இரண்டு பெண்களை அஃபிசியலாய் கடந்த பின்பு ) தன்னுடைய 50+ல் நிஜமான காதலுக்குள் விழுந்திருக்கிறார் முன்னொரு நாளில் காதல் இளவரசன் என்றழைக்கப்பட்டு இப்போது உலகநாயகனாயிருக்கும் ஜீனியஸ் கமல்ஹாசன். எத்தனையோ படங்களில் காதலை நடித்துக்காட்டிய அந்த மாபெரும் கலைஞனை காதல் பூரணமாய் ஆக்கிரமித்து இருந்ததை சமீபத்தில் கண்ட நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் மூலம் அறிய முடிந்தது.
திருமணம்தான் காதலின் உச்சம், அதுவே காதல் வென்றதின் அடையாளம் என்று இன்னமும் சொல்லிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் எனக்குப் பாவமாய்த்தான் இருக்கிறது. நான் +2 படித்துக் கொண்டிருந்த போது ஜுவியில் காதல்படிக்கட்டுகள் என்று பிரபலங்களைக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை வெளிவந்துக் கொண்டிருந்தது. ஜூவி வந்தவுடன் அடித்துப் பிடித்து வாங்கி வரிவிடாமல் வாசித்து காதலை உள்ளுக்குள் கோடையில் தண்ணீரைப் பிடித்து சட்டைக்குள் ஊற்றிக்கொள்ளும் உற்சாகத்தோடு வாசித்தும் முடிப்பேன்.
வைரமுத்து எப்போதுமே காதலை வார்த்தைப்படுத்துவதில் இராட்சசன். அவரது வரிகளை வாங்கிக் கொண்டவர்களின் விழிகளில் ' காதல் பூ ' பூக்காமல் இருந்தால் அவர்கள் ஒன்று மொழியறியாதவர்களாக இருக்க வேண்டும்...இல்லையேல் மனம் வறண்டவர்களாயிருக்கவேண்டும். ஏனென்றால் எந்தச் செடி மழைக்கு மறுபதில் சொல்லாமல் இருந்திருக்கிறது. பூவாகவோ, காயாகவோ அது தன் மெளனத்தை உடைத்துதானே ஆகவேண்டி இருக்கிறது.
வைரமுத்துவிற்குப் பிறகு இன்னமும் நினைவில் இருக்கும் காதல் படிக்கட்டுகள் நடிகர் பார்த்திபன் எழுதியது. சட் சட் என்று வெடித்துப் பூக்கும் மொட்டுக்களை பார்க்கும் போது என்ன பரவசம் தோன்றுமோ அதே அளவு பரவசத்தை பார்த்திபனின் வார்த்தைகள் நமக்குள் இறக்கிவைக்கும். சுமை தூக்கிச் செல்லும் ஒரு கூலியொருவன் உச்சி வெயிலில் ஒரு மரத்தடியில் சுமையை இறக்கி வைத்து விட்டு வயிறு நிறைய நீர் பருகி மரத்தின் வேரில் சாய்ந்து கொள்ளும் சுகத்தைக் காதல் படிக்கட்டுகள் கட்டுரை தப்பாமல் எனக்குக் கொடுத்திருக்கிறது.
பார்த்திபனின் சீதாயணம் அப்படித்தான் இருந்தது. அவரது காதல் வென்றது என்று நான் நினைத்துக் கொண்டிருக்கையில் சிலவருடங்கள் கழித்து அது தோற்றுப் போனதாய் உலகம் அறிவித்தபோது அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காதலை ஒரு திருமணத்தின் மூலம் ஜெயிக்கவைப்பதும், பிறகு திருமணம் முறிந்தவுடன் அதைத் தோற்கவைப்பதும் இந்த சமூகத்தின் ஒரு பொய் விளையாட்டு. காதலுக்கும் திருமணத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இருக்க முடியாது என்றுதான் நான் சொல்வேன். நீங்கள் காதலித்தவரை திருமணம் செய்து கொள்கிறீர்கள். திருமணம் செய்துகொள்வது எதற்கு என்று நான் கேட்டால் காதலிக்க என்று எத்தனை பேரால் பதில் சொல்ல முடியும்?
அப்படியே காதலிக்க திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறுபவர்கள் ஏற்கெனவே காதலித்துக் கொண்டுதானே இருந்தார்கள்...? பிறகு திருமணம் எதற்கு..? என்னைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு சமூக ஒழுங்கு. ஒழுங்கிலும் காதல் இருக்கலாம் அவ்வளவுதான். அதற்காக இந்தக் கட்டமைப்பில் இல்லாதது எல்லாம் காதலற்றது என்று பழிசுமத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது? இன்னும் சொல்லப்போனால் மரணம் என்ற ஒன்று இல்லாவிட்டால் எப்படி கடவுள் அவசியமில்லாதவராகிப் போவாரோ....அப்படியே காமம் என்ற ஒன்று இல்லாவிட்டால் இங்கே காதல் என்ற வார்த்தை அவசியம் இல்லாமலேயே கூட போயிருந்திருக்கும்.
