Quantcast
Channel: Warrior
Viewing all 254 articles
Browse latest View live

ருத்ர தாண்டவம்...!

$
0
0


சிவம் என்பது உள்ளமை. எப்போதும் உள்ளுக்குள் இருக்கும் அசையாத தன்மை. அது கருவுக்குள் இருக்கும் போதும் ஆடாமல் அசையாமல் இருந்தது. கருவில் இருப்பதற்கு முன்னான அதிர்வு நிலையையே கருவிலிருக்கும் அது கைக்கொண்டிருக்கிறது. அது ஒரு தவ நிலை. தவம் என்பது சலனமற்று இருப்பது. சலனமற்று இருக்க எண்ணங்கள் அற்று இருக்க வேண்டும். எண்ணங்களற்று இருப்பதற்கு முன் அனுமானங்களும், கருத்துப் படிமங்களும் மூளையில் குடியேறி இருக்கவே கூடாது. அர்த்தங்கள் எடுத்துக் கொண்டு ஏற்படுத்திக் கொள்ளும் கற்பிதங்களை எல்லாம் கழித்து நிற்கும் பேறு நிலை... முழுமை.  புத்திக்குள் கருத்துக்கள் ஏற ஏற அதன் விஸ்தரிப்புகள் மனம் என்னும் இல்லாத ஒரு வஸ்துவை உருவாக்கிக் கொள்கின்றன.  நிகழ்வுகளின் கூட்டு அல்லது செயலின் கூட்டு  மனமாகிறது. தனித்து இதுதான் மனமென்று யாராலும் சுட்டிக் காட்ட இயலாது. 

அனுபவங்களின் தொகுப்பு எண்ணமாகிறது. எண்ணங்களின் தொகுப்பு மனம். நாம் நம்மை மனம் என்றே நினைத்துக் கொள்கிறோம். கருவில் இருக்கும் போது என்ன அனுபவம் இருக்க முடியும்? என்ன தேவை இருக்க முடியும்..? எதுவுமற்ற இயற்கையின் போக்கில் மிதந்து கிடக்கும் நிலை. யாரோ உட்கொள்ள நமது பசி அடங்கிப் போகிறது. யாரோ சுவாசிக்க பிராணனை வாங்கிக் கொண்டு உடல் வளர்ந்து கொள்கிறது. தாங்கும் சக்தியை கருப்பை என்னும் சவ்வு கொண்டிருக்கும் காலத்தை யாரும் நிர்ணயம் செய்வது இல்லை. 36 வாரங்களுக்கு முன்னும் பின்னும் அதன் தாங்கு தன்மை  இருப்பது யாரோ நிர்ணயம் செய்தது அல்ல. அதன் வலு அவ்வளவுதான். அதன் பின் சிசுவாய் வெளித் தள்ளப்பட்ட முதற் கணத்தில் தன்னிச்சையாய் பிராணனை சுவாசிக்க ஆரம்பிப்பது மூளையில்  இருக்கும் ஏதோ ஒரு நியாபகத்தின் தொடர்ச்சி அல்லது வேறு வழி இல்லை சுவாசிப்பதற்கு  என்றும் கொள்ளலாம்... தொப்புள் கொடி அறுபட்ட கணத்தில், தானே தன்னை நிறுவிக் கொண்டு உடல் வளர்க்கும் சுப நிகழ்வு அல்லது அசுப நிகழ்வு  நிகழ்ந்து விடுகிறது.

வயிறு ஏதோ செய்ய அந்த அவஸ்தையை வெளிக்காட்ட சப்தம் எழுப்ப  வயிற்றுப் பசி தீர்க்கப்படும் அரசியலை குழந்தையாய் நாம் கற்றுக் கொண்டு இன்னமும் எது எதற்கோ அழுது கொண்டிருக்கிறோம். தொடர்ச்சியாய் பசி  தீர்க்கப்பட்டுக் கொண்டேதானிருக்கிறது. எதற்குப் பசி தீர்க்கப்பட வேண்டும் அல்லது ஏன் பசிக்க வேண்டும்? என்ற கேள்வியை எழுப்பிய போதுதான் ஏதேதோ திறப்புகளை வாழ்க்கை திறந்து கொடுத்தது எனக்கு.

சூன்யமே மூலம்... அந்த மூலத்தை நோக்கிய பெரும் சுழற்சியின் சிறு துகள்தான் நான் என்றறிந்த போது சுற்றி நடக்கும் ஓராயிரம் நாடகங்களின் அபத்தங்களை விளங்கிக் கொள்ள முடிந்தது. மனம் தடிக்க, தடிக்க அகங்காரம் கூடிப் போகும் அசிங்கம் விளங்கியது. நீங்களோ நானோ தனித்து இங்கு எதுவும் செய்யவில்லை. செய்யவும் முடியாது. எல்லாமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நீங்கள் மழை வேண்டும் என்று நிறைய தடவை நினைத்திருப்பீர்கள். ஏதோ ஒரு தடவை நீங்கள் நினைத்த அன்று எதேச்சையாய் மழை பெய்ய நான் நினைத்தேன் பெய்தது என்று சந்தோசப்பட்டுக் கொள்வீர்கள். 

இங்கே எல்லோரும் எல்லாருமாக முடியாது. யார் யார்க்கு என்ன சூழலோ, எது எது ஜீன்களில் நிறைந்து கிடக்கிறதோ அதுதான் உங்களையும் என்னையும் தீர்மானிக்கிறது. புறச்சூழல் நம்மை தீர்மானிக்க முடியும் என்றாலும் புறச்சூழலை தீர்மானிப்பது  பெரும்பாலும் நமது பிறப்பாகிப் போகிறது. 100 கிலோ மீட்டர் வேகத்தில் உங்களாலும் என்னாலும் ஓட முடியும் என்றாலும் நமக்கு முன்னால் ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் ஒருவனால் மணிக்கு 10 கிலோ மீட்டர்தான் ஓட முடியுமென்றாலும் அவனை நாம் அடைய சில காலம் ஆகும். சில காலம் என்று நான் சொல்வது சில, பல பிறப்புகள்... தூரம் என்று நான் சொல்வது பொருள் பலம் அல்ல. ஆன்ம பலம். ஆன்ம புரிதல்.

தயவு செய்து பொருள் பலத்தை ஆன்மீகத்தின் பக்கத்திலே கூட கொண்டு வராதீர்கள். சாதாரண விசயங்களை எப்போதும் அசாதாரணமான விசயங்களோடு கோர்த்து விடாதீர்கள். தெருவோரங்களில் படுத்து உறங்கி பிச்சை எடுத்து உண்ணும் ஒரு பிச்சைக்காரனின் நிம்மதி மெர்ஸிடிஸ் பென்ஸ் காரில் செல்லும் பணக்காரனிடம் இருக்காது என்னும் உண்மை உங்களுக்குத் தெரியும்தானே..? மேலை நாட்டு கலாச்சாரம் நமது பாரத தேசத்திற்குள் எப்போது எட்டிப்பார்த்ததோ அப்போதுதான் வர்க்க பேதம் என்று ஒன்று இருக்கிறது என்று நாம் அறிந்து கொண்டோம். சாதி பேதம் என்னும் பாகுபாடுகள், மற்றும் அடக்கு முறைகள் மெல்ல மெல்ல எட்டிப்பார்க்க ஆரம்பித்ததே கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு பிற்பாடுதானே..?

ஏழை, பணக்காரன், முதலாளி, தொழிலாளி என்பதெல்லாம் நமக்குத் தெரியவே தெரியாது. இதை நான் சொல்வதாலேயே.... ஏதோ சமீபத்திய காலத்தை நான்  சொல்கிறேன் என்று பகுத்தறிவு ஞானிகள் என்னிடம் தர்க்கம் செய்ய வரவேண்டாம். உங்களின் வரலாற்று அறிவுக்கு முன்பும் இந்த தேசம் இருந்தது. சித்த புருஷர்களும் முனிவர்களும் ஆன்ம தெளிவு பெற்றவர்களும் நிறைந்து  கிடந்த காலம் அது. அரசனாயிருந்தாலும், அறிஞனாயிருந்தாலும், குடியானவனாய் இருந்தாலும் முக்தி என்னும் விடுதலையை நோக்கி தங்களை நகர்த்துவதே பெரும் பேறு என்று எண்ணி வாழ்ந்த காலம் அது. முக்தி என்பது விடுதலை.  சுதந்திரம்.  ஏதோ ஒரு கடவுளையும், மதத்தையும் அமைப்பையும் உடைத்து பகுத்தறிவோடு எழுந்து நிற்கும் ஒரு வீரியம். 

முக்தி அடைந்தவர்களை யாரும் கட்டுப்படுத்த இயலாது. 18 சித்தர்களும் பகுத்தறிவுவாதிகளே..! அவர்கள் எந்த மூட நம்பிக்கையும் விதைக்கவில்லை. அவர்கள் இந்த பேருண்மையை வாழ்க்கையை மறுத்து உணரவில்லை. வாழ்க்கையை ஏற்று உணர்ந்தவர்கள். இருப்பதின் வீரியம் அறிந்து, காரணம் அறிந்து, சக்தியை உணர்ந்து மூடநம்பிக்கைகளை உடைத்துப் போட்டு சீறிப்பாய்ந்த புலிகள் இவர்கள். வாழ்க்கையை  ஏற்று நகர்தல் வேறு, மறுத்து நகர்தல் வேறு. முதலாவது பாஸிட்டிவ் எனர்ஜி, இரண்டாமாவது நெகட்டிவ் எனர்ஜி.

பணம் இருந்தால் எல்லாம் அப்போது மரியாதை இல்லை. தெளிவு, புரிதல், நிம்மதி இருப்பவனை தேடி எல்லாமே வந்தது. அப்படி வரும் போது அதை எல்லாம் நிராகரித்து இயற்கையோடு இயைந்து அவர்கள் வாழ்ந்த காலங்கள் அவை. நீங்கள் வசதி என்று எதை எதை எல்லாம் சொல்கிறீர்களோ அது எல்லாம் நவீனம் நமது மூளையில் சுமத்தி வைத்திருக்கும் பொய்கள்.

குளிர் சாதன அறைக்குள் இருப்பதை வசதி என்று சொல்வதற்கு முன்னால், குளிராய் காற்றும், மரங்களும் இல்லாமல் வெயிலில் வெந்து செத்த ஒருவனின் மூளையில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள உருவானது அது என்று உணருங்கள். அது வசதி இல்லை. குறைபாடுகள் கொண்ட சூழல்கள் கொண்டவன் தன்னைக் காத்துக் கொள்ள கண்டு  பிடித்த ஒரு அறிவியல் சாதனம். நீங்களும் நானும் எல்லா மரத்தையும் வெட்டி சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவித்து விட்டு, இயற்கையின் வளங்களை எல்லாம் அழித்து விட்டு....திட்டமிடல் இல்லாமல் இன்று சீரழிந்து கொண்டிருக்கிறோம்.

ஆன்மீகம் பொருளோடு தொடர்புடையது அல்ல. அது அகத்தோடு தொடர்புடையது. மனிதர்களுக்குள்ளேயே பிரிந்து நின்று கொண்டு அதிகாரம் செய்து கொண்டு தங்களை ஏக போக ராஜாக்களாய் காட்டிக் கொள்கிறார்கள். கோபப்படுகிறார்கள், அதிகாரம் இருப்பதாலேயே..மீசை முறுக்கி கொக்கரிக்கிறார்கள்... புள்ளி விபரங்களை புத்திக்குள் பதுக்கிக் கொண்டு  தேவைப்பட்ட போது வார்த்தை ஜாலங்கள் செய்து தங்களை அறிவாளிகளாக காட்டிக் கொள்கிறார்கள்...

பூமி மெலிதாய் ஒரு நடுக்கம் காட்டி...அதட்டும் போது ஒடுங்கிக் கொள்கிறார்கள். நிலையாமை பற்றி பேசுகிறார்கள். மரணம் என்ற ஒன்று தன்னை நெருங்கும் போது இவர்களுக்கு கடவுள் சிந்தனை வருகிறது. அடுத்து என்ன நிகழும் என்று தெரியாத போது புத்தி பித்து பிடித்துப் போகிறது. வாழ்க்கை எல்லாமுமாக இருக்கிறது. எதுவும் எவராலும் இங்கு நிகழவில்லை என்பதை பின்பு மறந்து போகிறார்கல். வெள்ளைச் சட்டைகளும், வேட்டிகளும் கோட் சூட்களும் மண்ணோடு மட்கிப் போக உடலை மண் தின்னப் போகும் காலத்தை இவர்கள் நினைத்துக் கூட பார்க்க விரும்புவதில்லை.

இது சுழற்சி...இயற்கையின் தாண்டவம்!

உங்களுக்கும் எனக்கும் ஏதோ ஒன்று நிகழ்வதற்கு பலவிதமான சூழல்களும் மனிதர்களுமே காரணமாகிறார்கள். என்னால் ஆனது....நான் செய்தேன்.... என்னால் மட்டுமே முடியும்.. நான் யார் தெரியுமா... என்று சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளுக்குப் பின் இருக்கும் பேதைமையை உணராமல்

மனமற்று இருக்கையில்
நானும் நீங்களும்
யாருமற்றுப் போக
செயல்களின் விளைவுகள்
ஏதேதோ நிகழ்த்த நிகழ்த்த
நித்தம் நடக்கிறது
இங்கே ஒரு ருத்ர தாண்டவம்!!!!


தேவா. S





திணற வைக்கும் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம்...!

$
0
0


திருச்செந்தூர் கோயில் அர்ச்சகர்களுக்கும் பணியாளர்களுக்கும் பிரச்சினைன்னு நியூஸ்  பார்த்தேன். ஆமாம் பங்காளிகளுக்குள்ள சண்டை வரத்தானே செய்யும். ஊர அடிச்சு திங்கிற பக்கீஸ்கள் வருமானம் வர்ற இடத்துல அடிச்சுக்கிறது நியாயம்தானே? ரொம்ப தொலைவுல இருந்து  வர்ற ஆளுகளுக்குத்தான் கருவறைக்குள்ள இருக்க செந்தில் நாதன் டெர்ரரா இருப்பாரு அங்கனக்குள்ளயே பொழப்ப ஓட்டிக்கிட்டு இருக்க இந்த மாறி ஆளுகளுக்கு அவரு கல்லு சிலை கூடக் கிடையாது  ச்ச்சும்மா சின்னப் புள்ளைங்க வச்சு வெளையாடுற டெடி பேர், மரப்பாச்சி பொம்ம மாதிரிதான். பின்னே பயம் இருந்தா நெஞ்ச நிமித்திக்கிட்டு பேசுவாய்ங்களா என்ன? அதுவும் அக்கிரமத்தை..

சூரபத்மன சூப்பர் ஹீரோவா நின்னு தமிழ்க் கடவுள் துவம்சம் பண்ணின இடமாச்சேன்னு எனக்கு திருச்செந்தூர் மேல எப்பவுமே ஒரு கிரேஸ் இருந்தது என்னவோ வாஸ்தவம்தான். கடல் வழியா வந்த அசுரன கடற்கரைய விட்டு  ஊருக்குள்ள வர விடாம போட்டுத் தள்ளிட்டு ஸ்டைலா அவர் வேலை (வேலைன்னா ஜாப் இல்லை....வேல்...வேல்...வெற்றி வேல்!!!!) தூக்கி எறிஞ்ச இடத்துல இயற்கையா உருவான சுனையில (நாழிக் கிணறு) குளிக்க எக்ஸ்ட்ட்ரா 5 ரூபா கொடுத்தா மூணு வாளி எக்ஸ்ட்ராவா கிடைக்கும் அப்படியே காசு வாங்கி தண்ணிய தலையில ஊத்துனாலும், அந்த இடம் கலீஜ்ஜாதான் இருக்கும்ன்ற அரசியல எல்லாம் இப்போ நான் பேசலை சார்...

சாமி கும்பிட போன இடத்துல எக்ஸ்பிரஸ், ஸ்பெசல், சாதா, சூப்பர் சாதான்னு போர்டு வச்சு அதுக்கு இம்புட்டு இம்புட்டு காசு கொடுக்கணும்னு பப்ளிக்கா போட்டு இருந்தத போட்டோ மட்டும் புடிச்சது தப்பா? எக்ஸ்பிரஸ் தரிசனத்துக்காக 250 ரூபாய் இருக்க வசதியானவங்க எல்லாம் இப்டிக்கா வாங்க, வக்கத்த பக்கிக எல்லாம் 20 ரூபாய் கொடுத்து அப்டிக்கா போங்கன்னு போட்டு இருந்தது நியாயம்தான்னு நம்ம பாழாப் போன அஞ்சறிவுக்கு எட்டாம....போட்டோ எடுத்தது தப்புன்னு என் மேல கொலை வெறியா பாஞ்ச அந்த கொளுக் மொழுக் குருக்கள் கிட்ட சண்டை வேற போட்டுக்கிட்டு இருந்தேன்.

சாமி பொதுதானே..? செந்தில் ஆண்டவர் ஏழைக்கும் பணக்காரனுக்கும் எகத்தாளம் புடிச்சவனுக்கும், குடுமி வச்சவனுக்கும், முழுக்க சிரைச்சவனுக்கும்  ஒரே சாமிதானே? அப்புறம் எதுக்கு காசு இருக்கவன மட்டும் அவர் கிட்ட போய் பாக்க வைக்கணும்? 250 ரூபாய் காசு இல்லேன்னா என்னை தூரத்துல நின்னு பாருடா பக்கின்னு அவரா சார் சொன்னாரு? அவரே கோமணத்தோட ஆண்டிப்பண்டாரமா நயாப் பைசா இல்லாம நின்னவருதானே? தமிழ்க் கடவுளாச்சே...தமிழர்கள ஏன் சார் காசு இருக்கவன் இல்லாதவன்னு பிரிச்சு கிட்டயும் எட்டியும் நின்னு கும்பிடச் சொல்லணும்...? அப்படி சொன்னா என்னா சார் அவரு சாமின்னு கேட்டதுக்கு பதில் சொல்ல முடியாத குருக்கள் அண்ணாச்சி மந்திரங்கள மட்டுமே பொட்டத் தட்டு தட்டிருப்பாரு போல, நாம கேட்ட கேள்விக்கு ஒரு மண்ணாங்கட்டி பதிலும் சொல்லாம...


சார் இங்க போட்டோ எடுக்கக் கூடாது. அது பகவானா இருந்தாலும் சரி பப்ளிக் நோட்டீஸா இருந்தாலும் சரி எடுக்க கூடாதுன்னா கூடாதுன்னு என்கிட்ட எகிற ஆரம்பிச்சார். பொதுவா எல்லா கண்ணும் படுறமாதிரி வச்சு இருக்க அறிவிப்பு பலகைய எடுக்க கூடாதுன்னு நீங்க எப்டி சொல்வேள்...நான் பிளாக்கராக்கும்(!!!!!)...இதை எல்லாம் சும்மா விடமாட்டேனாக்கும்னு பதிலுக்கு நானும் எகிற.. அந்த அர்ச்சகர் இதுக்குமேல இந்த அம்பிய நம்மளால சமாளிக்க முடியாதுன்னுட்டு என்னை அங்க டிக்கட் கொடுத்துட்டு இருந்த உயர்(!!!)அதிகாரிகிட்ட தள்ளி விட்டார்.

அதிகாரின்னாலே நம்ம ஊர்ல சிரிக்க கூடாது. அதுவும் இவர் குத்தகை எடுத்த அதிகாரி போல...என்னா சார் வேணும் ஒங்களுக்கு..இங்க போட்டோ எல்லாம் எடுக்க கூடாதுன்னு என்னை மிரட்ட ஆரம்பிக்க... 'அது இல்லிங்க சார் நான் கோயில் உள்ள எல்லாம் எடுக்கலை ஜஸ்ட் நீங்க போட்டு இருக்க அறிவுப்ப தானுங்க சார் எடுத்தேன்....ஆமா டிக்கட் கொடுத்துட்டு இருக்கீங்களே... நீங்க கவர்மெண்ட் சர்வெண்டா சார் 'னு கேட்டேன் ...அவ்ளோதான் வந்துச்சுப் பாருங்க அவருக்கு கோவம்...

சார்...கோயிலு கவர்மெண்ட் கோயிலு, சாமி கவர்மெண்ட் சாமி, நாங்களும் கவர்மெண்ட் ஆளுங்கதான்..ன்னு எகிறினாரு....

சாமி கவர்மெண்ட் சாமியா எப்டி சார் இருக்க முடியும்னு நான் சத்யராஜ் படமெல்லாம் பாத்த அனுபவ தெனாவெட்டுல கிண்டலா கேக்க அதிகாரி கடுப்பாகிப் போயி..இஷ்டம் இருந்தா வாங்க இல்லேன்னா வேற இடம் பாருங்கன்னு பிச்சைக்காரன விரட்ற மாதிரி விரட்டி வரிசையில போயி நின்னு டிக்கட்ட வாங்குங்கன்னு சைகையில சொன்னாரு....

கையில என் மகள பிடிச்ச மேனிக்கு சகதர்மினி போற வர்ற எடத்துல எல்லாம் அன்னியன் அம்பி மாதிரி ரூல்ஸ் பேசுதே இந்த மனுசன், இதுக்கு கிறுக்கு எதுவும் பிடிச்சுப் போச்சா என்னன்னு தெரியலயேன்ற மாதிரி....தேமேன்னு ஒரு பார்வை பாத்து " ஏங்க...ஏதாச்சும் ஒரு டிக்கட்ட வாங்கிட்டு வாங்க சீக்கிரமா... வந்தமா சாமியக் கும்பிட்டமா போனமான்னு இல்லாம எதுக்குங்க வந்த இடத்துல சண்டை எல்லாம்... இன்னும் கோயிலுக்குள்ளயே நாம போகலியே மாமான்னு கேட்டாப்டி....

சரி கிரகம் தொலையிதுன்னு...க்யூவுல டிக்கட் எடுக்க நிக்கையில தலைவர் படம் பாக்க நிக்கிற மேரியே ஒரு ஃபீலிங்கு எனக்கு... பி.பி எறங்காம 20 ரூபா டிக்கெட் எடுத்துக்கிட்டு தரை டிக்கட்ல முருகன பாக்கப் போயி, நான் கூட்டிட்டுப் போறேன் சாமி கிட்டக்கன்னு உள்ளுள்ள பிஸினெஸ் பேசின ஒரு குருக்கள அன்போட மறுத்துட்டு  போன என்னை சரியா அரை நிமிசம் செந்தில் ஆண்டவர் முன்னால நிக்க வச்சுட்டு அங்க இருந்த அர்ச்சகர் நம்மள பிடிச்சு தள்ள அப்டியே பிரகாரம் விட்டு வெளியில வந்ததுதான் தாமதம்...

யாரோ ஒரு நல்ல மனுசன் குடம் புல்லா அர்ச்சனை பாலை வச்சுக்கிட்டு இருந்தவரு அய்யோ பாவம்னு இரக்கப்பட்டு ஒரு கிளாஸ்ல பால் கொடுத்தார். அட இந்தக் கோயில்ல நாம திருப்திப் பட்டுக்கிற மாதிரி இவராச்சும் இருக்காரேன்னு பெருமிதத்தோட புள்ளைக்கும் பொண்டாட்டிக்கும் ஆளுக்கு ஒரு வாய் பாலைக் கொடுத்துட்டு காலி டம்ளர அந்த புண்ணியவான் கிட்ட கொடுத்து ரொம்ப தேங்க்ஸ் சார்னு சொல்லிட்டு நகரப் போனேன்....அவ்ளோதான்...

கபால்னு கையப்புடிச்சு நிறுத்தி, என்னா சார் போறீங்க...? 20 ரூபா கொடுங்க சார்ன்னு அந்தப் புண்ணியவான் அன்னியனா மாறி முறைக்க...எ...எ..துக்க்ங்க சார் காசுன்னு நான் கேட்டதுக்கு....பாலை குடிச்சீங்கள்ள...அதுக்கு என்று தெனாவெட்டினார். அது நீங்கதானே கொடுத்தீங்கன்னு நான் சொல்ல...நீங்க ஏன் வாங்கினீங்கன்னு அவர் கேக்க...கொடுத்தா வாங்கத்தானே செய்வோம்னு நான் சொல்ல்ல...

மறுபடி அங்க வெடிக்க இருந்த ஒரு கலவரத்தை ஓரமா நின்னு அப்பாவியா வேடிக்கைப் பார்த்துட்டு இருந்த பொண்டாட்டிக்காகவும் பிள்ளைக்காகவும் கேன்சல் பண்ணிட்டு இருபது ரூபாயை தேடிப் பிடிச்சு கொடுத்துட்டு நடந்து போயிட்டு இருக்கும் போது சத்தியமா சூரபத்மன முருகன் வதம் செய்த கதையோ, முருகனோ, தமிழோ, பக்தியோ, பாசமோ, அமைதியோ, எந்த வித தாக்கமும்  எனக்கு இல்லை. என்ன ஒண்ணு ஒரே பயமா இருந்துச்சு....அடுத்து எவன் என்ன கேப்பானோ எப்டி எஸ்கேப் ஆவுறதோன்னு....

இப்போ பாத்துக்கிட்டீங்கன்னா கோயில் அதைச் சுற்றி இருக்கும் மக்கள்னு அவுங்க வாழ்க்கை அதைச் சார்ந்துதான் இருக்கும்ன்றத நாம ஏத்துக்கிட்டுதான் ஆகணும் ஆனா அதுல ஒரு தர்மம் இருக்கணும் இல்லையா..? ஆளாளுக்கு டீலிங்க் பேசுறதுக்கு அது என்ன வாரச் சந்தையா...? இல்லை... மன நிம்மதிக்காக வந்து போற கோயிலா?

அதுவும் இல்லாம டாஸ்மாக்ல கோடி கோடியா சம்பாதிக்கிற கவர்மெண்ட்... சாமி கும்பிட வர்ற இடத்துலயாச்சும் ஏழை பணக்காரன்ற பாகுபாடு இல்லாம ஒரே மாதிரியா மனுசங்கள டீல் பண்ணினா என்ன? காசு கூட கொடுக்குறவன் கிட்டப் போயி பாக்கலாம்ன்னு எந்த சாமி சொன்னுச்சுன்னு எவனாலயாச்சும் சொல்ல முடியுமா? கோயிலுக்கு உள்ள போறதுக்கு முன்னாலயே அச்சச்சோ நம்மகிட்ட காசு இல்லேயேன்னு ஒரு மனுசன மனசுக்குள்ள புலம்ப வைக்க எந்த தெய்வமும் ஒத்துக்காது.. அப்படியே ஒத்துக்கிட்டாலும் அதுக்குப் பேரு கடவுள் இல்லை சாத்தான். சத்தியமா காஷ்மீர் பார்டர சுத்தி வர்ற ஒரு பதட்டத்தோட என் முதல் திருச்செந்தூர் கோயில் பிரவேசம் முரட்டுத்தனமா நடந்து முடிஞ்சது.


கோயிலுக்கு வெளியில வந்து சட்டைய மாட்டிக்கிட்டு வேட்டிய இறுக்கமா கட்டிக்கிட்டு நடந்துக்கிட்டு இருக்கப்ப ஒரு ஆத்தா கையில கோலோட வந்து குறி பாக்குறேன் சாமி உங்களுக்கு வந்த கஷ்டம் எல்லாம் தீந்து போச்சுதுன்னு சொல்லவும் நான் திரும்பவும் கோயில ஒரு லுக் விட்டுக்கிட்டே பாசமா பேசுன அந்த ஆத்தா திருப்திக்காக கை ரேகை பார்க்க ஒக்கார்ந்தேன்...

மூத்தது பொண்ணு ....அடுத்து முருகன் வந்து பொறக்க போறான்...முருகன் வந்து பொறக்கப் போறான்னு ஆத்தா ஆருடம் சொல்லவும்... அது ஒண்ணுதான் கொறைச்சல்...ஏற்கெனவே கல்யாணம் ஆன புதுசுல பழனில முருகன் பொறப்பான்னு ஒரு அக்கா சோசியம் சொன்னிச்சு...இந்த முருகாயி வந்து பொறந்தா...மறுபடியுமா....

பொறவு என்ன..

நல்லா சாப்டு ஆத்தான்னு... ஆத்தா கையில 100 ரூபா காசைக் கொடுத்துட்டு.... கோயிலுக்குள்ள இருக்க ஆளுகள மட்டுமாச்சும் நல்லபடியா காப்பாத்துய்யா எங்கய்யா முருகையான்னு நேந்துகிட்டு ஊரப்பாக்க வந்து சேந்தோம் அம்புட்டுதேன்...!


தேவா. S


எங்கே எனது கவிதை...?!

$
0
0


விடை தெரியாத கேள்விகளுக்குள் தள்ளி விட்டுச் சென்றவளை மீட்டெடுக்க முடியாத மெளனம் என்னை பேயாய்  அறைந்து கொண்டிருக்கிறது. காற்றின் கவனமெல்லாம் திறந்திருக்கும் என் வீட்டு ஜன்னல்களை பெயர்த்தெடுத்துப் பிடுங்கி எங்கோ எறியவேண்டும் என்பதாயிருந்தது... நிலவு தொலைந்து போயிருந்த இருட்டு பூமியின் முரட்டு நிமிடங்களோடு நான் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தேன்.

வீட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் இறைந்து கிடக்கும் அவளின் நியாபகத் துகள்களுக்கு எல்லாம் என்னவாயிற்று இன்று? சூறாவளியாய் சுழன்று கொண்டே அந்த  சுழலுக்குள் என்னைப் பிடித்து இழுத்து நிறுத்தி வைத்து எங்கோ பெய்யும் மழையொன்றுக்கு திசை நோக்கும் வெட்டுக்கிளியாய் தவக்கோலத்தில் என்னை நிறுத்தி வைக்கின்றன. வேல் விழிகள் விஸ்வரூபமெடுத்து என் கண் முன்னே இமைத்து இமைத்து என் நினைவுகளை பிழிந்தெடுக்கும் கோர நிகழ்வொன்றினை  பின்னொருநாளில் சமைத்து அவனுக்கு சங்கடங்கள் கொடுக்கலாம் என்றுதான் அன்று அவள் என்னை  பிரிந்து சென்றாளா?

எங்கிருந்தோ இசைக்கும் ஏதோ ஒரு புல்லாங்குழலும் இன்னிசை கீதமென காற்றில் பறந்து வர மனமின்றி காதலனைப் பிரிந்த காதலியொருத்தியின் புலம்பலாய் அடைத்திருக்கும் என் வீட்டு வாயிலை திறவாமலேயே என் செவி வழிச் சென்று புத்தியோடு புணர்ந்து பித்த நிலைக்கு என்னை தள்ளுவதும் ஏனோ...? அடிப்பெண்ணே... என் முன்னே நீ நிற்பது போல காட்சிகள் எல்லாம் மருட்சியாய் வந்து எட்டிப்பார்க்கும் இந்த நடு நிசியை தொட்டு ஜதி சொல்லி உன் நினைவுகள் கனவுகளாய்... தொட்டுச் சிரித்து என்னைச் சீண்டத்தான் வேண்டுமா?

