
விடை தெரியாத கேள்விகளுக்குள் தள்ளி விட்டுச் சென்றவளை மீட்டெடுக்க முடியாத மெளனம் என்னை பேயாய் அறைந்து கொண்டிருக்கிறது. காற்றின் கவனமெல்லாம் திறந்திருக்கும் என் வீட்டு ஜன்னல்களை பெயர்த்தெடுத்துப் பிடுங்கி எங்கோ எறியவேண்டும் என்பதாயிருந்தது... நிலவு தொலைந்து போயிருந்த இருட்டு பூமியின் முரட்டு நிமிடங்களோடு நான் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தேன்.
வீட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் இறைந்து கிடக்கும் அவளின் நியாபகத் துகள்களுக்கு எல்லாம் என்னவாயிற்று இன்று? சூறாவளியாய் சுழன்று கொண்டே அந்த சுழலுக்குள் என்னைப் பிடித்து இழுத்து நிறுத்தி வைத்து எங்கோ பெய்யும் மழையொன்றுக்கு திசை நோக்கும் வெட்டுக்கிளியாய் தவக்கோலத்தில் என்னை நிறுத்தி வைக்கின்றன. வேல் விழிகள் விஸ்வரூபமெடுத்து என் கண் முன்னே இமைத்து இமைத்து என் நினைவுகளை பிழிந்தெடுக்கும் கோர நிகழ்வொன்றினை பின்னொருநாளில் சமைத்து அவனுக்கு சங்கடங்கள் கொடுக்கலாம் என்றுதான் அன்று அவள் என்னை பிரிந்து சென்றாளா?
எங்கிருந்தோ இசைக்கும் ஏதோ ஒரு புல்லாங்குழலும் இன்னிசை கீதமென காற்றில் பறந்து வர மனமின்றி காதலனைப் பிரிந்த காதலியொருத்தியின் புலம்பலாய் அடைத்திருக்கும் என் வீட்டு வாயிலை திறவாமலேயே என் செவி வழிச் சென்று புத்தியோடு புணர்ந்து பித்த நிலைக்கு என்னை தள்ளுவதும் ஏனோ...? அடிப்பெண்ணே... என் முன்னே நீ நிற்பது போல காட்சிகள் எல்லாம் மருட்சியாய் வந்து எட்டிப்பார்க்கும் இந்த நடு நிசியை தொட்டு ஜதி சொல்லி உன் நினைவுகள் கனவுகளாய்... தொட்டுச் சிரித்து என்னைச் சீண்டத்தான் வேண்டுமா?
சில் வண்டுப் பூச்சிகளின் சிதறல் சப்தங்களை உன் கொலுசுகளின் ஒலியேதான் என சங்கப் பிரகடனம் செய்யும் என் மனசொன்றும் இழுத்து அடித்து நெருப்பில் புரட்டிப் போடும் இரும்பில்லை என்றறிவாயோ நீதான்..! கொடும் காதலின் கடும் நினைவுகள் காட்டாற்று சுழற்சியாய் என்னை இழுத்துச் செல்லும் வேகத்தில் இதோ... இப்போதோ, அப்போதோ நான் நினைவு தப்பிப் போவேன் என்று எழும் எண்ணத்தின் ஓரத்தில் ஒயிலாக நீ நின்று பார்க்கும் பார்வைக்கு நான் எழுதிக் கொண்டிருக்கும் இறுதி வரிகளிலும் உன் மீதான காதலைத் தவிர ஒன்றுமில்லையடிப் பெண்ணே...!
ப்ரியங்களைச் சேர்த்து வைத்து, சேர்த்து வைத்து அவற்றை உன் புன்னகையிடம் பறிகொடுத்த பழைய நாட்களின் ஞாபகங்களில் இப்போது பழுப்பேறிக் கொண்டிருக்கிறது. இடைவிடாத காலத்தின் நகர்வுகளால் இன்னமும் அது செல்லரித்துப் போகாமல் கசங்கிக் கிடந்தாலும் பசுமையாய்த்தான் இருக்கின்றன என்பதை என் புலம்பல்களை எல்லாம் குவித்துப் போட்டு எரியூட்டி எங்கோ தூரத்திலிருக்கும் உனக்கு புகையாகவாவது வெளிப்படுத்திக் காட்டுகிறேன்... அப்போதாவது இன்னமும் உன்னை நினைத்துக் கொண்டிருக்கும் உயிர் பிரியும் என் வேதனைக்கு மறுபடியாய் காதல் கழிந்த சினேகத்தில் எனக்கொரு கடிதமாவது எழுதுவாயா நீ..?
ப்ரியமுள்ள என்று தொடங்கி சமகாலத்து உன் நிர்ப்பந்தங்களை பிழைத்துப் போகச் செய்யாமல், அன்புள்ள என்று தொடங்கி எங்கோ பிணைக்கப்பட்டுள்ள உன் அன்பினை எனக்கு கொடுத்து உன்னை சிதைத்துக் கொள்ளாமல், என்னவனே என்றழைத்த காலங்களை எல்லாம் உன் நினைவுகளிலிருந்து எரியூட்டிவிட்டு...
நலமா...?
என்ற ஒற்றை வார்த்தையால் காகிதத்தில் உன் உதடு பிரிப்பாயா?
