
எல்லாவற்றையும் கை சொடுக்கும் நேரத்தில் எழுதிவிட முடிந்த என்னால் உன் மீதான் என் காதலின் ஆழம் என்ன என்று ஒரு போதும் எழுத முடிவதில்லை. செடிகளின் நுனிகளில் உட்கார்ந்திருக்கும் மலர்கள் எல்லாம் எப்போதுமே ப்ரியங்களின் ஆதார அடையாளங்கள் கிடையாது. அன்பும் நேசமும் அறிவிக்கப்பட முடியாத உணர்வுகளாய் சல்லிவேர்களுக்குள் படர்ந்து நிலத்தின் ஆழத்தில் நாளை பூக்கவேண்டிய மலர்களுக்கும் சேர்த்து நீரை உறிஞ்சிக் கொண்டு இருக்கின்றன.
எந்த வகையான அடைப்புக்குள்ளும் பொருந்தாத காதலோடு நீ என்னிடம் வந்த தருணத்தில் என் காகிதங்களில் கனவு கண்டு கொண்டிருந்த கவிதைகள் எல்லாம் வெடித்துச் சிதறி முழுதுமாய் அழிந்தே போயின. வார்த்தைகளில் காதலைச் சொல்லத் தெரியும் என்று இருமாந்திருந்த என்னை சொடுக்குப் போட்டு வீழ்த்திய உன் விழிகளுக்குள் பரவியிருந்தது காதலா? கடவுளா? சொர்க்கமா? வாய் பிளந்து ரசிக்கும் பெரும் இயற்கையா? உடல் சிலிர்க்க வைக்கும் பெரு மழையின் சிறு சாரலா? விடைகளைத் தேடி நான் விழித்திருந்த இரவுகளில் உன் நினைவென்னும் நேசத்தால் என் தலை கலைத்து முத்தமிட்டுச் செல்வாய் நீ...!
என் ப்ரிய தேவதை நீ...உனக்கு என் அன்பை எப்படி வெளிக்காட்டுவது என்று யோசிக்க முடியாமல் உன் முரட்டுக் காதலால் என்னை மூர்ச்சையாக்கிப் போட்டிருக்கிறாய். பொருளாதாய உலகில் அன்பென்ற ஒன்றும் இருக்கிறது அது காதலென்ற பெயரோடு உன் வடிவில் என்னிடம் வரும் என்றும் நான் எண்ணி பார்த்ததேயில்லை. எதேச்சையாய் நான் உறவினர் வீட்டு போட்டோ ஆல்பத்தைப் புரட்டிக் கொண்டிருக்கையில் ஏழாவது பக்கத்தில் நாலாவது புகைப்படம் என் வாழ்க்கைக்கு வர்ணம் அடிக்கப் போகிறது.....என் நினைவுகளை எல்லாம் ஒட்டு மொத்தமாக ஆக்கிரமிக்கும் காதல் பிசாசு ஒன்றை என் வாழ்க்கைக்கு தருவிக்கப் போகிறது என்று நான் அறிந்திருக்கவில்லை தான்...
எல்லாமே தன்னிச்சையாக நடந்ததாய் பின்னொரு நாளில் நீ என்னிடம் சொன்ன கடற்கரை மாலையை வெகு சீக்கிரமாய் கொண்டு வந்து சேர்த்தற்கு காரணம் நான் உன் மீது கொண்ட காதலும், நீ எனக்கு உறவு என்ற பந்தமும்தான் என்று நினைத்தபடி நான் வானம் பார்த்துக் கொண்டிருந்தேன். தன்னிச்சையாக நடக்கவில்லை என் இச்சையால் நடந்தது என்று உன்னிடம் சொன்னால் தன்னிச்சையாய் நிகழ்ந்ததென்பதால் சமூகத் திணிப்புகளால் நீ புனிதமாக கருதி இருக்கும் அந்த தெய்வீகம் உடைந்து போய்விடக்கூடாது என்பதால் நான் மெளனித்தேன்...