சில் வண்டுப் பூச்சிகளின் சிதறல் சப்தங்களை உன் கொலுசுகளின் ஒலியேதான் என சங்கப் பிரகடனம் செய்யும் என் மனசொன்றும் இழுத்து அடித்து நெருப்பில் புரட்டிப் போடும் இரும்பில்லை என்றறிவாயோ நீதான்..! கொடும் காதலின் கடும் நினைவுகள் காட்டாற்று சுழற்சியாய் என்னை இழுத்துச் செல்லும் வேகத்தில் இதோ... இப்போதோ, அப்போதோ நான் நினைவு தப்பிப் போவேன் என்று எழும் எண்ணத்தின் ஓரத்தில் ஒயிலாக நீ நின்று பார்க்கும் பார்வைக்கு நான் எழுதிக் கொண்டிருக்கும் இறுதி வரிகளிலும் உன் மீதான காதலைத் தவிர ஒன்றுமில்லையடிப் பெண்ணே...!

ப்ரியங்களைச் சேர்த்து வைத்து, சேர்த்து வைத்து அவற்றை உன் புன்னகையிடம் பறிகொடுத்த பழைய நாட்களின் ஞாபகங்களில் இப்போது பழுப்பேறிக் கொண்டிருக்கிறது.  இடைவிடாத காலத்தின் நகர்வுகளால் இன்னமும் அது செல்லரித்துப் போகாமல் கசங்கிக் கிடந்தாலும் பசுமையாய்த்தான் இருக்கின்றன என்பதை  என் புலம்பல்களை எல்லாம் குவித்துப் போட்டு எரியூட்டி எங்கோ தூரத்திலிருக்கும் உனக்கு புகையாகவாவது வெளிப்படுத்திக் காட்டுகிறேன்... அப்போதாவது இன்னமும் உன்னை நினைத்துக் கொண்டிருக்கும் உயிர் பிரியும் என் வேதனைக்கு மறுபடியாய் காதல் கழிந்த சினேகத்தில் எனக்கொரு கடிதமாவது எழுதுவாயா நீ..?

ப்ரியமுள்ள என்று தொடங்கி சமகாலத்து உன் நிர்ப்பந்தங்களை பிழைத்துப் போகச் செய்யாமல், அன்புள்ள என்று தொடங்கி எங்கோ பிணைக்கப்பட்டுள்ள உன் அன்பினை எனக்கு கொடுத்து உன்னை சிதைத்துக் கொள்ளாமல், என்னவனே என்றழைத்த காலங்களை எல்லாம் உன் நினைவுகளிலிருந்து எரியூட்டிவிட்டு...

நலமா...? 

என்ற ஒற்றை வார்த்தையால் காகிதத்தில் உன் உதடு பிரிப்பாயா?

உன் இமைகளுக்குள் நான் ஒளிந்து கொண்டு இருவிழிகளுக்குள்ளும் ஓடிப்பிடித்து விளையாடிய கிறக்க நாட்களை எல்லாம் அந்த ஒற்றை வார்த்தையை கொண்டு நான் மீட்டெடுத்து என்னை உயிர்ப்பித்துக் கொள்வேன் என்பதை நீ அறியாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் எனக்கான உன் கடிதம்...

நலமா? 

என்ற வார்த்தையோடு மட்டுமே முடிந்து விடட்டும். வார்த்தைகள் எல்லாம் இதுவரையில் என்ன சொல்லிச் சென்று விட்டன நம்மிடம்? வாழ்க்கைதான் என்ன சொல்லக் காத்திருக்கிறது நமக்கு...? எங்கோ இருந்து யாரோ நமது பிரியத்துக்குரியவர் நம்மை நலம் விசாரிப்பதை விட என்ன திருப்தியைத் தந்து விடப்போகிறது ப்ரியங்கள் என்னும் பொய்யை நிரப்பிக் கொண்டு ஜாலம் செய்யும் இந்த வார்த்தைகள்...?

விளக்க முடியாதது எல்லாமே சொல்ல முடியாதது பெண்ணே! இல்லாதது எல்லாமே பிரம்மாண்டமானது. வாக்கியத்துக்குள் வகைப்படுத்த முடிந்த பொய்களை உண்மை என்று நம்பிக் கொண்டிருந்து விட்டு ஏமாற்றத்தில் மரித்துப் போகும் வழமையை விட்டாவது நான் விலகி இருக்கும் வரம் கொடு எனக்கு. கனவுகள் எல்லாம் எப்போதுமே கனவுகள்தான்... என்று முன்பொரு நாள் உன்னிடம் சொல்லியது போலத்தான்... இபோதும் சொல்கிறேன் கனவுகள் நிஜமாகிப் போவதில் யாதொரு வளமையும் இல்லை, செழுமையும் இல்லை. நிறைவேறாத கனவுகளின் வசீகரத்தை வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் ஒரு போதும் கொண்டு வந்து விடுவதுமில்லை.

சிறகடித்து வானில் பறக்கவேண்டும் என்ற கனவின் மீது இருக்கும் ஈர்ப்பு சிறகுயர்த்திப் பறக்கும் போது என்ன ஆகும்? கடந்து போகையில் அவை இறந்து போகின்றன. கனவுகளோ நிகழாமல் எப்போதும் பட்டாம்பூச்சியாய் நம்மைச் சுற்றித்  ததும்பித் ததும்பி உற்சாகமாய் எப்போதும் பட படக்கின்றன. என் காதலுக்கு நீ கனவாகவே இருந்ததனால் இதோ...

என் காதலும் வசீகரக் கனவாய் என்னுள் பட்டாம் பூச்சியைப் போன்று சிறகடித்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை முழுக்க, முழுக்க நிஜத்துக்கு மட்டுமே சொந்தமானது அல்ல... அப்படியாய் இருந்தால் அது எப்போதோ வறண்டு போயிருந்திருக்கும். கனவுகளும் கற்பனைகளும் இழுத்துப் பிடித்து வைத்திருக்கும் இந்த வாழ்க்கை அழகின் பரிபூரணத்தை அனுபவிப்பதைப்  போல வேறென்ன சுகமிருக்க முடியும்... சொல்...?

இதோ நான் எழுதிக் கொண்டிருக்கும் வார்த்தைப் புலம்பல்களுக்கு நடுவே எட்டிப் பார்த்து சிரிக்கும் உன் வசீகர முகம்.. காலங்கள் கடந்தும் அதே வசீகரத்தோடே இருக்கப்போவதை யார்தான் தடுக்க முடியும்...?

ஆதலால்....

நான் வேண்டியதைப் போல....நலமா..? என்ற ஒற்றை வார்த்தை விசாரிப்போடு எனக்கொரு கடிதம் எழுதி அதை வெறுமையால் நிரப்பி...இதோ இந்தக் காகிதத்தை நான் கிழித்துப் போடுவது போல நீயும் அதனை கிழித்து எறிந்து விடு....

எனக்கான வார்த்தைகள் எனில்... அவை எனக்காய் காற்றில் மிதந்து என்னிடமே வந்து சேரும்....

என் வார்த்தைகள் உன்னை வந்து சேரப் போவதைப் போல..

என் காதலை
மொழி பெயர்க்க
எத்தனை முறை
முயன்றாலும்
அனிச்சையாய் காகிதத்தில் 
உன் பெயரை மட்டுமே
எழுதிக் கொண்டிருக்கிறது
என் பேனா...!
ஜன்னலுக்குள்  வந்து
எட்டிப்பார்க்கும்
வானப் பெருவெளி
முழுதும் உன்
ஞாபகச் சிணுங்கல்களைக் கேட்டபடியே....
பகுதி விழிப்பு நிலையில்
எழுந்து கொண்ட
உன் நினைவுகளோடு
ஒரு ஓவியம்
வரைந்து கொண்டிருக்கிறேன்
நான்...!


தேவா. S



சித்திரமே செந்தேன் மழையே...!

$
0
0


படுக்கையிலிருந்தபடியே ஜன்னலைத் திறந்து பார்த்தேன். மழை சோ... வென்று பெய்து கொண்டிருந்தது. சூரியனை வரவே விடக் கூடாது என்ற பிடிவாதத்தில் மேகங்கள் அடர்த்தியாய் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தன. விடியற்காலை மழை எப்போதுமே வசீகரமானது. எனது படுக்கையை ஜன்னலின் ஓரத்தில் ஒட்டினாற்போலத்தான் போட்டு இருப்பேன். ஜன்னலைத் திறந்தால் தெருவோரம் இருக்கும் ஒரு செம்பருத்திச் செடி சிலிரிப்பாய் சிரிக்கும். மழையில் நனைந்தபடியே சபிக்கப்பட்ட மானுடா எழுந்து வெளியே வாடா என்று  என்னைப் பார்த்துக் கண்ணடித்தது.

நான் ஜன்னலோரம் தலை நகர்ந்து போர்வையைப் போர்த்திக் கொண்டே மழையின் வாசத்தை நுகர ஆரம்பித்தேன். மழை குளிர்ச்சியானது மட்டுமல்ல, மழை சிலிர்ப்பானது மட்டுமல்ல, மழை சந்தோசமானது மட்டுமல்ல, மழை வாசனையானதும் கூட. மழை பெய்து கொண்டிருக்கும் போது சில்லென்றிருக்கும்  ஜன்னலின் கம்பிகளை கன்னத்தோடு வைத்து தேய்த்துப் பார்த்திருக்கிறீர்களா நீங்கள்? மழையின் சிதறலை வாங்கிக் கொண்டு இரும்பிலிருந்து பிறக்கும் ஒரு உயிருள்ள வாசம் உடலின் எல்லா பாகங்களையும் சிலிர்க்க வைக்கும்.

மரத்தின் தலையில் விழும் தண்ணீர், அதன் இலைகள், கிளைகள், என்று உடல் முழுதும் மழையை வாங்கிக் கொண்டு பச்சையாய் ஒரு வாசத்தைப் பரப்பி நமது ஜீவனை கிளர்ச்சி அடைய வைக்கும். மண்ணின் வாசம் எல்லோரும் அறிந்ததே..தென் மாவட்டங்களில் இருக்கும் சில அப்பத்தாக்கள் மழைக்குப் பிறகான மண்ணின் வாசத்தில் மயங்கி செக்கச் சிவந்த அந்த மண்ணை ஆவலில் எடுத்துப் பிசைந்து தின்று கூட விடுவார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.

தலையைச் சுற்றி முக்காடு போட்டுக் கொண்டு பாதி உறக்கத்தில் மழையை இடுங்கிய கண்களில் பார்த்துக் கொண்டிருந்த என்னை முழுதாய் விழிப்பு நிலைக்கு கொண்டு சென்றது மழை. மழையை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கி இருந்தேன். வயிற்றுப் பிழைப்புக்காய் வாரம் முழுதும் ஓடுகையில் காலம் வாழ்க்கையை முழுதாய் தின்று ஏப்பம் விட்டு விடுகிறது. வார இறுதிகள் மட்டுமே ஜீவனுள்ள மனிதர் நாம் என்று கொஞ்சமேனும் உணர வாய்ப்பளிக்கிறது. அதுவும் இந்த வார இறுதி கடவுளின் ஆசிர்வாதத்தோடு தொடங்கி இருக்கிறது. 

மழையை வேடிக்கைப் பார்ப்பது போல வேறு மிகப்பெரிய சுகம் ஏதும் இந்த உலகில் இருக்கிறதா என்ன என்று நினைக்கத் தோன்றியது. சட, சடவென்று மேகம் மண்ணிற்கு மாறுவேடம் போட்டுக் கொண்டு மழையாய் இறங்கி பூமியை ஆசையாய் அணைக்கும் வேகத்தைப் பார்த்து அது வேகமா இல்லை மோகமா என்று எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. மழையில் நனைவது வேறு... அது வேறு மாதிரியான அனுபவம்... ஆனால் மழையை  வேடிக்கைப் பார்ப்பது வேறு. மழையில் நனைகையில் மழைத்துளிகளின் சிலிர்ப்பை உடல் வாங்கிக் கொள்ள மெல்ல மெல்ல தண்ணீர் உடல் நனைத்து, உள்ளம் நனைத்து ஒரு பரமானந்தத்திற்குள் நம்மைத் தள்ள மழை, மழை, மழை , மழை என்று மழையாகவே நாம் மாறி விடுவோம்.

வேடிக்கைப் பார்த்தல் என்பது ஈடுபடுதல் இல்லை. எந்த ஒரு நிகழ்விலும் உட்சென்று ரசிக்கும் போது ரசனை என்ற ஒன்று தனியே தெரிவதில்லை. ரசனை என்பது லெளகீகத்திற்கே உரித்தான ராஜ சொல். படைப்பவனுக்கு நிகழ்வது எல்லாமே அவன் இயல்பில் நிகழ்வது. படைப்பவர்கள் ரசிப்பவர்களாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இருக்க முடியாது. பெரும்பாலும் புதியதைப் படைப்பதில் இருக்கும் சுகத்தில்... ரசிப்பதில் முழுமை இல்லாமல் போய் விடும். ரசனையற்றவன் எப்படி படைக்க முடியும்..? என்று தானே கேட்கிறீர்கள்...

ஒன்றை இங்கே கவனிக்க வேண்டும். ரசனையாய் படைக்கத் தெரிந்த நிறைய பேருக்கு ரசிக்கத் தெரியாது. ரசிப்பில் மனம் நிற்காமல் புதிது புதிதாய் படைக்கவே அவர்களின் மனம் விரும்பி நகர்ந்து கொண்டே இருப்பதால் அவர்களுக்கு நின்று நிதானிக்க அவகாசம் கிடைப்பது இல்லை. முழுதாய் ரசிக்க முடிந்தவன் படைப்பவனையும் விட ஒரு படி மேல் என்று தான் நான் சொல்வேன். மழை என் முன் நர்த்தனமாடிக் கொண்டிருந்தது. மழையோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

மழை மண்ணில் பட்டு தெறித்து எழும் சப்தத்தை விழி மூடி செவிகளுக்குள் ஊற்றிக் கொண்டேன். ஈடுபாடு இல்லாத ரசனை என்பது பிரபஞ்சத்தின் வெகு சூட்சுமமான காதல் ரகசியம். தொடர்பற்று எங்கும் பரவிக்கிடக்கையில் புலன்கள்  எல்லாம் நம்மோடு பேசும், உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு சக்கரமும் மெல்ல மெல்ல திறந்து கொள்ள மூலாதாரத்திலிருந்து அதிர்வுகள் நகர்ந்து நகர்ந்து விசுத்தியை தொடும் போது காதுகள் அடைத்துக் கொண்டு மெல்ல, மெல்ல உடல்  நமக்கு மறந்து போகும். விமானத்தில் பறக்கும் போதும் உயரமான இடத்திற்கு லிப்டில் செல்லும் போதும் காதுகள் அடைத்துக் கொள்ளுமே அப்படியாய் காது அடைத்துக் கொண்டு புருவமத்தியில் ஆக்ஞா சக்கரம் கடக்கும் நொடியோடு சர்வமும் அடங்கிப் போக சஹஸ்ரத்தில் போய் ஜீவன் மோத.... புறத்தில் வழிந்தோடும் பெரு மழையைப் போல புத்திக்குள் ஏதேதோ அமிலங்கள் சுரந்து குளுமை பரவ....

கண்டதைப் பற்றிய கவனமற்று கண்டதை கண்டதாக, காண்பவர் யாரென்ற பிரக்ஞையற்று காணும் நிகழ்வொன்றோடு நாம் பிணைந்து கிடப்போம். விழி விரித்து மழையை உள்வாங்கிக் கொண்டிருந்தேன். ஒரு காலத்தில் மழையைக் கொண்டாடிய சமூகம் நமது சமூகம். வானம் பார்த்த பூமியிலிருந்து ஜனித்து வந்தவன் நான் என்பதால் எனக்கு மழையின் அவசியம் என்னவென்று தெரியும். மேகம் கருக்கும் போது அது எப்படி எங்களின் உயிர் நிறைக்கும் என்பதை வார்த்தைகளுக்குள் கொண்டு வர முடியாது.

மழை எங்களின் உயிர். மழையை... மழையாய் இப்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன். தேவைகள் வேறு விதத்தில் பூர்த்தியாயிருப்பதால் இப்போது நான் ரசிப்பதற்காக மட்டுமே மழை பெய்து கொண்டிருக்கிறது. விவசாயத்திற்குள் வாழ்க்கையை வைத்திருக்கும் வானம் பார்க்கும் மனிதர்கள் மழையை மண்ணில் தேக்கி வைத்துத்தான் தங்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதமளித்துக் கொள்வார்கள். மழை பெய்தால்தான் விவசாயம். மழை பெய்தால்தான் உணவு. மழை பெய்தால்தான் எல்லாமே. மழை பெய்யவேண்டும் என்பதற்காக மரம் வளர்ப்பார்கள். மழையைக் கொண்டு வரும் மரங்களை தெய்வங்களாகப் பார்ப்பார்கள்.

அரசமரம் நட்டு வைத்து அதிலே கடவுளைக் குடிவைப்பார்கள், ஆலமரம் வைத்து ஊர்ப் பிரச்சினைகளை அங்கே அமர்ந்து கூடிப்பேசி தீர்ப்பார்கள், வேப்பமரத்தை கடவுள் என்றே வணங்குவார்கள், பூவரசை வளர்க்கையில் பின்னால் வீடுகட்டலாம் என்றும், வேம்பு மருந்து என்றும் பனையும் தென்னையும் பணப்பயிர் என்றும்....

வளைத்து வளைத்து மரம் வளர்ப்பார்கள்... ஏனென்றால் மழைக்கு மரம் வேண்டும். மழை மனிதனுக்கு வேண்டும். சிக்கலில்லாத வாழ்க்கைக்கு செல்வம் வேண்டும் செல்வம் உள்ள வாழ்க்கையில் குறைகள் இருக்காது என்பதோடு மட்டுமில்லாமல் இயற்கையிடம் கையேந்திப் பெற்ற பொருளால் நான் என்ற அகங்காரமும் இருக்காது. அகங்காரம் இல்லாத இடத்தில் அன்பு நிறைவானதாய் இருக்கும், நிறைவான அன்பு சந்தோசத்தைக் கொடுக்கும்.

மழை....பிரபஞ்ச பெருஞ்சக்தியின் கருணை...! மழை மனிதனின் உயிர்....மழையை மனிதன் இப்போது வேடிக்கை  பார்ப்பதும் இல்லை, மழைக்காய் மனிதன் காத்திருப்பதும் இல்லை. மழை இப்போதெல்லாம் ஆச்சர்யமாய் போய் விட்டது. மழை பெய்தால் ஹையோ மழை பெய்கிறது என்று பத்து பேரிடம் சொல்வதற்காக மனிதர்கள் அலைகிறார்கள். சொல்லி சொல்லி மழையை ரசிப்பதாய் அலட்டிக் கொள்கிறார்களேயன்றி மெளனமாய் அமர்ந்து மழையை ரசிக்க யாருமற்று பெரும்பாலும் அனாதையாய்ப் பெய்கிறது மழை. மரங்களை வெட்டிய மனிதர்களை இயற்கையும் பழிக்குப் பழி வாங்கிக் கொண்டிருக்கிறது. காற்றின் போக்கு மாறும் போது மட்டும் கடமைக்கு வந்து ஊரைப் பழிவாங்கி விட்டு கோபமான விருந்தாளியாய் வேறு திசை நோக்கி ஓடிப் போகிறது அது.

யோசித்தபடியே புரண்டு படுத்து போர்வையை விலக்கினேன் ஜன்னலோரமாய் கன்னத்தில் கைவைத்து அமர்ந்தேன். மழை விடுவதாய் இல்லை. நானும்  மழையை விடுவதாய் இல்லை. எப்போது மழை நிற்கிறதோ அப்போது தொடங்கட்டும் எனது பொழுது...

மழையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்...!


தேவா. S






பாபாஜியும்...பாட்டாளிமக்கள் கட்சியும்...!

$
0
0


மகா அவதார் பாபாஜி புகைப்படத்தில் புன்னகைத்தபடியே இருக்கிறார். பாபாஜியை தனது திரைப்படத்தின் மூலம் அறியாதவர்களுக்கு அறிமுகப்படுத்திய ரஜினியும் இப்போது மெளனமாய் வேறு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆமாம் பாபா திரைப்படம் வெளிவந்து இப்போது 9 வருடங்கள் முடிந்திருக்கிறது. பாபா திரைப்படம் சரியாக ஓடவில்லை. வாங்கிய பணத்தை ரஜினி திருப்பிக் கொடுக்குமளவிற்கு நஷ்டம் ஏற்பட்டது. ரஜினியின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் பட்ட அத்தனை பேரும் ரஜினியை வசைபாட அது ஒரு தகுந்த தருணமாயிருந்தது. நிஜத்தில் ரஜினி அப்போது விழுந்திருந்தார் என்பதும் உண்மையே.

லெளகீகத்தின் மொழியாக்கத்தில் அது தோல்விப்படம் என்று சொல்லிக் கொள்ளலாம்....ஆனால் ஆன்மீகப்பார்வையில் மகாஅவதார் பாபாஜி ரஜினிக்கு மிகப்பெரிய ஆன்மீக உயரத்தைக் கொடுத்த திருப்பங்கள் நிறைந்த சூழல் அது.  இந்த ஒரு படத்தால் ரஜினி யாருமில்லை, அழிந்து விட்டான் என்று சொன்னால் இத்தனை வருடம் தான் நடித்துப் பெற்ற புகழ் எனக்குத் தேவையில்லை என்று ரஜினியே பேட்டிக் கொடுக்கவேண்டிய சூழல் கூட ஏற்பட்டது.

மகாஅவதார் பாபாஜியை ரஜினி மூலம் அறிந்து கொண்ட, ஆன்மீகத் தேடலில் இருந்த சாமனியர்களுக்கு பாபா திரைப்படம் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம்தான். ரஜினியின் வாழ்க்கையை இன்னும் மெருகேற்ற இந்தப் படத்தை ஒரு மையப்புள்ளியாய் மகாஅவதார் பாபாஜி பயன்படுத்திக் கொண்டார். ப்ரியமுள்ள சீடர்களை ஒரு குரு எப்போதும் கைவிடுவதில்லை என்பதோடு மட்டும் இல்லாமல் ஆன்மீகத்தை அவ்வளவு எளிதாய் கமர்சியலாய் கொண்டு சேர்த்துவிடவும் முடியாது என்ற பாடத்தையும் அந்தப் படத்தின் மூலம் தனது சீடனுக்கு உணர்த்தவும் செய்தார். சத்தியத்தை உணர்ந்த ஞானியர்கள் கூட ஆன்மீகத்தை கமர்சியலாக்கும் இடத்தில் சறுக்கி விழுந்து அவமானப்பட நேரிடுகிறது.

பாபா திரைப்படம் வணிகரீதியாய் வெற்றி பெறாமல் இருந்தால்தானே பாபாஜியை ரஜினி இன்னும் நெருங்க முடியும். படத்தின் தோல்வியை விமர்சித்த 10ல் ஒருவர் பாபாஜியை மட்டும் மேலதிகமாக தெரிந்து கொள்ள முடிந்ததே அன்றி அந்தப்படத்தில் ரஜினியைப் பற்றி பேச ஒன்றுமே இல்லாமலும் போனது. இதுதான் அந்தப் படம் வெளி வந்ததின் விதி. ரஜினிக்கு இந்த அனுபவம் வேண்டும் என்று மகாஅவதார் பாபாஜி நினைத்தது தூய உள்ளம் கொண்ட ஒரு சீடனுக்கு குரு கொடுத்த பரிசு.

இப்படியான ஒரு ஆன்ம நியதியில் பாபாஜி தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் ஆன்மத்தேடல் உள்ள மனிதனுக்குள்ளும் புகுந்து அதிசயங்கள் நிகழ்த்த ரஜினையை கருவியாக்கிக் கொண்டிருக்கையில் கடந்தகால கர்மபலன்களின் விளைவாக இந்த நிகழ்வின் இடையில் வந்து விழுந்தவர்கள்தான் பாட்டாளி மக்கள் கட்சியினரும், ஐயா ராமதாஸும், அண்ணன் அன்புமணி ராமதாசும்...

புகை பிடிக்கும் காட்சி இருக்கிறது அதை வெட்டி விடுங்கள் என்று ரஜினியிடம் அழுத்தம் திருத்தமாக கூறி அதன் சமூக நலனை தெரிவித்து இருப்பார்களேயானால், ரஜினி சர்வ நிச்சயமாய் அந்த காட்சிகளைக் கத்தரித்துப் போட்டுவிட்டு படத்தை ஓடவிட்டிருப்பார். வீரப் பரம்பரையில் வந்த அண்ணன்கள் அப்படி செய்யவில்லை. திரைப்படம் ஓடுவதை தடுத்தனர்.  தியேட்டர்களை உடைத்தனர். ரஜினி ரசிகர்ளை அடித்தனர். எந்தவித காழ்ப்புணர்ச்சிகளும் கருத்து மாறுபாடுகளும் கொண்டிராத பாபாஜியின் பக்தரான, ஆன்ம விழிப்பு கொண்ட ரஜினியை நிந்திக்கவும் செய்தனர்.

ஆன்மீக விழிப்பு கொண்டு தனது வேலையைப்பார்த்துக் கொண்டு ஒதுங்கி வாழும் சாது இந்த ரஜினிகாந்த் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? இதை சொல்லும் போதே அவரது கடந்தகாலத்தை பெயர்த்தெடுத்துக் கொண்டு வந்து விவாதிக்க நீங்கள் நினைத்தால் ஐயம் சாரி....ஐயம் நாட் யுவர் கப் ஆஃப் டீ...தோழர். உங்களிடம் விவாதிக்க நான் தயாரில்லை. நீங்கள் வேறு கடை பார்க்கலாம். ரஜினி ஒரு சாது. அவர் ஒரு போதும் அரசியலுக்கு வரவிரும்பவில்லை. ரசிகர்களின் பெரு விருப்பத்தை ஏற்று அவர் 1996 தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸோடு இணைந்து  நின்றிருந்தால் ஒருவேளை தமிழக முதல்வர் கூட ஆகி இருக்கலாம்.

ஆனால்....

ரஜினி மறுத்தார். ஏன் தெரியுமா? அவர் பேரமைதியை, பிரபஞ்சத்தில் படர்ந்திருக்கும் ஆழமான அன்பை, நிம்மதியை ருசிக்கத் தொடங்கி வெகுநாள் ஆகி விட்டிருந்தது. புகழின் உச்சத்தில் இருந்த ரஜினிக்கு முன்னால் இயற்கை வைத்த கேள்வி....அடுத்தது என்ன...? என்பது...., பணம், புகழ், குடும்பம், வாழ்க்கை, நண்பர்கள், ரசிகர்கள், என்று எல்லாவற்றிலும் நிறைவைக் கொண்ட ஒருத்தனுக்கு அடுத்து என்ன வேண்டும்....?

அடுத்தது ஒன்றும் இல்லை. இந்த லெளகீகத்தில் எதைத் தொட்டாலும் அது மேலும் இரண்டு மடங்கு பிரச்சினையைக் கொண்டுவந்து மனநிம்மதியைக் கெடுக்கும் என்பதை அவர் உணர்ந்தவராயிருந்தார். அடுத்தவருக்கு உதவி செய்வதை வெளியில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று அவர் தெளிந்தவராயிருந்தார். மொழி, நாடு, மதம் என்ற கட்டமைப்புகளை எல்லாம் கடந்த ஒரு மனிதன் தான் என்று அறிந்திருந்தார். அவர் நிம்மதி என்னும் புலிவாலைப் பிடித்திருந்தார். அது அவரை முழுதுமாய் ருசி பார்க்கத் தொடங்கி இருந்தது.

பாட்டாளி மக்கள் கட்சியின் ரஜினி எதிர்ப்பு பாபா திரைப்படத்தில் அமைந்திருந்த காட்சிக்கான எதிர்ப்பாய் மாறி மறைமுகமாய் பாபாஜிக்கான எதிர்ப்பாய் மாறி இருந்ததை அப்போது ரஜினி உள்பட யாரும் உணர்ந்திருக்கவில்லை. அந்தக்காட்சியை பின் வெட்டுவதற்கு ரஜினி ஒத்துக் கொண்டதோடு, இனிவரும் திரைப்படங்களில் புகைபிடிக்கமாட்டேன் என்றும் ரஜினி அறிவித்து அப்போதைய பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்திருந்தார்.

ரஜினி அதை ரஜினியின் பிரச்சினையாய் நினைத்து அதற்கு அடுத்து வந்த பாரளுமன்றத் தேர்தலில் பாட்டாளிமக்கள் கட்சியினர் போட்டியிட்ட 6 தொகுதியிலும் அவரது ரசிகர்களை பாமகவினருக்கு எதிராய் களம் இறக்கிவிட்டார் ஆனால் ரஜினியின் பாமக  எதிர்ப்பு அப்போது செல்லுபடியாகவில்லை. 6 தொகுதிகளிலும் பாமக வென்றது. காலம் மேலும் ரஜினியை சப்தமில்லாம இருக்கும்படி கட்டளையிட்டது.

ஆமாம்....ரஜினிக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் என்ன பிரச்சினை...? அது பாபாஜிக்கும் பாட்டாளிமக்கள் கட்சியைச் சேர்ந்த தோழர்களுக்குமான பிரச்சினை அல்லவா? இடையில் ரஜினி ஏன் கோபப்படவேண்டும். பாபாஜி ரஜினியை மெளனமாக்கி விட்டு அவர்கள் சொன்ன சத்தியத்தை மட்டும் நீ பின்பற்று என்ற கட்டளையோடு அந்த சூழலை முடித்துவைத்தார்.

பாபாஜி என்று நான் இங்கே அடிக்கடி குறிப்பிட்டிக் கொண்டிருப்பது ஒரு முழு சத்தியத்தைப் பற்றி, பிரபஞ்சத்தின் மூல உண்மையைப் பற்றி, சிவத்தைப் பற்றி..

பாபாஜியின் கணக்கு....அது. பட்டயம் எடுத்தவன் பட்டயத்தாலேயே அழிவதற்கு முன்னால் ரஜினியைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்த அன்பு மணி ராமதாஸ் ஐயா அவர்களே தனது வாயால் ரஜினையை வாயரப் புகழவைத்த அந்த பெருஞ்சக்தி சுமார் ஒன்பது வருடங்கள் கழித்து இப்போது சப்தமில்லாமல் ஆணவக்காரர்களை துவம்சம் செய்யத் துவங்கி இருக்கிறது. வாழ்க்கையில் கணக்கு என்ற ஒன்று இல்லாமல் எதுவும் இல்லை. கொடுத்தவன் திரும்பப் பெற்றே ஆகவேண்டும். வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளுக்குமே காரணம் உள்ளது. என்ன ஒன்று நாம் சந்தோசத்தையும் துக்கத்தையும் அனுபவிக்கும் போது எதனால் இது நிகழ்கிறது என்று ஆராய முற்படாமல் கொண்டாட்டத்திலோ அல்லது துக்கத்திலோ மூழ்கிவிடுகிறோம்.

