Quantcast
Channel: Warrior
Viewing all 254 articles
Browse latest View live

ஒரு கலை படைப்பும் கமலஹாசனும்....!

$
0
0


இதுவரை பேசப்பட்ட, பேசப்படும், பேசப்பட போகும் எல்லா விமர்சனங்களையும் விசயத்தை உள்வாங்கிக் கொள்ளும்  பாத்திரத்தின் தன்மையாய் கருதி அதன் முரண்களை என் நினைவுகளுக்குள் இருந்து அழித்துக் கொள்கிறேன். இப்போதுதான் பூத்த ஒரு முல்லைப் பூவைப் போல பளிச்சென்ற.. தன் வெண்ணிறம் காட்டி வாசனையாய் எனக்குள் பரவிக்கிடக்கிறது ஒரு அற்புத கலைஞனின் கலைப் பொக்கிஷம்.

ஒட்டு மொத்த கலைப்படைப்பின் தாக்கத்தையும் எழுத்தாக்கும் பாக்கியம் ஒன்று எனக்கும் அருளப்பட்டிருக்கிறது. ஒரு தலை சிறந்த புத்தகத்தை சட்டென்று வாசித்து முடித்து விட்டால் அது சீக்கிரம் முடிந்து போகுமே என்று பக்கம், பக்கமாய் வாசித்து ஒவ்வொரு பக்கத்திலும் லயித்து, அது கொடுக்கும் பிரம்மாண்ட பிரளயத்தை ஒத்த அனுபவத்தில் திளைத்து, திளைத்து ஊறிக் கிடந்து மெல்ல கண் விழித்து கிறக்கமாய்  உலகோடு இருக்கும் பொருளாதாய நினைவுகளை விட்டு நகர்ந்து.....

தக தக தக
தின தின தின
நக நக நக

திகிட தான தான தான
திகிட திகிட தாக்கின தான
தாக்குட தான
திக்கிட்டு தாக்கத்தா தி தி தி
தான தானகின்
தடானு தான தானகின்
தலானு தான தானகின்
தலானு

என்பது போன்ற அருவியாய் விழும் ஜதியின் ஏற்ற இறக்கங்களில் பயணித்து ஆக்ரோசமான நீரின் சுழற்சிக்குள் முங்கித் திளைத்து எழுவது போல எழுந்து அந்த நீரின் குளிர்ச்சியில் உடலோடு சேர்ந்து புத்தியும் குளிர்ந்து கிடக்க..., வாழ்க்கையின் கன பரிமாணங்களை அந்தப் படைப்பு நமக்குள் மென்மையான மயிலிறகால் வருடுவது போல வருடிக் கொடுத்து ஏதேதோ பாடம் சொல்லும் போது...

பூரணத்தின் முழுமையில் எதுவுமில்லாத ஒன்றைத் தொட்டு தடவி சூட்சுமமாய் உணர்ந்து வெறுமையில் கிடந்து, இறை என்னும் விசயத்தை ஒரு நபராக உணராமல் பிரபஞ்சத்தில் பரவிக் கிடக்கும் எல்லாமாக உணர முற்படும் வினாடிகளுக்கு முன்பு, அதாவது ஆழமான நீரின் ஆழத்தில் எங்கே தரை.. எங்கே தரை... எங்கே இதன் முழுமை, எங்கே எங்கே என்று லயித்து தரை தேடிச் சென்று தரையை முழுமையாய் தொட முயலும் போது நீரானது மீண்டும் மேலே இழுக்க நடு விரலை ஆழத்தில் வெகு ஆழத்தில் இருக்கும் அந்த தரையின் மீது அழுத்தமாய் கீறிய படியே முழுதுமாய் தொட்டு கை பதித்தும் பதிக்க முடியாமல்  மீண்டும் மேலெழும்பி நீரின் மேற்பரப்பை நோக்கி எம்பி வருவோமே... அல்லது நம்மை உந்தித் தள்ளுமே ஒரு சக்தி...

அப்படியான ஒரு மத்திம நிலையில் இப்போது மேலெழும்பிக் கொண்டிருக்கிறேன் நான். 

இறைவன் என்று தனித்து ஒன்றும் இல்லை... இருப்பது எல்லாமே இறைதான் என்று உணர்ந்து சூன்யத்தை சுகித்து வெறுமைக்குள் செல்லும் முன்பு மீண்டும் பக்தி என்னும் வாழ்வியல் அர்த்ததிற்குள் உங்களை ஒரு பாடல் தள்ளிச் செல்ல முடியுமா? கதையையும், திரைப்படத்தின் அடிப்படையையும் பற்றி வேறு ஒரு சூழலில் நாம் பேசலாம்... ஏனென்றால் விசுவரூபம் என்னும் திரைப்படம் மிக அழகான ஆழமான ஒரு கலைப்படைப்பு. மேலோட்டமாய் அங்கே விளங்கிக் கொள்ள ஒன்றுமே இல்லை...

லியானர்டோவின் ஓவியம் போல அத்தனை ரகசியங்களையும் சூட்சுமங்களையும் ஒவ்வொரு காட்சியிலும் கமல் நிரப்பி இருக்கிறார். நியூட் ஐஸ் எனப்படும் சாதரண விழிகளுக்கு அவை புலப்படாமல் போனதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.  திரைப்படத்தின் ஆரம்பகட்ட காட்சிகளில் தோன்றும் அந்த கதக் மாஸ்டர் கமல்ஹாசன் அந்த கேரக்டரை, அந்த கருவை வைத்தே முழு நீளப்படத்தை எடுத்திருந்து இருக்கலாம் என்ற ஏக்கம் எனக்குத் தோன்றியது ஏனென்றால் அவ்வளவு நளினமானது அந்தப் பாத்திரம். நளினம் என்பது பெண்ணிற்கு மட்டுமே உரித்தான ஒரு இயல்பு அல்ல. அது அழகுணர்ச்சியின் மிகுதி. கூடலின் உச்சம். கலையின் சிகரம்.

எல்லா கலை படைப்புகளின் உச்சத்திலும் ஒரு நளினம் வெட்கத்தோடு எட்டிப்பார்ப்பதை புலனுணர்வு கடந்து பார்ப்பவர்களால் மட்டுமே உணர முடியும். ஒரு சிலையாகட்டும், ஒரு மலையாகட்டும், கதையாகட்டும், கவிதையாகட்டும், கட்டுரையாகட்டும், பாடலாகட்டும்......... அந்த படைப்பு உச்சம் தொடும் போது ஒரு வித பெண்மை என்று நாம் அறிந்து வைத்துள்ள அந்த இயல்பின் உச்சம் நளினம் என்னும் தெய்வீகத்துடன் எட்டிப்பார்க்கும்.

ஒரு பாடலில் கதக் ஆசிரியராக வருவதற்காய் பிர்ஜு மகராஜிடம் பயின்று அதை நடனம் மட்டுமில்லாமல், உடல் அசைவுகள், பேசும் வார்த்தையின் ஏற்ற இறக்கங்கள் என்று எல்லாவற்றிலும் பிரதிபலித்து மிரட்டு மிரட்டு என்று மிரட்டும் அற்புதக் கலைஞன் கமலை பார்த்து ஆனந்தக் கண்ணீர் மட்டுமே எனக்கு வந்தது. அப்போது விவரிக்க வர்த்தைகள் இல்லை என்னிடம். அர்ப்பணிப்பு என்னும் வார்த்தை வீரியத்தின் ஆழத்தை யாரும் அவ்வளவாக விளங்கிக் கொள்வதே இல்லை. முழுதுமாய் நம்மை அர்ப்பணிக்கும் போது நாம் எதுவாக விரும்புகிறோமோ அதுவாகவே மாறிவிடுகிறோம். 

முழுமையான அர்ப்பணிப்பு என்பது சலனமில்லாத ஆழ்மனதில் இருந்தே பிறக்கிறது. யாதொரு எண்ணக் குறுக்கீடுகளும் இல்லாமல்...கூர்மையான வாளினைப்  போன்று அந்த அர்ப்பணிப்பு அற்புதக் கலைப் படைப்பாய் காண்பவர்களின் தெளிவிற்கு ஏற்றார் போல நடு நெஞ்சில் ஆழமாய் இறங்குகிறது. என்னைப் பொறுத்தவரை இசையமைப்பாளரின் அற்புதமான மெட்டோடு 

" உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேரில்லையே……………" 

என்று பாடி, ஆடி, கமல் என்னும் கலைஞன் என்னை கொன்றேதான் போட்டு விட்டான். கதையைச் சொல்லும் கலையே கதக் ஆகிப்போனதாக நான் வாசித்து இருக்கிறேன். உணர்ச்சிகளுடன் வார்த்தையின் ஏற்ற இறக்கங்களில் கதை சொல்வது எல்லோராலும் முடியும்... ஆனால் உணர்ச்சிகள் மிகுந்த ஒரு கதையை உணர்வுக்குள் திரட்டிச் சென்று அதை உள்வாங்கி உடல் மொழியால் சிறிதும் அதன் இயல்பு கெடாமல் வெளிப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல. விழிகளும், விரல்களும் தனது அசைவுகளால் ஏதேதோ சொல்ல முகத்தினை சுருக்கி, விரித்து, கோணல் மாணல்களாய் அழுகையையும், சிரிப்பையும், காதலையும், விரக்தியையும் குழந்தைக்கு சோறு பிசைந்து ஊட்டி விடும் ஒரு தாயைப் போல  வாஞ்சையாய் கொடுப்பது என்பதை தெய்வீகம் என்றுதானே நாம் சொல்ல முடியும்...?

பிர்ஜு மகராஜிடமிருந்து உள்வாங்கி அதை நமக்கு படைத்தளித்திருக்கும் கமலஹாசன் மட்டுமில்லை  இங்கே.... அந்த நடனத்திற்கு பாடல் எழுதிய பாடலாசிரியார் கமலஹாசன் கூட உண்டு....

" நிதம் காண்கின்ற வான்கூட நிஜமல்ல...
இதம் சேர்க்கும் கனா கூட சுகமல்ல...
நீ இல்லாமல் நான் இல்லையே..." 

கமல் ஏக்கமாய் வெளிப்படுத்தும் அத்தனை உணர்வுகளிலும் புரிதலோடு அதைக் காணும் அத்தனை பேரும் ராதையாகிப் போக கண்ணண் உங்களுக்கும் எனக்கும் காதலனாகிப் போகிறான். சராசரி மனிதன் அல்ல என்னுடைய காதலன் அவனே எனக்கு கடவுள், அவனைக் காண்பதே எனக்கு சுகம்...அவனோடு கை கோர்த்துக் கொண்டு நடப்பதே இன்பம், அவன் இல்லாத பொழுதுகளில் அவனுக்காய் ஏங்கிக் கிடப்பது இன்னும் சுகம்...

நான் உன் மீது காதல் வயப்பட்டிருக்கிறேன் கண்ணா... ! என்னை உன் அன்பால் நிரப்பு...உன்  காதலால் என்னை திக்கு முக்காடச் செய்..., ஏதேதோ கதைகள் சொல்..., அதி நவநீதா, அபிநய ராஜா, கோகுல பாலா, கோடி பிரகாஷா, விரக, நரக, ஸ்ரீ ரக்க்ஷகமலா, என் கண்ணா.. நான் எத்தனை முறை நான் ஏங்கிச் சாவேன் ? இத்தவணை என்னை ஆட்கொள்வாயா...? என்று கேள்விகள் கேட்டு...

ஒரு சரணாகதிக்கு காத்திருக்கும் அவஸ்தையை வரிகளில் கொண்டு வந்திருக்கும் கமல் உங்களுக்கு ஜீனியஸாகத் தெரியவில்லை என்றால் நான் என்னைப் பைத்தியக்காரன் என்று அறிவித்துக் கொள்வதை பெருமையாக நினைக்கிறேன். 

"அவ்வாறு நோக்கினால்.. 
நான் எவ்வாறு நாணுவேன்..?
கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டே..."

காதலை உடலுக்குள் ஏந்தித் திரிந்த அத்தனை பேருக்கும் தெரியும் தத்தமது வீட்டு நிலைக்கண்ணாடிகள் எவ்வளவு சந்தோசத்தைக் கொடுத்திருக்கும் என்பது....ஆணாய் இருந்தாலும் சரி பெண்ணாய் இருந்தாலும் சரி.. தத்தமது காதலனையோ காதலியையோ... காண்பிக்கப்போகும் முகபாவங்களை கண்ணாடி முன் நின்று முகத்தை கோணி, கோபித்து, உதடு பிதுக்கி, கண்கள் இடுக்கி, புருவம் உயர்த்தி எத்தனை அபிநயம் பிடித்திருப்போம்....?

முழுமையான ஒரு பாடலை  நமக்கெல்லாம் மிகப்பெரிய அனுபவமாக்கி இருக்கும் கமலை மாயக்காரன் என்றுதான் சொல்ல வேண்டும். 

ஆமாம்...

ஒரே ஒரு பாடலின் மூலம் அத்தனை பேரையும் பெண்களாக்கி, கண்ணனுக்காய் ஏங்கும் காதலிகளாய் ஆக்கிவிட்டானே அந்த பொல்லாதவன்.....அவனை மாயக்காரன் என்று சொல்லாமல்.... பின் எப்படிச் சொல்வதாம்...?

" இது நேராமலே நான் -
உன்னை பாராமலே நான்
இந்த முழு ஜென்மம் போய் இருந்தால்
…………………….
என்று அதை எண்ணி வீண் ஏக்கம்
ஏங்காமலே உன்னை மூச்சாக்கி
வாழ்வேனடா...."


ஹேட்ஸ் அப் கமல்!!!!!!


தேவா. S




ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே!

$
0
0


காதலிக்கும் அத்தனை பேரும் ஒரு ஆணின் வடிவிலும் பெண்ணின் வடிவிலும் அந்த அற்புத சக்தியை உணர்ந்திருக்கும் போது காதலர் தினம் கொண்டாடி விட்டுததான் போகட்டுமே... என்று நான் சொல்லி முடித்த மூன்றாவது விநாடியில் உங்களுக்குப் பிள்ளைகள் இருந்தால் அவர்களை காதலிக்க விடுவீர்களா? அவர்களின் காதலை ஆதரிப்பீர்களா என்று முன்னூறு உதடுகள் என்னைச் சுற்றி  முணு முணுப்பதின் பின்னணியில்... ஐயம் அக்மார்க் க்ளியர் பெர்சனாலிட்டி என்று விளம்பரம் செய்து கொள்ள முனையும் மனோபாவம் இருப்பது எனக்கு தெரியாமலில்லை..

காதலை ஏதாவது செய்து தடுத்து விடலாம் என்று நினைக்கிறீர்களா? தடுத்து நின்று விட்டால் அது எப்படி சார் காதல் ஆகும்..? இப்போது யாரும் காதலிப்பதில்லை அது வெறும் காமத்திற்கான முன்னேற்பாடுதான் என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே... உங்களின் எனதின்  காதல் புகைவண்டிகள் காம ஊருக்குள் செல்லாமல் தான் பயணித்தது என்பதை உறுதி செய்து கொள்ளவும் வேண்டியிருக்கிறது. முத்தமிடுதலை ரகசியமாய், கலவரத்தோடு நாம் செய்யும் போது சாதாரண முத்தமிடுதல் கூட காமத்தின் உச்சமாய் பார்க்கப்படுகிறது நம்மால்...

காமமே பொதுப்படையாக சொல்லிக் கொடுக்கப்படவேண்டும் என்ற புரிதலை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கையில் நீங்கள் காதலர் தினம் கொண்டாட வேண்டாம் என்று சொல்வது எப்படி சரி..? வேண்டுமென்றால் எப்படி காதலர் தினம் கொண்டாடுவது என்று கற்றுக் கொடுங்கள்... என்று நான் சொல்வதும் உங்களுக்கு சரிப்பட்டு வராது, ஏனென்றால் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொடுக்க அதன் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும்தானே...? காதல் என்று சொல்லவே கூச்சப்படும் நமக்கு எப்படி காதல் தெரியும்..? இப்போது  கூட நான் காதல் ... காதல் .. காதல் என்று சொல்லிக் கொண்டிருக்கையில் பலரின் தலைக்குள் காமம்.. காமம்.. காமம்.... என்றே பலமாய் ஒலித்துக் கொண்டிருக்கும்.

கற்றுக் கொடுக்க அடிப்படையில் ஒரு புரிதல் வேண்டும் ஆனால் மறுப்பதற்கு எந்தவித அறிவும் தேவையில்லை. ஒரு விசயத்தை மறுக்க நீங்கள் அந்த விசயத்தில் எக்ஸ்பர்ட்டாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் இருக்கும் முரண்கள் மட்டுமே போதும். இறுக காதுகளை பொத்திக் கொண்டு.. நீ சொல்வதை நான் கேட்க மாட்டேன்..... உன் வார்த்தைகளைக் கடந்து உன்னை நான் உற்று நோக்கமாட்டேன்.. நான் ஒரு வட்டத்திற்குள் சுற்றி வரும் வண்டு... இப்படியே பேசிப் பேசி மூர்க்கமாய் பொதுவில் மறுத்ததையெல்லாம் கள்ளத்தனமாய் யாரும் காணாவண்ணம் செய்து விட்டு....

அமர்க்களமாய் ஒரு நாள் செத்துப் போய்விடலாம் என்ற பிடிவாதம் நமக்கு. ஒரு பெண் ஆணை காதலிப்பதையும், ஆண் பெண்ணை காதலிப்பதையும் அடிப்படையில் இங்கே மதத்தை இறுக்கமாய் கட்டிக் கொண்டு ஒழுக்க நெறிகளைப் பற்றி பேசுபவர்கள் வேகமாய் மறுக்கிறார்கள். காதல் என்பது காலை 7:30ல் இருந்து 9:40க்குள்  ஒரு ஸ்விட்ச் போட்ட உடனே வரவேண்டும்...ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டால் போய்விட வேண்டும் என்னும் ரீதியில் காதலுக்கு வரையறை கொடுப்பவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது.......!

இன்னும் சொல்லப்போனால் காதல் என்பது இவர்களின் பாஷையில் சர்வ நிச்சயமாய் ஆண், பெண் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல.. இந்த ஆணுக்கு இந்த பெண்ணிடம் மட்டுமே வரவேண்டும் என்ற கொள்கை வேலிகளை போட்டுக் கொண்டதும் கூட. காதலை காதலாய் கொண்டிருந்தால் இந்த கொள்கை வேலிகளும் கட்டுப்பாடுகளும் தேவையற்றது என்பதை இவர்கள் ஒரு போதும் உணர்ந்திருக்கவில்லை...

ஏனென்றால் இவர்களின் காதல் புலிப்பாய்ச்சலில் ஒரு கணத்திற்குள் காமத்தை எட்டிப்பிடிக்கும் பிண்டங்கள் தழுவும் காமத்தை பறிறியே எப்போதும் சிந்திக்கிறது. காதலை உணர்வாய் உள்ளுக்குள் தேக்கி வைத்திருக்க இவர்களுக்குத் தெரியாது. நேசிக்க இவர்களுக்கு இவர்கள் சொல்படி கேட்கும் ஒரு பொம்மை ஒன்று எதிரே இருக்கவேண்டும். அந்த பொம்மை இவர்கள் சொல்படி மட்டுமே கேட்கவேண்டும்.. அந்த பொம்மை சொல்வதை இவர்கள் கேட்பதாய் உறுதியும் செய்து கொள்வார்கள்.

அவ்வளவுதான் காதல்...முடிந்து போயிற்று...! ஒருவரை ஒருவர் இரும்புச் சங்கிலியால் பிணைத்துக் கொண்டு நிபந்தனைக் கத்தியை ஒருவர் கழுத்தில் ஒருவர் வைத்துக் என்னை உனக்குப் பிடித்தால் உன்னையும் எனக்குப் பிடிக்கும். உன்னை எனக்கு பிடிக்க வேண்டுமெனில் நீ நான் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும் என்று மாறி மாறி சுயத்தை அழித்துக் கொள்ளும் செயல்தான் இங்கே காதல் என்று பெரும்பாலும் அறியப்படுகிறது.

எனது பருவத்தில் எனக்குள் எட்டிப்பார்த்த காதலை முடக்கிப் போட்டது என்னைச் சுற்றியிருந்த சூழல்தானே அன்றி காதல் ஒன்றும் புரிதலோடு யாரோ தடுத்ததால் மடங்கிக் கொள்ளவில்லை. ஆணும் பெண்ணும் காதலிப்பதை தவறென்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்த சமூகத்தின் இலக்கியங்கள் எல்லாம் திளைக்கத் திளைக்க காதலைப் பற்றி நிறையவே பேசி இருக்கின்றன. அறிவு சார்ந்து காதலை வகைப்படுத்தி முன்னெடுத்துச் செல்ல வழிகாட்ட வக்கற்ற மூத்த சமூகம்தான் இன்று காதலை தவறென்று கற்பித்து, காதலுக்கு என்று ஒரு தினம் வைத்து கொண்டாடுவது பெருங்குற்றம் என்று கொடிபிடித்து  அதை எரித்துப் போட முயலுகிறது.

திருமணம் என்னும் பந்தம் புனிதமானது என்று சொல்லி நாம் நிறுவ காலம் காலமாய் முயன்று கொண்டிருக்கிறோம் ஆனால் சமீபத்திய "சொல்வதெல்லாம் உண்மை" போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வெளிச்சத்தில் நமது சமூகத்தினூடே இருக்கும் அழுக்குகள் வெளியே தெரியவும் தொடங்கிருக்கின்றன. நீங்கள் காதலிப்பது தவறென்று கூறி பக்குவமற்ற சில கதைகளை என்னிடம் படித்துக்காட்ட முயன்றால்.... உங்களின்  சோ கால்ட் புனித வரலாறுகளைப் பற்றியும் நான் பேசலாமா என்று உங்களிடம் அனுமதி கேட்கவும் கூடும்...! மாட்சிமை பொருந்திய என் சமூகம் காதலை குறைந்த பட்சம் ஆண் பெண் நேசித்தலுக்காய் ஒரு தினத்தை தேர்ந்தெடுத்து கொண்டாடுகிறதே என்று சந்தோசப் படாமல் அதை அடக்க நினைப்பது எந்த வகையில் சரி...? 

நான் காதலர் தினத்தை தினமும் கொண்டாடுவதுண்டு. சிலேட்டில் அனா...ஆவன்னா.. என்று எழுதிப் பழகுவது போல முன்னொரு காலத்தில் யாரோ ஒரு பெண்ணுக்காய் எனக்குள் குடி கொண்டிருந்த காதல்  காலப்போக்கில் தனது சுயரூபத்தை எனக்கு  காட்ட ஆரம்பித்தது.

அப்புறமென்ன... தூளியில் எத்தனை நாள் குழந்தையைப் போடுவீர்கள்....? எத்தனை  நாள் தான் பெரு மரமொன்று சிறு தொட்டியில் செடியாகவே இருக்க முடியும்..? ஒரு தருணத்தில் கட்டுக்கள் உடைந்துதானே போகவேண்டும்...? தொட்டிகள் எல்லாம் உடைந்து செடி மண்ணில் வேர்பதித்து பரவி நீரினை உறிஞ்சி, கிளைகளோடும், இலைகளோடும் பூத்து, குலுங்கி, வழிப்போக்கர்களுக்கு நிழல் கொடுத்து, பழம் கொடுத்து, பறவைகளுக்கு வசிப்பிடமாகி....

பிரமாண்டப்பட்டுப் போகும் நிலை அது. முதலில் பாலினம் கடந்து,  பின் மனிதம் கடந்து, விலங்குகளையும், பறவைகளையும், சிலையான கடவுளர்களையும் விட்டு நகர்ந்து, பின் உருவம் கடந்து....இயற்கையை உணர்வால் நேசிக்கத் தொடங்கிய நொடியில் காதலின் கன பரிமாணங்கள் எனக்குள் பூ பூக்கத் தொடங்கி இருந்தன 

இங்கே காதலை ஆண்கள் பெண்களிடமும், பெண்கள் ஆண்களிடமும், இன்னும் அதிகபட்சமாய் பிள்ளைகளிடமும், உறவுகளிடம் மட்டுமே எதிர்பார்த்து ஏமாந்து போகிறார்கள். கடைசிவரை இவர்களின் காதல் வளர்ந்தும் தொட்டிலில்  கிடந்து அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறது. காதல் என்பதின் அடிப்படை நேசித்தல். அந்த நேசித்தலை ஒரு ஆண் பெண்ணிடமும் பெண் ஆணிடமும் தான் இயற்கையின் படி முதலில் தொடங்க வேண்டும். காதல் என்பது பிரபஞ்சத்தின் ஆதி உணர்வு. தன்னை தானாய் வெளிப்படுத்திக் காணவேண்டியே பெருங்காதலில் பல்கிப் பெருகியது இந்தப் பிரபஞ்சம்.

அண்ட சராசரமும் விவரிக்க முடியாத ஒரு பிணைப்பினால் இணைக்கப்பட்டிருக்கிறது. இங்கே காதலை ஏற்றுக் கொள்ளும் நவீனத்தின் சிற்பிகளில் பலர் தங்களின் முக்காலே மூணே இஞ்ச்  கட்டுக்குள் காதலை வைத்து கொள்ளச் சொல்கிறார்கள்...! கட்டுக்குள் இருப்பது காதலைப் போன்ற ஒன்றாய்த்தான் இருக்க முடிமே இன்றி சர்வ நிச்சயமாய் அது காதலாய் இருக்க முடியாது. நான் காதலால் நிரம்பி வழிகிறேன் என்று சொல்லும் என் கலாச்சார காதலர்களே...

காதலர் தினத்து  அன்றாவது உங்கள் காதல் உங்களின் அவளை நேசிப்பது அவளின் சுதந்திரத்தை பூரணமாக்குவது என்று உறுதி பூணுங்கள்...

எப்போதும் தத்தமது காதலனை தன் சொற்படி கேட்டு நடக்க வைப்பதில்தான் உங்களின் காதல் வெற்றி பெறும் என்று நினைத்து அதற்கான யுத்திகளை கையாளுவதை விட்டு விட்டு உங்கள் அவனின் ப்ரியங்களை கண்ணியப்படுத்துங்கள்...

காதலை எப்போதும் மனதிலே சுமந்து, சுமந்து ஏதோ ஒரு உருவத்திடம் பயிற்சி எடுத்து, உருவம் தொலைக்கும் விசுவரூபத்திற்குள் நுழையுங்கள். காலங்களாய் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நதியின் ஓட்டத்தை ப்ரியமாய் உள்வாங்கப் பழகுங்கள். எப்போதும் நமது வாழ்க்கையின் ஜீவனாய் இருக்கும்  சூரியனை காணவில்லையே  என்று இரவு முழுதும் படுக்கையில் புரண்டு புரண்டு உறக்கம் தொலையுங்கள்...

அதிகாலையில் சூரியனின் வரவுக்காய் இருளோடு இருளாய் எதிர்பார்த்து காத்திருங்கள்....வெளிச்சமாய் அவன் மேல் எழும்பி வருகையில் பெருகி வரும் கண்ணீரை காதலாக்கி ஆனந்தமாய் அழுது தீருங்கள்...

அடர் பனி நாளொன்றில் வீசும் குளிரோடு காது மறைத்துக் கொண்டு ஏதேனும் ரகசியங்கள் பேசுங்கள்... நாளை இரவும் நீ வருவாயா என்று கிசுகிசுப்பாய் நிலவிடம் கேட்டு வராத பதிலை மெளனமாக்கி அந்த சம்மதத்தை கவிதையாக்கி காகிதத்தோடு கரைந்து கிடங்கள்...

விடியலில் வாசல் மறித்து நிற்கும் ஒரு பூனையையும், நாயையும் கண்டு ஒதுங்கிச் செல்லாமல்.... ஹவ் ஆர் யூ டுடே..? என்று கண்கள் பார்த்து காதலாய் கேளுங்கள்....உங்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால் அவை தங்களின் காதலை ஏதேனும் ஒரு சப்தமெழுப்பி காட்டவும் கூட செய்யலாம்....; வாரத்தில் ஒரு நாளில் பறவைகள் சூழ்ந்த மரமொன்றுக்கு தனியே செல்லுங்கள்...உங்கள் ப்ரியத்தை மெளனமாக்கி பரவச் செய்து அங்கே பேசிக் கொண்டிருக்கும் பறவைகளின் மொழியோடு கரைந்தும் போங்கள்....

இப்படியெல்லாம் நீங்கள் மாற வேண்டுமெனில் முதலில் யாரையாவது முழுமையாய் காதலியுங்கள். முழுமையில் அங்கே சரணாகதி ஒன்று நிகழ....நான் என்னும் ஆணவம் அழிந்து போகிறது. ஆணவம் அழிந்து போக எதிரே இருப்பவரால் என்ன ஆதாயம் என்று கள்ளக் கணக்குகள் போடாமல் நேசிக்க முடிகிறது.

"காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்
கானமுண்டாம்; சிற்ப முதற் கலைகளுண்டாம்
ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே! "

- பாரதி


அதனால் காதலை தினமும் கொண்டாடுங்கள்... காதலர் தினத்தை அதன் அடையாள தினமாக கொள்ளுங்கள்...!


தேவா. S






நீ காத்திருக்கலாம்..!

$
0
0


நீ காத்திருக்கலாம்..
கடைசி பேருந்துக்காய்..
பின்னிரவில் காத்திருக்கும்....
ஒரு பயணியைப் போல
இதுவரையில் நான் எழுதாத
உனக்கான கவிதைக்காக...;
நானும் உனக்காக ஒரு கவிதையை
எழுதி அனுப்பிவிட்டு
என் காதலை உறுதிப்படுத்தவும் கூட...
செய்யலாம்...,
ஆனால்...
எதுவமற்று இருக்கையில்
எதிர்ப்பார்ப்புகளோடு
நகரும் இந்த கனத்த நிமிடங்களை...
யார்தான் மீட்டெடுத்துக் கொடுக்க முடியும்..?


தேவா. S



சாத்திரம் பேசுகிறாய்....கண்ணம்மா...!

$
0
0


எல்லாக் கதைகளும் மழையில் அழிந்த அலங்காரக் கோலங்கள் போல காணாமல் போய்விடுகின்றன. வாசம் வீசும் மல்லிகையின் நறுமணத்தை காற்று எப்போதும் களவாடிச் சென்று விடுகிறது. தெருக்களில் ஊர்ந்து செல்லும் எறும்புகளின் வாழ்க்கையிலும் காமமுண்டு, பசி உண்டு, இருப்பிடமுண்டு.... கோபமுண்டு... என்று அறிந்த பொழுதில் இங்கே நமக்கென்று விதிக்கப்பட்டதை விஸ்தரித்துப் பார்த்து அர்த்தம் கொள்வது அறியாமைதானே...?

யோசித்தபடியே...

பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான்.  இருவரின் உடலுக்குள்ளும் காமம் கிளர்ந்தெழுந்து உஷ்ணமாய் இருந்த அந்தச் சூழலில் இருவருக்குமே இந்த உலகத்தைப் பற்றிய கவலை ஏதுமில்லாமல் இருந்தது. கட்டுப்பாடுகளை எங்களுக்குள் பரவி இருந்த தீ எரித்துக் கொண்டிருக்க..காதலை இங்கே வகைப்படுத்தத் தெரியாத ஒரு நிதானம் எங்கள் நிர்வாணத்தில் ஒளிந்து கொண்டிருந்தது.

பனியனைக் கழட்டுடா...என்று "ட்டுடா" விற்கு அவள் கொடுத்த அழுத்ததிற்கு பின்னால் ஒரு நாவல் எழுதுமளவிற்கு காமம் மிகுந்து கிடந்தது. அவள் சிணுங்கிக் கொண்டே பனியனைப் பிடித்து இழுத்தாள்.....

முழு நிர்வாணம் என்பது கருத்துக்கள் அற்ற நிலை. நிறமற்ற வர்ணக் கூட்டு அது. புத்திகளை எரித்து விட்டு ஞானக்குதிரையிலேறி ஐன்ஸ்டீனின் சார்புக்கொள்கையை மெய்ப்பிக்கும் உலகுக்குள் சப்தமற்ற பெரு இரைச்சலோடு நுழைவது. நிர்வாணத்தின் புனிதத்தை எடுத்துச் சொல்லத்தான் உடையற்று இருப்பதை நிர்வாணம் என்று ஆன்மீகம் சொல்லியிருக்குமோ..?

உடையற்று இருப்பதை அம்மணம் என்றும் சொல்லலாம். அம்மணம் என்று சொல்லும் போது மனதில் தோன்றும் ஒரு வக்ரம் நிர்வாணம் என்று சொல்லும் போது தோன்றுவதில்லை. எல்லா வார்த்தைகளுக்குமான காட்சி விரிவாக்கங்கள் நமது மூளையின் சேமிப்பு பகுதியில் நமது புரிதலுக்கு ஏற்ப சேமிக்கப்பட்டிருக்கிறது. வார்த்தைகளில், நாம் காணும் காட்சிகளில் பெரும்பாலும் தவறு இருப்பது இல்லை, அதை ஒப்பீடு செய்யும் நமது புரிதலே இது தவறு இது சரி என்று நமக்குச் சொல்கிறது. நிர்வாணம் என்பது சுதந்திரம். எதையும் கருத்தில் கொள்ளாத நிலை. மனம் நின்று போக செயல் மட்டுமே நிகழும் ஒரு புனிதம். காமத்தில் இது எளிதாய் பிடிபடும். காமம் கடந்தும் நிர்வாணமாய் இருக்க முடியும். உடை இல்லாத நிர்வாணம் என்பது ஒரு சூட்சும குறியீடு. ஆடை அணிகலன்களோடு, சக்கரவர்த்தியாய் ஒரு தேசத்தை கூடா நிர்வாண நிலையில் ஆட்சி செய்ய முடியும்.

நிர்வாணம் என்பது மனமற்ற இயக்கம். 

 கலவியின் போது உடையில்லாத உடல்கள் நிர்வாணம் என்றே அறியப்பட வேண்டும்.  ஆணும் பெண்ணும் உடையற்று உடலைப் பார்க்கும் போது..புத்திக்குள் பற்ற வைக்கப்படும் நெருப்பு பிரபஞ்சத்தின் ஆதியில் சலமனற்று இருந்த சூன்யத்தில் ஏற்பட்ட முதல் அசைவினை ஒத்தது. முதல் சலனம்.

இயக்க முரணில் ஒன்று இந்த திருமண பந்தம்....சரியா...?

பத்மா என் தோளில் கை போட்டு இறுக்கியபடியே என்னை உலுக்கினாள்...எனக்குள் சமூகம் விதைத்திருந்த குற்ற உணர்ச்சி மெல்ல எட்டிப்பார்த்தது..? நான் மெளனமாயிருந்தேன்...!

என்ன சுரேஷ்.. பேசாம இருக்க...?

அவள் முன் நகர்ந்து என்னை அழுத்தி உதடு கடித்துக் கேட்க....நாம தப்பு செய்றோமா..? பத்மா... சாரி சாரி நான்....தப்பு செய்றேனா...? தடுமாற்றமாய் புரண்டு படுத்து.....விட்டத்தைப் பார்த்தபடி பெருமூச்சு விட்ட போது என் மீது ஏறிப் படுத்துக் கொண்டாள் பத்மா...

" எங்கே உங்களின் அளவுகோல்கள்
சரியாய்ப் பிரிக்கின்றன...
காதலையும் காமத்தையும்...?
கோடரியின் முனையில் பட்டுத் தெறிக்கும்
மரமொன்று விறகென்று
எரியூட்டப்பட்ட பின்பு...
மரமுமில்லை..விறகுமில்லை...
சாம்பல் அல்லவோ மிச்சம்...
அங்கே...."

நீதானே கவிதை எழுதினாய்....? என்று என் நெஞ்சினில் தன் விரல்களால் எழுதிக் கொண்டே கேட்டது பத்மா. திருமணத்திற்கு முன் காமம் தவறென்று யார் சொன்னது....? திருமணம் என்பதே நம்பிக்கை இல்லாதவர்களின் ஏற்பாடுதானே..?

" கண்ணகிகள் கற்பு பற்றி பேசிப் பேசி..
திருமண பந்தத்துக்குள் தேடும் காமத்தை
மாதவிகள் காதலை மெளனித்து..மெளனித்து...
காமத்துக்குள் எரித்துப் போடுகிறார்கள்
கண்ணகிகளை....

சொல்லி விட்டு சப்தமாய் சிரித்த பத்மாவைப் பற்றி அதிகம் நீங்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது. ஏனென்றால் உங்களுக்குள் குடித்தனம் நடத்தும் கலாச்சார குட்டிச்சாத்தான்கள்.. கடவுள் வேசமிட்டுக் கொண்டு அவளின் குரல்வளையை நோக்கி வேகமாய் பாய்ந்து விடக்கூடும்....! நீங்கள் நியாங்களைப் பேசினால் அவள் இயல்புகளைப் பேசுவாள், நீங்கள் ஒழுக்கத்தைப் பேசினால் அவள் இயக்கத்தைப் பற்றி பேசுவாள். நீங்கள் சந்தோசத்துக்கு எல்லைகள் உண்டு என்றால் அவள் ஆர்க்கிமிடிஸாய் யுரேகாவின் உச்சம் தெருவில் அம்மண ஓட்டமானது தவறா என்று கேட்பாள். சரி தவறுகள் என்பது தனி மனித வசதிகள் என்று அவள் கூறுவதை நீங்களும் நானும் மறுக்கவே முடியாது. அதனால் அவளை கேள்விகள் கேட்டு அவளின் பதிலில் உங்களின் சுயத்தைப்பார்த்து நீங்கள் மூர்ச்சையாகாதீர்கள்.

திருமணம் என்பது 1000 பேரை அழைத்து எனக்கு நீ... உனக்கு நான் என்று உறுதி செய்து கொண்டு.. எல்லோர் முன்னாலும் இவன் என் கணவன், நான் இவனது மனைவி என்று கூவிக் கூவிச் சொல்லி விட்டு....நேரம், காலம் பார்த்து உடையவிழ்ப்பது...?

என்ன சரியா கவிஞரே....? பத்மா என்னை கேட்ட போது எனக்குச் சிரிப்பு வந்தது....

ஏண்டி லூசு...உன் அளவிற்கு எனக்கு எழுத வராது என்பதால் இப்படி ஒரு வஞ்சப்புகழ்ச்சியா..?

" கணிணி தட்டும்
உன் இயந்திர விரல்களில்
இருந்து
எப்படி பிறக்கிறது
இரத்தமும் சதையுமாய்
இத்தனை கவிதைகள்...? "

நான் ஆச்சர்யமாய் அவளிடம் பலமுறை கேட்டிருக்கிறேன்...! 

வலிகளோடு கூடி
வலிகளைச் சுமந்து
வலிகளோடு பிறக்கும்
வலிகள்தானே படைப்புகளென்பது....

என்று அவள் கூறிய போது அவளின் வலிகளின் உச்சத்திற்கு சாட்சியாய் வெளி வந்துள்ள அவளின் புத்தகங்கள் என் முன் காட்சிப்படுத்தப்பட்டு போகும். என்னால கல்யாணம் இப்போ பண்ணிக்க முடியாது பத்மா....நான் வாழ்க்கையில செட்டில் ஆகணுமே....? நீ கை நிறைய சம்பாரிக்கிறன்னு சொல்லி உன்னை கல்யாணம் பண்ணிட்டு  உன் காசுல எப்டி பத்மா நான் உக்காந்து சாப்பிடுறது....? தப்பு இல்லை...?போனவாரம் கூட ஒரு தயாரிப்பாளர்கிட்ட கதை சொல்லி இருக்கேன்...கண்டிப்பா எனக்கு ஒரு பிரேக் கிடைக்கும்...அப்புறமா...

என்று நான் சொல்லி ஜவ் மிட்டாயாய்  இழுத்துக் கொண்டிருக்கும் இந்த ஐந்து வருடத்தில்...கதை கேட்ட ஒருத்தன் கூட என்னை படமெடுக்க அழைக்கவில்லை. இந்த சமூகத்தில் திறமையாளர்கள் எல்லோருக்கும் எப்படி மார்க்கெட்டிங் செய்வது என்று தெரிவதில்லை. என் திறமை என்னை மேலேற்றும்...என்ற இறுமாப்பில் அவர்களின் முதுகுத் தண்டு நிமிர்ந்தே நிற்கிறது எப்போதும்.கூழைக்கும்பிடுகளும், வணிக ரீதியான உடன்பாடுகளுக்குள்ளும் அவர்கள் நுழைவதே....இல்லை...

கழுத்தில் கடித்தவளை இறுக்க அணைத்தேன்....விதி விலக்குகளை எல்லாம் கொண்ட வாழ்க்கையில் விட்டில் பூச்சியின் சிறு நெருப்பாய் காமம் கனன்று கொண்டிருக்க... அவளை இழுத்து உதட்டோடு உதடு பதித்தேன். சூழ்நிலைகளே இங்கே எல்லாவற்றுக்கும் காரணமாக,  விதிமுறைகள் எல்லாம் வெற்று மாயைகளாக கரைந்து போய்விடுகின்றன...

" என் ப்ரியங்களை எல்லாம்
இந்த வசந்தகாலம்தான்......
சுமந்து கொண்டு திரிகிறது....
அடர் வனத்தில் 
என் அன்பைத்தான்
எப்போதும்... 
கூவிக் கொண்டிருக்கிறது
அந்த ஒற்றைக் குயில்..." 

பத்மாவுக்குள் நானும் எனக்குள் பத்மாவும் கரைந்து கொண்டிருக்கையில்..எங்களின் நீண்ட பெரு மூச்சுக்கள்  அங்கே வேதம் ஓதிக் கொண்டிருந்தன. அக்னி சாட்சியாவது ஏன் என்பதற்கொரு விளக்கத்தை ஏந்திக் கொண்டு, மஞ்சள் கயிறுகளில் முடிச்சுடும் வைபவங்களில்தான் ஒளிந்திருக்கிறது புனிதம் என்று ஓதிய சாத்தானின் கொம்புகளை முறித்து கையில் வைத்துக் கொண்டு எங்களுக்காய் காவல் காத்துக் கொண்டிருக்கின்ற கடவுளை இன்னும் சற்று நேரத்தில் நாங்கள் எட்டிப் பிடிக்கக் கூடும்....

வியர்வையில் உடல் நனைய, உள்ளுக்குள் எரியும் அக்னி உஷ்ண மூச்சுக்காற்றாய்.... திக்குகள் கடந்து பயணித்துக் கொண்டிருந்த பெரும் பிரபஞ்ச வெளியில்....யாரோ ஒருவனின் ஈமச்சடங்கில் உடலில் பற்றிய நெருப்பு பொசுங்கலாய் பயணித்து அப்போதுதான் ஜனித்து வெளித் தள்ளப்பட்ட ஒரு சிசுவின் நாசியில் முதற்சுவாசமாய் ஏற....வீறிட்டு அழுத குழந்தை ஆணா பெண்ணா என்று பார்க்கிறாள் தாதியொருத்தி.....

பிரளயத்தின் உச்சத்தில் எல்லாம் ஒடுங்கும்; எல்லாம் அடங்கும்; பிரளயம் வெறி கொண்ட குதிரையாய் திமிறிக் கொண்டிருந்தது. சப்தநாடிகளும் நின்று போக அலறலாய் ஓடும் குதிரைகளின் கனைத்தல்  இன்னும் அதிகமாக,  உக்கிரமாய் அவற்றின் வயிறு உதைத்து பிடறி தடவி, வேகத்தைக் கூட்ட சீறிப்பாயும் குதிரையின் பாய்ச்சல் போதாதென்று அதன் கழுத்தைக் கடித்து....முதுகில் அறைந்து விரட்ட. விரட்ட...

தறிகெட்டோடும் குதிரையின் கடிவாளங்கள் இறுக்கி இறுக்கி அறுபட்டே போகும் நொடியில்...பெரும் கனைத்தலோடு....பெரும் பள்ளத்தாக்கில் சீற்றமாய் பாய.....

எல்லா சப்தங்களும் அடங்க,  யாருமற்ற மயானத்தில் படிந்து கிடக்கும் சூன்ய அமைதியில்...எல்லாம் உடைந்து விழ.....

உக்கிரகாமம் உடைந்து, நொறுங்கி வடிவிழந்து.....மொழியிழந்து... பொருள் இழந்து.... உருவமற்று.....

அருவத்தில் விசிறியடிக்கப்பட்ட....
வர்ணக் கலவையிலிருந்து
உயிர்  பெற்றுக் கொள்ளும்
ஓவியத்திலிருந்து 
மீட்டப்படும் யாழிலிருந்து
பிறக்கிறது 
ஒரு...ஜீவ இசை...!

அந்த ரீங்கார இசையில் நான்  அவளாயிருந்த நேரம் எவ்வளவு....? என்று கணக்கிடமுடியாமல்....நானும் பத்மாவும் தற்காலிகமாய் செத்துப் போயிருந்தோம்....!

என் வீட்டுப் படுக்கையறையும், நானும் பத்மாவும்....கலைந்து கிடந்தோம்;  செயற்கையின் முகத்திரைகள் கிழிந்து தொங்க எதார்த்தம் அங்கே ஆஜானுபாகுவாய் அமர்ந்திருந்தது. 


திருத்தம் அழகென்று
யார் சொன்னது...?
ஒழுங்குகள் என்னும்
ஒப்பனையிட்டுக் கொள்ளும்
பொய்கள்....
கலையும் போது
எட்டிப் பார்க்கும்..
ஒழுங்கற்றதில் இருக்கிறது...
எல்லோரும் தேடும் கடவுளின்
இயல்புகள்...!

காதுக்குள் கிசு கிசுத்தபடி...கலைந்து இருந்த தலை முடியை இறுக அள்ளிக் கட்டிக் கொண்டே என் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டவள்....

கல்யாணம் முடிஞ்சுடுச்சு....சீஃப்....கெட் அப்....!!!!!!

என்னை உலுக்கினாள்...!

கண் விழித்து அவளைப் பார்த்தேன்....

எழுந்து ப்ளேயரை தட்டி விட்டு...

"நெஞ்சு பொறு..., கொஞ்சமிரு......
தாவணி விசிறிகள் வீசுகிறேன்...............
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனைப் பூசுகிறேன்.............."

இசையை அறைக்குள் வழிய விட்டு விட்டு... உடை மாற்றியபடியே, கிச்சனுக்குள் சென்று நான்கு நிமிடத்தில் திரும்பி வந்தாள்...

இரண்டு கையிலும் சூடாய் காஃபி.... !!!! எழுந்து பெட்சீட்டால் சுற்றிக் கொண்டு  ஜன்னலோரமாய் இருந்த டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தேன்....எதிரே...பத்மா.....

சூடாய் காஃபியை உறிஞ்சிய போது அவளின் உதடுகள் என் நினைவுக்கு வந்தது....

"டேய் இன்னும் பத்து வருசம்னாலும் உனக்காக காத்து இருப்பேன்டா...  கல்யாணம்ன்றது வெறும் சடங்கு... பேருக்கு கல்யாணம் பண்ணிட்டு.... மனசுக்குள்ள ஆயிரம் பேரை நினைச்சுக்கிட்டு இருக்கறதுதான் கற்புன்னு இந்த சமூகம் சொன்னிச்சுனா....நான் கற்புக்கரசி இல்லப்பா..., அதுக்கு கல்யாணம் பண்ணிக்காமலேயே தாலின்னு ஒண்ணு கட்டிக்காமலேயே எனக்கு பிடிச்ச ஒண்ணோட இருந்துட்டு செத்துப் போக நான் ரெடி...." 

அவள் பேசி கொண்டிருந்தாள்...

சாத்திரம் பேசுகிறாய், - கண்ணம்மா!
சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே, - கண்ணம்மா!
சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோ டீ? - இதுபார்,
கன்னத்து முத்த மொன்று!

நான் பாரதியை புத்திக்குள் புரட்டிக் கொண்டிருந்தேன்....!


தேவா. S



ஈழப்படுகொலைகளும்....இந்தியாவின் கூட்டு மனசாட்சியும்...!

$
0
0


எதையும் இங்கே நிறுவி பேசுவது கடினமாக இருக்கிறது. எல்லா செய்திகளையுமே மேம்போக்காக பார்ப்பவர்களாகவும், பொழுது போக்குக்காய் பேசுபவர்களாகவுமே மிகையான பேர்கள் இருப்பதால் ஆழமான உட்விசயங்களில் இருக்கும் சத்தியங்கள் ஆழத்திலேயே செத்துப் போய்விடுகின்றன. நம்மைச் சுற்றி நிகழும் செயல்களின் சரி தவறுகளை ஆராய எதையும் சாராத மனோநிலையில் இருக்கவேண்டும்.

தூக்கு தண்டனைகள் தொடர்ச்சியாக நிறைவேறிக் கொண்டிருக்கும் ஒரு காலச்சூழலில் தூக்கு தண்டனைகள் கூடாது என்று சொல்லும் இடம் மிகப்பெரிய புரிதலோடு கூடிய தெளிவு நிலை. தண்டனையே வேண்டாம் என்பதுதான் தவறு. அதுவும் நமது தேசத்தில் விதிக்கப்படும் தூக்கு தண்டனைகள் வேடிக்கையானவை. பெரும்பாலும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை.

அஜ்மல் கசாப்பை தூக்கிலேற்றி விட்டதோடு தீவிரவாதத்தின் அடிவேரினை இந்திய தேசம் வேரறுத்து விட்டது என்று நீங்களும் நானும் நம்பிக்கொண்டு ஒரு சூப்பர் ஹீரோவாக இந்தச் செயலை செய்தவர்களை நாம் பார்க்கிறோம் அல்லவா? அஜ்மல் கசாப் இந்த தேசத்துக்குள் வந்து அத்தனை கொலைபாதகச் செயல்களையும் செய்ய காரணமாயிருந்தவர்கள் யார்? அந்த சம்பவத்தின் ஆணிவேர் என்ன என்று எல்லாம் இந்தியாவிற்கு தெரியாமலா இருக்கிறது?  இருப்பினும் பணத்திற்காய், இறைவனின் பெயரைச் சொல்லி அவனின் வறுமையை மூலதனமாக்கியவர்களுக்கு இரையாகிப் போன அஜ்மல் கசாப்....

படுகொலை செய்து அத்தனை பேரை கொன்ற போது ஒரு கொடூர மிருகமாய் தானிருந்தான். மிருகத்தை, கொடியவனை எதிரியை களத்திலேயே அழிப்பது போர் மரபு.. அங்கேயே அவன் சுடப்பட்டிருந்தால் மிருகத்தை கொன்றவர்களாயிருப்போம்...ஆனால் அவனை உயிரோடு பிடித்ததின் நோக்கம் அவன் எந்த அமைப்பைச் சார்ந்தவன்? யார் விட்ட அம்பு...? என்று அறியும் பொருட்டுதானே..? எல்லாம் அறிந்த பின்... தவறை உணர்ந்து கடைசிவரை ஏதோ ஒரு இருட்டு அறையில் தண்டனையாய் உயிரோடு வாழ ஆசைப்பட்டவனை நாம் தூக்கிலேற்றி விட்டோம். 

மிருகமாய் இந்தியாவிற்குள் வந்தவன் மனிதனாய் செத்துப் போனான்.

நூறு பேரைக் கொன்றவனைக் பிடித்து சித்திரவதைகள் செய்து விசயத்தை எல்லாம் கேட்டுக் கொண்டு அவனைக் கொல்லாமல் விட நாம் என்ன மடையர்களா? ரத்தத்துக்கு ரத்தம். பழிக்குப் பழி.. கொலைக்கு கொலை என்னும் நியாயத்தோடு அவனின் கல்லறையில் நீதி தேவதையை புன்னகைக்கச் செய்தோம்.

அம்பு செத்துப் போக எய்தவனை பற்றிய அக்கறை இல்லாமல் அண்டை நாட்டுடன் சுமூக உறவுக்காய் இன்னமும்  கொடுக்கும் அரசியலை யார் தூக்கில் போடுவது..? அஜ்மல்கசாப்பை கொன்றது நியாயம்தான் என்ற நமது கூட்டு மனசாட்சிக்கு இன்னும் அரிப்பெடுக்க...

அதை சரி செய்ய அப்சல் குருவின் மரணம் நமக்குத் தேவைப்பட்டது. அஜ்மல் கசாப்பை கண் எதிரே கண்டோம்...துப்பாக்கியோடு அவன் செய்த கொலைகள் அவனது தூக்கை நம்மிடம் நியாயப்படுத்தி இருந்தன, ஆனால் வாதாட வாய்ப்பளிக்கப்படாமல் செத்துப் போன அப்சல் குருவின் இன்னொரு பக்கத்தை, ஆங்கில நாளிதழுக்கு  அவர் கொடுத்திருந்த பேட்டியை படித்தபோது உணர முடிந்தது. அப்சல் குருவை தூக்கில் போட்டது சரி என்று என்னிடம் பேசிய அனேகர் அவரைப் பற்றிய முழுவிபரத்தையும் வாசிக்காதவர்களாகவே இருந்தார்கள். சரி தவறுகளை யார் முடிவு செய்கிறார்கள் நமது தேசத்தில்....? என்ற பயம் எனக்குள் ஏற்பட்டு...பலமிக்க அரசியல்வாதிகள் நினைத்தால் ஊடகங்களின் துணையோடு யாரை வேண்டுமானாலும் தீவிரவாதியாய் சித்தரித்து விடலாம்.. என்ற அச்சம் எனக்குள் தோன்றியது.

வழக்கறிஞர்கள் யாரும் வாதாட முன்வராமல், வழக்கினை ஏற்றவரும்...அழிச்சாட்டியமாய் விட்டு விட...இந்திய கூட்டு மனசாட்சி....மீண்டுமொரு கழுத்தை நெறித்து நீதியை நிறுவிக் கொண்டது.

என் தேசத்திற்கு ஊறு விளைவிக்கும் எவனொருவனையும்...விட்டு விடமாட்டேன் கொன்று போடுவேன்... என்பது நமது வீர மரபு. கொலைகள் யுத்தக் களத்தில் நிகழும் போது அது வீரமாகிறது. தண்டனைகள் என்ற பெயரில் பல வருடங்கள் கழித்து ஒருவனை சாகடித்து தேதி குறித்து விடியற்காலையில் கொல்லும் போது அது வக்கிரமாகிறது.

எந்த அநீதிக்கும் நான் நியாயம் கற்பிக்க இங்கே எழுதவில்லை. என் கேள்வி எல்லாம் நீதி என்பது மனிதர்களை செப்பனிடுவதற்கா இல்லை சாகடிப்பதற்கா?

இப்படி ஒரு மனோநிலையில் நான் எழுதினாலும்....டெல்லி கற்பழிப்பு வழக்கில் பிடிபட்டு இருப்பவர்களை அந்தப் பெண் இறந்த அன்றே தூக்கில் போட்டால் என்ன என்று கூட எனக்குத் தோன்றியது. கையும் களவுமாய் பிடிபட்டு ஒரு கொடிய மரணத்தை நிகழ்த்திய அரக்கர்களை...நமது தேசத்தின் நீதி என்ன செய்யும் தெரியுமா? தண்டனைகள் ஏதும் கொடுக்காமல்...ஒரு 30 வருடம் அவர்களை மரணக் கொட்டடியில் வைத்து அவனை மகாத்மாவாக்கி பிறகு கொல்வார்கள். இது எப்படி சரி என்று எனக்குத் தெரியவில்லை...

இந்தக் கட்டுரை எந்தவித கருத்தையும் வலியுறுத்தி நகராமல்...ஒரு மத்திம நிலையில் மத்தியான நேரத்தில் சாலை கடக்கும் எருமை மாடாகவே நகரட்டும்.  சரி தவறுகளை வாசிப்பவரின் மனோநிலைக்கும் தர்மத்திற்குமே நான் விட்டு விடுகிறேன்.

1993 நடந்த கண்ணி வெடி தாக்குதலை செய்த சந்தனக்கடத்தல் வீரப்பனுக்கு உதவிகள் செய்ததற்காக நான்கு பேரின் முன்பு இப்போது தூக்குக் கயிறு தொங்கிக் கொண்டிருக்கிறது. அசுரகதியில் வழக்கை விசாரித்து, இவ்வளவு சீக்கிரம் தீர்ப்பை வழங்கி நீதி வழங்க காத்திருக்கும் சத்தியத்தை கண்டு எனக்கு சிரிப்புதான் வருகிறது..?

ஓய்வு பெற்ற நீதியரசர் ஐயா கிருஷ்ண அய்யர் மரண தண்டனைகள் கூடாது என்று ஏன் சொல்கிறார் என்று அறிய அவர் எழுதிய புத்தகத்தை ஒரு முறை வாசித்து விட்டும், உலக நாடுகளில் மிகையானவை எல்லாம் ஏன் தூக்கு தண்டனை கூடாது என்று சொல்லி அதை நிறுத்தி விட்டன...என்பன போன்ற விடயங்களை எல்லாம் அறிந்து கொண்டும்...பிறகு கருத்துக்களை கூறுங்கள்...

அது போகட்டும்....

சத்திய புருசனாய் தன்னை வர்ணித்துக் கொண்டு நியாயத்தை பேசும் இந்திய கூட்டு மனசாட்சி எங்கள் பிள்ளையை, பச்சைப் பாலகனை,பெற்றோரை விட்டு, உறவுகளை இழந்து தனித்திருந்த எங்கள் செல்வத்தை கொடுமைகள் செய்து, ....இரக்கமில்லாமல் கொன்று போட்டதற்கு என்ன கருத்து தெரிவிக்கப் போகிறது...?

பிரபாகரன் உனக்கு எதிரி..., எங்கள் அண்ணன், தம்பிமார்கள் என்று வயது வந்த எத்தனையோ பேரை நீ கொன்றாய் சரி...., பிஞ்சுகள் என்ன பாவமடா செய்ததது பாதகனே...? என்று அரக்கன் ராஜபக்சேயைப் பார்த்து என் இந்திய தேசம்  ஏன் கேள்வி கேட்காமல் கொலைகாரனுக்கு பூரண கும்பம் வைத்து மரியாதை செய்கிறது...?

பிஸ்கட் வாங்கிக்  கொடுப்பவன் எதிரியென்று அறிந்தும் அதை வாங்கி உண்ட பிஞ்சை கொல்ல எப்படியடா உங்களுக்கு மனம் வந்தது...? என்று சத்தியம் பேசும் தேசம் ஏன் ஒரு கண்டனக்குரல் கூட எழுப்பவில்லை...?

அழுதாயா பிள்ளையே...? நம் இனம் அழுந்து போயிற்று, நமது விடியல் எரிந்து போயிற்று என்று....புலம்பினாயா மகனே...? உனக்கு உறக்கம் வந்ததா ஐயா? உறக்கத்தில் கொடுங்கனவு கண்டு தாயின் அரவணைப்பு தேடி அலறி எழுந்து... அரக்கர்களின் இயந்திரத் துப்பாக்கிகளைக் கண்டு ஒடுங்கிப் போனாயா செல்வமே ? 

என்ன செய்து விடுவான் இந்தப்  பாலகன் என்று நீ கொன்று போட்டாய் அரக்க இலங்கையே என்று ஏன் நீதி பேசும் இந்தியா கேட்கவில்லை...? 100 பேரைக் கொன்றான் என்று நீ அகப்பட்ட ஒருவனை கொன்று நிரூபித்துக் கொண்ட உன் வீரத்துக்கு ஆண்மையான குரல் கூடவா இல்லை...?

லட்சங்களில் உயிர்களைக் குடித்த அரக்கனை கண்டித்துப் பேச...ராஜாங்க தொடர்புகளை அறுக்க.. திரணியற்றுப் போன நீ....பிள்ளைப்பூச்சிகளைக் கொன்று விட்டு எங்களிடம் நீதி பேசுகிறாய்....

தூக்கு தண்டனைகளை விதித்து நீதியை நிறுவிய உன் இரத்தைக் கைகள்தான்....பாலகர்களைக் கொன்ற அரக்கர்கர்களொடு கை குலுக்கி சர்வதேச சமூகத்தின் மேன்மை பற்றியும் பேசுகிறது...! 

மன்னிப்பதிலும், தண்டனை வழங்குவதிலும் மிகுந்த கருணை கொண்ட ஒரு தேசமே புனிதர்கள் வாழும் தேசமாகிறது...

நாம் எந்த மாதிரியான தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...! 


தேவா. S



மொழியற்றவனின் வார்த்தைகள்....!

$
0
0


நவீனத்தின் நிழலில் அமர்ந்து கொண்டு நான் ஆன்மீகம் பேசுவது கொஞ்சம் பிற்போக்காகத்தான் இருக்கும். அறிவியலை அடையாளமாக்கிக் கொண்டு, இருப்பதை இல்லை என்று மறுப்பவர்களுக்கு கடவுள் என்ற பதமும், ஆன்மா என்ற சொல்லும் மிகுந்த கேலிக்குரியதாய் கூடத் தெரியலாம். எந்த இடத்தில் ஆன்மீகம் பாமரனைச் சென்றடைய யுத்திகள் செய்ததோ அந்த யுத்திகளைக் கொண்டு மேலேறி வராமல் அந்த யுத்திகளுக்கு யுத்திகள் செய்து மூடநம்பிக்கைகளை தங்களின் பைத்தியக்காரத்தனத்தில் இருந்து மேலேற்றிக் கொண்டு வந்து விட்டார்கள் மிகைப்பட்ட மனிதர்கள். மூடநம்பிக்கைகளும், பகட்டு பக்திகள் மட்டுமே புறத்தில் தெரிய....

