சரி உன் பெயர் சொல்ல வேண்டாம். சாதாரணமாக பார்த்துச் சென்றால் உன் குல தெய்வக் கோயிலுக்கு நேர்ந்து கொண்ட ஏதேனும் ஒரு நேர்த்திக்கடன் குறைந்து போய்விடுமா என்ன? ஒவ்வொரு முறை நீ என்னைக் கடந்து செல்லும் போதும் எனக்குள்ளிருக்கும் இதயம் எகிறிக் குதித்து வெளியே வந்தே விடுவேன் என்று என்னை மிரட்டும் ரீதியில் தாளம் தப்பி அடிக்கும் வேகத்தை உனக்கு எப்படி நான் சொல்வேன்? எத்தனையோ பேரை சட்டென கடந்து வந்த எனக்கு உன்னை அவ்வளவு எளிதாய் கடந்து செல்ல முடியவில்லை...
சொல்லாமல் கொள்ளாமல் வந்து என் இதயக் கதவை உடைத்து உள்ளுக்குள் உட்கார்ந்து கொண்டு அடம்பிடிக்கும் நீ தான் அடாவடி செய்கிறாய் என்று உன்னிடம் சொன்ன போது என்னை ஏற இறங்கப் பார்த்தாய். காதலும் கவிதையும் எங்கிருந்து எப்போது பற்றிக் கொள்ளும் என்று சொல்ல முடியாது என்று யாரோ சொன்னதை மெய்ப்பித்து சென்றது உன்னுடைய இருப்பு. எதுவுமே பேசாமல் இவளால் எத்தனை நாள் இருக்க முடியும் என்று கணக்குப் போட்டு கணக்குப் போட்டு நான் வாய்மூடி உன் பார்வைக்காய் காத்திருக்கும் கணங்களைப் போல எல்லாம் நரகம் அத்தனை கொடுமையாய் இருக்காது போல என்று....
கஜினி முகமதுவாய் உன்னை உன் விழிகளை நோக்கி என் பார்வையால் படையெடுத்து படையெடுத்து தோல்வியடைந்து கொண்டிருந்த நான், ஒரு நாள் என் காதலை சுற்றி வளைத்து சொன்ன போது களுக் என்று நீ சிரித்திருக்காவிட்டால்தான் என்ன....? நீ சிரித்து முடித்த மூன்றே கால் நிமிடத்துக்கு அந்த பிம்பம் என் புத்தியிலிருந்து நகராமால் கூட்டமான பேருந்தில் சன்னலோரமாய் அமர்ந்து கொண்டு வண்டி நகர்கையில் எதிர்காற்றை ரசிக்குமொரு சுகத்தை கொடுக்க, நான் வாய் பிளந்து அந்த சிரிப்பிற்கு அருஞ்சொற்பொருள், இலக்கணம, இலக்கிய வார்த்தைகளை எல்லாம் தேடிப்பிக்க நினைவுகளால் பறந்து போகிறேன். பிறகெப்படி உன் அடுத்தடுத்த கேள்விகளுக்கு நான் பதில் சொல்வதாம்...?
மொத்தமாய் என்னை இழுத்துக் கொள்ளும் ஒரு சூறாவளி ஒன்றை என் முன் வைத்துக் கொண்டு எதை நான் பகிர்வது? எதை கேட்பது..? என்னை உனக்கு அவ்வளவு பிடிக்குமா என்று நீ கேட்ட அவ்வளவுக்கு என்ன அளவு இருக்கும் என்று எனக்குத் தெரியாது ஆனால் எனக்குள் இருக்கும் அவ்வளவுக்கு ஒரு கொள்ளளவே கிடையாது. பேசிப் பழகி புரிந்து கொண்டபின் வருவதுதான் காதலென்று யாரேனும் சொன்னால்....
அவர்களுக்கு காதலென்றால் என்னவென்றெ தெரியவில்லை என்று சொல்லுங்கள். திட்டமிட்டு வர்ணம் பூசி சாதக பாதகம் பார்த்து வந்தால் அது எப்படி காதலென்று அன்பாய் அவர்களைக் கடிந்து கொள்ளுங்கள். காதல் மனம் பார்க்கும்தான் ஆனால் அதற்கு முதலில் முகம்தான் தெரியும். பிடித்தலுக்கும் பிடிக்காமைக்கும் தனக்குப் பிடித்த ஒரு உருவத்தையே காதல் முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. காதலுக்கு இது அழகு, இது அசிங்கம் என்றெல்லாம் தெரியாது. எது தனக்குப் பிடிக்கிறதோ அதை அது அழகென்று உள்ளுக்குள் ரகசியமாய் சொல்லி விடுகிறது.