பாட்டாளி மக்கள் கட்சி என்னும் சாதிக்கட்சியின் இன்றைய அசாதாரண சூழலுக்கும், அந்த கட்சியினை சார்ந்தவர்களின் மன உளைச்சல்களுக்கும் பல்வேறு கடந்த கால முறையற்ற செயல்கள் காரணமாய்  இருக்கின்றன. எப்போதுமே இறை என்னும் பெருஞ்சக்தி நமது வாழ்வில் நிகழும் எல்லா செயல்களுக்கும் காரணத்தை நமக்குள் மனசாட்சியாய் நின்று உணர்த்தத்தான் செய்கிறது. சப்தமற்ற மனோநிலையும் ஆழமான பார்வைகளும் கொண்டவர்களுக்கு தங்களுக்கு நிகழும் எல்லா செயல்களுக்குமான காரணங்கள் தெளிவாய் புரிந்துவிடுகின்றன...

தடிமனான மனத்தைக் கொண்ட அகங்காரம் கொண்ட மனிதர்களுக்கு சூட்சுமமாய் பழைய வழக்குகள் தூசு தட்டி எடுக்கப்பட்டு அதனால் சிறையிலடைக்கப்பட்டு இப்போதாவது என்னைப் புரிந்து கொள் என்று சத்தியம் மார் தட்டி மீசை முறுக்கி உணர்த்தவும் செய்கிறது. 2004ல் செய்த தவறு மீண்டும் 2013ல் விழித்துக் கொண்டு பழி வாங்குகிறது என்றால் இங்கே எல்லாம் வல்ல ஒரு சக்தியின் ஆட்டத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

கர்மபலன் என்பதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டுதான் இன்றைக்கு பாமகவின் மீது புலிப்பாய்ச்சலாய் பாய்ந்திருக்கும் பல  வழக்குகளும்....

இது எல்லா மனிதர்களுக்கும்,  எல்லா சூழல்களுக்கும் பொருந்தும். 

பாபா படத்தின் போது பதியப்பட்ட வழக்கு இப்போது ராமதாஸ் ஐயாவை  உள்ளே தள்ளும் என்று ரஜினி நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டார். அவர் மெளனமாய் தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஆமாம்....

ரஜினிக்கும் பாமகவிற்கும்  பிரச்சினையா என்ன...? 

கிடையவே கிடையாது....

காலங்காலமாய் சத்தியத்துக்கும் அசத்தியத்துக்கும்தான் பிரச்சினை.....!

 " யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
  அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம் "


தேவா. S




சிறகுகள் இன்றி பற...!

$
0
0


இரண்டு பெண்களை அஃபிசியலாய் கடந்த பின்பு ) தன்னுடைய 50+ல் நிஜமான காதலுக்குள் விழுந்திருக்கிறார் முன்னொரு நாளில் காதல் இளவரசன் என்றழைக்கப்பட்டு இப்போது உலகநாயகனாயிருக்கும் ஜீனியஸ் கமல்ஹாசன். எத்தனையோ படங்களில் காதலை நடித்துக்காட்டிய அந்த மாபெரும் கலைஞனை காதல் பூரணமாய் ஆக்கிரமித்து இருந்ததை சமீபத்தில் கண்ட நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் மூலம் அறிய முடிந்தது.

திருமணம்தான் காதலின் உச்சம், அதுவே காதல் வென்றதின் அடையாளம் என்று இன்னமும் சொல்லிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் எனக்குப் பாவமாய்த்தான் இருக்கிறது. நான் +2 படித்துக் கொண்டிருந்த போது ஜுவியில் காதல்படிக்கட்டுகள் என்று பிரபலங்களைக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை வெளிவந்துக் கொண்டிருந்தது. ஜூவி வந்தவுடன் அடித்துப் பிடித்து வாங்கி வரிவிடாமல் வாசித்து காதலை உள்ளுக்குள் கோடையில் தண்ணீரைப் பிடித்து சட்டைக்குள் ஊற்றிக்கொள்ளும் உற்சாகத்தோடு வாசித்தும் முடிப்பேன்.

வைரமுத்து எப்போதுமே காதலை வார்த்தைப்படுத்துவதில் இராட்சசன். அவரது வரிகளை வாங்கிக் கொண்டவர்களின் விழிகளில் ' காதல் பூ ' பூக்காமல் இருந்தால் அவர்கள் ஒன்று மொழியறியாதவர்களாக இருக்க வேண்டும்...இல்லையேல் மனம் வறண்டவர்களாயிருக்கவேண்டும். ஏனென்றால் எந்தச் செடி மழைக்கு மறுபதில் சொல்லாமல் இருந்திருக்கிறது. பூவாகவோ, காயாகவோ அது தன் மெளனத்தை உடைத்துதானே ஆகவேண்டி இருக்கிறது.

வைரமுத்துவிற்குப் பிறகு இன்னமும் நினைவில் இருக்கும் காதல் படிக்கட்டுகள் நடிகர் பார்த்திபன் எழுதியது. சட் சட் என்று வெடித்துப் பூக்கும்  மொட்டுக்களை பார்க்கும் போது என்ன பரவசம் தோன்றுமோ அதே அளவு பரவசத்தை பார்த்திபனின் வார்த்தைகள் நமக்குள் இறக்கிவைக்கும். சுமை தூக்கிச் செல்லும் ஒரு கூலியொருவன் உச்சி வெயிலில் ஒரு மரத்தடியில் சுமையை இறக்கி வைத்து விட்டு வயிறு நிறைய நீர் பருகி மரத்தின் வேரில் சாய்ந்து கொள்ளும் சுகத்தைக் காதல் படிக்கட்டுகள் கட்டுரை தப்பாமல் எனக்குக் கொடுத்திருக்கிறது.

பார்த்திபனின் சீதாயணம் அப்படித்தான் இருந்தது. அவரது காதல் வென்றது என்று நான் நினைத்துக் கொண்டிருக்கையில் சிலவருடங்கள் கழித்து அது தோற்றுப் போனதாய் உலகம் அறிவித்தபோது அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காதலை ஒரு திருமணத்தின் மூலம் ஜெயிக்கவைப்பதும், பிறகு திருமணம் முறிந்தவுடன் அதைத் தோற்கவைப்பதும் இந்த சமூகத்தின் ஒரு பொய் விளையாட்டு. காதலுக்கும் திருமணத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இருக்க முடியாது என்றுதான் நான் சொல்வேன். நீங்கள் காதலித்தவரை திருமணம் செய்து கொள்கிறீர்கள். திருமணம் செய்துகொள்வது எதற்கு என்று நான் கேட்டால் காதலிக்க என்று எத்தனை பேரால் பதில் சொல்ல முடியும்?

அப்படியே காதலிக்க திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறுபவர்கள் ஏற்கெனவே காதலித்துக் கொண்டுதானே இருந்தார்கள்...? பிறகு திருமணம் எதற்கு..? என்னைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு சமூக ஒழுங்கு. ஒழுங்கிலும் காதல் இருக்கலாம் அவ்வளவுதான். அதற்காக இந்தக் கட்டமைப்பில் இல்லாதது எல்லாம் காதலற்றது என்று பழிசுமத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது? இன்னும் சொல்லப்போனால் மரணம் என்ற ஒன்று இல்லாவிட்டால் எப்படி கடவுள் அவசியமில்லாதவராகிப் போவாரோ....அப்படியே காமம் என்ற ஒன்று இல்லாவிட்டால் இங்கே காதல் என்ற வார்த்தை அவசியம் இல்லாமலேயே கூட போயிருந்திருக்கும்.

இப்போது கமல் கெளதமிக்கு துணை. கெளதமி கமலுக்குத் துணை. ஒருவரின் வலிகளை வாங்கிக் கொண்டு, பலவீனங்களைப் புரிந்து கொண்டு, நிபந்தனைகளற்று அவரால் எதுவுமே பதிலுக்கு செய்ய முடியாது என்றாலும் யார் ஒருவரை நாம் நேசிக்கிறோமோ அங்கே காதல் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. கடவுள் என்ற இதுவரை நான் காணாத அந்த ஒரு பிம்பம்  வாழ்க்கையாய் என் முன் விரிந்து கிடக்கிறது. 

நான் கீழே விழுகையில் என்னை தாங்கிப் பிடிக்கும் நிலமாயும், தாகத்தில் தண்ணீராயும், வயிற்றின் பசியடக்கும் உணவாயும் உலகத்து அதிசயங்களையும் முரண்களையும் கண்டு வாய்பிளந்து சிலாகிக்கையில் கிறங்க வைக்கும் உணர்வாயும் எனக்குள் பரவி அந்த பிம்பம் என்னை எப்போதும் நேசித்துக் கொண்டே இருக்கிறது....அதனால் எனக்கு கடவுள் என்ற மாயாபிம்பத்தின் மீது காதல் இருக்கிறது. நான் வெறுத்தால் என்னை தூக்கி வீசி எறிந்து விடுமா இந்த பூமி...? சுமந்து கொண்டுதானே சுற்றும்....!

காதலிக்க நம்மைக் கடந்த வேறொன்று வேண்டும். அது மனிதராகவும் இருக்கலாம், அவ்வளவுதான். பெரும்பாலும் வெவ்வேறு எதிர்ப்பார்ப்புகளோடு இணைபவர்களை விட்டு காதல் ஓடி ஒளிந்து கொள்ள அங்கே வியாபாரம் மட்டுமே நடக்கிறது. எனக்குப் பிடித்த மாதிரி நீ இரு, உனக்குப் பிடித்தமாதிரி நான் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு தியாகிகளாய் வாழ்ந்து கொண்டு, சுயவிருப்பங்களைக் குழிதோண்டி புதைத்துக் கொள்ளும் வைபவத்தைதான் இங்கே பெரும்பாலும் காதல் என்று சொல்கிறார்கள்.

உனக்குப் பிடித்தமாதிரி நீ இருப்பதையே நான் காதலிக்கிறேன் என்று எத்தனை பேரால் தன் துணையைப் பார்த்து சொல்ல முடியும்..? பெரும்பாலும் கட்டுப்பாடுகள் எல்லாமே பயமும் அடக்குமுறையும் கொண்ட மனதிலிருந்தே பிறக்கின்றன.

கமலும், கெளதமியும் நிஜமான காதலர்களாய் இணைவதற்கு அவர்களின்  அனுபவம் துணை நின்றிருக்கிறது. காலம் ஆசானாய் இருந்திருக்கிறது. இரண்டாவது மனைவியையும் பிரிந்த தனிமையில், ஏற்கெனவே வாழ்க்கை நிராகரித்துவிட்ட புற்றுநோயில் இருந்து மீண்டு கொண்டிருக்கும் ஒருவரை தன் தோளோடு சேர்த்துக் கொண்டு தானும் விழாமல், அவளும் விழாமல் தாங்கிப் பிடிக்கும்...சுகத்தை காதலென்று சொல்லாமல் வேறு எதைக்காதல் என்று சொல்வதாம்...?

கமலுக்கும், கெளதமிக்கும் திருமணம் என்னும் சடங்கிற்குப் பின்னால் இருக்கும் பொய்மை என்னவென்று தெரிந்திருக்கும். அவர்கள் அந்த சடங்கிற்குள் மீண்டும் செல்லவிரும்பவில்லை. அந்த சடங்கு இருவருக்கும் பிள்ளைகளை மட்டும் கொடுத்துவிட்டு கரைந்து போய்விட்டதோடு  மிகப்பெரிய புரிதலை அவர்களின் இயல்பிலேயே நிறைத்தும் சென்று விட்டது..! இனி எதற்கு திருமணம் என்ற ஒன்று தனியே...அவர்களுக்கு அவசியமா என்ன?

திணிக்கப்பட்ட அன்பு எப்போதும் வெறுப்பாகவே முடிகிறது. கற்பிக்கப்பட்ட போலி ஒழுக்க நெறிகளைச் சிலுவைகளாய் சுமந்து கொண்டு காதலாய் இருப்பதைப் போலக் காட்டிக்கொள்வதை விட....

கட்டுக்கள் அற்ற பெருவெளியில் யாருமற்ற தனிமையில் நம் ஏகாந்தச் சிறகுகளோடு நாமே நாமாய் எதிர்பார்ப்புகளற்ற காதலோடு இலக்குகளின்றி பறப்பதே சுகம்...! இப்படியான நிலையில் வெற்றியும் இல்லை தோல்வியுமில்லை...!

" கணங்கள் தோறும் கலைத்துக் கொள்ளும் ஒப்பனைகளில்....இடம் வலமாய், வலம் இடமாய், மேல் கீழாய், கீழ் மேலாய், மாறி, மாறி சுயமென்ற ஒன்றே எனக்கில்லை என்று என்று அறுதியிட்டுக் காலம் கூறினாலும்...

சார்ந்தியங்கும் சாங்கியத்தில் ஒளிந்திருக்கும் மூலவனின் இயல்புகள்.இல்லாத காலப்பெருவெளிக்கு முன்பும், பின்பும்.....ஒன்றென்று அறிக எம் மக்காள்....! "


தேவா. S







யாசகன்...!

$
0
0


வீதியிலிறங்கியாயிற்று. தீர்மானத்திலொரு மாற்றமுமில்லை. கடமைகளென விதிக்கப்பட்ட பொய்களை புள்ளி விபரத்தோடு தீர்த்துமாயிற்று. தேவைகளை தீர்த்த பின்பு யாருக்கும் தேவையில்லாதவனாய் என்னை மாற்றிக் கொண்டாயிற்று. உயிரைச் சுமந்து கொண்டிருக்கிறேனென்ற கள்ளப் பெருமிதம் கொண்ட உடலைப் பொதியெனச்  சுமந்து சிரித்தபடியே உயிராய் கிளம்பியாயிற்று.

கால்களின் திசைகளை தயவு செய்து கணித்து விடாதே என் புத்தியே, கனவுகள் என்று எந்தக் கருத்தையும் விஸ்தரித்துப் பார்த்து விடாதே என் மனமே..! நான் காலப் பள்ளத்தை அறிவினை உடைத்தெறிந்து தாண்டி இருக்கிறேன். கற்பிதங்கள் கொண்ட வாழ்க்கையை தீயிட்டுக் கொளுத்திய திருப்தியில் நடந்து கொண்டிருக்கிறேன். வாழ்க்கையின் வடிவம் தேவைகளில் இல்லை. வாழ்க்கையின் வடிவம் தேவைகளற்றது. நிபந்தனைகளற்றது... கொள்கைகளற்றது... சிந்தனைகளற்றது. துள்ளியோடும் புள்ளி மானின் தேவைகளை தீர்த்துக் கொள்ள அது யாதொரு கருத்தும் எடுத்துக் கொள்வதில்லை. இட்ட பிச்சையை புசிக்கும் ஞானத்தை பேரிறை இயற்கையாக்கி வைத்துவிட்டு மனிதனை மட்டும் செயற்கையாக்கி வைத்து விட்டது.

எங்கோ செல்லட்டும் என் பயணம். யாருக்காகவும் இல்லாது மரிக்கட்டும் எனது உயிர். ஏதோ ஒரு கானகத்தினூடே செல்லரித்துப் போகட்டும் இந்த உடல். யாசகனுக்கு என்ன திட்டம் வேண்டி இருக்கிறது. இட்டால் பிச்சை, இடாவிட்டால் பசி. எந்தச் செடியும் காய்கறியை விற்பனைக்காய் உற்பத்தி செய்வதில்லை. எந்த சுனையும் பொருள் வாங்கிக் கொண்டு தாகம் தீர்ப்பதில்லை. விளைபவைக்கு என்ன வியாபார யுத்தி தெரியும்? இயற்கையை செயற்கையாக்கி வர்ணமடித்து, அலங்காரம் செய்து நான் செய்தேன் என்று கூறி பெருமையடித்துக் கொள்வதைத் தவிர வேறு என்ன தெரியும் இந்த மனிதர்களுக்கு..?

இருந்ததைதானே நீ கூட்டிக் கழித்து கண்டேன் என்கிறாய்..? எல்லாவற்றையும் நீ கூட்டிக் கழிக்கிறாய் உன்னை யார் கூட்டிக் கழித்தது...? உன் ஒவ்வொரு இதயத் துடிப்பிற்கும் இடைப்பட்ட பேரமைதியில் படுத்துக் கிடப்பது யார்...? நான் யாசகன். எனக்கு மனிதர்களின் கூட்டு தேவையில்லை. அடர் கானகங்களில் வழிந்தோடும் நீர் என்னிடம் என்ன பேரம் பேசி விட்டா தண்ணீர் குடிக்கச் சொல்லப் போகிறது...? பறிக்க ஆளின்றி மண்ணில் விழுந்து கிடக்கும் கனிகள் என்ன.. நம்மிடம் காசு கொடுத்து விட்டு கை வை என்றா சொல்லப் போகிறது...?

வாழ்க்கை உங்களுக்கு அருளப்பட்டது. நீங்கள் வாழ்க்கையை நாசப்படுத்தினீர்கள். இப்படியாய் வாழ்க்கையை நாசப்படுத்தி விட்டு அதை வரலாறு என்றீர்கள். மனிதர்கள் மனிதர்களை அடக்குவதைப் பெருமை என்றீர்கள். வலு உள்ளவனைத் தலைவன் என்றீர்கள்..., அழகாயிருந்த எல்லாவற்றையும் ரசிக்க மறந்து அடைய நினைத்தீர்கள்...

உங்களைச் சுற்றி வெளிச்சத்தை ஏற்படுத்தி சந்தோசத்தை எல்லா பாகங்களிலும் நிறைத்து வைத்திருந்தது இயற்கை என்னும் பேரிறை.. நீங்கள் கட்டுப்பாடுகளைப் போட்டுக் கொண்டு ஒழுக்கம் என்னும் பொய்யைச் சுமந்தபடியே எல்லா வெளிச்சத்தையும் அணைத்து விட்டு இருளில் புலம்பிக் கொண்டிருக்கிறீர்கள்...!  இயற்கைக்கு தெரியாத ஒழுக்கமா என்ன? பூமியின் ஒழுக்கத்தில்தான் உங்களின் இரவும் பகலும் தனக்கு 24 மணிநேரம் என்று கணக்கிட்டுக் கொண்டது. அது சூரியனை சுற்றும் ஒழுக்கம் தான் உங்களின் வருடமாகிப் போனது..?

அதன் ஒவ்வொரு நகர்வும் உங்களுக்கு காலங்கள் என்று போதிக்கப்பட்டது. இயற்கையின் ஒழுக்கம் உங்களுக்கு வாழ்க்கையைக் கொடுத்தது. நீங்கள் உருவாக்கிய ஒழுக்கங்கள் உங்களைப் பைத்தியக்காரர்களாக்கி வைத்திருக்கிறது. ஆமாம்...

நாடென்று ஒரு ஒழுக்கம் உண்டாக்கி எல்லைகளை வகுத்துக் கொண்டீர்கள். என்னவாயிற்று..? எல்லைகள் கடந்து கால்கள் பதித்தால் மிருகமென மாறி உயிர் பறித்துக் கொண்டீர்கள். மொழியென்ற ஒரு ஒழுக்கத்தை பின்பற்றி பெருமைகள் பேசிக் கொண்டீர்கள். என்ன ஆனது..? உங்கள் மொழியே பிராதனமென்று கூறி சக மனிதரிடம் வன்மம் கொண்டீர்கள். மதமென்ற ஒரு ஒழுக்கத்தையும், சாதியென்ற ஒரு கட்டுப்பாட்டையும் ஏற்படுத்திக் கொண்டு மனிதரை மனிதர் ஈனப்படுத்தி கொலைகள் செய்து கொண்டீர்கள்? இப்படி எதை எதையெல்லாம் ஒழுக்கம் என்று இயற்றினீர்களோ அவை எல்லாம் உங்களின் அழிவுக்கான மரண சாசனம் ஆகிப் போய்விட்டது.

வழிமுறையை சொன்ன ஞானிகளை எல்லாம் கொன்று போட்ட உங்களின் ஒழுக்கங்கள், பல ஞானிகளின் கூற்றை வசதிக்கேற்ப மாற்றிக் கொண்டு விட்டு அந்த அயோக்கத்தனத்திற்கு துணையாய் அவர்களின் பெயர்களை போட்டுக் கொண்டது.

இதோ...உங்கள் ஒழுக்கங்களை எல்லாம் என் காலடியில் போட்டு மிதித்து விட்டேன். இப்போது நான் ஒரு யாசகன். யாசகம் என்பது பிச்சை அல்ல. யாசகம் என்பது வாழ்க்கை. யாசகம் என்பது தியானம். யாசகம் என்பது தான் யாருமல்ல என்னும் அகங்காரம் அழிக்குமொரு வித்தை. சூரியனிடமிருந்து  பெற்ற பூமியின் யாசகத்தில் பகல்களைக் கொண்டாடும் பிச்சைக்காரர்கள்தானே இந்த பூமி முழுதும் நிரம்பிக் கிடக்கிறார்கள். என் வார்த்தைகளை  எல்லாம் எரித்து விட்டேன். என் சொற்கள் எல்லாம் பட்டுப் போய்விட்டன. என்னைச் சுற்றிலும் என்னை அடையாளம் காண எந்த மனிதரின் அவசியமும் எனக்குத் தேவையில்லை. போதும் நான் புலனறிவோடு வாழ்ந்தது.

எப்போதும் பேசாத மலைகள், எப்போதும் பேசும் மரங்கள், பாதுகாப்புக்காய் வன்மம் கொள்ளும் விலங்குகள், யாருக்காகவும் நிற்காத நதி என்று என் முன் எதிர்ப்படும் எதுவுமே என்னிடம் நான் யாரென்று விசாரிக்கப் போவதில்லை. நான் யாருமில்லை என்பதை மனிதர்களிடம் சொல்லி சொல்லி நான் அலுத்துப் போய்விட்டேன். மனிதர்களின் ஆறாம் அறிவுக்கு எட்டாத பகுத்தறிவின் உச்சம் மட்டுப்பட்ட நிலையிலிருக்கும் யாவும் விளங்கி நடக்கும் விந்தையை என் விழிகளால் வாங்கிக் கொள்ளப் போகிறேன்.....

தொப்புள் கொடி அறுத்து நான் விட்டுப் பிரிந்த பெற்றவளின் நினைவுகளை எத்தனை முயன்றாலும் அறுக்க முடியாத அஞ்ஞானத்தின் ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும்  பிரபஞ்சத்தின் மூலத் தொடர்பை, கருவறைக்குள் மிதந்து கொண்டிருக்கையில் உணவு கொடுத்த பெருங்கருணையின் அன்பை, அப்போது என் உடல் நிறைத்த பிராணனை... இதோ.. இதோ நான் பரிபூரணமாய் அனுபவிக்கத் தொடங்கி விட்டேன்....

எங்கிருந்து பிச்சை இடுகிறானோ அந்தக் கருணா மூர்த்தி... இதோ புலன்களை எல்லாம் பூட்டிக் கொண்டு தொடங்கி விட்டது இந்த யாசகனின் பயணம்....

அவித்தை அழிக்கும்
வித்தைக்காய்...
கொண்டேன்
ஒரு ஜட சரீரம்...!

வித்தையானவன்
வித்தையறிந்தவன் சித்தம்
இதுவெனெ கிடந்து
போக எத்தனிக்கையில்
நித்தம் நடந்திடும் 
நாடகங்களில் பித்தனாகிறேன்
நான்!

என்று தொடங்கியோ..?
என்று முடியுமோ...?
இந்த சத்து சித்துவின் ஆனந்தம்!
பற்று கொண்டு நான்
வாழ்ந்து அழிகையில்
வந்து போகுமோ 
ஒரு காரணம்?


தேவா. S



புத்தனின் கனவு...!

$
0
0


மேகங்களுக்கென்று திசையொன்றும் இருப்பதில்லை
காட்டு மலர்கள்  யார் பார்க்கவும் பூப்பதுமில்லை
ப்ரியங்கள் என்னும் விதையில்
விரிந்து கிடக்கிறது அகண்டப் பெருவெளி...!
இரவுகளை உடுத்திக் கொண்டு
வருவதெல்லாம் பகல்களென்றும்
பகல்களுக்குள் படுத்திருப்பது இரவென்றும்
யார்தான் அறிவார்..?
கனவுகளை எல்லாம் விழிகளொன்றும் காண்பதில்லையே...
அவை புலனறிவுக்கு அகப்படாத
புத்த நிலையின் தத்துவ விளக்கங்கள்தானே....!
பெயரில்லாத ஒன்றுக்கு
எத்தனை பெயரிட்டாலும்
அது பெயரில்லாததே....
திட்டமிடாத புத்தி
எந்த திசையைத்தான் கால்களுக்குச்
சொல்லிக் கொடுத்து விட முடியும்..?


தேவா. S




முள்ளிவாய்க்கால் சோகம்...நான்காமாண்டு நினைவுநாள்!

$
0
0


நான்காண்டுகள் ஓடோடி விட்டன. ஆறாத வடுக்களாய் இன்னமும் நம்முள் பரவிக்கிடக்கும் சோகச் சுவடுகளை காலம் எப்போதும் அழித்து விடமுடியாது. உலகில் இருக்கும் தொன்மையான கட்டிடங்கள், பறவைகள், விலங்குகள், நினைவுச் சின்னங்கள் எல்லாம் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டும் என்று மனிதம் பெருமைப் பேசிக் கொண்டிருந்த போதே மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான மூத்த மொழி பேசி வாழ்ந்த ஒரு தேசிய இனம்  கொத்து கொத்தாக ஈழத்தில் இன்றுதான்  அழித்தொழிக்கப்பட்டது. அடிப்படையில் சுதந்திரமாய் தன் சொந்த மண்ணில் வாழ விரும்பிய ஒரே காரணத்திற்காக போராடிய மக்களை அநீதி கொன்றழித்ததை  பதிந்து கொண்டு காலம் தலைகுனிந்து கொண்டது.

சொந்த மண்ணில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட பூர்வகுடிகளின் வாழ்வியியல் உரிமைப் போரட்டத்தை தீவிரவாதம் என்று முத்திரை குத்திய மிருகங்கள் இதோ நம் கண் முன்னே ஆர்ப்பட்டமாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். சர்வதேசம் எப்போதுமே வெட்கக்கேட்டினை தனது முகத்தில் வடுக்களாய் ஏந்தியபடியே நகர்ந்து கொண்டிருக்கிறது. வரலாற்றை திருப்பிப் பார்த்தால்  சத்தியமும் நீதியும் எவ்வளவு ஜெயித்திருக்கிறதோ அதற்குச் சரிக்கு சமமாக அல்லது கூடுதலாக அநீதியும் அடக்குமுறையும் ஜெயித்திருக்கிறது. மனிதநேயம் என்னும் வார்த்தை எப்போதும் சாதகபாதகங்களைப் பார்த்தே பயன்படுத்தப்பட்டுமிருக்கிறது.

பொதுமக்களையும், குழந்தைகளையும், முதியவர்களையும், அதுவும் பெண்களை வன்புணர்ச்சி செய்தும் சிங்களவன் செய்த கொலைகளை படங்களாகாவும், காணொளியாகவும் கண்ட பின்னரும் விழித்துக் கொள்ளாத சர்வதேசத்தின் மனிதநேயம் இனி இருந்தால்தான் என்ன செத்தால்தான் என்ன? அன்பும் கருணையும், சகிப்புத்தன்மையும் கொண்ட இந்தியப் பேரரசு தனது அண்டை தேசத்தில் நடாத்தப்பட்ட பெரும் இன அழிப்பினை அதுவும் தனது தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழரை கோடி தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகள் கொன்றழிக்கப்பட்டதை குரூரமாய் அனுமதித்ததும் அதை தடுத்து நிறுத்தாமல், தட்டிக்கேட்காமல் இன்னமும் கள்ள மெளனம் சாதிப்பதும் தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை தமிழர்களுக்கும் செய்த ஒரு வரலாற்று துரோகம்.

வரலாற்றில் தமிழன் எப்போதுமே இரண்டு பிரிவாய்த்தான் இருந்திருக்கிறான். அநீதியை எதிர்த்துப் போராட ஒரு கூட்டம் இருந்தால் அவனைக் காட்டிக் கொடுக்க ஒரு கூட்டம் அவன் கூடவே வளர்ந்து வரும். தங்களின் வயிறு வளர்க்க மானத்தைக் கூட அது இழக்கும். மானத்தை விற்று தங்களையும் தங்களின் குடும்பத்தினரையும் காத்துக் கொள்ள ஈழத்தில் போராடிய மக்களுக்கு நடுவே ஒரு கூட்டமும், தாய்த்தமிழகத்தில் ஒரு கூட்டமும் அது போல இருந்தது. அந்தக் கூட்டம் தமிழர்கள் முன் தாங்களும் தமிழர்கள்தான் என்று நீலிக் கண்ணீர் வடித்தபடியே திரைக்குப் பின்னால் எல்லா நாடகங்களையும் அரங்கேற்றியும் கொண்டது.

இதோ நான்காண்டுகளைக் கடந்து விட்ட இந்தச் சூழலில் தாய்த்தமிழகத்தில் ஈழம் நிஜமான உணர்வாளர்களால் எந்த வேகத்தில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதோ அதே அளவு போலிகளாலும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எத்தனை பிரச்சினைகள் தமிழகத்தில் இப்போது விரவிக் கிடந்தாலும் ஈழத்தைப் பேசாமல் எந்த ஒரு அரசியல்வாதியும் அரசியலை செய்ய முடியாது என்னும் ஒரு அசாதரண சூழலை ஈழ மண்ணில் உயிரிழந்த எம்மக்களின் மகத்தான தியாகம் இன்று உருவாக்கிக் காட்டி இருக்கிறது. போர் என்றால் உயிர் இழப்பு இருக்கத்தானே செய்யும் என்று சொன்னவர்களும், மழை விட்டாலும் தூவானம் விடாது என்று சொன்னவர்களும் இன்று ஈழம், ஈழம் என்று குய்யோ முறையோ என்று கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

தொண்டைகளைச் செருமிக் கொண்டு பல தீர்மானங்களை ஈழமக்களுக்கு ஆதரவாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள், இந்தியப் பேரரசுக்கு அழுத்தங்கள் கொடுக்கிறார்கள். கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதரவை வாபஸ் வாங்கிக் கொள்கிறார்கள். மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி இதனால் தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது...

என்றாலும் கொத்துக் கொத்தாய் வேதியல் குண்டுகளை போட்டு வெள்ளைக் கொடிகளை ஏந்திவந்தவர்களையும் கனரக ஆயுதங்களைக் கொண்டு சிங்களப் பெளத்த பேரினவாத அரசு அழித்துக் கொண்டிருந்த போது தமிழகத்தின் இருபெரும் அரசியல் கட்சிகள்  வீதியில் இறங்கி தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்காமல் அடக்கி வாசித்த அசிங்கத்தையும் வலியோடு நாம் நினைவு கூற வேண்டி இருக்கிறது.

ஈழத்தின் போரட்டத்தை தயவு செய்து  ஆயுதம் ஏந்திய அகிம்சைக்கு எதிரான போராட்டமாய் பார்த்து விடாதீர்கள் தோழர்களே...!!! தந்தை செல்வா என்னும் ஈழத்து காந்தி அகிம்சை வழியில் போராடிப் போராடி அகிம்சை என்பது மனிதர்களுக்கான போரட்டம் மிருகங்களுக்கானது அல்ல என்று உணர்ந்த பொழுதில் வேறு வழியின்றி அடித்த வலியைத் தாங்காது திருப்பி அடித்தவர்கள் நாம் என்பதை உணருங்கள்.