ஆன்மீகம் என்ற சொல் பகுத்தறிவுக்கு வெகுதூரமாய் போய்விட்டது...!

கடவுளை மறுப்பது பகுத்தறிவு என்று சிந்தனையின் உச்சத்தில் மனிதனின் மனமொரு செய்தியைப் பகிர அதையே அறிவின் உச்சம் என்று நம்பி விட்டான் ஆனால் கடவுள் என்றால் என்ன என்று கூடுதல் கேள்வியொன்றை எழுப்பி மறுப்பதற்கு என்ன இருக்கிறது என்று ஆராய இருப்பதெல்லாம் இருப்பதாகிப் போக எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளவேண்டிய கட்டாயத்தை  நாம் எட்டிப்பிடிக்க முடியும். இந்த எட்டிப்பிடித்தலை நான் ஆன்மீகம் என்று சொல்லலாம், நான் ஆன்மீகம் என்று சொல்கையில் அந்தச் சொல்லை எடுத்துக் கொண்டு போய் ஏதோ ஒரு மதத்திற்குள்ளோ அல்லது கொள்கைக்குள்ளோ அடைத்துப் போட்டு விட்டு நான் சொல்ல வரும் ஆன்மீகத்தை நீங்கள் மறுதலிக்கவும் செய்யலாம்.

என் கேள்வி எல்லாம் என்ன தெரியுமா? எதை நீங்கள் மறுக்க முடியும் இந்த உலகத்தில் என்பதுதான்? உங்களின் பிறப்பு நிகழவே இல்லை என்று உங்களால் மறுக்க முடியுமா? இறக்கவே மாட்டேன் என்று மறுக்க முடியுமா? பசியை, கோபத்தை, தாகத்தை, காமத்தை எதை மறுக்க முடியும் நம்மால்? நம்மைச் சுற்றி இருக்கும் எல்லாவற்றையும் ஏற்று நகரத்தான் நம்மால் முடியுமே அன்றி எதையும் மறுத்து நகர முடியாது. அடிப்படையில் நிறைய முரண்களும், பித்தலாட்டங்களும் சர்வதேச சமூகத்தில் அரங்கேறி விட்டன கடவுளின் பெயரால்....

பாவம் கடவுள் என்னும் பதம். 

அது ஆத்திகர்களாலும், நாத்திகர்களாலும் எப்போதும் பந்தாடப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது. கடவுள் என்ற பெயரை புரிதலில்லாத மூடர்கள் முறையற்ற தங்களின் சுயலாபத்திற்காய் பயன்படுத்தியிருக்கலாம் என்றாலும் மானுட வாழ்க்கையில் கடவுள் என்னும் பதம் முரண்களை விட அதிக அளவு நன்மைகளையே செய்திருக்கிறது. கடவுள் என்பது தனி மனித திருப்தி என்ற ஒரு உரிமையை எப்போதும் சமூக சீர்திருத்தவாதிகள் என்று சொல்லும் முற்போக்கு வாதிகள் பறித்து விடவே முடியாது. கடவுளின் பெயரைச் சொல்லி இங்கே நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கும் வன் கொடுமைகளை தடுக்கவேண்டிய கண்டிக்கவேண்டிய எல்லா சமூகப் பொறுப்புகளும் ஆன்ம ரீதியான புரிதல் கொண்ட எல்லா மனிதர்களுக்கும் அதிகமாகவே இருக்கிறது என்று நான் கருதுகிறேன். இங்கே ஆன்மீகம் என்பதின் பெயரால் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கும் மனோதத்துவ முரண்களை முறியடிக்கவேண்டிய கடமையும் உண்மையான ஆன்மப் புரிதல் கொண்டவர்களுக்கே இருக்கிறது.

கடவுள் மறுப்பாளர்கள் கடவுளை மறுப்பதிலும், மூடநம்பிக்கைகளை ஏளனப்படுத்திவதிலுமே நேரத்தை செலவழித்து விடுகிறார்களே அன்றி....தனி மனித ஒழுங்கு, ஆன்மப்புரிதல் போன்றவற்றைப் பற்றி அதிகம் பேச முடியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஒரு போதும் சூட்சுமம் என்னும் புலன் உணர்வுக்கு அப்பாற்பட்டதை நம்பத்தயாரில்லை. பூமி சுற்றுவதை இவர்கள் நம்புவார்கள். சூரியனை அது சுற்றி வருவதையும் இவர்கள் நம்புவார்கள். சூரியனுக்கும் பூமிக்க்கும் இருக்கும் ஈர்ப்பு எப்படிப்பட்டது அல்லது ஏன் ஈர்க்க வேண்டும் என்பதைப் பற்றி அதிகம் பேசமாட்டார்கள்.

எப்படி நடந்தது என்று கூறுவார்கள் ஆனால் ஏன் நடக்கவேண்டும் என்று யோசிக்க மாட்டார்கள்.அவர்களுக்கு வாழும் வரை வாழ்க்கை இருக்கிறது என்பது வரை மட்டுமே நம்பிக்கை இருக்கிறது. மரணமும் ஜனனமும் சும்மா ஒரு உல்ல்லுலாய்க்கு இங்கே ஏற்படுகிறது பிறகு ஒன்றுமே இல்லை என்று இவர்கள் கூறுவதை அறிவின் பார்வையாக ஏற்றுக் கொண்டு என்னால் நகர முடிவதில்லை. என் மனம் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருக்கிறது..? ஏன்....ஏன்..? என்று கேட்டு கேட்டு....கேள்வி கரைந்து போக ஏற்படும் வெற்றிடத்தில் எல்லா ரகசியத்தையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. அது என்ன ரகசியம்..?

பூமிக்கும் சூரியனுக்கும், சூரியனுக்கும் பிரபஞ்சத்திற்கும் இருக்கும் ஈர்ப்பினை ஒத்த ரகசியம் அது. சொல்லிவிட்டால் அது ரகசியம் அல்ல.....!

எந்த ஒரு நாளில் கடவுள் என்பது தனி நபரல்ல என்ற புரிதல் எனக்கு ஏற்பட்டதோ, எந்த ஒரு நாளில் சரியான சுமூக இயங்குதலோடு மனதினால் நான் நான் என்று செய்யும் செயல்கள் எல்லாம் என் மரணத்தின் போது என்னை துன்புறுத்தும் என்று புரிந்து கொண்டேனோ..., எந்த ஒரு கணத்தில் உறவுகள், இரத்த பாசம், நட்பு என்னும் தொடர்புகள் எல்லாம் சூழல்கள் உருவாக்கும் மாயஜாலங்கள் என்று எனக்குப் புரிந்ததோ..., எந்த ஒரு நாளில் நான் வெறுமையான ஒரு கூடு, என்னைச் சுற்றி நிகழும் யாவும் என் கடந்தகாலத்தின் தொடர்ச்சிகள், என் எதிர்காலம் என்பது கடந்த காலமும், நிகழ்காலமும் புணர்ந்து ஜனிக்கும் ஒரு சூழல் என்பது விளங்கியதோ.... 

அந்த நாளில் எனக்கு யாரிடமும் எதுவும் சொல்லப் பிடிக்கவில்லை. யாரிடமும் எதுவும் கேட்கவும் பிடிக்கவில்லை. இந்தப் போலி சுழற்சியின் தர்மநியாங்கள்  மீண்டும் மீண்டும் இங்கே பிறப்பதோடு தொடர்புடையது. என் எண்ணங்கள் எனக்கு விளைவுகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. பிறந்து, உலகத்துக்கே சக்கரவர்த்தியாகி, இன்பம் துன்பம் எல்லாம் நுகர்ந்து, புகழையும் பணத்தையும் சேர்த்து நான் என்ன செய்யப் போகிறேன்...? எனக்குப் பிறகு யார் யாரோ என்னைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற என் மரணபயத்தின் நீட்சிதான் நான் இந்த சமூகத்தில் ஓடும் ஓட்டம்.

என்னைப் பற்றி நல்லவிதமாய் கோடி பேர்கள் பேசிப் பேசி....அவர்களும் மரித்து...இறுதியில் இந்த சுழற்சி வேறொன்றாய்த்தான் மாறும். நம்மைச் சுற்றி நிறைய வலைகள் பின்னப்பட்டு விட்டன. இந்த நொடியில் இறக்கி வைக்கும் வார்த்தைகள் கூட என் பெரும் பயணத்தை கடக்கும் ஒரு சிறு செயல்தானே அன்றி.. எதையும் விளக்கவோ நிறுவவோ முற்படும் கருத்துக்களின் கோர்வை அல்ல. இவை எல்லாமே வெற்றுக் குமிழிகள்.

நகர்ந்து கொண்டே இருக்கும் நீர்க்குமிழிகள் ஏதோ ஒரு கணத்தில் உடைபட்டுப் போகும். இந்த வார்த்தைகள் உங்களுக்குள் கரைந்து போகவேண்டும் என்பதே எனது ஆசை. இங்கே வாசித்து சிலாகிக்க ஒன்றுமில்லை. ஆச்சர்யப்பட்டு கூக்குரலிட்டு உற்சாக நடனமிட என்னிடம் கவர்ச்சியான லெளகீகம் இல்லை. ஏதேதோ விசயங்களை இணையத்தில் தேடி எடுத்துக் கொடுக்கும் புள்ளி விபரங்களோ, இல்லை எதைப் படித்ததின் தாக்கமோ என்னிடம் இல்லவே இல்லை...

ஆனால்...

என் வார்த்தைகள் உங்களின் அந்திமத்திற்கு உங்களை ஒரு வேளை கூட்டிச் செல்லக் கூடும். தனியே வந்து தனியே செல்ல வேண்டிய பயணத்தினூடே இருக்கும் இறுக்கங்களை உடைத்துப் போடக்கூடும், உங்களின் பெயர் கடந்து, தொழில் கடந்து, பாலினம் கடந்து, உலகத்தின் எல்லா கோட்பாடுகளையும் கடந்து, தடைகளை எல்லாம் உடைத்துப் போட்டு உங்களுக்குள் இருக்கும் என்னையும், எனக்குள் இருக்கும் உங்களையும் அடையாளப்படுத்தக் கூடும். அப்படியான அடையாளப்படுத்துதலில்...

என் பரிசுத்த அன்பும் உங்களின் பரிசுத்த அன்பும் நான், நீ என்னும் எல்லைகளை உடைத்து விட்டு அன்பு என்னும் பெரும் உணர்வாய் அலை அலையாய் இந்தப் பிரபஞ்சப் பெருவெளியெங்கும் பரவி சிவமாய் விசுவரூபமெடுத்து நிற்கக்கூடும். இந்த அன்பு சிவமாக, சிவம் அன்பாக...பேரானந்தத் தாண்டவமொன்று இந்த பிரபஞ்சமெங்கும் நிகழக் கூடும்.

சிவம் என்னும் வார்த்தை உங்களின் எனதின் ஆதி உணர்வைக் கிளறக்கூடியது.சிவம் என்பது பெயர் அல்ல. சிவம் என்பது பொருள் அல்ல. சிவம் என்பது உருவம் அல்ல. சிவம் என்பது மனிதரல்ல....சிவம் என்பது கடவுள் அல்ல....

சிவம் என்பது இந்தப் பிரபஞ்சமெங்கும் பரவிக் கிடக்கும் ஒரு உணர்வு நிலை. பிரபஞ்சத்தோடு நமக்கு தொடர்பு இல்லாமல் எப்படி இருக்கும். இந்த பேரியக்கத்தின் ஒரு நிலைத்தோற்றம் தானே நாம்...! சிவம், சிவம் என்று சொல்லி சொல்லி...ஒற்றை முனையில் நினைவினை மடக்கி உள்ளுக்குள் செல்ல புறத்தின் தொடர்பறுந்து போகிறது. வாழ்க்கையை வாழ எத்தனை முரண்களைச் சந்திப்பது? இருப்பவனாக இருப்பதற்கு ஓடிக் கொண்டே இருக்கும் போது ஏற்படும் அயற்சியின் முடிவில் ஏற்படும் விரக்தியை மிகச்சரியாய் இப்படி எழுதி முடித்த பின்பு மறுபடியும் என் ஓட்டம் தொடங்கியாக வேண்டும்...

என் கடவுள் தேடலும், நான் புரிந்த வாழ்க்கையும் எனக்கு நிம்மதியை பெரும் மோட்சத்தைக் கொடுக்க காத்துக் கொண்டிருக்க...என்னை பக்குவப்படுத்த என் லெளகீகமும் வெறித்தனமாய் காத்துக் கொண்டிருக்கிறது. சுற்றிச் சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும், என்னுடன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் என் உள்ளமை...., இங்கே நான் நான் என்று எழுதிக் கொண்டிருக்கும் உணர்வு...உடல் மரணித்த அடுத்த நொடியில் என்னாகும்? யோசித்துப் பார்த்தால் நிறைய பதில்கள் உங்களைப் போல எனக்கும் கிடைக்கின்றன...

ஆனால்....மெளனமும், நிதானமும், தெளிவும்....மட்டுமே என்னோடு இப்போது மிச்சமிருக்கின்றன. நான் யாதொரு மதத்தையும் சாராதவன் இப்போது... எனக்கு எந்த ஒரு அடைப்புகளும் இல்லை, இந்த சமூகத்தின் எல்லா கோட்பாடுகளையும், அறிவுகளையும், தத்துவங்களையும் நான் புறக்கணிக்கிறேன்....

நான் சுதந்திரமானவன்!!!!

ஆமாம்....அடித்தால் அழும், அணைத்தால் சிரிக்கும் குழந்தையின் சுதந்திரத்தை ஒத்தது என் சுதந்திரம். புத்தகத்துக்குள் நான் இனி வாழ்க்கையை தேடப்போவதில்லை, சக மனிதர்களின் வாயிலிருந்து எனக்கான சந்தோசத்தை இனியும்  திருடப் போவதில்லை...

நான் இருக்கிறேன்....அவ்வளவுதான்...!!!!!


தேவா. S



சந்திரமுகி.....!

$
0
0


விவரிக்க முடியாத ஒரு உணர்வுதான் இந்த பூர்வ ஜென்மம் என்பது. ஆதாரத்துடன் நிரூபிக்க எந்த உணர்வுப் பூர்வ நிகழ்வுகளும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதில்லை. ஆதாரப்படுத்தி விட்டால் அது உணர்வு நிலை என்னும் உயரிய நிலையிலிருந்து இழிந்ததாகி விடுகிறது. அமானுஷ்ய விசயங்கள் எனப்படும் மனித உணர்வுகளுக்குப் புலப்படாத பல நிகழ்வுகளை இயல்பிலேயே தெரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு இருந்திருக்கிறது. வாழ்க்கைக்கு முன்னும் பின்னும் அடர்த்தியாய் ஏதோ ஒன்று இருக்கிறது என்று நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். எனது உணர்வு எனது மனதின் கற்பனை என்று பகுத்தறிவு சொன்னாலும், கற்பனையும் உணர்வுதானே என்று பகுத்தறிவையும் ஆளும் ஒரு சக்தி எனக்குச் சொல்லி இருக்கிறது.

பூர்வ ஜென்மம் என்னும் அடிப்படையை எனக்கு உறுதியாய் நம்ப வைத்தது கீதை என்னும் ஞானக் கடல்தான். கீதை சொல்லப்பட்ட சூழலை மறுத்துப் பேசும் யாரும் கீதையிலிருக்கும் கருத்துக்களை மறுத்துப் பேச முடியாது. யார், யாருக்கு எங்கே சொன்னது என்ற விரிவாக்கத்தை விமர்சிக்கலாம் ஆனால் கீதையின் சாராம்சத்தை, அதன் அடிப்படையை அது சொல்லி இருக்கும் சூட்சும உணர்வுகளை மறுக்கவே முடியாது. பகுத்தறிவின் உச்சம் அது. 

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்ததானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்
பரித்ராணாய ஸாதூநாம் வினாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே... 

மேலே கூறப்பட்டிருக்கும் நான்கு வரிகளும் வெறுமனே ஏதோ நான்கு வரிகள் என்ற அளவில் கடந்து செல்ல முடியாததாய் இருக்கிறது. தர்மத்தை நிலை நாட்ட எப்போதும் ஒரு ஆன்மா உருவாக்கப்படுகிறது. தர்மத்தை உறுதியாய் ஸ்தாபிக்க யுகம், யுகமாய் நான் தோன்றுகிறேன். இங்கே பகவான் கிருஷ்ணர் அர்ஜுனருக்கு இதை உபதேசித்தார் என்ற காட்சி விரிவாக்கத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை. யுகம் என்பது பிரபஞ்சத்தின் சுழற்சியை புலன்களுக்கு புரிய வைக்க கையாளப்பட்ட சூட்சும வார்த்தை. யுகம் என்பது காலம் அல்ல.. யுகம் என்பது சூழல். இங்கே நானே என்று சொல்வது யாரோ ஒரு கிருஷ்ணர் மீண்டும் மீண்டும் அவதரிப்பது அல்ல. சத்தியம் என்னும் தத்துவம் மீண்டும் மிண்டும் தோன்றுவது. 

கீதை மறுபிறப்பைப் பற்றி பேசுகிறது. ஒரு ஆன்மா உடலுக்குள் சக்தியாய் தங்கி இருந்து பலவிதமான அனுபவங்களை பெற்று அந்த அனுபவச் சாரத்திற்கு ஏற்றார்  போல வேறு உடலை சக்தி வடிவில் சென்றடைகிறது. யார் இதை தீர்மானிப்பது என்ற கேள்விக்கு யார் பூமியின் சுழற்சியை தீர்மானித்தார்களோ, யார் சூரியனிலிருந்து பூமியையும் இன்ன பிற கோள்களையும் பிய்த்தெறிந்தார்களோ அவர்களே இதையும் செய்திருக்க முடியும் என்று எனக்குத் தோன்றியது. அதாவது யாரும் செய்யத் தேவையில்லாத தன்னிச்சை நிகழ்வு என்று பகுத்தறிவில் இதை மொழிப்படுத்திக் கொள்ளலாம். இரண்டு பங்கு ஹைட்ரஜனும் ஒரு பங்கு ஆக்ஸிஜனும் சேர்ந்தால் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பது அல்ல நியதி. இரண்டும் சேர்ந்ததால் கிடைத்தது தண்ணீர். ஏதேதோ சேரச்சேர ஏதேதோ கிடைத்தது. பிரபஞ்சத்தின் மொத்த நிகழ்வுகளும் முடிவை நோக்கிய ஒரு பயணம் அல்ல.

நிகழ நிகழ உங்களின் எனதின் முடிவுகள் கிடைத்தன. கிடைக்காமலிருக்கவும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. பள்ளத்தை நோக்கி நீர் எப்படி செல்கிறது? அதற்கென்று என்ன நியதி இருக்கிறது. பூமிக்கு என்று ஒரு ஈர்ப்பு விசை எப்படி வந்தது..? அப்படியாய் இந்த உடலுக்குள் அனுபவம் பெற்ற ஆன்மாவும் இருட்டில் பயணிக்கும் வெளிச்சமாய், இடமிருந்து வலம் சுற்றும் பூமியாய் வேறு உடலை எடுக்கவும் செய்கிறது. சக்தி ஏதேதோ அனுபவ அதிர்வுகளைக் கொண்டிருக்க அந்த அனுபவ அதிர்வுகள் மொத்தமாய் கரையும் வரை...உடல் தேடும் ஒரு பயணமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உள்ளது அழியாது, இல்லாதது தோன்றாது. இது சைவ சித்தாந்த தத்துவம் என்றால், பின்னாளில் ராபர்ட் ஹூக் என்னும் அறிவியலார் இதை  ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஒரு ஆற்றல் இன்னொரு வகை ஆற்றலாக மாறிக் கொண்டுதான் இருக்கும் என்று ஆற்றல் அழியாமை விதி என்று அறிவிக்கிறார். இராபர்ட் ஹூக்கை நீங்கள் நம்புவீர்கள் ஏனென்றால் அது அறிவியல். சைவ சித்தாந்தத்தை நம்ப மாட்டீர்கள் ஏனென்றால் அதை அறிவாய் பார்க்க முடியாத அளவிற்கு மதம் என்னும் மாயை உங்கள் கண்களை மறைத்து வைத்திருக்கிறது.

உடல் விட்டு பயணிக்கும் இந்த ஆன்மா என்னும் சக்தி அலைகள் பெரும்பாலும் பழைய உடலைப் பற்றிய நினைவுகளை மறந்து வெறும் அனுபவ அதிர்வுகளாய் வேறு ஒரு உடல் தொட்டு பூர்வ ஜென்ம அனுபவத்திற்கும், உறைந்திருக்கும் கருவில் இருக்கும் பாரம்பரிய அணுக்களுக்கும் ஏற்றார் போலும், புலன்கள் மூலம் பெறும் அனுபவத்திற்கு ஏற்றார் போலும், தன்னை புதிய உயிராய் பரிணமித்துக் கொள்கிறது. ஆதி குணங்களை ஆன்மா எப்போதும் மறக்காமல் அதை வெளிப்படுத்தவும் செய்வதால்தான்..ஒரே வீட்டில் பிறந்த நான்கு பிள்ளைகளின் விருப்பங்களும் வெவ்வேறாய் இருக்கிறது. நிறைவேறாத சுழற்சியை அனுபவத்தின் மூலமாய் அடுத்தடுத்து பெற முயலும் ஆன்மாவைத்தான்...

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்அசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்....

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.....

என்று மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் கூறுகிறார். பூர்வ ஜென்ம உடல் வாசனையோடு மறு பிறப்பு நிகழவும் சாத்தியமிருக்கிறது. சந்திரமுகியை மணிச்சித்ரத்தாழ் ஆக பார்த்த போதே எனக்கு விளங்கி விட்டது.  மணிச்சித்திரத் தாழின் கதாசிரியர் யாரென்று எனக்குத் தெரியவில்லை ஆனால் அது அற்புதமான கலைப்படைப்பு. தமிழில் சூப்பர் ஸ்டாருக்காக திணிக்கப்பட்ட காட்சியமைப்புகள் நிறையவே மசாலா வாசத்தை வீச வைத்து விட்டது. மலையாளத்தில் கதையின் ஆழத்தை ரசனையாய் அதன் ஓட்டத்திலேயே கூறியிருப்பார்கள். மலையாள சினிமா இப்போது மாறிப்போய் விட்டது. முன்பெல்லாம் தனது கலாச்சார செழுமைக்குள் நின்று கொண்டுதான் அவர்கள் இசையமைக்கவும், கதை செய்யவும் செய்வார்கள். 

ஷோபனா நாகவள்ளியாய் மாறி நிற்கும் இடத்தில் எனக்கு மயிர்க் கூச்செறிந்தது என்னவோ உண்மைதான். நாகவள்ளி என்னும் தமிழச்சியின் ஆவி ஷோபனாவிற்குள் புகுந்து விட்டது என்று நாம் நினைக்க மருத்துவ ரீதியாய் அது ஆவி அல்ல அகு ஒரு பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் என்று மணிச்சித்திரதாழ் சொன்னதும் கூட சரிதான். அது டிஸ்ஆர்டர்தான். உள்ளுக்குள் ஏற்பட்ட அதிர்வுகளின் பிறழ்ச்சிகளே.... நாகவள்ளியாகவும், சந்திரமுகியாகவும் மாறி நிற்கின்றன.  சந்திரமுகியாய் தன்னை நம்புவதாக அந்த பாத்திரம் விவரிக்கப்பட்டது. அந்த கற்பனையை உடைக்க.... வேட்டையன் ராஜாவை கொல்லவேண்டும் என்று அறிவியல் மூலமாக விவரித்து அதைச் செய்து அந்த டிஸ்ஆர்டரை சரி செய்வதாய் படம் சொன்னாலும்....

சந்திரமுகியும் நாகவள்ளியும் பர்சனாலிட்டி டிஸ்ஆர்டரை ஏற்படுத்தக் கூடிய அளவிலான ஆன்மாக்களாய்த்தான் எனக்கு தெரிந்தார்கள். பூர்வ ஜென்மத்தில் தனது காதலனைக் கொன்று போட்டு தன்னை அடைய நினைத்த ஒருவனை பழி தீர்க்க நினைப்பதற்கு நிறையவே சாத்தியக்கூறுகள்... பாதியில் உடலை விட்டுப் பயணப்பட்ட ஆன்மாவிற்கு இருக்கிறது. சந்திரமுகி என்னும் உடலுக்குள் ஏற்பட்ட வெறி, கோபம், உக்கிரம்....உன்னை நான் பழி தீர்ப்பேன் என்னும் ஆக்ரோசத்தோடு பயணப்பட்ட அந்த அதிர்வு மறு பிறப்பு எடுக்க சாத்தியக்கூறுகள் அற்றது. மறு கருவினை ஒரு ஆன்மா தொட வேண்டுமானால்  அது முன் ஜென்மத்து உடலின் நினைவுகள் தீர இல்லாமல் இருக்க வேண்டும். முன் ஜென்மத்து உடலின் நினைவுகள் இருக்கும் வரை அது பிரேத ஆத்மாதான். பிரேதத்தை தானாய் நினைக்கும் ஆன்மா அது.

ஏற்கெனவே கற்பனைகளும், செய்திகளை விவரித்துப் பார்க்கும் மனோநிலையும் கொண்ட ஒரு பெண்ணை அந்த ஆன்மா தேர்ந்தெடுத்துக் கொண்டதில் யாதொரு ஆச்சர்யமும் கிடையாது. ஷோபனாவும், ஜோதிகாவும் அப்படியான ஒரு இளகிய மனோநிலை கொண்ட பாத்திரப்படைப்புகள்தான். அது தான் முதலிலேயே சொன்னேன்.. சந்திரமுகியின் மூலமான மணிச்சித்திரத்தாழின் கதாசிரியர்... ஆகச் சிறந்த படைப்பாளி அதுவும் இந்த படைப்பை தனது புலனுணர்வுக்கு அப்பாற்ப்பட்டே அவர் எழுதி இருக்க வேண்டும்....

மீண்டும் தனது பூர்வ ஜென்மத்தை  நினைத்து மானசீகமாய் சலங்கை கட்டி தன் காதலனுடன் ஆடி சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த பிரேத ஆத்மாவின் நகர்வுகளை சரி செய்ய வந்த டாக்டரை தனது எதிரியாக பாவித்து அவனையே பூர்வ ஜென்மத்து வேட்டையனாகவும் வரிந்து கொள்வது பிரேத ஆத்மாவின் கோபத்தை தீர்த்து கொள்ள ஒரு வழியாகவும் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. இங்கே மனோதத்துவ ரீதியாய் டாக்டர் சொல்லும் விசயத்தைதான் எந்த ஒரு ஆன்மப் புரிதல் கொண்ட பூர்வ ஜென்மத்தை நம்புவர்களும் சொல்லி இருப்பார்கள்...

வேட்டையன் செத்தால் பிரேத ஆத்மா திருப்தியுறும்...அப்படி கோபம் தீர்ந்து விட்டால் தன்னை பிரேதமாக கற்பனை செய்து கொள்ள வேண்டிய அவசியமற்றுப் போய் அந்த அனுபவத்தையும் அதிர்வுகளாய் எடுத்துக் கொண்டு தகுந்த கருவினை நோக்கி சந்திரமுகியின் ஆன்மா சீறிப்பாயும். தன்னை உடலாய் நினைத்து வாழ்ந்து மரணிக்கும் மனிதர்கள் உடலை விட்ட பின்பும் தன்னை உடலாய் நினைத்துக் கொண்டே இருக்க...அந்த கனவு முடிவதே இல்லை. உடல் இல்லாமலேயே வலியும் வேதனையும் உணர்வாய் இருக்க...அது நரகமாகிப் போகிறது. கனவிலே பாம்பு நம்மை கொத்த துரத்திக் கொண்டு வருகிறது என்று வைத்துக் கொள்வோம்...பயந்து அலறி உடல் இருப்பதால் எழுந்து விடுகிறோம்... ! உடல் இல்லாவிட்டால் என்ன ஆகும்..பாம்பு துரத்திக் கொண்டே இருக்கும் நாம் பயந்து ஓடிக் கொண்டே இருப்போம்....

எண்ணைச்  சட்டியில் போட்டு வறுத்துக் கொண்டே இருப்பார்கள் நாம் வறுபட்டுக் கொண்டே இருப்போம். பாம்பும் தேளும் பூராணும் கடிக்க கடிக்க வலியால் துடித்துக் கொண்டு இருப்போம்....! என்ன கருடபுராணம் நினைவுக்கு வருகிறதா...? எக்ஸாட்லி சேம் பாஸ்....!!!!!

தான் யார், ஏன் வந்தோம், மரணம் என்றால் என்ன..? ஏன் பிறந்தோம்...? எங்கே செல்கிறோம்? எது வாழ்க்கை?  இங்கே எல்லாமே மாயை, நிம்மதிதான் வாழ்க்கை. தியானம் செய்ய தனித்தமர்வது போலத்தான் இறந்த பின்னும் இருக்கும் என்பதால் தினமும் தனித்து அமர நேரம் ஒதுக்கி நான் அமர்ந்தால் என்ன? எனக்கு கொடுக்கப்பட்டது எல்லாம் ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் கூடிக் கிடைத்த தண்ணீர் போன்ற எதேச்சையான நிகழ்வுகள். இதற்கு ஏன் நான் கர்வம் கொள்ள வேண்டும்..? நான் என்பது உடல் அல்ல, மனமல்ல, பெயரல்ல, பதவி அல்ல.. எனக்கு நிகழ்வது எல்லாம் கூட்டு நிகழ்வின் பகுதி என்று நாம் உணர, உணர...

ஒரு சருகு உதிர்வது போல ... நிகழ்ந்து விடுகிறது நமது மரணம். அடர்த்தியான எண்ணங்கள் இல்லாமல் எதுவுமற்றுப் போக வேண்டுமா? இல்லை கம்பம் இல்லா காகம் போல அமர எந்த ஒரு இடமும் இல்லாமல் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டுமா...?இதை தீர்மானிக்க வேண்டிய இடத்தில் நாம் இருப்பதால் நாம்தான் கடவுள், கடவுள் என்று ஒன்று தனித்து இல்லை என்றும் நான் சொல்வேன்...!

எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதைக் கொடுத்தாயோ
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருaடையதாகும்.  


தேவா. S




காடுகள் மலைகள்...தேவன் கலைகள்....!