யாரோ ஒருவரைப் பார்த்தவுடன் உள்ளுக்குள் மூழும் தீயை திட்டம் போட்டு யாரும் அணைத்து விட முடியாது. ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ நிறைய பேரை பிடிக்கலாம்....ஆனால் யாரோ ஒருவரைப் பார்த்தவுடன் தான் தறிகெட்டு ஓடும் குதிரையாய் மனம் ஓடி அவரை ரசிக்க ஆரம்பிக்கிறது. பிடிப்பது வேறு ரசிப்பது வேறு. இதோ என் மனப்புரவி தறிகெட்டு ஓடி அவளையே சுற்றிக் கொண்டிருக்கிறதே அது போல..
நீ இப்படி எல்லாம் பண்ணக்கூடாது என்று அவளிடம் சொன்னவுடன் விழிகளால் என்னை முறைத்த அவளின் கூரான பார்வைக்குவியலுக்குள் மெலிதாய் எட்டிப்பார்த்து ஹலோ மிஸ்டர்... ஐ டூ லவ் யூ என்று கை குலுக்க காத்துக் கொண்டிருந்த காதலைத்தான் நான் முதல் பார்வையிலேயே வாங்கிக் கொண்டு என் நிதானமிழந்திருந்தேன். உனக்கு எவ்ளோ தைரியம் என்னை இப்டி பாக்குற என்று கேட்டவளிடம் .. திரும்பச் சொன்னேன்...
காலம் எப்போதும் காதலை பார்வைகளில் இருந்துதான் பிறப்பித்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் காதலுக்கும் அறிவுக்கும் உள்ள உறவு மாமியாருக்கும் மருமகளுக்கும் இருக்கும் உறவு. எப்போதும் ஒத்துப் போகவே போகாது. அறிவு எப்போதும் அனுபவத்தில் இருந்து எழுந்து நின்று ஆலோசனை கத்திகளையே வீசுகிறது. காதல் அப்படி அல்ல அது துள்ளித் திரியும் ஒரு பள்ளி செல்லும் சிறுவனை ஒத்தது அது. காதலில் எல்லாமே புதியது.... காதலுக்கு எல்லாமே அதிசயம்....
நீ சாதாரணமாக என்னைப் பார்த்து புன்னகைத்துக் கூட இருக்கலாம் மோனலிசாவே...அதைப் பார்த்து எனக்கு நிஜ மோனலிசா எவ்வளவு மொக்கையாய் புன்னகை செய்திருக்கிறாள் லியானர்டோவின் ஓவியத்தில் என்று கூட தோன்றவும் செய்யலாம், ஆமாம்... காதல் அப்படித்தான்...கிளியோபாட்ராக்களை திரும்பிக் கூட பார்க்காது...உலக அழகிகளைப் பார்த்து உவ்வே... என்று சொல்லும். பிரபஞ்ச அழகிகள் என்று உலகம் சொல்லும் பிம்பங்களைப் பார்த்து....இது டூமச் என்று வெறுத்து ஒதுக்கும்...
ஏனெனில் என் காதல் உலகின் பட்டத்து மகாரணி நீதான். நீ அழகா அழகில்லையா என்ற கணக்கு வழக்கை எல்லாம் கால்குலேட்டர் தட்டிப் பார்க்க நான் என்ன ஷேர்மார்க்கெட்டிலா இன்வெஸ்ட் செய்துவிட்டு எவ்வளவு லாபம் வரும் என்று காத்திருக்கிறேன்..இது காதல் பெண்ணே... காதல்....!
கனவுகளுக்குள்
உன்னை அழைத்துக் கொண்டு
நான் பறந்து கொண்டிருக்கிறேன்...
ஒரு வானவில்லிடம்
உன்னை காட்டி...
இவளைப் போன்று
வசீகரம் ஏன் உன்னிடம் இல்லை
என்று கடிந்து கொண்டிருக்கிறேன்...
விண்மீன்களிடம்
வெளிச்சம் இல்லையென்றும்...
நிலவு ஒன்றும் அத்தனை
அழகில்லை என்றும்...
அடக்கடவுளே....
இந்த மேகங்கள் ஏன்
இத்தனை கனமாயிருக்கின்றன...
என்றெல்லாம் வசைபாடியிருக்கிறேன்...
ஒப்பற்ற கவிதைகளை
புத்தகத்தில் வாசித்துக் கொள்ளுங்கள்
பித்தர்களே......
என் கவிதையொன்றே
எனக்கு காதலியானாள்
என்று சப்தமாய் கத்திக் கொண்டே
என் கவிதைப் புத்தகங்களை
எல்லாம் தீயிட்டுக் கொளுத்தியிருக்கிறேன்...!
ஏன் என் மீது உனக்கு காதல் வந்தது என்று நீ கேட்டாள்... ஏன் நீ பிறந்தாய் என்று உன்னிடம் நான் எதிர்கேள்வி கேட்கக்கூடும்..? அதன் பிறகு உன்மீது நான் கொண்டிருக்கும் காதல் எனக்கும் உன்னைப்படைத்த கடவுளுக்குமான பிரச்சினையாய் மாறிப்போகும்.