தமித்தாய்க்கு நூறு கோடி ரூபாய்க்கு சிலைவைக்க திட்டங்கள் தீட்டப்படும் இதே நாம் வாழும் காலக்கட்டத்தில்தான் தமிழ் பேசிய ரத்தமும் சதையுமான நமது உறவுகள் கொன்றழிக்கப்பட்டனர் என்ற உயிர் உறைக்கும் உண்மையை அறியுங்கள்! ஈழத்தமிழர்களின் போராட்டம் தமிழர் வரலாற்றில் வீரம் செறிந்த பக்கங்களில் பொறிக்கப்படவேண்டிய ஒரு போராட்டம் என்பதையும் அதை வழிநடத்திய நமது அண்ணன் பிரபாகரன் தான் என்றென்றும் தமிழகளின் நலம் விரும்பிய தலைவன் என்றும் நமது பிள்ளைகளிடம் அழுத்திச் சொல்லுங்கள்.

வரலாறு என்பது எங்கோ யாரோ எழுதுவது அல்ல தொடர்ச்சியாய் நம் நினைவுகளில் ஊறிக் கிடப்பது. ஒவ்வொரு மே 17 மற்றும் 18களில் நிகழ்ந்தேறிய இன அழிப்பில் வீரச்சாவடைந்த நம் உறவுகளுக்கு ஒவ்வொரு வருடமும் மறக்காமல் நமது அஞ்சலிகளைச் செலுத்துவதோடு ஜனநாயக ரீதியில் நமது வஞ்சத்தை தீர்த்துக் கொள்ளவேண்டும் என்பதையும் எப்போதும் நினைவு கொள்ளுங்கள்.

தமிழர் நலம் பேசுகிற, தமிழர் வாழ்வுரிமை பற்றிய தொலைநோக்குப் பார்வைகள் கொண்ட, தனித்தமிழ் ஈழத்திற்கு ஆதரவு கொடுக்கிற அரசியல் கட்சிகளை மட்டுமே தமிழத்தில் ஆதரியுங்கள். வீதி இறங்கிப் போராடும் அரசியல் நாடக சக்திகள் சாதாரண மக்களாகிய நம்மை  நீங்கள் என்ன செய்து சாதித்தீர்கள் என்று  கேலிகள் செய்யக் கூடும்..... இணையத்தில் எழுதி என்ன கிழித்து விடுவீர்கள் என்று நம்மை ஊனப்படுத்தி இணையப்போராளிகள் என்று ஏளனம் செய்யக்கூடும்....

அவர்களின் பிரச்சாரங்களையும் பரப்புரைகளையும், காலில்  போட்டு மிதியுங்கள்...!!!! உங்களின் மனசாட்சியிடம் கேள்விகள் கேட்டு....யார் தமிழர் நலம் விரும்பிகள்...?யார் தமிழர்களின் வியர்வையை மூலதனமாக்கி நாடகமாடுகிறார்கள் என்பதை கணியுங்கள். ...!

நான் என்னை சேர்ந்த பத்து பேரிடம் சொல்வேன்...நீங்கள் உங்களைச் சேர்ந்த பத்து பேரிடம் சொல்வீர்கள்....சிறுகச் சிறுக நமது உணர்வுகள் பற்றிப் பரவும். வீதி இறங்காமலேயே....மேடை நாடகங்கள் நிகழ்த்தாமலேயே....மெளனமாய் வரவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தலில் நமது உணர்வுகளைப் வெளிப்படுத்துவோம்.

ஆயிரம் பேர்கள் இந்தக்கட்டுரையப் படித்து தமிழகமெங்கும் பரவி இந்தக்கருத்துக்கள் சென்று சேரப்போவதில்லை ஆனால் என்னைச் சேர்ந்த ஒரு பத்து பேர் வாசிக்க அதில் ஒருவர் உணர்வு பெறக்கூடும்...என்ற விருப்பத்தையே இங்கே எழுத்துக்களாக்கி இருக்கிறோம்...! காலம் எல்லாவற்றையும் மாற்றும் சக்தி கொண்டது...நம்மை  கீழே இறக்கி வைத்த காலம் மீண்டும் நம்மை மேலே ஏற்றும்....அன்று தமிழர்கள் கொடி...பட்டொளி வீசி பறக்கும்...!

மே17, 18ல் முள்ளிவாய்க்காலில் வீரச்சாவடைந்த அத்தனை தமிழ் உறவுகளுக்கும் வீரவணக்கங்கள்!!!!


தேவா. S



கனவுகள் பூக்கும் காடு.....!

$
0
0


கொஞ்சம் காலம் முன்பு ஹார்மோன் செய்யும் கலகம்தானடா என்ற பெயரில் ஒரு தொடரை தொடங்கி  இரண்டாவது பாகத்தோடு நிறுத்தியிருந்தேன். அனுபவங்கள்தான் வாழ்க்கையைக் கட்டமைக்கிறது. கனவுகள் வாழ்க்கையை  ஆள்கிறது. அதனால் மீண்டும் கனவுகளை நிரப்பிக் கொண்டு எல்லைகளற்ற பெருவெளியில் சிறகுகளை விரிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். 

இந்தத் தொடரை நான் எழுத ஆரம்பித்திருந்த நேரத்தில் பதிவுலகம் என்ற ஒன்று இருந்தது. நிறைய பதிவர்கள் தினம், தினம் எழுதிக் கொண்டிருந்தனர். தமிழில் தட்டச்சு செய்து நமது உணர்வுகளைப் பதியலாம் என்று ஒருவித உற்சாகத்தில் நிறைய, நிறைய, நிறைய பேர்கள் எழுதிக் கொண்டிருந்த நேரம் அது. படிக்க பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் மதிய உணவு கிடைக்குமே என்று பள்ளிக்குச் செல்லும் சிறுவனைப் போல இலக்கிய தாகத்தில் எழுத வந்த ஆள் இல்லை நான்...வாழ்க்கையின் ஓட்டத்தில் கிடைத்த அலாதியான நினைவுகளை எழுதிப் பார்க்க வந்தவன்.

எல்லோரையும் போல சமூகக் கோபங்கள் எனக்கும் இருக்கிறது. சமூகத்தின் அடிப்படையில் இருக்கும் புரிதலின்மைக்கு காரணம் ஆன்மவிழிப்பு இல்லாததுதான் என்பதை உறுதியாக நம்புவன். ஆன்மீகம் என்பது என்னைப் பொறுத்தவரைக்கும் கட்டிடங்களுக்குள் கடவுள் தேடும் ஒரு வழிமுறை அல்ல. நேர்த்திக்கடன் வைத்து நிறைவேற்றி விட்டு அதற்கு பலன் எதிர்பார்க்கும் கொடுக்கல் வாங்கலும் இல்லை. எனக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் இருக்கும் தொடர்பு என்ன என்று ஆராய்வதே எனக்குத் தெரிந்த ஆன்மீகம்.

தன்னைப் புரிந்து கொள்ளாத மனிதன் ஒருக்காலும் மற்ற மனிதனுக்கு வழிகாட்ட முடியாது. தன்னைப் புரிந்து கொண்டவன் கூட வழிதான் காட்டமுடியுமே அன்றி கூட்டிச் செல்ல இயலாது. சைவ சமயத்தை பின்பற்றும் ஒரு குடும்பத்தில் பிறந்ததனால் என்னால் கட்டுக்கள் இன்றி எல்லா பக்கத்திற்கும் புலிப்பாய்ச்சல் பாயமுடிந்தது. அப்படி பாய்வதற்கான சுதந்திரத்தை என் பெற்றோர்கள் எனக்குக் கொடுத்திருந்தார்கள். சர்வம் சிவமயம் என்னும்  சைவசித்தாந்தத்தின் அடிப்படை எனக்கு உதவியது. கடவுள் எங்கே இருக்கிறார் என்ற தேடல்... யார் கடவுளாய் இருக்கக் கூடும் என்றும் யோசிக்க வைத்தது. 

தேடலின் வெளிப்பாடே எழுதும் ஆர்வத்தை உண்டாக்க... அறிந்ததை... உணர்ந்ததை... எழுதிப்பார்க்க இந்த வலையுலகம் ஒரு நல்ல களமாய் எனக்கு இருந்தது. நிறைய நண்பர்களைப் பெற்றுக் கொடுத்தது. எழுதும் எழுத்து நன்றாக இருக்கிறதோ இல்லையோ உனக்கு நான் மறுமொழியும், திரட்டிகளில் வாக்கும் இட்டு விடுவேன் எனக்கு நீ இடவேண்டும் என்று ஒரு கையெழுத்திடாத ஒப்பந்தம் அன்றைக்கு பதிவர்களிடம் இருந்தது. நானும் மொய் வைத்திருக்கிறேன், எனக்கு மொய் வரவேண்டும் என்பதற்காகவே....

நிறைய பேரை வாசிக்க வைக்க திரட்டிகளில் பதிவுகள் மேலே வரவேண்டும். அதற்கு பதிவர்களாகிய சக நண்பர்களின் உதவி வேண்டும்.  வாக்கு செலுத்தி வாக்கு வாங்கியும் இருக்கிறேன். இன்றைக்கு காலம் பதிவுலகம் என்ற ஒன்றையே உடைத்துப் போட்டு விட்டிருக்கிறது அல்லது நான் அந்த கட்டமைப்பில் இருந்து வெளியே வந்து விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வலைப்பக்கத்தை வாசிக்க வருபவர்களுக்கு எந்த ஒரு சமகால லெளகிக சந்தோசங்களும் கிடைக்காது. கவர்ச்சிகரமான வசீகரிக்கும் எந்த ஒரு விசயமும் என்னிடம் இல்லை. நிலையாமை பற்றி நான் பேசுவது நிறைய பேருக்கு அலர்ஜியாய் இருக்கும். இருக்கும் வரையில் வாழ்ந்து சென்று விடலாமே... ஏன் நிலையாமை பற்றி எல்லாம் யோசிக்கவேண்டும் என்பது அவர்களின் எண்ணம்.

பிறந்த எல்லாம் மரிக்கத்தான் வேண்டும். இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இடையில் ஏன் எனது, எனது என்று வாழ்ந்து வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்ளவேண்டும் என்பது மட்டுமே எனது கேள்வி. இங்கே என்னால் ஆனது என்று ஒன்றும் இல்லை. ஒரு செயலை நான் பூர்த்தி செய்ய குறைந்தது இன்னொருவர் உதவி எனக்கு வேண்டும், இப்படி இருக்கையில் நான் செய்தேன்...என்னால் மட்டுமே முடியும் என்று எண்ணுவது எல்லாம் மிகப்பெரிய மாயை.

இப்போது ஆன்மத் தேடல் இருக்கும் சிலர் தொடர்ச்சியாக இந்தத் தளத்தை வாசிக்கிறார்கள் என்பது எனக்கு ஒரு உந்து சக்தியாய் இருந்து எழுதவேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது. மனிதர்களின் புத்திக்கு எட்டாத விடயங்களைப் படைத்து விட்டு படியேறி வந்து படித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் மாமேதைத்தனம் கொண்டவர்களையும் கொண்டது இந்த சமூகம். அதே போல எனது அருட்தந்தை, ஆன்மீக வழிகாட்டி, எழுத்துலகின் குரு, ஐயா திரு. பாலகுமாரன் போன்றவர்கள் வாழ்வியலை, மனித வாழ்வின் சிக்கல்களை, அவர்களைச் சுற்றி இருக்கும் முரண்களை, ஆன்மீகத் தேடலை, கடவுளின் அவசியத்தை, ஒழுக்கத்தை, நெறி முறைகளை, அன்பை, சகிப்புத்தன்மையை, ஞானத்தை தங்களின் எழுத்தில் குழைத்து குழைத்து கொடுத்து பேரறிவுப் பால் புகட்டியதால் வளர்ந்த குழந்தைகள் என்னைப் போல எத்தனையோ பேர்கள்.

சாமானியனைச் சென்று சேராத எழுத்து இருந்து என்ன பயன்? அது பொக்கிசமாகவே இருக்கட்டும்... ஆனால் பயன் தராத பொக்கிசம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒன்றுதான். வெகுஜன தொடர்புக்காய், புரிதலுக்காய் எழுத்து பயன்படவேண்டும். ஆன்மீகம் என்னும் பேரறிவைப் பகுத்தறிவு என்னும் புரிதலின்மையால் இந்த சமூகம் மறுத்துக் கொண்டிருப்பதற்கு நம்மிடையே இருக்கும் ஆன்மீகப் போலிகளும், மூட நம்பிக்கைகளுமே காரணம். தன்னுள் இருக்கும் வெறுமையை, காலித்தன்மையை உணர்ந்தவனுக்கு கிரீடங்கள் எதற்கு? பக்தர்கள் எதற்கு? கற்றுக் கொடுக்க காசு எதற்கு? நான் கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் மமதை எதற்கு...?

ஆன்ம உயர்வு எல்லோரையும் சமமாய் பார்க்கச் சொல்கிறது. வாஞ்சையோடு மனதால் அன்போடு  அணைத்துக் கொள் என்கிறது. குழந்தைகளை கை பிடித்து அழைத்துச் செல்லும் ப்ரியத்தோடு சக மனிதரை அழைத்துச் செல்லச் சொல்கிறது. திருப்தியின் உச்சத்தில் என்ன தேவைகளை இந்த உலகம் கொடுத்து விட முடியும். நான் வெறும் காலியானவன், என்னுள் எண்ணங்கள் வந்து வந்து செல்கின்றன அவ்வளவே என்று உணருமிடத்தில் பேரமைதியைத் தவிர வேறொன்றும் இருப்பதில்லை. நிறைய பேர் இங்கே தன்னை யாரென்று பிரகடனப்படுத்திக் கொள்ளவே எழுதுகிறார்கள். ஆனால் பாலகுமாரன் ஐயா போன்றவர்கள் போகிற போக்கில் தங்களின் அகந்தையை அழித்துக் கொள்வதோடு வாசிப்பவனின் அகந்தையையும் சேர்த்தே அழிக்கவும் செய்கிறார்கள்.

எழுதுபவன் தனது ப்ரியத்தை எழுத்தில் கரைத்து எழுத வாசிப்பவனால் அந்த ப்ரியத்தை உணரமுடிகிறது. நிறைய பேர் வாசிக்க அந்த ப்ரியம் திரும்ப எழுதியவனுக்குப் போய்ச் சேருகிறது. அங்கீகாரம், பட்டம், பதவி, கூட்டம் இவை எல்லாம் கடந்து ஒரு மனிதனுக்கு தேவை எவ்வளவு பேர்கள் அவனை நேசிக்கிறார்கள் என்பதே...

எழுதுவது ஒரு தவம். இங்கே பொருளீட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு, புகழ் பெறவேண்டும் என்ற ஆசையோடு மட்டும் எழுத வருபவர்களை எழுத்து தூக்கி விடுவது போல தூக்கி விட்டு சறுக்கி விழச்செய்து விடுகிறது. தலைக்கனத்தோடு வருபவர்கள் தலைகுப்புற விழுந்து விடுகிறார்கள். தன்னை மிகச்சிறந்த எழுத்தாளன் என்று பிரகடனப்படுத்திக் கொள்ள வருபவர்களின் புத்தியிலிருந்து கற்பனாதேவி இறங்கிப் போய்விடுகிறாள். பிறகு இவர்கள் கற்பனையை எழுத முடியாமல் கர்வத்தை எழுதுகிறார்கள். வாசிப்பவன் கர்வத்தை வாங்கிக் கொண்டு பின் காறி உமிழாமல் என்ன செய்வான்.....?

வாழ்க்கை ஒரு அழகிய கவிதை அதில் அர்த்தங்கள் தேடுவது அபத்தம். வாழ்க்கையை  அதன் பரிபூரணத்தை வெறுமனே வாசித்து விட்டு, ரசித்து நகர்ந்து விடுதல் சுகம். பட்டாம் பூச்சியைப் பார்க்க மட்டுமே உங்களுக்கு அனுமதி... அதன் அழகை ரசித்தபடியே நகர்ந்து விடுங்கள்...அதைப் பிடித்து அதன் இறகிலிருக்கும் வர்ணத்தைப் பற்றி ஆராய்ந்து குரூரத்துக்குள் விழுந்து விடாதீர்கள்.

மீண்டும் கட்டுரையின் ஆரம்ப வரிகளுக்கு வருகிறேன். தொடர்ச்சியாய் இனி ஹார்மோன் செய்யும் கலகம்தானடா தொடரை (?!) எழுதுகிறேன் யாரேனும் ஒரு பத்து பேர் வாசிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு. முந்தைய பாகங்களை இந்த சுட்டியை சொடுக்கி வாசித்துக் கொள்ளுங்கள். 

அந்தக் கதையில் வேறு என்ன இருக்கப் போகிறது...

என் வாழ்க்கையின் 
திரும்பிய பக்கமெல்லாம் 
எதிர்ப்படுவது...
காதலும் கடவுளுமன்றி 
வேறெதுவுமில்லை....!

வாழிய நலம்....!


தேவா. S



வெந்து தணிந்தது காடு...!

$
0
0
























சேதுக்கரையிலிருந்துதான் இராமர் ஈழத்துக்குப் பாலம் கட்டியதாகச் சொன்னார்கள். பிரம்மாண்டமான வங்காள விரிகுடா என் முன் விரிந்து கிடந்தது. சேதுக்கரையின் கடல் நீல நிறம் கிடையாது. கருமையும் நீலமும் நிறைந்த ஒரு ரகசியங்கள் நிறைந்த நிறம் அது. நெரிசல் அதிகம் இல்லாமல் ஓரளவு அமைதியைக் தாங்கிக் கிடந்த அந்த இடத்தில் திவசம் கொடுப்பதில் இருந்து கருமாதி காரியங்கள் வரை எல்லாம் ஏதோ ஒரு அவசர கதியில் நடந்து கொண்டிருந்தன.

ஈர வேட்டியுடன் வெற்றுடம்புடன் முழுதும் மழிக்கப்பட்ட தலையோடு கடற்கரை மண்ணில் நானும் என் இரு தம்பிகளும் அமர்ந்திர்ந்தோம். காலை பத்து மணி வெயிலை கட்டுப்படுத்தி கொண்டிருந்த மேகக்கூட்டங்களை நிமிர்ந்து பார்த்தேன். கடற்காற்று ஈர உடம்பில் பட்டு சிலிர்க்கச் செய்து கொண்டிருந்தது. பிரபஞ்ச ரகசியங்களைத் தன்னுள் தேக்கிக் கொண்டு ஆழ் கடலும் நீலவானமும் எங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன. ஆமாம்.. அது சேதுக்கரை என்னும் கடற்கரை கிராமம். அங்கிருந்த்துதான் இராமர் ஈழத்துக்கு சென்று இராவணனோடு போரிட பாலம் கட்டினாராம். நாங்கள் எங்கள் தந்தையின் 16 ஆம் நாள் காரியத்துக்காக கடந்த ஜூன் 7 ஆம் தேதி அந்த கடற்கரையில் வற்றிப் போன கண்ணீரோடு அமர்ந்திருந்தோம்.

சாலையோரத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திக் கொண்டிருந்தவரை சாலையை விட்டு இறங்கிய டாட்டா-ஏசி சிறு லாரி அடித்து தலையில் அடிபட்டு எங்கள் உயிர் பறித்த கதை பற்றி நான் இங்கு பேசவரவில்லை. அது எனக்கும் இந்த பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பெருஞ்சக்திக்கும் இருக்கும் ஒரு வழக்கு. வழக்கு தொடுத்திருப்பவன் நான். குற்றம் சாட்டப்பட்டிருப்பது அண்ட சராசரத்தையும் ஆட்டிப்படைக்கும் அந்த சக்தி. கையிலிருந்த பொருளைத் தட்டிப் பறித்தது போல அவனுக்கு என்ன அப்படி ஒரு அவசரம் என்பதுதான் எனது கோபம். வழக்கம் போல ஏதேனும் நியாயத்தைக் விதி என்ற பெயரிலோ அல்லது பிரபஞ்ச சுழற்சி என்ற நீதியைச் சொல்லியோ அந்த பெருஞ்சக்தி என்னிடம் வாதிடலாம்...

என் கேள்வி எல்லாம் ஏன் என் தந்தைக்கு மரணம் வந்தது என்பதல்ல...ஏன் கள்ளத்தனமாய் இப்படி பின்னால் இருந்து வந்து உயிர் பறித்தாய் என்பது மட்டுமே...!

ஒருவேளை ஜென்மாந்திரக் கணக்குகளை எடுத்துக் கொண்டு வந்து, இது கடந்து போன பிறவியின் கர்மபலன் என்று காலம் என்னிடம் சொல்லலாம். அதை விட்டு விடுங்கள் அது எனக்கும் இந்த பிரபஞ்சத்தை இயக்கும் பெருஞ்சக்திக்கும் இடையே உள்ள பிரச்சினை. நான் என்ன யாரோவா? நானும் இந்தப் பிரபஞ்சத்தின் பகுதிதானே? எல்லாம் வல்லவன் என்றால் அவனிலிருந்து தனித்து விழுந்த நானும் எல்லாம் வல்லவன் தானே? நான் என்ன மனமென்னும் மாயைக்குள் அகப்பட்டு சிக்கல் கொண்ட மனிதனாகவா வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வந்த வேலையைச் செய்து முடித்து நானும் மீண்டும் என் மூலத்திற்கு தானே மீள்வேன். நீதி கேட்பது எனது உரிமை, நீதி சொல்லவேண்டியது இயற்கையின் கடமை.

ஜனனம் என்ற ஒன்று இருந்தால் மரணம் என்பது நிச்சயம் தானே ....நீ என்ன பித்தனா என்று கூட நீங்கள் என்னைக் கேட்கலாம்? நான் பித்தன் தான். அவனும் பித்தன் தான். இடைவிடாது சுடுகாட்டில் சுற்றி திரிந்தானே சுடலை என்ற பெயரில், நிலையாமை அறிய மண்டை ஓடுகளை அணிந்து கொண்டு அலைந்தானே கபாலி என்ற பெயரில், அசைவற்ற மூலத்தை சிவம் என்று அறிந்து அதை உணர்ந்து பின் பெருமான் ஆனானே அவனும் பித்தன் தான்.. நானும் பித்தன் தான்.

சேதுக்கரையில் எங்களுக்காக காரியங்களை செய்ய எங்கள் எதிரே இருந்த அந்த வேதம் படித்த பிராமணனுக்கு முறைப்படி பிரபஞ்ச சக்தியை வேண்டிய படி உரிமைகள் கொடுத்தோம். ஒவ்வொரு மந்திரமும் சொல்லி அதன் தமிழ் மொழி விளக்கத்தையும் சொல்லி வாஞ்சையோடு காரியங்கள் செய்து கொண்டிருந்தவரும், என்னைச் சுற்றி இருந்தவர்களும் எனக்கு என் சிவனாய்த்தான் தெரிந்தார்கள். அவனின்றி வேறு என்ன இருக்கிறது இங்கே? அவர் தவறுதலாய் வைணவ கோத்திரம் என்று சொல்ல நான் சிவகோத்திரம் என்று திருத்தினேன். காரியங்கள் மன திருப்தி. ஒருவர் எம் எதிரே கர்ம சிரத்தையாய் எம் தந்தையின் ஆன்மா முக்தியடைய பிரார்த்திக்கிறார் என்னும் நம்பிக்கையும், எங்களின் கூர்மையான மனம் குவித்தலும் எம்  தந்தையின் ஆன்மாவை பக்குவ நிலைக்குக் கொண்டு செல்லும் என்று நானறிவேன்.

இயல்பிலேயே பக்குவமான ஆன்மா கொண்ட சிங்கம் என் தந்தை. சிவகோத்திரம் என்று நான் அழுத்தம் திருத்தமாய் கூறியதற்கு காரணம் இருக்கிறது. சிவம் என்னும் பிரபஞ்சத்தின் பூர்வாங்க ஆதி நிலையை உணர்ந்து தலைமுறை தலை முறையாய் " தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..." என்று சாம்பலை அள்ளி நெற்றி நிறைய பூசிய பின்புதான் எங்களின் பொழுது தொடங்கும். மதத்தன்மையைப் பற்றி இங்கே நான் பேசவில்லை. சைவம் அல்லது சிவம் என்னும் ஒழுக்க நெறிக்குப் பின்னால் இருக்கும் விஞ்ஞான உண்மையைச் சொல்ல விரும்பிகிறேன்.

மேலோட்டமாக இல்லாமல் ஆத்மார்த்தமாக இதை உள்வாங்கிக் கொண்டு வாழ்க்கை நகரும் போது நிலையாமை ஆழமாக நமது உள்ளே இறங்கி விடுகிறது. நிலையாமை உள்ளே இறங்கிய பின் சக மனிதரை வாழும் காலம் வரை நேசிக்கத் தொடங்கி விடுகிறோம். சக மனிதரை நேசிக்கும் போது அறிந்து நாம் அநீதிகள் செய்யவே மாட்டோம். எல்லோரும் நேசிக்க அன்பே சிவம் என்பது புரியும். சிவம் என்பது யாரோ ஒரு மனித உருக் கொண்ட நபரல்ல, இத்தனை ஜனசமுத்திரத்தையும், இப்பிரபஞ்சம் முழுதும் பரவி விரவிக் கிடக்கிற அசையும் அசையா அத்தனை வஸ்துக்களையும் உள்ளடக்கிய பெருஞ்சக்தி என்று உணர முடியும். பிறகு மரணம் இலகுவாகிப் போகும். உயிர் பிரிதல் சுவாசித்தலைப் போன்ற சுகமான அனுபவமாய் முடிந்து போகும். உயிர் பிரிகையில் உடல் உகுக்கிறோம் என்ற புரிதலோடு பெரும் நிம்மதியை ஏந்தியபடியே உடல் விட்டு நகர்ந்து போவோம்.

இப்போது புரிகிறதா எனக்கும் என் சிவனுக்கும் ஏன் வழக்கு அல்லது என்ன வழக்கு என்று...? அவன் என் தந்தையின் உயிர் பிரிதலை அவரை உணரச் செய்யாமல் கையிலிருக்கும் பொருளைத் தட்டிப் பறித்தது போல கொண்டு போனதன் காரணம் எனக்கு வேண்டும் அவ்வளவுதான். பிரபஞ்சத்தின் அசைவுகளில் எம் தந்தையின் ஆன்ம பலமும், எம்மின் பிரார்த்தனைகளும் எப்போது நாங்கள் சொல்லும் ஐந்தெழுத்து மந்திரமும் எம் தந்தையை கடைத்தேற்றும் என்பதை நானறிவேன்..!  சூட்சும ரூபத்தில் இருக்கும் எமது மூதாதையர்களும், நன் ஆன்மாக்களும், பதினெட்டுச் சித்தர்களும், அறுபத்தி நான்கு நாயன்மார்களும் மேலும் பிரபஞ்ச பேரதிர்வும் எம் தந்தையின் ஆன்மாவை அரவணைத்து தலை வருடிக் கொடுத்து, அதிர்வுகளால் சாந்தப்படுத்தி மேல் நிலைக்கு உயர்த்தி இருப்பதை நான் அறிவேன். 

நான் உடலாய் இருப்பதால் என் உடல் சார்ந்த நினைவுகள் எழுப்பும் கேள்வியைத்தான் இன்று என் ஈசனிடம் வைத்திருக்கிறேன்...! ஏனென்றால் முறையாய் எடுத்துச் செல்வதில் இருக்கும் நியாயம் தட்டிப்பறிப்பதில் இல்லைதானே...?

தந்தையின் கர்மாக்களை எல்லாம் சமப்படுத்தி ஆதி நிலைக்கு செல்ல பிரார்த்தனைகள் செய்து விட்டு சேதுக்கரையிலிருந்து மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். வாகனத்தில் ஜன்னலோரமாக அமர்ந்திருந்தேன். காற்றால் என் கேசம் கலைக்க முடியாமல் தலையைத் தடவியபடியே மெளனமாய் என் முகத்தில் அறைந்தது. மாரநாடு கருப்பையா பிள்ளையின் மகனான, இராமசாமி பிள்ளையின் மகனான, செல்லையா பிள்ளையின் மகன் சுப்பையா பிள்ளை என்னும்  எனது தந்தையின் பூலோக வாழ்கை முற்றும் பெற்றது. யாதொரு குறைகளும், எதிரிகளும் இல்லாமல் நிறைவாய் வாழ்ந்து முடித்து ஒரு சிம்மம் போல கம்பீரமாய் இவ்வாழ்க்கையை விட்டு முறுக்கிய மீசையோடு வெளியேறிய எம் தந்தை எனக்கு மிகவும் கம்பீரமாய் தெரிந்தார். ஒட்டு மொத்த என் சொந்த  பந்தங்களுக்கும், நட்புகளுக்கும் இடையே கம்பீரமாய் வாழ்ந்து முடித்த நட்சத்திரம் அவர். அவரை அறிந்தவர் அவரை அறிவர்!

ஒரு  மிகப்பெரிய நாவலை வாசித்து முடிக்கையில், நல்ல திரைப்படத்தை பார்த்து முடிக்கையில், தொன்மையான கோவிலுக்குச் சென்று திரும்புகையில், ஆழ் தியானம் விட்டு எழுந்து அமர்கையில் பெரும் திருப்தி ஒன்று நம்மைச் சூழ்வதோடு அதன் தாக்கமும் நம்மை புரட்டிப் போடும். என் ஆயுள் முழுவதற்குமான தாக்கத்தைக் கொடுத்த திருப்தியில் காலம் தன் சுழற்சியை தொடர்ந்து கொண்டிருக்க..

இந்த ஜென்மம் முழுதும் நான் என் தந்தையை மனதில் சுமந்த படியேதான் நகரமுடியும் என்று எனக்குப் புரிந்தது. அம்மாவை எனது இரு தம்பிகளை, எனது சகோதரியை, நான் வாஞ்சையோடு அணைத்துக் கொண்டிருக்கிறேன்.....கதறி அழ எனக்கு வாழ்க்கை அவகாசம் கொடுக்கவில்லை....எனக்கு இருப்பதெல்லாம் ஒரே ஒரு ஆசைதான் இப்போது....

" என் அப்பா மாதிரி நான் வாழ்ந்துட்டு சாகணும்....எல்லோரையும் அரவணைச்சு.....அவ்ளோதான்..."

வண்டி எங்கள் ஊர் நோக்கிப் பறந்து கொண்டிருந்ததது. தம்பிகள் பார்க்காதவண்ணம் நான் துண்டுக்குள் முகம் புதைத்து நான் தேம்பிக் கொண்டிருந்தேன்.


தேவா சுப்பையா...




ம்ருதுளா...!

$
0
0
























நான் எழுதிக் கொண்டிருக்கும் கதையிலும் உன்னைப் போலவே ஒரு கதாநாயகியை படைத்திருக்கிறேன். அவளும் உன்னைப் போலவே நீ என்னை விட்டு எங்கோ இருப்பது போல அவள் காதலனை விட்டு எங்கோ வசிக்கிறாள். அவர்களின் காதல், திருமணம் என்னும் வழமைக்குள் நுழைந்து விடாமல் காதலாகவே தொடர்ந்து கொண்டிருந்ததை நான் எழுதிய பொழுதில் நம் வாழ்க்கையின் சாயலை நான் எழுதிக் கொண்டிருக்கிறேனா என்ற ஐயம் கூட எனக்கு வந்தது.