இப்போது கமல் கெளதமிக்கு துணை. கெளதமி கமலுக்குத் துணை. ஒருவரின் வலிகளை வாங்கிக் கொண்டு, பலவீனங்களைப் புரிந்து கொண்டு, நிபந்தனைகளற்று அவரால் எதுவுமே பதிலுக்கு செய்ய முடியாது என்றாலும் யார் ஒருவரை நாம் நேசிக்கிறோமோ அங்கே காதல் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. கடவுள் என்ற இதுவரை நான் காணாத அந்த ஒரு பிம்பம் வாழ்க்கையாய் என் முன் விரிந்து கிடக்கிறது.
நான் கீழே விழுகையில் என்னை தாங்கிப் பிடிக்கும் நிலமாயும், தாகத்தில் தண்ணீராயும், வயிற்றின் பசியடக்கும் உணவாயும் உலகத்து அதிசயங்களையும் முரண்களையும் கண்டு வாய்பிளந்து சிலாகிக்கையில் கிறங்க வைக்கும் உணர்வாயும் எனக்குள் பரவி அந்த பிம்பம் என்னை எப்போதும் நேசித்துக் கொண்டே இருக்கிறது....அதனால் எனக்கு கடவுள் என்ற மாயாபிம்பத்தின் மீது காதல் இருக்கிறது. நான் வெறுத்தால் என்னை தூக்கி வீசி எறிந்து விடுமா இந்த பூமி...? சுமந்து கொண்டுதானே சுற்றும்....!
காதலிக்க நம்மைக் கடந்த வேறொன்று வேண்டும். அது மனிதராகவும் இருக்கலாம், அவ்வளவுதான். பெரும்பாலும் வெவ்வேறு எதிர்ப்பார்ப்புகளோடு இணைபவர்களை விட்டு காதல் ஓடி ஒளிந்து கொள்ள அங்கே வியாபாரம் மட்டுமே நடக்கிறது. எனக்குப் பிடித்த மாதிரி நீ இரு, உனக்குப் பிடித்தமாதிரி நான் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு தியாகிகளாய் வாழ்ந்து கொண்டு, சுயவிருப்பங்களைக் குழிதோண்டி புதைத்துக் கொள்ளும் வைபவத்தைதான் இங்கே பெரும்பாலும் காதல் என்று சொல்கிறார்கள்.
உனக்குப் பிடித்தமாதிரி நீ இருப்பதையே நான் காதலிக்கிறேன் என்று எத்தனை பேரால் தன் துணையைப் பார்த்து சொல்ல முடியும்..? பெரும்பாலும் கட்டுப்பாடுகள் எல்லாமே பயமும் அடக்குமுறையும் கொண்ட மனதிலிருந்தே பிறக்கின்றன.
கமலும், கெளதமியும் நிஜமான காதலர்களாய் இணைவதற்கு அவர்களின் அனுபவம் துணை நின்றிருக்கிறது. காலம் ஆசானாய் இருந்திருக்கிறது. இரண்டாவது மனைவியையும் பிரிந்த தனிமையில், ஏற்கெனவே வாழ்க்கை நிராகரித்துவிட்ட புற்றுநோயில் இருந்து மீண்டு கொண்டிருக்கும் ஒருவரை தன் தோளோடு சேர்த்துக் கொண்டு தானும் விழாமல், அவளும் விழாமல் தாங்கிப் பிடிக்கும்...சுகத்தை காதலென்று சொல்லாமல் வேறு எதைக்காதல் என்று சொல்வதாம்...?
கமலுக்கும், கெளதமிக்கும் திருமணம் என்னும் சடங்கிற்குப் பின்னால் இருக்கும் பொய்மை என்னவென்று தெரிந்திருக்கும். அவர்கள் அந்த சடங்கிற்குள் மீண்டும் செல்லவிரும்பவில்லை. அந்த சடங்கு இருவருக்கும் பிள்ளைகளை மட்டும் கொடுத்துவிட்டு கரைந்து போய்விட்டதோடு மிகப்பெரிய புரிதலை அவர்களின் இயல்பிலேயே நிறைத்தும் சென்று விட்டது..! இனி எதற்கு திருமணம் என்ற ஒன்று தனியே...அவர்களுக்கு அவசியமா என்ன?
திணிக்கப்பட்ட அன்பு எப்போதும் வெறுப்பாகவே முடிகிறது. கற்பிக்கப்பட்ட போலி ஒழுக்க நெறிகளைச் சிலுவைகளாய் சுமந்து கொண்டு காதலாய் இருப்பதைப் போலக் காட்டிக்கொள்வதை விட....
கட்டுக்கள் அற்ற பெருவெளியில் யாருமற்ற தனிமையில் நம் ஏகாந்தச் சிறகுகளோடு நாமே நாமாய் எதிர்பார்ப்புகளற்ற காதலோடு இலக்குகளின்றி பறப்பதே சுகம்...! இப்படியான நிலையில் வெற்றியும் இல்லை தோல்வியுமில்லை...!
" கணங்கள் தோறும் கலைத்துக் கொள்ளும் ஒப்பனைகளில்....இடம் வலமாய், வலம் இடமாய், மேல் கீழாய், கீழ் மேலாய், மாறி, மாறி சுயமென்ற ஒன்றே எனக்கில்லை என்று என்று அறுதியிட்டுக் காலம் கூறினாலும்...
சார்ந்தியங்கும் சாங்கியத்தில் ஒளிந்திருக்கும் மூலவனின் இயல்புகள்.இல்லாத காலப்பெருவெளிக்கு முன்பும், பின்பும்.....ஒன்றென்று அறிக எம் மக்காள்....! "
தேவா. S