையின் எல்லா தருணங்களும் மிக மிக அழகானவை முகில். இங்கே ஆராய்ச்சி செய்து பொழுதைக் கழிப்பதை விட  அனுபவித்து வாழ்வதே மேல்...நிறைய புத்தகங்களை வாசித்து, நல்ல திரைப்படங்களைப் பார்த்து, அற்புதமான உறுத்தாத இசையைக் கேட்டு  என் வாழ்க்கையை நகர்த்திக்கிட்டு இருக்கேன் முகில்...

தாஸ்தோயெவெஸ்கியோட "வொயிட் நைட்ஸ் "(White Nights) படிச்சிருக்கியா....?

இல்லை பூர்ணா.. என் வாழ்க்கை முழுதும் இயற்கை, தேடல் இப்டியேதான் போய்ட்டு இருக்கு, சுஜாதா, பாலகுமரான், ஜெயகாந்தன், தி. ஜானகிராமன், கி.ராஜநாரயணன், கல்கி, இப்போ அப்போ அப்போ ஜெயமோகன் நிறைய ஓஷோ....போதும்ன்ற அளவுக்கு சென்  ஹைக்கூக்கள் பற்றிய  ஆராய்ச்சி, சேகுவரா, பிரபாகரன், மாவோ, லெனின், காரல் மார்க்ஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ, லாவோட்சூ, கன்பூசியஸ், சிக்மண்ட் பிராய்ட் இப்டி...ஏதோ ஒரு வழியில நான் பயணிச்சாலும்.... சிவம் அப்டீன்ற வெற்றிடம்தான் இடம்தான் என்னோட பூர்வீகமான உள்ளமையா இருக்கு...

ஏதோ ஒரு தேடல் எனக்குள்ள இருக்கு அந்தத் தேடலை நான் வலியோட செய்யாம அனுபவிச்சு செய்றேன் பூர்ணா..எனக்கு  வாழ்க்கை ரொம்ப அழகான ஒரு விசயம். இந்த அழகை அனுபவிக்கிற அதே நேரத்துல இதை அனுபவிக்கிறது யாரா இருக்கும்னு ஒரு கேள்வி எப்பவும்  எனக்குள்ள இருந்துட்டே இருக்கு...

நான் அவளைப் பார்த்தேன்....

வொயிட் நைட்ஸ் படிச்சுட்டு ஒரு இரவு முழுதும் பிரமிச்சுப் போய் உட்கார்ந்து இருந்தேன்.  வாழ்க்கையோட அழகு அதுல இருக்குற முரண்கள்தான்னு தெளிவா புரிய ஆரம்பிச்சுது... எப்பவுமே தனிமையில இருந்து அவஸ்தப்பட்டுக்கிட்டு இருக்க ஒருத்தன் நாஸ்டென்கான்னு ஒரு பெண்ணை சந்திக்கிறான்...அவளோட காதலனை அவ கண்டிபிடிக்க நிறைய கடிதங்கள் எழுதிக் கொடுத்து உதவுறான்.. ஒரு கட்டத்துல இரண்டு பேருமே காதலிப்பதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் வரும் போது நாஸ்டென்காவோட லவ்வர் வந்துடுறான், அவ அவன் கூட போய்டுறா....நம்ம ஹீரோ மீண்டும் தனிமைக்கு தள்ளப்படுறாரு...

அவனோட வாழ்க்கையில காதலும் கிடையாது. வேறு துணையும் கிடையாது. தனியாதான் நகரணும் அப்டீன்றது அவனுக்கு விதியாகிப் போகுது...! குறிப்பா ரஷ்யன் நாவல்கள் பயணிக்கிற தளங்களே அலாதியானவை அது நாம் எப்போதும் பயணித்திராத ஒரு உலகத்துக்குள்ள நம்மள கொண்டு போய் சேத்துடும்..முகில்..அதுதான் அந்த எழுத்துக்களோட ஸ்பெசாலிட்டி அதுவும் தாஸ்தோவெஸ்கியோட எழுத்துக்கள் நாம் பார்த்திராத வர்ணங்களால் நமக்கு புதுப்புது ஓவியங்களை  படைத்துக் காட்டும்...அந்த ஆச்சர்யத்தை விவரிக்க முடியாது வாய் பிளந்து ரசித்துக் கிடக்க மட்டுமே நம்மால் முடியும்...

காதல் அப்டீன்ற வார்த்தை காமத்துக்கான துருப்புச் சீட்டா மட்டும் இருக்குமோன்னு கூட  பல தடவை நான் நினைச்சு இருக்கேன்டா....நீ என்ன நினைக்கிற....? .என்னைச் சீண்டினாள்...