பதின்மத்தின் குறு குறுப்பினை எல்லாம் ஒரு முழு நெல்லிகாயைப் போல வாயின் ஓரத்தில் அதக்கிச் சுவைத்துக் கொண்டு,    ஒரு மலையினில் படுத்துக் கிடக்கும் மேகத்தின் வசீகரத்தை ஒத்த அழகிய நினைவுகளை எழுத முடியமால் திணறிக் கொண்டிருக்கும் என் பேனாவை பார்த்தால்  எனக்கே பாவமாய்த்தானிருக்கிறது. உன் மீது நான் கொண்டிருந்தது மிருதுவான காமம் அது. காமம் என்றால் அது உடல் உரசும் காமம் இல்லை. மிருதுவான என்ற வார்த்தை வார்தைகளில் அழகானது. இருந்தும் இல்லாமல் இருக்கும் நயத்தை எடுத்துச் சொல்ல மிருதுவானது மிருதுவாய் பொருந்தும் என்பதால் மட்டும் எனக்கு இந்த வார்த்தை பிடித்து விடவில்லை. என் கதையின் நாயகிக்கு ம்ருதுளா என்ற உன் பெயரை ஏன் நான் வைத்தேன் என்பதற்கும், எனக்கு ஏன் மிருதுவான என்ற வார்த்தை பிடிக்கும் என்பதற்கும் தனியே நான் விளக்கம் சொல்ல வேண்டியதில்லை தானே...?

ம்ருதுளா என் கதையின் நாயகி. வாழ்க்கையிலும் கூட. ம்ருதுளா காதலனைப் பிரிவதற்காகவே என் கதையில் உருவாக்கப்பட்டவள். உன்னை கடவுள் அவர் எழுதிய கதையில் எனக்காக உருவாக்கியதைப் போல. எப்போதாவது ஒரு முறை சேர்ந்து வாழ்ந்து விடுவோம் என்ற கனவு என் கதையின் நாயகனுக்கும் என்னைப் போலவே உண்டு. அவனுக்கு காமத்தையும் காதலையும் பிரித்துப் பார்க்கத் தெரியாது. காதலை காமத்தின் உச்சம் என்பான். காமத்தை காதலின் மிச்சமென்பான். வாழ்க்கையை அடுத்தடுத்து இருந்து அன்றாட பிரச்சினைகளைப் பேசி பிள்ளைக் குட்டிகள் பெற்று ஏதோ ஒரு கனவு இலக்கினை அடைய அவனுக்கும் விருப்பமில்லை என்னைப் போலவே....

உன்னோடு நான் பேசுவது போலத்தான் என் கதையின் நாயகியான ம்ருதுளாவிடம் அவனும் பேசுவான். வாழ்க்கையினூடே நிகழ்வதுதான் தாம்பத்யம் என்பதைக் கடந்து வார்த்தைகளில் நகர்ந்து கொண்டிருந்த அவர்களின் தாம்பத்யத்தில் ஒருவரை ஒருவர் சேர வேண்டும் என்ற யாக்கையை வேண்டுமென்றே அவர்கள் புறக்கணித்துக் கொண்டனர். கனவுகள் அவர்களுக்கு வசதியாய் இருந்தன. கனவுகள் நமது விருப்பம். எந்த தொந்தரவும் இல்லாதது. தானாக தோன்றிய உலகில் சட்ட திட்டங்களையும் கோட்பாடுகளையும் கிறுக்கி வைத்த  பைத்தியக்காரர்களைப் போல கனவுகளிலும் கற்பனைகளிலும் யாரும் இருப்பதில்லை.

எல்லாமே நமது இஷ்டம். ஒரு பட்டாம் பூச்சியை கவிதை எழுதச் சொல்லிவிட்டு நாம் பட்டாம் பூச்சியைப் போல சிறகடித்து பூக்களை சுகிக்கலாம். வெண் மேகங்களை வீதியுலா வரச்சொல்லி விட்டு....புற்களை வானத்தில் நட்டு வைத்து நடு நடுவே ரோஜா செடிகளை நட்டு வைத்து ரசிக்கலாம். கனவுகள் கம்பீரமானவை. எதார்த்தம் பிச்சைகாரத்தனமானது. இங்கே எப்போதும் நெரிசல்தான், கூச்சல்தான்.....என் நாடு, என் வீடு, என் சொத்து..என்று எனது, எனது, எனது என்று எல்லாவற்றையும் கிரயம் செய்து கொள்ளும் பைத்தியக்காரர்களின் வீடு இது.

இயற்கை எப்போது கட்டுப்பாடுகளை கையில் வைத்திருந்திருக்கிறது....? விடியாத இரவொன்று எந்தப் பகலின் இறுதியில் பிறக்கும் என்று யாருக்கேனும் தெரியுமா? தெரியாது என்று சொல்லிக் கொண்டே ஓடும் இந்த உலகத்திற்கு என்ன விதமான ரசனைகள் இருக்க முடியும்? ம்ருதுளாவையும், சாரதியையும் கதையின் மையமாக்கி நகர்ந்து கொண்டிருக்கையில் உன் நினைவுகள் என்னைச் சீண்டிக் கொண்டிருப்பதையும் நான் சொல்லித்தான் தீரவேண்டும். கட்டுப்பாடுகளே இல்லாதவன் சாரதி என்று நான் சொல்லும் போது உனக்கு எப்படி என் நியாபகம் வருகிறதோ அது போலத்தான் கதையிலும் ம்ருதுளா அடிக்கடி கட்டுப்பாடுகள் அற்றவைகளை காணும் போது எல்லாம் சாரதியை நினைத்துக் கொள்வாள்.

பிரிந்து செல்வதற்காகவே சாரதிக்கும் மிருதுளாவிற்கும் விடிந்த ஒரு பொழுதில் அவர்களின் கனவுகளை எல்லாம் மொத்தமாய் கட்டுப்பாடுகள் விழுங்கித் தின்று கொண்டிருந்தன. பைத்தியக்கார உலகை விட்டு விலகி வாழும் சாரதியை யாருக்கு தெரிகிறதோ இல்லையோ உனக்கு நன்றாகத் தெரியும்  ஏனென்றால் சாரதி இந்த உலக வாழ்வின் நியதிகளைப் புறக்கணித்ததாலேயே சக மனிதர்களால் பைத்தியக்காரன் ஆக்கப்பட்டான் என்னைப் போலவே....! இவ்வுலகின் நியதிகள் வெகு அபத்தமானவை. அத்தனையும் ஏமாந்தவர்களை கபட புத்திக் கொண்டவர்கள் அடிமைப்படுத்த ஆக்கிரமிக்கவே உருவாக்கப்பட்டன...

இலக்குகளே இல்லாத வாழ்க்கையின் ஏதோ ஒரு கணத்தில் எல்லாம் நின்று போய் விடுகிறது. எல்லாம் நின்று போன பின்பும் ஏதோ ஒன்று இருக்கும் என்று ஏதேதோ கதை சொல்கிறார்கள். கடவுள்களும் மதமும் இல்லாத நாடுகள் எப்படி இல்லையோ அப்படியே தங்களை மேதாவிகளாக நினைத்துக் கொள்ளும் ஒரு கூட்டம் பகுத்தறிவு பட்டயத்தை கழுத்திலே அணிந்து கொண்டு புத்திசாலிகள் நாங்கள் மட்டுமே என்று கட்டியம் கூறிக் கொண்டும் இருக்கிறது. வாழ்க்கையோ எப்போது இருவேறு நீதிகள் கொண்டிருப்பதில்லை. அது பணக்காரனுக்கும், ஏழைக்கும், அதிகாரம் செய்பவனுக்கும், கொள்ளைக்காரனுக்கும், சாதுவுக்கும், ஒரே நீதியைத்தான் சொல்லிச் செல்கிறது.

மாதத்திற்கு முப்பது நாள் என்று சொன்னவன் யார் என்று ஒரு நாள் நான் கேள்வி எழுப்பினேன் அல்லவா? திங்கள் கிழமைக்கும் செவ்வாய்க் கிழமைக்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு நாள் விவாதம் செய்தேன் அல்லவா? சூழல்கள் ஆற்று நீரைப்போல நகர்ந்து கொண்டே இருக்கின்றன மனிதர்கள் அவற்றை கூறு போட்டு விதிகள் பிறப்பித்துக் கொள்கிறார்கள் என்று சாரதியும் நான் பேசுவதைத்தான் அந்தக் கதையில் பேசுகிறான்.

ம்ருதுளா......உனக்கு எதனால் என்னைப் பிடிக்குமோ அப்படித்தான் கதையில் வரும் ம்ருதுளாவிற்கும் சாரதியைப் பிடிப்பதாய் படைத்திருக்கிறேன். உடல் ரீதியான எதிர்பார்ப்புகளை மையப்படுத்தி பிறக்கும் காதலைத்தான் கடவுள் உலகிற்கு படைத்தளித்திருக்கிறான் என்றால் உடல் கவர்ச்சியே இல்லாத காதலை எனது கதையில் நான் படைத்தளித்திருக்கிறேன் உன் மீது நான் கொண்ட காதலைப் போலவே...

காதலுக்கு எதுவுமே தேவையில்லை. அது எப்போதும் வலியைச் சுமப்பது போல சுகத்தை நமக்குள் இறக்கி வைக்கும். உடலினால் தொட்டு எரித்துக் கொள்ளும் லெளகீக காதல்களின் இலக்கு காமத்தை அன்றி வேறு என்னவாக இருக்க முடியும். காமம் இல்லாமல் காதலிக்கலாம் வா என்று யாரையேனும் கூப்பிட்டால் அப்படி கூப்பிடுபவரை பித்தன் என்றுதானே இந்த உலகம் சொல்லும்....? திருமணங்கள் எல்லாம் காமத்தை அரங்கேற்ற காதலை துருப்புச் சீட்டாக்கிக் கொள்கிறன. தீண்டாத காதலால் தீராத கலவி செய்வோம் என்று யாரேனும் இங்கே திருமணம் செய்து கொள்ளத் தயாரா? என்று சாரதி ம்ருதுளாவிடம் கேட்டுக் கொண்டிருந்த கடற்கரை மாலை....

நான் உன்னோடு அன்றொரு நாள் பேசிக் கொண்டிருந்த அதே அற்புதமான மாலைதான் ம்ருதுளா. விடம் அடக்கிய பாம்பு அதை நவரத்னமாக்கி உமிழ்கிறது...., சிப்பிக்குள் தேங்கிக் கிடக்கும் நீர் காலங்கள் கடந்து முத்தாய் ஜொலிக்கிறது. தேக்கி வைக்கும்யாவும் சுகமென்று இயற்கை பரிந்துரைக்கையில் எப்போதும் எல்லாவற்றையும் தீர்த்துக் கொள்ள நினைக்கும் லெளகீகத்தின் மிச்சம் பிரபஞ்சத்தின் தொடர்ச்சியை தீர்மானித்து வாரிசுகளை நிர்மானம் செய்து விட்டு...நெருப்புக்கோ அல்லது மண்ணுக்கோ தன்னை இரையாக்கிக் கொள்கிறது.

நேர்க்கோட்டில் நிகழும் யாவுக்கும் சுவாரஸ்யமென்றால் என்னவென்று தெரிவதில்லை. அப்படித்தான் வாழ்க்கையின் ஓட்டத்தில் லெளகீக நியதிகளின் படி நீ என்னை பிரிவதற்காய் அன்று காத்திருந்தாய். அது ஏனென்று எழுதி சரசாரி கதைகளைப் போல இந்தக் கதையை நான் சொல்ல விரும்பவில்லை. பிரிவது கருப்பொருளாயிருக்க ஏன் பிரிந்தார்கள் என்று அடுத்த வீட்டுப் படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் பொது புத்தியை என் கதையில் நறுக்கி எறியவும் செய்திருக்கிறேன்.

இதோ...ம்ருதுளாவும் காத்திருக்கிறாள் சாரதியை விட்டு பிரிந்து செல்ல...உன்னைப் போலவே அழுது கொண்டிருக்கும் ம்ருதுளாவிடம் என்னைப் போலவே பிரிதல் சுகமானது. அதுவும் எப்போதும் உடனிருந்தவர் பிரிந்து செல்கையில் மிகப்பெரிய வெற்றிடம் ஒன்று விரக்தி என்ற பெயரில் நம்மைச் சூழவும் செய்கிறது. துணை வேண்டும் என்று ஏங்கும் மனதிற்கும் இயற்கை தனியாய் நாம் பூமிக்கு வந்த கதையை எடுத்துச் சொல்லி, தனியாய் பூமி விட்டுச் செல்லும் நியதியை எடுத்துச் சொல்கிறது. இந்த வாய்ப்பு எப்படி வலியாகும்...? அது பொக்கிஷ நிகழ்வல்லவா?

ம்ருதுளா சாரதியை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் உன்னைப் போலவே. சாரதி ஏதேனும் கிறுக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்னைப் போலவே....!!!! என் வாழ்க்கை நியதியை இந்தக் கதையாக்கி இருக்கிறேன் ம்ருதுளா. கிடைப்பது வெற்றி என்று நம் புத்தியில் திணிக்கப்பட்டிருக்கிறது. இழப்பதும் வெற்றிதான் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்..?

ஜீவனாய் எனக்குள் இருக்கும்
அழகிய கவிதையை
யாரால் அழிக்க முடியும்..?
நிதர்சனத்தின் நிமிடங்கள்
எப்போதும் முடிந்து போவது இல்லை,
ப்ரியங்களை எப்போதும்
வாய்ப்பாடு சொல்வது போல
சொல்ல முடிவதுமில்லை!
கனவுகளுக்கு வேலிகளும்...
கவிதைகளுக்கு கட்டுப்பாடும் இருந்தால்
கற்பனைகள் செத்து போய்விடாதா என்ன?
இரவுக்கும் பகலுக்கும் அப்பால்
இருக்கும் வாழ்க்கையொன்றை
யார்தான் அறிவார்....?

நீ சென்றவுடன் நான் எழுதி கவிதையொன்றை சாரதி எழுதுவது போல எழுதி நீ பிரிந்ததை கொண்டாடிய அவனையும் என்னையும் யாரென்று சொல்லும் இவ்வுலகம்...? என் கதையில் வரும் ம்ருதுளாவிற்கும், உனக்கும் என்னையும் சாரதியையும் புரிந்து கொள்ள முடியுமென்றால்...

இந்தக் கதையை பின் எப்படித்தான் நான் முடிப்பதாம்.....? 

இதோ உனக்கான என்  வார்த்தைகளை நான் முடிக்கப் போகிறேன்....ஆனால் கடைசி வார்த்தையை வாசித்த பிறகுதான் நிஜத்தில் இந்தக் கதை தொடங்கப் போகிறது என்பதை நீ அறிவாயா?


தேவா சுப்பையா...



சிங்கம் 2 வோட நிறுத்திக்குங்க ப்ளீஸ்...!

$
0
0
























வூட்டுக்குள்ள குடும்பத்துல இருக்க அம்புட்டுப் பேரையும் வச்சுப் பூட்டிப்புட்டு, துப்பாக்கியவும் விவேக்கிட்ட கொடுத்துப்புட்டு...தக்குணூன்டு சூர்யா இருபது முப்பது பேரை பிரிச்சு மேயுறாரு பாருங்க ச்சும்மா சொல்லக்கூடாது சூர்யா ரொம்பவே மெனக்கெட்டு இருக்காப்ல....! அதுலயும் பாருங்க உசரமான ஆளுகள அடிக்க எம்பி எம்பி அந்த தம்பி போடுற சண்டை க்ளாஸ்தான் போங்க....! 

ஹலோ....ஹலோ....ஹலோ ஒக்க செகண்டு....படம் புடிக்கலேன்னா பாக்காம போகவேண்டியதுதானேன்னு கேக்குறீங்களா? டோரண்ல படம் ரிலீஸ் ஆன அன்னிக்கே படத்தை ரிலீஸ் பண்ணாம நிறுத்தச் சொல்லுங்க, நான் நிறுத்துறேன் அப்புறமா..! காசு கொடுத்து பாத்த படத்துல லாஜிக் இருக்கோ இல்லையோ இரண்டே முக்கால் மணி நேரம் விறு விறுப்பா இருந்துச்சுன்னு சொல்லிட்டு விமர்சனம் எழுதி, படத்தை ஆகா ஓகோன்னு புகழ்ந்துட்டு இருக்காங்களே அவங்கள நிறுத்தச் சொல்லுங்க முதல்ல அப்புறம் நான் நிறுத்துறேன்...

படம் என்ன கண்றாவியா இருந்தாலும் சரி குப்பைக் கதையா இருந்தாலும் சரி படத்துல வர்ற ஹீரோ காட்டுக் கத்தலா கத்தி தொடை தட்டி, கர்ஜிச்சு, நம்ம நாடி நரம்பு எல்லாம் புடைச்சு உடம்புல ச்ச்சும்மா ரத்தம் ஜிவ்வுன்னு சூடேறினா போதும்னு நினைச்சு தியேட்டர்ல கை தட்டி விசிலடிச்சு படம் பாக்குறானே ரசிகன் அவன நிறுத்தச் சொல்லுங்க நான் நிறுத்துறேன்...

அவ்வளவு ஏன் சார்...? படத்துக்குப் படம் ஏதாச்சும் ஒரு வேசம் கெடச்சா நடிச்சி ஒப்பேத்தலாம்னு ஒரு போலிஸ்காரன் கேக்குறான்றதுக்காக சட்டத்தை எல்லாம் மாத்தி வளைச்சு, ஒரு சி.எம்ம நைட்டோட நைட்டா கன்வினியன்ஸ் பண்ணி ஆப்பரசேன் டி....ஒரு திட்டத்துக்கு அப்ரூவ் கொடுத்து ச்சும்மாவே சீறிக்கிட்டு இருந்த மிஸ்ட்டர் துரைசிங்கம் டிஎஸ்பிக்கு இன்னும் சூடு வைக்கிறாரே....அப்பாவி மந்திரி விஜயகுமார் அவரை நிறுத்தச் சொல்லுங்க நான் நிறுத்துறேன்...! 

திருநெல்வேலி மாவட்டத்துக்காரர் ஆன ரகுமான் தமிழ் பேசும் போது மலையாள வாசனையோடயே இழுத்து, இழுத்துப் பேசலாம் அதை நீங்க ஒத்துக்கிட்டுப் பாப்பீங்க..., பன்னெண்டாவது படிக்கிற பாப்பா...மூணு தலைமுறையா போலிஸ்ல வேலை பாக்குற துரை சிங்கம் சார டாவடிக்கிறத ஒத்துக்குவீங்க..., சந்தானம் அறுக்குற அறுவையே தாங்லேன்னு இருக்கும் போது, விவேக்கையும் கூட சேத்து உப்புக்குச் சப்பாணியா ஓட விட்டத ஒத்துக்குவீங்க....

பைக்ல வர்றவன் பைக்க பிடிங்கி பைக்குக்கு பின்னால வர்றவங்கள எல்லாம் பைக்காலயே அடிக்கிறத பாத்துட்டு கை வலிக்க கை தட்டுவீங்க, நான் இன்னாட படம் இதுன்னு எழுதுனா விறு விறுப்பு இருந்துச்சா இல்லையான்னு என்னை எதிர் கேள்வி கேப்பீங்க அப்டிதானே..? இருந்துச்சு சார் விறு விறுப்பு இருந்துச்சு....

முந்தா நாள் நைட் டாஸ்மாக்க  க்ராஸ் பண்ணி நான் போயிட்டு இருந்தப்ப ரெண்டு பேரு குடிச்சுட்டு கைலிய வலிச்சு கட்டிக்கினு நடு ரோட்ல புரண்டு கிட்டு இருந்தத பாத்தப்ப எனக்கு விறு விறுப்பா இருந்துச்சு....., ஏசி தியேட்டர்ல ஏண்டா ஏசி போடலேன்னு ரெண்டு பேரு ஆப்பரேட்டர அடிக்க போனதை பாத்தப்ப ரொம்ப விறு விறுப்பா இருந்துச்சு, இன்னும் சொல்லப் போனா...ராஜ்ய சபா தேர்தல்ல ஓட்டுப் போடுறதுக்கு மட்டும் சட்டசபைக்குப் போன கலைஞர பாத்தா விறு விறுப்பா இருந்துச்சு....,  தோக்கப்போறமுன்னே தெரிஞ்சு வேட்பாளர நிப்பாட்டிப் புட்டு ஓட்டுப் போடுறதுக்கு முன்னாடி பண்ருட்டியார் கிட்ட டவுட் கேட்டு அப்புறம் ஓட்டுப் போட்ட விஜயகாந்த பாத்தாலும் விறு விறுப்பா இருந்துச்சு..., 

எதிர் கட்சி எம்.எல்.ஏக்கள் ஏழு பேரை டாகல்டி பண்ணி தன் பக்கம் இழுத்து ராஜ்ய சபா தேர்தல்ல மேக்ஸிமம் எம்பிக்கள பேக் அப் பண்ணிட்டு....கொடநாட்டுக்கு ரெஸ்ட் எடுக்கப் போன சி.எம் அம்மாவ பாத்தப்பவும் விறு விறுப்பா இருந்துச்சு...., சாதிப் பேரச் சொல்லி காதல் ஜோடிகள பிரிச்சு அநியாயமா இளவரசன கொன்னங்களே அவனுங்கள நினைச்சப்பா எனக்கு உயிரே போய்ட்டு திரும்ப வந்துச்சு....

நான் தெரியாமத்தான் கேக்குறேன் தங்கத் தமிழர்களே....ஒங்க வாழ்க்கையில ஒரு விறு விறுப்பும் இல்லேன்னு சொல்லிட்டா மூணாவது சீன்லயே யாரு வில்லன்னு நமக்கெல்லாம் தெரிஞ்சு போய்ட்ட இன்டர்நேசனல் ஸ்மக்ளிங் டான் டானிய பிடிக்க படாத பாடு படுற துரை சிங்கம் சாரை பாக்கப் போனீங்க....? இல்லை சென்டிமென்ட் வேணும்னே விருப்பப்பட்டு அந்த பாவி மக ஹன்சிகாவ சாகடிச்ச ஹரி சாரோட டைரக்சன் சூப்பர்னு சொல்லி பாக்கப் போனீங்க...?

சிங்கம் 2 ல வர்ற மாதிரி ஒரு போலிஸ்க்கார் நிஜ வாழ்க்கையில் நம்ப முன்னாடி வந்து நான் சொல்றதுதாண்டா மவனே சட்டம்...எனக்கு அரசியல்வாதி சப்போர்ட் இருக்குன்னு சொன்னா ஏத்துக்கிடுவியளா மக்களே...? ஏதோ ஹரி சார் நல்லவரு, அவர் படத்துல நடிக்க வந்த அண்ணன் சூர்யாவும் நல்லவரு....அவுங்க கடத்தல்காரங்கள பிடிக்க......அதிகாரத்தைக் கையிலெடுத்தாங்க.....அது சினிமா கையத் தட்டி பாத்தோம்...நெசத்துல அப்படி ஒரு ஆபிசரு வந்த நல்லா இருக்குமா மக்களே...? இதுல என்ன கொடுமைன்னா தமிழ் சினிமாவுல ஹீரோவா வர்ற போலிஸ தவிர பாக்கி அம்புட்டு போலிஸுமே கெட்டவங்கெளாவே இருக்கறதுதான். போலிஸ் டிப்பார்ட்மெண்ட்க்கு கெளரவம் சேக்குற படமா இது...? ஒரு போலிஸ நல்லவனா காட்டிட்டு மொத்த போலிஸையும் களவாணித்தனம் பண்ற மாதிரி காட்றதுதுதான் இந்திய காவல்துறைக்கு ஹரி சார் அண்ட் டீம் கொடுக்குர கெளரவமா...? நல்லா இருக்கு ராஜா ஒங்க டீலிங்கு...!

அட கூறுகெட்ட குக்கரு படத்த படமா பாருலேன்னு நீங்க சொன்னா...படத்தை நீங்க என்னமா நினைச்சுப் பாத்தீங்கன்னு  நான் கேப்பனா..?  மாட்டேனா....?சொல்லுங்க ரசிக பெருமக்களே...!!!! சரி படத்தை எல்லாம் வுட்டுத்தள்ளுங்க.. ஏதோ ஓடித்தொலையட்டும்...ஆக்ஸிடெண்ட் ஆகப்போற காரு மாதிரி லபோ திபோனன்னு பயணிக்கிற திரைக்கதை கண்டிப்பா பாத்தவங்களுக்கு எல்லாம் ச்ச்சும்மா ஜிவு ஜிவுன்னு  த்ரில்லாத்தான் இருந்திகிருக்கும்.., அதோட இல்லாம பாட்டு எல்லாம் படு மொக்கைன்ற கதைக்கு எல்லாம் நான் வரலை....என் கேள்வி எல்லாம்...

அம்புட்டு பெரிய ஆளான பாய் உள்ளூர்ல ஆள் கிடைக்காம ஒரு மொண்ணை சிங்களத்துக்காரன கொலை பண்றதுக்காக இலங்கைல இருந்து ஏன் கூட்டிக்கிட்டு வர்றார்னுதான் எனக்குப் புரியலை....கூட்டிட்டு வந்ததோட இல்லாம அவுகளுக்கு சிங்களத்துலயே டயலாக் வேற.....

மிஸ்டர் ஹரி க்ளாரிஃபை ப்ளிஸ்....!

ஆப்பரிக்காவுல போய்...டேனிய கைது பண்ணிக் கொண்டாந்து செல்லுக்குள்ள போட்ட தொரை சிங்கம் ஐயா...அனுஷ்காவ கல்யாணம் பண்ணித் தொலைச்சிருக்கக் கூடாதா....

பாருங்க இப்ப சிங்கம் 3 வருமான்ற பயத்தோடயே படத்தைப் பாத்து முடிச்சுருக்கேன்...! எது எப்படியோ படம் தமிழ்நாட்ல செம ஹிட்ட்டாம்....அதுல என்ன ஆச்சர்யம் இருக்கு...இந்த மாதிரி மசாலா படங்கள் நம்மூர்ல ஹிட் ஆகாம இருந்தாதான் ஆச்சர்யம்...!

ஹரி சார்...வேணும்னா சிங்கம் பார்ட் 3ல நேரடியாவே ஒரு சிங்கத்தை நடிக்க வைக்க ட்ரை பண்ணுங்களேன்....படம் இன்னும் விறு விறுப்பா இருக்கும் (நற...நற....நற...)


அப்போ வர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்டா!!!!!!!


தேவா சுப்பையா....




யாருமற்ற பொழுதுகள்..!

$
0
0
























தெரியாது
என்ற வார்த்தையோடு
நான் முடித்துக் கொண்டேன்
என்று நினைக்கையில்
ஏன் தெரியாது
என்று எப்போதும்
யாரோ தொடங்கி வைக்கிறார்கள்
ஒரு வாழ்க்கையையோ
அல்லது உரையாடலையோ...!

அறியாத பக்கங்களை
எல்லாம் நுனி மடக்கி
யாராவது கொடுத்து
வாசிக்கச் சொல்கையில்
வேண்டாம் என்று...
உதடு பிரிக்கும் முன்பே
திணிக்கப்படுகின்றன
விஷயக் குப்பைகள்..!

எல்லாம் மறுத்து
விசய ஞானங்கள் அறுத்து
நச்சாய் நினைத்து ஒதுக்கி...
மெல்ல சுருண்டு
ஒடுங்கி ஜன்னலரோப் பேருந்தில்
வேடிக்கைப் பார்க்கும்
முகமற்ற பயணியாய்
பயணிக்கவே எப்போதும்
விரும்புகிறது மனது...!

செய்திகளோடு வருபவர்களை
எல்லாம் தூர நிறுத்தி
திருப்பி அனுப்பி...
புன்னைகையோடு வரும்
மனிதர்களை மட்டும் சேர்த்து
வார்த்தைகள் இல்லாமல்
என்னோடு வாசம் செய்யுங்கள்
என்ற கட்டளையை
கண்களால் இட்டு
மெளனத்தை பகிர்ந்து
நகரும் என்
இருட்டு பொழுதுகளில்
வெளிச்சமில்லை என்று
சொல்பவர்களுக்கு
எப்படி  தெரியும்...
இருளில் ஜனித்ததுதான்
வெளிச்சமென்று...!


தேவா சுப்பையா...




ஆழிசூழ் உலகு...!

$
0
0


















துரோகச் சாம்பல்கள்
குவிந்து கிடக்கும்
மயானத்திலிருந்து
கேட்கும் அவலக் குரல்கள்
அநீதிகளின் வெற்றியாயிருக்கலாம்...!

நச்சினை விதைத்து
ப்ரியங்களை அறுவடை செய்யும்
நாடகங்களில்
ராஜலங்கராம் செய்யப்படும்
ஓநாய்கள் சிங்கங்களைப் போல
கர்ஜித்து இடும் ஊளைகளுக்கு
நடுவே எரியும்
பிணத்தை தாலாட்டஒருவருமில்லை..!

பால்குடிக்கும்
முலைகளை அறுக்கும்
குரோதப் பிசாசுகள்
சொல்லிக் கொண்டிருக்கும்
ஞானக்கதைகளை கேட்டபடியே
சிலுவையிலறையப்படும்
தேவனைக் கடவுள் என்றும்
சொல்லக் கூடும், ஒருவேளை
ஞாபகமாய் அவர் மூன்றாம் நாள்
உயிர்த்தெழுந்தால்...!

முள் கிரீடங்கள்
சூட்டிக் கொண்டு
வலம் வரும் சாத்தான்களுக்கு
நடத்தப்படும் வழிபாடுகளில்
சிரச்சேதம் செய்யப்படும்
கடவுளர்களின் கடைசி ஆசைகள்
கண்ணீராய் வழிந்தோடி நிறைந்த
இடங்களெல்லாம் கரித்து
நிறைந்து கிடக்கிறது..
ஆழிசூழ் இவ்வுலகு..!


தேவா சுப்பையா...




தப்புத்தாளங்கள்...!

$
0
0






















எதேச்சையாக சானல்களைத் திருப்பிக் கொண்டிருந்த போது ஜெயா டிவியில் தப்புத்தாளங்கள் படம் ஓடிக் கொண்டிருந்தது. ரொம்ப நாளுக்கு முன்னால் அந்தப் படத்தைப் பார்த்தபோது எனக்கு  சுத்தமாய் பிடிக்கவில்லை. அதுவும் ரஜினியை அழுது வடிந்து கொண்டு திரையில் பார்க்க எந்த ரஜினி ரசிகனுக்குத்தான் பிடிக்கும் சொல்லுங்கள்...? இப்போது பாதிக்கு மேல் படம் ஓடி இருந்தாலும் பரவாயில்லை என்று பாதியிலிருந்து படத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தேன்.

வாழ்க்கைக்கு என்று ஒரு ஒழுங்கு கோட்பாட்டினை வரையறுத்து அந்த மாய நெறிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களை கெட்டவர்களாய் பார்க்கும் சமூக மாண்பினை உருவாக்கியது யார் என்று தெரியவில்லை. வாழ்க்கையைத் திரைப்படங்கள் பிரதிபலித்துக் காட்டும் அதே நேரத்தில் வாழ்க்கைக்கான நீதிகளையும் அவைபுகட்ட வேண்டும் என்ற நியதியைத்தான் தமிழ் சினிமா எப்போதும் வரையறுத்து வைத்திருக்கிறது. கதாநாயகனை நல்லவனாகக் காட்டவேண்டும் என்ற காரணத்திற்காகவே வில்லன் தரப்பு நியாயங்களை இயக்குனர்கள் ஒளித்து வைத்து விடுவார்கள். தமிழ் சினிமா ரசிகனின் மனப்பாங்கு கட்டுப்பாடுகளுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டு அறிவு புகட்டிக் கொண்டிருந்த போதுதான் பாலசந்தர் சார் போன்றவர்கள்...