$
0
0





















எதார்த்தமாகத்தான் எல்லாம் நிகழ்ந்து விடுகிறது சொல்லி வைத்தாற் போல. கனவுகளை எல்லாம் ஏதோ ஒரு காகிதத்தில் எழுத்தாக்கத்தான் என்னால் முடிகிறது. கோபத்தில் ஓவியம் வரையும் சில ஓவியர்கள் எனக்கு நண்பர்களாயிருக்கிறார்கள். நான் கோபத்தில் எழுதுவது கோபத்தைதான் என்று சொல்லும் போது அவர்கள் கோபத்தில் வரைவது அமைதியை என்று என்னிடம் சொன்ன போது எனக்கு ஆச்சர்யமாய் தோன்றவில்லை. ஓவியம் என்பதே அமைதியின் வெளிப்பாடுதான். எதேனும் உக்கிரத்தில் உள்ளுக்குள் இருந்து கோபத்தை எழுத்தாக பிய்த்தெடுத்து வரிகளுக்குள் அடைத்து விடாலாம். எழுத்தைப் போல ஓவியத்தை கோபமாய் வெளிப்படுத்த முடியாது. எல்லா உக்கிர ஓவியங்களுக்குள்ளும் ஒரு பேரமைதி இருப்பதை நான் கவனித்திருக்கிறேன்.

எழுத்து அப்படி அல்ல. அது உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கவே செய்கிறது. ஆழமான அமைதியை எழுத்தாக்க அமரும் போது வார்த்தைகள் எல்லாம் தங்களை ஊமையாக்கிக் கொண்டுதான் காகிதத்தில் மெளனமாய் ஊர்ந்து செல்கின்றன. கிளர்ந்தெழுந்த மனோநிலையில் நான் ஒரு அப்ஸ்ட்ராக்ட் ஓவியத்தைப் போல எழுதவேண்டும் என்று சொன்னவுடன், திட்டமிடாமல் வரையும் அப்ஸ்ட்ராக்ட் ஓவியம் பற்றி நிறையவே பேசுவதற்கு நாங்கள் அமர்ந்திருந்த அந்த பின்னிரவின் துணைக்கு முழு பாட்டிலில் அடைபட்டு சிரித்துக் கொண்டிருந்த மது, அந்த சூழலை இன்னும் ரம்யமாக்கி விட்டிருந்தது.

சோடாவோடு கூடி காற்றுக் குமிழிகளாய் சிரித்துக் கொண்டே கோப்பையை நிரப்பிய மதுவின் தலையில் ஐஸ் க்யூப்ஸை விஜய் எடுத்து போட்டான்.  விஜய் என்று நான் இங்கே குறிப்பிட்ட என் நண்பன் தான் அந்த ஓவியன், ஆர்டிஸ்ட் அல்லது வர்ண வியாபாரி என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உருவத்தை வரைவது அதை ரசிப்பது எல்லாம் பழக்கப்படுத்திக் கொண்ட புத்திகளின் எதிர்பார்ப்பு. உருவமற்ற ஏதேதோ உருவ வடிவுகளை கேன்வாசில் குழைத்து வரைவது கூடலின் உச்சத்திற்கு சமம்....முதல் ஷிப் விஜயின் தொண்டையை அறுத்துக் கொண்டு  குடலுக்குள் இறங்கி இரத்ததில் கலக்கத்தொடங்கிய கணத்தில் நானும் ஒரு மிடறு குடித்திருந்தேன்....

விஜய் வீட்டு பால்கனி மிகப்பெரியது. பரபரபான நகரவாழ்க்கையில் இப்படி ஒரு பால்கனியும், பால்கனிக்கு  அப்புறமாய் பரந்த வெளியும் இருப்பது ஆசிர்வதிக்கப்பட்ட விசயம் பாஸ்...விஜயின் தோள் தொட்டேன்.... ! அப்ஸ்ட்ராக்ட் பெயிண்டிங்க் பத்தி சொல்லிட்டு இருந்தேன்ல....விஜய் மீண்டும் ஓவியத்துக்குள் குவிக்க நானும் ஓவியத்தைப் பற்றி பேச ஆரம்பித்தேன். விஜய்....அடிப்படையில் நான் ஓவியத்தின் டெக்னிகாலிட்டி எல்லாம் எதுவும் அறியாதவன்.  உருவமற்ற அப்ஸ்ட்ராக்ட் பெயிண்டிங் எனக்குபிடிக்க ஆரம்பித்தது வெகு சமீபத்தில்தான்...

வேலை செய்யும் நிறுவனம்....கலையோடு தொடர்புடையது என்பதால் ஒரிஜினல் ஆயில் பெயிண்டிங்க்ஸ் எல்லாம் எங்கள் காலரியில் டிஸ்ப்ளே செய்வதற்காய் உலகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் இருந்து பிரபல ஓவியர்களைக் கொண்டு வரையச் சொல்லி வாங்கி வருவோம். பலவற்றை விலைக்கே வாங்கி விடுவோம், இன்னும் சிலவற்றை கன்சைன்மெண்ட் பேசிஸில் வாங்குவதும் உண்டு. விற்றால் ஓவியனுக்கு பாதி எங்களுக்குப் பாதி. விற்காவிட்டால் ஓவியனிடம் பெயிண்டிங்கைத் திருப்பிக் கொடுத்து விடுவோம்.

எதேச்சையாக ஒரு நாள் ராசின் பெர்க் என்னும் ஒரு ஈரானிய ஓவியரின் அப்ஸ்ட்ராக்ட் பெயிண்டிக்கிற்குள் தவறி விழுந்து விட்டேன் பாஸ், ஹா..ஹா... விஜய் சப்தமாய் சிரித்துக் கொண்டே முதல் ரவுண்டை முடித்த வேகத்தில் இரண்டாவது ரவுண்டிற்காய் பாட்டிலை கவிழ்க்க.....நான் முதல் ரவுண்டின் பாதியிலேயே இருந்ததை உணர்ந்தேன். மறுபடி முழு மூச்சாக மதுவை உள்ளுக்குள் இறக்கி விட்டு.....வேகமாய் கொஞ்சம் சிப்ஸை எடுத்து வாய்க்குள் போட்டு ஊறவைத்துக் கொண்டேன்.

நான் கேட்காமலேயே விஜய் மீண்டும் என் கோப்பையை நிறைக்க.....

அப்ஸ்ட்ராக்ட் பெயிண்டிங் என்பது விபரம் புரியாத, இன்னதென்று வரையறுக்க முடியாத இலக்குகளைக் கொண்ட பெரும் காடு பாஸ். திசைகளையும், மனிதர்களையும் தேடி அலைகையில் திடீரென்று பறவைகளின் சப்தமும், அருவியின் சப்தமும், மெல்லிய பூங்காற்று நம் உடை கலைத்துச் செல்வதும்... மரங்கள் எல்லாம் சல சலவென்று அசைவதும், என்று மிகப்பெரிய நிசப்தத்தில் நாம் லயித்து நகரும் போது....


சடாரென்று ஏதேனும் ஒரு மிகப்பெரியா யானை கூரான தந்தங்களுடன் நம் முன் எதிர்ப்பட்டால் தோன்றுமே ஒரு அச்சம், அப்படி திடிரென்று ரம்யமான சூழல் மிரட்சியாய் மாறிப் போகுமே.....அப்படித்தன் ஏதேதோ கதை சொல்லிக் கொண்டிருந்த அந்த ஒரிஜினல் பெயிண்டிங்கிற்குள் நான் நகர்ந்து கொண்டிருக்கையில் இன்னதென்று விவரிக்க முடியாத பல உணர்வுகளும் எனக்குள் விழித்துக் கொண்டன. ஏதேனும் ஒரு உருவத்தை மையப்படுத்தி ஒரு ஓவியம் வரையப்படும் போது நமது எண்ணங்கள் எல்லாம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் பெட்டிக்குள் அடைபட்ட மிருகமாய், சொல்லிக் கொடுக்கப்பட்டதை சொல்லும் கிளிப்பிள்ளை போல எந்த எண்ணத்தில் ஓவியன் வரைந்தானோ அதே எண்ணத்தை நமக்கு கொடுத்து விடுகிறது....

இதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது விஜய்...? விஜய்....மூன்றாவது ரவுண்டில் முக்கால் வாசியை முடித்து விட்டு தனது ஜீனியஸ் மூக்கு கண்ணாடியை தூக்கி விட்ட படியே...டேய்.......ராஸ்கல் டூ யூ நொ ஹவ் டு ட்ரா ய பெயில்ல்ண்டிங்.....????சிரித்துக் கொண்டே குழறினான்....!உனக்கு ஒன்று தெரியும மாறன்.... எந்த ஒரு ஓவியத்திலும் ஆச்சர்யங்கள் நிரம்பிக் கிடப்பது இல்லை. ஆச்சர்யங்கள் எல்லாமே பார்ப்பவனின் மனதினில் மட்மே இருக்கிறது.

மோனலிசாவின் உதடுகள் புன்னகைக்கின்றன என்று நீ நினைக்கிறாயா? ஒரு போதும் மோனலிசா வசீகரப் புன்னகையை சிந்துவதே இல்லை....அங்கே ஓவியத்தில் நாம் காண்பது லியானர்டோவின் புன்னகையைத்தான் மேலும் அந்தப் புன்னகை ஒரு போதும் உனக்குள் புன்னகையைக் கொண்டு வர முடியாது. அங்கே மோனலிசாவும் உதடுகளும், லியானர்டோவும் வெற்றுக் கருவிகளாய் ஒரு ஆப்ஜக்டாக மற்றும் நின்று கொள்ள நிஜமான புன்னகை ரசிப்பவனிடமே பிறக்கிறது..

மூன்று நாள் நீ பட்டினி கிடந்து, விரக்தியான சூழலில் எல்லாமே தோற்றுப்போக, இரவு உரக்கம் இல்லாமல் முகம் வெளிறி, உடல் வலிகளோடு மோனலிசாவைப் பார்த்தால் மோனலிசா கண்டிப்பாய் புன்னகைக்க மாட்டாள். எந்த  ஒரு தலை சிறந்த ஓவியமும் ரசிகனை அடைத்துப் போட்டு விடக்கூடாது. அந்த  ஓவியம் அவனை கிளர்ச்சியுறச் செய்து வெவ்வேறு திசைகளுக்கு சிறகுகள் கொடுத்துப் பறக்கச் செய்ய வேண்டும்.

நீ அப்ஸ்ட்ராக்ட் பெயின்டிங் என்றால் எதுன்னு நினைக்கிறடா... ராஸ்கல்..., 4வது ரவுண்ட் கோப்பையை நிறைத்து விட்டு கிளாஸை கையிலெடுத்து ச்ச்ச்ச்ச்சியர்ஸ் சொன்ன விஜயின் உற்சாகதிற்கு நானும் ச்ச்சியர்ஸ் சொல்லி முடித்திருக்கையில்....முதல் மிடறை விழுங்கி விட்டு விஜய் பேச ஆரம்பித்தான்....அப்ஸ்ட்ராக்ட் என்பது உருவமற்ற வர்ணக்கலவைகளின் கூட்டு மட்டுமல்லடா மாமா......

ஏற்கெனவே கண்டிருக்கும் காட்சிகளையும், உருவங்களையும் யாரும் கண்டிராத கோணத்தில் வரைவதும் கூட அப்ஸ்ட்ராட்ன்னுதான் சொல்லணும்...மாடர்ன் பெயிண்டிங்ஸ் எல்லாமே அப்ஸ்ட்ராக்ட்தான்...எம்.எஃப். ஹுசைன் தாத்தா சரஸ்வதி படத்தை வரைஞ்சு வாங்கிக் கட்டிக்கிட்டாரே...ஹா...ஹா....ஹா... இவுங்க எல்லாம் கடவுளர்களை உடையோட பார்த்தப்ப..அவர் உடையில்லாம அவர் போக்குல வரைஞ்சு பார்த்தாரு....? இது என்னடா இருக்கு தப்பு....?

உடுத்தியிருக்கும்
அத்தனை பேரும்...
நிஜத்தில்
உள்ளுக்குள்...அம்மணங்கள்தானே???

***

நீங்கள் வெற்று 
நத்தைக் கூட்டினை 
ஜடமாய் கடந்து செல்கையில்
ஒரு கலைஞன்
அதை ஒரு ஜீவன் வசித்த
வீடாய் பார்த்துச் செல்கிறான்...!

என் நான்காவது ரவுண்டின் இறுதி டேய் என்று விஜயை கூப்பிட வைத்திருந்தது...! டேய்.....நீ கவிதை எல்லாம் எழுதுவியாடா...இடியட்....விஜயின் தோள் தொட்டேன்...

இலக்குகளற்ற
இலக்குகளை நோக்கி
எப்போதும் பயணிக்கும்
என் தூரிகைகள்...
வேறெதைப் படைக்கின்றன
கவிதைகளின்றி....!

உணர்வுகளைப் பிழிந்து தியான நிலையிலேயே....என் கைகள் இயங்குகின்றன. கருப்பும், சிவப்பும், இளஞ்சிவப்பு, மஞ்சளும், வெள்ளையும், நீல நிறமும், பச்சை நிறமுமென்று....நிறங்கள்தானே எனது மொழி....? என் மொழி எப்போதும் உங்கள் மொழியைப் போன்றது அல்ல...அதற்கு கோபத்தையும் சாந்தமாய்த்தான் சொல்லத் தெரியும்...

இந்தக் கோப்பை நீ ஓவியம் வரைய நான் கவிதை எழுத.....ரெண்டுமே அப்ஸ்ட்ராக்ட்டா இருக்கணும்....என்ன சரியாடா...?... விஜய் கேள்வியாய் என்னைப் பார்த்தபடியே மதுவை கோப்பையில் கவிழ்த்துக் கொண்டிருந்தான்...

சரிடா என்று சொல்லிவிட்டு நான் தூரிகையைக் கையிலெடுத்தேன்...

விஜய் கவிதை எழுத ஆரம்பித்திருக்கையில்...
என் ஓவியமொன்று...
இடவலமாய் சுழன்று....சுழன்று
வர்ணங்களுக்கு நடுவே 
உயிர் பெற்றுக் கொண்டிருக்க..

கலைஞர்களை விழுங்கி விட்டு கலை...அங்கே தனது நர்த்தனத்தை தொடங்கி இருந்தது...!


தேவா. S







ஒரு கோப்பை தேநீர்.....!

$
0
0



தேநீரைப் பருகும்
இடைவெளிகளில்
முதல் மிடறுக்கும்
அடுத்த மிடறுக்குமிடையில்
காதுக்குள் ஏதேதோ கிசு கிசுக்கிறார்...
நீங்கள் எப்போதும்
தேடும் கடவுள்...!

***

எப்போதும்...
தேநீர் தீர்ந்தவுடன்
கோப்பைக்குள் வந்து
படுத்துக் கொள்கிறது
எங்கும் நிறைந்த
ஏகாந்தப் பெருவெளி...!

***

தேநீர் கோப்பை
காலியாகி விட்டது...
எனக்குள்
மெளனமாய் நிறைந்திருக்கிறது
தேநீர்....!


***





என் கவனமெல்லாம்
தேநீரில் இல்லை
ஆனால்..
கோப்பையை எப்படி ஏந்துவது
ஒவ்வொரு பருகுதலின்
இடைவெளிகளில்...
எங்கே லயித்துக் கிடப்பது
என்பதில்தான்...!

***

தேநீர் அருந்திக்
கொண்டிருக்கிறேன்...
நானுமில்லை...
தேநீருமில்லை...!

***

கோப்பையில்
தேநீரை எடுத்து
தேநீரை மட்டும்
பருகிக் கொண்டிருக்கிறேன்...
வெளியே போய்விட்ட
எண்ணங்களுக்கு
எப்படித் தெரியும்
எனது ஏகாந்தம்...!


தேவா. S




அடக்க நினைத்த அரசு.....கொதித்து எழுந்த மாணவர்கள்! தொடரும் போராட்டம்...

$
0
0


இதே வேலையை கருணாநிதி செய்திருந்தால், தமிழினத் துரோகி என்று மூலைக்கு மூலை நின்று முன்னூறு முச்சந்திப்  போராளிகள் கொக்கரித்து இருப்பார்கள்.  இப்போது ஜெயலலிதா செய்ததால்  சட்டம் ஒழுங்கை சீராக பார்த்துக் கொள்ள சரியான நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்று ஒரு சாராரும்,  இல்லை.. இல்லை மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தினால் மட்டுமே அவர் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறார் என்று இன்னொரு சாராரும்....கருத்துச் சொல்வதைப் பார்த்தால்..

தமிழனின் சூடு சொரணை எல்லாம் இளிச்சவாயர்களைப் பார்த்துதான் புலிப்பாய்ச்சல் பாயுமோ என்ற ஐயம் கூட எனக்குத் தோன்றுகிறது. கருத்துப் போராளிகள் பொதுவெளியிலும், இணையத்திலும் இப்படி பம்முகிறார்கள் என்றால் ஊடகங்கள் கூட தங்களின் கண்டனக்குரலை வலுவாக எழுப்பாமல்...கள்ள மெளனம் சாதிக்கின்றன.

என்ன அநியாயம் இது...?

ஈழத்தில் அநீதி நடந்திருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளும் முதல்வர் ராஜபக்சேயை போர்க்குற்றவாளி என்று அறிவிக்கச் சொல்கிறார். அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று அவரது கட்சி எம்பிக்கள் பாரளுமன்றத்தில் போர்க்கொடி உயர்த்துகின்றனர். தமிழகத்துக்கு இலங்கையர்கள் விளையாட வருவார்கள் என்று சொல்லி ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தமாட்டேன் என்றும் சொல்லி விட்டார்...., இப்படி எல்லா விதத்திலும் ஈழப்பிரச்சினையில் தமிழக முதல்வரின் நிலைப்பாடு, சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த தம்பிகளின் நிலைப்பாட்டோடு ஒத்துதானே போகின்றது...?

குறைந்த பட்சம் யாரேனும் ஒரு அமைச்சரை அனுப்பி நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்ற ரீதியில் வாக்குறுதியைக் கொடுத்து சூழலை சரி செய்யாமல்.....பாசிச பற்களைக் கொண்டு போராடிய இளையர்களை கடித்துக் குதறியது எந்த விதத்தில் நியாயம்..? உண்ணாவிரதம் என்பது மகாத்மா காந்தியடிகள் வகுத்துக் கொடுத்த சத்திய வழிமுறை, அதை ஆங்கிலேயர்களே மிகக்கண்ணியமாக கருதி மகாத்மாவின் போராட்டங்களை ஏற்றுக் கொள்ளவும் செய்தார்கள்....

அந்தப்  புனிதரை தேசப்பிதாவாக கொண்ட நம் தேசத்தில் ஒரு நேர்மையான போராட்டத்தை இப்படித்தான் முரட்டுத்தனமாக காவல்துறையை வைத்து அடக்குவதா? 

ஈழத்தைப் பற்றி பேசியதற்காகவே ஒரு வருடத்திற்கும் மேலாக வைகோவை பொடாவில் அடைத்து வைத்திருந்ததையும் மக்கள் மறக்கவில்லை, ஈழத்தை கடுமையாக எதிர்க்கும் சோ போன்றவர்களோடு முதல்வர் கொண்டிருக்கும் நட்பு எத்தகையது என்பதை யாரும் அறியாமலும் இல்லை....மேலும் இப்போது ஈழ ஆதரவு என்ற உங்களின் குரலின் மூலம் நாதியற்று நின்ற தமிழினத்தின் வாக்குகளை எல்லாம் வசூலித்துதான் அரியணை ஏறினீர்கள் என்பதும் பச்சைப்பிளைக்கு கூடத் தெரியும்

காலம் இப்போது உங்கள் காலடியில் கால்பந்து போல பணிந்து  கிடக்கிறது முதல்வர் அவர்களே!!! உங்கள் கோட்டுக்குள் நிற்கிறது பந்து. 2016 வரையிலும் எந்த திசைக்கு வேண்டுமானாலும் நீங்கள் பந்தை அடித்து விளையாடுங்கள்....

2009 பாரளுமன்றத் தேர்தலில் இவர்களுக்கு வாக்களித்தால் ஈழத்தில் போர் நிறுத்தப்படுவதோடு இந்தியாவிலும் ஒரு மதச்சார்பற்ற அரசு உருவாகும் என்ற இந்திய கூட்டு மனோபவத்தின் படி ஒவ்வொரு தமிழர்களும் வாக்களித்து எங்களுக்கு நாங்களே வாக்கரிசி போட்டுக் கொண்டதின் விளைவு.....

எங்கள் பிள்ளைகளின் வெற்று உடம்புகளில் சிங்களக் காடையர்களின் துப்பாக்கிக் குண்டுகள் இறங்கின, எமது சகோதரிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளானார்கள், இராசாயன குண்டு வீசி பாதுகாப்புப் பகுதியிலேயே பாதுகாப்பாய் சமாதியாக்கப்பட்டன எமது உறவுகளின் உடல்கள், இறந்த உடல்களைப் புணர்ந்தும், புணர்ந்த உடல்களைப் படமெடுத்தும் வெளியிட்டு தனது கோரப்புத்தியை காட்டினான் ஈன சிங்களக் நாய்....

ஒரு விடுதலைப் போராட்டம் உலக நாடுகள் எல்லாம் ஒன்று கூடி நின்று இந்திய தேசத்தின் உதவியோடு மிதித்து நசுக்கி அழிக்கப்பட்டது. .......!!!!! இத்தனைக்கும் பிறகு தாய் தமிழகத்தில் எங்கள் எதிர்ப்பினை காட்டக் கூட கூடாது என்றா எப்படி முதல்வர் அவர்களே.....?!!!!  எப்படி பார்த்தாலும் நேற்றைய போராட்டத்தை கண்டு எதற்காக மற்ற கட்சிகள் பயந்தனவோ அதே பயத்தில்தான் ஆளும் கட்சியான நீங்களும் பயந்திருக்கிறீர்கள்...! ஆமாம்  அமைதியாய் நடந்த போரட்டத்தால் என்ன சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று பயந்து இப்படியான அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டீர்கள்....?

சமூகப் பிரச்சினைகளுக்கு மக்கள் போராடினால் அதுவும் மாணவர்கள் போராடினால்....பிறகு நாம் அரசியல் செய்ய இங்கு என்ன இருக்கிறது என்ற பயம் எல்லோரையும் போல உங்களுக்கும் வந்திருக்காவிட்டால்தான் அது ஆச்சர்யம். முத்துக்குமாரன்களும், செங்கொடிகளும் எரிந்து போயிருக்கலாம்....ஆனால் இனி தமிழ்  பிள்ளைகள் யாரும் தங்களை அவ்வளவு சீக்கிரம் கொளுத்திக் கொண்டு மாய்ந்து போய்விட மாட்டார்கள். 

எட்டு பேரின் உண்ணாவிரதத்தை அதிகாரம் கொண்டு தடுக்க முயன்றீர்கள்....இதோ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது தமிழ்நாடு இன்று..... 8 இப்போது 27 ஆக உயர்ந்திருக்கிறது, 27 என்பது 100 ஆகும்...100 லட்சமாகி கோடிகளில் நின்று கொண்டு புரட்சி முழக்கமிடும்....அப்போது என்ன செய்வீர்கள் என்று பார்க்கலாம்...?


தேவா. S




திராவிடக் கட்சிகளும்... திக்குத் தெரியாத தமிழர்களும்!

$
0
0



டோரன்ட்டில் எல்லா படத்தையும் உடனே உடனே ரிலீஸ் செய்து விடுகிறார்கள். சமீபத்தில் தொடர்ச்சியாக மூன்று படங்கள் பார்த்தேன். ஹாட்ரிக் ஃப்ளாப் மூவீஸ். முதல் முப்பது நிமிடத்துக்குப் பிறகு எனக்கு படம் பார்க்கும் பொறுமை  சுத்தமாய் இல்லாமல் போய் விட்டது. எழுந்து போய் பால்கனியில் வெறுமனே உட்கார்ந்து வானம் பார்த்துக் கொண்டிருப்பதை விட்டு விட்டு என்ன இது அபத்தம் என்று மிச்ச படத்தை சக தர்மினியிடமும், மகளிடமும் விட்டு, விட்டு எழுந்து வந்து விட்டேன்.

ஆதி பகவான், சந்தமாமா, ஒன்பதுல குரு என்ற மூன்று படங்களையும் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு  படைத்தளித்த படைப்பாளிகளுக்கு எனது வந்தனங்கள். மெனக்கெட்டு அதைப் பற்றி உங்களிடம் பேசிக் கொண்டிருந்தால் பிறகு எனக்கு ' 7 அப்' போ அல்லது ஸ்பைரைட்டோ வாங்கி, கிளாஸில் ஊற்றி லெமனும், சால்ட்டும் போட்டு நீங்கள் கொடுத்து என் வயிற்றுக் குமட்டலை சரி செய்ய வேண்டி இருக்கும் என்பதால்.. மூன்று படங்களையும் நான் உங்களை சாட்சியாக வைத்து இப்போதே மறந்து விடுகிறேன்.

நிறைய எழுதுவதற்கு போதும், போதுமென்று சுற்றிலும் ஓராயிரம் சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தாலும் எல்லாமே செவியோடு செய்தியாய் நின்று விட்டு பிறகு டாட்டா  பை..பை.. என்று கிளம்பி விடுகின்றன. தாக்கத்தைக் கொடுக்கும் படியாய் ஒரு மனிதரையும், ஒரு புத்தகத்தையும், ஒரு சினிமாவையும்  ரொம்ப நாளாய் நான் பார்க்காமல் இருக்கிறேன் என்பதுதான் உண்மை. ஈழப்பிரச்சினைக்காக மாணவர்கள் வெகுண்டெழுந்து நடத்திக் கொண்டிருக்கும் மாணவப் போராட்டங்களைத் தவிர வேறெதிலும் எனக்கு ஒரு ஈர்ப்பு இல்லை.

ஈழப்பிரச்சினையை பொறுத்தவரை இன்று எல்லா அரசியல் கட்சிகளும் ஈழத்தைப் பற்றி பேச வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கிக் கொடுத்தது மிருகத்தனமாய் போரை நடத்திய கொடூரன் ராஜபக்சேதான். எந்த ஆயுதத்தை நாம் எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரியே தீர்மானிக்கிறான் என்ற கூற்று இப்போது மெய்ப்பட்டுப் போயிருக்கிறது. ஈழம் தமிழக அரசியல் போக்கினைத் தீர்மானிக்கும் மிகப்பெரிய சக்தியாய் விசுவரூபமெடுத்திருக்கிறது...! ஈழம் பற்றி பேசாமல் யாரும் இனி தமிழகத்தில் அரசியல் நடத்த முடியாது...!

ஆனால்...

கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தீர்களேயானால், மூன்றாவது ஈழப்போர் நடந்து கொண்டிருந்த போது தமிழகத்தின் மிகையான முக்கிய அரசியல் கட்சிகள் ஏதோ ஒப்புக்காக சில போராட்டங்களை அரசியல் சுயலாபத்திற்காக முன்னெடுத்துக் கொண்டிருந்தனவே அன்றி உணர்வுப் பூர்வமாய் யாரும் அப்போது ஈழத்தை பார்க்கவில்லை. அப்போதைய ஆளுங்கட்சியான திமுக செய்த எல்லா பிளக் அண்ட் வைட் அரசியல் ஸ்டண்ட்களும்...ஏனோதானோ என்று மக்களை குறைத்து மதிப்பீடு செய்து ஏமாற்றி விடலாம் என்ற ரீதியில்தான் இருந்தது....!!!! இதில் கொடுமை என்னவென்றால் அந்த ஸ்டண்ட் அடித்து அரசியல் செய்யும் மனோபாவத்தை விட்டு அவர்கள் இன்னமும் வெளியே வராததுதான். சமூக ஊடகங்களின் மூலம் உலகமே சிறு கிராமமாய் மாறிப் போயிருக்கிறது. ஆன்லைனில் இருப்பவர்கள் ஆஃப் லைனில் இருப்பவர்களிடம் பேசுவார்கள்...

இணையப் போராளிகளுக்கும், உறவுகள், நண்பர்கள் இருக்கிறார்கள். விர்ச்சுவலாய் பேசிக் கொண்டாலும் இரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களே இங்கே உலாவுகிறார்கள் என்பதை எல்லாம் கொஞ்சம் இவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டி இருக்கிறது. இணையம்.. என்ன செய்யும்..? அல்லது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை இன்னும் பத்து வருடங்கள் கழித்து தெளிவாய் அரசியல்வாதிகள் புரிந்து கொள்வார்கள். 

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்ற ரீதியில் பேசி ஓட்டுக் கேட்டு வென்ற அதிமுகவின் தலைமை ஒரு சில நிலைப்பாடுகளை ஈழத்துக்கு ஆதரவாக எடுப்பது போல எடுத்து திமுகவை பிடித்து கீழே தள்ளி தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முயன்றதே அன்றி....உண்மையான ஈழ ஆதரவு என்பது அம்மையாரைப் பொறுத்தவரை ஜீரோ பர்ச்ன்டேஜ்தான். போர் நடந்த போது தமிழகத்தில் அதிமுக எத்தனை அதிரடியான போராட்டங்களை அந்த மக்களுக்காக நடத்தியது...? போர் நடந்த போது அதிமுக தலைமை என்ன செய்து கொண்டிருந்தார்...? என்பன போன்ற கேள்விகள் எல்லாம் இன்னமும் நம்மிடம் மிச்சமிருக்கின்றன....

திமுக., அதிமுக என்ற இரு நாடகக் கம்பெனிகளின் கையில் சிக்கிக் கொண்டு தமிழக மக்கள் பேய் முழி முழித்துக் கொண்டிருப்பதை சாதகமாக்கிக் கொண்டுதான் காங்கிரஸ் உள்பட மற்ற எல்லா தமிழக அரசியல் கட்சிகளும் தங்களின் நகர்வுகளைத் தீர்மானித்துக் கொள்கின்றன, மாறாக தமிழக மக்கள் எதிர்ப்பார்க்கும், ஸ்திரமான ஒரு மாற்றுக் கட்சியாய் தங்களை முன்னெடுத்து மேலேறி வர சமகாலத்தில் யாருமே இல்லை என்பதே நிதர்சனம்.

விஜயகாந்த் எல்லாம் அரசியல் நடத்தி, தலைமை தாங்கி நமக்கு விமோசனம் வாங்கித் தந்து விடுவாரா என்ன...? திமுகவையும் அதிமுகவையும் ஒரு பங்கில் வைத்துக் கொண்டாலும் சர்வ நிச்சயமாய் விஜயகாந்த் எல்லாம் நிராகரிக்கப்பட்டே ஆகவேண்டும். எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பெல்லாம் இல்லை அவர் மீது....இருந்தாலும்.. என்ன கொள்கை இருக்கிறது அவரிடம்..? ஏன் அவரை நாம் மாற்று சக்தியாக பார்க்க வேண்டும்...? என்ற கேள்விகளுக்குத்தான் பதில் தெரியவில்லை.