என் தலை கலைக்கையில் நான் மெளனம் கலைந்து உன்னை பார்த்த பொழுதில் தன்னிச்சையாய் நிகழும் நிகழ்வுகள் மட்டும் அமானுஷ்யமானவை அல்ல...பிருந்தா...திட்டமிட்டு தேடிக் கொள்வதும் தெய்வீகம்தான் என்று சொல்ல நினைத்தேன். காதலை வகைப்படுத்தி அதன் உச்சத்தை காமத்தில் தொலைத்து இயந்திரத்தனமான வாழ்க்கைக்குள் நுழைந்து கொண்டு அதிருப்தியோடு வாழும் வாழ்க்கைக்கு கண்டிப்பாய் உன்னை பழிகொடுத்து விட மாட்டேன்....என்று நான் கூறிய பொழுதினில் நீ திடுக்கிட்டுத்தான் போனாய்....
எனக்கு உன்னை பிடித்திருந்தது போலவேதான் உனக்கும் என்னை பிடித்திருந்தது. காதலை மெய்ப்பிக்க திருமணம் செய்து கொள்ளும் மரபுதான் எனக்குப் பிடிக்கவில்லை என்று நான் கூறியது வழமைக்கு எதிரானதுதான். இயற்கையின் முரண்தான் என்றாலும் முரண்களும் இயற்கையின் ஒரு பகுதிதானே..? திருமணம் காதலை சிதைத்து விட்டு அங்கே முகமூடிகள் இட்டுக் கொண்டு விட்டுக் கொடுக்கும் நாடகங்கள் நடத்தி பொய்களுக்குள் முடங்கிக் கொள்கிறது.
உன்னை காதலித்துக் கொண்டிருக்கும் போதே...அதன் அடுத்த கட்டம் எதை உனக்கும் எனக்கும் கொடுக்கும் என்ற விழிப்புணர்வும் என்னிடம் இருந்ததாலேயே நான் சராசரியில்லை என்று உனக்கு தோன்றி இருக்கலாம். என்னை பைத்தியக்காரனாகவே நீ கருதி இருக்கலாம். இதோ இந்த நான்காண்டுகளுக்கு பிறகு நீ வாழ்க்கைக்குள் வரைபடங்கள் எழுதி குடும்பம் என்னும் கூட்டுக்குள் சிறகடித்துக் கொண்டிருக்கிறாய். நான் வாழ்க்கையைக் கடந்த பெருவெளியில் காதல் என்னும் கட்டற்ற உணர்வுகளோடு சிறகுகளே இல்லாமல் பரவிக் கிடக்கிறேன்.
காலம் அசுர வேகத்தில் நகர்ந்து கொண்டே இருந்த ஒரு அவசர நாளில்...
வழக்கம் போல டிக்கெட் எடுத்து விட்டு பேருந்தினுள் நுழைந்த எனக்குத் தெரியாது மீண்டும் என் வாழ்வில் நுழைவாய் என்று..ஏனென்றால் என் கற்பனைகளில் நித்தம் நித்தம் உன்னோடு வம்புகள் செய்து, கனவுகளில் உனக்கான கவிதைகள் படைத்து எனக்கான வாழ்க்கையில் இறுமாப்போடு திரிந்து கொண்டிருக்கிறேன். உன்னை பார்த்த வேகத்தில் உன்னிடம் இருந்து என்னை மறைத்துக் கொள்ள முற்பட்ட பொழுதில் என் பெயர் சொல்லி நீ அழைப்பாய் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை...
