Quantcast
Channel: Warrior
Viewing all articles
Browse latest Browse all 254

பைத்தியம்....!

$
0
0


ஒரே எரிச்சலாக இருந்தது எனக்கு. எதைப் பார்த்தாலும் பிடிக்கவில்லை. எதைத் தொட்டாலும் அது இன்னும் ஒன்றை கொண்டு வந்து விடுகிறது. கண்களை மூடிக் கொண்டிருக்கப் பிடித்தது. யாருடனும் பேச சுத்தமாய் பிரியமில்லை. என்னை சுற்றிய சப்தங்கள் கர்ண கொடூரமாய் மூளையை சிதைத்துக் கொண்டிருந்தன. யார் யாரோ ஏதேதோ பேசிச் செல்வது எல்லாம் கோணல் மாணல் பிம்பங்களாய் புத்தியில் பட்டு எதிரொலித்தது. பழைய சி 90 கேசட்டை பாஸ்ட் பார்வேர்ட் செய்து விட்டது போலவும், அதே கேசட் சிக்குவதற்கு முன்னால் ஸ்லோமோசனில் பாடுவது போலவும் மனிதர்கள் பேசிக் கொண்டும் ஓடிக் கொண்டும் இருந்தார்கள்.

ஜன நெருக்கடியான நகரத்தின் தெரு இது. இங்கே தெரு நாய் கூட வேகமாய் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது. கட் அவுட்டுகள், அரசியல் போஸ்டர்கள், சவ ஊர்வலத்தைப் போட்டிப் போட்டுக் கொண்டு கடக்கும் அரசியல் போராட்ட ஊர்வலங்கள். ஒரே நெரிசல் ஒரே ஓட்டம், ஒரே கூச்சல்கள். தூரத்தில் சுட்டெரித்துக் கொண்டிருந்த சூரியன் என் தோளினைக் கடந்து எலும்பைத் தொட்டு நொறுக்கிக் கொண்டிருக்கிறான். வெட்கமே இல்லையா உனக்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய் இந்த பூமியின் கேவல ஜந்துவே... கோணலாய் என்னைப் பார்த்து சிரித்த சூரியனைப் பார்த்து நானும் கோணல் மாணலாய் முகம் சுளித்து என் எதிர்ப்பினைக் காட்டினேன்.

பரதேசி....பரதேசி...கஸ்மாலம்..ங்கோ*** செத்துத் தொலைய என் ஆட்டோதான் கிடைச்சுதா ஓரமா போ கயித....ஹாரனை அமுக்கியபடியே உரசியபடியே வேகமாய் பறந்து சென்ற ஆட்டோக்காரனுக்கு நான் தான் பிரச்சினை. அம்மாவை தொடர்பு படுத்தி அவன் திட்டியதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியலைபக்கத்தில் கிடந்த கல் ஒன்றை எடுத்தேன்....யார்க்கிட்ட.. ங்கொம்மால...கல்லை தூக்கி ஆட்டோவை நோக்கி வீசினேன். ஆட்டோ வளைவில் திரும்பி விட எதிரே வந்த அந்த கரை வேட்டி குண்டனின் நெற்றியில் கல் பட்டு ரத்தம் பீறிட ஆரம்பித்தது.  ஐயா தெரியாமா பட்றுச்சுய்யான்னு நான் சொல்வதற்கு முன்னால்

ஓய்...பிடிங்கடா அவன...மொத்தமாய் பத்து பேர் என்னை துரத்த என் பக்கத்தில் நின்று கொண்டிருந்தவன் என் காலரைப் பிடித்து இழுக்க சரேலென்று தரையில் விழுந்தேன். விழுந்த வேகத்தில் உச்சியை நெருங்கிக் கொண்டிருந்த தார் ரோடு சூட்டோடு உராய்ந்து இடது கையில்  இரத்தம் வழிய ஆரம்பித்தது. சட்டையைப் பிடித்துக் கொண்டிருந்தவன் என் முகத்தில் குத்த உதடு கிழிந்து ரத்தம் எட்டிப்பார்த்தது. நான் அவனிடம் இருந்து அசுர வேகத்தில் விடுபட்டு ஓடுகையில் என் சட்டை கிழிந்தே போய் விட்டது.