குடிக்க தண்ணீர் இல்லை என்றால் மாற்று என்று கூறி வாழ்வதற்கு ஆசைப்பட்டு விசம் குடித்து செத்து விடுவோமா என்ன....? அப்படி விசம் குடித்து சாக முடிவெடுத்தால் அது எத்தகையதோ அத்தகையது... விஜயகாந்தை ஆதரிப்பது என்பது...!!!!!?

தமிழகத்தின் இப்போதைய தேவை வலுவான மாற்று சக்தி. இளையர்களை வழி நடத்தக் கூடிய தெளிவான அரசியல் பார்வைகள் கொண்ட திடமான கொள்கைகள் கொண்ட ஒரு தலைவர். இப்படியான ஒரு இளைஞர் இருந்தார். அவரையும் நேரத்தே காலத்தே தலைவராக்கி, தமிழகத்தின் முதல்வராக்கிப் பார்க்காமல் ...காங்கிரஸோடு கை கோர்த்துக் கொண்டு சடு குடு ஆடி...சறுக்கி விழுந்தவராய் ஆகி விட்டார் கலைஞர். தமிழக அரசியலை இப்படி ஆளுமை செய்தவரும் இல்லை..அசிங்கப்பட்டவரும் இல்லை. ஸ்டாலினை முன்னிறுத்தி, காங்கிரசை செருப்பால் அடித்து துரத்தி விட்டு...திமுக வரும் பட்சத்தில்...., தமிழர் நலனை நிஜமாய் உற்று நோக்கி நகரும் பட்சத்தில், அடுத்த இருபது வருட அரசியலை திமுகவால் கண்டிப்பாய் தீர்மானிக்க முடியும்....

ஆனால்.. இதெல்லாம் நடக்குற காரியமாகத் தெரியவில்லை.....

அது போகட்டும்...

சரியான வழிகாட்டுதலும் தலைவர்களும் இல்லாமல் அனாதைப் பிள்ளைகளாக நம் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஈழத்தாய் அதை அதிகாரத்தால் நசுக்கி அழித்துக் கொண்டிருக்கிறார். அவரின் முக்காடு விலகி இருக்கிறது.....! உண்மையான தமிழின ஆதரவாளர்கள் அரிதாரமிட்டு தமிழர் ஆதரவு நாடகம் நடத்துபவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

சரி கட்டுரையின் முதல் பாராவிற்கே மீண்டும் வந்து விடுகிறேன் . டோரண்டில் எல்லா புதுப் படமும் உடனே உடனே வந்து விடுகிறது. மூன்று சூப்பர் ஹிட் மொக்கைப் படங்களுக்குப் பிறகு....பாலாவின் பரதேசியை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. கடந்த வாரம் முழுதும் பாலாவை கஞ்சி காய்ச்சிய க்ரீன் கிராஸ் (மிருகங்களுக்கு ப்ளூ க்ராஸ்னா.. மனுசங்களுக்கு க்ரீன் க்ராஸா இருக்கப்படாதா என்ன....? ஆனைக்கு தெலுங்குல அர்ரம்ன்னா.. குதிரைக்கு குர்ரம்தானே...!!!!!) மெம்பர்ஸ் எல்லாம் இப்போது வாய் பிளந்து படம் நல்லா இருக்காம்ல என்று ஆங்காங்கே பேசிக் கொண்டிருக்கிறார்கள்...

அவன் அடித்த தடி ஒரிஜினலா டூப்ளிக்கேட்டான்னே தெரியாம....பொங்குன பொங்கல்களுக்கு எல்லாம் மெளனமாய் பாலா என்னும் படைப்பாளி பதில் கூறியிருக்கிறான். கதை யார் வேண்டுமானாலும் எழுதலாம்....அதை திரையில் காட்சியாய் கொண்டு வரும் சிரமத்தை, வலியை ....வார்த்தைகளுக்குள் கொண்டு வர முடியாது...

பரதேசியைப் பார்த்து விட்டு விமர்சனம் எல்லாம் நான் எழுதப்போவது இல்லை, எனக்குள் நிகழும் மாற்றங்களை பதிவு செய்ய முயல்கிறேன்.....அவ்வளவுதான்.....

அப்போ.....வர்ர்ர்ர்ர்ர்ட்ட்டா..!


தேவா. S




ருத்ராட்சம்....!

$
0
0


எந்தப் பரதேசியைப் பற்றி எழுத? என்று யோசித்துக் கொண்டிருக்கையில் மீண்டும் சடாரென்று கடந்து போன அந்த அதிர்வுகள் நிரம்பிய மஹாசிவராத்திரிக்குள் விழுந்து விட்டேன். சனிப் பிரதோஷமும், அதனையடுத்த மகா சிவராத்திரியும் எங்கிருந்தோ என்னைத் தேடி வந்த ஒரு முக ருத்ராட்சமும், அதை அணிய ஷீரடியில் இருந்து யார் மூலமாகவோ வந்த கருப்பு கயிறும் என்னோடு ஒட்டிக்கொள்ள....முழுமையான அதிர்வுகளில் நான் நிரம்பி வெறுமையில் பரதேசியாக நின்றிருந்தேன்.

சிறுவயதில் இருந்தே சிவனைப் பிடிக்கும்.  சிவனைப் பிடித்ததால் ருத்ராட்சமும் பிடிக்கும். ருத்ரனின் நெற்றிகண்ணில் இருந்து வந்த நெருப்பு பொறிதான் ருத்ராட்சம் என்று புராணங்கள் மூலமாக ஒரு நெருப்பினை எனக்குள் செல்வமணி மாமா ஏற்றி வைக்க, ரஜினியும் ருத்ராட்சம்  அணிகிறார் என்ற ஈர்ப்பு என்னை இழுத்து வைக்க....20 வயதில் ஐந்து முக ருத்ராட்சத்தை ஒரு காது குத்துக்காக அழகர்கோவில் போன போது வாங்கி அணிய ஆரம்பித்தேன். ருத்ராட்சத்திற்கு என்ன சக்தி இருக்கிறது என்றெல்லாம் ஆராய முற்படாத ஒரு மனது அப்போது. ருத்ராட்சத்தை நல் ஒழுக்கத்தின் அடையாளமாக மட்டும் அறிந்து அதை நான் அணிகிறேன் என்று என் வயதை ஒத்தவர்களிடம் விளம்பரம் செய்து கொள்ளும் மனோநிலை மட்டுமே என்னிடம் இருந்தது.

பிரதோஷ விரதமும் ருத்ராட்சமும் என்னை இப்படி ஏதோ ஒரு விதத்தில் பிடித்துக் கொள்ள, கூட்டமில்லாத சிவாலயங்கள் என்னை ஏனோ அதிகமாய் வசீகரிக்கத்தன. இப்போது சிவ வழிபாட்டில் நிறைய பேர்கள் ஈடுபடுகிறார்கள். சிவனை லெளகீகத்துக்கும் சொந்தமனவர், என்ற மதரீதியான அடையாளம் பரப்பப்பட்ட போது நிறைய பேர்கள் குறிப்பாக, நாகாத்தம்மன் கோயிலையும், மேல் மருவத்தூர் ஆதிபராசக்தியையும் வணங்கிக் கொண்டிருந்த பக்திக் கூட்டம் சிவாலயங்களை பிரதோஷ தினங்களில் நிரப்பத்  தொடங்கி இருந்தது.

சிவம் என்னும் சத்தியத்தை, முழுமையை உருவம் கடந்து, அருவம் உடைத்து உணர்வாய் உணரத் தொடங்கி இருந்த போது, நான் ஒற்றீஸ்வரர் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தேன். திருவொற்றியூர் எனக்குப் பிடித்த இடமாய் போயிற்று, காளையார்கோயில் காளீஸ்வரர் சன்னதியும், திருப்பத்தூர் திருத்தளிநாதர் சன்னதியும், முசிறி கைலாச நாதர் சன்னதியும் நான்  காதலோடு சுற்றித் திரிந்த இடங்கள். அப்போது சிவன் எனக்குள் சம்மணமிட்ட உருவமாய் அந்த அந்த கற்பகிரகங்களுக்குள் நின்று ஏதேதோ கதைகள் சொல்வார். கண்மூடி ஏதோ ஒரு தூணருகே அமரும் தருணங்களில் இன்னதென்றே தெரியாத பெரும் பிணியாய் சமகால வாழ்வு தெரிய என்னவென்று அறிய முடியாமல் கண்ணீர் வழிய பைத்தியக்காரனாய் ஓம் நமசிவாய என்னும் ஐந்தெழுத்தை ஓதிக் கொண்டே இருந்திருக்கிறேன்.

ஒற்றீஸ்வரர் கோயிலுக்குப் போகும் போது அப்படி அல்ல. வேறு ஒரு புரிதல் இருந்தது. அந்தப் புரிதலுக்கு பாலகுமாரனின் எழுத்து எனக்கு உதவியது. இருளில் வழிகாட்டும் கை விளக்காய் அவரின் சிந்தனைகள் என்னை வெளியே வரவிடாமல் உள்ளுக்குள் தள்ளியது. பட்டினத்தாரும், அருணகிரி நாதரும், இரமண மகரிஷியும், சேஷாத்ரி சுவாமிகளும், பதினெட்டுச் சித்தர்களும், 64 நாயன்மார்களும், சிவபுராணமும் சைவ சித்தாந்தமும் விவேகானந்தரும்.... எனக்கு துணையாய் இருந்தனர்.

மணிக்கணக்கில் ஒற்றீஸ்வரர் முன் அமர்ந்து சிவபுராணம் சொல்லி, வெறுமனே சுவாசிக்கும் ஒரு ஜந்துவாய் எண்ணங்களற்று கிடந்து வரும் சுகம் எனக்குச் சொர்க்கமாகத்தான் இருந்தது. கொடுத்தலும் பெறுதலும் அல்ல ஆன்மீகம். வெறுமனே இருத்தல். இப்படி வெறுமனே இருத்தல் உள்ளதை உள்ளபடி பார்க்க வைக்கும். உள்ளதை உள்ளபடி பார்க்கும் போது அப்படியாய் பார்ப்பதில் இருக்கும் சத்தியம் புரியும். சத்தியத்தை உணரும் போது நாம் என்ன செய்யவேண்டும் என்ற தெளிவு வரும். தெளிவான செயல்கள் சரியான விளைவுகளைக் கொடுக்கும். சரியான விளைவுகள் நிம்மதியைத் தரும். நிம்மதி....நான் உடலென்ற நிலை கடந்த பேருண்மைக்கு கூட்டிச் செல்லும்.

பேருண்மைக்கு கூட்டிச் சென்றால் என்னவாகும்....? 

தெரியவில்லை. அதை நோக்கிய நகர்வுதான் 35 கழிந்து 36 ஆம் வருடத்திற்குள் என்னை கூட்டி வந்து நிறுத்தி இருக்கிறது. ருத்ராட்சம் ஐந்து முகம் யார் வேண்டுமானலும் அணியலாம். எந்த செயல் செய்தாலும் அகம் சுத்தமாய் இருக்க வேண்டும். அகச் சுத்தம் புறச்சுத்ததை தானியங்கியாய் நிறுவும். புறமும், அகமும் அழகாக வாழ்க்கை அழகாகிப் போகும். புறச்சுத்தம் மட்டும் இருந்து அகம் சுத்தமில்லாதவர்கள் மனநோய்க்கு ஆளாக நேரிடும். ருத்ராக்க்ஷம் மின் காந்த அதிர்வுகள் கொண்டது அது நேர்மறையான அதிர்வுகளை அணிந்திருபவர்களுக்கு கொடுக்கிறது. இப்படி எல்லாம் விபரம் அறிந்தவர்கள் கூற அதை ஆன்மா எந்த வித ஆராய்ச்சிக்கும் உட்படுத்தாமல் ஏற்றுக் கொள்ள தொடங்கியது என் ருத்ராட்ச பயணம்.

ஒருமுக ருத்ராட்சம் சிவனின் அம்சம். கூர்மையானது. நீயும் நானும் ஒரு சத்தியம்தான் என்றாலும் உன்னையும் என்னையும் யார் யாரோவென்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஒருமுகம் என்பது எண்ணங்களை குவிக்க குவிக்க ஒற்றைப் புள்ளியில் நினைவுகள் ஓடி ஒளிய உள்ளுக்குள் ஏற்படும் பிரமாண்டம். வெற்றிடம். வெற்றிடம் என்பது ஒரு முகத்தின் நுனி. ருத்ராட்சம் உன்னையும் என்னையும் உள்நோக்கி பயணிக்க வைக்கும் ஒரு சூட்சுமத்தின் ஸ்தூலக் குறியீடு. ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு அதிர்வு. ஒரு முகத்தின் அதிர்வுகள் கூடுதல்.

அதை வாங்கிக் கொள்ளும் தன்மை பாத்திரத்துக்கு இருக்க வேண்டும். நீ ஒரு முகம் ருத்ராக்க்ஷம் அணிய வேண்டும் என்று விலை கொடுத்து வாங்கலாம்...ஆனால் அணிய முடியாது. சத்தியத்தை ஏற்றுக் கொண்டு அசத்தியத்தை செய்தால் அப்படி செய்பவனுக்கே அது அழிவு. இன்னும் சொல்லப் போனால்....ஒரு முகம் ருத்ராட்சத்தை நீ அணியவேண்டுமானால் நீ அதை தேர்ந்தெடுக்கவே முடியாது. காலச் சூழலும் உனது பக்குவமுமே உன்னை  ஒரு முகத்திடம் கொண்டு சேர்க்கும்...அதுவரையில் இட்ட பிச்சையை புசித்து வாழ்ந்து வா....

ஒற்றீஸ்வரர் கோயிலில் ஒரு யோகி கூறியதை ஆன்மா உள்வாங்கிக் கொள்ள இட்ட பிச்சையைப் புசித்து நடந்து கொண்டிருந்த என்னிடம் இப்போது ஒரு முகம் வந்து சேர்ந்து விட்டது. நேபாளம், இந்தியா, சிங்கப்பூர், மீண்டும் இந்தியா வழியாக துபாய் வந்து சேர்ந்த கதையை நான் இப்போது சொல்லப் போவதில்லை. அது விதி. பரதேசம் போகவேண்டிய பரதேசியின் விதி. இழுத்துச் செல்லும் சக்தியோடு ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஆன்ம பயணத்தில் ஒரு மைல்கல். அஹம்ப்ரமாஸ்மி....நீயே கடவுள்.. பிறகு ஒருமுக ருத்ராட்சம் என்ன செய்து விடும் என்ற புரிதலான கேள்விகள் எல்லாம்....ஏறி வந்து மறைந்து போக படிகள் வேண்டாமா? மேலேற்றி விட கைகள் ஏதும் இல்லாமல், வழித்தடங்கள் இல்லாமல் ஏறிச்  சென்றுதான் விடமுடியுமா? என்ற எதிர்கேள்விகள் கேட்ட போது செத்துப் போய்விட்டன.

உணர்வு நிலை என்னும் சூட்சுமத்தின் ஸ்தூல அடையாளம் இது. சிவம் என்னும் சலனமற்ற சூன்யத்தின் சக்தி குறியீடு. போகிக்கும். யோகிக்கும் மத்தியில் இஸ்லாம் வர்ணிக்கும் ஸிராத்துல் முஸ்தகீம் என்னும் மயிரினும் மெல்லிய பாலத்தை நான் இப்போது கடந்து கொண்டிருக்கிறேன்.

கடந்த பிரதோஷ தினத்தில் என்னோடு ஒட்டிக் கிடந்த ஐந்து முகம் என்னை விட்டு பிரிய உடல் பிரிந்த ஆன்மாவாய் என்னோடு ஒட்டிக் கொண்டது இந்த ஒருமுகம். இருந்த உயிரின் தடிமன் இன்னும் இன்னும் அழுத்தமாய் படர்ந்து கொள்ள மனம் உள்முகமாய் இன்னும் ஆழமாய் திரும்பிக் கொண்டது. உடலை சூழ்ந்து கொண்ட அதிர்வுகள் எங்கிருந்து பிறந்தன என்று என்னால் யோசிக்க முடியவில்லை....ஆனால் இன்னும் எதார்த்தமாய் அழுத்தமாய் தரையில் எனது கால்கள் பதிய நின்று கொண்டேன். நகர்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்கு இன்னுமொரு உந்து சக்தியாய் எனக்கு இந்த ஒருமுகம்  கிடைத்திருக்கிறது.

ஒருமுகம் ஏதோ ஒன்றை எனக்குச் செய்து விடும் என்று உங்களுக்கு இங்கே நான் சொல்ல வரவில்லை.....எப்படி ஒரு காந்ததிற்கு ஈர்ப்பு நிறைந்த அதிர்வுகள் இருக்கிறதோ அப்படியான அதிர்வுகளை இந்த ருத்ராட்சமும் கொண்டிருக்கிறது என்ற உண்மையை உணர்ந்ததின் அடிப்படையில் இங்கே பதிவு செய்கிறேன். அதற்கு மேலதிகமாக எதை நான் சொன்னாலும் அது முழுமையைச் சொன்னதாகாது. முன்னும் பின்னும் அலையும் மதயானையைப் போல காலம் நம்மிடம் பிரமாண்டப்பட்டுப் போயிருந்தாலும் நிஜத்தில் அப்படி ஒன்றுமே இல்லை என்பதை உணரும் கணம் ரொம்பவே வித்தியாசமானது.

பக்தி என்பதும், கடவுள் என்பதும் படி நிலைகளாக இருந்தாலும் அவை கொண்டு சேர்க்கும் இடம் சர்வ நிச்சயமாய் நாம் கொண்டிருக்கும் எண்ணங்களுக்கு எல்லாம்  அப்பாற்பட்டது. பிரமாண்டம் என்ற சொல்லை கேட்டு விட்டு அதையும் மட்டுப்படுத்திதான் மனது கற்பிதம் கொள்ளும். சொல்வது எல்லாமே சத்தியத்தைப் போன்றதுதானே அன்றி சத்தியம் வேறாகவே இருக்கிறது எப்போதும். எனது சுமையை ஒரு கூலியாய் நான் சுமந்து நகர்கையில் சுற்றியிருக்கும் கூலிகளின் சுமை தூக்கும் அனுபவங்களும் எனதாகிப் போகிறது. உயிரோடு இருக்கும் வரையில் நாம் எடுத்து வைத்து பேசிக் கொண்டிருக்கும் பல பிரச்சினைகள் இறந்த பின்பு காணாமலேயே போக....மிச்சமிருக்கும் ஏதோ ஒன்று உறுத்தலாய் அதிர்வுகளாய்தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

வாழும் வரை வாழ்க்கையை ஏதோ ஒரு கனவில் வாழ்ந்து விட்டு மரித்துப் போகும் அவல நிலையை விட்டு அந்தப் பெருஞ்சக்தி என்னை இப்போது நகர்த்தி வைத்திருக்கிறது. லெளகீகத்தின அவசியம் எனக்கு அவசியமற்றதாகவும், எனது அவசியம் லெளகீகத்துக்கு அனாவசியமாகவும் இருக்க....

யாருமற்று வந்த நம்மை யாருமற்று கொண்டு செல்ல அதோ காத்துக் கிடக்கிறது காலம். உற்றார், உறவினர், வந்தவன் போனவன், ஏழை பணக்காரன், நல்லவன், கெட்டவன், அதிகாரி, அமைச்சன், அடிமைகள், அறிவாளிகள், முட்டாள்கள்.. என்று எல்லோரையும் மென்று தின்று விட்டு நகரப்போகிறது அது....

இந்த உலகத்திற்குள் நான் வந்து ஏற்றுக் கொண்டிருக்கும் பாத்திரத்தை குறையில்லாமல் செல்ல வேண்டும் என்ற சிரத்தையோடு நகர்ந்து கொண்டிருக்கிறது இந்தப் பரதேசியின் பொழுதுகள்...அவ்வளவே...!

ஓடமுள்ள போதெலாம் ஓடியே உலாவலாம் 
ஓடமுள்ள போதெலாம் உறுதிபண்ணிக் கொள்ளலாம் 
ஓடம் உடைந்தபோது ஒப்பிலாத வெளியிலே 
ஆடுமில்லை கோலுமில்லை யாருமில்லை யானதே....!


தேவா. S

பரதேசி....!

$
0
0


தடித்த தோல் எனக்கில்லை. உலக இலக்கியங்களையும், திரைப்படங்களையும் அவ்வப்போது கடந்து சென்றாலும் புத்தியின் தடிமன் கூடிப் போவதுமில்லை. விசால அறிவுகள் எவ்வளவு அபத்தமானது அது எப்படி வாழ்வின் அழகியலைச் சிதைக்கின்றன என்பதை பரதேசி திரைப்படத்தைப் பற்றிய ஜாம்பவான்களின் பார்வைகளில் இருந்து புரிந்து கொண்டேன். வானவில்லுக்கு இன்னமும் ஆச்சர்யமாய் வாய் பிளந்து அதன் வர்ண ஜாலத்தில் நான் திணறிப் போய் நிற்கிறேன்...

தினசரி சூர்ய உதயத்தின் போது வானம் நடத்தும் ஜாலங்களில் மயங்கிக் கிடக்கிறேன். மொட்டுக்கள் எல்லாம் பூவாகும் தருணம் எதுவாயிருக்கும் என்று மூளையை கசக்கிக் கொண்டிருக்கிறேன்....புற்களின் மீது அழுந்தக் கால் பதிந்து கடந்து செல்லும் பூனையொன்றை வம்புக்கிழுத்து....ஏய் புற்களை மிதிக்காதே என்று பொய்யாய் அதட்டி சிரிக்கிறேன், அந்தப் பூனையின் ப்ரியத்தை விழிவழியே பெற்றுக் கொண்டு நன்றியை விழி வழியே நானும் கொடுக்கிறேன்...இப்போது சொல்லுங்கள் பரதேசி என்னும் திரைப்படம் என்னை என்ன செய்து இருக்கும் என்று..? எதிர்பார்ப்பு என்பது கடந்த கால நிகழ்வுகளின் திணிப்பு.  அதுவும் பாலா என்னும் மனிதர் தனது திரைப்படங்களின் மூலம் பதிவு செய்யும் அமானுஷ்ய உணர்வுகளை ஏந்திக் கொள்ளும் எதிர்ப்பார்ப்பு என்க்குள் மிகையாய் இருந்தது உண்மைதான்.

மனிதர்களை வைத்துக் கொண்டு உளவியலை மையப்படுத்திய சமூகப் பார்வைகளை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல சமகாலத்தில் பாலாவை விட்டால் வேறு யாரும் இல்லை என்பது எனது அபிப்ராயம். அவரது கதைக்களம் எப்போதுமே நாம் அன்றாடம் கடந்து செல்லும் ஆனால் பார்க்க விரும்பாத மனிதர்களை பற்றியதாய்த்தான் இருக்கும். விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் அசுரத்தனமாக எதுவேண்டுமானாலும் முன்னேறலாம். மனிதன் தன்னை நாகரீகமாக காட்டிக் கொண்டு மாறியதாக நடிக்க வேண்டுமானால் செய்யலாம். அடிப்படையில் அவனது ஆதி குணங்கள் அவனை விட்டுப் போகாது என்பன போன்ற மறைமுக செய்திகளை செவுட்டில் அறைந்து எப்போதும் போல இந்தப்படத்திலும் பாலா சொல்லி இருக்கிறார்.

நாஞ்சில் நாடனின் இயல்பான வசனமும், பாலாவின் எதார்த்தமான திரைக்கதையும்,  அதர்வாவின் நேர்த்தியான நடிப்பும் மூலக்கதையான எரியும் பனிக்காடு என்னும் நாவலை திரையில் பாலாவின் பாணியில்  பிம்பமாக்கியிருக்கிறது.இளையராஜா அளவிற்கு இல்லை என்று தோன்றினாலும்..... மிகப்பெரிய குறையில்லாமல் பாடல்களையும், திரையிசையையும் கட்டி இழுத்துச் சென்று ஈடு கொடுத்திருக்கும் ஜி.வி. பிரகாஷும்....தெறிக்கும் வார்த்தைகளைக் கொண்டு...உணர்ச்சிப் பிழம்பாய் பாடல்களை எழுதியிருக்கும் வைரமுத்துவும் பாராட்டுக்குரியவர்கள். வலிக்கும்  உண்மையை திரைக்கதை பேசிக் கொண்டிருக்கையில் அதர்வாவின் தாடி வளர்ந்திருக்கிறதே தலை முடி வளரவில்லையே என்று யோசித்து குற்றம் சொல்லும்  குரூரம் எனக்குள் இல்லை. ஒட்டுப் பொறுக்கியாகவே வாழ்ந்திருக்கும் அதர்வாவும் 1930கள் வாக்கில் காட்டப்படும் அந்த கிராமமும் எப்படி இவ்வளவு சுத்தமாய் இருக்கிறது என்று ஆராயும்...ஒரு விஞ்ஞானியின் மனப்பான்மை எனக்கு சுத்தமாய் இல்லவே இல்லை.

அந்த கிராமத்து மக்களின் வாழ்வின் ஒரு ஸ்லாட் எனக்கூடிய ஒரு சிறு காலகட்டத்தைப் பதிவு செய்திருக்கும் பாலா அதை மகிழ்ச்சி நிறைந்ததாய் காட்டி இருக்கிறார். அதர்வா விறகு உடைத்து விட்டு கூலிக்காக கெஞ்சும் இடத்தில் மிகத்தெளிவாய் புரிகிறது நமக்கு அவர் சார்ந்திருக்கும் சிறு கிராமத்து மக்கள் அத்தனை பேரும் வர்க்க ரீதியாய் ஒடுக்கப்பட்டவர்கள் என்று..... வேலை பார்த்தவனுக்கு கூழை குடித்து விட்டுப் போடா என்று டீக்கடைக்குள் நின்று விரட்டுபவன் வெள்ளைக்காரன் இல்லை... அவனும் அதே சமூகத்தில் வாழும் ஒரு மனிதன் தான். பொருளாதாரம் என்பது எப்போதுமே காலத்தின் முன்பு நிறைவானதாக இருப்பது இல்லை. மனித சமூகம் சிறப்பான வாழ்க்கையை நோக்கி எப்போதுமே நகர்ந்து கொண்டுதான் இருந்திருக்கிறது.

கிராமங்களில் இருந்து பட்டணம் நகரும் மனிதர்களில் தொடங்கி, என்னைப் போல பிழைப்புக்காய் அயல் தேசத்தில் வருடங்களை நாட்களைப் போல கடத்திக் கொண்டிருக்கும் அத்தனை மனிதர்களுக்கும் இது தெளிவாய்ப் புரியும். அதர்வாவுக்கும் வேதிகாவுக்குமான காதல், வேதிகா கர்ப்பமாவது, அதர்வா ஊர் மக்களோடு பிழைப்புக்காய் கங்காணி விரித்த வலையில் சிக்கி தேயிலைத் தோட்டத்துக்கு செல்வது என்று கதையை நீங்கள் திரையில் பார்த்துக்கொள்ளுங்கள் அல்லது ஏற்கனவே பார்த்து கூட இருப்பீர்கள்.


நடிப்பு என்பது உடலின் மொழி. உணர்வுகளின் ஸ்தூல வடிவம். அதர்வா வைரமாய் ஜொலிப்பதின் பின்னணியில் பாலா பளீச் என்று தெரிகிறார். அதர்வாவின் வசன உச்சரிப்புகள் அத்தனை எதார்த்தமாய் இல்லை என்றாலும்.... அதுவெல்லாம் திரைக்கதைக்கு முன்னால் ஒன்றும் பெரிய குறையாய் தெரியவில்லை. எந்த ஒரு விசயத்தையும் நாம் காணும் போது வெறுமனே பார்வையாளனாக மட்டும் இருந்து விடக்கூடாது. இங்கே சினிமா விமர்சனம் எழுதிய, பாலாவை குறை சொன்ன அத்தனை பேரும் காலரியில் இருந்து வெறுமனே சினிமாவை பார்த்த பார்வையாளர்கள். ஒவ்வொரு காட்சியையும் தங்களின் மூளையால் பார்த்த இயந்திரங்கள் அவர்கள். எல்லாவற்றையும் தங்களின் அறிவில் ஏற்கெனவே இருந்த விசயங்களோடு ஒப்பீடு செய்து பார்த்து தங்களை திரையை விட்டு வெகு தூரத்தில் நகர்த்தி வைத்துக் கொண்ட ஜீவிகள்.... அறிவு ஜீவிகள்.

நான் என்ன சொல்கிறேன்....ஒரு புத்தகமோ அல்லது திரைப்படமோ உங்களை அந்தக் கதைக்குள் இழுத்துச் செல்ல முயலுகிறது என்றால் விலக்காமல் உட்சென்று விடுங்கள். அதர்வாவின் இடத்திலோ இல்லை பிழைப்பு தேடி செல்லும் அந்த மக்கள் கூட்டத்தில் ஒருவராகவோ உங்களை கண நேரம் இருத்திப் பாருங்கள், நீங்கள் மீண்டு வெளியே வருவது கடினம். அதுவும் அழுத்தமான பாலா போன்ற படைப்பாளிகளின் திரைப்படங்கள் கண்டிப்பாய் நம்மை வெளியே விடவே விடாது. அப்படி இருக்கையில் நீங்கள் முரண்கள் என்று சொல்லும் எதுவுமே அங்கே இருக்கவே இருக்காது. எஸ்டேட்டிற்குள் சென்ற முதல் நாள் இரவில் மாடுகளை கொட்டத்துக்குள் அடைப்பது போல மனிதர்களை கங்காணியின் கூட்டம் அடைத்த பின், அந்த இரவை விடிய வைக்கும் பெரும் சங்கினை ஒருவன் விடியற்காலையில் ஊதிய போது...

அந்த சங்கின் சப்தத்திற்கு அலறி எழும் சாலூர் மக்களை பார்த்த போது என்னை மீறி கண்ணீர் எட்டிப்பார்த்தது. எப்போதும் அதிகாலையில் என்னை எழுப்பி விடும் என் வீட்டு அலாரத்தை  பார்த்த போது எனக்குள் ஒரு பயம் வந்து ஒட்டிக் கொண்டது. காலம் மாறி இருக்கிறது. சூழல் மாறி இருக்கிறது. நவீனம் என்ற பெயரில் எல்லாம் மாறி இருக்கிறது ஆனால்  அதே வாழ்க்கை மாறாமல் எல்லா இடத்திலும் அழுத்தமாய் பரவிக் கிடக்கிறது. அதுவும் சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டில் இருக்கும் என்னைப் போன்றவர்கள் எங்களை அதர்வாவோடு ஒப்பீடு செய்து பார்க்கையில் நிஜமாகவே மீளமுடியாத சூழலுக்குள் நாங்கள் சிக்கிக் கிடப்பதை எண்ணி மிரண்டு போனேன். பொருளாதார தேவைகள் ஏற்படுத்தி வைத்திருக்கும் நிர்ப்பந்தங்களோடு, தேவைகள் தீராமல் மாறிக் கொண்டே இருக்க...சம காலத்தை விட்டு மீள முடியாமல் மீண்டும் மீண்டும்  காலம் என்னும் கங்காணி எங்களை இந்த சூழல் என்னும் எஸ்டேட்டை விட்டு வெளியே வரவிடாமல் ஏதேதோ கணக்குகளை, கடன்களை சொல்லி.... இங்கேயே பிடித்து வைத்திருக்கிறான்.

