Quantcast
Channel: Warrior
Viewing all articles
Browse latest Browse all 254

வெந்து தணிந்தது காடு...!

$
0
0
























சேதுக்கரையிலிருந்துதான் இராமர் ஈழத்துக்குப் பாலம் கட்டியதாகச் சொன்னார்கள். பிரம்மாண்டமான வங்காள விரிகுடா என் முன் விரிந்து கிடந்தது. சேதுக்கரையின் கடல் நீல நிறம் கிடையாது. கருமையும் நீலமும் நிறைந்த ஒரு ரகசியங்கள் நிறைந்த நிறம் அது. நெரிசல் அதிகம் இல்லாமல் ஓரளவு அமைதியைக் தாங்கிக் கிடந்த அந்த இடத்தில் திவசம் கொடுப்பதில் இருந்து கருமாதி காரியங்கள் வரை எல்லாம் ஏதோ ஒரு அவசர கதியில் நடந்து கொண்டிருந்தன.

ஈர வேட்டியுடன் வெற்றுடம்புடன் முழுதும் மழிக்கப்பட்ட தலையோடு கடற்கரை மண்ணில் நானும் என் இரு தம்பிகளும் அமர்ந்திர்ந்தோம். காலை பத்து மணி வெயிலை கட்டுப்படுத்தி கொண்டிருந்த மேகக்கூட்டங்களை நிமிர்ந்து பார்த்தேன். கடற்காற்று ஈர உடம்பில் பட்டு சிலிர்க்கச் செய்து கொண்டிருந்தது. பிரபஞ்ச ரகசியங்களைத் தன்னுள் தேக்கிக் கொண்டு ஆழ் கடலும் நீலவானமும் எங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன. ஆமாம்.. அது சேதுக்கரை என்னும் கடற்கரை கிராமம். அங்கிருந்த்துதான் இராமர் ஈழத்துக்கு சென்று இராவணனோடு போரிட பாலம் கட்டினாராம். நாங்கள் எங்கள் தந்தையின் 16 ஆம் நாள் காரியத்துக்காக கடந்த ஜூன் 7 ஆம் தேதி அந்த கடற்கரையில் வற்றிப் போன கண்ணீரோடு அமர்ந்திருந்தோம்.

சாலையோரத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திக் கொண்டிருந்தவரை சாலையை விட்டு இறங்கிய டாட்டா-ஏசி சிறு லாரி அடித்து தலையில் அடிபட்டு எங்கள் உயிர் பறித்த கதை பற்றி நான் இங்கு பேசவரவில்லை. அது எனக்கும் இந்த பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பெருஞ்சக்திக்கும் இருக்கும் ஒரு வழக்கு. வழக்கு தொடுத்திருப்பவன் நான். குற்றம் சாட்டப்பட்டிருப்பது அண்ட சராசரத்தையும் ஆட்டிப்படைக்கும் அந்த சக்தி. கையிலிருந்த பொருளைத் தட்டிப் பறித்தது போல அவனுக்கு என்ன அப்படி ஒரு அவசரம் என்பதுதான் எனது கோபம். வழக்கம் போல ஏதேனும் நியாயத்தைக் விதி என்ற பெயரிலோ அல்லது பிரபஞ்ச சுழற்சி என்ற நீதியைச் சொல்லியோ அந்த பெருஞ்சக்தி என்னிடம் வாதிடலாம்...

என் கேள்வி எல்லாம் ஏன் என் தந்தைக்கு மரணம் வந்தது என்பதல்ல...ஏன் கள்ளத்தனமாய் இப்படி பின்னால் இருந்து வந்து உயிர் பறித்தாய் என்பது மட்டுமே...!

ஒருவேளை ஜென்மாந்திரக் கணக்குகளை எடுத்துக் கொண்டு வந்து, இது கடந்து போன பிறவியின் கர்மபலன் என்று காலம் என்னிடம் சொல்லலாம். அதை விட்டு விடுங்கள் அது எனக்கும் இந்த பிரபஞ்சத்தை இயக்கும் பெருஞ்சக்திக்கும் இடையே உள்ள பிரச்சினை. நான் என்ன யாரோவா? நானும் இந்தப் பிரபஞ்சத்தின் பகுதிதானே? எல்லாம் வல்லவன் என்றால் அவனிலிருந்து தனித்து விழுந்த நானும் எல்லாம் வல்லவன் தானே? நான் என்ன மனமென்னும் மாயைக்குள் அகப்பட்டு சிக்கல் கொண்ட மனிதனாகவா வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வந்த வேலையைச் செய்து முடித்து நானும் மீண்டும் என் மூலத்திற்கு தானே மீள்வேன். நீதி கேட்பது எனது உரிமை, நீதி சொல்லவேண்டியது இயற்கையின் கடமை.