தன்னிச்சையாய் மூடித் திறக்கும் இமைகள் போல, பிராணனை வாங்கிக் கொள்ளும் சுவாசத்தைப் போல ஆசைகள் என்றால் என்னவென்றே தெரியாமல் பள்ளம் நோக்கிப் பாயும் நீராய் உன்னை நோக்கி பாய்ந்திருக்கிறது என் காதல். எனக்கு நீ அழகு. எனக்கு நீ.. கவிதை. எனக்கு நீ வாழ்க்கை. எனக்கு நீ ஏதேதோ.....என்றெல்லாம் என்னைக் கேட்காமல் வந்து விட்ட நினைவுகள் ஒருபோதும் உன்னை நிந்தித்து என்னை ஏற்றுக் கொள்ளச் சொல்லாது...
உனக்கு என்னை பிடிக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்று யோசித்த பொழுதில் அப்படி எல்லாம் இல்லை என்று எனக்குச் சொல்லி காதலை ஊர்ஜிதம் செய்தன உன் விழிகள். இதோ என் காதலைச் சொல்லிவிட்டேன்..... நீ என்னை காதலிக்கிறாயயா என்று திரும்பிக் கூட கேட்காமல் எப்படியும் கடவுள் காப்பாற்றுவார் என்றெண்ணி தொழுது கொண்டிருக்கும் ஒரு பக்தனைப் போல என் என் உணர்வினை உன்னிடம் பகிர்ந்து விட்டேன்....
எதிர்மறையான பதிலைச் சொல்லி நீ காதலை தோற்கடிக்க மாட்டாய் என்று எனக்குத் தெரியும். ஆமாம் காதல் எந்தக் காலத்தில் தோற்றிருக்கிறது. அது யாருக்கும் பிடித்தலிலோ இல்லை பிடிக்காததிலோவா இருந்திருக்கிறது.....? பிடித்தால் என் கவிதைகளை உன் விழிகளிடம் சமர்ப்பிப்பேன்...
உனக்குப் பிடிக்காவிட்டால் பிரபஞ்சத்திடம் சமர்ப்பிப்பேன். பிடித்தால் நீ என்னோடு இருப்பாய். பிடிக்காவிட்டால் உன் நினைவுகள் என்னோடு இருக்கும். பிடித்தால் காமமென்ற ஒரு சிறு குழப்பத்தைக் நாம் கடக்கவேண்டி இருக்கும். பிடிக்காவிட்டால் தெளிவாய் தெளிவிசும்பினில் மனப்புரவியினில் உன் மீதான காதலை ஏந்திக் கொண்டு பயணித்துக் கொண்டிருப்பேன். என் கவிதை வரிகளின் முடிவினில் இது அவளுக்காய் எழுதியது என்று இப்போது போலவே எப்போதும் எழுதி வைப்பேன். அவள் மறுத்தது என்னைத்தான் காதலையல்ல என்று என் வார்த்தைகளுக்குள் சூசகமாய் உணர்வுகளை அடைத்து வைப்பேன்...
இதை எல்லாம் கடந்து நீ என்னை ஏற்றுதான் கொள்வாய் என்றும் நானறிவேன்....
நிலம் வேண்டாம்...
என்று சொன்னால்...
எங்குதான் பெய்யும் மழை..? என்ற என் வார்த்தைகளே எனக்கு ஆறுதலாய் தைரியமூட்டின.
நான் பேசி முடித்த பின்பு நீ குடையை மடக்கிக் கொண்டதைப் போல செய்த செய்கையில் நான் மழை பெய்தது போல பேசி முடித்திருந்தேன் என்று சொன்னாய். அப்போதுதான் புரிந்தது நான் காதல் கொண்டிருப்பது ஒரு கவிதை மீது என்று....ஒரு சித்திரத்தின் மீது என்று....ஒரு சிலையின் மீதென்று....
சப்தமாய் நீ சிரித்து முடித்த பின்பான அந்த பிரளயத்திற்குப் பின்னான பேரமைதியை மெலிதாய் கிழித்துக் கொண்டு பிறந்த அந்த மூன்று வார்த்தைகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால் பூமி என்றோ நின்று போயிருந்திருக்கும்....காலம் கண்ணீரோடு எழுதிக் கொள்ள ஒன்றுமில்லாமல் வறட்சியாய் வரலாற்றினை எழுதி வைத்திருந்திருக்கும்....
காலத்தின் வசீகரமே காதல்தான் பெண்ணே....!
காமமில்லாமல் அணைத்துக் கொண்டோம்... ! இதோ நீ சொன்ன ஐ லவ் யூவால் பூத்துக் குலுங்குகிறது என் உலகம்.
என்னை இம்சை செய்;
என்னிடம் சண்டையிடு;
விலகிப் போ;
அதை விட வேகமாய்
நெருங்கி வா;
அழு; சிரி; அணைத்துக் கொள்;
காதலால் நிறைந்து போவோம். காதலில் தீர்ந்து போவோம்.
தேவா சுப்பையா...