இது வெளிநாட்டில் வாழும் என்னைப் போன்றவர்களுக்கு மட்டுமில்லை ஊரில் இருந்து கொண்டே சொந்த மண்ணை விட்டு பிழைப்பு தேடி நகரம் நோக்கி நகர்ந்த அத்தனை மனிதர்களுக்கும் பொருந்தும் என்றாலும் ஊரில் இருக்கும் போது அதே சமூக சூழலில் வாழ்வதால் கொஞ்சம் எல்லாமே அனுசரித்துப் போகும்.

எங்களுக்கு எல்லாம் கல்யாணம், காட்சி, திருவிழா, மரணம், தீபாவளி, பொங்கல், இன்ன பிற விழாக்கள் எதுவுமே இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? கடிகார முட்களுக்கு நடுவே அவசரகதியில் எங்கள் பண்டிகைகள் எல்லாம் காலண்டரில் மட்டுமே படுத்துக் கொண்டு பல் இளித்துக் கொண்டிருக்கின்றன. ஏன் இதை எல்லாம் சொல்கிறேன் என்றால்....

பாலாவை, பரதேசி என்னும் அற்புதமான கலைப்படைப்பை குறை சொல்லும் இரும்பு இதயங்களும், கருங்கல் மூளைகளுக்கும் இவை எல்லாம் உரைக்க வேண்டும் என்றுதான்....

எப்படிப் பார்த்தாலும் எரியும் பனிக்காடு என்னும் நாவலை தனது பாணியில் அழுத்தமாய் திரையில் பதிவு செய்தமைக்காக பாலா பாராட்டுக்குரியவர். கடைசி காட்சியில்....அதர்வா அந்த எஸ்டேட்டிலிருக்கும் ஒரு மிகப்பெரிய பாறையின் மீது அமர்ந்து கதறுவது எத்தனையோ சமகால கார்ப்பரேட் அடிமைகளின் கதறல் ஒலிதான். இன்னமும் அந்தக் கதறல் ஒலி காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நடு இரவில் படம் பார்த்து முடித்ததோடு என் மகளைக் கட்டிக் கொண்டு நானும் காலத்திடம் தேம்பிக் கொண்டிருந்தேன்....

" நியாயமாரே........இரக்கங்காட்டுங்க...நியாயமாரே............சாதிசனத்தைப் பார்க்கணும் நியாயமாரே......!!!! ஒரு பாவமும் பண்ணலயே நியாயமாரே.....!!!!!


ஹேட்ஸ் ஆஃப்...பாலா சார்!!!!!! 


தேவா. S




தேவனே.....என்னைப் பாருங்கள்...!

$
0
0



புனித வெள்ளி அதிர்வுகள் நிறைந்த ஒரு நாள். சத்தியத்தை உலகம் நிராகரித்ததும், அந்த நிராகரித்தலை உயரிய புரிதலுடன் சத்தியம் ஏற்றுக் கொண்டதும் நிகழ்ந்தேறிய ஒரு அற்புத நாள். பைத்தியக்கார உலகிற்குள் வந்த தேவனின் புனிதத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனித மிருகங்கள் அவரைச் சிலுவையில் ஏற்றி மகிழ்ந்த நாள். தேவன் ஒரு போதும் அவர்களை விரோதமாக பார்த்தவரில்லை. அவர் தேவன். தேவாதி தேவன். உள்ளவருக்கும், இல்லாதவருக்கும், நல்லவருக்கும் கெட்டவருக்கும் அவர் தேவன்.

அவரின் பிறப்பே ஒரு அதிசயம். மிகப்பெரிய அறிவிப்புகளை இந்த பிரபஞ்சம் தாங்கிப் பிடித்து உலகத்துக்கு அவரது வருகையினை தெளிவாக்கிய பின் தான் அந்த பாலகனை இந்த உலகிற்கு தருவித்தது. அந்த புனிதனைப் பெற்ற பின்பு அவள் கன்னி மேரி ஆனாள். கன்னித் தன்மை என்பது உடலோடு சம்பந்தப்பட்டது அல்ல அது உணர்வோடு தொடர்புகள் கொண்டது. மரியாள் புனிதமான உணர்வுகளோடு என்றும் ஜீவித்திருக்கும் கண்ணியத்தை ஏந்திக் கொண்டு புனிதமானவளானாள். பிறக்கும் போதே தனது தாய்க்கு புனிதத்தைக் கொடுத்து யுகங்களாய் காலம் எல்லா நினைவுகளையும் செரித்துக் கொண்டு முரட்டுத்தனமாய் நகர்கையில் தன்னோடு சேர்த்து தன்னை பெற்ற தாய்க்கும் ஒரு மிகப்பெரிய இடத்தை வரலாற்றில் பதிய வைத்த தேவன் அவர்.

இந்த உலகம் ஒருக்காலும் தேவனாகிய இயேசு கிறிஸ்துவை மறுக்க முடியாது. வாழ்க்கையின் ஓட்டத்தில் ஆன்ம ரீதியான புரிதல்களை பெற்று நாம் நகர அவரது வாழ்க்கையில் ஓராயிரம் செய்திகள் பரவிக் கிடக்கின்றன. இந்த உலகம் முழுவதிலும் பரவி வாழும் கிறிஸ்தவர்களுக்கும், பாதிரியார்களுக்கும், மத குருமார்களுக்கு மட்டும் அவர் சொந்தமானவர் அல்ல...!!! இந்த பூமியில் இதுவரை ஜனித்த, இன்னமும் ஜனிக்கப்போகிற எல்லா ஜீவன்களுக்கும் வழிகாட்டும் தேவாதி தேவன் அவர்.

அவரது மந்தையிலிருக்கும் ஆடுகளுக்கு அவரைப்பற்றிய கவலைகள் ஏதும் இருந்திருக்க முடியாது. இன்னமும் சொல்லப் போனால் அவர் தேவன் என்றே அவைகள் புரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. இருந்தாலும் அவற்றை நெறிப்படுத்தவும், வழிகாட்டவும் கருணையுள்ளம் கொண்ட அந்த மேய்ப்பன் தவறுவதில்லை.  இன்னும் சொல்லப் போனால் இயேசு கிறிஸ்து, கிறிஸ்துவம் என்னும் ஒரு மதத்தையே ஸ்தாபிக்கவேயில்லை. தன்னுடைய கருத்துக்களையும் ஒரு வேதமாக தொகுக்க வேண்டும் என்றும் எண்ணியிருக்கவே இல்லை.  ஜீசஸின் சீடர்களே அவரைப் பற்றிய சரியான புரிதல் இல்லாதவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால்...தேவனின் வார்த்தைகள் மிகவும் ஆழமானவை. அவை எல்லாமே சூட்சுமக் குறியீடுகளாய்த்தான் அவரிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. ஆதியிலே தேவனிடம் வார்த்தை இருந்தது என்று பழைய ஏற்பாடு கூறும் ஒரு பதமே போதும் இந்த பிரபஞ்சத்தின் மூலத்தைப்பற்றி தெளிந்து கொள்ள. வார்த்தை என்பது சப்தம். அசைவற்று இருந்த சூன்யத்தில் முதலில் ஏற்பட்ட சப்தமும் பின் வெளிப்பட்ட பெரு வெடிப்பான தீப்பிழம்புமே பிரபஞ்ச விரிவாக்கத்தின் ஆதி என்று சனாதான தருமத்தின் மூலம்  சொல்கிறது. 

" ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை "

அவர் இல்லாமல் ஒன்றும் உருவாகவில்லை என்னும் வார்த்தைகள் தியானிக்கப் படவேண்டிய வார்த்தைகள். வெளிப்பட்டது எல்லாம் பரப்பிரம்மம். இருப்பது ஒன்றுதான் என்று சைவ சித்தாந்தம் சொல்வதை பைபிளும் சொல்கிறதா இல்லையா? ஏனேன்றால் சத்தியம் என்பது ஒன்றுதான் அது உங்களுக்கு ஒன்றாய் எனக்கு ஒன்றாய் இருக்க முடியாதுதானே..? இதை மேலும் உறுதிப் படுத்த

ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. (யோவான்.1.1)

சகலமும் அவருக்குள் தான் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் வேறு இந்த பிரபஞ்சம் வேறல்ல. இருப்பது எல்லாம் அவருக்குள்...என்று பைபிள் கூறுகிறது என்றால்....நம்மைச் சுற்றி பரந்து விரிந்திருப்பது எல்லாம் யார்....? நீங்களும் நானும் யார்?  இப்படியான செய்தியை கொண்டு வந்த வல்லமை கொண்ட தேவன் யார்...?

உடலுக்குள் வந்திருந்த தன்னை யாரென்று உணர்ந்த பிரம்மாண்டமே....ஜீசஸ்!!!!!

ஜீசஸை கைது செய்ய கெத்சமனி தோட்டத்திற்கு யூதர்கள் வந்த போது தன் சீடர்கள் புடை சூழத்தான் அவர் அமர்ந்திருந்திருக்கிறார். யூதாஸ் வெறும் முப்பது வெள்ளிக் காசுகளுக்காக தன்னுடைய குருவை காட்டிக் கொடுத்திருக்கிறான் என்றால் அவனுடைய புரிதல் எத்தகையது என்று நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். சீடர்கள் அத்தனை பேருமே ஜீசஸை விட்டு பயத்தில் ஓடி விட்டார்கள். தலைமைச் சீடன் என்று அறியப்படும் பேதுருவிடம் முன்னமே ஜீசஸ் தெளிவாய் கூறி விடுகிறார் விடிவதற்குள் என்னை மூன்று முறை நீ யாரென்று தெரியாது என்று மறுப்பாய் என்று. பேதுருவும் மறுக்கிறார். இங்கே தனது சீடர்களின் வல்லமை என்ன, ஆன்ம வலு என்ன என்று தெரியாமல் தேவன் அவர்களை தன்னிடம் வைத்திருக்கவில்லை.

அவர்கள் தேவனை நேசித்தார்கள். அன்பு இருந்தது. அறிவு இல்லை. அறிவு என்பது ஞானம். அவர்கள் பிசைவதற்கு இளகான மாவாய் இருந்தார்கள். எழுத இடம் இருக்கும் வெள்ளைக் காகிதமாய் இருந்தார்கள். ஜீசஸை மட்டும் அப்போது சிலுவையில் அறைந்து துன்பப்படுத்தி இருக்காவிட்டால்....இன்று பெரும் ஞானத்தால் இந்த உலகை கட்டிப்போட்டு அன்பும் சகிப்புத்தன்மையும் மேலோங்கி இருக்க அவர் ஏதேதோ செய்து கூட இருக்கலாம். அவருக்குப் பின் அவருடைய சீடர்கள் அதை செய்யும் வண்ணம் ஜீசஸ் கண்டிப்பாய் அதை செய்து இருப்பார். அவர் பூனைகளைப் புலிகளாகும் அளவிற்கு வல்லமைக் கொண்டவர்.

உலகமெங்கும் காணும் ஜீசஸின் படங்கள் அவரை சோகமானவராய் காட்டுகின்றன. ஜீஸஸ் சந்தோசத்தின் உச்சத்தை தன்னுள் தேக்கி அலைந்த சக்தி மிகுந்த பிரமாண்ட ஆன்மா என்பதை உணர  அவருடைய வாழ்க்கைக்குள் விழிப்புணர்வோடு நாம் செல்ல வேண்டி இருக்கிறது. கூட்டம், கூட்டமாய் மக்களோடு மக்களாக அந்த பிரம்மாண்டம் அன்பை பகிர்ந்து அலைந்திருக்கிறது. திராட்சை ரசத்தோடும், அப்பத்தோடும், மிகுந்த உற்சாகத்தோடும் ஆன்ம ஒடுக்கம் கொண்ட மனிதர்களை அவர் தேடித் தேடிச் சென்று பேசினார். யாரையும் எதற்கும் கவலைப் படவேண்டாம் என்று சொல்லி வலுவூட்டிய அவர் எல்லோருமே தேவனுடைய பிள்ளைகள் என்று கூறி ஆன்மாவை ஒளியுறச் செய்தார். சூட்சும வார்த்தைகளைச் சொல்லி மனிதர்களை சிந்திக்க வைத்தார்.

கீழை நாட்டு விஞ்ஞானமான அஷ்டமா சித்திகளை எல்லாம் அவர் தனக்குள் அடக்கி வைத்திருந்திருக்கிறார். பிரபஞ்சத்தில் அலைந்து கொண்டிருக்கும் அதிர்வுகளை தனது விரல் நுனிக்கு கொண்டு வந்து அவர் குருடர்களை பார்க்க வைத்ததும், செவிடர்களை கேட்க வைத்ததும்.....சாதாரண அறிவுக்கு எட்டவில்லை என்றாலும்...அவை எல்லாம் நடந்திருக்க ஓராயிரம் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. பலவீனப்பட்ட மக்களைத் தேடித் தேடி சென்று அவர்களோடு இரவு பகலாய் திரிந்தவர் ஜீசஸ். 

சாதாரண மக்களுக்கு தனது ஞானத்தை கொண்டு செல்வதற்கான படிநிலைகளில் அவர் இருந்த போது மூடர்களால் அவர் அந்த சமுதாயத்தை விட்டு களையப்பட்டார். அவரை சுதந்திரமாக விட்டிருந்தால் பைபிள் என்ற ஒன்றின் அவசியமே இன்று இல்லாமல் போயிருந்திருக்கும். இருந்ததனை இருந்தது போல அவர் இருந்து காட்டியிருந்திருப்பார். புத்தகங்களைச் சுமந்து கொண்டு வேத விளக்கம் கேட்டுக் கொண்டு புத்தகத்துக்குள்ளும், கட்டிடங்களுக்குள்ளும் கடவுளைத் தேடும் வேலையே இருந்திருக்காது. பீட்டர் ஃபவுலுக்கும் இன்ன பிற போதகர்களுக்கும் வேலை இல்லாமல் போய்....பாதிரியார்களே இல்லாமல் இருந்திருப்பார்கள்.

உங்களில் யார் எல்லோருக்கும் தாழ நின்று ஊழியம் செய்கிறீர்களோ அவரே எனக்குப் பிறகு உங்கள் அனைவரையும் வழி நடத்துவார் என்று ஜீசஸ் சொன்னதை மெய்ப்பித்து நடைமுறையிலும் கொண்டு வந்திருப்பார். சனாதான தருமம் சொல்ல நினைத்ததை, புத்தரும், மகாவீரரும் உணரவைக்க முயன்றதை....லாவோட்சூவூம், கன்பூசியசும் வெளிப்படுத்த முயன்றதை....இன்னும் இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை மதங்களும் குருமார்களும் போதித்துக் கொண்டிருப்பதை, போதிக்க நினைத்ததை.....

சர்வ நிச்சயமாய் ஜீசஸ் குட்டிப் பிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுப்பது போல அவர் சொல்லிக் கொடுத்திருந்திருப்பார். 

அதோ அந்த வானத்துப் பறவைகளைப் பாருங்கள் அவை விதைப்பதும் இல்லை....அறுப்பதும் இல்லை....களஞ்சியத்தில் சேர்ப்பதும் இல்லை உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கு உணவளிக்கிறார்....என்று அவர் சொல்லும் வார்த்தையில் உளவியல் ரீதியாக பலவீனப்பட்ட மனிதர்கள் விஸ்வரூபமெடுத்து எழுந்து நிற்கும் சூத்திரம் இருக்கிறதா இல்லையா?

தேவனின் வார்த்தைகள் வீணாக எல்லோரும் பேசுவதைப் போன்று வெளிப்பட்டிருக்க வில்லை. அவையாவுமே தீர்க்க தரிசனம் கொடுக்கும், தனிமனித எழுச்சியை தரும் புரட்சி வார்த்தைகள். காட்டுப்பூக்களை பார்க்கச் சொல்லும் தேவன் அவற்றின் அழகை பாருங்கள்...நீங்கள் அரசனாகக் கருதும் சாலமனின் பட்டாடைகள் கூட இவ்வளவு அழகானதாய் இருக்க முடியாது....

மறுநாள் அடுப்பிலே எறிந்தால் எரிந்து போகக்கூடிய புற்களுக்கு கூட இப்படியான ஒரு அழகினை அந்த இயற்கை கொடுத்திருக்கிறதே...அதை விட அறிவு கொண்ட மனிதர்கள் நீங்கள்....தாழ்வு மனப்பான்மை கொள்ளலாமா? கவலைப்படலாமா? இப்படி எல்லாம் கேள்விகள் கேட்ட ஜீசஸ் ஏதோ ஒரு மதத்திற்கு சொந்தமானவராய் எப்படி இருக்க முடியும்...

அது பிரம்மாண்டம். பெருஞ்சத்தியம். தன்னை முட்கிரீடங்கள் வைத்து, தான் வாழ்ந்த சமூகம் காறி உமிழ்ந்த போதும் அறியாமல் தவறு செய்யும் அந்த ஆன்மாக்களுக்காக அவர் வருந்தி அவர்களை மன்னிக்கும் படி பேரிறையை இறைஞ்சுகிறார் என்றால்...உள்ளது அழியாது; இல்லாதது தோன்றாது..என்னும் தத்துவத்தை அவர் உணர்ந்தவர் தானே..? உனக்குள்ளும் எனக்குள்ளும் இருப்பது ஒன்றே...உடல் சார்ந்த அனுபவங்களும், உடலை உருவாக்கிய ஜீன்களும் நம்மை வெவ்வேறாய் பிரித்து வைத்து இருக்கின்றன என்ற உண்மையை உணர்ந்த புனிதர்தானே அவர்..?

தேவனை ...மதத்திற்குள் மட்டுப்படுத்தி விடாதீர்கள் மனிதர்களே...!!!!! அவர் அகில உலகமும் போற்ற வேண்டிய சத்திய புருசர். தேவன் சுமந்த 
காரணத்தால்....இன்னமும் சிலுவைகள் அவரின் பெயராலேயே அறியப்படுகின்றன. தண்டனைகளுக்கான கொடும் கருவியான சிலுவைகள் அன்பின் வடிமாய் அடையாளம் பெற்றுக் கொண்டன.  சாதாரண மரச் சிலுவைகளே தேவனைச் சுமந்ததால் பரிசுத்தமடைந்து ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாய் புனிதத்தின் அடையாளமாய் இன்னமும் நிற்கிறது என்றால்....

பரிசுத்த தேவனை நம் இதயத்தில் சுமக்கும் போது, அவரின் ஆன்மீக விஞ்ஞானத்தை உணர்ந்து வார்த்தைகளின் ஆழத்தை அறியும் போது...அதற்கான விளைவுகள் நமக்கு கிடைக்காமலா போய்விடும்....?

ஜீசஸ் கிரைஸ்ட் என்னும் தேவன் சிலுவையில் அறையப்பட்ட பின்பு உயிர்த்தெழுந்தார் என்பதையும், சிலுவையில் அறையப்பட்ட பின்பு காப்பாற்றப்பட்டு அவர் முன்னமே வந்து சென்றிருந்த காஷ்மீருக்கு வந்து தியானம் செய்து பின் வயதாகி சமாதியானார் என்பதையும் நான் புறந்தள்ளுகிறேன்....

என்னைப் பொறுத்த வரையில் சிலுவையில் அறையப்பட்டது வரை....அந்த தேவனின் வாழ்க்கையிலும் வார்த்தைகளிலும் அறியப்படவேண்டிய பொக்கிஷங்கள் நிறைய நிறைய இருக்கின்றன...அந்த அதிசயத்துக்குள் சுற்றித் திரியும் அலாதியான சந்தோசத்திலேயே நான் இருந்து கொள்கிறேன் ஏனேன்றால் தேவன் விவாதிக்கப்பட வேண்டியவர் இல்லை...ஆன்மாவினுள் உணரப்படவேண்டியவர்....!!!!

“நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளைய கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும்." - மத் 6: 24-34


தேவா. S



காதல் யுத்தம்....!

$
0
0


எல்லாவற்றையும் கை சொடுக்கும் நேரத்தில் எழுதிவிட முடிந்த என்னால் உன் மீதான் என் காதலின் ஆழம் என்ன என்று ஒரு போதும் எழுத முடிவதில்லை. செடிகளின் நுனிகளில் உட்கார்ந்திருக்கும் மலர்கள் எல்லாம் எப்போதுமே ப்ரியங்களின் ஆதார அடையாளங்கள் கிடையாது. அன்பும் நேசமும் அறிவிக்கப்பட முடியாத உணர்வுகளாய் சல்லிவேர்களுக்குள் படர்ந்து நிலத்தின் ஆழத்தில் நாளை பூக்கவேண்டிய மலர்களுக்கும் சேர்த்து நீரை உறிஞ்சிக் கொண்டு இருக்கின்றன.

எந்த வகையான அடைப்புக்குள்ளும் பொருந்தாத காதலோடு நீ என்னிடம் வந்த தருணத்தில் என் காகிதங்களில் கனவு கண்டு கொண்டிருந்த கவிதைகள் எல்லாம் வெடித்துச் சிதறி முழுதுமாய் அழிந்தே போயின. வார்த்தைகளில் காதலைச் சொல்லத் தெரியும் என்று இருமாந்திருந்த என்னை சொடுக்குப் போட்டு வீழ்த்திய உன் விழிகளுக்குள் பரவியிருந்தது காதலா? கடவுளா? சொர்க்கமா? வாய் பிளந்து ரசிக்கும் பெரும் இயற்கையா? உடல் சிலிர்க்க வைக்கும் பெரு மழையின் சிறு சாரலா? விடைகளைத் தேடி நான் விழித்திருந்த இரவுகளில் உன் நினைவென்னும் நேசத்தால் என் தலை கலைத்து முத்தமிட்டுச் செல்வாய் நீ...!

என் ப்ரிய தேவதை நீ...உனக்கு என் அன்பை எப்படி வெளிக்காட்டுவது என்று யோசிக்க முடியாமல் உன் முரட்டுக் காதலால் என்னை மூர்ச்சையாக்கிப் போட்டிருக்கிறாய். பொருளாதாய உலகில் அன்பென்ற ஒன்றும் இருக்கிறது அது காதலென்ற பெயரோடு உன் வடிவில் என்னிடம் வரும் என்றும் நான் எண்ணி பார்த்ததேயில்லை. எதேச்சையாய் நான் உறவினர் வீட்டு போட்டோ ஆல்பத்தைப் புரட்டிக் கொண்டிருக்கையில் ஏழாவது பக்கத்தில் நாலாவது புகைப்படம் என் வாழ்க்கைக்கு வர்ணம் அடிக்கப் போகிறது.....என் நினைவுகளை எல்லாம் ஒட்டு மொத்தமாக ஆக்கிரமிக்கும் காதல் பிசாசு ஒன்றை என் வாழ்க்கைக்கு தருவிக்கப் போகிறது என்று நான் அறிந்திருக்கவில்லை தான்...

எல்லாமே தன்னிச்சையாக நடந்ததாய் பின்னொரு நாளில் நீ என்னிடம் சொன்ன கடற்கரை மாலையை வெகு சீக்கிரமாய் கொண்டு வந்து சேர்த்தற்கு காரணம் நான் உன் மீது கொண்ட காதலும், நீ எனக்கு உறவு என்ற பந்தமும்தான் என்று நினைத்தபடி நான்  வானம் பார்த்துக் கொண்டிருந்தேன். தன்னிச்சையாக நடக்கவில்லை என் இச்சையால் நடந்தது என்று உன்னிடம் சொன்னால் தன்னிச்சையாய் நிகழ்ந்ததென்பதால் சமூகத் திணிப்புகளால் நீ புனிதமாக  கருதி இருக்கும் அந்த தெய்வீகம் உடைந்து போய்விடக்கூடாது என்பதால் நான் மெளனித்தேன்...

என் தலை கலைக்கையில் நான் மெளனம் கலைந்து உன்னை பார்த்த பொழுதில் தன்னிச்சையாய் நிகழும் நிகழ்வுகள் மட்டும் அமானுஷ்யமானவை அல்ல...பிருந்தா...திட்டமிட்டு தேடிக் கொள்வதும் தெய்வீகம்தான் என்று சொல்ல நினைத்தேன். காதலை வகைப்படுத்தி அதன் உச்சத்தை காமத்தில் தொலைத்து இயந்திரத்தனமான வாழ்க்கைக்குள் நுழைந்து  கொண்டு அதிருப்தியோடு வாழும் வாழ்க்கைக்கு கண்டிப்பாய் உன்னை பழிகொடுத்து விட மாட்டேன்....என்று நான் கூறிய பொழுதினில் நீ திடுக்கிட்டுத்தான் போனாய்....

எனக்கு உன்னை பிடித்திருந்தது போலவேதான் உனக்கும் என்னை பிடித்திருந்தது. காதலை மெய்ப்பிக்க திருமணம் செய்து கொள்ளும் மரபுதான் எனக்குப் பிடிக்கவில்லை என்று நான் கூறியது வழமைக்கு எதிரானதுதான். இயற்கையின் முரண்தான் என்றாலும் முரண்களும் இயற்கையின் ஒரு பகுதிதானே..? திருமணம் காதலை சிதைத்து விட்டு அங்கே முகமூடிகள் இட்டுக் கொண்டு விட்டுக் கொடுக்கும் நாடகங்கள் நடத்தி பொய்களுக்குள் முடங்கிக் கொள்கிறது.

உன்னை காதலித்துக் கொண்டிருக்கும் போதே...அதன் அடுத்த கட்டம் எதை உனக்கும் எனக்கும் கொடுக்கும் என்ற விழிப்புணர்வும் என்னிடம் இருந்ததாலேயே நான் சராசரியில்லை என்று உனக்கு தோன்றி இருக்கலாம். என்னை பைத்தியக்காரனாகவே நீ கருதி இருக்கலாம். இதோ  இந்த நான்காண்டுகளுக்கு பிறகு நீ வாழ்க்கைக்குள் வரைபடங்கள் எழுதி குடும்பம் என்னும் கூட்டுக்குள் சிறகடித்துக் கொண்டிருக்கிறாய். நான் வாழ்க்கையைக் கடந்த பெருவெளியில் காதல் என்னும் கட்டற்ற உணர்வுகளோடு சிறகுகளே இல்லாமல் பரவிக் கிடக்கிறேன்.

காலம் அசுர வேகத்தில் நகர்ந்து கொண்டே இருந்த ஒரு அவசர நாளில்...

வழக்கம் போல டிக்கெட் எடுத்து விட்டு பேருந்தினுள் நுழைந்த எனக்குத் தெரியாது மீண்டும் என் வாழ்வில் நுழைவாய் என்று..ஏனென்றால் என் கற்பனைகளில் நித்தம் நித்தம் உன்னோடு வம்புகள் செய்து, கனவுகளில் உனக்கான கவிதைகள் படைத்து எனக்கான வாழ்க்கையில் இறுமாப்போடு திரிந்து கொண்டிருக்கிறேன். உன்னை பார்த்த வேகத்தில் உன்னிடம் இருந்து என்னை மறைத்துக் கொள்ள முற்பட்ட பொழுதில் என் பெயர் சொல்லி நீ அழைப்பாய்  என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை...

உன்னை மறுக்கவில்லை. உன் நிகழ்காலம் என் நிகழ்காலத்தை சிதைத்து விடக் கூடிய அபாயத்தை மறுக்க நினைத்தேன். நீ பேசிக் கொண்டே இருந்தாய், கோவிலடியிலிருந்த நானும் கர்ப்பகிரகத்தில் இருத்த பார்த்தசாரதியும் அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். நம் காதல் வாழ்க்கையாகி இருக்கவேண்டும் என்று நீ சொன்னதற்கு...வாழ்க்கை நரகமாயிருக்கும் காதல் எப்போதோ செத்துப் போயிருக்கும் என்றேன் நான்....

ஏதோ ஒரு ஆல்பத்தில் என்னைப் பார்த்து விட்டு துரத்தி துரத்தி காதலித்தவன் நீ...என்றாய், இன்னமும் நான் துரத்துவதையும் நிறுத்தவில்லை, காதலிப்பதையும் நிறுத்தவில்லை என்றேன் நான்...! எப்போது என் திருமணம் என்று நீ கேட்டதற்கு உன் திருமணம் உனக்கு என்ன கொடுத்து விட்டது என்று என் திருமணத்தைப் பற்றி கேட்கிறாய் நீ என்று கேட்டதில் உன் இயல்பு நொறுங்கிப் போய் உன் முகத்தில் கோபம் எட்டிப்பார்த்து....

இன்னமும் நீ என்னை எப்படி காதலிக்கலாம்...? நான் வேறு ஒருவரின் மனைவி என்று நீ சொன்னவுடன் நான் அவ்வளவு சத்தமாய் சிரித்திருக்க கூடாதுதான். கோவிலடியில் இறங்கு நிழலில் உறங்கிக் கொண்டிருந்த அந்த நாய்க்குத் தெரியும் அதன் உறக்கம் கலைத்த என் சிரிப்பின் கொடுமை. நீ வேறொருவன்  மனைவி என்பது எனக்குத் தெரியும். உன் வாழ்க்கையோடு எனக்கு என்ன தொடர்பு இருக்கிறது? அல்லது என் நினைவுகளோடு உனக்கு என்ன பந்தமிருக்கிறது. என் கற்பனைகளும் கனவுகளும் யாரோடும் பந்தப்படாதது. என் காதல் உன்னோடு பந்தப்படாதது ஆனால் உன்னால் உருவானது. உன்னால் வளர்க்கப்பட்டது. அந்த உன்னால்  நீ இல்லை. நீ அந்த உன்னாலோடு முன்னொரு காலத்தில் பந்தப்பட்டிருந்தாய்...

உன் விழிகளில் நீ சுமந்து கொண்டிருப்பது உன் வாழ்க்கையை, உனது கடமைகளை, சமூகத்தின் கட்டுப்பாடுகளை, இன்னும் காதலைப் போன்ற எது எதுவோ உன் விழிகளை மறைத்திருக்கின்றன... நான் எப்படி உன்னோடு  இப்போது தொடர்பு படுத்திக் கொள்ள முடியும்...!

 " உனக்கு பைத்தியம் பிடிச்சுடுச்சு சிவா....