கிழிந்த சட்டையோடு கைலியை பிடித்துக் கொண்டு ஓடினேன். கூட்டம் என்னை விரட்டத் தொடங்கி இருந்தது. சுற்றி வளைத்து ஓடியதில் ஒரு சந்தின் நடுவில் இருந்த கல்லில் கட்டை விரல் இடித்து தடுக்கி விட மறுபடி கீழே விழுந்தேன். புரண்டு வாரிச் சுருட்டி எழுந்து திரும்பிப் பார்த்தேன். துரத்திக் கொண்டு வந்த பைத்தியக்கார பயலுகள் ஒருத்தரையும் காணவில்லை.

கை எரிந்தது. உதடு வலித்தது. கட்டை விரல் நகம் பிய்ந்து கொண்டு ரத்தம் கொட்டியது. பக்கத்தில் ஓடிய ஒரு சாக்கடைத் தண்ணிக்குள் கொண்டு போய் கால் கட்டை விரலை வைத்தேன். சில்லென்று இதமாய் இருந்தது. மேலே நிமிர்ந்து பார்த்தேன். சூரியன் மறுபடி என்னை ஏளனம் செய்தான். நல்லா விழுந்தியா..நல்லா விழுந்தியா...சிரித்துக் கொண்டே என்னை சுட்டுக் கொண்டிருந்தான்.

என்னைப் பார்த்து ஏண்டா சிரிக்கிற லூசுப்பயலே...என் மேல ஆட்டோவ  விட்டு ஏத்தவந்து என்னை கொல்லப்பாத்தானே ஆட்டோ டிரைவர் தடியன் அவனப்  பாத்து சிரிடா....அசிங்க அசிங்கமா திட்டிட்டுப் போய்ட்டான் அயோக்கியப்பய...அவனை கண்டிக்க துப்பு இல்லை ஒங்களுக்கு எல்லாம்...என்னை ஏன்டா எல்லோரும் தொரத்துறீங்க... கிண்டல் பண்றீங்க....? கோபத்தை வேற எப்டிதாண்டா காட்றது? முட்டாப்பயலுகளா?

ரோட்ல ஓரமா வரவேண்டியதுதானே அந்த தடியன் நான் கல்லு வீசுற இடத்துக்கு ஏண்டா அவன் வர்றான் அதான் அடிபட்டுச்சு...குறுக்கால வந்தா அப்டித்தான் படும். நான் ரோட்ல மரியாதையா க்ராஸ் பண்றது ஆட்டோக்காரனுக்கு இடைஞ்சல்னா என் கல்லு போறதுக்கு அந்த தடியன் இடைஞ்சல்...புரிஞ்சுதா

என்ன ஏதுன்னு கேக்காம அடிக்கிறானுங்க... அயோக்கியப் பசங்க...வலிக்குதுடா....

எனக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. இப்ப எனக்கு வலிக்குதே நான் என்ன செய்வேன்.....நான் ஊராவீட்டுப் புள்ள...கேக்க நாதி இல்ல.....என்கிட்ட காசு இல்ல அதான் இப்டி...

கோபமாய் சூரியனிடம் பேசிக் கொண்டிருந்தது தெரியாத ஒரு லூசு என்னைப் பாத்து லூசுன்னு சொல்லிட்டு வேகமா சைக்கிள்ள போகுது. அவனை பிடிங்களேன்டா யாராச்சும் புடிச்சு அடிங்களேன் ச்சும்மா நிக்கிறவன பாத்து சாக்கடேல காலு வச்சு இருக்கான்னு கிறுக்குப் பயன்னு சொல்லிட்டுப் போறானே, என் கால் வலி அவனுக்குத் தெரியுமா? நெகம் பிஞ்சு போச்சுன்னு அவனுக்குத் தெரியுமா? அவன் லூசா நான் லூசா...? பேமானிங்க....ஆள் ஆளுக்கு ஒரு ரூல்ஸ் வச்சுக்குவானுங்க...