இயக்கவிதி என்பது ஒரே திசையில் பயணிப்பது மட்டும் அல்ல. தேவைப்பட்டால் எதிர் திசையில் பயணிப்பதும் கூட என்று தைரியமாய் சொல்லத் தொடங்கினார்கள். நேர், எதிர் என்பது வெறும் வாசகங்கள்தானே அன்றி நேர் என்று நான் சொன்னவுடன் நேர் என்பது சரி என்றும் எதிர் என்பது தவறு என்றும் கருதி விடாதீர்கள். பலநேரங்களில் நேர் என்பது தவறாகவும், எதிர் என்பது சரியாகவும் இருந்து விடுகிறது. இயற்கை அதற்கான எல்லா சாத்தியக்கூறுகளையும் தன்னிடத்தே வைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

உறவுகள் என்பதை நேர்கோட்டில் சிந்தித்து ஒழுக்க நெறிகளை சமைத்து வைத்தவர்களின் புத்திகளை கொஞ்சம் அல்ல நிறையவே சீண்டிப்பார்த்தார் பாலசந்தர் சார். அதனால்தான் தன்னை அடையத் துடிப்பவனை வஞ்சம் தீர்க்க அவன் தந்தையின் கரம் பற்றினாள் அவரின் கதாநாயகி. விருப்பத்தின் பேரில் சுதந்திரமாய் இயங்குதல்தான் வாழ்க்கை என்று நம் சமூகத்திடம் சொன்னால் கலாச்சார கத்தி கொண்டு என் குரல்வளையை அறுக்கத்தான் வருவார்கள். காதல் என்ற பெயரில் செய்யும் அடக்குமுறைகளைத் தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறி புதிதாய் ஒருத்தியின் துணையைத் தேடிக் கொண்டவனின் சுதந்திர சுவாசத்தைத்தான் புதுப்புது அர்த்தங்களாக்கி கொடுத்தார் பாலசந்தர் சார்.

திருமணத்துக்குப் பின் வேறு ஒரு நேசம் என்பதை ஒழுக்க நெறியல்ல என்று கற்பித்த நாடக சமூகத்தின் முகத்திரையை தைரியமாய் கிழித்தெறிந்த கதையை திரையில் பார்த்துக் கைதட்டிய எத்தனை பேருக்கு நிஜத்தில் அதை ஏற்றுக் கொள்ள இயலும்? நேர்கோட்டில் பயணிக்கும் உறவுகளின்  உணர்வுகள் ஏற்ற இறக்கமாகவோ அல்லது எதிர் திசையிலோ பயணிக்கும் போது அதை நாம் ஏற்றுக் கொள்வதில்லை. வாழ்க்கை அர்த்தங்கள் கூடியதாய் இருக்கவேண்டும் என்பதுதான் நமது எதிர்பார்ப்பாய் இருக்கிறது... ஆனால் அது எந்த வித அர்த்தமும் அற்றதாகவே நிஜத்தில் இருக்கிறது.

திருடிப் பிழைக்கும் ஒரு ரெளடியும், பல  ஆண்களோடு படுத்து எழுந்திருக்கும் விபச்சாரம் செய்யும் ஒரு பெண்ணும் இந்த சமூகத்தின் நேர்கோட்டுப் பார்வைக்கு முரணானவர்களாகத் தெரிந்தாலும்...கரடுமுரடான சிக்கலான ஒரு அப்ஸ்ட்ராக்ட் ஓவியத்தில் படர்ந்து கிடக்கும் அத்தனை அழகும் அவர்களது வாழ்க்கைக்குள் ஒளிந்து கிடக்கத்தான் செய்கிறது. தப்புத்தாளங்கள் என்ற பெயரை படத்துக்கு வைத்திருந்தாலும் தாளத்தில் என்ன தப்பு, சரி வேண்டி கிடக்கிறது..? முறையான சங்கீதம் மட்டும்தான் இசை என்று மட்டுப்பட்ட மனிதர்கள் வேண்டுமானால் சான்றிதழ்கள் கொடுத்துக் கொள்ளலாம்...ஆனால் இயற்கையில் இசை என்பது சப்தம். நீங்கள் விரும்பிய தாளக்கட்டுகளும் இராகங்களும் மட்டுமே இசை அல்ல, உங்களால் விரும்பப்படாத அபஸ்வரங்களுக்குள்ளும் அழகிய ஸ்வரங்கள் ஒளிந்து கிடக்கத்தான் செய்கின்றன. என்ன ஒன்று நமக்கு எது பிடிக்கவேண்டும் என்பதை நாம் எப்போதும் தீர்மானிப்பதில்லை, அதை இந்த சமூகத்தின் கையிலிருந்துதான் நாம் எப்போதும் பெற்றுக் கொண்டிருக்கிறோம்.

திருட்டுத் தொழிலை விட்டு விட்டு, ஒரு விபச்சாரியோடு சேர்ந்து வாழ முனைபவனின் மனதில் என்ன மாதிரியான எண்ணக் கோடுகள் இருந்திருக்க முடியும்..? வாழ்க்கையின் உச்ச ரகசியமாய், உன்னத உறவாய் தாம்பத்யம் கற்பிக்கப்பட்டிருக்கையில் பல ஆடவர்களுடன் தன் உடலை பகிர்ந்து கொண்டவளின் மனதில் எந்தக் கணத்தில் காதல் என்னும் விதை விழுந்திருக்கக் கூடும்...? உடலை இச்சையோடு ஒருவன் தீண்டுகையில் அங்கே காதல் என்ற ஒன்று சேர்ந்தே இருக்குமா...? இல்லை பிரிந்து கிடக்குமா? வயிற்றுப் பிழைப்புக்காய் உடலின் அவயங்களை வாடகைக்கு விட்டுப் பிழைப்பவளுக்குள் பூக்கும் காதல் பரிசுத்தமானதுதான் என்று சொல்லாமல் சொல்ல முனைந்திருக்கும் இந்த தப்புத்தாளங்கள் எனக்குள் மேலே சொன்ன அத்தனை கேள்விகளையும் தப்பாமல் கேட்டது.

உடலைப் பலருடன் பகிர்ந்து  கொண்டதாலேயே அவள் யாரையும் காதலிக்கத் தகுந்தவளில்லை என்ற சமூகத்தின் சாக்கடைச் சிந்தனைகளையும், கற்பாறைப் புத்திகளையும் உடைத்து எறிய முயன்றிருக்கும் இயக்குனர் அப்படி ஒரு வாழ்க்கையை வாழ நேற்படுமெனில் என்ன மாதிரியான முடிவினை எடுப்பார் அல்லது நான் அந்த இடத்தில் இருந்தால் என்ன மாதிரியான அனுபவமாய் அது இருந்திருக்கும்  என்ற ஒரு கேள்வியும் என்னை துளைத்து எடுத்துக் கொண்டிருந்தது. குறைந்த பட்சம் கற்பனையாகவாவது எழுதிப் பார்க்க வேண்டும் என்றும் தோன்றியது. நிர்ப்பந்தத்தின் பெயரால் ஏற்படும் உறவுகளுக்கும் நேசத்துக்கும் யாதொரு பந்தமுமில்லை என்ற மனோதத்துவ தீர்வினை தப்புத்தாளங்கள் சரியாகத் திரையில் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தது.

எத்தனையோ ஆண்களின் தீண்டல்களைக் கடந்து அவள் முதல் முதலாய் கருவுற்ற கணத்தில் முகத்தில் படரும் சந்தோஷ ரேகைகள் அதுவரை அவள் வாழ்ந்து வந்த வாழ்க்கைக் கரைகளை எல்லாம் கண நேரத்தில் அழித்துத்தான் போட்டு விடுகிறது. சரிதா இயல்பிலேயே நல்ல நடிகை, திருத்தமான அழகும் கூட.....! அழுகையையும், சிரிப்பையும் பிசைந்து உணர்வுகளை வெளிப்படுத்தி திரைக்கு வெளியே நமது மனதுக்குள் வெகு லாவகமாய் வந்து விடக்கூடிய அபார ஆற்றல் கொண்டவர். இந்தப் படத்தில் சரசுவாகவே வாழ்ந்திருப்பார்....ரஜினியும் தான்..!


சமூகத்தின் பார்வையில் முரண்பட்டுப் போயிருந்த இரண்டு உயிர்கள் காதல் என்னும் ஒரு கோட்டில் இணைந்து தங்களின் நேரான இயக்கத்தை சமூகத்தின் முரண்பட்ட கோட்பாடுகளுக்கு இணையாகக் கொண்டு வந்து வாழ முற்படும் போது இந்த சமூகம் அவர்களை சக மனிதர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை. ரெளடி ஒரு விபச்சாரியை மணந்து கொண்டு தங்களைப் போலவே நடிக்க வருவதை எந்த சமூகம் இந்த உலகத்தில் ஏற்றுக் கொள்ளும் சொல்லுங்கள் பார்க்கலாம்...?

இந்த சமூகத்தின் தேவை திருந்திய அல்லது திருத்தமான மனிதர்கள் கிடையாது. அதற்கு எப்போதும் தம்மைச் சுற்றி குறைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும் தேடிப்பிடித்து அதில் குற்றம் கண்டு பிடித்து அங்கே தங்களின் நாட்டாமை நகங்களை வைத்து கீற வேண்டும். இதுதான் இந்த சமூகத்தின் தேவை. ஒழுக்க நெறிகளைப் போதிக்கிறேன் என்று நீதி வழங்கும் நிகழ்ச்சி ஒன்று 'சொல்வதெல்லாம் உண்மை' என்ற பெயரில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடத்தி வருகிறார்கள்.

அதில் ஒரு நிகழ்ச்சியில் 24 வயது பையன் ஒருவனுக்கு 45 வயது கொண்ட பெண்ணோடு உறவு ஏற்பட்டு விடுகிறது. அந்தப் பெண்ணின் கணவர் இறந்து போய் பத்து வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கிறது.  24வயது பையன் ஏதோ ஒன்றில் ஈர்க்கப்பட்டு எல்லாவிதத்திலும் அந்தப் பெண்ணோடு ஒன்றிப் போய் விடுகிறான். சமூகத்தின் முன்பும் அவனைப் பெற்றவர்கள் முன்பும் ஒரு குற்றவாளி ஆகி விடுகிறான். அந்தப் பெண்ணும் குற்றவாளி ஆகி விடுகிறார். நிகழ்ச்சியை நடத்துபவர் மட்டுமன்றி அதை பார்த்துக் கொண்டிருக்கும் அத்தனை பேரின் நேர்க்கோட்டுச் சிந்தனையிலும் இது தவறாகத்தான் தெரிகிறது.

நீங்கள் பிரிந்து சென்று விடுங்கள் என்று தீர்ப்பு சொல்லும் அந்த நீதிபதிக்கு சமூகம் போட்டு வைத்திருக்கும் வரைமுறைக் கோடுகள் மீதுதான் அக்கறையே அன்றி....அந்த பையனுக்கும் பெண்ணுக்கும் இடையே வளர்ந்து நிற்கும் நேசத்தைப் பற்றி ஒரு கவலையும் கிடையாது. இது எப்படி சரி ஆகும்... ?

சரி தவறுகளை நிர்ணயம் செய்ய எதன் உடனும் எதையும் நாம் ஒப்பீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லைதானே? ஒருவர் செய்யக் கூடிய செயலால் வேறு எந்த மனிதருக்கும் பாதிப்பில்லை எனும் போது அது எப்படி தவறாகும்? மேலும் சரி தவறுகளை நிர்ணயம் செய்வது  சூழல்கள்தானே அன்றி...விதிமுறைகள் கிடையாது. கண்கள் இல்லாதவனுக்கு கனவுகள் எப்படி வரும் என்று கேட்பவர்களுக்கு, கண்கள் இல்லாதவர்களின் உலகத்தில் என்னவெல்லாம் இருக்கும் என்று தெரிய வேண்டுமானால் நிஜத்தில் இன்னொரு பிறவியில் அவர்கள் குருடராய் பிறந்தால்தான் முடியும்....

அப்படி இல்லாமல் எதைச் சொன்னாலும்  அது, அது போலத்தான் இருக்குமே அன்றி அது, அதுவாக இருக்காது. தப்புத்தாளங்களில் கூட அப்படித்தான் சமூகம் ஒரே சீராய் நடித்துக் கொண்டிருக்கையில் தங்களின் சூழலின் படி  வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களின் வாழ்க்கையில் எதேச்சையாய் ஒரு பூ பூத்து விடுகிறது. அந்தப் 'பூ' இந்த சமூகம் நடித்து, நடித்து பெறுவதற்காய் தவம் கிடக்கும் ஒரு அரிய 'பூ'. அந்தப் பூ எப்போது நாடகத்தன்மை ஒழிந்து போகிறதோ அப்போதுதான் பூக்கும் என்பதை இந்த சமூகம் ஒரு போதும் அறிந்திருக்கவில்லை. அந்தப் பூவுக்காகத்தான் இவர்களின் ஒழுக்க நெறிகளே சமைக்கப்பட்டது. ஆனால் ஒரு போதும் அவர்களின் வாழ்க்கையில் 'பூ' பூக்கவே இல்லை. அப்படி பூக்காமல் இருப்பதற்கு காரணம் இவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் கட்டுப்பாடுகள் நிறைந்த ஒழுக்க முறைகள்தான் என்று ஒரு போதும் அவர்கள் அறிந்திருக்கவும் இல்லை.

உனக்கு என்னை மட்டும், எனக்கு உன்னை மட்டுமே பிடிக்க வேண்டும் என்ற சர்வாதிகாரத்தில் ஒரு ' பூ ' பூத்ததாய் கற்பிதம் செய்து கொள்கிறார்களே அன்றி ஒரு போதும் அப்படி ஒரு பூ அவர்களின் வாழ்க்கையில் பூப்பதே இல்லை.

தப்புத்தாளமாய் ஒரு ' பூ' பூத்து விட....பொறாமைக்கார சமூகத்தால் மிதித்து நசுக்கி அந்தப் ' பூ ' சிதைக்கப்படுவதோடு....படம் முடிந்து விடுகிறது. படம் முடிந்து வெகு நேரம் ஆகியும் ஸ்தம்பித்துக் கிடந்த மனதில் தோன்றியது ஒன்றுதான்.....

ஏன் பாலசந்தர் சார் இப்போதெல்லாம் இப்படி படம் எடுப்பதே இல்லை...?அல்லது ஏன் அவரை மாதிரி மாதிரி படம் எடுக்க இப்போது ஆளே இல்லை...? ....என்பது மட்டும்தான்....



தேவா சுப்பையா...





தேவகி....!

$
0
0


















நேத்து அவ கிட்ட மறுபடியும் போனேண்டா மச்சான்......! என்னால அவள மறக்கவே முடியலடா மச்சி... நான்காவது ரவுண்டின் முதல் ஷிப் நாக்கை பின்னோக்கி இழுத்தது. கீர்த்தி கோபத்தில் முகம் சிவந்து என் முன் அவன் முஷ்டியைக் கொண்டு குத்துவது போல வந்து நிறுத்தினான்.. ச்சீ..ஸ்டூப்பிட்....படிச்ச முட்டாளாடா நீ...? இடியட்....எதோ போனமா வந்தமான்னு இல்லாம...லவ் வருது பாரு உனக்குலாம்...அதுவும் அவகிட்ட போயி...? வெக்கமால்லை.....காறித்துப்பாத குறையாக அவன் கத்த அவனுக்கும் லாவகமாய் 'ஷிவாஸ்' உதவிக் கொண்டிருந்தது. டேய்...டேய்..தண்ணி தானடா அடிச்ச..என்ன நெருப்பையா முழுங்கிட்ட....கூல் டவுன் மச்சி....

என் அரைவேக்காட்டுத்தனமான காமெடியை கீர்த்தி பொருட்படுத்தவில்லை...! பொறுமையாய் என் முன் அமர்ந்து லைட்டரை பவ்யமாய் வாங்கி சிகரட்டை உதட்டில் பொறுத்தியபடி...மச்சான்.... எந்த ப்ரண்ட்டுக்குமே வரக்கூடாத சிச்சுவேசன்டா எனக்கு....யார வேண்ணா லவ் பண்ணுடா.. என் உயிரைக் கொடுத்து ஒங்க வீட்ல சொல்லி கல்யாணம் பண்ணி வைக்கிறேன்....தேவகியப் போயி......ச்சீ... மச்சி...நானே பல தடவைப் படுத்து இருக்கேண்டா அவகிட்ட...அவ தொழில் செய்றவ...வேணும்னா இந்தா ....போய்ட்டு நைட் புல்லா இருந்துட்டு காலைல வாடா மச்சான்.... 

பணம் நிரம்பி வழிந்த அவன் பர்ஸ் நிறைமாதக் கர்ப்பிணியாய் என் முன் வந்து விழுந்தது.  மச்சான்...அப்டி இல்லடா....எனக்கும் அவளுக்கும் ஏதோ ஒண்ணு இருக்குடா..ப்ளீஸ் ட்ரைட் டு அன்டர்ஸ்டான்ட்....! தேவகி கூட என்னை வேண்டாம்னுதான் சொன்னா.....ஆனா அவளுக்குள்ளயும் ஒரு காதல் இருக்குடா மாமா.... கீர்த்தியிடம் கெஞ்சினேன்...! இந்த 35 வயதில் கீர்த்திதான் என்னோட பெஸ்ட் ப்ரண்ட்...படிச்சதுல ஆரம்பிச்சு..வேலை பாக்குறது வரைக்கும் அவன் என் கூட வர்றது கோஇன்சிடெண்டோ இல்லை கடவுளோட வேலையோ ..அது செகண்ட்ரி.......' .மள்ச்ச்சி........போகதடா நில்லுடா........."  ப்ப்படார்....கதவை அடித்து மூடி விட்டு கீர்த்தி போய்விட்டான்....

வாழ்க்கையின் முரண் என்று எதை நான் எடுத்துக் கொள்வது..? ஒரு விபச்சாரியிடம் காதல் வரக்கூடாதா? ஆமாம்...எத்தனையோ ஆம்பளைங்க தொட்டு இருப்பாங்க....அப்புறம் நான் என்ன தனியா ஸ்பெசல்......நானே கேட்டுக் கொண்டேன்...! அவ என்னைப் பாத்து அழறாளே....என் கூட இருந்தா அவளப் பிடிச்சு இருக்க எல்லா கருமமும் அழிஞ்சு போகுமே..? எல்லோருமே இப்டி யூஸ் அண்ட் த்ரோவா யூஸ் பண்ணிட்டுப் போனா எப்டிதான் அவ மீண்டு வருவா? அவ அழகா இருக்கான்றதுதான் எனக்கு அவளைப் பிடிக்க முத காரணமா இருந்துச்சு....மனசு எல்லாம் செகண்ட்ரி...இதை நான் ஒத்துக்குறேன்...! அழகா இல்லேன்னா என்ன ஆயிருக்கும்..பிடிச்சு இருக்காது...அப்புறம் கல்யாணம் செஞ்சுக்கணும்னு நினைச்சே இருக்க மாட்டேன்...

உள்ளுக்குள் புலம்பிக் கொண்டிருந்தேன். மனதிற்க்குள் என் குடும்பம் விசுவரூபமெடுத்து என்னை மிரட்டியதை நான் சட்டை செய்யவில்லை.....! தேவகி....... வாய் நிறைய அவளை கூப்பிட்டுப் பார்த்தேன். இடது பக்கம் ஒரு வலி வந்து அழுத்த, கண்ணில் நீர் தேங்கி நின்றது. மொபைல் எடுத்தேன்.........தேவகியை டயலினேன்.... ட்ரிங்.....ட்ரிங்...ட்ரிங்...ட்ரிங்....ட்ரிங்.. ட்ரிங்....ரிங்கிக் கொண்டே இருந்தது. மொபைலை அணைத்தேன்......ஆறாவது ரவுண்டு வயிற்றுக்குள் எரிந்து கொண்டிருந்தது கையிலிருந்த சிகரட்டைப் போலவே...., மீண்டுமொரு ஷிப் மது உள் இறங்க.. மறுபடி டயலினேன்...

ஏழாவது ரிங்கில் .......ஹலோ......ஜீவ்வ்வா என்னடா.....என்றாள்...., எனக்குள் பிரளயம் மூண்டது. குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு சாரட் வண்டி தரையிலிருந்து தாவி வானம் நோக்கிப் பாய்ந்தது. மேகக்கூட்டத்துக்கு நடுவே சீறிப் பாய்ந்து கொண்டிருக்கையில் மனிதர்களுக்கு நடுவே இருக்கும் சட்ட, திட்டங்களும், வழக்குகளும், வரம்புகளும் எனக்கு இல்லாமல் இருந்தது. கண் மூடிக் கொண்டேன்...வயிறு குழைய, மூச்சு நெருப்பாக, இதயம் லப் டப்பை அதிகரித்து இருந்தது. உடம்பு முழுதும் இரத்தம் பரவ....

கனவுகளுக்குள் குடித்தனம் நடத்தியவளை அலைபேசியிலிருந்து மனம் சரக்கென்று வெளியே இழுத்துப் போட...அவளின் உள்ளங்கையில் என் உதடு பதித்து பின் அவளுக்கு பிடித்த என் கவிதை வரிகளைக் கிறுக்கத் தொடங்கி இருந்தேன்....

இரவுகளை எரித்து எரித்து
இருளில் கிடக்கும்
என் தேவதைக்கு...
என் உயிர் ஊற்றி
இதோ ஏற்றி வைக்கிறேன்...
காதல் தீபமொன்று...
உன் கனவுக் கால்களை
என் உள்ளங்கையில் பதியவை...
தொலைதூர நமது பயணத்தில்
உன்னை ஏந்திச் செல்கிறேன்...
என் உயிர் இருக்கும் வரை...!

ஹலோ ஜீவ்வ்வ்வா.... என்னடா டயல் பண்ணிட்டு பேசாம இருக்க...? காலையில இருந்து நிறைய கஷ்டமர்ஸ் டா...அதான் டயர்டா தூங்கிட்டேன்...., நீ வர்றியா இப்போ...அவள் கேட்டு முடித்த போது....ஜெமினி பிரிட்ஜ் கீழே இறங்கி நுங்கம்பாக்கம் ஹை வேயில் சென்று இடது திரும்பி, வலது நுழைந்து, மீண்டும் இடது....வண்டியைப் பார்க் செய்து கொண்டிருந்தேன்...! நான்கு பேர் தங்கி இருக்கும் அந்த அபார்ட்மெண்ட் ஒரு தொழிலதிபருக்குச் சொந்தமானது. பினாமியாய் பல தொழில் அவர் செய்து கொண்டிருக்கிறார் என்று நிறைய படித்திருக்கிறேன். அதில் இதுவும் ஒன்று....

காலிங் பெல் அடித்தேன்....காத்திருக்க முடியவில்லை...தொண்டை அடைக்க எச்சில் விழுங்க முடியவில்லை....மணியைப் பார்த்தேன் அடுத்த நாளுக்குள் செல்ல இன்னும் முக்கால் மணி நேரம் என்றது.......நான்காவது நிமிடத்தில் கதவு திறக்க....தே....வ...கி....

எச்சிலை மென்று விழுங்கினேன்...! ஜீவ்.......இப்போதான் ஒரு கஷ்டமர் 12 மணிக்கு வரவான்னு கேட்டு ஒரே இம்சை...நீ வர்றீல்ல அதான் இல்ல இப்போ என்க்கேஜ்ட்னு சொல்லிட்டேன். நான் அவளது விழிகளையே பார்த்துக் கொண்டிருந்தேன்....விழிகள் வழுக்கி கழுத்தில் விழுந்தன. கழுத்திலும் வெகு நேரம் நிற்க முடியாமல் மேலும், மேலும், வழுக்கி விழுந்து கொண்டிருந்தேன்...! வளைவு நெளிவுகளுக்குள் துல்லியயமாய் பயணிக்க அவள் இரவு ஆடை உதவியது. மதுவின் போதை குட்பை சொல்லிவிட்டு எப்போது கிளம்பியது...மாதுவின் போதை எப்போது உள்வந்தது......யாமறியேன் பராபரமே....

இடுப்பில் கை போட்டு டேய்.....லூசு....என்ன புதுசா பாக்குற...செல்ல ராஸ்கல்...வளைத்தபடி என் மீது சாய்ந்தாள்...! அவளின் அறை எங்களை உள்வாங்கிக் கொள்ள....தேவகியும், நானும்....நானும் தேவகியுமாய் ஆக தொடங்கி இருந்தோம். எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் தேவகி...என்று .காது கடித்தபடியே சொன்னென்...."ஏன்...நான் அழகா இருக்கேன்னா..? காதுக்குள் மெல்ல கிசு கிசுத்தாள்... எனக்கு காதல்ன்னா என்னானு தெரியாது ஜீவா....ஆனா இது காதல் இல்லேன்னு மட்டும் நல்லா தெரியும்..?

உதடுகளை உறிஞ்சிக் கொண்டிருந்த எனக்குள் தெய்வீக சிறகுகள் முளைக்கத் தொடங்க...அவள் அந்த சிறகுகளைக அறுத்தெறிந்தாள். உடை துறக்கத் தெரிந்த எத்தனை பேரால் மனம் துறக்க முடியும்..? நிர்வாணம்  என் புத்திக்குள் கேள்வியாய் சீறிப்பாய்ந்தது. தேவகி என் தோளில் சாய்ந்திருந்தாள். அவளின் தோள் தொட்டு ஸ்பரிசம் விலக்கி மெல்லிய விளக்கொளியில் அவளின் முகம் பார்த்தேன்....

கண்ணீரோடு தேம்பிக் கொண்டிருந்தாள். இரு கைகளாலும் அவள் முகம் ஏந்தி விழிகளுக்குள் ஊடுருவினேன். விழிகளில் காமம் சுத்தமாய் இல்லை. சோகம் இந்தியப் பெருங்கடலாய் நிரம்பிக் கிடந்தது. அவளுக்குள் இருந்த பிரக்ஞை நிலை மேலெழும்பி நின்றதை உணர்ந்து கொண்டேன். எத்தனையோ பேரைக்  என் வாழ்க்கையில் கடந்து வந்திருக்கிறேன் தேவகி.  உன் புருவ மத்திக்குள் எப்படி சிக்கிக் கொண்டன எனது நினைவுகள் என்ற கேள்விக்கான விடையை வெளியில் தேடித் தேடி கிடைக்கப் பெறாமல் மீண்டும் மீண்டும் உனக்குள் நான் தேடும் கதை உனக்குத் தெரியுமா?

தேவகி என் கரம் பற்றிய படியே பேச ஆரம்பித்தாள். அவள் தந்தையின் மரணத்தோடு அவளின் கல்லூரி இரண்டாம் ஆண்டில் தமிழ்ப்படிப்பு தூக்குப் போட்டுக் கொண்டதாம்....அம்மாவின் சொந்த ஊர் என்று அவள் சொன்ன ஒரு கர்நாடக கிராமத்தின் பெயர் என் புத்தியின் நினைவுச் செல்களை எட்டிப் பிடிப்பதற்கு முன்னே பூமியைத் தொடும் முன் பஸ்பமாகும் எரிகல்லைப் போல கரைந்து போயிருந்தது. தமிழ் படித்திருக்கிறாயா நீ...? எனக்குள் உறங்கிக் கொண்டிருந்த சொற்கள் எல்லாம் ஆள் அரவம் கண்டவுடன் சீறும் நாகமாய் சீறத் தொடங்கியது...

எப்படி வந்தாய் இந்தப் பிணங்கள் தழுவும் தொழிலுக்கு...? இச்சை தீர்த்துச் செல்லும் வல்லூறுகளின் உலகத்துக்குள் எப்படி வந்து சிக்கிக் கொண்டது இந்தக் கவிதை? வானவில் எப்படி இந்த சாக்கடைக்கு வாழ்க்கைப்பட்டது...?  என் மொழியின் சீற்றத்தை வாங்கிக் கொண்டவள் ஒற்றை வார்த்தையில் சொன்ன பதில்....

வறுமை.

ஆமாம்..வறுமை இங்கே மறுவாய்ப்பு கொடுக்காமல் பலரின் இரத்தம் குடித்திருக்கிறது. கர்ப்பகிரகத்திற்குள் அரவமாய் ஊர்ந்து சென்று அதை காமக் கோட்டமாய் ஆக்கி இருக்கிறது. சமாதானமான எத்தனையோ மனிதர்களின் புத்திக்குள் வெறிநாயாய் படுத்துக் கொண்டு வன்முறையை இந்த பூமிக்குள் உற்பத்திச் செய்திருக்கிறது. கெட்டவனை நல்லவன் என்று சொல்லச் சொல்கிறது. நல்லவனை கெட்டவனாக்குகிறது. இதோ தேவகி என்னும் என் தேவதையும் சிதைந்து போனது அதனால்தான்...

நான் உன்னை மணந்து கொள்கிறேன்....தேவகி...! உன் கடந்த காலம் என்னை ஒன்றும் செய்யாது. நமது நிர்வாணத்தின் மீது சாட்சி. என் நினைவுகளின் மீது சாட்சி....! 

என் தேகம் தொட்டுச் சென்ற யாரும் என் மனதைத் தொட்டுச் செல்லவில்லை. எனக்குள் கனவுகளை விதைக்கிறேன் என்றவர்கள் யாரும் என் கனவுகளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. நான் சிதைந்து போன சித்திரம். எனக்கு மீண்டும் வர்ணம் தீட்ட முயலாதே...! நான் முடிந்து போன கனவு.. மீண்டும் மீண்டும் புத்திக்குள் என்னை புனையப் பார்க்காதே...., நான் பெய்து முடித்த மேகம்...எனக்கு வடிவம் என்ற ஒன்று இப்போது இல்லை. என்னைக் கவிதை என்று நீ சொல்வதில் ஓரளவு உண்மை இருக்கிறது....ஜீவா....

பொருளற்ற 
பண்டம் நான்....
விழி விரியச் செய்யும்
பிண்டம் நான்...
என்னை வாசித்து விட்டு
அடுத்த பக்கத்துக்கு
நகர்ந்து போ...!

சொன்னபடியே கண்ணீரைத் துடைத்தபடி தலையை அள்ளிக் கட்டிக் கொண்டாள் தேவகி. காமத்துக்கும் காதலுக்கும் எங்கே இருக்கிறது வரையறைக் கோடு என்று நினைக்கிறாய்.. ஜீவ்வ்வா........கேட்டு விட்டு என் கீழுதடு கடித்து இழுத்தாள். எங்கே இருக்கிறது......கேட்ட படியே....சக்திக்கு முன் சப்தமிழந்த சிவமாய் அவள் விழிகளுக்குள் விழுந்து கிடந்தேன்.....