காதலித்து திருமணம் பண்ணிகிட்டு வாழணும்னு சொன்ன என்னை விட்டுட்டு...நான் இல்லாம என் கூட நீ காதலோடதான் இருக்கேன்னு சொல்றது சுத்தப் பைத்தியக்காரத்தனம். ஒரு காலத்துல உன் மேல பைத்தியமாய் இருந்தேன். என்னையே உனக்கு கொடுத்து...காலம் முழுதும் உனக்கே என்னை அர்ப்பணிக்க நினைச்சேன்...உன் பைத்தியக்காரத்தனம் என்னை உன்னை விட்டு பிரிச்சுடுச்சு....

சரி நீ வீட்டுக்கு வா ஒரு நாள்...என் கணவர உனக்கு  அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.." நீ பேசிக்கொண்டிருந்ததை நான் இடை மறித்தேன்....

" போதும் ...பிருந்தா போதும்....! என்னை வாழ்க்கையின் எந்தப் பக்கத்திலும் இணைத்து விடாதே....நீ உன் நிஜத்தில் கற்பனைகளோடு வாழ்ந்து  கொண்டிருக்கிறாய். நான் என் கற்பனையில் நிஜமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உடலுக்குள் உயிராய் அலைந்து கொண்டிருக்கிறேன். எனக்கு காதல் என்னும் ஒரு விசயம் இப்போது வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டதாகத் தெரியவில்லை. அது வார்த்தைகளைக் கடந்தது. உன் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டி மூன்று முடிச்சுப் போட்டு அதை  மெய்ப்பிக்க ஆயிரம் பேரை கூட்டி வந்து காட்ட வேண்டும் என்ற அவசியமற்றவன் நான்.

அன்றொரு நாள் உன்னைப் புகைப்படத்தில் பார்த்த போது எனக்குள் நிறைந்திருந்த காதலுக்கு காரணமாய் இருந்தது உன் உருவம் என்பதை நான் மறுப்பதற்கில்லை. நிபந்தனைகளற்று என் காதல் உன் மீது விழுந்ததற்கு பரிகாரமாய் நீ நிபந்தனைகளோடு என்னை ஏற்றுக் கொள்வதில் என்ன அறிவு இருக்கிறது..? உனக்கு ஒன்று தெரியுமா பிருந்தா....எனக்குள் இப்போதும் உன் மீதான காதல் இருக்கிறது...அதே பொலிவோடு அதே மெருகோடு....

ஆனால் அது ஒருபோதும் வெளியே செயல்களாய் வெளிப்படாது. ஊமைகளை ஊனம் என்று தானே எல்லோரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஊமையான நினைவுகள் முழுமையானவை. சொல்லவே  முடியாத உணர்வுகள் அதி அற்புதமானவை. என் காதலால் உனக்கு எந்தவிதமான லெளகீக லாபங்களும் கிடைக்காது என்னும் அதே நேரத்தில் லெளகீக ரீதியான எந்த பிரச்சினைகளும் ஏற்படாது பிருந்தா.

நீயும் நானும், நீயும் நானுமாகவே வாழ்க்கையைத் தொடருவோம். என் காதல் பிறந்தது உன் விழிகளில்... அதை என் நினைவுகளில் தேக்கி வைத்திருக்கிறேன். தீரத் தீர உன்னை இன்னமும் காதலிக்கிறேன்.... என்னால் உன்னோடு புறத்தில் தொடர்புகள் கொள்ள முடியாது....புரிதல் கொண்ட நண்பனாகவோ அல்லது உன் கட்டுப்பாட்டுகளை உடைக்கும் காதலனாகவோ என்னால் இருக்க முடியாது...

அது என் கனவுகளை கலைத்து விடும். என் உணர்வுகளுக்குள் சிறு பிள்ளையாய் பட்டாம் பூச்சி பிடித்து தெரியும் அற்புதக் காதலை அழித்துவிடும்..." 

எழுந்து நான் அவளை வணங்கினேன்...!!!!! 

பார்த்தசாரதி கோயிலுக்குள் பூஜைக்கான மணி அடித்துக் கொண்டிருந்தது. எனக்குள் என் காதல் சாரதியாய் அமர்ந்து கொண்டு என்னைப் பார்த்து சிரிக்க, கலங்கி இருந்த அவளது விழிகளில் நிரம்பிக் கிடந்த வாழ்க்கையின் கட்டமைப்புக்களை நான் கவனியாது.....நடக்கத் தொடங்கி இருந்தேன்.

என் கனவுகளுக்கு
அர்த்தங்கள் இல்லை...
வர்ணம் பூசிக் கொண்டு
யாரையும் வசீகரிக்கும்
அவசியமும் இல்லை...
அது எனக்கே 
எனக்கானது...!

என் காதல் சாரதி கற்பனைக் குதிரைகளின் கடிவாளத்தை  சொடுக்கி இழுக்க....எனக்குள் சப்தமின்றி மூளத் தொடங்கியிருந்தது  ஒரு காதல் யுத்தம்...!!!!


தேவா. S




துன்பம் நேர்கையில்...யாழெடுத்து..நீ..!

$
0
0


யாம் எமது தமிழையே எல்லா சூழ்நிலைகளுக்கும் துணைப்படுத்திக் கொண்டு நகந்திருக்கிறோம். எமது வலிகளை எல்லாம் வார்த்தைகளாக்க முயலும் தருணங்களில் தாய்த்தமிழே எமது சிந்தையிலிருந்து தாயாய் தாலாட்டுப்பாடல்கள் பாடவும் செய்திருக்கிறது, குழந்தையாய் வரிகளில் தவழ்ந்தோடி எமக்கு இன்பம் சேர்த்துமிருக்கிறது. எமது காதலைச் சொல்ல யாம் கவிதைகள் புனைவதுண்டு. எமது வீர செருக்கினை சீறிப்பாயும் வரிகளில் பரவ விட்டதுமுண்டு. கேளிக்கை குதுகலங்களை வார்த்தைகளுக்குள் சொருகி துள்ளிக் குதித்ததுமுண்டு. எமது மொழியே எமது யாக்கைகளின் வெளிப்பாடாகிப்ப் போக சுவாசிக்கும் உயிர்க்காற்றாய் எம்முள் நிறைந்தே எப்போதும் கிடக்கிறது.

ஞானத்தைப் பேசவும், போகத்தைப் பேசமும், பக்தியைப் பேசவும், பகுத்தறிவைப் பேசவும் எம்மிடம் இருக்கும் வளமையான எம் மொழி எப்போதும் சோடை போனதில்லை. ஏதோ ஒன்றை யாம் பகிரவிரும்பும் முன்னரே வில்லில் தானே ஏறி நின்று நாணேற்றிக் கொண்டு விறைத்து நிற்கும் அம்பாய் எம் வார்த்தைகள் எய்யப்போகும் இலக்கினை துடிப்பாய் எதிர் நோக்கி நிற்கும். இப்படியாய் எம் மொழியினைக் கொண்டு எமது உணர்வுகளை வடிக்கும் யாம்....துன்பம் நேர்கையில் மட்டும் சோர்ந்து விடுவோமா என்ன....

யாழெடுத்து மீட்டி எம்மை மகிழ்விக்க எம் நெஞ்சுக்கினியவளை(ரை) நாம் அழைக்கும் பொழுதிலே தனியாளாய் அவள்(ர்) வேண்டாம் கூட தமிழும் வேண்டும் என்ற பெரும் விருப்பங்களையே யாம் கொண்டிருந்தோம். ஆதலால்....

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா?

என்ற விண்ணப்பத்தை வைத்து விட்டு. எமது இன்பம் என்ன என்பதை மறை பொருளாக்குகையில் மறை பொருளில் அர்த்தங்கள் மறைந்து போய்விடக்கூடாதென்று....

அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா கண்ணே

அன்பில்லாத எமது நெஞ்சில் தமிழ் இல்லாமல் போனதால்தான்...இத்தனை அல்லலும் சூழ்ந்தென்று அறிக என் உயிரே அதனால்....நீ தமிழில் பாடி யாழினை இசைத்தால் என் அல்லல் நீங்கித்தான் போகுமென்று நான் அறுதியிட்டுக் கூறுகிறேன் ஏனென்றால் தமிழ் என்றால் அது ஒருவெறுமனே பத்தோடு பதினோரவது மொழியல்ல....

ஆதியில் உணர்வுகளை வெளிக்காட்ட மனிதன் தனது சப்தங்களைப் பயன்படுத்தி சக மனிதர்களை தொடர்பு கொண்டான். அந்த சப்தங்கள் இப்போது மொழியென திரிந்து அலங்கரித்துக் கொண்டு, உலகெங்கிலும் ஒவ்வொரு நிலத்திற்கேற்றார் போல, வாழும் சூழலுக்கு ஏற்றார்போல, தட்ப வெட்ப புவியியல் அமைப்புக்கு ஏற்றார் போல, இருந்த தனது இயல்பினை இழந்திருக்கிறது.

தமிழும் ஆதி சப்தங்களின் கோர்வைதான் என்றாலும் அதன் செழுமையும் உணர்வுகளை வெளிப்படுத்துகையில் இன்னமும் இருக்கும் அதன் பூர்வாங்க கன்னித்தன்மையும் இயல்பாய் நம் உணர்வுகளை மீட்டத்தான் செய்கின்றன. தமிழ் செம்மொழி. உணர்வுகள் என்னும் சூட்சுமத்தின் ஸ்தூல வடிவம். அதனால் நீ எம் தாய்த் தமிழில் ஒரு பண் பாடி இந்த யாழினை இசைக்கையில் எமது துயரங்கள் எல்லாம் ஓடித்தானே கண்ணே போய்விடும். 

என்று தமிழில் எழுதி தமிழால் தன் துயர் போக்கிக் கொள்ளும் பாவேந்தர் பாரதிதாசன் ஐயா அவர்கள் எந்த அளவுக்கு தமிழை நேசித்திருக்கிறார் என்று நினைக்கும் போது நமக்கு ஆனந்தக் கண்ணீர்தான் வருகிறது.

இனி துன்பம் நேர்கையில்...நீங்களும் நானும் கவலையுறவேண்டாம். நம் தாய் தமிழ் இருக்கிறது. தமிழ் மொழியின் செழுமையில் வெளிப்பட்டு நிற்கும் வல்லமை நிறைந்த கவிதைகளும் கட்டுரைகளும், கதைகளும், இசையும் நம்மிடம் கொட்டிக் கிடக்கின்றன..! ப்ரியம் நிறைந்த பாடல் ஒன்றை வசீகரிக்கும் குரல் ஒன்று வெளிப்படுத்தும் போது வார்த்தைகளின் அழுத்தங்களும் மொழியின் வளமையும் இசைக்குள் போய் ஒளிந்து கொண்டு நம்மிடம் கண்ணாமூச்சி ஆடுகின்றன. இன்பத்தில் திளைப்பதென்றால் என்னவென்று நம்மால் உணரமுடியும் தருணங்கள் அதி அற்புதமானவை.

இப்படித்தான் பாரதிதாசனின் இந்தப்பாடலை இணையத்தில் தேடிக் கொண்டிருந்த போது பல்வேறு அறியப்பட்ட பிரபலங்களின் குரல்களில் இசைக்கருவிகளோடு நிறையவே காணொளிகள் இருந்தாலும் எந்த வித தாளக் கருவிகளும் இல்லாமல், பாடலின் முழுமையான வலியையும் தனது குரலுக்குள் கொண்டு வந்து உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கும் சவீதாவின்  இந்தக் காணொளிக்குள் விழுந்த என்னால் வெகு நேரம் வெளிவர முடியவில்லை.

தமிழின் சுவையோடு நாம் நகர்ந்து கொண்டிருக்கையில் வார்த்தைகளுக்கு கட்டுப்படாத ஒரு காதலுணர்வும்  சூழ்ந்து கொள்ள,  எனது  உணர்வுகள் விழிப்பு நிலையிலேயே துன்பத்திலிருந்து இன்பம் நோக்கி இடம் பெயர எனது பொழுது ரம்யமானது..

வாசித்தலும் கேட்டலும் சுகம். அதை விளங்கி வெளிப்படுத்துதல் என்பது இறையின் ஆசிர்வாதம். துன்பம் நிறைந்த மனதோடு காணொளியை கேட்க ஆரம்பித்த எனக்கு....யாழெடுத்து எல்லாம் வல்ல பெருஞ்சக்தி தமிழில் பாடி....ஆசுவாசப்படுத்தியதைப் போல உணர்ந்தேனாதலால்...யாம் பெற்ற இன்பத்தை உங்களிடமும் சமர்ப்பிக்கிறேன்.



தமிழ் படித்து துயரறுப்போம்....தமிழ் படித்து உயர்வுறுவோம்....! வாழ்க தமிழ்!!!!


தேவா.S



அமுத கீதம் பாடுங்கள்.... ஆடுங்கள்!

$
0
0


போன வியாழக்கிழமை மத்தியானம் வீட்டுக்கு போன போது....டாடி ஒரு சர்ப்ரைஸ்ன்னு என் கை பிடிச்சு வீட்டுக்குள்ள ரொம்ப பவ்யமா கூட்டிட்டுப் போன என் மகள் 8 வயசு ஆகியும் ஏன் இன்னும் டாடின்னு கூப்பிடுறா அப்பான்னு தமிழ்ல கூப்டா என்னனு உங்களுக்குத் தோணி இருக்கும். இரண்டு மூணு வயசு வரைக்கும் ஆர்வமில்லாம அவ டாடின்னு கூப்டறத ஏத்துக்கிட்ட வாழ்க்கைச் சூழல், நாம தப்பு பண்ணிட்டோம் நம்ம புள்ளை நம்மள அப்பான்னுதான் கூப்பிடணும்னு யோசிச்சு அவள மாத்த முயற்சிப் பண்றப்ப அவளால மாற முடியாம போயிடுச்சு. ஒவ்வொரு தடவை டாடின்னு சொல்லிட்டு சாரி சாரி அப்பான்னு குற்ற உணர்ச்சியோட அவ பாக்குறத சகிச்சுக்க முடியாம சரி போகுது கழுத எப்டி வருதோ அப்டி கூப்டுமான்னு சொல்லிட்டேன்.

டாடின்னு கூப்டுறாளே தவிர.. தூய தமிழ்ல தொடர்ச்சியா பேசுற அவ பயன் படுத்துற சில தமிழ் வார்த்தைகள் என் நண்பர்களுக்கே தெரியாதுன்னா பார்த்துக்கோங்களேன். தமிழ் படிக்க பள்ளிக்கூடத்துல சூழல் இல்லை. சொல்லிக் கொடுக்க நமக்கு நேரம் இல்லை. இப்படியே எட்டு வருசம் ஓடிப் போக தமிழ் நல்லா பேசுறவ எழுதவும் படிக்கவும் செய்யணுமேன்னு நூலகம்.காம்ல இருந்து செய்முறைத் தாள்களை கொடுத்து அவளுக்கு தமிழ் முழுவீச்சுல சொல்லிக் கொடுத்துட்டு இருக்கோம்.

அவ ஏன் கையப் புடிச்சு  ஆர்வமா என்ன வீட்டுக்குள்ள கூட்டிப் போனான்னு இன்னும் நான் சொல்லவே இல்ல பாருங்க.....சோ.. இப்போ வீட்டுக்குள்ள போவோம்.

ஏம்மா...என்ன ஆச்சுன்னு சத்தமா நான் கேட்டதும் என்ன பாத்து முறைச்சுட்டு...ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..சத்தம் போடாதீங்க டாடி...நம்ம பால்கனில ஒரு கப்போர்ட் இருக்குல...அது மேல சுவர் ஓரமா ஒரு பறவை குடி வந்து இருக்கு டாடின்னு கிசு கிசுப்பா என் காதுல சொன்னா....

பறவை கூடு கட்டி இருக்கான்னு திரும்ப கேட்டதுக்கு..இல்லை இல்லை குடி வந்து இருக்கு. அது கூட ரெண்டு குட்டிங்க (குஞ்சு) கூட இருக்குன்னு அவ சொல்லவும் . மெதுவா போய் பால்கனியவும் பெட்ரூமையும் பிரிக்கிற அந்த கண்ணாடி வால்க்கு இந்தப்புறம் போய் ரெண்டு பேரும் நின்னு பார்த்தோம். அட ஆமாம்.. ஒரு புறா அங்க புதுசா குடித்தனம் வந்து இருக்கு. ரெண்டு குஞ்சுகளோட அது கொஞ்சிக்கிட்டு இருந்துச்சு. அமீரகம் புறாக்களும், பூனைகளும் நிறைஞ்ச தேசம். பூனை குறுக்கப் போனா சகுனம் சரி இல்லேன்னு சொல்றவன் இந்த ஊர்ல எங்கயுமே வெளில போக முடியாதுன்னா பார்த்துகோங்களேன்.

ஒரு சேதி சொல்றதுக்கு முன்னாடி ஆயிரம் டாடி போடுறவ, புறாக்கள பாத்துட்டு சும்மா இருப்பாளா என்ன..., ஏன் டாடி இந்த புறாவுக்கு சாப்பாடு கொடுக்குதே அது அம்மா புறாவா? அப்பா புறாவா?ன்னு என்ன கேட்டுட்டு நான் என்ன பதில் சொல்வேன்னு ரொம்ப சீரியஸா என்னையே பாத்துட்டு இருந்தவளுக்கு என்ன பதில் சொல்றதுன்னு யோசிச்சு...ம்ம்ம்ம்ம் அது அம்மா புறாதான் பாப்பா....அப்பா புறா வெளியூர்க்கு சம்பாரிக்க போய் இருக்கும். அதுவரைக்கும் அம்மா புறாதான் குஞ்சுகள பாத்துக்கணும்னு சொன்னேன்.

ஓ...அப்டின்னா நான் பொறக்கும் போது நீங்க கூட துபாய்ல இருந்தீங்க என்னைப் பாக்கவே மூணு மாசம் கழிச்சுதான் வந்தீங்களே...அதே மாதிரி இந்தப் புறாங்களோட அப்பா வந்து அப்புறமா கூட்டிட்டுப் போகணும்ல....எனக்கு நைட் உங்க பக்கதுல படுத்தாதன் தூக்கம் வரும் அதே மாதிரி இந்த குட்டிப் புறாங்களுக்கும் ஆசை இருக்கும்ல டாடி...அம்மா புறா மட்டும் தனியா இருக்கு டாடி பாக்கவே பாவமா இருக்குல்ல...

ஆமாம்மா இருக்கும். கொஞ்ச நாள் ஆனா இந்த குட்டிப் புறா ரெண்டும் பறந்து போயிடும் பாப்பா. அப்பா புறா வந்தாலும் சரி வரலேன்னாலும் சரி. எவ்ளோ நாள் அதுங்க கூட்டுக்குள்ளயே இருக்கும்..? இரை தேடி அதுங்க போய்டும்ல...போனதுக்கு அப்புறம் அது, அது வயிறு அது, அது வாழ்க்கை. அப்போ அம்மா புறா, அப்பா புறாவை எல்லாம் தேடாதா டாடி....? ஆச்சர்யமாய் என்னிடம் கேட்டாள்...

அம்மாடி....இப்ப பாத்தீன்னா, அம்மா புறா குட்டிப் புறாங்களுக்கு சாப்பாடு கொடுக்குதே அது எதுக்கு தெரியுமா? மறுபடி அம்மா புறாக்கு குட்டி புறா சாப்பாடு கொடுக்கும்னு எதிர்ப்பார்த்து இல்லை..அதுக்கு கொடுக்கனும். கொடுக்கறதுல அதுக்கு திருப்தி. அந்த ஆசை தன்னாலேயே பை நேச்சர் அதுக்கு இருக்குது. இதுங்க வளர்ந்து எங்கயோ போனதுக்கு அப்புறமும் அம்மா புறா இந்தக் குஞ்சுகளத் தேடும்...எதுக்கு தெரியுமா? கொடுக்கறதுக்கு...

அப்போ அந்த குஞ்சுகளுக்கு வாங்கிக்க வேண்டிய அவசியம் இல்லாத போயிடுது. ஏன்னா அதுங்க பறந்து அது அது இரைய தேட ஆரம்பிச்சுடுதுங்க. ஒரு ரெண்டு நாள் மூணு நாள் அம்மா புறா அதுங்கள தேடிப்பாத்துட்டு...கூட்டை விட்டுட்டு வேற திசையில பறக்க ஆரம்பிச்சுடும். என்னிக்காச்சும் குட்டிப் புறாங்களும் அம்மா புறாக்களும் நேருக்கு நேரா பாத்துகிடும் போது....அது வயித்தப் பத்திதான் அது நினைக்கும் இதுங்க வயித்தப் பத்திதான் இது நினைக்கும். ஏன்னா.... ரெண்டு வயிறும் தனித்தனி மட்டும் இல்லாம, இரை தேடுற தகுதி ரெண்டுக்குமே இருக்குல்ல பாப்பா...

ஹ்ம்ம்ம்ம்ம்ம்...கொஞ்சம் ரொம்பவே ம்ம்ம் கொட்டி கேட்டுக் கொண்டாள்.

நீ எனக்கு இப்டி எல்லாம் இருக்கனும், திருப்பி செய்யணும்னு நான் நினைச்சு செஞ்சா அது எதிர்பார்ப்பு பாப்பா, நாளைக்கு நீ திரும்ப செய்யலேன்னா எதிர்பார்த்தது நடக்கலேன்றதுனால....நமக்கு கோபம் வரும். எரிச்சல் வரும். அப்புறம் எதுவுமே பேசாம பிரிஞ்சு போக வேண்டி வரும். எதிர்ப்பார்க்கவே இல்லேன்னா...எப்டி கோபம் வரும்...? எப்டி சண்டை வரும்..? செய்றது, செய்றதுக்காக குட்டிம்மா...திரும்ப வாங்குறதுக்காக இல்லை.

யார்கிட்டயும் எக்ஸ்பெக்ட் பண்ணக்கூடாதா டாடி...?  மறுபடி ஒரு கேள்வி வந்து விழ...

நீ உனக்கு என்ன தேவைன்னு பார்த்து  முடிவு பண்ணி போய்க்கிட்டே இருக்கும் போது ப்ரியம் இருக்கவங்க நம்ம  கூடவே இருப்பாங்க பாப்பா. நமக்கு உதவி செய்ய முடியாட்டியும், நம்மள நேசிச்சு நாம நல்லா இருக்கணும்னு எப்பவுமே நினைப்பாங்க பாப்பா. எல்லோருக்கும் எல்லோராலயும் எல்லாமே செஞ்சுட முடியாதுடா கண்ணம்மா..., எதுவுமே செய்ய முடியாம போனாலும் தொடர்ச்சியா அன்பு செய்ய நாம உயிரோட இருந்தா போதுமே....


ஆனா.. இப்போ யாரும் அப்டி இருக்கறது இல்லை......நம்மளால எதுவும் ஆகாது, நம்ம கிட்ட ஒண்ணும் இல்லேன்னு சொன்னா பேசக் கூட மாட்டாங்க பாப்பா...!

ஒரு வேளை.....நாளைக்கு டாடியால உனக்கு ஒண்ணு செய்ய முடியலேன்னா என்ன கோவிச்சுக்குவியா...? டாடி கூட பேச மாட்டியா? டாடிய உனக்கு பிடிக்காம போயிடும்மா அக்க்ஷும்மா...?

உதடு குவித்து...அழுகைக்கு தயாரானவள் போல இருந்தாள் அக்க்ஷு....

நோ....டாடி.....வாட் எவர் யூ டூ......ஆர் டோண்ட் டூ.....ஈவன் யூ  ஹேட் மீ.....

ஐ....ஆல்வேய்ஸ் லவ் யூ டாடி.....கண்ணில் கண்ணீர் ததும்ப என்னைக் கட்டிக் கொண்டாள்...

மீ டூ டா குட்டிம்மா....என்று அவளைக் கட்டிக் கொண்டு....புறாக் கூட்டினைப் பார்த்தேன்.....தாய்ப்பறவை குட்டிகளை விட்டு விட்டு...மீண்டும் இரைத் தேட எங்கோ பறக்கத் தொடங்கி இருந்தது.....!


தேவா. S


கரையை தேடும் ஓடங்கள்..!

$
0
0


ஏதேதோ நிகழ்ந்து கொண்டிருக்கிறது தன்னிச்சையாய். ஒரு வண்ணத்துப் பூச்சியைப் பிடிக்க ஓடிய சிறுவன் திரும்ப வழி  மறந்து எங்கேயோ நிற்கும் ஒரு திடுக்கிடலாய் எனக்கு சமகாலம் இருக்கிறது. என் தாத்தா இறந்து போன போது எண்ணெய் தொட்டு வைக்க வேண்டும் என்று இறந்த உடலின் தலையை முதன் முதலாக தொட்ட போது இடுப்பில் கோமணத்தோடு குளியலுக்கு தயாராயிருந்த அந்த உடலை நான் ஆச்சர்யமாய் பார்த்தேன் ஒரு பயத்தோடு.

காலத்தின் திசைகள் இதுதானென்று அறுதியிட்டு யாராலும் சொல்ல முடியாது. என் தாத்தாவும் என்னைப் போல வண்ணத்துப் பூச்சி பிடிக்கச் சென்றவர்தான். வண்ணத்துப் பூச்சி என்ற ஒன்றே இல்லை என்று அறிந்த பின் அவர் மரணித்தாரா இல்லை. அறியாமலேயே வண்ணத்துப் பூச்சியை பிடிக்க முடியவில்லை என்ற ஏக்கத்தில் மறைந்தாரா என்று தெரியவில்லை. ஒரு வேளை வேறு ஏதோ ஒன்றை பிடித்து விட்டு வண்ணத்து பூச்சியை பிடித்து விட்டேன் என்ற இறுமாப்பில் கூட இறந்திருக்க கூடும்.

ரங்கூனிலிருந்து அவர் என் அப்பத்தாவிற்கு எழுதி இருந்த கடிதங்களில் குடும்பத்தின் நிகழ்வுகளைப் பற்றி கேட்டும் கொடுத்து விட்ட பணத்தில் என்ன செய்ய வேண்டும் என்று விவரித்துமே நிறைய எழுதி இருந்தார். உன் உடல் நலனை பார்த்துக் கொள்ள வேண்டியது என்று எழுதி அவர் அடிக்கோட்ட இடமே காதலின் வெளிப்பாடாக இருந்திருக்க கூடும். அதுவும் அந்தக் கடிதத்தை என் அப்பத்தாவிடம் வாசித்தவன் அடிக்கோடிட்டு எழுதியிருக்கும் வாசகத்தை அழுத்தம் திருத்தமாய் சொல்லி இருப்பானா என்று தெரியவில்லை. வெளிப்படுத்திக் கொள்ளாத காதல் எப்படி இருந்திருக்கும் என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை.

அப்பத்தா தாத்தாவிற்கு அவர் ரங்கூனிலிருந்து இரண்டு வருட காலத்திற்குள்  எழுதிய சில கடிதங்களையும் என்னால் வாசிக்க முடிந்தது. கடிதம் இப்படி ஆரம்பித்து இருந்தது....

" மஹாகனம் பொருந்திய, ஸ்ரீமான், ராஜ ராஜஸ்ஸ்ரீ, சிரஞ்சீவி, மரியாதைக்குரிய அய்த்தான் அவர்களுக்கு.. " என்று நீட்டி இழுத்து சுழிக்கும் இடத்தில் எல்லாம் மயிலின் தலையிலிருக்கும் கொண்டையாய் சுழித்து  எழுதப்பட்டு இருந்தது. கடிதத்தின் தலைப்பில்  " உ சிவமயம் " என்ற  வார்த்தை அழுத்தமாய் இருந்தது.

சிவகோத்திரம். சிவனை பெயரிலும், விபூதியாய் நெஞ்சிலும், நெற்றியிலும், தோளிலும், தனது 75 வயதிலும் என் தாத்தா அணிந்திருப்பதை பார்த்திருக்கிறேன். சிவகாமி அம்மாள் என்ற அப்பத்தாதான் ஒரு வேளை தாத்தா தேடி அடைந்த பட்டாம் பூச்சியாய் இருக்குமோ என்று கூட சில நேரம் யோசித்து இருக்கிறேன். ஒரு மாதிரியான நிதானமான காலத்தில் அவர் வாழ்ந்து முடித்திருக்கிறார். என் அப்பாவின் காலத்தின் முற்பகுதியில் அந்த நிம்மதி பரவி இருந்திருக்கிறது. இப்போது அவரும் சமகாலத்தின் குறைகளை சலித்துக் கொண்டேதான் நகர்ந்து கொண்டிருக்கிறார்.

என்னுடைய காலம் சலிப்பிலேயேதான் தொடங்கி இருக்கிறது. நிதானம் என்ற வார்த்தையையும், நிம்மதி என்ற வார்த்தையையும் எழுதி, எழுதி நிம்மதி அடைந்து விட்டதாய் நினைத்துக் கொள்கிறேன். பட்டாம் பூச்சி இருக்கிறது என்று  என் அப்பா இப்போதும் சொல்கிறார். அவர் அந்த பட்டாம் பூச்சியைப் பிடித்தாரா, இல்லையா என்று தெரியவில்லை. நானும், என் தாத்தாவும் என் அப்பாவும் மட்டும் வாழ்க்கைக்குள் இழுத்துச் செல்லும் பட்டாம் பூச்சியை பிடிக்க ஓடவில்லை. ஒட்டு மொத்த உலகமும் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு மனிதனும் ஒரு வரலாறு. ஒவ்வொரு சூழல், ஒவ்வொரு கதைகள். ஒவ்வொரு கதைக்குள்ளும், வீரம் இருக்கும், விவேகம், இருக்கும், வெற்றி இருக்கும் தோல்வி இருக்கும் ,காதல், காமம், ஏமாற்றம் விரக்தி, நம்பிக்கைகள், மதம், சாதி,...இப்படியான இத்தியாதி இத்தியாதிகள் இருக்கும். என் அப்பாவிற்கு,என் அம்மாவும் நானும் என் குடும்பத்தினரும் இருப்பது போல அவரது அப்பா செல்லையா பிள்ளைக்கு ஒரு ரங்கூனும், சிவகாமி அம்மாளும், ஐந்தாறு பிள்ளைகளும், அவரது அப்பா, ராமசாமி பிள்ளைக்கும் அவரது அப்பா கருப்பையா பிள்ளைக்கும், அவரது அப்பா முத்து பொன்னம்பலம் பிள்ளைக்கும் இருந்திருப்பார்கள்.