காலை விந்தி விந்தி நடந்து கொண்டிருந்தேன். உச்சிப் பொழுதாயிப் போச்சு நான் இன்னும் சாப்பிடலை.  எனக்குப் பசிக்குது எவனுக்காச்சும் அறிவு இருக்கா எனக்கு சாப்பாடு போடணும்னு. ஒரு ஹோட்டலில் நுழைவதற்கு முன்பு கடைவாசலில் இருந்த மரத்திலிருந்த ஒரு பறவை என்னை தனது கக்கூசாக மாற்றி இருந்தது.  போனாப் போவுது பறவ தானே அது என்ன மனுசங்க மாதிரி புத்திசாலியா என்ன... ஏன் பறவ..? கீழே குனிந்து மண்ணை அள்ளி என் தலையிலும் சட்டையிலும் போட்டு தொடச்சேன். பேப்பர் ஒண்ணையும் காணோம்...என் கைலியிலயே கைய தொடச்சுக்கிட்டேன்...!

அட இது கருப்பா இருக்கு.. காக்காவா இருக்குமோ இல்லை குயிலா இருக்குமோன்னு ஒரு டவுட்டு..பக்கத்துல நின்னுக்கிட்டு இருந்த ஒரு தங்கச்சிக்கிட்ட... ஏன் தங்கச்சி..மேல இருக்கறது காக்காவா இல்லை குயிலா...ன்னு கேட்டதுல என்ன தப்பு இருக்கு....? என் சட்டை கிழிஞ்சு இருக்காம், காலு விரலு அடிபட்டு இருக்காம்.. என் மேலு, காலு அழுக்கா இருக்காம், என் மேல காக்கா ஆயி போய் இருக்காம்...என்னைய வெறுப்பா முறைச்சுக்கிட்டு ஏற இறங்க பாத்துச்சு அந்த தங்கச்சி....

ஏய் தள்ளி நில்லு .... தூரம் போ என்னை பாத்து கோவப்பட்டு ஏன் அவ கத்தணும். அப்படியே கொரவளைய கடிச்சு கொதறணும் போல இருந்துச்சு எனக்கு....ஈஈஈஈஏஏஏய்ய் அடிக்குரலில் இருந்து என் எதிர்ப்பை தெரிவித்தேன். எனக்கு அவ்வளவு கோபம்...

இந்த பாரு புள்ள என் சட்டைய நான் ஒண்ணும் கிழிக்கல லூசுப்பயலுக என்ன ஏதுன்னு கேக்காம கிழிச்சுப்புட்டாய்ங்க, கீழ விழுந்ததுல கைலி உடம்பு எல்லாம் அழுக்காபோச்சு...ஓடி வரும் போது கல்லு இடிச்சு கால் அடிபட்டுப் போனதால ரோட்டோரமா ஓடுன தண்ணில கால நனைச்சு நின்னேன். அப்போ கூட சூரியன் என்னை கிண்டல் பண்ணி சிரிச்சான். இப்போ அதோ அந்தப் பறவ என் மேல ஆயி போயிடுச்சு...அதான் அது என்ன பறவன்னு கேட்டேன்....பாத்துக்கோ...

நான் பேசிக் கொண்டே இருக்கும் போது நாலைந்து பேரு வந்து கொம்ப எடுத்து என்னை அடிக்க ஆரம்பிச்சாங்க...அட கிரகம் புடிச்சவைங்களா சும்மா இருக்கவன ஏண்டா மறுபடி மறுபடி அடிக்கிறீங்க...வலிக்குதுடா....அடேய் அடேய்.....டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்

சொத்து, காசு, பணம்னு சொல்லி சண்டை போட்டுக்கிட்டு இருந்த,  ஏமாளித்தனமா இருந்து என் உயிர ஏன் எடுக்குறன்னு சொன்ன எல்லா உறவுகளை எல்லாம் தொலைச்சு தலை முழுகிட்டு எம்பாட்டுக்கு இருக்கலால்ம்னுதானே வந்தேன்...ஒங்களுக்கு எல்லாம் என்னங்கடா பிரச்சினை...?