ஜனனம் என்ற ஒன்று இருந்தால் மரணம் என்பது நிச்சயம் தானே ....நீ என்ன பித்தனா என்று கூட நீங்கள் என்னைக் கேட்கலாம்? நான் பித்தன் தான். அவனும் பித்தன் தான். இடைவிடாது சுடுகாட்டில் சுற்றி திரிந்தானே சுடலை என்ற பெயரில், நிலையாமை அறிய மண்டை ஓடுகளை அணிந்து கொண்டு அலைந்தானே கபாலி என்ற பெயரில், அசைவற்ற மூலத்தை சிவம் என்று அறிந்து அதை உணர்ந்து பின் பெருமான் ஆனானே அவனும் பித்தன் தான்.. நானும் பித்தன் தான்.

சேதுக்கரையில் எங்களுக்காக காரியங்களை செய்ய எங்கள் எதிரே இருந்த அந்த வேதம் படித்த பிராமணனுக்கு முறைப்படி பிரபஞ்ச சக்தியை வேண்டிய படி உரிமைகள் கொடுத்தோம். ஒவ்வொரு மந்திரமும் சொல்லி அதன் தமிழ் மொழி விளக்கத்தையும் சொல்லி வாஞ்சையோடு காரியங்கள் செய்து கொண்டிருந்தவரும், என்னைச் சுற்றி இருந்தவர்களும் எனக்கு என் சிவனாய்த்தான் தெரிந்தார்கள். அவனின்றி வேறு என்ன இருக்கிறது இங்கே? அவர் தவறுதலாய் வைணவ கோத்திரம் என்று சொல்ல நான் சிவகோத்திரம் என்று திருத்தினேன். காரியங்கள் மன திருப்தி. ஒருவர் எம் எதிரே கர்ம சிரத்தையாய் எம் தந்தையின் ஆன்மா முக்தியடைய பிரார்த்திக்கிறார் என்னும் நம்பிக்கையும், எங்களின் கூர்மையான மனம் குவித்தலும் எம்  தந்தையின் ஆன்மாவை பக்குவ நிலைக்குக் கொண்டு செல்லும் என்று நானறிவேன்.

இயல்பிலேயே பக்குவமான ஆன்மா கொண்ட சிங்கம் என் தந்தை. சிவகோத்திரம் என்று நான் அழுத்தம் திருத்தமாய் கூறியதற்கு காரணம் இருக்கிறது. சிவம் என்னும் பிரபஞ்சத்தின் பூர்வாங்க ஆதி நிலையை உணர்ந்து தலைமுறை தலை முறையாய் " தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..." என்று சாம்பலை அள்ளி நெற்றி நிறைய பூசிய பின்புதான் எங்களின் பொழுது தொடங்கும். மதத்தன்மையைப் பற்றி இங்கே நான் பேசவில்லை. சைவம் அல்லது சிவம் என்னும் ஒழுக்க நெறிக்குப் பின்னால் இருக்கும் விஞ்ஞான உண்மையைச் சொல்ல விரும்பிகிறேன்.

மேலோட்டமாக இல்லாமல் ஆத்மார்த்தமாக இதை உள்வாங்கிக் கொண்டு வாழ்க்கை நகரும் போது நிலையாமை ஆழமாக நமது உள்ளே இறங்கி விடுகிறது. நிலையாமை உள்ளே இறங்கிய பின் சக மனிதரை வாழும் காலம் வரை நேசிக்கத் தொடங்கி விடுகிறோம். சக மனிதரை நேசிக்கும் போது அறிந்து நாம் அநீதிகள் செய்யவே மாட்டோம். எல்லோரும் நேசிக்க அன்பே சிவம் என்பது புரியும். சிவம் என்பது யாரோ ஒரு மனித உருக் கொண்ட நபரல்ல, இத்தனை ஜனசமுத்திரத்தையும், இப்பிரபஞ்சம் முழுதும் பரவி விரவிக் கிடக்கிற அசையும் அசையா அத்தனை வஸ்துக்களையும் உள்ளடக்கிய பெருஞ்சக்தி என்று உணர முடியும். பிறகு மரணம் இலகுவாகிப் போகும். உயிர் பிரிதல் சுவாசித்தலைப் போன்ற சுகமான அனுபவமாய் முடிந்து போகும். உயிர் பிரிகையில் உடல் உகுக்கிறோம் என்ற புரிதலோடு பெரும் நிம்மதியை ஏந்தியபடியே உடல் விட்டு நகர்ந்து போவோம்.