ஹ்ம்ம்ம்ம்ம்ம் நான் பெருமூச்சு விட்டேன்...எப்டி...பூர்ணா இப்டி எல்லாம்...?! ஒரு பெண்ணை அறிவு சார்ந்து பார்க்கும் பார்வையும் அதனைச்  சார்ந்து எழும் உணர்வுகளும் எப்படி இருக்கும்னு இப்போ எனக்குப் புரியுது...யூ ஆர் கிரேட்....

காதல், காமம் எல்லாமே நாம எதுவுமற்றுப் போவதற்கான கேட்டலிஸ்ட்ஸ் அப்டீன்னு நான் நினைக்கிறேன்...

எதுவுமற்றுன்னா...? திரும்பக் கேட்டாள்...

நீ கேட்டியே ஆரம்பத்துல கடவுள் ஏன் இருக்கணும்னு அந்த கேள்வியை உடைக்கத்தான்....என்றேன்...

புரியல.. அவள் புருவம் உயர்த்தினாள்.

கடவுள் எதுக்கு இருக்கணும்னு அல்லது கடவுளின் அவசியம் என்ன?ன்னு கேட்டீல்ல அந்த கேள்வி காமத்தைப் புரிஞ்சுக்கிட்டா உடைஞ்சு போகும்னு நினைக்கிறேன். மரணம், ஜனனம் இது ரெண்டுதான் மனித வாழ்க்கையின் சூட்சுமம். மரணம் அப்கோர்ஸ் நாம செத்ததுக்கு அப்புறம் பெறப்போகுற ஒரு அனுபவம் அதை மறுபடி வந்து மனுசங்க கிட்ட பேச முடியாது...பட் ஜனனம்....நாமதான் அதுல பங்கெடுத்துக்கிறோம்...ஒரு உயிர் உருவாகும் மிக நுட்பமான இடம் காமம்....சோ.. காமத்தை விளங்கிக்க ஆரம்பிச்சா ஏதோ ஒண்ணு புரியும்னு தோணுது...

என்னைப் பாத்தா உனக்கு ஏதாச்சும் தோணுதா..? கேட்டாள்....

என்ன சொல்வது.. என்று நான் உள்ளுக்குள் தடுமாறிக் கொண்டிருந்தேன்.....கொடைக்கானல் மிரட்டத் தொடங்கி இருந்தது....



                                                     ... பாடல் தொடரும்....



தேவா சுப்பையா...



தெய்வீக ராகம்..தெவிட்டாத பாடல் - 5

$
0
0

இதுவரை...





இனி...


என்னைப் பாத்தா உனக்கு ஏதாச்சும் தோணுதா..? கேட்டாள்....

என்ன சொல்வது..என்று நான் உள்ளுக்குள் தடுமாறிக் கொண்டிருந்தேன்.....கொடைக்கானல் மிரட்டத் தொடங்கி இருந்தது....

ஒண்ணும் தோணலை...அவளிடம் நிதானமாய் சொன்னேன்.

நீ ஒரு ஆண். நான் ஒரு பெண்..எதாச்சும் நடந்துடும்னு பயப்டுறியா..?

இல்லை பயப்படல....சலனமில்லாமல் சொன்னேன்.

இந்தத் தனிமை ஏதாச்சும் பண்ணச் சொல்லுமா நம்மளை...முகில்?....கேட்டாள்.

என்ன பண்ணிடும்...ஒண்ணும் பண்ணாது...நமக்குத்தான் புரிதல் இருக்கு,  தெளிவு இருக்கு...ஆனா கட்டுப்பாடுகள் கிடையாதுன்னு நினைக்கிறேன்....

அப்புறம் ஏன் கை கட்டி பவ்யமா என் எதிர்த்தாப்ல உட்காந்து இருக்க....?  என் பக்கத்துல வந்து உட்காரலாமே...? ஏதோ ஒரு பயம்தான உன்ன அப்டி உட்காரச் சொல்லுது..... இல்லையா....முகில்...?

பயம் இல்ல.. எனக்கு என்ன பயம்...நாம விழிப்புணர்வோடதானே இருக்கோம்...! காற்றில் ஆடாத ஒரு தீபம் மாதிரியான தெளிவுதானே இது..

அப்போ வந்து என் பக்கத்துல உட்கார முடியுமா உன்னால....?