என் அப்பாவின் பெயருக்குப் பின்னால் இந்த பிள்ளை என்று போட்டுக் கொள்ளும் பழக்கம் 50-50 ஆக இருந்தது. அதாவது திருமண பத்திரிக்கைகளில் தொடங்கி , உறவுகளின் திருமணத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதிற்காகவும்,  தனது தகப்பனாரை சுட்டி செய்திகள் சொல்லவும் அவர் பிள்ளை என்ற பட்டத்தை பயன்படுத்தி இருக்கிறார். அலுவலக சம்பந்தமாகவும் இன்ன பிற தொடர்புகளிலும் அவர் அதை பயன்படுத்தியது இல்லை.  நான் சுத்தமாய் பயன்படுத்துவதில்லை. என் மகளுக்கு அவள் யார் என்ன சாதியென்றே தெரியாத சூழலிலேயே வளர்கிறாள். அவளின் பிரிவினைகள் எல்லாம் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், பிலிப்பினோஸ், அராப்ஸ் அவ்வளவுதான்.. கூடுதலாய் ஒரு கம்யூனிட்டி ஸ்ட்ராங்காக தெரியுமென்றால் அது மலையாளிகள்...மட்டுமே...!

ஏனென்றால் எங்கே சென்றாலும் மலையாளிகள் தங்களின் ஆளுமையை மலையாளிகளாகவே காட்டிக் கொள்வார்கள். கொஞ்சம் பணம் சேர்ந்து நல்ல வசதியாய் இருக்கும் பெரும் பணக்கார தமிழர்கள் இன உணர்வுக்கு வெகு தூரமானவர்கள். தமிழனிடம் அவர்கள் தமிழிலே கூட பேசுவது கிடையாது. பெரும்பாலும் இந்தியாவிற்கு மட்டுமே சாதி மிகவும் அவசியமானதாய் இருக்கிறது. அறிவியல் வளர்ந்து  இன்று எத்தனையோ சமூக இணைவு இணைய தளங்கள் வந்து விட்டது. நமது கல்வியையும் அறிவையும் விஞ்ஞான வளர்ச்சியையும் வைத்துக் கொண்டு வேறு ஏதாவது உபயோகமாய் இந்த பூமிக்குச் செய்து விட்டுப் போவோம் என்ற எண்ணம் இல்லாமல், இன்னமும் சாதியையும், மதத்தையும் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் சிரிப்பாகத்தான் இருக்கிறது.

சாதி என்ற ஒன்று இல்லை என்று சொல்லும் நீ உன் பிள்ளைக்கு வேறு சாதியில் திருமணம் செய்வாயா..? என்று முதலில் என் சட்டையைப் பிடிப்பார்கள். இது எல்லாம் பழைய பஞ்சாங்க கேள்விகள். வாழ்க்கையே போலி, பூமியே சூரியன் கண்ட ஒரு பெரும் கனவு..இதில் எங்கே இருந்து வந்தது சாதி. என் மகள் யாரைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஆலோசனையைத்தான் நாங்கள் சொல்ல முடியும். யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை அவள்தான் முடிவு செய்ய வேண்டும். 100 ட்யூசன் வைத்து அறியாதவர்கள் படிக்கட்டும். நமக்கு ட்யூசனே வேண்டாம் என்ற நிலைக்கு வந்து வெகு நாட்களாயிற்று.

ஆன்ம வெளிச்சம் இல்லாத குருட்டு புத்திகள்தான் இன்று பாகுபாடு அரசியலை நடத்தி இரத்தம் குடித்துக் கொண்டிருக்கின்றன. வெறிபிடித்த நாயை அடித்துக் கொல்வது போல காலம் இவர்களை அடித்து தூக்கிக் கொண்டு போகப் போகிறது. அப்போது என்ன செய்யும் இவர்களின் அரசியலும் சாதியும், மதமும், கடவுளும்...!

இல்லாத வண்ணத்துப் பூச்சியை துரத்துகிறேன் பேர்வழி என்று வனத்தை, வாழ்வாதாரத்தை சேதப்படுத்தும் இந்த மாதிரியான ஜந்துக்களுக்கு பூமியே நரகமாகிப் போகிறது.

நானும் வண்ணத்துப் பூச்சியை துரத்தி வந்தவன் தான் இப்போது வண்ணத்துப் பூச்சி என்று ஒன்று இல்லை என்று  தெரிந்து மீண்டும் வந்த வழியே திரும்ப நினைக்கையில் வழி மறந்து போய்விட்டது. வண்ணத்துப் பூச்சியே இல்லை என்று நான் யாரிடமும் சொல்லவும் முடியவில்லை. என் தாத்தன்களும், பாட்டன்களும், உங்கள் தாத்தன்களும், பாட்டன்களும் கண்டிப்பாய் வண்ணத்துப் பூச்சியை காணாமல் மரித்தவர்கள் என்று உறுதியாய் உங்களிடம் சொல்ல நான் வழி கண்டு பிடித்து மீண்டும் என் வீடு அடைய வேண்டும். பட்டாம் பூச்சி என்ற ஒன்றே இல்லை என்று அறிவதே முக்தி அல்லது விடுதலை என்பது எனக்குத் தெரிந்துதான் விட்டது...

ஆனால்...வழி மறந்து போய் விட்டது மட்டும் இல்லாமல் திரும்பும் வழி மிகவும் சிக்கலாகவும் இருக்கிறது. ஏதேதோ கற்பிதங்கள், ஏதேதோ அனுபவங்கள், ஏதேதோ அறிவுகள், ஏதேதோ வழிகாட்டல்கள், எப்படி எப்படியோ நகரவேண்டும் என்று  சொல்லப்பட்ட வழிமுறைகள்.....இதை எல்லாம் நான் மறக்க வேண்டும், அல்லது அழிக்க வேண்டும்.

அப்போதுதான் நான் வீடு திரும்ப முடியும்.....இல்லையென்றால் என் பாட்டனையும் உங்கள் பாட்டனையும், என் தாத்தனையும் உங்கள் தாத்தனையும் போல்....

பட்டாம் பூச்சி என்று ஏதோ ஒன்றை கற்பித்துப் பிடித்து விட்டதாகக் கருதிய படியோ, இல்லையேல் பட்டாம் பூச்சி ஒன்றை தேடியபடியே....கிடைக்கவில்லை என்ற ஏக்கத்துடனோ...மரிக்கக் கூடும்...

வீடு திரும்ப வேண்டும்....!


தேவா. S





தமிழ் எங்கள் உயிருக்கு நேர்....!

$
0
0


பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க நேரமின்மையும், நமது கலாச்சாரம் என்பதே செயற்கைக் கோள் தொலைக்காட்சிகள் மூலம்தான் நமது பிள்ளைகளுக்கு சென்றடைய முடியும் என்ற நிர்ப்பந்தமும் நமக்கு ஏற்பட்டுப் போனால் அது எவ்வளவு பெரிய சாபம். எவ்வளவு பெரிய கொடுமை. ஆமாம்..பெரும்பாலும் வெளிநாட்டில் வாழும் அத்தனை பேருக்கும் இந்த கொடுமையும் சாபமும் இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால் நமது கலாச்சாரத்தை எடுத்துச் சொல்லும் பண்டிகைகளுக்கும்,  திருமணங்களுக்கும்
எப்போதாவதுதான் தாய் நாட்டில் செல்லும் வாய்ப்பு நமது குழந்தைகளுக்கு இருக்கிறது.

வாழும் சூழல் நமது தாய் மொழியோடு பந்தப்பட்டு இருக்காவிடில் அவர்கள் எப்படி தங்களைத் தமிழ்ப் பிள்ளைகளாக உணர்வார்கள்? தமிழ் என்னும் மொழியின் வளத்தையும் தமிழர்களுக்கென்று இருக்கும் பாரம்பரிய கலாச்சாரத்தையும், நமது முத்தமிழின் சுவையையும் அறிவார்கள்...? எட்டு வருடமாக என் மகளுக்கு அப்படியான ஒரு சூழலை எங்களால் அமைத்துக் கொடுக்க முடியாமல் ஒரு குற்ற உணர்ச்சியுடன் தான் எங்களின் அமீரக வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. தமிழ்த்துளி பற்றி என்னுடைய கல்லூரி சீனியர்  சங்கர் அண்ணன் கூறிய பின்பு அதில் நிறைய தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை மையப்படுத்தி திருமதி. ப்ரியா ராஜன் நிறைய செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து இணைந்த உடன் இன்று அந்த குற்ற உணர்ச்சி சிறிதேனும் எனக்கு குறைந்திருக்கிறது.

தமிழின் பெயரால் எத்தனையோ அமைப்புகள் அமீரகத்தில் இருந்தாலும் தமிழ்த்துளியின் செயல்பாடுகள் அவற்றில் இருந்து வேறுபட்டது. தமிழ்த் துளி கிளைகளையும், இலைகளையும், பழங்களையும் நோக்கி செல்லாமல், அதன் சீரமைப்புகள் நேரடியாக விதைகளைச் சென்று செப்பனிடுவதுதான் இதன் சிறப்பு. தமிழ்ப்பிள்ளைகள் தமிழிலேயே பேசவேண்டும் என்பதோடு வீட்டில் பெற்றோர்களும் தமிழிலேயே பேசுங்கள் என்று வலியுறுத்தும் தமிழ்த் துளி போன்ற அமைப்புகள் சர்வ நிச்சயமாய் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான்.

கடந்த வாரம் தமிழ்த்துளியின் இரண்டாம் ஆண்டு விழாவினை திங்கள் விழா என்ற பெயரில் நாங்கள் கொண்டாடிய பொழுது எங்களின் நிகழ்ச்சிகளை எமது பிள்ளைகளே முன் நின்று நடத்தினர். தமிழ் படிக்கவும் எழுதவும் சூழல் அமையாத தளிர்கள் எல்லாம் தமிழ்த் துளியின் அரவணைப்பால் செந்தமிழில் பேசியும், நமது கலாச்சார நடனங்களை ஆடியும் எம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினர். தமிழ்த் துளி குழந்தைகளுக்கான அமைப்பு. குழந்தைகளே அதன் உறுப்பினர்கள் என்ற ரீதீயில் செம்மையாய் வடிவமைத்திருக்கும் ப்ரியா ராஜன் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்.

அதிவேக ரயிலொன்றின் வேகத்தை ஒத்த அமீரக வாழ்க்கையில் நமது மொழிக்காய், நமது பிள்ளைகளின் தெளிவுக்காய் நேரம் ஒதுக்கி இத்தகைய அமைப்புகளை நடத்துவதும், அவ்வப்போது அவர்களுக்கான தனித்திறன்போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்து செய்தலும் எளிதான காரியம் அல்ல. தமிழ் என்பது வெறும் மொழியல்ல அது நமது உணர்வு என்பதால்தான் எல்லா கடுமையான அலுவல்களுக்கும் நடுவே தமிழ்த்துளி இயங்கிக் கொண்டிருக்கிறது.


தமிழ்த்துளியின் இரண்டாம் ஆண்டு விழாவான திங்கள் விழாவின் சிறப்பு விருந்தினராய் சொல்லரசி தேச மங்கையர்க்கரசி விழாவிற்கு தலைமை தாங்கி சிறப்பித்தார். இறையால் ஆசிர்வதிக்கப்பட்ட சிறப்பு ஆளுமை கொண்ட சொல்லரசி தேச மங்கையர்க்கரசியின் சில ஆன்மீகச் சொற்பொழிவுகளை கேட்டிருந்த எனக்கு...

தமிழ்த்துளியின் திங்கள் விழாவில் அவர் பாய்ந்த தமிழ்ப்பாய்ச்சலைக் கண்டு பிரமிப்பும் ஆச்சர்யமும் ஏற்பட்டது. அம்மா என்றும் அப்பா என்றும் பிள்ளைகள் தங்களின் பெற்றோர்களை அழைக்க வேண்டியதின் அறிவியல் நிர்ப்பந்தத்தை அவர் விளக்கினார். ' அ ' என்பது உயிரெழுத்து.. 'ம்' என்பது மெய்யெழுத்து இந்த உயிரும் மெய்யும்  கூடி உயிர்மெய் எழுத்தான 'மா' வை பெற்றெடுக்கிறது, இதே போலத்தான் அப்பா என்ற சொல்லும்.... என்று விளக்கிய அவர் அம்மா என்றும் அப்பா என்றும் நாம் அழுத்தமாய்  உச்சரிக்கும் போது மூளையில் சிந்தனையைத் தூண்டக் கூடிய திரவம் இயல்பிலேயே சுரக்கிறது என்றும் விவரித்தார்.

அவசர யுகத்தில் எல்லாமே நாகரீகத்தின் பொருட்டு பழமையாய்ப் பார்க்கப்பட்டு மாற்றிக் கொள்ளப்படுகிறது ஆனால் மொழி விசயத்தில் நாம் அப்படி இருக்கக் கூடாது. தமிழ் ஆயுளை வளர்க்கும் மொழி. என்றும் இனிய தமிழ் உலகத்தில் இருக்கும் எல்லா மொழிகளையும் விட சுவையான மொழி. பாரதியார் எல்லா மொழிகளையும்  கற்றவர் ஆனாலும்.... யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவதெங்கும் காணோம் என்றார் என்றால் தமிழ் எவ்வளவு வளமான மொழி என்று அறிக;

இப்படியாய் தொடர்ச்சியாய் தமிழை மையப்படுத்தி திருமதி. தேச மங்கையர்க்கரசி  சொற்பொழிவாற்றியதோடு தமிழ்த்துளியின் திங்கள் விழா அட்டகாசமாய் நிறைவுற்றது.


திங்கள் விழா என்னும் கருப்பொருளில் தமிழ்த்துளி வடிவமைத்திருந்தது வெறும் கேளிக்கை நிகழ்ச்சிகள் அல்ல... அது ஒவ்வொரு தமிழ் மாதத்தையும் மையப்படுத்திய பாடல்கள், உரையாடல்கள் மற்றும் நடனங்கள் என்று கேள்விப்பட்டால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்தானே...!!ஆமாம்...இப்போது எங்கள் பிள்ளைகளுக்கு, பாரதியோடு பாரதிதாசன், கண்ணதாசன், திருவள்ளுவர், என்று தமிழ்ப் பெரும் புலவர்களையும் தெரியும், தமிழ் மாதங்களும் தெரியும்...தமிழ் மொழியின் வளமும் அதை பேச வேண்டிய அறிய வேண்டிய அவசியமும் தெரியும்...

பிஞ்சுகளின் வாயில்...
தமிழ்ச் சொற்களாய் 
தத்தித் தத்தி 
நடை பயின்ற 
கொஞ்சு தமிழின்
அழகில் பறிபோனதே
எமது நெஞ்சம்...!

தாய்த் தமிழகத்தில் இருந்து கொண்டு ஆங்கிலத்தில் பேசும் மோகம் கொண்ட என் உறவுகளே....உங்கள் பிள்ளைகளிடம் தமிழில் பேசுங்கள்...! தமிழின் ஆளுமையையும் தமிழராய் இருக்க வேண்டியதின் அவசியத்தையும் எடுத்தியம்புங்கள்...!

தமிழ் நாட்டிலும், வெளிநாட்டிலும் தமிழின் பெயரால் அமைப்புக்கள் வைத்திருக்கும் தோழர்களே...உங்கள் அமைப்பின் செயல்பாட்டினை தமிழின் வளர்ச்சியை மையப்படுத்தியே நகருங்கள்.... தமிழ் பேசா, தமிழின் சிறப்பு இயம்பா எந்தச் செயலையும் தமிழின் பெயர் சொல்லி இனியும் செய்யாதீர்கள்...! தமிழ்த் துளி போன்ற அமைப்புகள் அமீரகம் மட்டுமின்றி இன்னும் எங்கெங்கெல்லாம் தமிழர்கள் பரவி வாழ்கிறார்களோ அங்கெல்லாம் உருவாகி எம் செந்தமிழினை  எமது அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கட்டும்..!

" தமிழுக்கு அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் "


தேவா. S




பைத்தியம்....!

$
0
0


ஒரே எரிச்சலாக இருந்தது எனக்கு. எதைப் பார்த்தாலும் பிடிக்கவில்லை. எதைத் தொட்டாலும் அது இன்னும் ஒன்றை கொண்டு வந்து விடுகிறது. கண்களை மூடிக் கொண்டிருக்கப் பிடித்தது. யாருடனும் பேச சுத்தமாய் பிரியமில்லை. என்னை சுற்றிய சப்தங்கள் கர்ண கொடூரமாய் மூளையை சிதைத்துக் கொண்டிருந்தன. யார் யாரோ ஏதேதோ பேசிச் செல்வது எல்லாம் கோணல் மாணல் பிம்பங்களாய் புத்தியில் பட்டு எதிரொலித்தது. பழைய சி 90 கேசட்டை பாஸ்ட் பார்வேர்ட் செய்து விட்டது போலவும், அதே கேசட் சிக்குவதற்கு முன்னால் ஸ்லோமோசனில் பாடுவது போலவும் மனிதர்கள் பேசிக் கொண்டும் ஓடிக் கொண்டும் இருந்தார்கள்.

ஜன நெருக்கடியான நகரத்தின் தெரு இது. இங்கே தெரு நாய் கூட வேகமாய் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது. கட் அவுட்டுகள், அரசியல் போஸ்டர்கள், சவ ஊர்வலத்தைப் போட்டிப் போட்டுக் கொண்டு கடக்கும் அரசியல் போராட்ட ஊர்வலங்கள். ஒரே நெரிசல் ஒரே ஓட்டம், ஒரே கூச்சல்கள். தூரத்தில் சுட்டெரித்துக் கொண்டிருந்த சூரியன் என் தோளினைக் கடந்து எலும்பைத் தொட்டு நொறுக்கிக் கொண்டிருக்கிறான். வெட்கமே இல்லையா உனக்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய் இந்த பூமியின் கேவல ஜந்துவே... கோணலாய் என்னைப் பார்த்து சிரித்த சூரியனைப் பார்த்து நானும் கோணல் மாணலாய் முகம் சுளித்து என் எதிர்ப்பினைக் காட்டினேன்.

பரதேசி....பரதேசி...கஸ்மாலம்..ங்கோ*** செத்துத் தொலைய என் ஆட்டோதான் கிடைச்சுதா ஓரமா போ கயித....ஹாரனை அமுக்கியபடியே உரசியபடியே வேகமாய் பறந்து சென்ற ஆட்டோக்காரனுக்கு நான் தான் பிரச்சினை. அம்மாவை தொடர்பு படுத்தி அவன் திட்டியதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியலைபக்கத்தில் கிடந்த கல் ஒன்றை எடுத்தேன்....யார்க்கிட்ட.. ங்கொம்மால...கல்லை தூக்கி ஆட்டோவை நோக்கி வீசினேன். ஆட்டோ வளைவில் திரும்பி விட எதிரே வந்த அந்த கரை வேட்டி குண்டனின் நெற்றியில் கல் பட்டு ரத்தம் பீறிட ஆரம்பித்தது.  ஐயா தெரியாமா பட்றுச்சுய்யான்னு நான் சொல்வதற்கு முன்னால்

ஓய்...பிடிங்கடா அவன...மொத்தமாய் பத்து பேர் என்னை துரத்த என் பக்கத்தில் நின்று கொண்டிருந்தவன் என் காலரைப் பிடித்து இழுக்க சரேலென்று தரையில் விழுந்தேன். விழுந்த வேகத்தில் உச்சியை நெருங்கிக் கொண்டிருந்த தார் ரோடு சூட்டோடு உராய்ந்து இடது கையில்  இரத்தம் வழிய ஆரம்பித்தது. சட்டையைப் பிடித்துக் கொண்டிருந்தவன் என் முகத்தில் குத்த உதடு கிழிந்து ரத்தம் எட்டிப்பார்த்தது. நான் அவனிடம் இருந்து அசுர வேகத்தில் விடுபட்டு ஓடுகையில் என் சட்டை கிழிந்தே போய் விட்டது.

கிழிந்த சட்டையோடு கைலியை பிடித்துக் கொண்டு ஓடினேன். கூட்டம் என்னை விரட்டத் தொடங்கி இருந்தது. சுற்றி வளைத்து ஓடியதில் ஒரு சந்தின் நடுவில் இருந்த கல்லில் கட்டை விரல் இடித்து தடுக்கி விட மறுபடி கீழே விழுந்தேன். புரண்டு வாரிச் சுருட்டி எழுந்து திரும்பிப் பார்த்தேன். துரத்திக் கொண்டு வந்த பைத்தியக்கார பயலுகள் ஒருத்தரையும் காணவில்லை.

கை எரிந்தது. உதடு வலித்தது. கட்டை விரல் நகம் பிய்ந்து கொண்டு ரத்தம் கொட்டியது. பக்கத்தில் ஓடிய ஒரு சாக்கடைத் தண்ணிக்குள் கொண்டு போய் கால் கட்டை விரலை வைத்தேன். சில்லென்று இதமாய் இருந்தது. மேலே நிமிர்ந்து பார்த்தேன். சூரியன் மறுபடி என்னை ஏளனம் செய்தான். நல்லா விழுந்தியா..நல்லா விழுந்தியா...சிரித்துக் கொண்டே என்னை சுட்டுக் கொண்டிருந்தான்.

என்னைப் பார்த்து ஏண்டா சிரிக்கிற லூசுப்பயலே...என் மேல ஆட்டோவ  விட்டு ஏத்தவந்து என்னை கொல்லப்பாத்தானே ஆட்டோ டிரைவர் தடியன் அவனப்  பாத்து சிரிடா....அசிங்க அசிங்கமா திட்டிட்டுப் போய்ட்டான் அயோக்கியப்பய...அவனை கண்டிக்க துப்பு இல்லை ஒங்களுக்கு எல்லாம்...என்னை ஏன்டா எல்லோரும் தொரத்துறீங்க... கிண்டல் பண்றீங்க....? கோபத்தை வேற எப்டிதாண்டா காட்றது? முட்டாப்பயலுகளா?

ரோட்ல ஓரமா வரவேண்டியதுதானே அந்த தடியன் நான் கல்லு வீசுற இடத்துக்கு ஏண்டா அவன் வர்றான் அதான் அடிபட்டுச்சு...குறுக்கால வந்தா அப்டித்தான் படும். நான் ரோட்ல மரியாதையா க்ராஸ் பண்றது ஆட்டோக்காரனுக்கு இடைஞ்சல்னா என் கல்லு போறதுக்கு அந்த தடியன் இடைஞ்சல்...புரிஞ்சுதா

என்ன ஏதுன்னு கேக்காம அடிக்கிறானுங்க... அயோக்கியப் பசங்க...வலிக்குதுடா....

எனக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. இப்ப எனக்கு வலிக்குதே நான் என்ன செய்வேன்.....நான் ஊராவீட்டுப் புள்ள...கேக்க நாதி இல்ல.....என்கிட்ட காசு இல்ல அதான் இப்டி...

கோபமாய் சூரியனிடம் பேசிக் கொண்டிருந்தது தெரியாத ஒரு லூசு என்னைப் பாத்து லூசுன்னு சொல்லிட்டு வேகமா சைக்கிள்ள போகுது. அவனை பிடிங்களேன்டா யாராச்சும் புடிச்சு அடிங்களேன் ச்சும்மா நிக்கிறவன பாத்து சாக்கடேல காலு வச்சு இருக்கான்னு கிறுக்குப் பயன்னு சொல்லிட்டுப் போறானே, என் கால் வலி அவனுக்குத் தெரியுமா? நெகம் பிஞ்சு போச்சுன்னு அவனுக்குத் தெரியுமா? அவன் லூசா நான் லூசா...? பேமானிங்க....ஆள் ஆளுக்கு ஒரு ரூல்ஸ் வச்சுக்குவானுங்க...

காலை விந்தி விந்தி நடந்து கொண்டிருந்தேன். உச்சிப் பொழுதாயிப் போச்சு நான் இன்னும் சாப்பிடலை.  எனக்குப் பசிக்குது எவனுக்காச்சும் அறிவு இருக்கா எனக்கு சாப்பாடு போடணும்னு. ஒரு ஹோட்டலில் நுழைவதற்கு முன்பு கடைவாசலில் இருந்த மரத்திலிருந்த ஒரு பறவை என்னை தனது கக்கூசாக மாற்றி இருந்தது.  போனாப் போவுது பறவ தானே அது என்ன மனுசங்க மாதிரி புத்திசாலியா என்ன... ஏன் பறவ..? கீழே குனிந்து மண்ணை அள்ளி என் தலையிலும் சட்டையிலும் போட்டு தொடச்சேன். பேப்பர் ஒண்ணையும் காணோம்...என் கைலியிலயே கைய தொடச்சுக்கிட்டேன்...!

அட இது கருப்பா இருக்கு.. காக்காவா இருக்குமோ இல்லை குயிலா இருக்குமோன்னு ஒரு டவுட்டு..பக்கத்துல நின்னுக்கிட்டு இருந்த ஒரு தங்கச்சிக்கிட்ட... ஏன் தங்கச்சி..மேல இருக்கறது காக்காவா இல்லை குயிலா...ன்னு கேட்டதுல என்ன தப்பு இருக்கு....? என் சட்டை கிழிஞ்சு இருக்காம், காலு விரலு அடிபட்டு இருக்காம்.. என் மேலு, காலு அழுக்கா இருக்காம், என் மேல காக்கா ஆயி போய் இருக்காம்...என்னைய வெறுப்பா முறைச்சுக்கிட்டு ஏற இறங்க பாத்துச்சு அந்த தங்கச்சி....

ஏய் தள்ளி நில்லு .... தூரம் போ என்னை பாத்து கோவப்பட்டு ஏன் அவ கத்தணும். அப்படியே கொரவளைய கடிச்சு கொதறணும் போல இருந்துச்சு எனக்கு....ஈஈஈஈஏஏஏய்ய் அடிக்குரலில் இருந்து என் எதிர்ப்பை தெரிவித்தேன். எனக்கு அவ்வளவு கோபம்...

இந்த பாரு புள்ள என் சட்டைய நான் ஒண்ணும் கிழிக்கல லூசுப்பயலுக என்ன ஏதுன்னு கேக்காம கிழிச்சுப்புட்டாய்ங்க, கீழ விழுந்ததுல கைலி உடம்பு எல்லாம் அழுக்காபோச்சு...ஓடி வரும் போது கல்லு இடிச்சு கால் அடிபட்டுப் போனதால ரோட்டோரமா ஓடுன தண்ணில கால நனைச்சு நின்னேன். அப்போ கூட சூரியன் என்னை கிண்டல் பண்ணி சிரிச்சான். இப்போ அதோ அந்தப் பறவ என் மேல ஆயி போயிடுச்சு...அதான் அது என்ன பறவன்னு கேட்டேன்....பாத்துக்கோ...

நான் பேசிக் கொண்டே இருக்கும் போது நாலைந்து பேரு வந்து கொம்ப எடுத்து என்னை அடிக்க ஆரம்பிச்சாங்க...அட கிரகம் புடிச்சவைங்களா சும்மா இருக்கவன ஏண்டா மறுபடி மறுபடி அடிக்கிறீங்க...வலிக்குதுடா....அடேய் அடேய்.....டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்

சொத்து, காசு, பணம்னு சொல்லி சண்டை போட்டுக்கிட்டு இருந்த,  ஏமாளித்தனமா இருந்து என் உயிர ஏன் எடுக்குறன்னு சொன்ன எல்லா உறவுகளை எல்லாம் தொலைச்சு தலை முழுகிட்டு எம்பாட்டுக்கு இருக்கலால்ம்னுதானே வந்தேன்...ஒங்களுக்கு எல்லாம் என்னங்கடா பிரச்சினை...?

கீழே விழுந்து கிடந்தேன். அடி மேல் அடியும் மிதியும் பட்டு உடம்பு ரணமாயிருந்தது.  என்னை அடித்த எல்லோரும் போயிருந்தார்கள், அந்த தங்கச்சியும் கூட...ஆமாம்  தங்கச்சியாம் தங்கச்சி.....கேனச் சிறுக்கி மக....ஒழுக்கமா இருக்கவன யாரு மதிக்கிறா இந்த ஒலகத்துல...

எல்லாத் தேவடியாத்தனமும் பண்ணினாலும் அயோக்கியப் பயகிட்ட காசு இருந்தா கையெடுத்து கும்பிடுவாய்ங்க..ம்ம்ம்ம்....எனக்கு வயிறு பசித்தது.

ஹோட்டலுக்குள் விறு விறுவென்று நுழைந்தேன்....! அண்ணே இலை போட்டு சாப்பாடு  கொடுங்கண்ணே...!!!! என்னை ஏற இறங்க பார்த்த சர்வர் டேய்...காசு வச்சிருக்கியாடா என்று அதட்டினார்...

அண்ணே ஒங்கள விட எனக்கு வயசு கூடண்ணே எதுக்கு அட புடாண்னு பேசுறீங்க என் கிட்ட காசு இல்லண்ணே... ஆனா பசிக்குது. ரொம்ப பசிக்குது...கண்ணீர் மல்க கையெடுத்து கும்பிட்டேன். தடி மாடு மாதிரி இருக்க...வேலை செஞ்சு பொழச்சா என்ன காசு இல்லேன்னா சாப்பாடு இல்லே வெளில போடா கிறுக்குப் பயலே....என்னை பிடித்து வெளியில் தள்ளி சத்தம் போட்டான் சர்வர். கூட கல்லாவில் இருந்த மொதலாளியும் சேர்ந்து கொள்ள....

அப்போ வேலை ஏதாச்சும் கொடுங்கண்ணே...செய்யுறே......ன்

சொல்லி வாயை மூடுவதற்குள் என் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டனர். இது என்ன மடமா...? போடா போ பைத்தியக்காரப் பயலே....

வயிற்றைப் பிடித்து பசி இழுக்க வெகு நேரம் வெயிலில் நின்று கொண்டிருந்தேன். பக்கத்திலிருந்த குப்பைத் தொட்டியில் சாப்பிட்ட இலைகளை கடையின் வேறு ஒரு வேலையாள் கொட்டி விட்டுச் செல்ல....வயிற்றுப் பசி குப்பைத் தொட்டிக்கு என்னை இழுத்துச் சென்றது....ஏற்கெனவே அங்கே நின்றிருந்த ஒரு தெரு நாயை முதலில் கல்லெடுத்து விரட்டினேன்...

ஒரு இலையில் சாதமும் குழம்பையும் யாரோ ஒரு புண்ணியவான் மிச்சம் வைத்திருக்க...எடுத்து உண்டு கொண்டிருந்தேன்...

"பைத்தியக்காரனுகள பாரேன்....பசிச்சுதுன்னா குப்பைத் தொட்டியில இருந்து ஏதோ ஒரு எச்சில் எலைய எடுத்து தின்னுட்டு சொகமா சுத்திட்டு இருக்கானுக....நம்ம பொழப்ப பாத்தியா நாய் படாத பாடு...."

யாரோ யாரிடமோ சொல்லிக் கொண்டு பைக்கில் பறந்து கொண்டிருக்க....

என் வலி எல்லாம் எங்கோ ஓடி ஒளிந்து கொள்ளஎன் வயிறு நிறைந்து கொண்டிருந்தது....சூரியனைப் பார்த்து சிரிக்க...அவனும் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்..!


தேவா. S



Viewing all 254 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>