காமம் எப்போதும் எதிராளியை சந்தோசப்படுத்துகிறேன் பேர்வழி என்று தன் உச்சத்தை நோக்கியே நகரும் சுயநலக்காரன்...காதல் அப்படி அல்ல..என் காதல் என் காதல் என்று பேசுமே தவிர எப்போதும் எதிராளியின் கண் கலங்கினால் கூட பேச்சற்றுப் போய் திக்பிரமை பிடித்தது போல நிற்கும் உன்னைப் போல.....சொல்லிவிட்டு சப்தமாய் சிரித்த தேவகியை நான் இங்கிருந்து இந்த சூழலிலிருந்து மீட்டெடுக்கும் தீர்மானத்தை எட்டிப் பிடிக்கும் முன்னே....

என்னை கீழே பிடித்து இழுத்தாள். நீ நல்ல பெண்ணாய் பார்த்து கல்யாணம் செய்து கொள் ஜீவா....! எப்போது வேண்டுமானாலும் என்னிடம் வா....எல்லோரிடமும் காசுக்காக கூடிச் செல்கையில் நான் உன்னோடு மட்டும் காதலுக்காய் கூடுகிறேன். கூடல் என்பது உடம்புக்கு வெளியே நிகழும் போது அது இயந்திரத்தனமாய் ஆகிப் போகிறது. உள்ளத்தோடு கூடும் போது இந்த கூடு விட்டு.....அந்தக் கூட்டுக்குள் எளிதாய் நுழைய முடிகிறது...

நான் நீயாயும்.......நீ நானாகவும் மாறமுடியாத காமம் என்ன காமம்...? அது சாயம் போன உணர்வுகளின் சங்கமம்தானே.....? புருவம் உயர்த்தினாள்.......வா... வா நாளைக்கு வேலை தானே உனக்கு என்று கையைச் சுட்டி கடிகாரத்தை காட்டினாள். அது திங்கள் கிழமை அதிகாலை இரண்டுக்கு செல்ல இன்னும் கால் மணிநேரம் இருக்கிறது என்றது.

தேவகி...நீ என்ன வேண்டுமானாலும் சொல்......உடலைத் தழுவும் எல்லோராலும் ஆன்மாவைத் தழுவ முடியாது....எத்தனை பூக்களைப் பறித்தாலும் ஒவ்வொரு பூவையும் செடி புத்துணர்ச்சியாய்தான் பூக்கிறது.  நான் உன் கரம் பிடிப்பேன்...உணர்வுகளால் உன் உயிர் தொடுவேன்....அவள் மார்புக்குள் முகம் புதைத்தேன்...

வளையல் ஓசையால் என் சமாதி நிலையை தேவகி கலைத்த போது மணி எட்டாகி இருந்தது.  இறுக்க அணைத்து அவளின் உதட்டில் உதடு பதித்து....நகர்ந்தேன்.

புது ப்ராஜக்ட் ஒன்றுக்காக பெங்களூரில் இரண்டு வாரத்தை என் சமகாலம் விழுங்கிக் கொள்ள....

இரண்டொரு முறை தேவகியோடு பேசினேன். கடைசியாய் பேசிய போது கஸ்டமரோடு இருக்கிறேன்.......பிறகு பேசு என்று இணைப்பைத் துண்டித்தவள்....! பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை...

.........
.........
.........
..........

காலிங் பெல் அமுக்கினேன்........! யாரோ ஒரு தடித்த வட இந்திய பெண்...கதவைத் திறந்தார். ....யார் வேணுங்கோ....? வழியை அடைத்தபடி.....பதில் சொல்ல.........இங்க தே....வ..கி என்று இழுக்க... அது தெரியாதுங்கோ..நாங்க குடி வந்து மூணு நாள் ஆச்சு.....கீழே செக்யூரிட்டி கிட்ட கேளுங்கோ....'ப்ப்ப்டார்" கதவை என் முகத்தில் மூடினாள்.

எனக்குள் பிரளயம் மூண்டது.


போன வாரம் போலிஸ் ரெய்டு சார்....அந்த அண்ணாச்சிக்கும் மினிஸ்டர்க்கும் லடாய் போல...அவர் பிஸ்னஸ் செஞ்ச எல்லா இடத்துலயும் சல்லடை போட்டு  அது இதுன்னு அவர் மேல கேஸ் போட்டு இருக்காங்க....பிளாட் கூட நாலு நாள் முன்னாடிதான்.....ஒரு சேட்டு பேமிலி புதுசா வந்துருக்காங்க....பொண்ணுங்கள எல்லாம் போலிஸ் டேசன் கொண்டு போய்ட்டாங்க சார்....

கீர்த்தியோடு எல்லா போலிஸ் ஸ்டேசனிலும் விசாரித்து சுற்றிக் கொண்டிருந்தேன். எல்லோரும் என்னை ஏற இறங்கப் பார்க்க...கீர்த்தி...பழகிய பாவத்துக்கு என்னோடு அலைந்து கொண்டிருந்தான்...

தேவகியைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை....!

அவள்...எங்கே போனாள்....? என்ன ஆனாள்.......? கேள்விகளைத் தேக்கியபடி......அலைந்து கொண்டிருக்கிறேன்...இதோ வருடங்கள் நான்காகி விட்டது. தேடிக் கொண்டே  இருக்கிறேன்...

எழுதிக் கொண்டிருந்த
கவிதையின் வரிகள்
பாதியிலேயே தொலைந்து போயின...
முற்றுப் பெறாத அந்தக் கவிதையை
நான் பூர்த்தி செய்ய...
வேறொன்றும் எனக்கு வேண்டாம்..
முழுதாய் என் முன் ஒரு முறை
புன்னகைத்துப் போ தேவதையே.....


டைரியில் நான் கிறுக்கிக் கொண்டிருந்தேன்....காற்று...என் கேசம் கலைத்து விளையாடிக் கொண்டிருந்தது....!



தேவா சுப்பையா...





ஹார்மோன் செய்யும் கலகம் தானடா - III !

$
0
0















சென்ற பாகத்தின் இறுதியில்...

"ஈவ்னிங் காலேஜ் முடிஞ்சு வந்து நான் உங்களுக்கு ஒரு 6 மணிக்கு கால் பண்றேன்.." சொல்லி விட்டு அவள் துண்டித்த தொலைபேசி இணைப்போடு... உலகத்தோடான எனது தொடர்பு அறுந்தது போயிருந்தது

ஓ.. மை.. காட்..........வாட் இஸ் திஸ்.... யார் இவள் ஏன்? இப்படி.....

மனம் என்னை கேட்காமல் எங்கேயோ பறந்து கொண்டிருந்தது... நானோ கோபமாய் மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்த கடிகாரத்தை முறைத்தவனாய்.. லாபியில் இருந்த சோபாவில் போய் விழுந்தேன்.. 6 மணிக்கான அவளது மறு தொலைபேசியை எதிர் நோக்கியவனாய்....

இனி...

காத்திருத்தல் ஒரு அவஸ்தை. அதுவும் பெண்ணொருத்திக்காக காத்திருப்பது ஒரு செல்ல இம்சை. மனசெல்லாம் பரபரக்க வரப்போகும் அவளைக் காணாமலும் அமர்ந்திருக்க வேண்டும் அதே நேரத்தில் அவள் வருகிறாளா என்று பார்த்துக் கொண்டும் இருக்க வேண்டும். அவள் வராத ஒவ்வொரு நிமிடத்திற்கும் அவள் மீது கோபம் எகிற, பேசாமல் எழுந்து போய் விடலாமா என்று தோண...இல்லை இல்லை வேண்டாம் என்று உள்ளுக்குள் ஒரு குரல் கேட்க....கடிகாரத்தை பார்த்து சலித்து சலித்து தூரத்தில் வரும் யார், யாரையோ அவளாகக் கருதி பாராதது போல திரும்பி நின்று வந்தது அவளாக இல்லாமல் போக மறுபடி அவளை எட்டிய தூரம் வரை தேடி....

அவள் வருகிறாள் என்பதை உறுதி செய்து கொண்டு..காத்திருந்த அவஸ்தையை மெளனமாக்கி ஏதோ மிகப்பெரிய கஷ்டத்தை அனுபவித்து விட்டதைப் போல முகத்தை திருப்பிக் கொண்டு...அவள் அருகில் வந்து..சாரிடா......கொஞ்சம் லேட் ஆயிடுச்சு என்று உதடு குவிப்பதைக் கண்டு கொள்ளாமல்..வேறு பக்கம் திரும்பி...அழுகையும் ஆத்திரமுமாய்....எவ்ளோ நேரம் வெயிட் பண்றது உனக்கு...ஏன்டி இப்டி பண்ற...? நான் போய் இருப்பேன் தெரியுமா என்று..ஆதங்கத்தை அவிழ்த்துக் கொட்டும் கணம்...

மிகவும் அழகானது.

கவிதாவின் தொலை பேசிக்காய் காத்துக் கிடந்தேன். ஆறு மணி ஆனவுடன் எழுந்து ரிசப்சன் கவுண்டர் அருகில் நின்று கொண்டேன். ஆறு ஐந்து வரையும் போன் வரவில்லை. அந்த ஐந்து நிமிடமும் என்னை எங்கோ தனியாய் பாலைவனத்தின் நடுவே விட்டு விட்டு ஒட்டு மொத்த உலகமும் சந்தோசத்தில் இருப்பதாய் மனசு பதறியது...கவிதாவின் குரல் எனக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது...ப்ளீஸ் கவிதா கால் பண்ணு என்று உள்ளுக்குள் கெஞ்சிக் கொண்டிருக்கும் போதே....

தேவ் கால் ஃபார் யூ...என்று கனகா மேடம் எனக்கு கால் ட்ரான்ஸ்பர் செய்ய.....பதட்டத்தோடு ரிசீவரை வாங்கிக் காதில் வைத்து...ஹ.....லோ...என்று உச்சரித்ததில்  வார்த்தைகள் பாதி தொண்டைக்குள் நின்று கொள்ள மீதி காற்றில் கரைந்து போக....மறுமுனையில் கவிதா..ஹல்லோ.....தேவ்...வாட் ஹேப்ப்ண்ட்...என்று கேட்க....வார்த்தைகள்...ஒலி வடிவத்திலிருந்து அலை வடிவமாகி மீண்டும் ஒலி வடிவமாகி என் செவி சென்று உயிர் வடிவமாகி என் இதயத்தின் லப் டப்பை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது. சுதாரித்துக் கொண்டு...ஹாய்....ஹாய்...கவித்தா என்று அவசியமே இல்லாமல் அழுத்தம் திருத்தமாய் த்தை உச்சரித்தேன்...

எப்டி இருக்கீங்க..? கவிதா கேட்டாள்...

நான் எப்படி இருக்கிறேன் என்று எப்படி சொல்வேன் பெண்ணே...! கனவுகளுக்குள் என்னை அடைத்துப்  போட்டு விட்டு சென்று விட்டவளே...எனக்கு கவிதைச் சிறகுகளைக் கொடுத்தவளே.. உணர்வாய் எனக்குள் நிறைந்தவளே.. தொலைபேசிக்குள்  இருந்து இதயம் துடிக்காது என்றுதானே உலகம் சொல்லும் இதோ நீ தொலைபேசிக்குள் இருக்கிறாயே...? காலையில் நீ பேசிவிட்டு சென்ற மறுநொடியில் நின்று போன என் உலகம் மீண்டும் இப்போதுதான் இயங்கத் தொடங்கி இருக்கிறது என்பதை நீ அறிவாயா?

அவளிடம் சொல்ல நினைத்தேன்.. ! சொல்ல முடியவில்லை. காதல் ஒன்றும் கால காலமாக காத்துக் கிடக்க....அது ஒன்றும் ஆயிரங்காலத்து பயிர் அல்ல திருமணத்தைப் போல...காதல் கண நேரத்தில் நமக்குள் ஊடுருவி நம்மை ஸ்தம்பிக்கச்  செய்து....உடலுக்குள் பற்றிக் கொள்ளும் பெருநெருப்பு. மிகப்பெரிய தத்துவ விளக்கங்களும், அறிவும் காதலைக் கண்டால் தேவனைக் கண்ட சாத்தானாய் ஓடி ஒளிந்துதான் கொள்ளத்தான் வேண்டும். காதலை அறிவால் விளங்கிக் கொள்ள முடியாது. உணர்வுகளால் பார்க்கும் போது விசுவரூபமெடுக்கும் காதல் அறிவினையும் ஆராய்ச்சியையும் கண்டால் நடுநடுங்கிப் போகும்.

ஹலோ என்னாச்சு...? என்று அவள் கேட்ட பொழுது நான் சுதாரித்துக் கொண்டு என்னாச்சு...என்னாச்சு...என்றேன்...ஒண்ணும் ஆகல...நீங்க ஏன் எதுவுமே பேசாம இருக்கீங்க என்று அவள் கேட்டு முடிக்கும் முன்பே நான் திரும்ப கேட்டேன் என்னிடம் ஏன் நீ  மீண்டும் பேசவேண்டும் என்று நினைத்தாய் என்றேன்...? அது வந்து ச்ச்சும்மா....தேங்க்ஸ் சொல்லலாமேன்னுதான்..காலையில அவ்ளோ டென்சன் தேவ்...வேற யாராச்சும் பசங்க போன் எடுத்து இருந்தா அவ்ளோதான் என்ன நல்லா ஓட்டி இருப்பாங்கதானே..நீங்கதான் ரொம்ப மரியாதையா பேசுனீங்க.....எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு...

தமிழ் சினிமாவைக் கொண்டாட வேண்டும் போலிருந்தது எனக்கு...பின்ன....எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து ரஜினி, கமல் வரை இடைவிடாத போதனை அல்லவா அது..?  ஹீரோயிசம் என்பது ஆண்களுக்குள் தன்னிச்சையாகவே உள்ள ஒரு குணம். அதைத்தான் தமிழ் சினிமா அப்பட்டமாக்கி வைத்தது. ஏன் உலக சினிமாவும் அப்படித்தான். எதார்த்தம் என்ற பெயரில் ஆண்கள் அடக்கி வாசிப்பதாய் காட்டும் சமகாலத்து ஒரு சில திரைப்படங்கள்தான் உண்மையில் நடிக்கின்றன. ஆணின் ஹீரோயிசம் என்பது அவனது ஜீன்களுக்குள் அடங்கிக் கிடக்கும் ஜென்மாந்திர இச்சை. பெண்ணின் எதிர்ப்பார்ப்புகள் அதிமாயிருக்கும் ஆனால் அவள் ஒரு கட்டத்தில் திருப்தியின் எல்லையைத் தொட்டுவிட்டாள் என்றால், பின் அவளிடம் சொர்க்கத்தின் சாவியைக் கொடுத்தாலும் அதை அவள் துச்சமாகத் தூக்கித்தான் எறிந்து விடுவாள்.

ஆண் இயல்பிலேயே எதிர்பாலினத்தை வசீகரிக்கும் இயல்பினன். மனிதப்பிறவி என்றில்லாமல் எல்லா உயிரினங்களிலுமே பெரும்பாலும் பெண் இனம் கண்டும் காணாதது போல இருக்க, ஆண் இனம் சுற்றிச் சுற்றி அதைக் கவர எல்லா வேலைகளையும் செய்யும். கவிதா என்னிடம் பேச ஆரம்பித்த போது எனக்குள்ளும் ஒரு புத்தி எழுந்து என்னை மிக நல்லவனாய் அவளிடம் காட்டிக் கொள்ளச் சொன்னது. என் இடத்தில் யார் இருந்தாலும் இதைத்தான் செய்து இருப்பார்கள். ஒரு பெண் வந்து பிரச்சினை என்று சொன்னால், நீ கவலைப்படாதம்மா...நான் இருக்கேன்.. என்று சொல்லி அவளை முதுகுக்கு பின்னால் தள்ளி விட்டு பிரச்சினையை நேருக்கு நேராய் எதிர்கொள்ளும்..பல தமிழ் சினிமாக்கள் எனக்கு பாடமாய் அமைந்து போனது.

கவிதா....அப்டீன்னு இல்லை...எப்டி பார்த்தாலும் இந்த மாதிரி ரேக் பண்றது எல்லாம் ரொம்ப தப்பு இல்லே...ஹவ் கேன் தே டூ லைக் திஸ்... மீண்டும் ஹீரோத்தனம் எழுந்து  ஸ்டைலாய் தலைகோதிக் கொண்டே அவளின் தோளை வாஞ்சையாய் நினைவுகளால் அணைத்துக் கொண்டது. யூ சுட் கம்ளெய்ண்ட் யுவர் சீனியர்ஸ் டு த மேனேஜ்மெண்ட்....நான் வேணும்னா வரவா? என்று நான் கேட்டது அவளின் சீனியர் ஸ்டூடண்ட்சை பழிவாங்கவோ கண்டிக்கவோ இல்லை, கவிதா எப்படி இருக்கிறாள் என்று பார்ப்பதற்காகத்தான் ....மூளை வேகமாக திட்டமிட்டு பேசிக் கொண்டிருந்தது.

ச்ச்சே....ச்ச்சே.. இட்ஸ் ஓ.கே தேவ்....! சீனியர்ஸ்னா அப்டித்தான்....யூ டோண்ட் வொர்ரி....தே பிகம் ப்ரண்ஸ் டு மீ நவ்...! அந்த அக்காங்கதான் சொன்னாங்க...உனக்கு கால் பண்ணி தேங்க்ஸ் சொல்ல சொல்லி என்று சொல்லி நம்பியாராய் நான் போட்ட சதித் திட்டத்தை உடைத்து என்னை நாகேஷாய் மாற்றியிருந்தாள்...! நான் அடித்த பந்து எல்லைக்கோட்டை தாண்டி சிக்சராகும் என்ற என் கனவினை லபக் என்று கேட்ச் பிடித்து அவுட்டாக்கினாள்.

பெண்களிடம் இருக்கும் ப்ளஸ்சும், மைனசும் என்ன தெரியுமா? தன் எதிரில் பேசிக் கொண்டிருக்கிறவனை காதலிக்கிறார்களா இல்லையா என்பதை புரிந்து கொள்ளவே முடியாது....உரிமையாய்ப் பேசுவது அவர்களின் இயல்பு. உரிமையாய்ப் பேசுபவர்களை எல்லாம் காதலிகளாய் நினைப்பது ஆண்களின் இயல்பு. இந்த இரண்டு இயல்புகளும் அதிவேகத்தில் பயணித்து சரியாய் க்ராஸ் செய்து போய்விட்டால் நல்லது....இரண்டும் சிலசமயம் ' தடால் '  என்று மோதிக்கொள்ளும் போது.....நீ என்ன ஏமாத்திட்ட என்று பசங்களும்...நான் உன்னை அப்டி நினைக்கல என்று பெண்களும்...துரோகி முத்திரை குத்திக் கொள்ள வேண்டியிருக்கும்.

சாப்டியா தேவ்..? என்று கவிதா கேட்டாள்...அவளின் அக்கறையை என் மனது காதல் என்று சொல்ல..புத்தி ஹோல்டான் தம்பி, டோண்ட் பிளை இன் த ஸ்கை என்று சொக்காயைப்  பிடித்து கீழே இழுத்துப் போட்டது. நான் சாப்டேன் கவிதா.. ஆக்சுவலி..தேங்க்ஸ் ஃபார் காலிங்  மீ...யூ ஆர் கிரேட்....

நான் தத்துப்பித்து என்று டைப்படித்தபடியே பேசியதை புரிந்து கொண்ட கவிதா...சப்தமாய் சிரித்தாள்...! நீங்க எந்த ஊர் தேவ்...? என்று சிரிப்புக்கு நடுவே ஒரு கேள்வியையும் என்னைத் தூக்கி வீச.... நான் பராக்கு பார்த்த பையனாய் அந்த கேள்வியை மிஸ் பண்ணி விட்டு...என்ன்ன.....என்ன கேட்டீங்க...என்று மறுபடி கேட்க...

ஹலோ..உங்கள விட எனக்கு வயசு கம்மிதான்...கால் மீ கவிதா....சரியா என்று வார்த்தைகளால் எனக்கு சொடக்குப் போட..மனம் ஜிம்மியானது...தலையாட்டினேன்.....! எந்த ஊர் என்று நான் சொன்ன பின்பு அவளின் ஊரைச் சொன்னவுடன் எனக்குள் ஒரு கேள்வி எட்டிப்பார்த்தது..! கோயம்புத்தூர் சாய்பாபா காலனியில் மனிதர்களோடு எப்படி வாசம் செய்கிறது இந்த தேவதை என்று நினைத்துக் கொண்டேன்...

முதல் நாளில் தோன்றுவது காதல் இல்லை இன்பேக்சுவேஷன் என்று எங்கேயோ ஒரு நாதாரி எழுதியதை படித்திருந்த புத்தி என் காதலை மரத்தில் கட்டி வைத்து அடித்து காறித் துப்பி இது இன்பேக்சுவேஷன்...தான்டா லூசு...காலையில கால் பண்ணி பேசிட்டு சாயங்காலம் பேசும் போது வந்தா அது காதலே இல்லை என்று எனக்கு வேதம் ஓதிக் கொண்டிருந்தது. பாஷா படத்தில் ரஜினி அடி வாங்குவது போல சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டேன்... திருப்பி கொடுப்பேன் புத்தியே உனக்கு என்று உள்ளுக்குள் கருவிக் கொண்டேன்...இப்படி நினைப்பதற்கும் சாட்சாத் தமிழ் சினிமாதான் எனக்கு உதவியது.

நான் வந்து ரொம்ப நேரமாச்சு....ரியலி யூ ஆர் கிரேட் தேவ்....எப்டி உங்களுக்கு தேங்க்ஸ் சொல்றதுன்னே தெரியலை....டுடே இஸ் ரியலி லவ்லி டே ஃபார்மி.....ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் தேவ்...

வைச்சிடட்டுமா.......

அவள் சொல்லி முடித்த போது என் உலகம் இருண்டு போயிருந்தது. தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் தள்ளி விட்டு விளிம்பில் நின்று சாத்தான்கள் கோரப்பற்கள் தெரிய குதித்து விளையாடுவதைப் போல உணர்ந்தேன்...

கவிதா நீ என்ன மேஜர்...என்றேன்....

ஹா....ஹா...ஹா....கண்டு பிடிங்க பார்க்கலாம்  என்றுவிட்டு...அப்போ வச்சிடவா என்றாள்....

உன்ன எப்டி காண்டாக்ட் பண்றது உன் நம்பர் கொடு...கவிதா....உள்ளுக்குள் இருந்த ஹீரோ ப்ளாட்பாரத்தில் பிச்சை எடுப்பவனைப் போல கெஞ்ச ஆரம்பித்து இருந்தான்..!

அட...நான் எங்க ஹாஸ்டல் உள்ள இருக்க எஸ்.டி.டி பூத்ல இருந்துதான் கால் பண்றேன்...இந்த நம்பர் எப்டி கொடுக்கறது...? சரி சரி நான் வச்சிடுறேன்.. வெளியில நிறைய பொண்ணுங்க..க்யூவுல நிக்கிறாங்கடா.........என்று அவள் சொல்லி முடிக்கும் போதுதான் அவள் என்னை டா போட்டு நடு நெஞ்சில் அன்புக் கத்தியால் சொருகி இருந்ததை உணர்ந்தேன்...

அச்சோ அப்போ எப்டி நான் உன்கிட்ட மறுபடி பேசுறது....மறுபடி ப்ளாட்பாரத்து பிச்சைக்காரன்......அம்மா தாயே என்றான்...

நானே பண்றேன்டா நாளைக்கு இதே நேரம்.......வைச்சிடுறேன்..தேவ்.....நல்லா சாப்டு..நல்லா தூங்கு.......பாய்....குட் நைட்......

டொக்....!

ரிசீவரை அவள் வைத்த் சப்தத்தில் நின்று போன இதயம் மறுபடி துடிக்க சில நொடிகள் ஆகிப்போயின.....

யாரிவள்...?
சொல்லாமல் கொள்ளாமல்
எனக்குள் வந்து நின்று
என்னை புரட்டிப் போட்டிருக்கிறாளே...?
தொலைபேசியில் வந்த
தொல்லையா....?
இல்லை...
என்னை தொல்லை செய்ய வந்த
தேவதையா?
இவை இம்சையா..?
ப்ரியமா?
இவள் கவிதையா...
இல்லை கள்ளிச் செடியா...?

பித்துப் பிடித்தவனைப்  போல டூட்டி விட்டு வெளியே வந்து ஸ்பெளண்டரை உதைத்தேன்.....அண்ணா சாலைக்குள் என்னை நுழைத்துக் கொண்டேன்....வண்டி  நிகழ்காலத்தில் ஓடிக் கொண்டிருந்தது.....புத்தியோ அடுத்த நாள் ஆறு மணியில் வால் குலைத்த நாயாய்....கவிதாவின் போனுக்கு காத்துக் கிடந்தது...!


(காத்திருங்கள்...காதலுக்காக)


தேவா சுப்பையா....






படைப்பாளி....!

$
0
0
   

சராசரியான மனோநிலையில் புதிதாய் ஒன்றையும் படைக்க முடியாது. புதிதாய் படைப்பவன் சராசரிகளோடு ஒத்துப் போகவும் முடியாது ஏனென்றால் கிளர்ந்தெழுந்த மனோநிலைகள் பூமிக்கு மட்டும் சொந்தமானது இல்லை. இலக்குகளை நோக்கிய பயணம்தான் லெளகீகவிதி என்றால் பயணம் என்ற ஒன்றே இல்லை என்பதுதான் ஒரு படைப்பாளியின் விதி. ஏன் பயணிக்க வேண்டும்...? என்ற ஒரு ஆதரக் கேள்வியை அவன் உங்களை நோக்கி கேட்டால் அதற்கு நீங்கள் கொடுக்கப் போகும் பதில்கள் அவனை ஒரு போதும் திருப்தி செய்ய போவதுமில்லை. 

அவன் வானத்தில் ஒரு நாள் நூறு நிலாக்கள் இருக்கும் மறுநாள் நிலவே இல்லாத அடர் இருளிருக்கும், மற்றொரு நாள் நட்சத்திரங்களால் மட்டும் வானம் நிரம்பிக் கிடக்க இவன் ஒவ்வொரு நட்சத்திரமாய் பெயர்த்தெடுத்து தான் எழுதிக் கொண்டிருக்கும் கவிதை வரிகளுக்கு நடுவே வைத்து அலங்கரித்துக் கொண்டிருப்பான். அவன் வாழ்க்கையில் விடியாத இரவுகள் இருக்கும், எப்போதும் சுடும் சூரியன் இருக்கும்....வற்றாதா நதி இருக்கும், பேசும் பசு இருக்கும், பேசாத மனிதர்கள் இருப்பார்கள், சண்டையிடாத காதலிகளும், விஷமற்ற சர்ப்பங்களும், பரந்த புல்வெளிகளும், நிற்காத மழையும், மேகத்தைப் போர்த்திக் கொண்ட மலைகளும், நிலத்தில் நகர்ந்து செல்லும் மீன்களும், கவிதைகள் சொல்லும் பட்டாம் பூச்சிகளும், கனவுகளைச் சொல்லும் மலர்களும்  என்று அவன் உலகத்தில் எல்லாமே இருக்கும்....

கிழிந்த பாயில் அவன் படுத்துக் கொண்டு சமூக முரண்களுக்கு நீதி சொல்லிக் கொண்டிருப்பான். பஞ்சடைந்த கண்களோடு ஒளி பொருந்திய மானுட வாழ்க்கைக்கு தீர்வுகளை யோசித்துக் கொண்டிருப்பான், அடுத்தவேளை புசிக்க ஒன்றுமில்லாவிட்டாலும் தேனில் தோய்த்த பலாச்சுளைகளையும், கோப்பைகளில் வழியும் மதுரசத்தையும், தீரத் தீர இனிப்புகளையும், வயிறு முட்ட அவன் நினைவுகளால் ருசித்துக் கொண்டிருப்பான்.  சமூகத்தின் சராசரி எதிர்பார்ப்புகளுக்குள் அவனை அடைத்துவிட யாரும் சிறு முயற்சி கூட எடுத்து விடாதீர்கள், ஏனென்றால் உங்களின் லெளகீக சடுகுடுக்கள் அவனுக்கு ஒரு போதும் திருப்தியைக் கொடுத்து விடாது.

என்ன வேண்டும் என்று எதிர்பார்த்து இந்த உலகம் காய் நகர்த்துகையில் எதுவும் வேண்டாம் என்று அவன் தீர்மானித்து விட்டு நடனமாட கால்களில் சலங்கை கட்டிக் கொள்வான். கட்டம் கட்டி வாழும் வாழ்க்கை ஒன்றுக்கு அவன் எப்போதும் எதிரானவன். கட்டுப்பாடுகளற்ற பெருவெளிகளுக்குள் புலிப்பாய்ச்சல் பாயும் அவனுக்கு இயல்புகள் என்று ஒன்றும் தனித்துக் கிடையவே கிடயாது. அவனுக்கு வெகுஜனத்தைப் பற்றிய அக்கறைகள் ஏதுமில்லை. ஊர் வாழ நான் வழி சொல்லுவேன் என்று நாகரீக மனிதர்கள் சேவைக்கொடியைத் தூக்குகையில் அவன் கிழிந்து கிடக்கும் அவனின் சட்டையைப் பற்றிய எண்ணமுமற்று ஏகாந்த உலகில் சிறகடித்துக் கொண்டிருப்பான். 

அவனுக்கு நன்றாகத் தெரியும் வாய்ப்புகளை கவனியாதவர்கள்தான் வாழ்க்கையில் தோற்றுப் போகிறார்கள் என்று....! எந்த மனிதன் யாரை அடக்கினானோ அவனாலேயே மீண்டும் அடக்கப்படுவான் என்ற வாழ்க்கையின் சூத்திரமும் அவனுக்கு நன்றாகத் தெரியும். யாரும் பேசி இங்கு எதுவும் மாறவில்லை...காலம்தான் எல்லாவற்றையும் மாற்றி இருக்கிறது என்று அவன் அடித்து சொல்வான். அப்படி இருக்கும் போது அப்படி இருந்தது.. இப்படி இருக்கும் போது இப்படி இருக்கிறது...என்பதுதான் அவன் தேடல் அவனுக்குக் கொடுத்த விடை.

பொருள் பலத்தை வைத்து வாழ்பவனும் பொருளற்ற வாழ்க்கையைத்தான் வாழ்கிறான். பொருள் இல்லாமல் வாழ்பவனும் பொருளற்ற வாழ்க்கையையே வாழ்கிறான் என்பதை அவன் தெரிந்து வைத்திருப்பதால்தான் பொருள் என்ற  வார்த்தையை அவன் அகராதியில் அழுத்தம் திருத்தமாக அடித்து விட்டு அங்கே அதற்கு பதிலாக அருள், அருள் என்று எழுதி வைத்திருக்கிறான். இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒழுக்க நெறிகள் கொண்ட சமூகத்தை அவன் பைத்தியக்கார உலகம் என்று வர்ணித்துக் கொண்டிருக்கையில் இந்த உலகம் அவனைப் பைத்தியக்காரன் என்று சொல்கிறது. அவன் அதை சட்டை செய்வதும் இல்லை.