வொய் நாட்....அவள் அருகில் போய் அமர்ந்தேன். ஹ்ம்ம்ம்ம் சொல்லு பூர்ணா...நிறைய பேசுற...நீ  கடவுள் மறுப்பாளர்களை எல்லாம் வாசிச்சு இருக்க,  அடிப்படையில நம்பிக்கை இல்லாத ஒரு தன்மைய அந்த கட்டமைப்பு கொடுத்துடும் இல்லையா..? என்னை எப்டி நம்புற நீ...?

அட நீ வேற முகில்......நம்பிக்கைன்றது....மனசு சம்பந்தப்பட்டது மட்டும் இல்லை தனி மனித விருப்பம். எனக்கு ஓ.கேன்னு தோணிச்சு....தட்ஸ் ஆல்....

பூர்ணா ரொம்ப பவ்யமா உட்கார்ந்து இருக்கியே எங்கடா கைகால் மேல பட்டா தப்பு நடந்துடும்னு பயப்புடுறியா..?

டேய்... எனக்கு ஒரு பயமும் இல்லடா...உன் கையை எடுத்து இப்டி என் கையோடு கோர்த்துக்கிட்டு பேசினா கூடா எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை....கைகளைக் கோர்த்துக் கொண்டாள்...

இப்போது....கொடைக்கானல் குளிர் கொஞ்சம் மிரளத் தொடங்கி இருந்தது.....

நிஜமாதான் எல்லாமே மனசுதான்.... பூர்ணா நாம கட்டுப்பாடா இருந்தா என்ன நடந்துடும்.. நான் உன் தோள்ள கை போட்டு இப்டி இறுக்கினா கூட ஐ நெவர் கேவ் எனிதிங் இன் மை மைண்ட்....

தோளில் கை போட்டேன்.

யா....யா.... யூ ஆர் கரெக்ட்....!!!!!!!! உடல்கள் உரசினால் என்ன தவறு நடக்கப் போகிறது. இன்ஃபாக்ட் நமக்குள்ள இருக்குற புரிதல் கண்டிப்பா எல்லை தாண்ட விடாது இப்டி நான் உன் மூக்கோடு என் மூக்கு உரசினால் கூட....

அவளின் உதடு என் உதட்டை உரச அனிச்சையாய் அவளின் உதட்டினை இழுத்து உறிஞ்சத் தொடங்க..அவள் என் தலை கலைக்க ஆரம்பித்தாள்...

ஜஸ்ட்....லைக் தட் தான் உன்னைக் கட்டிப்பிடிச்சு இருகேன் பூர்ணா...! தப்பு இல்லையே...

நானும் அப்டிதாண்டா....அவள் வார்த்தைக் குழறியதைக் கவனித்தேன்...ஏதோ ஒரு உணர்வு விழித்துக் கொள்ள....அதைக் கவனிக்கத் தொடங்கினேன்...

நான் கூடத்தான் முகில்...இப்போ உன்னை தொட்டுக் கொண்டிருக்கிறேன் அவ்ளோதான் எனக்கு வேறு ஒண்ணும் தப்பாத் தெரியல......

அவள் என் காது கடித்தாள். 

உள்ளுக்குள் ஏதோ தடம் புரள அவளை இறுக்க அணைத்தேன். இருவர் உடம்புக்குள்ளும் சூடு பரவத் தொடங்கியது.

மூச்சிறைக்க....அவளின் முகம் பார்த்தேன். பூர்ணா...ஆர் யூ ஓ.கே.......இயங்கிக் கொண்டே கேட்க....

பாதி விழிகள் சொருக...அப்சல்யூட்லி...வீ ஆர்......முகில்...

ஒரு வீணையை எப்படி மீட்டுவது என்பது கலை. விபரமறியாமல் அதன் தந்திக் கம்பிகளில் விளையாடும் போதும் ஏதேதோ சப்தங்களை அது அபஸ்வரங்களாய்  வெளிப்படுத்துகிறது ஆனால் எந்தக் கம்பியை எப்படி மீட்டவேண்டும் என்ற அறிவோடு அதை அணுகும் போது அங்கே தெய்வீக இசை பிறக்கிறது.

காமம் என்பதை எப்போதும் இனப்பெருக்கத்தோடு தொடர்புபடுத்தியே இந்த சமூகம் அறிந்து வைத்திருக்கிறது. இடைவிடாமல் கேட்கும் சங்கீதம் என்ற ஒன்று இல்லை என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். மனிதர்களின் சுவாரஸ்யம் எப்போதுமே இரண்டில்தான் ஒன்று ஆரம்பம், இரண்டாவது முடிவு. ஆரம்பமும் முடிவும் இல்லாத அனாதியான ஒரு சுயத்தைக் கொண்டவர்கள்  இப்படி தொடக்கத்துக்கும் முடிவுக்கும் இடையில் மாட்டிக் கொண்டதுதான் அவித்தை அல்லது மாயா. எந்த ஒரு விசயமும் ஆரம்பிப்பதோ அல்லது முடிப்பதோ அல்ல இந்த பிரபஞ்சத்தின் ரகசியம் என்பது....அது எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பது என்பதைக் கடந்து வேறு எதுவும் அங்கே முக்கியமில்லை.