உன்னை மறுக்கவில்லை. உன் நிகழ்காலம் என் நிகழ்காலத்தை சிதைத்து விடக் கூடிய அபாயத்தை மறுக்க நினைத்தேன். நீ பேசிக் கொண்டே இருந்தாய், கோவிலடியிலிருந்த நானும் கர்ப்பகிரகத்தில் இருத்த பார்த்தசாரதியும் அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். நம் காதல் வாழ்க்கையாகி இருக்கவேண்டும் என்று நீ சொன்னதற்கு...வாழ்க்கை நரகமாயிருக்கும் காதல் எப்போதோ செத்துப் போயிருக்கும் என்றேன் நான்....
ஏதோ ஒரு ஆல்பத்தில் என்னைப் பார்த்து விட்டு துரத்தி துரத்தி காதலித்தவன் நீ...என்றாய், இன்னமும் நான் துரத்துவதையும் நிறுத்தவில்லை, காதலிப்பதையும் நிறுத்தவில்லை என்றேன் நான்...! எப்போது என் திருமணம் என்று நீ கேட்டதற்கு உன் திருமணம் உனக்கு என்ன கொடுத்து விட்டது என்று என் திருமணத்தைப் பற்றி கேட்கிறாய் நீ என்று கேட்டதில் உன் இயல்பு நொறுங்கிப் போய் உன் முகத்தில் கோபம் எட்டிப்பார்த்து....
இன்னமும் நீ என்னை எப்படி காதலிக்கலாம்...? நான் வேறு ஒருவரின் மனைவி என்று நீ சொன்னவுடன் நான் அவ்வளவு சத்தமாய் சிரித்திருக்க கூடாதுதான். கோவிலடியில் இறங்கு நிழலில் உறங்கிக் கொண்டிருந்த அந்த நாய்க்குத் தெரியும் அதன் உறக்கம் கலைத்த என் சிரிப்பின் கொடுமை. நீ வேறொருவன் மனைவி என்பது எனக்குத் தெரியும். உன் வாழ்க்கையோடு எனக்கு என்ன தொடர்பு இருக்கிறது? அல்லது என் நினைவுகளோடு உனக்கு என்ன பந்தமிருக்கிறது. என் கற்பனைகளும் கனவுகளும் யாரோடும் பந்தப்படாதது. என் காதல் உன்னோடு பந்தப்படாதது ஆனால் உன்னால் உருவானது. உன்னால் வளர்க்கப்பட்டது. அந்த உன்னால் நீ இல்லை. நீ அந்த உன்னாலோடு முன்னொரு காலத்தில் பந்தப்பட்டிருந்தாய்...
உன் விழிகளில் நீ சுமந்து கொண்டிருப்பது உன் வாழ்க்கையை, உனது கடமைகளை, சமூகத்தின் கட்டுப்பாடுகளை, இன்னும் காதலைப் போன்ற எது எதுவோ உன் விழிகளை மறைத்திருக்கின்றன... நான் எப்படி உன்னோடு இப்போது தொடர்பு படுத்திக் கொள்ள முடியும்...!
" உனக்கு பைத்தியம் பிடிச்சுடுச்சு சிவா....
காதலித்து திருமணம் பண்ணிகிட்டு வாழணும்னு சொன்ன என்னை விட்டுட்டு...நான் இல்லாம என் கூட நீ காதலோடதான் இருக்கேன்னு சொல்றது சுத்தப் பைத்தியக்காரத்தனம். ஒரு காலத்துல உன் மேல பைத்தியமாய் இருந்தேன். என்னையே உனக்கு கொடுத்து...காலம் முழுதும் உனக்கே என்னை அர்ப்பணிக்க நினைச்சேன்...உன் பைத்தியக்காரத்தனம் என்னை உன்னை விட்டு பிரிச்சுடுச்சு....
சரி நீ வீட்டுக்கு வா ஒரு நாள்...என் கணவர உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.." நீ பேசிக்கொண்டிருந்ததை நான் இடை மறித்தேன்....