உன் இமைகளுக்குள் நான் ஒளிந்து கொண்டு இருவிழிகளுக்குள்ளும் ஓடிப்பிடித்து விளையாடிய கிறக்க நாட்களை எல்லாம் அந்த ஒற்றை வார்த்தையை கொண்டு நான் மீட்டெடுத்து என்னை உயிர்ப்பித்துக் கொள்வேன் என்பதை நீ அறியாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் எனக்கான உன் கடிதம்...
நலமா?
என்ற வார்த்தையோடு மட்டுமே முடிந்து விடட்டும். வார்த்தைகள் எல்லாம் இதுவரையில் என்ன சொல்லிச் சென்று விட்டன நம்மிடம்? வாழ்க்கைதான் என்ன சொல்லக் காத்திருக்கிறது நமக்கு...? எங்கோ இருந்து யாரோ நமது பிரியத்துக்குரியவர் நம்மை நலம் விசாரிப்பதை விட என்ன திருப்தியைத் தந்து விடப்போகிறது ப்ரியங்கள் என்னும் பொய்யை நிரப்பிக் கொண்டு ஜாலம் செய்யும் இந்த வார்த்தைகள்...?
விளக்க முடியாதது எல்லாமே சொல்ல முடியாதது பெண்ணே! இல்லாதது எல்லாமே பிரம்மாண்டமானது. வாக்கியத்துக்குள் வகைப்படுத்த முடிந்த பொய்களை உண்மை என்று நம்பிக் கொண்டிருந்து விட்டு ஏமாற்றத்தில் மரித்துப் போகும் வழமையை விட்டாவது நான் விலகி இருக்கும் வரம் கொடு எனக்கு. கனவுகள் எல்லாம் எப்போதுமே கனவுகள்தான்... என்று முன்பொரு நாள் உன்னிடம் சொல்லியது போலத்தான்... இபோதும் சொல்கிறேன் கனவுகள் நிஜமாகிப் போவதில் யாதொரு வளமையும் இல்லை, செழுமையும் இல்லை. நிறைவேறாத கனவுகளின் வசீகரத்தை வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் ஒரு போதும் கொண்டு வந்து விடுவதுமில்லை.
சிறகடித்து வானில் பறக்கவேண்டும் என்ற கனவின் மீது இருக்கும் ஈர்ப்பு சிறகுயர்த்திப் பறக்கும் போது என்ன ஆகும்? கடந்து போகையில் அவை இறந்து போகின்றன. கனவுகளோ நிகழாமல் எப்போதும் பட்டாம்பூச்சியாய் நம்மைச் சுற்றித் ததும்பித் ததும்பி உற்சாகமாய் எப்போதும் பட படக்கின்றன. என் காதலுக்கு நீ கனவாகவே இருந்ததனால் இதோ...
என் காதலும் வசீகரக் கனவாய் என்னுள் பட்டாம் பூச்சியைப் போன்று சிறகடித்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை முழுக்க, முழுக்க நிஜத்துக்கு மட்டுமே சொந்தமானது அல்ல... அப்படியாய் இருந்தால் அது எப்போதோ வறண்டு போயிருந்திருக்கும். கனவுகளும் கற்பனைகளும் இழுத்துப் பிடித்து வைத்திருக்கும் இந்த வாழ்க்கை அழகின் பரிபூரணத்தை அனுபவிப்பதைப் போல வேறென்ன சுகமிருக்க முடியும்... சொல்...?
இதோ நான் எழுதிக் கொண்டிருக்கும் வார்த்தைப் புலம்பல்களுக்கு நடுவே எட்டிப் பார்த்து சிரிக்கும் உன் வசீகர முகம்.. காலங்கள் கடந்தும் அதே வசீகரத்தோடே இருக்கப்போவதை யார்தான் தடுக்க முடியும்...?
ஆதலால்....
நான் வேண்டியதைப் போல....நலமா..? என்ற ஒற்றை வார்த்தை விசாரிப்போடு எனக்கொரு கடிதம் எழுதி அதை வெறுமையால் நிரப்பி...இதோ இந்தக் காகிதத்தை நான் கிழித்துப் போடுவது போல நீயும் அதனை கிழித்து எறிந்து விடு....
எனக்கான வார்த்தைகள் எனில்... அவை எனக்காய் காற்றில் மிதந்து என்னிடமே வந்து சேரும்....
என் வார்த்தைகள் உன்னை வந்து சேரப் போவதைப் போல..
என் காதலை
மொழி பெயர்க்க
எத்தனை முறை
முயன்றாலும்
அனிச்சையாய் காகிதத்தில்
உன் பெயரை மட்டுமே
எழுதிக் கொண்டிருக்கிறது
என் பேனா...!
ஜன்னலுக்குள் வந்து
எட்டிப்பார்க்கும்
வானப் பெருவெளி
முழுதும் உன்
ஞாபகச் சிணுங்கல்களைக் கேட்டபடியே....
பகுதி விழிப்பு நிலையில்
எழுந்து கொண்ட
உன் நினைவுகளோடு
ஒரு ஓவியம்
வரைந்து கொண்டிருக்கிறேன்
நான்...!
தேவா. S