இயங்குதல் மட்டுமே இங்கே சத்தியம். எப்போது..இயங்க ஆரம்பித்தது...? எப்போது முடியும் இந்த இரண்டு கேள்விகளுமே படு அபத்தமானவை.

காமம் என்பது மனித அகந்தை கரைந்து பிரபஞ்ச மூலத்தை தொடும் ஒரு நிலை. அதன் உச்சம் என்பது மீண்டும் நாம் கடவுள் தன்மையிலிருந்து சரேலென சறுக்கி விழுந்து மனமென்னும் கூட்டுக்குள் மனிதனாய் ஒடுங்கும் நிலை. மலை முகட்டில் ஏறுவதும், அதன் உச்சியில் இருந்து எல்லாவற்றையும் ரசிப்பது சுகம் என்றால்....அதன் உச்சியிலிருந்து மீண்டும் தரை நோக்கி விழுதல் சுவாரஸ்யம். சில கணங்கள் நீடிக்கும் அந்த சுவாரஸ்யம் நீடிக்காமல் தரை தொட்டவுடன் முடிந்து போகிறது. பின் மீண்டும் மலையேறுதலும், மேலிருந்து கீழே விழுதலும்..என்பது போல்தான் காமம் இங்கே கையாளப்படுகிறது.  உச்சம் தொடுவது என்பது உச்சத்தில் நிற்பது. அதிலிருந்து கீழே விழுவது அல்ல. இப்படியாக உச்சம் தொடாமல் நகர்ந்து, நகர்ந்து நெருப்பாய் எரியும் காமம் முடியவேண்டும் என்றொரு அவசியமில்லாத  நிலையில்.....

பூர்ணாவோடு இயங்கிக் கொண்டிருந்தேன். எங்கிருந்தோ வந்த ஒன்று தன்னை மீண்டும் அங்கே கொண்டு செல்லும் நிகழ்வொன்றை நிகழ்த்திக் கொள்ள இரு உடல்கள் சேர வேண்டிய நிர்ப்பந்தமே திருமண பந்தமென்னும் கட்டுப்பாடாய் முறைப்படுத்தி மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. தன்னை தானே பல்கிப் பெருகி விருத்தி செய்து கொள்ளும் அதே நேரத்தில் தன்னை யாரென்றும் உணர்ந்து கொள்ள தனக்குத் தானே வைத்துக் கொண்ட உச்ச வசியம் காமம். காமத்தை அறிய முடியாமல் வழுக்கி விழுந்து விட்டு அது கொடுக்கும் உச்சத்தை மட்டும் கற்பனை செய்து கொண்டே இங்கே காமத்தை வரையறுத்துக் கொள்கிறார்கள்.


தந்த்ரா காமத்தைப் பெண்ணைக் கொண்டு ஆணையும்,  ஆணைக் கொண்டு பெண்ணையும் பயிலச் சொல்கிறது. பிறிதொரு நாளில் ஆணுக்கு பெண்ணாயும், பெண்ணுக்கு ஆணாயும் பிரபஞ்சமே ஆகிப் போகையில் அங்கே யாதொரு துணையும் தேவையில்லாமல் போகிறது.  பிரபஞ்சத்தோடு சல்லாபித்து சல்லாபித்து மனம் கழிந்துப் போய் யாராலும் தடுக்க முடியாத மிகபெரிய உணர்வு நிலையில் மூழ்கிப் போய் தன்னை கரைத்துக் கொண்டு பிரபஞ்சத்தில் காணாமல் போய் விடவும் முடிகிறது. ஆதி உணர்வு என்பது கோடாணு கோடி கூடலின் உச்ச சுகத்தை ஒத்தது என்று நான் சொல்லுமிடம் கூட மட்டுப்பட்டதுதான்.  அதைப் பற்றி அதிகம் விவரித்தால் அது ஒரு கேலிச் சித்திரமாய்ப் போய்விடும்....