வாழப் பிறந்தவர்கள் நாங்கள் என்று மனிதர்கள் அகந்தையோடு மார் தட்டுகையில், இவன் சாகப்பிறந்தவர்கள் நீங்கள் என்று அவர்களிடம் சவால் விடுவான்.  அவன் எழுதுவான்...எழுதுவது யாருக்காகவும் அல்ல..., என்றும் சொல்வான். கேட்டால் பரந்த வானத்தில் அடர்ந்து கிடக்கும் இரகசியங்கள் யாருக்காக சொல்லப்பட்டது...? கடும் வனத்தினூடே அடர்ந்து கிடக்கும் மரங்களுக்கு நடுவே நடந்து செல்லும் நதி யாருக்காக படைக்கப்பட்டது....? பாலைவனத்தின் நடுவில் பரந்து விரிந்து கிடக்கும் பெருமணல் வெளி யார் பார்க்க வேண்டுமென விரிக்கப்பட்டது...? ஆழ்கடலில் மானுடர் செல்ல முடியாத தூரங்களை எல்லாம் யாரும் பார்க்கவில்லை என்பதால், அவை இல்லை என்று ஆகிவிடுமா என்ன...?

இருக்குவரையில் இயங்கவேண்டும். இயங்கும் வரையில் புறக்காட்சி என்ற ஒன்று இருக்கும். நீ ஏன் எழுதுகிறாய் என்று அவனிடம் கேட்டால், அவன் உங்களிடம் மழை ஏன் பெய்கிறது என்று கேட்பான். இங்கே எல்லாவற்றையும் யாருக்காகவும் சொல்லவேண்டும் என்ற அவசியமில்லை என்ற உண்மையை உணருங்கள் என்று எழுத்துக்களால் விழிகள் உருட்டி மிரட்டுவான். அவன் பைத்தியக்காரன் தான்...இயல்பென்று இந்த உலகம் வரைந்து வைத்திருக்கும் எல்லா கோடுகளையும் அழித்த பைத்தியக்காரன் தான்...! அவன் ஒரு போதும் வார்த்தைகளை எழுதுவதில்லை மாறாக அவனின் உணர்வுகளையே எழுதிக் கொண்டிருக்கிறான்.

படைப்பாளியின் உலகம் என்பது உங்களுக்கு விசித்திரமானதாய் இருக்கலாம் ஆனால் அவனுக்கு இந்த உலகின் நடைமுறைகள் மிக விசித்திரமாய் தெரிகின்றன. காட்சிகளிலிருந்தும், அனுபவங்களிலிருந்தும் மனிதர்கள் வார்த்தைகளைப் பெற்று பேசிக் கொண்டிருக்கையில் அவன் மெளனத்துக்குள் விழுந்து கிடக்கிறான். வெறுமையில் அவன் வாழ்க்கைக்கான விடையைத் தேடுகிறான். கடவுளை இந்த உலகம் கூறு போட்டுக் கொண்டிருக்கையில் அவன் கடவுள் என்ற வார்தையைக் கடந்து சென்று பெயரில்லாத பிரமாண்டம் ஒன்றை கண்டு விடுகிறான்.

வாழ்க்கைக்கு யாதொரு அர்த்தமும் இல்லையாதலால், ஒரு படைப்பாளியும் எதையும் அர்த்தப்படுத்த வேண்டிய அவசியமற்று நகர்கிறான். இதை இப்படி இங்கே செய்யவேண்டும் என்ற வரைமுறை வாழ்க்கை அவனுக்கு வேடிக்கையாய்த் தெரிகிறது. இன்னும் சொல்லப் போனால் ஏதோ ஒன்றை படைக்கும் ஒருவன் இதுதான் வேண்டும் என்று விரும்பி அதைச் செய்ய அமர்வதில்லை. அப்படியாய் அவன் விரும்பி விளைவுகளை மனதில் இருத்தி ஏதேனும் செய்தால் அது வியாபரம் ஆகிப் போகும் என்பது அவனுக்குத் தெளிவாகவே தெரியும். 

லெளகீகத்தோடு எந்தவித தொடர்பும் இல்லாமல் அவன் வசித்தாலும், அவனின் படைப்புகளும் சந்தைக்கு வரத்தான் செய்கின்றன. வியாபரம் செய்யவே உருவாக்கம் செய்யப்பட்ட ஒன்றோடு, வெகுஜனத்தின் விருப்பத்திறாகவே அலங்கரித்துக் கொண்டு சந்தைக்குள் உலாவும் ஜிகினாக்களோடு, இவனின் வரைமுறையற்ற உணர்வுச் சித்திரங்களும் விற்பனைக்கு வருகிறது. அலங்காரித்துக் கொண்ட செயற்கைக்கு அருகில் கரடுமுரடான இவனது கற்பனைகளும் காட்சிப்படுத்தப் படுகின்றன. விற்பனைக்கென்றே பார்த்து, பார்த்து உருவாக்கப்பட்ட ஒன்றோடு......வரைமுறையற்ற எண்ணங்களிலிருந்து தோன்றிய வார்த்தை வடிவங்கள் ஒரு படைப்பாளியின்  உணர்வினைத் தாங்கியபடி படைக்கப்பட்ட ஒன்று, ஒரு மாயப் போட்டிக்கு வருகிறது..

முதலாவது விற்பனைக்கென்றே உருவானது, இரண்டாவது உருவானதால் விற்பனைக்கு வந்தது. இரண்டும் ஒன்று போல தோன்றினாலும் இரண்டும் ஒன்றல்ல. இரண்டும் ஒன்றென்றுதான் உலகம் சொல்லும், ஏனெனில் இந்த உலகத்துக்கு வசீகரிக்கும் வார்த்தைகளும் ருசிக்கும் சொற்களும், முகஸ்துதி மனிதர்களுமே அவசியம்...

இங்கே யாருக்கும் தங்களின் சுயத்தைப் பற்றிய அக்கறைகள் கிடையாது. தன்னை எப்போதுமே வேறு யாரோவாகவே கற்பனை செய்து கொண்டு கோபப்பட்டு, சிரித்து, அழுது, புலம்பி கடைசியில் கடைவாயில் எச்சில் ஒழுக செத்துப் போகிறார்கள். மரணம் இங்கே எல்லோருக்கும் சமமாய் வழங்கப்படுகிறது. என்ன ஒன்று மனதின் இயல்புகளோடு திட்டமிட்டே வாழும் ஒருவன்...எதிர்பாராமல் இது இன்னதென்று அறியாமல் செத்துப் போகிறான்....

மனமற்ற நிலையில் எதிர்பார்ப்புகளின்றி வாழும் ஒருவன்...ஓ...இன்றுதானா அது என்று....வாஞ்சையோடு மரணத்தை கைகுலுக்கி வரவேற்று மகிழ்ச்சியாய் மரிக்கிறான். அது மரணமாய் இருப்பதில்லை பிரபஞ்சத்திடம் அடையும் சரணாகதியாகவே இருக்கிறது. இயல்புகளைப் படைத்தவன் மரணத்தையும் இயல்பாக்கிக் கொள்கிறான். அதனால் நீங்கள் ஒரு படைப்பாளியை எப்போதும் வரையறை செய்து பார்க்காதீர்கள்,  அவனின் உலகம் வேறு...

எங்கோ பயணிக்கும்
பிரபஞ்ச நகர்வுகளுக்கு நடுவே
அவன் தோட்டம்
எப்போதும் பூத்து...
சிரித்துக் கொண்டுதானிருக்கிறது....
நீங்கள் அவனை 
ஆதரிக்கலாம், எதிர்க்கலாம்
நேசிக்கலாம் அல்லது வெறுக்கலாம்...,
அவன் முரண்பட்டவன்...என்றும்
யாரையும் மதியாத 
திமிர் பிடித்தவன் என்றும்
ஏதேனும்....ஒரு
கருத்து கூட கொள்ளலாம்...
ஆனால்...
அவனோ யாருமற்ற 
தனிமையின் அந்தக் கணத்தில்
பேரமைதியின் தாலாட்டுப் பாடலை
கேட்டபடி...
தூளி உறங்கும் குழந்தையாய்
புரண்டு படுத்துக் கொண்டிருக்கிறான்...!



தேவா சுப்பையா...



அன்புள்ள அப்பாவிற்கு...

$
0
0
Taken @ குருக்கத்தி























அன்புள்ள அப்பாவிற்கு,

தேவா எழுதிக்கொள்வது...

செல்வ சிரஞ்சீவி ராஜ ராஜஸ்ஸ்ரீ அருமை மகன் சுப்பையாவிற்கு என்றுதான் தாத்தா உங்களுக்கு எழுதும் கடிதங்களைத் தொடங்கி  இருப்பார்கள்.  நீங்கள் தாத்தாவிற்கு எழுதும் கடிதங்களில் எல்லாம் மரியாதைக்குரிய மகாகனம் பொருந்திய ராஜராஜஸ்ஸ்ரீ தகப்பனார் அவர்களுக்கு சுப்பையா எழுதிக் கொள்வது யாதெனில் என்று தொடங்குவீர்கள்.  என் வார்த்தைகள் அன்புள்ள அப்பா என்ற எட்டு எழுத்துகளுக்குள்ளும் நாம் தலைமுறைக் காதலை, அன்பை நேசத்தை தாங்கி வருவதாக நான் உங்களிடம் பல முறை கூறி இருக்கிறேன்...இப்போதும் அப்படித்தான்...

நிற்க....!!!!

நலமா அப்பா? நாங்கள் நலமாயிருக்க முடியாது என்பதை தாங்கள் அறிவீர்கள். நீங்கள் இல்லாமல் எப்படி அப்பா நாங்கள் நலமாயிருக்க முடியும்? எல்லாமாய் இருந்த உங்களை ஒரே ஒரு கணத்தில் வாழ்க்கை எங்களை விட்டுப் பிரித்து விடும் என்று கற்பனைக் கூட செய்து பாத்திருக்கவில்லை அப்பா. உங்களுக்கு நீண்ட நெடிய ஆயுளையும், நிலையான செல்வத்தையும் கொடுக்க வேண்டிதான் எங்களின் பிரார்த்தனைகள் எல்லாம் இருந்திருக்கிறது. பின்னதை எங்களுக்கு நீங்கள் உருவாக்கி வைத்து விட்டீர்கள், முன்னதை கடவுள் பறித்துக் கொண்டுவிட்டான். 

65 வயதில் அப்படி ஒரு விபத்து உங்களுக்கு நேரும் என்பதை நாங்கள் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. இதோ இந்த வரிகள் கூட நீங்கள் எங்களோடு இல்லை என்பதை நம்பமுடியாமல்தான் நகர்கிறது. எத்தனை இரவுகள் அப்பா உங்களின் கழுத்தைக் கட்டிக் கொண்டு நான் உறங்கி இருக்கிறேன்...எத்தனை பகல்கள் அப்பா உங்களின் மார்பில் தலை சாய்த்து விளையாடி இருக்கிறேன். எத்தனை முறை அப்பா என்னை கோபப்பட்ட அடுத்த நொடியில் நீங்கள் அன்பாய் அரவணைத்து இருக்கிறீர்கள்...? 

நான் கல்லூரி முடித்த இரண்டு மாதத்தில் நீயே உன் வாழ்க்கையை நிர்மாணித்துக் கொள். நீ ஜெயிக்கிறாயோ தோற்கிறாயோ எது நடந்தாலும் அது உன்னால் நிகழ்ந்தது என்று பொறுப்பேற்றுக் கொள். எத்தனை காலம் ஒரு தகப்பனும், தாயும் பிள்ளைகள் உடன் வரமுடியும் என்று அன்று நீங்கள் கன்றை முட்டி விரட்டிய பசுவாய் என்னை இந்த சமூகக் காட்டுக்குள் தள்ளி விட்டீர்கள்...! வாழ்க்கை எளிதானது ஆனால் எல்லா மனிதர்கள் எளிதானவர்கள் இல்லை, நீ எல்லாவற்றுக்கும் உணர்ச்சி வசப்படுகிறாய் இங்கே நீ உறவு என்று நினைக்கும் எந்த உறவும் நீ அவர்களுக்குப் ஒரு கணம் எதிர்நிலைப்பாடு எடுத்தாலோ அல்லது அப்படியான சூழலில் உன்னைக் கண்டாலோ உன்னை தூக்கி எறிந்து விட்டு தங்களின் வழி நடந்து சென்று விடுவார்கள். இருந்தும் இல்லாமல் வாழக் கற்றுக்கொள் என்றெல்லாம் நீங்கள் சொன்னது எல்லாம் என் கண் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் போது உங்களின் கால்களைக் கட்டிக் கொண்டு நான் கதறவேண்டும் என்று தோன்றுகிறது...

நீங்கள் எங்கே அப்பா போனீர்கள் என்னை விட்டு விட்டு...?

அப்பா....அம்மா சரியாக உணவருந்துவதில்லை. யாரிடமும் பேசுவது இல்லை. இதோ நீங்கள் எங்களை விட்டுப்பிரிந்து சரியாக இரண்டரை மாதங்களை காலம் விழுங்கிக் கொண்டு விட்டது. 40 வருட உங்களின் துணை  உங்களின் பிரிவை எதிர்கொள்ள முடியாமல் திசைக்கு திசை வெறித்துப் பார்த்துத் திணறிக் கொண்டிருக்கிறது. அம்மாவின் இரவும், பகலும் நீங்கள்தான் அப்பா. உங்களைத் தவிர அம்மாவுக்கு வேறு எதுவுமே தெரியாது. அம்மாவின் தேவைகள் எதுவென்றே அம்மாவுக்கு தெரியவில்லை அப்பா....அது எல்லாவற்றுக்கும் உங்களை சார்ந்தே வாழ்ந்திருந்திருக்கிறது. சடாரென்று வாழ்க்கை அவளின் அமைதியைப் பிடுங்கிக் கொண்டு விட்டதை எதிர்கொள்ள முடியமால் தவித்துக் கொண்டிருக்கிறாள். எங்களின் குஞ்சுச் சிறகுகளை வைத்துக் கொண்டு தாய்க் கோழியை அரவணைக்க முடியாமல் தடுமாறி நின்று கொண்டிருக்கிறோம் அப்பா...!

அம்மா பாவம்...அவளுக்கு ஒன்றும் தெரியாது அவள் என்ன பேசினாலும் கேட்டுக் கொள் என்று அடிக்கடி சொல்வீர்களே அப்பா...! அம்மா இப்போதும் புரியாதவளாய்த்தான் இருக்கிறது அப்பா....

நீங்கள் இல்லை இல்லை .....இல்லை வேறு ஒரு நிலைக்குச் சென்று விட்டீர்கள் என்று எத்தனை சொல்லியும்.....இன்னமும் நீங்கள் மீண்டும் வருவீர்கள் இல்லையேல் நான் அவரிடம் செல்வேன் என்று புரியாமலேயே பேசிக் கொண்டிருக்கிறது அப்பா....! அம்மாவின் மீது நீங்கள் கொண்டிருந்த காதலை யாரும் யாருக்கும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. கடைசி நிமிடம் வரை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை அதைச் சொல்லுமே அப்பா...! எல்லாவற்றுக்கும் அம்மாவையும் எங்களையும் அனுசரித்து வாழச் சொன்னீர்கள் 

ஆனால்...

நீங்கள் இல்லாமல் போனாலும் நாங்கள் அனுசரித்து வாழவேண்டும் என்ற சூழலைக் கொடுத்துச் சென்றது என்ன அப்பா நியாயம்..? எப்படி அப்பா இறந்தீர்கள்..? அபோது என்ன அப்பா நினைத்தீர்கள்....காலம் இந்த இரண்டு கேள்விக் கத்திகளால் எங்களின் இதயத்தை அறுத்துக் கொண்டேதான் அப்பா இருக்கும்....! உங்களின் அலைபேசி எண் இன்னும் இருக்கிறது அப்பா....எடுப்பதற்கு நீங்கள் இல்லை...? நீங்கள் மடிப்பு கலையாமல் அடுக்கி வைத்த உங்களின்  உடைகள் இருக்கின்றன..? உங்கள் எல்லா உடைமைகளும் அப்படியே இருக்கின்றன....., பார்த்து பார்த்து நீங்கள் கட்டிய வீடும், நட்ட செடிகளும், மரங்களும் செழித்து வளர்ந்து சிரிக்கின்றன அப்பா, நீங்கள் வைத்த பலா மரம் தன் முதல் காயை கொடுத்து அதுவும் பழுத்து விட்டது  அப்பா,

கடைசியாக நீங்கள் வண்டியை எடுக்கும் போது வாசலில் இருந்த செடியொன்றை இறுக்கப் பிடித்து நெருக்கமாக கட்டி வைத்து விட்டு சென்றிருக்கிறீர்கள்..அந்த கட்டு இருக்கிறது அப்பா, நீங்கள் போட்ட முடிச்சு இருக்கிறது அப்பா...நீங்கள் குளித்து விட்டு  வைத்துச் சென்ற சோப்பும், ஏன் உங்கள் விபத்து சூழலில் உங்களுடன் இருந்த  உங்கள் இருசக்கர வாகனமும் வீடு திரும்பி விட்டது அப்பா....

நீங்கள் எங்கே அப்பா போனீர்கள்...?

ஆறு வருடம் முன்பு நான் ஊருக்கு வரும் போது ஒரு வாட்ச் வாங்கி வந்தேன். அதை ஒரு வருடம் நீங்கள் கட்டிக் கொள்ள வில்லை. " சைஸ் பெரிசா இருக்குடா தேவா... அதான் கட்டல"  என்று நீங்கள் சொன்னீர்கள்..., அம்மா சொன்னது எங்கே கட்டினால் அது பழசாய்ப் போய்விடும்,  தம்பி வாங்கிக் கொடுத்தது என்று அப்படியே வைத்திருக்கிறார் என்று....பிறகொருநாள் அதை அளவு சரியாக்கிக் கட்டிக் கொண்டீர்கள். எல்லாம் முடிந்து இரண்டாம் நாள் உங்களுக்கு விபத்து ஏற்பட்ட இடத்துக்கு எதிரே இருந்த பெட்டிக்கடைக்காரர் உங்களின் செருப்பையும், உடைந்து போன அந்த வாட்சையும் கொண்டு கொடுத்த போது...

எப்படி அப்பா இந்த வாழ்க்கையை புரிந்து கொண்டு நகரச் சொல்கிறீர்கள்...? இது என்ன வாழ்க்கை அப்பா....? எல்லாமே போய்விடும் என்று தெரிந்தும் பற்று கொண்டு வாழும் பைத்தியக்கார வாழ்க்கை...உடைந்து போன அந்த கடிகாரம் கூட ஓடிக் கொண்டிருக்கையில் என் உயிரான அப்பா இல்லையே என்று நினைக்கும் போது நெஞ்சு வெடித்துதான் போகிறது. தம்பிகள் இருவரும் சின்னப்பிள்ளைகள் என்று எனக்கு எனது 6 வயதில் அவர்கள் பிறந்த போது சொன்னீர்கள். நீங்கள் இறப்பதற்கு இரண்டு நாள் முன்பும் எனது 37 வது வயதிலும் 31 வயது ஆன தம்பிகளை சின்னப் பிள்ளைகள் நீதான் அனுசரித்து நடக்கவேண்டும் என்றீர்கள்...ஒரு தகப்பனாய் பிள்ளைகளுக்குள் எப்படி பாசத்தை விதைப்பது என்பதை நீங்களும், அம்மாவும் பல சூழல்களில் சரியாய் செய்ததால்தான்..

நானும், தம்பிகளும், அக்காவும் எங்களைச் சுற்றி என்ன நிகழ்ந்தாலும் நீங்கள் உருவாக்கி வைத்திருக்க்கும் அந்த நேர்கோட்டுப் பாசப்பிணைப்புக்குள் நின்று கொண்டு தவிக்கிறோம். மரணம் என்பதை தத்துவார்த்தமாக நான் விளங்கி இருக்கிறேன் அப்பா. அறிவு கழிந்த ஞானம் ஏதேதோ எனக்குச் சொல்லிக் கொடுத்து இருக்கிறது. இப்போது அப்படி இல்லை அப்பா....

மரணம் என்பது நீங்களும், நமது மூதாதையர்களும் இருக்கும் ஒரு இடம். நீங்கள் அங்கே இருக்கிறீர்கள் என்பதால் அந்த இடத்திலும் எங்களைப் பார்த்துக் கொள்வீர்கள் என்று ஒரு லெளகீகத் துணிச்சலும் உள்ளுக்குள் பிறக்கிறது அப்பா....! வாழ்க்கையில் எங்களை போராளிகளாய் நிற்க வைத்த உங்களுக்கு எங்களின் மரணத்திற்குப் பிறகு எப்படி அதை சமாளிப்பது என்று சொல்லி கொடுக்காமலா போய் விடுவீர்கள்....?

எப்போது இந்தியா வந்தாலும் விமான நிலைய வாசலில் யார் இருக்கிறார்களொ இல்லையோ நீங்கள் இருப்பீர்கள்...! கட்டியணைத்து உச்சி முகர்ந்து நீங்கள் வரவேற்கும் இடம்.....கிளையை வேர் கட்டியணைத்து மகிழ்வதை ஒத்தது அப்பா...! கடந்த மே 22 ஆம் தேதி அந்த பிரதோஷ நாள் என்னால் மறக்கவே முடியாது...

தம்பி ஆம்புலன்ஸ்க்குள் இருந்து என்னிடம் கதறி இனி உங்களை காப்பாற்ற முடியாது என்று சொன்ன இடத்தை விட கொடும் துயரம் ஒன்று இந்த வாழ்க்கையில் எனக்கு நிகழ்ந்து விடுமா என்ன ...? சென்னை விமான நிலையத்ததை தொட்ட அந்த 23 ஆம் தேதியின் அதிகாலை கர்ண கொடூரமானது. தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் நோக்கிய எனது அன்றைய பயணம்தான் நரகம்.

எல்லாம் முடிந்த பின் பைத்தியக்காரனாய்....என்னை பெற்ற தகப்பனை, எனக்கு கை பிடித்து வாழ்க்கையைச் சொல்லிக் கொடுத்த  குருவை, தன் உயிர் கொண்டு என் உயிர் உருவாக்கிய கடவுளை, ஆரம்பப்பள்ளியிலிருந்து கல்லூரி வரை அட்மிஷனுக்காக  உடன் வந்த அப்பாவை வாழ்க்கையை எதிர்த்து வாழ்வதை விட அனுசரித்து வாழ்வதே சிறந்தது என்று சொல்லிக் கொடுத்த அப்பாவை...., குருக்கத்தி என்ற குக்கிராமத்தில் 1947ல் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து ஊராட்சி ஒன்றிய ஆணையராய் பணி புரிந்து தன்னின் ஆளுமையை விஸ்வரூபமாக்கிக் காட்டிய, எதிரிகள் என்று யாரும் இல்லாமல் எல்லோரையும் அன்பால் கட்டுப்படுத்தி வைத்திருந்த ....

உங்களை ஐசியூவில் உயிரற்று பார்த்த போது...ஸ்தம்பித்துப் போனேன்...!!!!! .இந்த வாழ்க்கையின் அர்த்தமற்ற தன்மை எனக்குப் புரிந்தது. நிதர்சனமற்ற வாழ்க்கைக்கு நடுவே நிகழும் அபத்தங்கள் விளங்கியது. பின் தலையில் அரை இஞ்ச் அளவு ஏற்பட்ட ஒரு காயம் மூளை வரை தொட்டுப்பார்த்து மூளைச் சாவடையச் செய்து...ஒரு உயிரை, ஒரு வாழ்க்கையை, ஒருவரின் கனவுகளை ஒரு கணத்தில் பறித்துச் செல்ல முடியுமெனில்....இங்கே என்ன அர்த்தம் இருக்க முடியும்...? இந்த வாழ்கையில் என்ன நிதர்சனம் இருக்கிறது....?

எனக்குள் எழுந்த கேள்விகளை எல்லாம் நீங்கள்தான் கேட்டுக் கொண்டிருந்தீர்கள் அப்பா....! நெஞ்சில் கை வைத்து எழுப்பினேன்..., கை பிடித்து கதறினேன், தலை தடவி உசுப்பினேன்...அப்பா...!!!! நீங்கள் ஆழமான உறக்கத்துக்கு சென்று விட்டிருந்தீர்கள் அப்பா....! இனி  எழமாட்டீர்கள் என்று புரிந்து கொண்டேன் அப்பா... 

இதோ எல்லாம் முடிந்து விட்டது. 

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் நான் பார்த்த அத்தனை உறவுகளும் உங்களை இறுதியாய் அனுப்ப வந்திருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கதை ஒரு அனுபவம்...ஒரு இக்கட்டான சூழல், அதில் உங்களின் உதவி என்று....நீங்கள் அதிர்ந்து கூட இதுவரை பேசி இருக்காத உங்களின் குணத்தைப் பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

மயானத்தில் விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டு உங்களின் அருகில் நான் மட்டும் தனியே நின்று கொண்டிருந்தேன் அப்பா.. எல்லோரும் பக்கத்தில் இருந்த குளக்கரையில் தம்பிகளுக்கு மொட்டை அடித்த இடத்த இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். எனக்கு ஏற்கெனவே மொட்டை அடித்து முடித்திருந்தார்கள். அந்த இரவு எட்டரை மணி...அந்த எரியூட்டு மேடை....உங்களுக்குப் பின்னால் இருந்த பெட்ரமாக்ஸ் வெளிச்சத்தில் உங்களின் முகம் பார்த்துக் கொண்டிருந்தேன்...நானும் நீங்களும் மட்டுமே இருந்தோம்.

" என்னைப் பெத்த அப்பா, என் உயிரே, என் செல்வமே....என் தெய்வமே....ஏம்பா...? ஏம்பா இப்டி...? எப்டிப்பா நீங்க சாகலாம்? ஏம்பா இப்டி நடந்துச்சு. ரோடு ஓரமா வண்டிய நிறுத்திட்டு இருக்கும் போது வந்து ஒரு வண்டி ஏம்பா மோதணும்...? என்ன நடந்துச்சுன்னே தெரியாதே அப்பா உங்களுக்கு..., ஒரு நிமிடம் எங்க வாழ்க்கைய தலை கீழா மாத்திடுச்சே அப்பா...அப்பா....அப்பா...."  உள்ளுக்குள் கதறிக் கொண்டிருந்தேன். நீதிகளும், கதைகளும், தத்துவங்களும், புரிதலும், தெளிவும்...நாய்க்குட்டியாய் எனக்குள் வால் சுருட்டிப் படுத்துக் கொள்ள எதோடும் தொடர்பு படுத்த முடியாத ஒரு உண்மை...என்னை எரித்துக் கொண்டிருந்தது.

யாரும் இங்கே யாருக்கும் ஆறுதல் சொல்ல முடியாது. வலியை வாங்கித்தான் ஆக வேண்டும். ஆறுதல்கள்..எல்லாம் மிகப்பெரிய இழப்பை சரி செய்ய முடியாது. நடு நெஞ்சில் கத்தி இறக்கிய காலத்தை நான் மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருந்தேன். பிரமாண்டமாய்  மீசை முறுக்கி என் முன் கலம் நின்றிருக்க...உங்களைப் பார்த்தேன்....

சலனமில்லாத உறக்கமாய் அது தெரிந்தது அப்பா...! நான் உங்கள் தலையில் கை வைத்து சிவபுராணம் சொன்னேன்....! ஆன்மா வேறு நிலைக்கு பயணித்திருக்கு தகவலை உங்களின் சூட்சும மனதிற்கு எடுத்து சொன்னேன். என்னால் அதற்கு மேல் அழ முடியவில்லை. அழவும் திரணி இல்லை. வாழ்க்கையில் எல்லாம் கற்றுக் கொடுத்திருந்த நீங்கள்...

மெளனமாய் மரணத்தைப் போதித்துக் கொண்டிருந்த கடைசி மணித்துளிகள் அவை.....! நான் கடைசியாய் உங்களின் அடர்த்தியான மீசையை முறுக்கிப் பார்த்தேன்....நான் கடைசியாய் உங்களின் நெஞ்சின் மீது என் கை வைத்துப் பார்த்தேன்....நான் கடைசியய் உங்களின் தலையில் கை வைத்து வருடினேன்....முகம் மட்டுமே தெரிந்திருக்க முகத்தோடு என் முகம் வைத்தேன்....., கடைசியாய் உங்கள் கன்னத்தில் என் உதடு பதிய அழுத்தமாய் முத்தமிட்டேன்...உங்களின் முகத்தோடு முகம் வைத்து வெகு நேரமிருந்தேன்..

எத்தனை இரவுகள் அப்பா...
உங்களை கட்டியணைத்து
உறங்கி இருப்பேன்...?
இதோ நான் கட்டியணைக்கும்
இந்த இரவொன்று...
கடைசி இரவென்று தன்னை
அறிவித்துக் கொள்கிறது அப்பா...

எத்தனை விசயங்களை
உச்சரித்த உதடுகள் அப்பா...
இதோ பேசுவதற்கு இனிமேல்
வாழ்க்கை மட்டுமே இருக்கிறது என்று..
அவை மூடிக் கொண்டன அப்பா...

கம்பீரத்தையும் கருணையும்
ஒன்றாக்கிய விழிகளப்பா உங்களது
இதோ இனி  பார்ப்பதற்கென்று
தனித்த விழியொன்றும் தேவையில்லை
என்று இமைகள் அடைத்து
இருள் உலகிற்குள் சென்று
வெளிச்சம் தேடிக் கொண்டிருக்கின்றன அப்பா...

எத்தனை கம்பீரமானவர் அப்பா...நீங்கள்..! அத்தனை கம்பீரத்தோடு இந்த வாழ்க்கையை விட்டு கம்பீரமாய் முறுக்கிய மீசையோடு சென்று விட்டீர்கள். கடைசிவரை யாரையும் எதிர்பார்க்காமல், நான் இருந்தேன்...நான் வாழ்ந்தேன்..நான் சென்றேன் என்று...உங்கள் இறுதி வரை வாழ்ந்து சென்று விட்டீர்கள் அப்பா....

இதோ மீண்டும் இந்த வாழ்க்கை எங்கள் முன் நின்று கொண்டு, எங்களிடம் ஏதேதோ நாடகம் ஆடுகிறது. நான் நிலையானவன் என்று மறுபடியும் மார் தட்டுகிறது. மீண்டும் ஏதேதோ தடுமாறல்கள், சறுக்கல்கள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் என்று இந்த வாழ்க்கை மீசை முறுக்குகிறது அப்பா....

அப்படியாய் வாழ்க்கை மீசை முறுக்குகையில் நீங்கள் வந்து என் மனக்கண் முன் உங்களின் கம்பீர மீசை முறுக்கி.....அற்ப வாழ்க்கை...பட்டும் படாமல் இருந்து வா என்று இப்போதும் அதட்டுகிறீர்கள்....

வாழ்க்கை முழுதும் இப்படி நீங்கள் வரப்போவது உறுதி அப்பா.....! 

இதோ கொஞ்ச காலம்...நாங்களும் வந்து விடுவோம்....உங்களை விட சிறந்தது என்று ஒன்றும் இல்லை இங்கே....! உங்களை விட அன்பு செய்ய யாரும் எமக்கு இங்கு இல்லை! உம்மை விட நேசம் கொண்டவர்கள் யாருமில்லை எம்மைச் சுற்றி...

இதோ கொஞ்ச காலம் வந்து விட்டோம்........அப்பா.. வந்து விட்டோம்....காத்திருங்கள்...! 





இப்படிக்கு
ப்ரியமுள்ள மகன்
தேவா சுப்பையா....




Viewing all 254 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>