கீழே விழுந்து கிடந்தேன். அடி மேல் அடியும் மிதியும் பட்டு உடம்பு ரணமாயிருந்தது.  என்னை அடித்த எல்லோரும் போயிருந்தார்கள், அந்த தங்கச்சியும் கூட...ஆமாம்  தங்கச்சியாம் தங்கச்சி.....கேனச் சிறுக்கி மக....ஒழுக்கமா இருக்கவன யாரு மதிக்கிறா இந்த ஒலகத்துல...

எல்லாத் தேவடியாத்தனமும் பண்ணினாலும் அயோக்கியப் பயகிட்ட காசு இருந்தா கையெடுத்து கும்பிடுவாய்ங்க..ம்ம்ம்ம்....எனக்கு வயிறு பசித்தது.

ஹோட்டலுக்குள் விறு விறுவென்று நுழைந்தேன்....! அண்ணே இலை போட்டு சாப்பாடு  கொடுங்கண்ணே...!!!! என்னை ஏற இறங்க பார்த்த சர்வர் டேய்...காசு வச்சிருக்கியாடா என்று அதட்டினார்...

அண்ணே ஒங்கள விட எனக்கு வயசு கூடண்ணே எதுக்கு அட புடாண்னு பேசுறீங்க என் கிட்ட காசு இல்லண்ணே... ஆனா பசிக்குது. ரொம்ப பசிக்குது...கண்ணீர் மல்க கையெடுத்து கும்பிட்டேன். தடி மாடு மாதிரி இருக்க...வேலை செஞ்சு பொழச்சா என்ன காசு இல்லேன்னா சாப்பாடு இல்லே வெளில போடா கிறுக்குப் பயலே....என்னை பிடித்து வெளியில் தள்ளி சத்தம் போட்டான் சர்வர். கூட கல்லாவில் இருந்த மொதலாளியும் சேர்ந்து கொள்ள....

அப்போ வேலை ஏதாச்சும் கொடுங்கண்ணே...செய்யுறே......ன்

சொல்லி வாயை மூடுவதற்குள் என் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டனர். இது என்ன மடமா...? போடா போ பைத்தியக்காரப் பயலே....

வயிற்றைப் பிடித்து பசி இழுக்க வெகு நேரம் வெயிலில் நின்று கொண்டிருந்தேன். பக்கத்திலிருந்த குப்பைத் தொட்டியில் சாப்பிட்ட இலைகளை கடையின் வேறு ஒரு வேலையாள் கொட்டி விட்டுச் செல்ல....வயிற்றுப் பசி குப்பைத் தொட்டிக்கு என்னை இழுத்துச் சென்றது....ஏற்கெனவே அங்கே நின்றிருந்த ஒரு தெரு நாயை முதலில் கல்லெடுத்து விரட்டினேன்...

ஒரு இலையில் சாதமும் குழம்பையும் யாரோ ஒரு புண்ணியவான் மிச்சம் வைத்திருக்க...எடுத்து உண்டு கொண்டிருந்தேன்...

"பைத்தியக்காரனுகள பாரேன்....பசிச்சுதுன்னா குப்பைத் தொட்டியில இருந்து ஏதோ ஒரு எச்சில் எலைய எடுத்து தின்னுட்டு சொகமா சுத்திட்டு இருக்கானுக....நம்ம பொழப்ப பாத்தியா நாய் படாத பாடு...."

யாரோ யாரிடமோ சொல்லிக் கொண்டு பைக்கில் பறந்து கொண்டிருக்க....

என் வலி எல்லாம் எங்கோ ஓடி ஒளிந்து கொள்ளஎன் வயிறு நிறைந்து கொண்டிருந்தது....சூரியனைப் பார்த்து சிரிக்க...அவனும் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்..!


தேவா. S




Viewing all articles
Browse latest Browse all 254

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>