பேச்சற்று கிடந்த அந்த பொழுதில் சமூகக் கட்டுப்பாடுகளும் ஒழுக்க நெறிகளும் வெற்று மாயபிம்பமாய்த் தெரிய மூச்சு இறைத்துக் கொண்டிருந்தது இருவருக்கும். போதும் என்று தோன்றிய போது....எழுந்து அமர்ந்த அந்த நிலையில் காமத்தை சட் டென்று முடித்துக் கொள்ள தோன்றாமல் அந்த உணர்வினை அணைந்து விடாமல் மெல்ல அப்படியே உடல்களுக்குள் தேக்கிக் கொண்டு நீரிலிருந்து நீர் விலகுவது போல விலகிக் கொண்டோம்.

பேசுவதற்கு ஒன்றும் இல்லாமல் இருந்தது. சப்தமில்லாமல் விழிகள் மூடி கிடந்த சூழலை மெதுவாய் கண் திறந்து நான் கலைத்த போது உடை மாற்றிக் கொண்டு  தரையில் அமர்ந்தபடியே பூர்ணா என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்....நிமிர்ந்து அவள் முகம் பார்த்தேன்....

உடலுக்குள் இருந்த அதிர்வுகள் கூடாமல், குறையாமல் மூளையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தன. மூளையைத் தொடத் தொட அவை அனுபவமாகி நினைவுப்பகுதிகளில் நிறைந்து கொண்டிருந்தன. 

பூர்ணா இப்போ  நடந்த விசயம் உடல் ஈர்ப்பா? முதல்ல இது சரியா, தப்பா...?

நேத்துதான் உன்னைப் பாத்தேன்....அடுத்த நாள் இப்டி ஒரு சூழலுக்குள்ள நாம வந்து விழுந்துடுவோம்னு நினைச்சுக் கூட பாக்கலை...ஏதோ படம் பாத்தது மாதிரி, கதை படிச்ச மாதிரி என்னால....நம்பவே முடியலை....ஆக்சுவலா....திட்டமிடாமலே இது நடந்துடுச்சு....

பூர்ணா ஆழமாய் என்னைப் பார்த்தாள். முகில் மழை பெய்யறதுக்கு என்ன காரணம் இருக்க முடியும் இல்லை அதுக்கு காரணம் வச்சுக்கிட்டு மேகங்கள் சூல் கொண்டு மழையா பெய்யணும்னு ஆசைப்பட்டா மட்டும் மழை பெஞ்சுடுமா என்ன.... 

எப்போ மழை பெய்யணுமோ அப்போ பெய்யும்...!!!!

ஒரு மழை பெய்வதற்கு முன்னும் பின்னும் அந்த மழையை பத்தி சொல்ல ஒண்ணுமே இல்லை.  மழை பெய்யும் போது மட்டும் மழை, மழையாகிறது. விரும்பினால் நனையலாம், விரும்பாவிட்டால் நனையத் தேவையில்லை. விரும்பாமல்  இருப்பவர்களை இழுத்துக் கொண்டு போய் நனைய வைத்தாலும் தப்பு...நனைய விரும்புபவர்களை தடுத்து நிறுத்தினாலும் தப்பு....

நான் நனைய விரும்பினேன்...நனைந்தேன்.  மீண்டுமொரு மழை வேண்டுமென இப்போது நான் ஆசைப்பட மாட்டேன்...

இன்னொரு பொழுதினில்
முகிலோடு காற்று கூடலாம்
கனத்த மழையொன்றும் பெய்யலாம்
சப்தங்கள் செய்து கொண்டே
பூமியைப் போன்று 
சந்தோசத்தில் நனைந்தும் கிடக்கலாம்...
எப்போதும் வாய்ப்பதில்லை
மழையில் நனையும் வாய்ப்பு....
நனைந்தபின்பு எப்போதும்
நகராத நினைவுகளைப் போல....!

முகில் நனைத்த மழையில் இந்த பூரணமானாள் பூர்ணா...சொல்லிவிட்டு தன்னை முழுதுமாய் சரி செய்து கொண்டு சோபாவில் விழுந்தாள்.

நான் உனக்கு இப்போது யார் பூர்ணா? நீ என் காதலியா? உறவு கொண்டதால் நான் உன்னை மணம் முடிக்க வேண்டுமா? உன்னை இப்படியே விட்டு விலகினால் நான் செய்தது தவறா? நிறைய கேள்விகள் எனக்குள்ள அலை மோதுது....

பூர்ணா தலை முடியைச் சரி செய்த படியே என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்....

அவள் பார்வை எனக்குள் ஊடுருவி ஏதேதோ இம்சைகள் செய்தது...

சொல்லு பூர்ணா............மீண்டும் அவள் மெளனம் கலைத்தேன்...



                                            ... பாடல் தொடரும் ....



தேவா சுப்பையா...





Viewing all 254 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>