" போதும் ...பிருந்தா போதும்....! என்னை வாழ்க்கையின் எந்தப் பக்கத்திலும் இணைத்து விடாதே....நீ உன் நிஜத்தில் கற்பனைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாய். நான் என் கற்பனையில் நிஜமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உடலுக்குள் உயிராய் அலைந்து கொண்டிருக்கிறேன். எனக்கு காதல் என்னும் ஒரு விசயம் இப்போது வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டதாகத் தெரியவில்லை. அது வார்த்தைகளைக் கடந்தது. உன் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டி மூன்று முடிச்சுப் போட்டு அதை மெய்ப்பிக்க ஆயிரம் பேரை கூட்டி வந்து காட்ட வேண்டும் என்ற அவசியமற்றவன் நான்.
அன்றொரு நாள் உன்னைப் புகைப்படத்தில் பார்த்த போது எனக்குள் நிறைந்திருந்த காதலுக்கு காரணமாய் இருந்தது உன் உருவம் என்பதை நான் மறுப்பதற்கில்லை. நிபந்தனைகளற்று என் காதல் உன் மீது விழுந்ததற்கு பரிகாரமாய் நீ நிபந்தனைகளோடு என்னை ஏற்றுக் கொள்வதில் என்ன அறிவு இருக்கிறது..? உனக்கு ஒன்று தெரியுமா பிருந்தா....எனக்குள் இப்போதும் உன் மீதான காதல் இருக்கிறது...அதே பொலிவோடு அதே மெருகோடு....
ஆனால் அது ஒருபோதும் வெளியே செயல்களாய் வெளிப்படாது. ஊமைகளை ஊனம் என்று தானே எல்லோரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஊமையான நினைவுகள் முழுமையானவை. சொல்லவே முடியாத உணர்வுகள் அதி அற்புதமானவை. என் காதலால் உனக்கு எந்தவிதமான லெளகீக லாபங்களும் கிடைக்காது என்னும் அதே நேரத்தில் லெளகீக ரீதியான எந்த பிரச்சினைகளும் ஏற்படாது பிருந்தா.
நீயும் நானும், நீயும் நானுமாகவே வாழ்க்கையைத் தொடருவோம். என் காதல் பிறந்தது உன் விழிகளில்... அதை என் நினைவுகளில் தேக்கி வைத்திருக்கிறேன். தீரத் தீர உன்னை இன்னமும் காதலிக்கிறேன்.... என்னால் உன்னோடு புறத்தில் தொடர்புகள் கொள்ள முடியாது....புரிதல் கொண்ட நண்பனாகவோ அல்லது உன் கட்டுப்பாட்டுகளை உடைக்கும் காதலனாகவோ என்னால் இருக்க முடியாது...
அது என் கனவுகளை கலைத்து விடும். என் உணர்வுகளுக்குள் சிறு பிள்ளையாய் பட்டாம் பூச்சி பிடித்து தெரியும் அற்புதக் காதலை அழித்துவிடும்..."
எழுந்து நான் அவளை வணங்கினேன்...!!!!!
பார்த்தசாரதி கோயிலுக்குள் பூஜைக்கான மணி அடித்துக் கொண்டிருந்தது. எனக்குள் என் காதல் சாரதியாய் அமர்ந்து கொண்டு என்னைப் பார்த்து சிரிக்க, கலங்கி இருந்த அவளது விழிகளில் நிரம்பிக் கிடந்த வாழ்க்கையின் கட்டமைப்புக்களை நான் கவனியாது.....நடக்கத் தொடங்கி இருந்தேன்.
என் கனவுகளுக்கு
அர்த்தங்கள் இல்லை...
வர்ணம் பூசிக் கொண்டு
யாரையும் வசீகரிக்கும்
அவசியமும் இல்லை...
அது எனக்கே
எனக்கானது...!
என் காதல் சாரதி கற்பனைக் குதிரைகளின் கடிவாளத்தை சொடுக்கி இழுக்க....எனக்குள் சப்தமின்றி மூளத் தொடங்கியிருந்தது ஒரு காதல் யுத்தம்...!!!!
தேவா. S