இப்போது புரிகிறதா எனக்கும் என் சிவனுக்கும் ஏன் வழக்கு அல்லது என்ன வழக்கு என்று...? அவன் என் தந்தையின் உயிர் பிரிதலை அவரை உணரச் செய்யாமல் கையிலிருக்கும் பொருளைத் தட்டிப் பறித்தது போல கொண்டு போனதன் காரணம் எனக்கு வேண்டும் அவ்வளவுதான். பிரபஞ்சத்தின் அசைவுகளில் எம் தந்தையின் ஆன்ம பலமும், எம்மின் பிரார்த்தனைகளும் எப்போது நாங்கள் சொல்லும் ஐந்தெழுத்து மந்திரமும் எம் தந்தையை கடைத்தேற்றும் என்பதை நானறிவேன்..!  சூட்சும ரூபத்தில் இருக்கும் எமது மூதாதையர்களும், நன் ஆன்மாக்களும், பதினெட்டுச் சித்தர்களும், அறுபத்தி நான்கு நாயன்மார்களும் மேலும் பிரபஞ்ச பேரதிர்வும் எம் தந்தையின் ஆன்மாவை அரவணைத்து தலை வருடிக் கொடுத்து, அதிர்வுகளால் சாந்தப்படுத்தி மேல் நிலைக்கு உயர்த்தி இருப்பதை நான் அறிவேன். 

நான் உடலாய் இருப்பதால் என் உடல் சார்ந்த நினைவுகள் எழுப்பும் கேள்வியைத்தான் இன்று என் ஈசனிடம் வைத்திருக்கிறேன்...! ஏனென்றால் முறையாய் எடுத்துச் செல்வதில் இருக்கும் நியாயம் தட்டிப்பறிப்பதில் இல்லைதானே...?

தந்தையின் கர்மாக்களை எல்லாம் சமப்படுத்தி ஆதி நிலைக்கு செல்ல பிரார்த்தனைகள் செய்து விட்டு சேதுக்கரையிலிருந்து மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். வாகனத்தில் ஜன்னலோரமாக அமர்ந்திருந்தேன். காற்றால் என் கேசம் கலைக்க முடியாமல் தலையைத் தடவியபடியே மெளனமாய் என் முகத்தில் அறைந்தது. மாரநாடு கருப்பையா பிள்ளையின் மகனான, இராமசாமி பிள்ளையின் மகனான, செல்லையா பிள்ளையின் மகன் சுப்பையா பிள்ளை என்னும்  எனது தந்தையின் பூலோக வாழ்கை முற்றும் பெற்றது. யாதொரு குறைகளும், எதிரிகளும் இல்லாமல் நிறைவாய் வாழ்ந்து முடித்து ஒரு சிம்மம் போல கம்பீரமாய் இவ்வாழ்க்கையை விட்டு முறுக்கிய மீசையோடு வெளியேறிய எம் தந்தை எனக்கு மிகவும் கம்பீரமாய் தெரிந்தார். ஒட்டு மொத்த என் சொந்த  பந்தங்களுக்கும், நட்புகளுக்கும் இடையே கம்பீரமாய் வாழ்ந்து முடித்த நட்சத்திரம் அவர். அவரை அறிந்தவர் அவரை அறிவர்!

ஒரு  மிகப்பெரிய நாவலை வாசித்து முடிக்கையில், நல்ல திரைப்படத்தை பார்த்து முடிக்கையில், தொன்மையான கோவிலுக்குச் சென்று திரும்புகையில், ஆழ் தியானம் விட்டு எழுந்து அமர்கையில் பெரும் திருப்தி ஒன்று நம்மைச் சூழ்வதோடு அதன் தாக்கமும் நம்மை புரட்டிப் போடும். என் ஆயுள் முழுவதற்குமான தாக்கத்தைக் கொடுத்த திருப்தியில் காலம் தன் சுழற்சியை தொடர்ந்து கொண்டிருக்க..

இந்த ஜென்மம் முழுதும் நான் என் தந்தையை மனதில் சுமந்த படியேதான் நகரமுடியும் என்று எனக்குப் புரிந்தது. அம்மாவை எனது இரு தம்பிகளை, எனது சகோதரியை, நான் வாஞ்சையோடு அணைத்துக் கொண்டிருக்கிறேன்.....கதறி அழ எனக்கு வாழ்க்கை அவகாசம் கொடுக்கவில்லை....எனக்கு இருப்பதெல்லாம் ஒரே ஒரு ஆசைதான் இப்போது....

" என் அப்பா மாதிரி நான் வாழ்ந்துட்டு சாகணும்....எல்லோரையும் அரவணைச்சு.....அவ்ளோதான்..."

வண்டி எங்கள் ஊர் நோக்கிப் பறந்து கொண்டிருந்ததது. தம்பிகள் பார்க்காதவண்ணம் நான் துண்டுக்குள் முகம் புதைத்து நான் தேம்பிக் கொண்டிருந்தேன்.


தேவா சுப்பையா...





Viewing all articles
Browse latest Browse all 254

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>